மங்கை குடிப்பதற்காக சர்க்கரை இல்லாத பாலை ஆர்டர் செய்துவிட்டு, ஏற்கனவே ஒரு டேபிள் நாற்காலியில் உட்கார்ந்திருந்த விஜியின் அருகில் வந்து அமர்ந்தான் ஜனா.
விஜி, ஜனா வந்தமர்ந்ததுக் கூட தெரியாத அளவிற்கு பலத்த யோசனையில் இருந்தாள்.
“என்ன ஜிமிக்கி ரொம்ப டீப் திங்கிங் போல, அம்மா நல்லா பேசினாங்களா..?” எனக் கேட்டான்.
“ம்ம்ம்! பேசினாங்க”
“பின்ன என்ன யோசனை…?”
“ஜனா! அம்மா அவங்க கூட எல்லாம் ரொம்ப க்ளோஸ் ஆன மாதிரி தெரியுது..” என முகத்தில் வருத்தம் வழிந்தோட கூறினாள்.
ஜனாவிற்கு அவர்கள் யார் என்று தெரிந்தாலும், “யார் கூட க்ளோஸ் ஆகிட்டாங்க..?” என்றவனை முறைத்தவள், “உங்களுக்கு தெரியாது, அப்படி தானே ஜனா…?” எனக் கடுப்புடன் கேட்டாள்.
“ஓகே! ஓகே! எத வச்சு அப்படி சொல்ற..?”
“இல்ல! மாமா வீட்டில், நான் அம்மாவைப் பாக்க போனா, என் கூட பேசுறதை தவிர வேற யாரையும் கண்டுக்க மாட்டாங்க, அம்மாச்சியை கூட… ஆனா இன்னைக்கு என்னைய விட முக்கியமா அவங்களுக்கு வேற யாரோ இருக்க மாதிரி தோணுது..” என வருத்தமாக கூறினாள்.
“ஜிமிக்கி! உனக்கு வேணா உன் அப்பாவைப் புடிக்காம இருக்கலாம். ஆனா உன் அம்மாக்கு அவங்க கணவர் கூட பேசுறதுப் புடிக்குதுப் போல…. அதுவும் நல்லது தானே. இப்ப உன் அம்மா நல்ல மனநிலையில் இருந்திருந்தா உன் அப்பாவைப் பக்கத்துல விட்டு இருப்பாங்களா…? அது சந்தேகம் தான். சோ! இதுவும் நல்லதுக்குனு நினைப்போம்” என்றான்.
“என்ன நல்லதுக்கு ஜனா..? எங்களை விட்டு தூரமா விலகிப் போனவரோடு, அம்மா சுயமனநிலையில் இல்லாத நேரத்தில் இந்தளவு நெருங்கிப் போறதில் என்ன நல்லது இருக்கு..? என்னால அதை ஏத்துக்கவே முடியல. அவ்வளவு கஷ்டத்திலும் அம்மாவுக்காக நான் மட்டுமே இருக்கேனு முழுநம்பிக்கை இருந்துச்சு.
அம்மாவுக்காக தான் அவங்க எல்லாரையுமே நானும் உதறி தள்ளினேன் அந்த அறியாத வயதில், ஆனா இப்ப அம்மா எதுவுமே நடக்காததுப் போல் அவங்க கூட சகஜமா பேசுறாங்க, அவங்க எல்லாம் ஒன்னா ஆகி நான் மட்டும் தனியா ஆன ஃபீல் வருது ஜனா..” என ஆழ் மனதில் இருந்து கூறினாள்.
மங்கை அவரோட மனநிலையில் அனைவரையும் ஈஸியா ஏத்துக்கொண்டு உரிமையாக கணவர், ஜமுனா, ஜெய்யுடன் பேசுவதில் விஜிற்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும், மறுபக்கம் பொறாமையாக இருந்தது, அதை அவளால் வெளிப்படுத்த முடியவில்லை அதனால் தான் தனியாக இருப்பதாக ஜனாவிடம் கூறினாள்.
