அதிகாலையில் மங்கையின் தொந்தரவு இன்றி விஜி தானாக நித்திரையில் இருந்து எழுந்தாள். தாய் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தார்.
விஜி எழுந்து பாத் ரூம் சென்று திரும்ப, ஜமுனாவும் எழுந்திருந்தாள்.
இதுவரை இருவருமே நேரடியாக பேசிக்கொள்ளவில்லை. மெல்ல பொழுது விடியல் தொடங்க, மங்கையும் கண் முழித்தார்.
அவரின் தேவையை ஜமுனாவே செய்தாள். விஜியிடம் தாய் ஏதோ பேச அதற்கு பதிலளித்தப்படி அருகில் அமர்ந்து இருந்தாள்.
விஜியின் ஃபோன் அடித்தது, எழுந்து எடுக்கப் போக, “இருடா! நான் எடுத்து தரேன்” என ஜமுனாவே எடுத்து தந்தாள்.
அதை வாங்கிய விஜி, திரையில் தெரிந்த எண்களைக் கண்டுப் புருவத்தைச் சுருக்கினாள்.
ஆனாலும் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால், மாமா தர்மாவின் நம்பரை அட்டென்ட் செய்துக் காதில் வைத்தப்படி எழுந்து ஜன்னலோரமாக நடந்தாள்.
“சொல்லுங்க மாமா! நல்லா இருக்கீங்களா..?” எனச் சாதரணமாகவே பேசினாள்.
“நல்லா இருக்கேன், அக்கா எப்டி இருக்கு..?”
“நல்லா இருக்கு!” எனத் திரும்பி தாயைப் பார்க்கா, அவள் திரும்பிப் பேசியதில் ஜமுனா விஜியை நோக்கினாள்.
“ம்ம்ம்! அந்த இடத்தின் கிரகப்பத்திரம் இன்னைக்கு கையெழுத்துப் போட்டுக் குடுக்கனும், பத்து மணிக்கு துவரூர் ரெஜிஸ்டர் ஆபிஸிற்கு வந்துடு”
“சரி மாமா! வந்துடுறேன்”
“வேற எதுவுமில்லல”
“இல்ல மாமா! பத்து மணிக்கு வந்துடுறேன்” என ஃபோனை கட் பண்ணிட்டு, ஃபோனையே நோக்கியவள், உடனே ஜனாவிற்கு அழைத்தாள்.
“ஹலோ”
“ம்ம்ம்! சொல்லு”
“இன்னும் எழுந்திரிக்கலையா ஜனா…?”
“அப்பா மாமாவ காலைச் சாப்பாடு முடிச்சுட்டுப் போகலாமுனு சொன்னாரு, அதான் நான் கொஞ்சம் நேரம் அப்பா ரூமுல வந்துப் படுத்தேன், அவங்க எல்லாம் வெளியில் இருக்காங்க ஜிமிக்கிமா” எனத் தூக்கத்திலே பேசினான்.
“ஜனா! தர்மா மாமா ஃபோன் பண்ணினார்.”
“ஓ! என்னைக்கு வரனுமாம்”
“இன்னைக்கு காலையில் பத்து மணிக்கு”
“ம்ம்ம்! போகலாம், நோ ப்ராப்ளம் நான் பர்மிசன் போட்டுறேன், வெயிட் பண்ணு உடனே கிளம்பி வரேன், மாமா வேணா அப்புறம் சாப்புட்டு வரட்டும்”
“ஜனா! நீங்க தூங்குங்க, நான் ஆட்டோ புடிச்சி வந்துடுறேன்”
“ஹேய்! நான் வரேன் வெயிட் பண்ணு”
“ஜனா! ப்ளீஸ்டா…. நீங்க தூங்குங்க, நான் வந்துடுறேன். மை தங்க பையன்ல” என மெல்ல குரலை குறைத்துக் கூறினாள்.
மனதில் ஜனாவை நினைத்து கஷ்டமாக இருந்தது, ஒரு நாளைக்கு மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்தப்படி இருக்கிறான், அவளோட சுமையை சேர்த்து அவனும் சுமப்பது அவளிற்கு மிகுந்த வலியைத் தந்தது. ஆனால் அவனோட கஷ்டத்திற்கு அவளால் உதவ முடியவில்லை, முத்துவின் சிகிச்சைக்கு பணம் அளிக்க முடியாததை எண்ணி வருத்தமே மிஞ்சியது.
