விஜி சிறிது சங்கடபட, வசந்தா உள்ளே சென்று தட்டுகளை எடுத்து வந்து முத்துவின் அருகில் அமர்ந்தார். பிறகு விஜியும் ஜனா அருகில் அமர, நான்குப் பேருக்கும் தட்டினை வைத்து வசந்தாவே பரிமாறினார்.
முத்து”ரொம்ப நாள் ஆச்சு ஜனா, இப்டி ஒன்னா உட்காந்து சாப்பிட்டே. நம்ம அப்பு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும், குடும்பமா சாப்பிட்டு இருக்கலாம்” என்றார்.
“அதுக்கு என்ன மாமா, இனிமே நைட் எல்லாரும் ஒன்னா உட்காந்து சாப்பிடலாம்” என்றாள் விஜி.
“ஆமா! ஆளுக்கொரு நேரத்துக்கு வேலைக்குப் போயிட்டு ஒன்னா உட்காந்தி சாப்புடுறாங்களாம்” என வசந்தா ஒரு ‘க்’ வைத்தார்.
“ஆமா! என் வொரி எல்லாம் நீ சரிப்பண்றதை இனிமே பாக்குறேன், உன் மாமனார் தீபாவளிக்கு உங்களை அவர் வீட்டுக்கு கூப்புட்டு இருக்கார். என்னனு முடிவுப் பண்ணிக்கோங்க” என்றார் தாய்.
ஜனா விஜியைத் திரும்பி பார்த்தான். முத்து”இதுல முடிவுப் பண்ண என்ன இருக்கு, தலைத் தீபாவளி போயிட்டு வாங்க” என்றார்.
“அதை அவங்க முடிவுப் பண்ணிப்பாங்க நீங்க ஏன் நுழையுறீங்க..?” என்றார் வசந்தா.
முத்துவிற்குப் புரிந்தாலும், “நடந்ததையே பேசிட்டு இருந்தால் எதிர்காலம் சந்தோஷமா இருக்காது, முத்தையா முன்னாடி மாதிரி இல்ல, ஆளே மாறிப் போயிட்டார், பாக்கவே வருத்தமா இருக்கு” என்றார்.
“ஃபுல் செக் அப் பண்ண கேட்டேன்பா, ஆனா மாமா வேணாமுனு சொல்லிட்டார், அவனுங்க காசுக்காக பேக்கேஜ்னு இழுத்து விடுறாங்க, எனக்கு ஒன்னுமில்ல நல்லா இருக்கேனு சொன்னார், கட்டாயப்படுத்த முடியல..”
“அவருக்கு உடம்பை விட மனசுல தான் பிரச்சனை ஜனா, மனசு சரி ஆனால் உடல் தானா சரியாகும், உசுரு இருக்கும் போது கண்டுக்காம போனப்புறம் அழுதுப் புரண்டு பிரயோஜனம் இல்லை. நீங்க தீபாவளிக்குப் போயிட்டு வாங்க” என்றார் தந்தை.
ஜனா இந்த முறை விஜியைக் கேள்வியாக பார்க்க, விஜி மெல்ல’ஓகே!’ எனத் தலையை ஆட்டினாள்.
“சரிப்பா!” என்றான்.
வசந்தா”ம்ம்ம்! ரொம்ப மாறிட்ட ஜனா” என அவர்களின் செயல்களைக் கண்டு, மகனிடம் முகத்தைக் காட்டினார். மகன் பொண்டாட்டிக்கு தலை அசைப்பதை நோட்டமிட்டு தாயின் விதிவிலக்காக மாறினார்.
“வசந்தா! அதான் அவங்க போறேனு சொல்லிட்டாங்கள, அமைதியா இரு” என மனைவியை அடக்கினார்.
***
இரவு…
விஜிற்கு இரவு வேலை முடியும் தருவாயில் ஜனா ஃபோனில் அழைத்தான்.
“சொல்லுங்க ஜனா!”
“ஜிமிக்கி! எனக்கு கான்க்ரீட் வேலை இருக்கு, நான் வர மிட்நைட் மேல ஆகும். நீ வீட்டுக்கு ஆபிஸ் கேபில் போயிடு”
“ஹாஸ்பிடல் போனுல ஜனா”
“இல்ல! மாமா அங்க தங்குறேனு சொல்லிட்டாங்க, நீ வீட்டுக்குப் போயிடு”
“நான் அம்மாவை இன்னைக்குப் பாக்கவே இல்ல ஜனா, நான் ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்குப் போறேன்” என மனதில் முத்தையாவைக் காணும் எண்ணத்தில் கூறினாள்.