விஜியின் மனநிலையை உணர்ந்த ஜனா
“ஜிமிக்கி! உனக்கு அவங்க கூட சகஜமா பேச முடியலைனு வருத்தமா இருக்கா..?” என ஆறுதலாக கேட்டான்.
ஆனால் விஜி தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமல், “நான் ஏன் வருத்தப்படனும்…? அவர் தான் என்னைய இழந்துட்டேனு நினைச்சு வருத்தப்படனும். எனக்கு என் அம்மா மேல தான் வருத்தமா இருக்கு. சுயநினைவில் இல்லாததால் அவங்க கூட எல்லாம் உறவாடிட்டு இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிட்டேனு. அவங்க என் அம்மாவைப் பாத்துக்கிற நிலை வந்துட்டேனு என்னால ஜீரணிக்க முடியல… அதுவும் அம்மாவே அவங்க கூட சகஜமா பாசத்தைப் பொழியுறதை எனக்கு ஏத்துக்க முடியல, அம்மாவுக்காக இருந்த என்னைய இப்ப தனிமையில் நிக்க வச்சுட்டாங்க” என ஆதங்கத்தோடு கூறினாள்.
“சரி ஜிமிக்கி! அட்லீஸ்ட் அம்மா இப்பவாச்சும் அப்பாவோடு இருக்கட்டுமே. அது அவங்க உள்மனசு விருப்பம் கூட தானே. இல்லைனா உன் அப்பா கூப்புடும் போது தானா போய் இருப்பாங்களா..?”
“அதான் சொல்றேன்ல, சரியான மனநிலையில் இருந்தா போய் இருக்க மாட்டாங்க. நானும் அம்மாவும் மட்டுமே இருந்திருப்போம்.. விட்டுப் போன உறவுகள் இப்படி சேர்ந்து என்னைய இப்ப தனியா விட்டு இருக்காது…”
“அம்மா சுய மனநிலையில் இல்லாததால் சேர்ந்துட்டாங்க, உன்னால அப்படி முடியலை பழைய விசயங்களைப் போட்டு கன்பியூஸ் பண்ணிக்குற.. அது மட்டுமில்ல ஒன்னா சேர்ந்த அவங்களைப் பாத்து உனக்கு பொறாமையா இருக்கு ஜிமிக்கி” என ஜனாக் கூறியதும், விஜியின் கோபம் எகிறியது.
“யாருக்குப் பொறாமை ஜனா..? அவங்களைப் பாத்தா…? வாய்ப்பே இல்லை. என் நிலை என்னனு புரியலையா..? அவங்களா சண்டைப் போட்டாங்க. இப்ப அவங்க சேர்ந்தாச்சு… நான்…? என் இழப்பு..? இழந்த என் ஆசைகள், இதுக்கு எல்லாம் யார் பதில் சொல்லுவா..? அவங்க சேர்ந்தா எனக்கு ஏன் பொறாமை வருது.” எனச் சீறினாள்.
“ஆமா! அவங்க எல்லாம் ஒன்னா ஆகிட்டாங்க. நான் தனியாகிட்டேன். இப்ப நீங்களும் எனக்கு எதிரா அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணிப் பேசிட்டு இருக்கீங்க ஜனா…? கடைசில நீங்களும் எனக்காக யோசிக்கல பாருங்க… ஐ ஹேட் திஸ் லைஃப்” என எழுந்து வேகமாக மருத்துவமனையை நோக்கி நடந்தாள்.
“விஜி!” என அழைத்துப் பின் தொடரப் போனவனைத் தடுத்தான் கையில் பாலுடன் வந்தவன்.
“தேங்க்யூ!” என அதை வாங்கிக் கொண்டு அவனும் மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
விஜி வெளியில் அமர்ந்து இருந்தாள். ஜனா கையில் பாலுடன் வர, முத்தையா மற்றும் ஜமுனா, மங்கை இருந்த அறை உள்ளே நின்றார்கள்.
