முத்தையாவைக் குளிப்பாட்டி, விஜி எடுத்து வந்த ஆடைகளை அணிந்து அவள் வாங்கி வந்த பச்சை பெல்டைப் போட்டு விட்டார்கள்.
நடுவாசலில் பாடையில் கிடத்தினர். அவர் மேல் ராணுவ உடையைப் போர்த்திவிட்டான் ஜனா.
ஜனா, விஜி இருவரையும் ஒரு பெரியவர் தலையில் தண்ணீர் ஊற்றி வரச்சொன்னார். ஜனாவும் வேஷ்டி மாற்றிக் கொண்டுச் சென்று தலையில் தண்ணீர் ஊற்றி ஈரத்துடன் வரவும், விஜியும் தண்ணீர் தலையுடன் வந்தாள்.
காமாட்சி விளக்கை, வெண்கலப்படியில் நெல் நிரப்பி அதன் மேல் வைத்து விஜி கையில் எடுத்துக் கொடுத்தனர்.
அவள் பின்னால் ஜனாவின் கையில் தேங்காய் கொடுத்து முத்தையாவை மூன்று முறைச் சுற்றி வரக் கூறினர்.
இருவரும் சுற்றி வந்து அவர் காலடியில் வைத்து கீழே விழுந்து வணங்கினர். பிறகு அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டின் திண்ணையில் வைத்துவிட்டு திரும்ப, நான்குப் பேர் பாடை அருகே நின்றனர்.
முத்து ஜனாவிடம் கண் காட்டினார், பாடையைச் சென்று தூக்குமாறு, அது புண்ணியத்தில் சேருமாம் தூக்குபவர்களுக்கு என்பது நம்பிக்கை.
ஆனால் முத்து சொன்னதன் அர்த்தம் முத்தையாவிற்காக, தான் செய்ய முடியாத நிலை, மருமகனாக நீ செய் என்ற எண்ணத்தில் கண் அசைத்தார்.
சட்டென்று பாடைத் தூக்க குனிந்தனர், ஜனா ஓடிப்போய் முன் பக்கமாக சென்று ஒரு பக்கத்தைத் தூக்கினான்.
விஜி கண் சிமிட்டும் நேரத்தில் முத்தையாவைத் தூக்கியதும், ஓடிப்போய் கதறினாள்.
ஜமுனாவும் கதறித் துடிக்க, ஆளுக்கொருவரை பிடித்துக் கொண்டனர்.
அடுத்தடுத்து முடிந்து ஆண்கள் வீடுத் திரும்பினர்.
***
இரவு….
வீட்டினர் மட்டுமே இருக்க, ஆளுக்கொரு மூலையில் படுத்திருந்தனர்.
ஆண்கள் பந்தலில் அமர்ந்திருக்க, தர்மா
“பொறந்தப் பொண்ணு இன்னைக்கு இங்க தங்க கூடாது தம்பி, நீங்க விஜியை அழைச்சுட்டு நம்ம வீட்டுக்கு வாங்க காலையில் வரலாம்” என்றார்.
“இல்ல பரவாயில்லங்க, என்ன பார்மாலிட்டிஸ் இருக்கு தங்குறதில்..” என மறுத்தான் ஜனா.
அந்த ஊர்க்காரர்”ஆமா தம்பி! தர்மா சொல்றது சரி தான், விஜிப்புள்ளைய கூட்டிட்டுப் போயிட்டு வாங்க, ராத்திரிக்கு மட்டும் தானே, கட்டிக்கொடுத்தப் பொண்ணு இன்னைக்குத் தங்க கூடாது” என்றார்.
பலர் கூறவும், முத்து”ஜனா! இவ்வளவு தூரம் சொல்றாங்கள… போயிட்டு வா” என்றார்.
“விஜி கிட்ட கேக்குறேன்பா” என உள்ளே சென்றான்.
அங்குச் சென்று கூற, ஜமுனா”ஆமா தம்பி! இந்த பக்கட்டு பழக்கம் அது” என்றாள்.
வசந்தா”ஒரு நாள் தானே போயிட்டு வாங்க” என்றார்.
விஜி தலையை அசைத்தாள்.
“அப்பாக்கு ஓகேவா இங்க” எனத் தாயிடம் விசாரித்தான்.
“அதான் அமர் இருக்கான்ல, நான் பாத்துக்கிறேன், நீ போ”
ரெனியும் அங்குத் தங்கியிருக்க வசந்தாவிற்கு உதவியாக இருந்தது. மங்கை தூங்கிக் கொண்டு இருந்தார். அவருக்குத் தேவையானதை ஜமுனா உறவுப் பெண் வைத்துப் பார்த்துக் கொண்டாள்.