ஏனோ மனம் அவரின் நினைவாக இருந்தது. அதுவும் மதியம் முத்து கூறிய
உயிர் இருக்கும் போது என்ற வார்த்தைகளிலே பாதி உடைந்துவிட்டாள். ஆபிஸ் வந்தது முதல் முத்தையா நினைவிலே மிதந்தவள் மனம் அவரைப் போய் பாரு என அலாரம் அடித்தது.
“விஜி! இப்ப நீ ஹாஸ்பிடல் போனாலும் அத்தைக் கிட்ட பேச முடியாது, அவங்க தூங்குவாங்க. சோ! காலையில் சீக்கிரம் நான் அழைச்சுட்டுப் போறேன்டா, ப்ளீஸ்” என அவள் மனம் அறியாமல் கொஞ்சினான்.
‘இல்ல! நான் அம்மாவைப் பார்க்க போகல அப்பாவைப் பார்க்க போறேனு எப்டி சொல்ல முடியும்..?’ என மனதில் வாதிட்டவள் முடிவில், “ஓகே!” என்றாள்.
****
நடு இரவு….
ஜனா வருவதற்கே மணி இரண்டு இருந்திருக்கும், அவன் வந்து அருகில் படுத்தும் விஜியின் மனம் உறங்க மறுத்தது.
அவளை அணைத்தப்படி படுத்தவனிடம்
“சாப்புட்டீங்களா..?” என்றாள்.
“நீ இன்னும் தூங்கலையா..? சைட்டுக்கு சாப்பாடு ஆர்டர் போட்டு இருந்தாங்க, சாப்புட்டேன் ஜிமிக்கி”
“ம்ம்ம்!”
“தனியா படுத்தது தூக்கம் வரலையா?”
“ம்ம்ம்!”
“சரி தூங்கு!” என அவளோடு நெருங்கிப் படுத்துக் கொண்டான்.
அதுவும் ஒரு வகையில் உண்மை போல, அதுவரை அடங்காத மனமானது அவனின் அருகில் அமைதியடைந்தது.
விழிகளை மூடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த விஜியின் முன்னால் முத்தையாவே வந்து நின்றார். ‘ஜிமிக்கிமா!’ என அழைத்தப்படி.
அவளோ அவரை நிமிர்ந்துப் பார்த்தலே தவிர, வாய்விட்டு’அப்பா!’ என அழைக்கவில்லை.
‘அப்பானு சொல்ல மாட்டீயா.? ஒரே தடவைச் சொல்லுடா’ எனக் கெஞ்சியவர், இவள் ‘அப்பா!’ என அழைக்க எண்ணும் முன்னே மறைந்தார்.
சட்டென்று எழுந்தமர்ந்தவள், புரியாமல் சுற்றிப் பார்க்க ஜனாவே அருகில் படுத்திருந்தான்.
‘கனவு!’ என மீண்டும் அவன் அணைப்பில் அடங்கி கண்களை மூடினாள்.
அவளின் மனமோ’நாளைக்கு முதல் வேலையா போய் அவரை பாரு விஜி!’ என்றது.
‘ம்ம்ம்!’ என்றாள் முதன் முறையாக.
*****
காலையில் விஜி எழுந்து வேகமாக கிளம்பினாலும், ஜனா மெதுவாக தான் கிளம்பினான்.
“என்னங்க மேடம், செம ஃபாஸ்ட் போல, எதுவும் வேற வேலையா…?”
“இல்ல ஜனா! அம்மாவைப் பார்க்க தான்..”
“ஓகே! ஓகே! லேட்டா தூங்கினதால காலையில் முழிக்கவே முடியல..” எனக் கூறிக் கொண்டே கிளம்பினான்.
“ம்ம்ம்! நோ ப்ராப்ளம்” என்றாள், அதனால் தான் ஜனாவை எழுப்ப முடியாமல் அவன் எழும் வரை காத்திருந்தாள், ஆனாலும் ஹாஸ்பிடல் போக எண்ணிய மனதை அடக்க முடியவில்லை.
