விஜியின் மனம் அங்கு அமர்ந்திருந்தவர்களை முத்தையா மற்றும் மங்கையாக அவளிற்கு காட்சியளித்தது.
அதைக் கண்டவள் முகத்தில் சிறுப்புன்னகை வந்த நேரத்தில், ஜனாவின் ஃபோன் அடித்த ஒலியில் நிதர்சனத்திற்குத் திரும்பிவிட்டாள்.
ஃபோனை எட்டிப் பார்த்தவள் யாரோ அவளிற்கு தெரியாத நபர் என்பதால் சைலண்டில் போட்டுவிட்டு மீண்டும் ஹாலை காண, முத்தையா மற்றும் ஜமுனா தெரிந்தனர்.
மனதில் வெறுப்புத் தோன்றவும், தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
ஜனா சிறு வீடு என்றாலும் இரண்டு பாத் ரூம் இருக்க மாதிரி பார்த்திருந்தான்,
ஒன்று முத்துவிற்கு ஒதுங்கிருந்த அறையில் ஒட்டி இருந்தது, மற்றொன்று கிச்சனுக்கு எதிரில் அமைந்திருந்தது.
வசந்தா, முத்து, அப்பு அறைக்குள் இருப்பதையும், ஜனா, விஜி வெளியில் இருப்பதையும் பயன்படுத்திக் கொண்டனர்.
இன்று ஜனா தந்தையின் அறைக்குள் குளிக்கச் சென்றிருக்க, விஜி ஹாலில் அமர்ந்திருந்தவர்களை காணாதவாறு கிச்சனிற்கு எதிரில் இருந்தவற்றில் குளிப்பதற்காக நுழைந்துக் கொண்டாள்.
வசந்தா வந்தவர்களை வரவேற்று பெயரிற்காக சிறிது நேரம் பேசிவிட்டு, இரவு உணவை அவர்களுக்காக தயார் செய்ய அடுப்படிற்குள் சென்று விட்டார்.
அப்பு வீட்டில் இருந்ததால் ஜெய் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
முத்தையா மற்றும் முத்துவும் பேசுவதற்கு நிறைய இருக்க, எதை முதலில் பேசுவது என தெரியாமல் பேசத் தொடங்கிருந்தனர்.
ஜமுனா பொறுமையாக அமர்ந்திருந்து முடியாமல்”அத்தான்! நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் சம்பந்தி என்ன பண்றாங்கனு பாக்குறேன்” என எழுந்து மெல்ல உள்ளே நுழைந்தாள்.
“வேலையாங்க!” எனக் கேட்டவாறு சென்ற ஜமுனாவைப் பார்த்த வசந்தா, “வாங்க! எதும் வேணுமா..?” எனக் கேட்டார்.
“இல்லல்ல! அவங்க ஏததோ பேசிட்டு இருக்காங்க, அதான் இந்தப் பக்கம் வந்துட்டேன். நான் எதும் உதவட்டுமா..?” எனக் கேட்டு சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்தாள்.
“பரவாயில்லங்க! முடியப் போகுது..”
“இது என்ன வெங்காயம் அரியனுமா.. எதுக்கு…?” எனக் கேட்டவாறு, அதை எடுத்து தோல் உரிக்கத் தொடங்கினாள்.
“தாழிக்க மட்டும் தான், கொஞ்சமா உரிங்கப் போதும்” என அதற்கு மேல் தடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் கூறினார் அவர்.
சிறிது நேரம் அமைதியாக இருக்க, ஜமுனாவே தொடர்ந்தார்.
“மாப்பிள்ளை தம்பி, தங்கப் பிள்ளையா இருக்குங்க, அப்படி வளர்த்து இருக்கீங்க” என கூறியதைக் கேட்ட தாயின் மனம் மகிழாமல் இருக்குமா என்ன..?
“ம்ம்ம்! அவன் சின்ன வயசில் இருந்தே இப்டி தான். அவங்க அப்பா எங்கக் கூட இல்லாததால் எனக்கு ஒரு பயம், நம்ம வளர்ப்புத் தப்பா போயிடக் கூடாதுனு பாத்து பாத்து வளர்த்தேன். சும்மா சொல்லக் கூடாது ரெண்டுமே சொல்றதைக் கேட்டு நடக்கும் புள்ளைங்க தான்” எனப் பெருமைப் பேசினார் வசந்தா.