“அத விடுப்பா, ஏதோ கிரகம் நடந்துட்டு. நீ தான் விஜிக்குப் பொருத்தமானவன், கடவுள் சரியா தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்”
“ஆமா! அது என்னவோ உண்மை தான். நீ தங்கமான பையன் தான்” என்றார் ராமு.
விஜி ஜனாவைப் பார்த்தாள். ஆனால் அவள் முகத்தில் சிரிப்பு இல்லை.
“சரி! சரி! நீங்க போய் தூங்குங்க.” என தர்மா கூறவும், விஜி எழுந்து நடக்க, ஜனாவும் கூடவே சென்றான்.
விஜி அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
கட்டிலில் சென்று அமர்ந்தவள், எதுவுமே பேசவில்லை.
ஜனா சென்று அருகில் அமர்ந்தான்.
“ஜிமிக்கி!” என அவள் தோளில் கைவைத்தான்.
“ஜனா! நடந்தது எல்லாம் நிஜம் தானா..?”
“ம்ம்ம்!” என அவள் கன்னத்தில் வைத்து வருடினான்.
சட்டென்று அவன் மடியில் சாய்ந்தவள்,
“என்னால நெனக்கவே முடியல ஜனா. அப்பா என்னைய விட்டுப் போயிட்டாருனு. என் கூட இருக்காம ஏமாத்திட்டார்ல” எனக் கண்ணீர் வடித்தாள்.
“அது தான் விதிப் போல ஜிமிக்கி, அட்லீஸ்ட் அவர் கூடப் பேசி கடைசி ஏக்கத்தைத் தீர்த்து வச்சீயே, இல்லைனா இப்ப உனக்குமே தீராத ஏக்கமா மாறியிருக்கும்”
“அவர் முகம் அந்த ட்ரைன்ல இருந்து கை எடுக்கும் போதே ஏதோ டிஸ்டர்ப் பண்ணுச்சு ஜனா. நான் இப்டி யோசிக்கவே இல்ல”
“ம்ம்ம்! அவருக்கு மெடிக்கல் செக் அப் போட்டு இருக்காளமோனு மனசு வலிக்குது, அஜாக்கிரதையா விட்டாச்சு ஜிமிக்கி”
“நான் தான் முக்கிய காரணம், அழுத்திச் சொல்லி இருக்கனும்..”
“ம்ம்ம்! எனக்கு என்னமோ உன் கூட பேசியதும் ஃபுல்ஃபில் ஆச்சுனு மூச்சை நிறுத்திட்டாரோனு தோணுது. அல்ரெடி ப்ராப்ளம் இருக்குனா மாத்திரையை ஒழுங்கா சாப்புட்டு இருக்கனும். இது வேணுனே விட்ட மாதிரி இருக்கு”
“என்னைய விட்டுட்டுப் போறதே அவருக்கு வேலையாப் போச்சு ஜனா” எனக் கண்ணீர் சிந்தினாள்.
“அப்படி நினைக்காத, அவரோட விதி அவ்ளோதான்”
விஜியை மடியில் படுக்க வைத்தே தூங்க வைத்தான்.
****
அடுத்த நாள் காலையில் பால் தெளித்தார்கள்.
கருமாதி வரை இருந்து சிறப்பாக முத்தையாவிற்கு அனைத்தையும் ஜனாவே பொறுப்பாகப் பார்த்தான்.
முத்து”என்னைய பொருட்படுத்தாத விஜி. இது எல்லாம் போற உயிர். இந்தா முத்தையாவே போயிட்டாரு. நான் மட்டும் என்ன வைரமா..? போக வேண்டியது தான். நான் ஒரு யோசனை சொல்றேன்”
“என்ன மாமா…?”எனக் கேட்டாள் விஜி.
“இந்தப் பணத்தை எடுத்து ஜெய் பேரில் போடும்மா, இந்தக் குடும்பத்திற்கு பிரயோஜனம் ஆகும், அவன் வளரப் பிள்ளை அப்பாவை இழந்து, ஆறுதலின்றி நிக்கிறான். உனக்காச்சும் அப்ப மாமாங்க பாத்துக்க இருந்தாங்க. அவன் உலகமே முத்தையா மட்டும்தான். நம்ம இருந்தாலும் அவர் இடம் வருமா.?” என்றார்.
முத்து கூறியது சரியெனப் பட, அனைவருமே முடிவு எடுத்து ஜமுனாவிடம் கொடுத்தார்கள்.