‘இவ ஏற்கனவே கோபத்தல இருக்கா, நம்மளே குடுத்துடுவோம்’ என எண்ணிய ஜனா, உள்ளே சென்றான்.
“மாமா! பால் இந்தாங்க” என நீட்டிவிட்டு, மங்கையிடம்”இப்ப உடம்பு பரவாயில்லையா அத்தை..?” என நலம் விசாரித்தான்.
“யாரு இவர்…?” என முத்தையாவிடம் கேட்டார் மங்கை.
ஜமுனா உடனே”அக்கா! இவரு தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை. விஜி வீட்டுக்காரர்” என அறிமுகம் செய்தாள்.
“உன் கிட்ட நான் கேக்கலைடி. ஏங்க! நீங்க சொல்லுங்க…” என்ற மங்கை முத்தையாவையே பார்த்தார்.
“ஆமா மங்கை! இவரு பேரு ஜனா.. விஜியோட புருசன். அன்னைக்கு கூட பாத்தீயே”
“என்னைக்குப் பாத்தேன்…” என மங்கை யோசிக்க, ஜனா”மாமா விடுங்க அவங்க மறந்திருப்பாங்க” என்றான்.
“ஆமா! எங்க என் பொண்ணு வரலையா…? அவளை நீங்க கூட்டிட்டு வரலையா..? போய் கூட்டிட்டு வாங்க” என மங்கைக் கேட்கவும், ஜனாவிற்கு புரிந்தது அப்பொழுது விஜியின் மனநிலை.
அந்த இடத்தில் நல்லவேளை விஜி இல்லை. மங்கையை இந்த நேரத்தில் குறைச் சொல்ல முடியாது. சுய மனநிலையில் இல்லாமல் நிமிடத்திற்கு ஒன்று பேசுபவரின் பேச்சினைக் குறையாக எடுத்துக் கொண்டு வாதம் செய்ய இயலாது.
“மங்கை! விஜி இங்க தானே இருந்துச்சு இப்ப தான் உனக்கு பால் வாங்கப் போனது.”
“ஆமால! எல்லாம் இவளால தான், எங்கடி ஜெய் புள்ள… அவனை என்னைய பாக்க விடாம வீட்டுல விட்டுட்டு வந்துட்டீயா..? போடி! போய் கூட்டிட்டு வா” என ஜமுனாவை சாடினார்.
“அக்கா! அவனுக்கு பரீட்சை நடக்குது படிச்சுட்டு இருக்கான். காலையில வருவான்.. நீ இந்த பாலைக் குடி” என வாய் அருகே கொண்டுச் சென்றாள் ஜமுனா.
“நேசமா! காலையில வந்துடுவானாடி. அவன் வரும் போது நான் தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி விடு…” என பால் குடிக்க வாயினைத் திறந்தார்.
ஜனாவிற்கு அதற்கு மேல் இருக்க தோன்றாமல் வெளியில் சென்றான்.
விஜி அருகில் சென்று அமர்ந்தான்.
அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்.
“ஜிமிக்கி!” என அழைத்தான்.
அவளிடம் இருந்து பதிலில்லை.
அந்த நேரத்தில் டாக்டர் மங்கையை செக் பண்ண வந்தார்.
விஜியும், ஜனாவும் எழுந்து உள்ளுக்குள் சென்றனர்.
“விஜி! எனக்கு பால் சீனி இல்லாம புடிக்கல… நீ சீனி போட்டு வாங்கிட்டு வா” என மகளிடம் முறையிட்டார் மங்கை.
அங்கிருந்த அனைவருமே மங்கை நிலை அறிந்ததால் அமைதியாக இருக்க, விஜி
“வீட்டுக்குப் போனதும் தரேன்மா. இப்ப டாக்டர் செக் பண்ண வந்திருக்கார் அமைதியா இரு..” என்றாள்.
டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, ஜனாவிடம்”ஜனா! இவங்க நார்மல் தான் ஆனால் சுகர் உடனே குறையாது. ஒன் வீக் இருக்கட்டும். நான் சொன்ன மாதிரி எங்க அப்சர்வேசனில் நாங்க குடுக்குற ஃபுட் ஃபாலோ பண்ணி சுகர் நார்மல் டிக்ரீஸ் ஆனதும், டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்றார்.
“ஓகே! ஷ்யர் டாக்டர்”
டாக்டர் வெளியேறவும், நர்ஸ்”சார்! யாராவது ரெண்டுப் பேரு தங்குங்க. மத்தவங்க வீட்டுக்குப் போயிடுங்க. திஸ் இஸ் ரூல்ஸ். வெளியில் எல்லாம் நிக்க கூடாது.” எனக் கூறிவிட்டுச் சென்றாள்.
ஜனா யோசிக்க, “நீங்க வேணா என் கூட வாங்க, மாமாவும், விஜியும் தங்கட்டும்” என்றான் ஜமுனாவிடம்.
உடனே விஜி”அம்மா! நீ சாப்புட்டு தூங்கு, நான் காலையில் வரேன்” என்றாள்.
“சரிடா! உனக்கு வேலையா… காலையில அம்மாக்கு சாக்லேட் வாங்கிட்டு வா, அன்னைக்கு ஃபோனுல சொன்னேன்ல அது..” என என்றோ பேசியதை நினைவுப் படுத்தினார்.
அவரைப் பொறுத்தவரை விஜி வந்துப் பார்த்து செல்பவள், அவள் அருகில் இல்லை என்றாலும் அவரைப் பாதிக்காது. ஆனால் முத்தையா, ஜமுனா சென்றால் கேள்விக் கேட்பார். இந்த கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவர் மற்றும் ஜெய் முகத்தையே தினமும் பார்ப்பதால் அவர் மனதில் ஆழமாக பதிந்தார்கள், விஜியை விட எனலாம். காரணம் மங்கையைச் சமாளிக்கவே முத்தையா, ஜமுனா, ஜெய் மாறி மாறி அவர் கூடவே சுற்றினார்கள்.
அதை அறியாத விஜி, தன் தாயிற்கு தான் முக்கியமாக தெரியவில்லை என மனதில் ஏற்றினாள். அந்தக் கோபத்தின் வெளிப்பாடே இரவில் தங்கவில்லை என்றுக் கூறியது. ஆனாலும் விஜி மனதில் தன்னை தாய் போக வேண்டாமென்று கூறுவாள் என எதிர்பார்த்தாள். அது மாறாக நடக்க, அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியேறினாள் விஜி.
பொதுவாக வேலைக்குச் செல்லும் தாயை விட தன்னையே கவனிக்கும் பணிப்பெண்ணிடம் குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும், வேலைக்குப் போகும் தாயிற்கு அந்த ஏக்கம் இருக்கும், தன் குழந்தை தன்னைவிட்டுப் போகாதென்று சொல்லாதா..?
ஆரம்பத்தில் அக்குழந்தைகளும் அழுதிருக்கும் தான், அந்த மாதிரி விஜி சென்னைக்குப் போய்விட்டு திரும்பும் போது தன் அம்மாவை விட மகளிடம் அடைக்கலம் புகுந்தார் மங்கை. ஆனால் நாட்கள் நகர குழந்தைகள் பணிப்பெண்ணிடம் பழகியது போல் மங்கையும் விஜியை வந்து தன்னைப் பார்த்து செல்லும் ஒருத்தியாக ஆனால் மறக்காத மகளாக நினைவில் ஏற்றினார்.
இப்பொழுது புருசன், தங்கை, ஜெய் இவர்கள் தன் பேச்சைக் கேட்டு தனக்கான தேவைகளைப் பார்த்துச் செய்ய அவர்களிடம் அடைக்கலம் புகுந்தார், அதற்காக மகளை மறக்கவில்லை. ஆனாலும் அவள் போகும்போது ஈஸியாக விடைக் கொடுக்க முடிகிறது அந்த குழந்தையாகிய தாயினால்.