இது தற்பெருமை அல்ல, ஒரு தாயின் பெருமையே!
“ம்ம்ம்! நல்லா வளர்த்து இருக்கீங்க, நாங்க தேடி இருந்தாலும் எங்க விஜிக்கு இப்டி ஒரு மாப்பிள்ளை அமைஞ்சிருக்காது” என வெங்காயத்தை உரித்தப்படியே கூறினாள்.
வசந்தா திரும்பி ஜமுனாவை ஓரப் பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்.
“பரவாயில்லைங்க! இது எனக்கு பழகின ஒன்னு தான். எல்லாரும் என்னைய தான் தப்பு சொல்றாங்க, அதுவும் சரிதானு அப்ப புரியல இப்ப புரியுது. அப்ப மத்தவங்க கேட்டப்ப என் அக்கா வாழாத வாழ்க்கையை நான் எடுத்துக்கிட்டேனு சொன்னேன். ஆனா அது தப்புனு நெதம் எனக்கு பாடம் புகட்டிட்டே இருக்கார் கடவுள்.
நான் இடையில் போகாமல் இருந்திருந்தா என் அத்தானுக்கு அவரு பொண்ணு கிடைச்சிருப்பா, என் அக்கா மனசு மாறி இருக்கலாம். ஆனா.?” என விரக்தியாக நிறுத்தினார்.
“ஆமாங்க! அத்தான் ரொம்ப தங்கமானவர், அவரு என்னைய கூட்டிட்டுப் போயிட்டதால என்கூட சந்தோஷமா எல்லாம் வாழ்ந்திடலைங்க.
என் பையன் உருவானதே அவரோட நிதானத்தில் இல்லை, தினமும் குடிப்பார்.
என் கூட தான் வாழனுமுனு சூழ்நிலை வந்தப்ப, அதை தவிர்க்க முடியாம குடிச்சுட்டு வரத் தொடங்கினார்.
எனக்கு முதல அது புரியல, அது புரிஞ்சப்ப ஜெய் வயிற்றில். அதுக்கு அப்புறம் நாங்க ஒரே வீட்டில் அவ்ளோதாங்க. ஜெய் தான் என் உலகமா ஆகிட்டான். அதுக்காக அத்தானை வெறுக்கல அவரைப் புரிஞ்சுகிட்டு ஒதுங்கிட்டேன்.
ஆனா ஒன்னுங்க அடுத்த ஜென்மத்தில் என் அத்தானுக்கு நான் மட்டும் பொண்டாட்டியாகி அவரோட அன்புக் கிடைக்க வாழனுமுங்க, இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கை இல்லாம. அப்பவும் எனக்கு விஜி, ஜெய் பிள்ளைங்களா பொறக்கனும், நான் நல்லா பாத்துப்பேன். அப்ப விஜிக்கு நான் உண்மையான அம்மாவா இருப்பேன்ல..” என கண்களில் கண்ணீர் வழியக் கூறினாள்.
வசந்தாவிற்கு ஜமுனாவின் மனம் புரியாமல் இல்லை, ஆனாலும்…
“நீங்க தானே இடையில் போனீங்க, நீங்க விலகிப் போயிட்டா ஒரு வேளை விஜி மனசு மாற வாய்ப்பிருக்குல ஜமுனா. உங்க அக்கா, அத்தான், விஜி மட்டும் சந்தோஷமா இருப்பாங்கள…” எனக் கேட்டார் வசந்தா, ஏன் என்றால் ஜமுனாவிற்கு தெரியாது அவர் விஜியின் பாத் ரூம் முன்னால் தான் அமர்ந்து இருக்கிறார் என்று, ஆனால் வசந்தா உணர்ந்துக் கொண்டார். ரொம்ப நேரமாக தண்ணீர் சத்தமும் இல்லை, விஜி வெளியிலும் வரவில்லை என்பது நினைவில் வரவும், இந்தக் கேள்வியைக் கேட்டார்.
“நான் ஒதுங்கிப் போயிடலாம் தாங்க, எனக்கே பலமுறை தோணி இருக்கு, ஜெய்யைக் கூட்டிட்டு போயிடலாமுனு. ஆனா எனக்கு ஞானோதயம் வந்தப்ப தான் அக்கா மனநிலையும் மாறிப்போச்சு, அம்மா மட்டும் என் கூடப் பேசும் அக்கா மனநிலை மாறினதும்.