ஜமுனா வாங்கவே முடியாது என்று மறுத்தாள்.
விஜி கெஞ்ச, “அப்பனா, இதுல இருந்து மாமாக்கு நீ பணம் எடுத்துக்கோ, மீதியை ஜெய் பெயரில் போடு” என்றாள்.
ஜனா இறுதியாக”அக்கா! இந்தப் பணத்தை நான் கடனாக வாங்கிக்கிறேன். ஜெய் பெயரில் மாச மாசம் பேங்கில் போட்டு திருப்பி தரேன் வாங்கிக்கனும்… இல்லனா நான் ஒத்துக்க மாட்டேன்”
“தம்பி! இது விஜிக்காக நாங்க செய்றது. அதை ஏன் கடனா பாக்கிறீங்க..? அதுவும் அவ அப்பா உழைப்பு”
“இந்தப் பணத்தில் எதுவும் வேணாம், நாளைக்கு உங்கப் பையன் சம்பாரிச்சுக் கொடுத்தால் வாங்கிக்கிறேன். இது என் சுயமரியாதை, விஜி நீ சொல்லு. நான் வெளியில் வெயிட் பண்றேன். அப்பா, அம்மா வாங்க” என்று வெளியில் போய் விட்டான்.
“ஜமும்மா! மாமா அன்னைக்கு இந்தப் பணத்துக்காக தானே என்னைய கல்யாணம் பண்றனு கேட்டது ஜனாவுக்கு அழுத்தமா பதிஞ்சுட்டு. நீ தப்பா நினைக்காத. அப்பா சம்பாரிச்சது இவனுக்குப் போகுது, இவன் சம்பாரிச்சு எனக்கு தருவான். சரியா…?”
“ம்ம்ம்! அப்படி பட்ட புள்ளை யாருக்கு கிடைக்கும். உனக்கு கிடைச்சு இருக்கு பத்தரமா பொத்தி வச்சுக்க விஜிமா…”
“ம்ம்ம்!” என லேசாக சிரித்தவள், அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, அம்மா, மாமாவிடம் கூறி விடைப்பெற்றாள்.
“மாமா! அப்பப்ப இவங்களை பாத்துக்கோங்க” என்றாள்.
“அதுக்கு என்னடா, நாங்க பாத்துக்குறோம் நீ நிம்மதியா போயிட்டு வா, அன்னைக்கு நீ எங்களை இவருக்காக எதிர்த்துப் போனப்ப கோபம் வந்துச்சு, ஆனா இந்தப் பையனுக்காக நீ செஞ்சதில் தப்பே இல்லைனு எங்க எல்லாருக்கும் செருப்பால அடிச்ச மாதிரி புரிய வச்சுட்டாப்ல உன் புருசன். தேடினாலும் கிடைக்காத மாப்பிள்ளைடா. சந்தோஷமா வாழுடா விஜி. ஏதா இருந்தாலும் மாமாக்கு ஃபோன் பண்ணு, இவங்க மூணுப் பேரும் எங்கப் பொறுப்பு. சுந்தரைக் கூடவே இருக்க சொல்றேன். நீ கவலைப்படாம போ” என்றார் தர்மா.
****
நாட்கள் கடந்தது….
அடுத்த முறை ஊருக்குப் போன போது முத்தையா அறையில் இருந்து டைரி ஒன்றை எடுத்து வந்திருந்தாள் விஜி.
அதில் விஜியைப் பற்றி தான் எழுதி இருந்தார். விஜியின் மேல் உள்ள பாசம் வெளியில் தெரிந்தது. ஆனால் முத்தையாவின் சொல்லாத காதல் அது தான் ஜமுனாவின் மேல் இருந்த பாசம்.
“ஏதோ ஒரு சூழ்நிலையில் புருசன், பொண்டாட்டியாக ஆகிட்டோம், ஆனா நான் அவளுக்குப் பொருத்தம் இல்லாதவன், அடுத்த ஜென்மத்தில் அவ ஆசைப்படி நான் புருசனா அமைஞ்சு அவளோட அன்புக்கு தகுதியானவனா வாழனும்”
விஜிக்கு அதைப் படித்ததும் கண்கள் கலங்கியது. உடனே ஜமுனாவுக்கு ஃபோன் செய்தாள்.
“ஜமும்மா! அப்பாக்கு உன்மேல அன்பே இல்லைனு சொன்னல. அது சொல்லாத அன்பா இருந்திருக்கு”
“என்னடி உளரிட்டு இருக்க…?”