தலையைக் குலுக்கியவள், தன் கைப்பையை எடுத்துக் கொண்டு, மங்கையிடம்”அம்மா! நான் கிளம்புறேன், ஒரு முக்கியமான வேலை இருக்கு, உன் புருசன் வந்திடுவார், அமைதியா இரு, சாயங்காலம் வந்து நர்ஸ் கிட்ட கேப்பேன்” என மிரட்டினாள்.
“நீ போடி, எப்ப பாரு திட்டிட்டே இருக்க. அப்பாவை சீக்கிரம் வரச்சொல்லு” என்றார்.
பதிலின்றி வெளியேறப் போனவளை,
“விஜிமா!” என அழைத்தாள் ஜமுனா.
விஜி திரும்பாமல் அப்படியே நின்றாள்.
“யாரு உன் கூட ஃபோன் பேசினா…?”
விஜி ஜமுனாவின் கேள்வியைக் கண்டுக் கொள்ளாமல் வெளியேறப் போக, வேகமாக விஜி முன் வந்து நின்றாள் ஜமுனா.
“யாரு பேசினா விஜிமா, நீ எங்கப் போற பத்து மணிக்கு..?” என விடாமல் கேட்டாள் ஜமுனா.
விஜிக்கு உச்சிக்கு மேல் கோபம் எகிறிட, உள்ளே வந்த வேகத்தில் தன் கைப்பையை தூக்கி அவள் முன்பு படுத்திருந்த அமரும் கட்டிலில் வீசினாள்.
“என்ன தெரியனும் உனக்கு இப்ப…? ஆமா! உன் அண்ணன் அதான், அவங்க தம்பி தான் பேசினார். என் கையெழுத்து வேணுமாம், பத்து மணிக்குக் கூப்புட்டார் போதுமா..?” என வேகமாக கூறினாள்.
“அந்த இடம் உனக்காக உன் அப்பா வாங்கியதுடி. அத போய் அவங்களுக்கு தூக்கி குடுக்கப் போறீயா..? ஏன்டி..?” என ஜமுனா தான் வளர்த்த மகளிடம் தன்மையாக கேட்டாள்.
“ஏனா….? ஏனு உனக்கு தெரியாது..? நீங்க எல்லாம் பண்ண தப்புக்குத் தண்டனையா நான் அந்த வீட்டில் வளர்ந்தேன். அந்த தண்டனையை வளர்த்த நன்றிக்காக அந்த இடத்தை குடுத்து கடனை அடைக்கப் போறேன்.” என முகத்தில் அறைந்தார் போல் கூறினாள்.
“விஜிமா! தப்பு பண்ற, அது உனக்கான பணம், வளர்த்ததுக்கு பணம் குடுத்தா தீர்ந்துடுமா..? உன் குடும்பத்துக்கு அந்த பணம் தேவைப்படுது, உன் மாமனார் ஆப்ரேசன், உங்களுக்கு இருக்க கடன் இது எல்லாம் தீர அது ரொம்ப முக்கியமுடி. அத்தான் சொல்லி வருத்தப்பட்டார் விஜிமா உங்கக் குடும்ப சூழ்நிலை சரியில்லைனு, உன் மாமனாருக்கு உடல்நிலையும் அப்ப இப்பனு சொல்ல முடியாதுனு. அப்படியிருக்க அதுல ஆப்ரேசனுக்கான பணத்தையாவது வாங்கி மாப்பிள்ளை கிட்ட குடுடா… என் கண்ணுல” எனக் கெஞ்சி எடுத்துக் கூறினாள்.
“அது யாரு சொத்து…? நான் சம்பாரிச்சதா..? யாரோ வாங்கினது, என் பேர்ல இருக்கு, எனக்கு சோறுப் போட்டுட்டு அதை கேக்குறாங்க, குடுத்து தானே ஆகனும்… ஆமா! என்னமோ நீ ரொம்ப நல்லவ மாதிரி இப்ப வந்துப் பேசிட்டு இருக்க, நான் இந்த நிலைக்கு வர நீயும் ஒரு காரணம் ஜமுனா” என்றாள் ஆத்திரமாக.
