“அது என்னவோ உண்மை தான். பாரு ஒரு ஃபோன் செஞ்சாளானு, அவ போனா போன இடம் தான் போல, குரூப்ல பேருக்காக ஏதோ ஒரு குட் மார்னிங், குட் நைட் அவ்ளோதான்…” என்று வார்த்தையால் அழுத்தினாள் சந்தி.
“ஏய்! அவ சர்வா சார் வீட்டிலா இருக்கா.? மாமியார் வீட்டில் இருக்கா, நம்ம நினைச்ச நேரத்துக்கு ஃபோன் பண்ண முடியாது.” என்றாள் ஹேமா.
“ம்ம்ம்! ஆமால” என்ற சந்தியிடம், “என்ன மாமியார் வீடுனா கொம்பா, ஃபோன் பண்ணு பேசுவோம், யாரு யாரு குரூப் கால் வரீங்க.?” என்று தன் ஃபோனை எடுத்தான் ஹாசன்.
மற்றவர்கள் யோசித்தாலும் அம்லு கிட்ட பேசும் ஆசையில்’சரி’ என்றனர்.
நான்கு பேரும் குரூப் கால் செய்து நிரஞ்சிக்காக காத்திருந்தனர்…
*
மதிய வேலைகளை முடித்து, மாமியாருக்கு சாப்பாடு எடுத்து வைத்த நிரஞ்சி”அத்த! நான் போய் குளிச்சுட்டு வரேன், மாமா வரட்டும் அதுக்குள்ள நான் வந்துடுறேன்” என்று அவசரமாக ஃபோனை ஹாலிலே வைத்துவிட்டு சென்றாள்.
“ம்ம்ம்! சீக்கிரம் வா, இருக்க தண்ணி எல்லாம் குளிச்சே முடிச்சுடாம” என்ற விமலா, “ஒரு நாளைக்கு ரெண்டு தடவை மோட்டார் போட வேண்டி இருக்கு, சமைக்க, துவைக்க, குளிக்கனு இவ தண்ணியை இப்டியா செலவு பண்ணுவா.? யாரு அப்பன் வீட்டுக் காசு.” என்று புலம்பினார்.
“என்ன விமலா, யாரு அப்பன் வீட்டு காசு செலவு ஆகுது.?” என்று கேட்டப்படி வேலு வர,
“ம்ம்ம்! எல்லாம் உங்க மருமக வீணாக்குற தண்ணிக்கு தான் கரண்ட் பில் வீணாகுது.” என்றார் நொடித்தப்படி.
“ஏன் உன் அப்பனா கரண்ட் பில் கட்டுறார்.?”
“என்ன நக்கலா.?” என்று முறைத்த மனைவியிடம்,
“ஏய்! சும்மா கண்ணைப் போட்டு உருட்டாத, அப்புறம் மறுபடியும் ஆப்ரேசன் செய்ய வேண்டி வந்துடும், அதுக்கு யாரு காசுக் கொடுப்பது”
“அவளை பத்தி ஒன்னு சொன்னா அப்டியே வரிஞ்சுக் கட்டிட்டு வந்துடுவீங்களே.? என்ன தான் மாய மந்திரம் போடுறாளோ!”
“அம்லுக்கு அந்த மாய மந்திரம் எல்லாம் தெரியாது, அது தங்கமான மனசுடி, அன்பு ஒன்னு தான் அம்லு மந்திரம்” என மருமகளை புகழ்ந்தார்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாத விமலாவிற்கு கடுப்பானது.
அந்த நேரத்தில் தான் ஃபோன் அடித்தது.
அம்லு கெட்ட நேரம் அந்த ஃபோனை மாமியார் பக்கத்திலா வைத்துவிட்டுப் போக வேண்டும்.
சத்தத்தைக் கேட்டு திரும்பியவர், நிரஞ்சி ஃபோனை கண்டு”இப்ப யாரு இவளுக்கு கூப்புடுறா.? ஜெகனா இருக்குமோ! இல்லையே அங்க நடுராத்திரி தானே ஆகும்.” என்று ஸ்கீரினை பார்த்தார்.
அதில் குரூப் கால் வர, புரியாத விமலா ஃபோனை எடுத்து ஸ்டைலாக விரல்களால் நகர்த்தினார்.