***
மருத்துவமனை….
மங்கை இருக்கும் அறைக்குள் நுழையும் போது, விஜியின் மனம் படபடத்தது, ஒரு நிலையில் இல்லாமல் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
அவளின் துடிப்பினை நொடியில் பொசுக்கென்று ஆக்கியது அங்கு முத்தையாவை காணாமல் தேடிய விழிகளின் வழியே சென்ற உணர்வானது.
‘எங்க…?’ என மனதில் விஜி தேட, ஜனா
“எங்க மாமாவைக் காணும்..?” என ஜமுனாவிடம் கேட்டான்.
விஜி சென்று தாயின் அருகே அமர்ந்தாள்.
“தம்பி! அக்காவை டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமுனு சொல்லிட்டாங்க, அதான் அத்தான் அதுக்கான ஏற்பாபட்டினை செய்ய போய் இருக்கார், அப்படியே வீட்டுலப் போய் அப்பா, அம்மா கிட்ட நேரில் சொல்லிட்டு ஜெய்யை கூட்டிட்டு வரேனு சொன்னார். உங்களுக்கு ஃபோனில் கூப்புட்டார் கிடைக்கலைனு நேராவே போய் பேசிட்டு வரேனு அங்க தான் வந்தார்”
“அப்படியா!” என தன் ஃபோனை எடுத்துப் பார்த்தான், மிஸ்டு காலில் அவர் எண்கள் இருந்தது.
“ஓ! நான் கவனிக்கலயே”
“ஒரு வாரம் இருக்கனுமுனு டாக்டர் சொல்லி இருந்தாங்க ஜமும்மா, இப்ப போக சொல்லிட்டார்”
“விஜிமா! அக்காக்கு நல்லாவே சுகர் குறையுதாம், இனிமே சாப்பாடு கவனமா கொடுத்தா போதுமாம். மாத்திரை பழைய மாதிரி கொஞ்சமா பவர் கூட குடுத்திருக்காங்க. இங்க தங்கமுனு அவசியமில்லை சொன்னாங்க. அதுக்கு மேல நம்ம இஷ்டம்.. அப்பா, எதுக்கு வீணா எல்லாரையும் சிரமபடுத்திட்டுனு போக முடிவுப் பண்ணிட்டார்டா..”
“எங்கக் கிட்ட கேட்கனுமுனு உன் புருசனுக்கு தெரியாதா..? அவர் இஷ்டத்துக்கு முடிவு எடுப்பாரா..?” என எகிறினாள் விஜி.
“ம்ம்ம்! உனக்கு உன் புருசனைத் தவிர வேற யாரையும் தெரியாது, அவரு என் புருசன்மா…” எனத் தாயை முறைத்தாள் விஜி.
ஜனாவிற்கு சிரிப்பு வந்தது.
“அதுகிட்ட ஏன்டா கத்துற, அப்பா சொன்னதுல என்ன தப்பு இருக்கு.? இங்க இருந்தா உன் மாமியார், புருசனுக்கு தான் சிரமம் விஜிமா, பாவம் இவரு அலையுறாரு. அவங்க சமைச்சுக் கொடுத்து விடுறாங்க. எதுக்கு சிரமம் அக்காக்கு நல்லா இருக்குனு சொல்லிட்டாங்கடா..” என விஜியை சமாதானம் செய்தாள் ஜமுனா.
“எங்களுக்கு என்னங்க சிரமம்..? நம்ம குடும்பம் தானே… நான் மாமாக்கு ஃபோன் பண்றேன்” என ஜனா ஃபோனை எடுத்தான்.
விஜிக்கு மனமே ஆறவில்லை, எப்படி..? எப்படி..? அவர் இன்னைக்கு கிளம்ப போறாரே..? எனப் புரியாமல் முழித்தாள்.
“சொல்லுங்க மாமா!”
“ஆ! இருந்து பாத்துட்டு போகலாமே”
“ஓ! சரி, ட்ரைனிலா, நான் என் ப்ரண்ட் அமர் கிட்ட புக் பண்ண சொல்லிடுறேன். நாலு டிக்கெட் தானே..” எனக் கேட்டு ஃபோனை வைத்தான்.