“உண்மை தான் ஜமும்மா, அடுத்த ஜென்மத்தில் உன்னோட வாழ ஆசைப்படுறார், உன்னைய மாதிரியே” என்றாள்.
“நெஜமாவா விஜிமா..?”
“ஆமா! கவலைப்படாத, நானும், ஜெய்யும் பொறந்துடுறோம்” எனச் சிரித்தாள்.
“போடி!” என அடுத்த ஜென்மத்திற்காக இப்ப வெட்கப்படும் தன் சித்தியை நினைத்து விஜியால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
“நீ எல்லாம் ரேர் பீஸ் ஜமும்மா. ஃபோனை வை” என கட் பண்ணினாள்.
***
முத்துவிற்கு ஆப்ரேசன் நல்லப் படியாக முடிந்தது. கல்லீரல் மாற்றுச் சிகிச்சை முடிந்தாலும் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வசந்தா அதில் மிகுந்த கவனமாக இருந்தார், ஏன் என்றால் அவருக்கு கிடைத்திருக்க இரண்டாவது வாய்ப்பிது.
அதை தவற விடாமல் கணவனுடன் வாழ்ந்திட தானே கோயில், குளம், விரதம் எனச் சுற்றித் திரிந்தார்.
ஜனாவும், விஜியும் தேவையான உதவிகளைச் செய்திட, முத்து உடல்நலத்தில் முன்னேறினார்.
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு மாதிரி அமைந்தது. மங்கை கணவர் இறந்தது தெரியாமல் அவரோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்.
ஜமுனா அடுத்த ஜென்மத்தில் வாழப் போகின்ற வாழ்க்கைக்கு கனவில் மிதக்கின்றாள் கணவரோடு.
வசந்தா கிடைத்த வாழ்க்கையை போராடி தக்க வைத்துக் கொண்டார்.
இரவு ஒரு நாள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அன்று விஜிக்கும் விடுமுறை.
வசந்தாவிற்கும், விஜிக்கும் மாமியார், மருமகள் சலசலப்பு இருந்தாலும் ஓரளவு விட்டுக்கொடுத்துப் பழகினர்.
வசந்தா”ஜனா! பக்கத்து வீட்டுல அவங்கப் பேத்திக்கு முதல் பிறந்த நாளுனு கூப்புட்டாங்க போயிருந்தேன். அழகு குட்டியா இருந்துச்சு. எனக்கு பேத்தி தான் வேணும், பொண்ணு இல்லாத குறைப் போகனும்.” என்றார் ஆசையாக.
விஜி எதுவும் சொல்லவில்லை, சாப்பிட்டு முடித்து தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.
அப்பு”அம்மா! அதான் எனக்கு ப்ராக் போட்டு போட்டோ எடுத்து மானத்தை வாங்கி வச்சு இருக்கீங்களே” என நொந்தான்.
முத்து அவனைப் பார்த்துச் சிரித்தார்.
“நீ ஒருத்தன், என்ன தான் வேஷம் போட்டாலும் நீ காளை மாடு தானே… நம்ம ஜனாக்கு பொறக்கப் போற புள்ளை முதல பொண்ணு தான், எனக்கு தோணுது” என்றார் வசந்தா.
“அது எல்லாம் இல்லை. முத்தையா தான் பையனா பிறப்பார்” என்றார் முத்து.
ஜனா அமைதியா இருக்க, “என்ன அண்ணா, நீங்க சைலண்டா இருக்கீங்க. வெட்கமா” என்ற தம்பியை முறைத்துவிட்டு”போ! போய் படிக்குற வேலையைப் பாரு” என்றான்.
அப்பு எழுந்து சென்றான். “ஏன்டா! அவன் கிட்ட எரிஞ்சு விழுற..?” என வசந்தா முறைத்தார்.
“ஏன்மா! அன்னைக்கு அந்த வீட்டு மொட்டை மாடியில் அப்பு வந்தா அசிங்கமா இருந்திருக்குமுனு எப்டி எல்லாம் வார்த்தையை விட்டீங்க, இன்னைக்கு அவனுக்கு முன்னாடி எங்க வாழ்க்கைப் பத்தி பேசுறீங்க…?”
“என்னடா உங்க வாழ்க்கை..? பேரப்பிள்ளை பத்திக் கேக்குறது தப்பா?அன்னைக்கு ஏதோ ஒரு கோபத்தில் பேசிட்டேன், அதுக்காக அம்மா உன் வாழ்க்கையில் நல்லது நடக்கனுமுனு வேண்டாம இருப்பேனா, உனக்கு என்னைய பத்தி தெரியாதா ஜனா..?”
