காலையில் இருந்தே யுவி நச்சரிக்க தொடங்கி இருந்தான்.
“அம்லு! எத்தனை மணிக்கு வருவாங்க.?”
“தெரியல யுவி, திரவி அங்கிள் கூட்டிட்டு வரேனு சொல்லி இருக்கார், எப்பனு தெரியாது.”
“சரி! ஃபோனை குடுங்க, நான் கேக்குறேன்.”
“நோ! அவங்க பிஸியா இருப்பாங்க, இப்ப ஃபோன் செய்யக் கூடாது” என்று கட்டளைப் போட்டு, அவன் வேலையைத் தொடர்ந்தான் சர்வா.
பிறகு யோசித்த யுவி, “ஓகே அப்பா! நான் ஸ்ரீ அண்ணா வீட்டுக்குப் போய் விளையாடிட்டு வரேன்.” என்று தந்தையின் பதிலை எதிர்பாராமல் ஓடி விட்டான்.
சர்வாவும் போகட்டுமென விட்டு விட்டான் இங்கு இருந்தால் மறுபடியும் அம்லு எப்ப வருவாங்கவென நச்சரிப்பான்.
ஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற யுவி, அவனிடம் நச்சரிக்க ஆரம்பித்தான்”அம்லுக்கு போன் செய்னு”
ஆனால் ஸ்ரீக்கு பயம். ஏற்கனவே அம்லுக்கு ஃபோன் செய்து, அவளின் மாமியாரிடம் வாங்கினது நினைவு வர, “யுவி! இப்ப ஃபோன் பண்ணா அம்லு பிஸியா இருப்பா வேணாம்” என்று சாக்கு சொல்லி எஸ்கேப் ஆகப் பார்த்தான்.
ஆனால் யுவி விடவில்லை, ஸ்ரீயின் அம்மா”அடேய்! புள்ள தான் கேக்குறானே, ஃபோன் பண்ணி தான் கொடுடா, பேசட்டும்.” என்றார்.
அந்த நேரம் ஹேமா வர, “என்ன அத்த ஒரே சத்தமா இருக்கு.? ஓ! யுவி இங்க தான் இருக்கானா.”
“இரு வரேன் ஹேமா.” என்று உள்ளே சென்றார். அவருக்கோ ஸ்ரீ, ஹேமாவுக்கு முடிச்சுப் போட்டுவிட ஆசை.
*
“எப்படி இருக்கீங்க சம்பந்தி.? கண்ணு இப்ப தேவலையா, சரியா பாக்க முடியுதா.?” என்று நலம் விசாரித்தார் மீனாட்சி.
“ம்ம்ம்! இருக்கேன்” என்று நீட்டி இழுத்தார் விமலா.
‘சும்மாவே நீட்டுவா இதில் மீனாட்சி கேட்டதும் நீட்டுற நீட்டில் கழுத்து சுளுக்கிடப் போகுது’ என்று எண்ணிய வேலு, “அது எல்லாம் நல்லா ஆகிட்டு மீனாட்சி, அம்லு! அம்மாக்கு டீ போட்டு எடுத்துட்டு வா, வந்ததே அவ்வளவு அசதியா இருக்கும், ஏன்மா நீ ஃபோனில் விசாரிச்சா போதாத?” என்றார்.
“அதுக்கென்ன அண்ணே! இப்டி வந்து போய் தானே ஆகனும், தொலைவு எல்லாம் பாக்க முடியுமா.?”
“ம்ம்ம்! என்னமோ என்னைய பாக்க அம்புட்டு கஷ்டப்பட்டு வந்த மாதிரி கேக்குறீங்க.? பொண்ண பாத்துட்டு அப்டியே ஒரு விசாரிப்பை போட்டு நானும் பாத்தேனு காமிச்சுட்டு போக வந்து இருப்பாங்க.” என்றார் விமலா.
“உங்களை பாக்க தான் வந்தேன் சம்பந்தி, அம்லு! இந்த பழங்களை உள்ளார எடுத்து வை, ஆப்பிள்களை வெட்டி அத்தைக்கு வைடா. அப்புறம் இந்த பையில் நாட்டுக்கோழி அரிஞ்சு மசாலா போட்டு இருக்கேன் மதியத்திற்கு ஆக்கி கொடு அவங்களுக்கு தெம்பா இருக்கும்” என்றார்.