“ஆமான்டி! நான் இல்லைனு சொல்லி விலகிப் போகலையே, உன் முன்னாடி தான் நிக்கிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நீ சொல்லி எங்களை ஒதுக்குவ…? தப்புச் செஞ்சுட்டேன், உன்னையும் உன் அப்பாவையும் பிரிச்சு பெரிய பாவம் பண்ணிட்டேன்.
அப்ப என் மனசுக்கு பட்டது இதான்டி, அக்கா வாழாம இருக்க வாழ்க்கையை நான் வாழ்ந்தா என்ன…? அத்தானோட மனசு எனக்குப் புடிச்சுது, நம்ம அவர் கூடப் போய் ஏன் வாழ கூடாதுனு தோணுச்சு அப்ப இருந்த வயசுக்கு தைரியமா போயிட்டேன்.
ஆனா…..” என நிறுத்திய ஜமுனா அப்படியே சரிந்து விஜியின் காலில் விழுந்துக் கதறினாள்.
“உன் அப்பாவோட போய் அப்படி என்னத்த நான் வாழ்ந்துட்டேன்டி…? என் அக்கா தனியா இருந்து வாழாவெட்டியா இருந்தா, நான் கூடவே இருந்து அதே பட்டத்தோடு வாழ்ந்துட்டு இருக்கேன். ஜெய்..? எப்படியோ வயித்துல வந்தான். ஆனா அது ஒரு விபத்து மாதிரி தான் விஜிமா, என்னோட சின்ன ஆசை கூட நிறைவேறியதில்லை.
நான் இப்பவரை கஷ்டத்தை மட்டும் தான் அனுபவிக்கிறேன், இவ ஒவ்வொரு தடவையும் நான் அழைச்சுட்டுப் போயிட்டேனு சொல்றாளே, என் மனசுல ஆசை எப்டி வந்துச்சு..? இவளால தானே…? நானும் வயசுப்பொண்ணு தானே விஜிமா, உன்னை மாதிரி வெளியுலக அனுபவம் இருந்துச்சா…?
அந்த வீடு, சமையல் கட்டு, நீ, அப்பா, அம்மா, அண்ணனுங்க, அக்கா, அடிக்கடி வந்துப் போகும் அத்தான், இதான் என் உலகம். அதுல அத்தானோட அன்பு எனக்கு புடிச்சது என் விதி தான்…
இன்னும் எத்தனை நாளைக்குனு தெரியல விஜிமா…? பேசாம ஒரேதா கொன்னுடுடி…..” என விஜியின் காலைப் பிடித்து கதறி அழுதாள் ஜமுனா.
விஜி, தன் காலில் விழுந்து கதறும் அவளை தடுக்க தோன்றாமல் அப்படியே கட்டிலில் அமர்ந்தாள்.
“ஏய்! ஏன்டி அவளைத் திட்டுற…? பாரு அவ அழுதுட்டு இருக்கா. ஜமுனா இங்க வா… இங்க வாடி” எனத் தன் தங்கையை அழைத்தார் புரியாத மங்கை.
அவர்களின் மனப்போராட்டங்கள் தொடர,
“ஜமும்மா!” என்றழைத்தாள் விஜி மெல்ல….
ஜமுனாவிற்கு தன் செவியை நம்ப முடியாமல், நிமிர்ந்துச் சுற்றிப் பார்த்தாள்.
“நான் தான் கூப்புட்டேன்…”
“விஜி!” என ஏக்கமாக அழைத்தவளிடம் அப்படியே இறங்கி மண்டியிட்டு ஜமுனாவின் மடியில் தலைச் சாய்த்துப் படுத்து கதறினாள் விஜி.
“நீ ஏன் இப்டி பண்ண…? அம்மாக்கு மேல உன் கூட தானே நான் உயிரா இருந்தேன். இப்பக் கூட உன் மேல கோபமா தான் இருக்கு. ஆனா உன்னோட கதறலை என்னால பாக்க முடியலையே….” என ஜமுனாவிடம் உரிமையாக சண்டைப் போட்டாள் விஜி.
“விஜி! என்னைய மன்னிச்சுடுடி… எனக்கு பதிலே சொல்ல தெரியலடா… என்னைய மன்னிச்சுடு…”
இருவரும் ஒருவர் ஒருவரை அணைத்து ஆறுதல் செய்தனர்.