முத்தையாவிற்கு ஏனோ பெண்ணின் மனம் புரிந்தாற் போல தோன்றியது. அவளின் முகமும் சரியில்லாமல் தெரிய, ஜனாவைப் பார்த்தார்.
“மாமா! அவ ஏதோ ஒரு சின்ன கோபத்துல இருக்கா. நான் பாத்துக்கிறேன், நீங்க ஏதாவதுனா எனக்கு ஃபோன் பண்ணுங்க…” எனக் கூறிவிட்டு வெளியேறினான்.
ஜமுனாவிடம் மங்கை ஏதோ வம்பிழுத்துச் சண்டைப் போட, முத்தையா அவரைச் சமாளிக்க சென்றார்.
****
விஜி வெளியில் சென்று ஜனாவின் பைக் அருகே நின்றாள்.
ஜனா வந்து பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அதில் ஏறி அமர்ந்து, சிறிது தூரம் போனதும், “என்னைய எஃப் எம் ஸ்டேசனில் விட்டுப் போங்க…” என்றாள்.
“ஏன், நீ தான் லீவ் சொல்லிட்டீயே..?”
“எனக்கு லீவ் வேணானு தோணுது போதுமா..”
ஜனா சாலையை மாற்றி வீட்டிற்கே சென்றான்.
“ஜனா! நான் சொன்னது காதில் விழலையா..?”
“விஜி! காதுல விழுந்துச்சு, இன்னைக்கு தான் லீவ் சொல்லிட்டீயே, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வேலைக்கு போ”
“என்னோட வாழ்க்கையில் எனக்கான முடிவை மத்தவங்க தான் எடுக்கனும் என்பது விதிப்போல” என கோபமாக ஆதங்கத்துடன் சொல்லிவிட்டு அமைதியாகினாள்.
ஜனா பதில் பேசாமல் சாலையில் கவனத்தை திருப்பி பைக்கை ஓட்டினான்.
வீட்டின் கதவுத் திறந்திருந்தது, ஜனா வசந்தாவிடம் தானும், விஜியும் வருவதாக ஏற்கனவே கூறியிருந்ததால் தாழிடாமல் கதவை மட்டுமே சாத்தி வைத்திருந்தார் தாய்.
இருவரும் உள்ளே நுழைய, ஹாலில் உள்ள நாற்காலியில் அமர்ந்தப்படியே தூக்கத்தில் இருந்த வசந்தா கதவுத் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்தார்.
தங்களைக் கண்டு எழுந்து வந்த தாயிடம்
“ஏன்மா! நீங்க முழிச்சுட்டு இருக்கீங்க, தூங்க வேண்டியது தானே..?” எனக் கேட்டான்.
“பரவாயில்ல! எப்டி இருக்காங்க உன் மாமியார்..?” என மகனிடம் கேட்டார்.
விஜி தன்னிடம் எப்படியும் வசந்தா பேசப் போவதில்லை என்று அவளின் அறைக்குள் நுழைந்தாள்.
“நல்லா இருக்காங்க, சுகர் குறைய ஒரு வாரம் அங்கயே தங்க சொல்லி இருக்காங்கம்மா”
“ஓ! அப்ப காலையில் எல்லாருக்குமே சாப்பாடு கொண்டுப் போயிடுறீங்களா..?”
அவர் அறையை நோக்கி தூங்குவதற்காக சென்ற வசந்தா திரும்பி மகனிடம், “இவங்க சேர்ந்து படுத்திருக்காங்க, நீ போய் உள்ள படுத்துக்கோ” என அப்புவும், ஜெய்யும் ஒன்றாகப் படுத்திருந்ததை காட்டியவாறு கூறினார்.