அவர் கிராமத்து முறைகளில் பழகியவர், அதனால் தான் இதை எல்லாம் கொண்டு வந்தார்
“திரவி அண்ணே, அண்ணி புள்ளைங்க எல்லாம் வராங்கம்மா, அதான் மாமா மீன் வாங்கிட்டு வந்தார். இதை எப்டி சமைக்கம்மா.”
“இருக்குடி! அந்த மரத்தை வெட்டிட்டாங்க. ஊருக்கு வெளியில் போய் பறிச்சுட்டு வந்தேன்.”
“ம்ம்ம்!”
சமையல் முடியும் நேரம், திரவி குடும்பம் வந்தது.
அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“ரேவதி! இன்னைக்கு தான் உன் அம்மாவை பாக்க நேரம் கிடைச்சுச்சா.?” என்றார் வேலு.
“அப்பா! நான் ஏற்கனவே அது கிட்ட படாதப்பாடு படுறேன். நீங்களுமா.? என் மாமியார் வழுக்கி விழுந்து நான் தான் ஹாஸ்பெட்டலில் இருக்க வேண்டியதா போச்சு அதான் சொன்னனேன்ல…”
“ம்ம்ம்! நான் எல்லாம் உனக்கு முக்கியமா! உன் குடும்பம் தான் முக்கியம்.” என்றார் விமலா.
“ரேவதி! என்ன ஆச்சு.? இங்க வந்ததுக்கு அப்புறம் தான் அம்லு சொன்னா, மறந்துட்டாளாம். திரவி தம்பி அம்மா நல்லா இருக்காங்களா.?”
“நல்லா இருக்காங்கம்மா, இப்ப பரவாயில்லை.”
“நானும் கூட வரேன் அப்படியே போகும்போது பாத்துட்டு ஊருக்கு கிளம்புறேன்.”
“அத்தை! ஏன் இன்னைக்கே போறீங்க இருந்துட்டுப் போங்க, நம்ம வீட்டில் தங்கிட்டு காலையில் போகலாம், அம்லு நீயும் அம்மாவோடு தங்கு வந்து” என்று அழைத்தாள் ரேவதி.
“எங்கம்மா! நேரமாகிடும் அங்க மாடு எல்லாம் பாக்க ஆளில்லை. நான் போய் ஆகனுமுடா” என்றார் மீனாட்சி.
“ரேவதி! அம்லு இன்னைக்கு போகனும், அவளுக்கு ஒரு வேலை இருக்கு” என்றான் திரவி.
“என்ன வேலை ஆபிசர் அம்மாக்கு முக்கியமான கையெழுத்துப் போடுற வேலை” என்றார் நக்கலாக விமலா.
“சர்வா தங்கச்சிக்கு நிச்சயதார்த்த புடவை எடுக்க அம்லுவை துணைக்கு வர சொன்னாள், ஆனா சர்வா மாமியார் வீட்டில் இருக்காங்கனு சொல்லிட்டான் ஆனா நான் தான் வர சொல்றேனு சொன்னேன்.”
“ஐ! பிருந்தாக்கு புடவை எடுக்கவா, எனக்கு ரொம்ப புடிக்கும் எனக்கு தான் போக முடியல நிச்சயம், கல்யாணத்திற்கு புடவை எடுக்க, இந்த அம்மா விடல, பிருந்தாக்கு போகப்போறேனே!” என்று மகிழ்ந்தாள்.
மீனாட்சி சிரித்து”நீ புடவை கடையே போனதில்ல, உனக்கு எப்படி எடுக்க தெரியும் அம்லு.?”
“அம்மா! என் ப்ரண்ட்ஸ் ஃபோனில் புடவை, சுடி விக்குற குரூப்பில் சேர்த்து இருக்காங்க, அதில் வரும் புடவை எல்லாம் பாப்பேன். அதனால் இப்ப இருக்க புடவை எல்லாம் தெரியும்” என்றாள் சந்தோஷமாக.