ஜமுனா சட்டென்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து விஜியிடம்”விஜிமா! அந்த இடத்திற்கு கிடைக்கும் பணத்தில் பாதியை வாங்கி உன் மாமனார் ஆப்ரேசனுக்கு குடுத்துடுடி. இப்ப இருக்க நிலையில் உனக்கு ரொம்ப முக்கியமா இருக்கும். உன் அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவார் தான். ஆனா இப்ப அதை எல்லாம் பாக்க முடியுமா..?
வளர்த்ததுக்கு காசு ஈடாகுமா..? அது தாய் மாமன் உறவுடி அப்படி எல்லாம் காசுக் கொடுத்து ஈடுச் செய்ய முடியாது. அடிச்சாலும் புடிச்சாலும் நாளைக்கு நானும் என் அக்காவும் செத்தா அவனுங்க தான்டி வரனும்… நீ கேளுடி மாமா கிட்ட, மாமா உனக்காக யோசிக்கும்” என தனக்குத் தெரிந்ததைக் கூறினாள் ஜமுனா.
“இல்ல ஜமும்மா! அது சரிவராது. அப்படி நான் போய் கேட்டால் ஜனா என்னைய கல்யாணம் பண்ணது அந்தப் பணத்திற்காகனு நிரூபணம் ஆகிடும். அதை ஜனாவால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனா தெளிவா சொல்லிட்டார் அந்தப் பணம் வேணானு, அதுக்கு மேல நான் கேட்டா அது ஜனாவின் தன்மானம் பறிப்போயிடும். எங்களால ஆன வழியில் நாங்க முயற்சிப் பண்றோம். இப்ப போய் நான் கையெழுத்துப் போட்டு வரேன். நீ அம்மாவைப் பாத்துக்கோ” என்றுக் கூறி எழுந்தாள் விஜி.
ஜமுனாவும் எழுந்திட, மங்கை”என்னங்கடி ஏதோ பேசிக்கிட்டீங்க, எதுக்கு அழுதீங்க..? உங்களுக்கும் இந்த மருந்து வாடை புடிக்கலையா..?” எனக் கேட்டார் .
“எல்லாத்துக்கும் மூலக்காரணமே நீ தான் மங்கை, ஆனா எதுவுமே மூளைக்கு ஏறாத அளவுக்கு பேசிட்டு இருக்க…. ஜமும்மாவ தொல்லை பண்ணாம இரு…” என விஜி தாயைக் கை நீட்டி கண்டித்துவிட்டு கைப்பையை எடுத்தாள்.
“விஜி! அப்பா கூட ரெண்டு வார்த்தை பேசிடுடி…. பாவம்! அந்த மனுசன் ஏங்கிட்டு இருக்கார்” என பயந்தப்படிக் கூறினாள் ஜமுனா.
“உன் கூடப் பேசிட்டனு தைரியமா ஜமுனா…? நீ எனக்கு சித்தி, அப்பவும் இப்பவும்… ஆனா அவரு…? அந்த இடத்தை இழந்துட்டார்…” எனக் கோபமாக வெளியேறினாள்.
****
என்ன தான் ஜமுனாவிடம் வீராப்பாக பேசினாலும் விஜி வீட்டிற்குள் நுழையும் போதே கண்கள் முத்தையாவைத் தேடியது.
கடந்த இரண்டு நாட்களாக அவரைப் பார்க்கவில்லை, அதுவும் மயங்கி விழுந்த பிறகு இன்னும் நேரில் காணவில்லை.
ஆனால் முத்தையா இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஹாலில் அமர்ந்திருந்த முத்து”வாம்மா! இப்ப தான் வரீயா, ஜனா சொன்னான், அங்கப் போகனுமுனு போய் குளிச்சுட்டுக் கிளம்பு” என்றார்.
“சரி மாமா!” என யோசனையோடு அவள் அறைக்குள் காலடி வைத்தாள். ஒரு வேளை அங்கு முத்தையா இருந்தால் எதேச்சையாக பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் நுழைந்தாள்.
அங்கு ஜனா தான் கிளம்பிக் கொண்டு இருந்தான்.
“ஹேய்! வா, ஏன் லேட்…? சீக்கிரம் கிளம்பு ட்ராபிக்ல போய் சேர நேரமாகிடும்” என அவளிடம் இருந்து திரும்பி கிளம்பியவாறே கூறினான்.
“ம்ம்ம்!” என்றவள், மாற்று உடை நைட்டியை எடுத்துக் கொண்டு பாத் ரூமை நோக்கி நடந்தாள்.