“அதே தான்மா நானும் கேக்கிறேன், அப்பாக்கு உடம்பு முடியாத நேரத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் விஜியை கல்யாணம் பண்ணிட்டேன், அதுக்காக அப்பாவோட ஹெல்தை மறந்துட்டு நான் சந்தோஷமா இருந்துடுவேனு நீங்க எப்டி நம்புனீங்கம்மா..?” என்றான் ஆதங்கமாக.
முத்து வசந்தாவைத் திரும்பி பார்த்தார்.
“என்னைய மன்னிச்சுடு ஜனா, நான் வார்த்தையை அதிகமா விட்டுட்டேனு அப்பவே மனசு உடைஞ்சுப் போயிட்டேன். சத்தியமா வேற கெட்ட எண்ணம் இல்லடா” என மனதார வருந்திக் கூறினார் வசந்தா.
“அம்மா! நீங்க மன்னிப்புக் கேக்க நான் இதை சொல்லல, விஜிக்கு அந்தச் சம்பவம் ஆழமா பதிஞ்சுப் போயிட்டு, அதுக்காக நான் அவளைச் சமாதானம் பண்ணி தாம்பத்யம் வச்சுக்க விரும்பலம்மா, அவளா சரியான தான் நான் முயற்சிக்க மாட்டேன். உங்கப் பேரப்பிள்ளை ஆசைக்கு அவ தான் மனசு வைக்கனும்” என எழுந்தான் ஜனா.
“என்னங்க இப்டி சொல்லிட்டுப் போறான்…”
“நீ பேசினது அப்டி வசந்தா, மாமியார் கெத்துப் பாக்காம, விஜி கிட்ட போய் மன்னிப்புக் கேளு, உன் ஆசை நிறைவேறும்..”
“ஏங்க! நான் ஏதோ கோபத்துல பேசினதை வச்சு, மன்னிப்புக் கேட்டா தான் என் புள்ள கூட சேர்வேனு என்னைய பழி வாங்குறா அவ. நீங்களும் சப்போர்ட் பண்றீங்க…?”
“வசந்தா! நான் வேணா போய் மன்னிப்புக் கேக்கவா. எனக்கு எந்த ஈகோவும் இல்லை, உனக்காக தானே” என்றார் முத்து.
“பேசாம எழுந்திரிச்சு கையை கழுவுங்க” என எழுந்துக் கோபமா உள்ளே சென்றார்.
அவரின் கோபங்கள் உச்சம் பெற்றது என்று பாத்திரங்கள் உருளும் சத்தத்தில் நன்றாக கேட்டது அனைவருக்கும்.
“விஜி! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உணர்வை மனசுல சுமந்துட்டு இருப்ப, அம்மா தானா ஒரு நாள் கேப்பாங்கனு நெனச்சேன் இன்னைக்கு கேட்டாங்க, சொல்லிட்டேன்”
“ஆனா ஜனா, இப்ப வேற மாதிரி அவங்க புரிஞ்கிட்டாங்க, எனக்கு பயமா இருக்கு, பழைய மாதிரி மாறிடுவாங்களோனு. நீங்க அவசரப்பட்டு பேசிட்டீங்க போல ஜனா, இப்ப நான் தப்பானவளா ஃபோகஸ் ஆகிட்டேன்” என அவனை முறைத்தவள், கட்டிலின் ஒரு பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“ஆக மொத்தம், உங்க ரெண்டுப் பேருக்கும் நடுவுல நான் தான் மாட்டிக்கிட்டேன் விஜி. கடவுளே!” எனக் கதவினை வேகமாக சாத்திவிட்டு வெளியில் சென்றான்.
விஜி திரும்பி பார்த்துவிட்டு, கண்கள் கலங்கி கண்ணீர் வடிய படுத்திருந்தாள்.
‘பாருங்கப்பா! என்னமோ உங்களுக்குப் பதிலா என்னைய பாத்துகிறேனு சொன்னவரு, எப்டி போறாருனு, அவங்க அம்மாக்கு மருமக ஏதோ பழிவாங்குறானு எண்ணம், அத சொன்னா இவருக்கு கோபம் வருது, நான் என்ன பண்ண..? இப்ப என்ன புள்ளைப் பெத்து தரனும்… அத பண்ணிட்டா போதும் போல’ எனக் கண்ணீர் வடித்தாள்.
ஜனா வெளியில் சென்று நிற்க, ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன், சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தான்.
விஜி தூங்கவில்லை எனப் புரிய, கதவினை தாழிட்டு, அவள் அருகில் படுத்தான்.