பிறகு”விஜி! நைட் ட்ரைன் புக் பண்ண சொல்றேன்… அவரு போகனுமுனு ஸ்டாங்கா சொல்றார். அதான் நம்ம தீபாவளிக்குப் போறமே அப்ப அம்மா கூட தங்கிட்டு வரலாம்” எனக் கூறிவிட்டு அமரிடம் தகவல் சொல்ல சென்றான்.
விஜியின் மனம் அடுத்த வாரம் வரைத் தாக்கு பிடிக்குமா எனத் தெரியவில்லை.
அடுத்தடுத்து வேகமாக நடந்தது. முத்தையாவும் ஜெய்யுடன் வந்துச் சேர்ந்தார்.
அவரை எதிர்பார்த்திருந்தவள், நேரில் கண்டும் கண்டுக் கொள்ளாமல் இருந்தாள்.
முத்தையாவிற்கு ஜமுனாவிடம் விஜிப் பேசியது தெரியும், அவருக்கு அதில் சந்தோஷமே.
“உனக்காவது நிம்மதி வரட்டும்” என்றார் ஜமுனாவிடம்.
மங்கையை புடவைக் கட்டி கிளப்பிவிட்டாள் ஜமுனா.
அப்புவும் மதியம் மேல் வந்துவிட்டான். ஜனா, விஜி, முத்தையா, என அனைவரும் அங்கிருந்தனர்.
ரெனியும் மங்கை கிளம்புவதை அறிந்து வழியனுப்ப வந்தாள்.
விஜியின் மனம் அப்பப்போ உந்துதல் அளிக்க, திரும்பி முத்தையாவை யாரும் அறியா வண்ணம் நோக்கினாள்.
முதலில் அதைக் கவனிக்காத ஜனா, தன்னவள் விழிகள் சென்ற திசையைக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஆனான்.
அதன் பின் அவளின் விழிகளையே பின் தொடர்ந்தவனிற்கு ஏதோ புரிந்தது.
அவள் காணாத போது தந்தையவர் மகளை சொல்ல முடியாத ஏக்கத்தோடு அளவெடுத்தார்.
அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை இடையில் ஒருவன் கண்காணித்ததை இருவருமே அறியவில்லை.
முத்து வழியனுப்ப ஸ்டேசன் போக
வேண்டும் என வழியுறுத்த, ஜனா அமரின் துணையுடன் பெற்றோரை ரயில்வே ஸ்டேசன் வரச் சொல்லிருந்தான்.
ஒரு கார், ரெனி பைக், ஜனா பைக் என செல்வதற்கு ஏற்பாடு ஆகியிருந்தது.
மங்கை, ஜமுனா, முத்தையா, அப்பு, ஜெய் , ரெனி என அனைவரும் வெளியில் சென்றார்கள். விஜி இறுதியில் அறையை பார்த்து வருவதாக நின்றுக் கொண்டாள்.
அவளால் முத்தையாவிடம் பேசாமல் வழியனுப்ப முடியவே இல்லை, ஆனால் அதை வெளிப்படுத்த தெரியவில்லை. கண்கள் கலங்கி நின்றாள்.
ஜனா, விஜி மட்டும் வராமலிருக்க அறையை நோக்கி சென்றான்.
“விஜி! போகலாமா..?” எனக் கேட்டவனைத் திரும்பி பார்த்தவள், ஓடிப் போய் அவன் மார்பில் சாய்ந்து தேம்பி அழுதாள்.
“என்ன ஆச்சுனு கேக்க மாட்டேன்…”
விஜி அழுவதை நிறுத்தவில்லை.
“ஆனா! எனக்குத் தெரியும் ஜிமிக்கி. பாத்துட்டு தான் இருந்தேன், உன் கண்ணாமூச்சி ஆட்டத்தை….” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“நேத்து அழுததும் இதுக்காகவா..?”
“ம்ம்ம்!” எனத் தலையை அசைத்தாள்.
“ஏன் இவ்வளவு யோசிக்குற…? அப்பா, அம்மா பந்தம் இந்த ஜென்மத்துக்கு மாறாது. அப்பா அப்பா தான். அம்மா அம்மா தான் விஜி. இந்த ஜென்மத்துக்கு உனக்கு அப்பா இவர் தான், நீ ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும். ஆனா ஏத்துக்க மனசு ஏங்கும் போது, அதைத் தடுக்காத. மாமா கிட்ட பேச தோணுச்சுனா பேசிடு, ஒரு தடவைப் பேசிட்டா அந்த சுவர் உடைஞ்சுடும். ட்ரை பண்ணு நான் கம்பெல் பண்ணல” என்றான்.