சட்டென்று வந்த குரல்களினால் முதலில் பயந்து தான் போனார் அவர்…
பின்ன அனைவரும் ஒரே நேரத்தில் “அம்லு!” என்று கத்தினர், ‘யார் திரையில் தெரியுறா’ என்று பார்க்காமல், கால் கனெக்ட் ஆகியதும், முதலில் பயந்த விமலா பிறகு புரிய”இங்க அம்லு கும்லு எல்லாம் இல்ல, அவ குளிக்கப் போயிட்டா, ஃபோனை வைங்க” என்று கட் பண்ணினார், அது சரியாக கட் ஆகாமல் இருக்கவே,
“இதுங்க தான் இவ கூடப் படிப்பதுங்களா.? எல்லாம் வீணாப்போனதுங்க, அதான் இவளுக்கும் வாய் நீளுது, ஆம்பளை புள்ளைங்க கிட்ட எல்லாம் பேசிட்டு திரியுறா. கேட்டா நான் கெட்டவ மாதிரி எல்லாரும் வரிஞ்சுக் கட்டிட்டு வருவீங்க” என்று கணவரிடம் மல்லுக் கட்டினார்.
ஹாசன் ஃபோனை கட் செய்தான், மற்றவர்களும் ஆப் செய்தனர்.
“ஆமா! இவங்க கூட இந்த நிரஞ்சி எப்டி தான் இருக்காளோ.? தெரியல!” என்று புலம்பினாள் ஹேமா.
திடீரென்று ஹாசன் சத்தமாக சிரித்தான்.
“டேய்! என்ன ஆச்சு.? அந்த அம்மா பேசியதில் மண்டை கழன்டுட்டா!” என்றாள் ஹேமா.
“இல்ல! உங்களுக்கு எல்லாம் நிரஞ்சி பத்தி தெரியுமுல. நீ கேட்டில ஹேமா, நிரஞ்சி எப்டி தான் அவங்க கூட இருக்காளோனு, இப்டி யோசிச்சுப் பாரு அந்த அம்மா அம்லு கூட எப்டி தான் ஓட்டுறாங்கனு, அவங்க திட்டினா கூட அவ கன்சிடர் பண்ணாம பேசிட்டு இருப்பா, அப்ப திட்டுற அவங்க நிலையை நினைச்சுப் பாரு” என்று சிரித்தான்.
மற்றவர்களுக்கும் விளங்க, அதை நினைத்து சிரித்தனர்.
இது தான் இளமை பருவம், எதையும் யோசிக்கும் பாதை நகைச்சுவையாக சென்றால் அது இளமையின் அதிர்ஷ்டம்.
*
சர்வா மதிய இடைவேளையில் ரிலாக்ஸாக அமர்ந்து லேப் டாப்பில் சில வேலைகளை கவனித்தான்.
சாப்பிடவும் எண்ணம் இல்லை, காலையில் நேரம் கழித்துச் சாப்பிட்டதால் பசியில்லாது இருந்தான். அந்த நேரதத்தில் அவன் ஃபோன் சிணுங்கியது.
“கரெக்ட் மாமா, அப்பா நிச்சயத்துக்கு புடவை எடுக்கலாமுனு சொல்லி இருக்காங்க, நீங்க இந்த ஞாயிறு ப்ரீயா மாமா.?”
“ஞாயிறு தானே, நோ ப்ராப்ளம் ஆனா புடவை தானே பரத், சித்தி, பிருந்தா வந்தா போதாத.? நான் வந்து என்ன செய்யப் போறேன்.”
“என்ன மாமா இப்டி கேக்குறீங்க.? எனக்கு நீங்க தான் செலக்ட் பண்ணனும். அது மட்டுமில்ல என் கல்யாணத்தில் நீங்க எந்த நிகழ்வுக்கும் மிஸ் ஆகக் கூடாது, சோ யுவியோட வரீங்க.”
“ஓகே! ஓகே! நோ ப்ராப்ளம்.”
“ஆனா ஒரு ப்ராப்ளம் மாமா.”
“என்ன ப்ராப்ளம் பரத் சொல்லு.?”
“இல்ல, பிருந்தாக்கு புடவை எடுக்க அம்மா, அவங்க ரெண்டுப் பொண்ணுங்களும் வரனுமுனு ஒரே பிரச்சனை பண்றாங்க.”
“ஓ!”