“அப்புமா! முத்தையா அவனோட வாட்சை வச்சுட்டுப் போயிட்டான், நீயும், ஜெய்யும் போகும் போது கொண்டுப் போய் குடுத்துடுங்க” என்றார் முத்து.
அதை காதில் வாங்கியவள் ‘ஓ! போயிட்டாரா..?’ என எண்ணி வசந்தா அடுப்படியில் நின்றதைக் கூட விஜி கவனிக்கவில்லை, பாத் ரூமிற்குள் புகுந்துக் கொண்டாள்.
பாத் ரூமிற்குள் நுழைந்தவள் தண்ணீரைத் திறந்துவிட்டு, மனம் தாளாமல் கண்களில் கண்ணீர் வழிய, தனக்கு என்ன தான் வேண்டும்..? என்ற குழப்பத்தில் அப்படியே தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டே வாய்விட்டு அழுதாள்.
வேண்டாமென்று தந்தையை ஒதுக்க தோணுது, ஆனால் அவரின் உடல்நிலை குறைவுப் பற்றி அறிந்ததும், மனசு தானா துடிக்குது ஏன்…?
வசந்தாவிற்கு ஏதோ வித்தியாசமான குரல் கேட்கவும், ஒரு நிமிடம் சமைப்பதை நிறுத்தி கவனித்தார்.
பாத் ரூமிற்குள் இருந்து வருகிறது எனப் புரிந்தது. அமைதியாக வேலையைத் தொடர்ந்தார்.
குளித்து முடித்து வெளியில் வந்த விஜி, வேகமாக அவள் அறையை நோக்கி நடந்தாள்.
அவளின் முகத்தைப் பார்த்த வசந்தாவிற்கு அவளின் அழுகை தான் அந்தக் குரல் எனப் புரிந்தது.
ஆனால் காரணம் தெரியவில்லை.
***
அறைக்குள் நுழைந்தவள் கதவினை உட்புறமாக தாழிட்டுக் கொண்டாள்.
ஜனா கட்டிலில் அமர்ந்து லேப் டாப்பில் ஏதோ மெயில் அனுப்பிக் கொண்டு இருந்தான்.
“ஜிமிக்கி! நீ கெளம்புறதுக்குள்ள நான் இந்த மெயிலை அனுப்பிடுவேன்… கெட் ரெடி ஃபாஸ்ட்” என அவளைப் பார்க்காமலே கூறினான்.
“ம்ம்ம்!” என்று மட்டுமே கூறியவள், தன் ஆடையை மாற்றத் தொடங்கினாள்.
மனம் ஏனோ அடங்க மறுத்தது, கண்ணீர் வழிந்தப்படியே இருக்க, பட்டென்று ஜனா முன் சென்று நின்றவள், “ஜனா!” என்றழைத்தாள்.
“என்ன ஜிமிக்கி..?” எனக் கேட்டு நிமிர்ந்தவன், அவளின் கண்களில் கண்ணீரைக் கண்டு சட்டென்று எழுந்தான்.
“ஏய்! என்ன ஆச்சு..?” எனக் கேட்டான்.
“நத்திங்!” என்றவள், அவன் மார்பில் சாய்ந்து அவனை முதுகோடு இறுக்கி அணைத்தாள்.
ஜனாவும் அவளை அணைத்து ஆறுதல் செய்தப்படி”சைன் போட போறதுக்காகவா….?” எனக் கேட்டான்.
“ச்சே! ச்சே! அது என் மைண்டிலே இல்ல..”
“பின்ன என்னடி….?”
“என்னனு சொல்லி தான் ஹக் பண்ணனுமா…?” எனக் கோபமாக கேட்டாள்.
“யாரு சொன்னா..? எப்ப வேணாலும் ஹக் பண்ணு, நான் உனக்கானவன் தான். பட் அந்த க்ரையிங் ஐஸ் எதுக்குனு தெரியனுமுல..”
“எதுக்கோ, பேசாம தான் இருந்தீங்கனா என்ன ஜனா…?”
“ஓகே!” என அமைதியானான்.
அவனை மேலும் இறுக்கிக் கொண்டவள்,
தன் மனம் மெல்ல அமைதியாவதை உணரத் தொடங்கினாள்.