“அவ அவ கல்யாணம் பண்ணோமா, புள்ளைய பெத்தமானு இருக்காளுங்க, இவ என்னன்னா காலேஜ் போறேன், ஃபோனில் கூட்டம் போடுறேன், ப்ரண்ட்ஸோடு கூத்து அடிக்குறா.” என்று புலம்பினார் விமலா.
மீனாட்சிக்கு கோபம் வந்தாலும் சம்பந்தி என்பதால் பொறுமையாக”என்ன சம்பந்தி! மாப்பிள்ள அங்கயும், பொண்ணு இங்கயும் இருந்தா எப்டி புள்ளை பொறக்கும்.?” என்றார்.
“ஏன், என் பையன் கல்யாணம் ஆகி இங்க இருந்துட்டு தானே போனான். இவளுக்கு ஒரு இழவும் தெரியல, நல்லா திங்கவும், ஆக்கவும் மட்டும் சொல்லிக் கொடுத்து இருந்தா எங்கன புள்ளை பொறக்கும், சரியான பைத்தியகாரப் புள்ளைய பெத்து வச்சுட்டு பேசுறீங்க.? ஏன் கல்யாணம் ஆகி அடுத்த பத்தாவது மாசத்தில் புள்ளை பெக்கலையா யாரும். இவளுக்கு உடம்பு தான் இருக்கு அதுல சிசு உண்டாக தெம்பு இருக்கானு தெரியல.” என வார்த்தைகள் எல்லை மீறியது.
“அம்மா! அமைதியா இரு, என்ன பேசிட்டு இருக்க.” என்று ரேவதி தாயை அடக்கினாள்.
“என்ன சொன்னீங்க.? என் பொண்ணுக்கு சிசு உண்டாக்குற தகுதி இருக்கானு தெரியலையா! நீங்க உங்க பையனை இங்க இருக்க வச்சு புள்ளை உண்டானதும் அனுப்பி இருக்கனும், இல்லை என் பொண்ணை கூடவே அனுப்பி வச்சு இருக்கனும். அத விட்டுட்டு உங்களுக்கு ஊழியம் பண்ண இங்க வச்சு இருந்தா எப்டி புள்ள பொறக்கும்.? புள்ளை என்ன காத்துலேய பொறக்குமா.? அவளை நானா படிக்க வைக்க சொன்னேன், உங்க மகன் தான் படிக்க வைக்குறார். இந்தக் கேள்வியொ உங்க மகன் கிட்ட கேளுங்க.? இல்ல நான் கேக்குறேன், கூட வந்து இருந்து பாருங்க எம் பொண்ணுக்கு சிசு உண்டாக்குற தகுதி இருக்கானு உங்க அம்மாக்கு தெரியட்டுமுனு.” என்றார் வேகமாக.
“நீங்க பேசுற அளவுக்கு உங்க பொண்ணுக்கு புத்தி இருக்கா என்ன.? புத்தி கெட்டவ, எப்ப பாரு சாப்பாடு, பேசுறதுனு, இவ கூட அவன் எப்டி குடும்பம் நடத்துவான் அதான் போயிட்டானோ என்னவோ. பொண்ணுனா ஒரு தெளிவு வேணும், இவளுக்கு இருக்குறது அத்தனையும் பைத்தியக்கார தனம். எங்கத் தலையில் கட்டி வச்சுட்டு நீங்க நிம்மதியா இருக்கீங்க.? நான் இவ்ளோ பேசுறேன் அவளுக்கு கொஞ்சமாச்சும் புரியுதா.? மக்கு மாதிரி நிக்குறா.? இந்த மட சாம்பிராணிக் கூட எப்டி குடும்பம் நடத்துவான் என் பையன். ஒரு குடும்பத்தை நடத்த தெரியுமா.? இந்தா என் பேத்திக்கு இருக்க அறிவு இவளுக்கு இருக்கா.?” என்றார் வேகமாக விமலா.
“விமலா! நீ அதிகமா பேசுற, அம்லு மனசு தங்கம், அவ யாரையுமே தப்பா நினைக்க மாட்டா, அதான் நீ இவ்வளவு பேசியுமே அமைதியா இருக்கா.” என்றார் வேலு.