“இல்ல! எனக்கு நீங்க மட்டும் போதும்…” என அவனிடம் இருந்து விலகியவள்,
“வாங்க போகலாம்!” என வெளியேறினாள்.
ஜனாவும் பின் தொடர்ந்தான்.
***
ஜனா, விஜி பைக்கில் முதலில் செல்ல மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
ரயில்வே ஸ்டேசனில்……
அனைவரும் முத்தையா குடும்பத்தை வழியனுப்பக் காத்திருந்தனர்.
ஜமுனா வசந்தாவிடம் விடைப்பெற, முத்தையா முத்துவிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
விஜி மங்கையிடமும், ஜெய் கிட்டயும் பேசி அறிவுரை வழங்கினாள்.
“ஜெய்! பெரியம்மாக்கு சாக்லேட், ஸ்வீட் குடுக்க கூடாது, அம்மா நீயும் சாப்புடாத அப்புறம் மறுபடியும் டாக்டர் தான் பாக்கனும்”
“சரிக்கா! நான் குடுக்க மாட்டேன்..”
“அய்யோ! நான் டாக்டர் கிட்ட போவே மாட்டேன். ஆமா! நம்ம வீட்டுக்கு போகாம ஏன் இங்க இருக்கோம்…?”
அவர்கள் பேசிக்கொள்ள, ஜனா, அமர் ப்ளாட்பார்ம் டிக்கேட் எடுத்துக் கொண்டு வந்தனர்.
ட்ரைன் வரச் சத்தம் கேட்டது.
முத்தையா வசந்தாவிடம்”தங்கச்சி! விஜியை இந்த அண்ணனோட பொண்ணா நெனச்சு பாத்துகோங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்ல, அது ரொம்ப கஷ்டப்பட்ட புள்ள, அருமையான மகனைப் பெத்துக் கொடுத்து இருக்கீங்க, அதுவே அதுக்கு குடுப்பினை தான். முத்துவுக்கும் உடம்பு சரியாகிடும், நான் ஊருக்குப் போய் நம்ம நிலத்தை வச்சு எவ்வளவு பணம் தோது பண்ண முடியுதுனு பாக்குறேன், எல்லாரும் சேந்து அவரை மீட்டுடலாம். நான் போயிட்டு வரேன்.” என்றவரின் வார்த்தைகளில் வசந்தாவிற்கு கண்ணீர் வந்தது.
“நீங்க இப்டி சொன்னதே எனக்கு முழுத் தைரியம் வந்துட்டுண்ணா. என் மனசு அவரோட உடல்நிலை தாண்டி யாருக்கும் கெடுதல் நெனைக்காது. அதுக்கே எனக்கு நேரமில்ல… உங்கப் பொண்ணை என் பையன் தாங்குறான், கவலைப் படாதீங்க” என்றார் அவர்.
முத்தையா அனைவரிடமும் விடைப்பெற்று இறுதியில் விஜி முன் வந்தார்.
“ஜி…” என ஆரம்பித்தவர், “விஜிமா! உனக்கு கிடைச்சப் புருசன் தங்கப்புள்ள, அவரு மனசு நோகாம நடந்துக்கோ. நான் கிளம்புறேன். தீபாவளிக்கு நீயும் மாப்பிள்ளையும் வாங்க” என்றார்.
அவள் நிமிரவே இல்லை. முத்தையா விலகி நடந்தார். ட்ரைன் வரவும் அமர் பொருட்களை ஏற்ற மற்றவர்கள் ஏறினர்.
மெயின் ஸ்டேசன் என்பதால் கொஞ்ச நேரம் நிற்கும்.
ஜனா அவள் அருகில் வந்து, அவளின் கையை அழுந்தப் பிடித்தான்.
அவன் முகத்தைத் திரும்பி பார்த்தாள்.
“போ! போய் பேசு, எனக்காக இல்ல, உனக்காக சொல்றேன் ஜிமிக்கி” என்றான்.
ஏனோ அவனின் வார்த்தைகளில் ஒரு உணர்வு வர, வயதின் தளர்வு மனதின் வலியோடு நடந்துச் சென்றவரை”அப்பா!” என அழைத்தாள் பல வருடங்கள் பிறகு.