அது சொன்னது இது தான், மங்கை இப்டி ஆனதுக்கு நீ தான் காரணம், அவ மனசுல புருசன் கூட வாழனுமுனு ஆசை இருக்கு. அவளை எப்டியாச்சும் கூட்டிட்டுப் போய் பாத்துக்கோடி, இங்க யாரையும் நம்பி விட முடியாது மங்கையைனு சொல்லிட்டே இருக்கும்.
இப்ப ஏதோ அந்த வாய்ப்பு தானா அமைஞ்சிருக்கு. இப்ப போய் நான் ஒதுங்கிப் போனா மறுபடியும் நான் சுயநலமா போற மாதிரி தான் இருக்கும்.
விஜி மேல அக்காவைப் பாத்துக்குற பொறுப்பு விழுந்திட வேணாம், அவ சந்தோஷமா வாழனும் புள்ளைக் குட்டியோடு. நான் எதுக்கு இருக்கேன். அக்காவ கடைசிவரை பாத்துகிட்டு என் பாவத்தை துடைச்சுக்குறேனுங்க. இனி அத்தானையும் தனியா விட்டுப் போனா அவர் யாருமே இல்லாதவரா ஆகிடுவாரு.
இப்பவரை நான் பாவக்காரி தான். என்ன ஒன்னு நான் அக்காவை பாத்துக்க தான் எந்த நோயையும் கடவுள் குடுக்கல போல, என் உயிர் இருக்கவரை அவளையும், அத்தானையும் பாத்துக்கிட்டு பாக்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்.” என முந்தானையால் கண்ணீரைத் துடைத்தாள்.
“ஜமுனா உங்களுக்கு ஒன்னும் பெருசா வயசாகல தானே. ஆனா…? உங்க விதி இப்டி படைக்கப்பட்டிருக்கு. எல்லாம் சரியாகும்”
“விஜியை மட்டும் நீங்க பத்தரமா பாத்துக்கோங்க, புள்ள ரொம்ப கஷ்டப்பட்டுட்டா… இனியாவது நல்லா வாழட்டும். என்ன அத்தான் கிட்ட தான் பேச மாட்டுறா.. அந்த மனுசனுக்கு அது தான் ஏக்கமா மாறிட்டு இருக்கு.” என தலையைக் குலுக்கி கொண்டாள்.
சட்டென்றுக் கேட்ட சத்ததில் ஜமுனா திரும்ப, கதவைத் திறந்துக் கொண்டு விஜி வெளியில் வந்தாள்.
ஜமுனா ஒதுங்க, வேகமாக அவளைக் கடந்துச் சென்று விட்டாள் விஜி.
“இது பாத் ரூம் வாசலாங்க. அது தெரியாம உட்காந்துட்டேன் பாருங்க” என நகர்ந்து அமர்ந்தாள் ஜமுனா.
வசந்தா மனதில் ஜமுனா ஒரு சாதரண எதையும் மனசுல வச்சுகாதப் பெண்ணாக தான் தெரிந்தாள்.
“நீங்க போய் குளிச்சுட்டு வாங்க ஜமுனா… சாப்புட்டு கிளம்பலாம்” என்றார்.
ஜமுனா குளிப்பதற்காக உள்ளே செல்லவும், சிறிது நேரம் ஆக வசந்தா வேலையில் கவனமாக இருந்தார்.
விஜி ஜெய்யிடம் ஒரு புடவை, பாவாடை, பிளவுஸ், என ஜமுனாவிடம் கொடுக்கசொல்லி கொடுத்துவிட்டாள்.
அவனும் அதை கையில் எடுத்து வந்து,
“அத்த! அம்மா எங்க..? அக்கா இத குடுக்க சொன்னாங்க” என்றான்.
அவர் அவன் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டு, “ம்ம்ம்!” என எண்ணி,
“இந்த கதவு முன்னாடிப் போட்டு போ ஜெய், அம்மா எடுத்துப்பாங்க.. நீயும் போய் குளி” என்றார் அவர்.
“ம்ம்ம்!” என முன்பக்கம் ஓடி விட்டான்.