“சந்திரா மாசமா இருக்கா, அவ பண்ணினது தப்பு தான், இப்ப முறையா தானே வாழுறா, அவளை ஒதுக்ககூடாதுனு ஒரே அடம். எனக்கு ஒன்னும் புரியல மாமா, இப்ப ஒதுக்குனா அவ மனசு கஷ்டப்பட்டு குழந்தைக்கும் அவளுக்கும் ஏதாவது ஆகிடுமுனு மிரட்டுறாங்க”
“ம்ம்ம்! உங்க அம்மாக்கு பொண்ணு பாசம் அதிகமா இருக்கு, அதே மாதிரி அவங்க பொண்ணுக்கும் பிள்ளை பாசம் பத்தி சொல்லிக் கொடுக்கல பரத். எனிவே எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல முடிஞ்சுப் போன வாழ்க்கை, யார் வந்தா எனக்கு என்ன ஆகப்போது, உங்க விருப்பம்” என மனதில் யுவியை மட்டுமே எண்ணிக் கூறினான்.
“மாமா! நீங்க சொல்றது எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு, ஆனா என் குடும்பத்திற்கு அந்த உணர்வு வராது, நீங்க இப்ப வரை விட்டுக் கொடுக்குறீங்க புரியுது ஆனா.?”
“ஆனா.?”
“கண்டிப்பா உங்களை மாதிரி பிருந்தா விட்டுத் தர மாட்டா மாமா, எனக்கு என்ன செய்றதுனு தெரியல, அதான் புடவை எடுப்பதை பத்தி இன்னும் நான் அவ கிட்ட பேசல.”
“ம்ம்ம்!”
“நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் மாமா, இதுல என்னோட சுயநலம் தான் இருக்கு ஆனா வேற வழி தெரியல.”
சர்வா யோசித்தான், பரத் என்ன தான் செய்ய முடியும்.? பிருந்தாவும், அவனின் அப்பா மட்டுமே அந்த குடும்பத்துடன் உறவு வைப்பதில் இஷ்டமில்லாதவர்கள்.
அன்பு பெரிதாக எதையும் கண்டுகொள்ளாதவன். பிருந்தா கிட்ட இவன் தான் பேசி ஆகனும்…
இதற்கிடையில் திரவி வர, சைகையால் அவனை அமர வைத்து விட்டு பரத்திடம் தொடர்ந்தான்.
“சரி பரத்! நான் பிருந்தா கிட்ட பேசி வர சொல்றேன், நீ ப்ரீயா இரு”
“எங்க மாமா, எப்டியும் பிருந்தா கிட்ட திட்டு இருக்கு, முதலில் நீங்க பேசி ஆரம்பிச்சு வைங்க, நான் முடிச்சு வைக்குறேன்” என்றான்.
“இவ்வளவு பயம் இருக்குல என் தங்கச்சி கிட்ட, அது போதும்” என்று சிரித்தவாறு ஃபோனை வைத்தான் சர்வா.
“என்னடா இப்பவே பரத் பிருந்தாக்கு பயப்புட ஆரம்பிச்சுட்டானா?” என்று கேட்டான் திரவி.
“ஓ! அதில் என்ன இருக்கு? ஜாலியா போயிட்டு வர வேண்டியது தானே, பொண்ணுங்களுக்கு புடிச்ச ஏரியா வேற.”
“யாரை எல்லாம் பாக்க கூடாது, நினைக்க கூடாதுனு நினைச்சனோ அவங்க எல்லாம் என் பின்னாடியே வர மாதிரி இருக்குடா.” என்று நொந்தப்படி சொன்னான் சர்வா.
“சர்வா! என்ன ஆச்சு.? ஆர் யு ஓகே… வெளியில் போயிட்டு வரலாமா?”
“நோ! ஐ ஆம் ஓகேடா. யுவி இருக்கான் எனக்காக, நான் ஏன் அடுத்தவங்களை நினைக்கப் போறேன்…” என்று பரத் கூறியவற்றை சொன்னான்.
“ம்ம்ம்! என்ன பெரிய பொண்ணு பாசம்.? அப்டியே அவ செத்தா தான் என்ன! ஏன் இப்ப உண்டாகி இருக்க புள்ளை முக்கியமுனா யுவி யாரு.? என்ன மனுசங்கடா இவங்க எல்லாம், நீ ஏன்டா ஃபீல் பண்ற.? தப்பு செஞ்ச அதுங்களே நிம்மதியா வாழுறாங்க, உனக்கு என்ன நீ ராஜா மாதிரி வாழாமா இப்டி தனிமையில் தவிக்குற.”