அந்த ஒற்றை வார்த்தைக்காக ஏங்கியவர் மனம் எப்படி அதைக் கேளாமல் இருக்கும், சட்டென்று திரும்பினார்.
அதன் பின் விஜி யோசிக்கவே இல்லை,
முத்தையாவின் மார்பில் தஞ்சமடைந்திருந்தாள்.
“ஜிமிக்கிமா!” என அவரும் மகளை அரவணைத்தார்.
“சாரி அப்பா! உங்க மேல உள்ள கோபத்தை விட பாசம் அதிகமுனு எனக்கு இப்ப புரியுது. பழைய கம்பீர முத்தையா மேல இருந்த கோபம் இந்த முத்தையா மேல வரல… ஏனு தெரியல..?”
“இல்லனு சொல்ல மாட்டேன். ஆனா! நடந்துடக் கூடாதுனு மனசு தவிக்குதுப்பா. உங்களை மூணு நாளா பாக்க முடியாம ஒரு மாதிரி மனசு உடைஞ்சுட்டு. என்னோட அப்பாக்கு எதும் ஆகிடக் கூடாதுனு பயம், ஏக்கம் வந்துட்டு. நீங்க நல்லா இருக்கீங்கள…?” என அவர் முகத்தைத் தடவினாள்.
“எனக்கு என்னடா நல்லா இருக்கேன். நீ பேசலையேனு ஒரு மனசங்கடம் இருந்துச்சு இப்ப அதுப்போச்சு. இதுப் போதுமுடா எனக்கு. நீ புருசனோட நல்லா வாழனும் அதான் இனிமேல் அப்பா சந்தோஷமே..”
“என் மேல கோபமே இல்லையா..? அவ்வளவு வெறுத்து ஒதுக்கினேனு..”
“நீ அப்டி பேச காரணம் நான் தானே. நீ என் பொண்ணுடா என்ன பேசினாலும் நான் பெத்த என் குலதெய்வம். நான் பண்ண தப்புக்கு என் சாமி உன் ரூபத்துல தண்டனைக் குடுத்துச்சு, ஏத்துக்கிட்டேன். ஆனாலும் உன் வலிக்கு மருந்தில்லையே. அதுக்கு எனக்கு இன்னும் கிடைக்கல, காத்திட்டு இருக்கேன்” என கண்களில் நீர் வழிய சிரித்தார்.
“ஏன்பா இப்டி பேசுறீங்க…? போதும் நடந்தது எல்லாம் மறந்துடலாம்.” என அவரின் கண்களைத் துடைத்தவள், ஜனாவை அழைத்தாள்.
அவன் அருகில் வர, காலில் விழுமாறு கண் காட்டினாள். இருவரும் முத்தையா காலில் விழுந்தார்கள்.
அவர்களை ஆசிர்வதித்து”நல்லா இருங்க” என்றார்.
“மாமா! இப்ப ஹேப்பியா.. நீங்க போயிட்டே இருங்க, நாங்க தீபாவளிக்கு வந்து சேருவோம்…”
“ஆமா! இப்ப நிம்மதியா முத்தையா.. உன் பொண்ணு ஏக்கம் தீர்ந்துட்டா… புள்ளைங்க வரும் போது கம்பீரமா பழைய முத்தையாவா வரவேற்குற…” என்றார் முத்து.
“அதுக்கு என்ன, எல்லாரையும் பெரிய விருந்தோட தடபுடல் பண்ணிடுறேன். கண்டிப்பா எல்லாரும் வரனும்..”
“அண்ணா! இவரை அவ்வளவு தூரம் அழைச்சுட்டு வரது கஷ்டம். உங்கப் பொண்ணு, மாப்பிள்ளை வருவாங்க” என்றார் வசந்தா.
“அத்த! அப்பு மாமா வரனும்” என்றான் ரயிலில் இருந்து குரல் கொடுத்த ஜெய்.
“டேய்! அழைச்சுட்டு வரோம்டா..” என்றான் ஜனா.
“அப்ப நான்” எனக் கேட்ட ரெனியோடு,
“அதானே நானு…” என்றான் அமர்.
“எல்லாரும் வாங்கப்பா!” எனச் சிரித்தார் முத்தையா.