“என்ன மனசு தங்கம், பித்தளைனு, இது போதுமா குடும்பம் நடத்த.? என் பிள்ளை ராஜா மாதிரி இருக்கான், இவ அவன் பக்கத்தில் சேவகி மாதிரி நிக்குறா. அவளாச்சும் விசிறி விடுவா, இவ அதுக்கு கூட லாயக்கில்லை. அவன் ஏமாந்துப் போய் இவளை கட்டிகிட்டான். இவ படிச்சு என்ன புடுங்க போறா.? தத்தி தத்தி, வளர்ச்சியே இல்லாதவ” என்று வாயில் வந்ததை சொல்லி திட்டினார்.
மீனாட்சிக்கு கோபம் அதிகமாக, அம்லு அருகில் சென்று, அவளின் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
“ஏன்டி! அவங்க இவ்ளோ பேசுறாங்களே உனக்கு ரோசமே வரலையா.? கொஞ்சமாச்சும் வாயை திறந்து பேசுடி.” என்றார் தாயாக மனம் வருந்தி.
“அம்மா! அத்தை சொல்றதும் சரி தானே, எனக்கு தான் ஒன்னும் தெரியல போல, அதான் அத்தான் விட்டுப் போயிட்டாரா” என்று வருந்தியவள்,
“இல்லல்ல… அத்த! அத்தான் என்னைய விட்டு எல்லாம் போகலை, இந்தப் பரீட்சை லீவில் என்னைய அங்க அழைச்சுட்டுப் போறேனு சொன்னார் எனக்கும் தெரியும் எல்லாம், நான் அத்தான் கூட சந்தோஷமா இருந்து கண்டிப்பா மாசமாகி தான் வருவேன், உங்க ஆசை நிறைவேறும், நீங்க கவலைப்படாதீங்க, அம்மா நீயும் கவலைப்படாத, இப்ப எதுக்கு இதுக்கு போய் சண்டைப் போடுறீங்க, வாங்க போய் சாப்பிடலாம். திரவி அண்ணே! வாங்க, அண்ணி வாங்க” என்றாள் சாதரணமாக…
ரேவதி”ஏன் அம்மா, இவளை போய் பைத்தியமுனு சொன்ன, இப்ப நீ தான் பைத்தியமுனு அவ சொல்லாம சொல்லிட்டா தெளிவா, இது புரியுதா உனக்கு, அவ சிம்பிளா சொல்லிட்டா நான் போய் சந்தோஷமா இருந்து பிள்ளை பெத்து தரேனு, அது வரை உளராம இருங்கனு, இதான் அம்லு பாஷை, வா போய் சாப்பிடலாம்” என்ற ரேவதி,
“அத்தை! உங்க பொண்ணு தெளிவா தான் இருக்க, நீங்க வாங்க, என் அம்மா தான் பைத்தியம் மாதிரி உளரிட்டு இருக்கு, அப்பா வாங்க” என்று அவர்களை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றாள்.
ஆக மொத்தம், விமலா இத்தனை நேரம் பேசியதை எல்லாம் அம்லு வீண் என்று முடித்தது அனைவருக்கும் மகிழ்ச்சி…
முதலில் ரேவதி மாமியாரை பார்த்து விட்டு, ரேவதியை வீட்டில் விட்டு விட்டு திரவி, மீனாட்சி மற்றும் அம்லுவை சர்வா வீட்டிற்கு அழைத்து சென்றான்.
மீனாட்சிக்கு ரேவதி, திரவி பலமுறை ஆறுதல் கூறினர். அவரும் சமாதானம் ஆகினாலும் நிரஞ்சி மாமியாருக்கு அவளை சுத்தமாக பிடிக்கவில்லை எனத் தெரிந்தது. ஆனால் அம்லு அதை எளிதாக சமாளிப்பதும் புரிந்தது, அதுவே அவருக்கு நிம்மதியை அளித்தது.
சர்வா வீடு…
நிரஞ்சிக்கு ஒரே சந்தோஷம் யுவி, சர்வாவை பார்க்கப் போற மகிழ்ச்சி தான் அது…