“எனக்கு யுவி தான் முக்கியம், அவனுக்கு பாதிப்பு வர எதையும் செய்ய மாட்டேன். நான் தனியா இருந்தாலும் பரவாயில்ல. அப்பா மட்டுமாவது அவனுக்கு இந்த ஜென்மத்தில் நல்லா அமைஞ்சு இருக்காருனு சந்தோஷத்தை கொடுக்குறேன்டா.”
“ம்ம்ம்! புரியுது ஆனா.? ச்சே! அவள் எல்லாம் ஒரு ஆளுனு இன்னும் உயிரோடு இருக்கா பாரு. இது லவ்வா! இல்ல கேக்குறேன், உண்மையா லவ் பண்ணவ அவனுக்காக காத்திருக்கனும், இல்லையா செத்து இருக்கனும், ரெண்டு நடக்கலைனா, உன்னோட ஒழுங்கா வாழ்ந்து இருக்கனும். அத விட்டுட்டு அப்பா, அம்மா கட்டாயப்படுத்தினாங்கனு உன்னைய கல்யாணம் பண்ணி யுவியை பெத்து, அவன் திரும்ப வந்துட்டானு அப்பா, அம்மா மேல தான் தப்புனு அவனோடு போய் ச்சே! இதில் நடுவில் நீயும், யுவியும் என்ன பாவம் பண்ணீங்க.? இப்ப அவங்களுக்கு பொண்ணு முக்கியமா போச்சு! இந்த இழவை அப்பவே சேத்து வச்சு இருந்தா உன் வாழ்க்கை நல்லா இருந்திருக்குமுடா, ஆனா சர்வா கடவுள் உனக்கு நல்லது செய்வாருடா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”என்று ஆத்திரத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடித்தான்.
சர்வா லேசாக சிரித்து”ஏன்டா இப்ப முடிந்ததை பத்தி பேசி பிரஷர் ஆகுற.? ரிலாக்ஸ் அதான் கடவுள் உன்னைய மாதிரி ஒரு ப்ரண்ட் எனக்கும், யுவிக்கு நிரஞ்சி மாதிரி ஒரு ப்ரண்டையும் கொடுத்து இருக்காரே.?” என்றான்.
“ம்ம்ம்! நிரஞ்சியும் உங்க வீட்டில் இருப்பது தான் எனக்கு நிம்மதியா இருக்கு.”
“ம்ம்ம்! பிருந்தாக்கு ஃபோன் செய்ய மறந்துட்டேன் இருடா” என்று சர்வா நம்பரை டயல் செய்தான்.
“நீ பேசு நான் கிளம்புறேன்”
“உட்காருடா, சாப்பிட்டீயா.? நான் இன்னும் சாப்பிடல, வெளியில் போய் சாப்பிடலாம்.”
“இன்னும் இல்ல, சரி போகலாம்” என்று காத்திருந்தான்.
சர்வா மனதை அறிந்தவனால் அவனை தனியாக விட மனமில்லை.
“ஹலோ சொல்லுங்கண்ணா!”
“பிருந்தா! ப்ரீயா பேசலாமா?”
“யா! யுவி, நிரஞ்சி நீங்க எப்டி இருக்கீங்க.?”
“ஆல் ஆர் குட்… ” என்று மெதுவாக ஆரம்பித்தவன், பரத் கூறியதை கூறினான்.
“என்ன அண்ணா விளையாட்டா.? அவனுக்கு இருக்கு நீங்க ஃபோனை வைங்க.” என்று கோபமானாள்.
“பிருந்தா!”
“சரி அண்ணா! அவங்களே போய் புடவை எடுக்கட்டும் நான் போகலை.”
“இது உன் கல்யாணம்…”
“ஆனா என் விருப்பப்படி இல்லையே.?”
“நீ தான் உன் விருப்பத்தை நிறைவேத்திக்கனும்.”