தான் தேடிய ஆறுதல் கிடைக்கவும், அவனிடம் இருந்து விலகியவள், “தேங்க்ஸ் கோல்ட்!” என மெல்ல சிரித்தப்படி கூறினாள்.
“ம்ம்ம்! சரிங்க மேடம்… கிளம்பலாமா..?”
“இப்டியேவா…?” எனத் தன்னை காட்டியவளை அப்போது தான் கவனித்தான்.
சுடிதார் டாப்ஸ் முன் உள்ள உள்ளாடையை அணிந்து, பேண்ட் போட்டதோடு, டாப்ஸ் போட கூட மறந்து அவனின் ஆறுதலைத் தேடி வந்திருப்பதை.
“அடிப்பாவி! இது என்ன கோலம்…? பட்! எனக்கு கிடைத்த கண்கொள்ளா காட்சியை மறந்துட்டுப் பேசிட்டு இருக்கேன் பாரு…” என அவளை அப்படிட்டே சுவரோடு தள்ளி நிற்க வைத்து இருப்பக்கமும் கைகளை நிலைநிறுத்தினான்.
“பட்! ஐ வான்ட் எஸ் … அட்லீஸ்ட் கிஸ்….. சோ! நோ” என அவளின் இதழில் இதழ் பதித்து இடையே தெரிந்த வெற்றிடையில் கைவைத்து வருடினான்.
விஜியின் மனமும் அதை விரும்பி ஏற்றது. அவனின் இதழ் முத்தம் நீள, கரடியாக மாறியிருந்தான் அப்பு.
“அண்ணா! சாப்பிட வாங்க… அண்ணி! வாங்க” எனக் கதவைத் தட்டி கூறிவிட்டு நகர்ந்தான்.
இருவருமே எதிர்பாராத அந்தச் சத்தத்தில் பயந்து விலகினர்.
சிரிப்பு வரவும், “ஓகே! டிரஸ் போட்டு வா… நான் போறேன்” என நகர்ந்தான் ஜனா.
****
ரெஜிஸ்டர் ஆபிஸ்….
தர்மா, சுந்தர் மட்டுமே வந்திருந்தனர்.
விஜி பல சரிப்பார்த்தல் முடிந்து, அடுத்து பாக்கி இருந்த கையெழுத்தை வேகமாக போட்டுவிட்டு வெளியில் காத்திருந்த ஜனா பைக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
மற்றவைகளை தர்மா கூட்டம் முடித்துக் கொண்டது.
ஜனாவின் பின்னால் அமர்ந்திருந்த விஜி
“இப்ப தான் மனசு ஏதோ கடனை அடைத்த திருப்தியில் இருக்கு” என்றாள்.
“ம்ம்ம்! விடு… முடிஞ்சுட்டு அதுவரை நல்லது”
“ஜனா!”
“ம்ம்ம்!”
“உங்கக் கிட்ட ஒன்னு சொல்லனும்..”
“என்ன…?”
“காலையில்……..” என மருத்துவமனையில் நடந்ததைக் கூறினாள்.
“ஓ!” என அமைதியானவன், “தேங்க்ஸ் விஜி!” என்றான்.
“ஏன் ஜனா…?”
“இல்ல! உன் சித்தி சொன்னாங்கனு மாமானுங்க கிட்ட பணம் கேக்காம வந்தீயே அதுக்கு தான்..”
“உங்க தன்மானம் இருக்கே ஜனா… அதை எப்டி செய்வேன்…? ஐ நோ அபௌவட் மை கோல்ட்…. சீக்கிரம் வேற வழியில் பணத்தை ரெடிப் பண்ணி மாமா ஆப்ரேசனை முடிச்சிடலாம்..”
“ம்ம்ம்! ஆமா இதுக்கு தான் மார்னிங் க்ரையிங்கா..?”
“நோ!”
“அப்ப இதையும் தாண்டி ஏதோ இருக்கு… பாப்போம்…” என பைக்கை சாலையில் செலுத்துவதில் கவனத்தை திருப்பினான்.
“ஜனா! எங்கப் போறீங்க…?”
“மதியம் ஆச்சே, பசிக்குது வீட்டுக்கு தான்…”
“ஓ! சரி..”
“ஏன்..? வேறெதுவும் வேலை இருக்கா..?”
“இல்ல! போங்க” என்றாள், மருத்துவமனை போக எண்ணியவள் அவன் பசி என்றதும் அமைதியாகினாள்.