விஜி தலையில் நீர் சொட்ட, ஜன்னல் அருகே நின்றுக் கொண்டு இருந்தாள்.
ஜனா குளித்து முடித்து வந்து, முத்தையா குளிப்பதற்கு முத்துவின் உடையை எடுத்துக் கொடுத்துவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.
விஜியைக் கண்டவன்”என்ன ஜிமிக்கி கிளம்பாம ஜன்னலோரமா நின்னுட்டு இருக்க…?” எனக் கேட்டான்.
“சும்மா தான் ஜனா” என குரல் உள்ளிருந்து வந்தது.
“ஹேய்! என்ன ஆச்சுடி..?” எனக் கேட்டவாறு அவள் அருகில் செல்லவும்,
“ஒன்னுமில்ல! டோன்ட் ஆஸ்க் எனிதிங்..” என அவன் மார்பில் சாய்ந்தவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“ம்ம்ம்! ஓகே, வாட் எவர் இட் இஸ்.. காம் ஆகு.” என அவளின் முதுகைத் தடவி ஆறுதல் கூறினான்.
சிறிது நேரம் ஆக, விஜி விலகி”நீங்க போங்க, நான் ரெடியாகிட்டு வரேன்” என்றாள்.
“தட்ஸ் குட்!” என விலகியவன், சட்டென்று திரும்பி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “கம் ஃபாஸ்ட் ஜிமிக்கி” எனக் கூறி வெளியேறினான்.
அது ஏனோ விஜியின் மனம் ஜனா மார்பில் அடங்கினால் அனைத்தையும் மறந்து இதமாகிறது. அந்த உணர்வு அவளை மிகுந்த சந்தோஷப்படுத்தியது.
அதுவரை இருந்த மனநிலை மாறி முகத்தில் லேசான புன்னகை மிதந்தது.
முத்தையா, முத்து, அப்பு, ஜெய் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
விஜி கணவனிடம் எடுத்துக் கொடுக்க ஜனா பரிமாறினான்.
ஜமுனா அடுப்படிற்குள் அமர்ந்துக் கொள்கிறேன் எனக் கூறியதால் வசந்தா அவர் அருகே அமர்ந்துப் பேசியவாறு இருவரும் சாப்பிட்டனர்.
மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சாப்பிட்டதால பெரிதாக நேரத்தை வீணாக்காமல் உண்டனர்.
கடைசியாக ஜனா மற்றும் விஜி இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கிளம்பினர்.
ஜெய்யை அழைத்துச் செல்லவில்லை, அப்புவோடு தங்க சொல்ல அவனும் சரி என்றான்.
ஜமுனா வந்ததில் இருந்து கவனித்தது வசந்தா- விஜி பேசிக்கொள்ளவில்லை என்பதை தான்.
வசந்தாவாக பேசவில்லை என்றாலும் ஜனா பேசுவதால் அது பெரிதாக தெரியவில்லை.
ஜனா, விஜி பைக்கிலும், முத்தையா, ஜமுனா ஆட்டோவிலும் திரும்பினர்.
ஆட்டோவில் செல்லும் போது”அத்தான்! விஜியும் மாமியாரும் பேசுறதில்லை போல. நான் பாத்தவரை பேசல..” என்றாள் ஜமுனா.
“ஓ! சரி நீ எதையும் கேட்டு வச்சுடாத, அது அவங்க மாமியார்- மருமகள் உறவு. மாப்பிள்ள நல்ல பையன். அதனால எதும் பிரச்சனை வந்துராது”
“விஜி மாமியாரும் நல்லவங்களா தான் தெரியுறாங்க அத்தான். நான் எதுவும் கேக்கல… என்னனு தெரியாம நான் போய் கேட்டு அவங்ககுள்ள எதுவும் கசப்பு வந்துட கூடாதுல..”
“ம்ம்ம்!”
***
மருத்துவமனை…
நான்குப் பேரும் வந்தும் மங்கை கண் விழிக்கவில்லை. அமர், ரெனி வீட்டிற்குச் சென்றனர்.
மங்கையை நார்மல் வார்டிற்கு மாற்றி இருந்தனர். அவர் கண் விழித்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் விஜி எழுந்து ஓடினாள்.
செவிலியர்”ரெண்டு ரெண்டுப் பேரா போய் பாருங்க சார்” எனக் கூறி விலகினார்.