“இல்லம்மா! நான் இவங்க கூடவே படுத்துக்கிறேன்” என்றான் ஜனா பட்டென்று.
“ஏன் ஜனா, பொண்டாட்டி வந்துட்டா அம்மா பேச்சைக் கேட்க கூடாதுனு இருக்கா என்ன…? இல்ல கேட்காதனு உன் பொண்டாட்டி சொல்லிட்டாளா..?” எனச் சற்று அதட்டியப்படி கேட்டார் வசந்தா.
பாத் ரூம் கதவைத் திறக்கப் போன விஜி அப்படியே ஜனாவைத் திரும்பி பார்த்து நின்றாள்.
‘கடவுளே! அவ ஏற்கனவே கோபமா இருக்கா… இதுல அம்மா வேற’ என நொந்தவன், “அம்மா! நீங்க தேவையில்லாம யோசிக்கிறீங்க, இப்ப என்ன நான் உள்ளப் போய் படுக்கனும் அதானே. நீங்க போய் தூங்குங்க. நான் போய் தூங்கிறேன்” என்றான்.
வசந்தா “ஆமா! நான் தேவையில்லாம தான் யோசிக்கிறேன்” என முகத்தைச் சுளித்துவிட்டு அவர் அறைக்குள் நுழைந்துவிட்டார்.
விஜி அதற்கு மேல் நிற்காமல் பாத் ரூமிற்குள் நுழைந்தாள்.
ஜனா சென்று உடையை மாற்றிவிட்டு வெளியில் வர, விஜி உள்ளே சென்றாள்.
ஜனா வாசல் கதவு, ஹால் லைட் அணைத்துவிட்டு, டேபிளில் இருந்த ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
இரவு உடையான நைட்டியுடன் அந்த ஒற்றை ஜன்னல் அருகே நின்றுக் கொண்டு இருந்தாள் விஜி.
அறைக்குள் நுழைந்து கதவினைத் தாழிட்டவன், நிமிர்ந்து மனைவியைக் கண்டான்.
ஆழ்ந்த மூச்சினை இழுத்துவிட்டு, தண்ணீர் சொம்பினை ஓரமாக வைத்துவிட்டு, விஜி அருகில் சென்றான்.
“ஹேய்! சாரிடி, நான் ஏதோ தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன். ஐ ஆம் சோ சாரி ஜிமிக்கி” என அவள் தோளில் கை வைத்தான்.
திரும்பியவள்”என்ன வாய் தவறிச் சொன்னீங்க..? அவங்களை எல்லாம் பார்த்து எனக்கு பொறாமைனா, ஏன் ஜனா, நீங்க கூட அவங்கப் பக்கமே பேசுறீங்க…? பாருங்க உங்க அம்மாக்கும் நான் தான் ஆகாதவளா இருக்கேன். அவங்க ரெண்டுப் பேரும் வீட்டுக்கு வந்தப்ப ஜெய் அம்மா கூட அவ்வளவு நல்லா பேசுறாங்க… ஆக மொத்தம் நான் தான் இப்ப கோபக்காரி, தனியொருத்தி…. அவங்க ரொம்ப நல்லவங்க, நீங்க உங்கம்மா, உங்கப்பா எல்லாருக்கும் நான் யாரோ தானே..” எனக் கண்களில் நீர் வழியக் கேட்டாள்.
அவளை எப்படி சமாதானம் செய்வது எனப் புரியாமல் முழித்தான் ஜனா.
அவள் மேல் இருந்த அவனின் கையை விலக்கியவள், ஓரமாக இருந்த பாயை எடுத்துத் தரையில் விரித்தாள்.
“இந்த அறையில் உங்களுக்கு என் கூடப் படுக்க கஷ்டமா இருந்தா சொல்லுங்க, நாளையில் இருந்து நான் எஃப் எம் ஸ்டேசனில் நைட் தங்கிடுறேன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு படுக்கையில் சாயப் போனவள் கையைச் சட்டென்றுப் பிடித்து இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான் ஜனா.