“எதுக்கு வராங்க..?” என மங்கை ஜமுனாவை நச்சரித்தார்.
ஜனா”மாமா! ஏறுங்க டைம் ஆச்சு” என்றான்.
“ஜிமிக்கி! வரேன்டா… பத்தரமா இரு. இந்த அப்பாவை மன்னிச்சுட்டுல…”
“அப்பா! அதைப் பத்தியே பேசாதீங்க,
மன்னிப்புக் குடுக்க எனக்கு வயசில்லை. அன்னைக்கு காலுல விழுந்தப்பவே நான் நொறுங்கிட்டேன்பா, ப்ளீஸ்” என மீண்டும் தந்தையைக் கட்டி அணைத்தாள்.
அவளை நிமிர்த்தி நெற்றியில் முத்தம் வைத்தவர், “சரிடா! நான் கிளம்புறேன், சந்தோஷமா இரு, மாப்புள்ள கூட அனுசரணையா இரு… அப்பா உன்னைய தான் அனாதையா விட்டுட்டேன். அது மிகப்பெரிய பாவம். தப்பு பண்ணிட்டேனு ஒவ்வொரு தடவையும் கூனிக் குறுகிப் போனேன். மனசு பாரமாவே இருந்துச்சு, மூச்சுவிடும் போது கனமா இருக்கும் இப்ப தான் சுதந்திரமா மூச்சுக் காத்து வெளியில வருது, இத்தனை வருசத்துல ஒரு நாளாவது உன் கூட இப்டி பேசிட மாட்டமானு வேண்டாத நாளில்லை. அந்த நாள் வந்துட்டுடா, நீ நல்லா இரு…” எனக் கூறும் போதே ரயில் நகரும் சத்தம் கேட்டது.
வேகமாக ஏறிய முத்தையா, மகளின் கையை விடாமல் பிடித்திருந்தார்,
“ஜிமிக்கி!” எனச் சிரித்தார்.
அந்த நரைமுடிகளின் அழகில், சிவந்த கண்கள் கண்ணீர் சிந்த, முகத்தில் புன்னகை மலர, மகளின் கையை மெல்ல விடுவித்தார்.
“அப்பா!” எனக் கண்ணீர் மல்க கையை அசைத்து நின்றவளை, அணைத்துக் கொண்டு மாமனாருக்கு கையை அசைத்தான் ஜனா.
அங்கிருந்தவர்களுக்கு அக்காட்சியானது கனமான மனநிலையை உருவாக்கியது.
விஜி தந்தையுடன் ஃபோனில் பேசினாலும் நேரில் பார்க்க ஆசையாக இருந்தாள். தீபாவளிக்காக ஊரில் அனைவருக்கும் ஜனாவை புதுத் துணிகள் எடுத்துச் செல்லுமாறு முத்துவும், வசந்தாவும் கூறினார்கள்.
முத்தையாவிற்கு புதுத்துணியுடன் அவர் அணியும் பச்சை வார் பெல்டை மறக்காமல் வாங்கினாள் விஜி.
வசந்தா விஜியுடன் ஒட்டுதலாக பேசவில்லை என்றாலும் தேவையான போது பேசத் தொடங்கியிருந்தார்.
அதுவே விஜிக்கு ஆறுதலாக இருந்தது, ஜனா அதுவும் மாறும் என மனைவியைத் தேற்றினான்.
இந்நிலையில் தான் அன்று விஜி ஃபோனிற்கு தீபாவளி வர மூன்று நாட்கள் இருக்க தர்மா அழைத்திருந்தார்.
“விஜி! நீயும் மாப்பிள்ளையும் தீபாவளிக்கு வீட்டுக்கு வரனும்” என அழைப்புக் கொடுத்தார்.
விஜிப் புரியாமல் ஜனாவிடம் பகிர, ஜனாவும் அங்க தானே போறோம் அப்படியே போயிட்டு வரலாம் என்றான்.
தீபாவளி முதல் நாள், முத்துக் கூற விஜி மாமா வீட்டில் உள்ள அனைவருக்கும் புதுத்துணிகள் எடுத்திருந்தாள், அத்தனை நாட்கள் அந்த வீட்டில் இருந்தோம், முதல் தடவைக் கல்யாணம் ஆகிப் போகிறோம் என்ற ஒரு நல்ல எண்ணத்துடன்.