“எப்டி அண்ணா, அவங்க கூட சேர்ந்து போய் கூடிக் கும்மி அடிக்க சொல்றீங்களா.? என் அம்மாவும் அந்த கூட்டம் தானே…”
“இங்க பாரு பிருந்தா இது லைஃப்ல ஒரு தடவை நடப்பது, அதை சந்தோஷமா அனுபவி, மத்தவங்களுக்காக உன் சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காத. அதான் நான் சொல்வேன்.. பரத்துக்காகவும், உனக்காகவும் நான் வரேன்”
“புரியுது அண்ணா” என்று யோசித்தவள்,
“சரி அண்ணா! நான் போறேன் யாரு வேணா வரட்டும் எனக்காக நிரஞ்சியை வர சொல்லுங்கண்ணா, அவங்க வந்தா நான் கொஞ்சம் ரிலாக்ஸா ப்ரீயா இருப்பேன் ப்ளீஸ் அண்ணா.”
“நிரஞ்சியா! அவங்க மாமியார் வீட்டில் இருக்காங்க பிருந்தா.”
திரவிக்கு அவர்கள் பேசியதில், அந்த நிலை புரிய”ஓகே சொல்லு” என்றான் மெதுவாக…
“ம்ம்ம்! சரி”
“தேங்க்ஸ் அண்ணா, ஆனாலும் அந்த பரத்துக்கு இருக்கு இப்ப” என்று ஃபோனை கட் செய்தாள்.
சிரித்தப்படி சர்வா”ஹஹ! இவங்க சண்டைப் போடுறதிலே பாதி வாழ்க்கைப் போகப்போதுடா” என்றான்.
“அதானே புருசன், பொண்டாட்டி நானும் ரேவும் போடாத சண்டையா.?” என்று சிரித்தான்.
சர்வா கண்களில் அவனின் வலி தெரிந்தாலும், ஒப்புக்கு சிரித்தான்.
“சர்வா! நான் ஒன்னு சொல்லவா, ஒரு வேளை யுவியோட சேர்த்து உன்னைய ஏத்துக்க ஒருத்தி வந்தா, தயவு செய்து அப்ப நீ மாறிடுடா, நல்லா இருக்கும் அந்த வாழ்க்கை கண்டிப்பா.”
“நடக்குறதையே நீ பேச மாட்டீயா.? சரி நிரஞ்சி எப்ப வருவாங்க.? நீ ஓகே சொல்ல சொன்ன, கன்பார்மா சனிக்கிழமை வருவாங்களா.?”
“ஆமா! நானே போய் அழைச்சுட்டு வந்துடுறேன். நீங்க ஞாயிறு புடவை எடுக்கப் போகலாம். பிருந்தாக்கும் நிரஞ்சி கூட இருந்தா நல்லா டைம் போகும்.”
“ஆமா! ஆமா! நிரஞ்சி இருந்தா டைமுக்கே டைம் பத்தாதுடா, யுவி ரொம்ப மிஸ் பண்றான், ஏன் எனக்கே சில நேரங்களில் நிரஞ்சி இருந்திருந்தா இன்னேரம் இந்த இடம் எப்டி இருந்திருக்குமுனு தோணுதுனா பாரே…” என்று சிரித்தான்.
“அம்லுவோட ஸ்பெஷலே அது தானேடா ரேவதிக்கு அவ மேல கோபம் வந்தாலும் மறக்க வச்சுடுவா, இந்த அம்லு ஏங்க இப்டி இருக்கானு என் கிட்ட கேப்பா, நான் சொல்வேன் உன் தம்பி தான் தப்பான சாய்ஸ் அம்லுக்கு, பாரு இப்டி ஒருத்தியை விட்டுட்டு அங்க இருக்கானு திட்டிட்டே இருப்பேன். ஒரு வழியா நேத்து தான் கேட்டான்டா, எப்ப செமஸ்டர் எக்சாம் முடியுது, பாஸ்போர்ட் அப்ளே பண்ணிட்டு அனுப்ப சொல்லி இருக்கான் விசா ப்ராஸெஸ் செய்ய, அநேகமாக செமஸ்டர் லீவில் நிரஞ்சி அமெரிக்கா போயிடுவாள்.”
“சூப்பர்! நல்ல நியூஸ் தான். ஆனா அந்த லீவில் தான் பிருந்தா கல்யாணம் ஃபிக்ஸ் செய்யலாமுனு பிளான் பண்ணி இருக்கேன்டா, எனக்கும் அப்ப தான் டைம் கிடைக்கும்”