யுவி நொடிக்கொரு முறை கதவு முன் சென்று திரும்பினான்.
“யுவி! உன் அம்லு வந்தா வெளியிலா நிக்கப் போறாங்க.? அதான் கதவையும் நல்லா தொறந்து வச்சு இருக்கியே, காலிங் பெல் அடிக்க கூட காத்திருக்க கஷ்டமுனு, வெயிட் அன்ட் சிட், வந்தா லிப்ட் சத்தம் கேக்கும்” என்றான் சர்வா.
“அப்பா! இந்த அம்லு இன்னும் என்ன தான் செஞ்சுட்டு இருக்காங்க, திரவி அங்கிளுக்கு ஃபோன் பண்ணுங்க.”
“வரட்டும் யுவி, அவங்க டிராஃபிக்கில் மாட்டி இருப்பாங்க, இல்ல வேற எதும் வேலையா கூட போய் இருப்பாங்க” எனச் சற்று வேகமான கோபத்தில் கூறினான்.
யுவி முகம் வாடியப்படி சென்று ஷோபாவில் அமர்ந்தான்.
சர்வாக்கு ஏனோ சங்கடமாகிட அவனருகில் சென்று அமர்ந்து”யுவி! சாரி” என சமாதானம் செய்ய, “இட்ஸ் ஓகேப்பா, ஆனா இந்த அம்லுக்கு கொஞ்சம் கூட டைமிங் சென்ஸே இல்லப்பா, நீங்க அவங்க வந்ததும் தலையில் குட்டி விடுங்க”
“ம்ம்ம்! வருவா வருவா” என்று அமைதிப்படுத்தினான் ஹாசன்.
“மொதல நம்ம இப்டி நடப்பதை பாத்தா நம்மளை பைத்தியங்களுனு நினைக்கப் போறாங்க” என அங்கிருந்த சிட் அவுட்டில் அமர்ந்தாள் ஹேமா.
“அவ அந்த ஜெயிலில் இருந்து தப்பிச்சு வரனுமுல லேட் ஆகும் தான்.” என்று சந்தியும் உட்கார்ந்தாள்.
*
இவர்களின் எதிர்பார்ப்பிற்கு சொந்தகாரியான நிரஞ்சி வந்திறங்கினாள்.
முதலில் கவனித்தது ஸ்ரீ தான், “ஏய்! அம்லு கேம்” என்று திரவியின் காரை நோக்கி ஓடிட, பின்னாடியே மற்றவர்ளும் ஓடினர்.
திரவி காரைப் பார்கிங் செய்யவும், அவர்கள் நெருங்கவும் சரியாக இருந்தது.
“ஹேய் அம்லு! எவ்வளவு நேரம் உனக்காக வெயிட்டிங்” என நிரஞ்சி இறங்குவதற்குள் வேகமாக ஸ்ரீ கூறினான்.
“ஏய் ஸ்ரீ! நல்லா இருக்கீயா.?” என்றப்படி வெளியில் வந்தவளை, நண்பர்கள் சூழ்ந்தனர்.
“பாத்தீங்களம்மா! நான் ஒரு வாத்தியார், நீங்க ஒரு பெரிய மனுஷி நம்ம எல்லாம் கண்ணுக்கு தெரியல, அம்லுக்கு மட்டும் வரவேற்பை பாருங்க. இதான் அம்லு, இறங்குங்க” என்று கூறி திரவி இறங்கினான்.
மீனாட்சி இறங்க, “அம்மா! நல்லா இருக்கீங்களா.?” என்று விசாரித்தாள் ஹேமா.
பிறகு தான் திரவியை பார்த்து வரவேற்றனர்.
பத்து நிமிடம் அங்கயே நிற்க, திரவி “சரி வாங்கம்மா! நம்ம போகலாம் அவங்க வரட்டும்” என்று முன்னே நடந்தான்.
மீனாட்சியும் நடந்தார்…
அவர்கள் லிப்டில் ஏறும் வரை நண்பர்கள் பேசிக்கொண்டு மெதுவாக நடந்தனர்.
“அய்யோ! அம்மாவும், திரவி அண்ணா போயாச்சு, யுவி என்னைய தேடப் போறான், நான் சீக்கிரம் போறேன், சார் வீட்டுக்கு நீங்களும் வாங்க.” என்று வேகமாக நடந்தாள்.
“இல்ல நிரஞ்சி! நீ போ, நாங்க நாளைக்கு வரோம், யுவி தான் உன்னைய பாக்க இன்ட்ரெஸ்டா இருக்கான், பை!” என்று அவர்கள் விலகினர்.
நிரஞ்சி லிப்ட் அருகில் செல்ல, அது கீழே வருவதற்குள் பொறுமை இல்லாமல், மாடிப்படிகளில் தாவி ஓடினாள், ஏனோ யுவி அவர்களை பார்த்ததும் தன்னை தேடப்போகிறான் என தோன்றியதால்…
அந்த ப்ளோரில் லிப்ட் ஒரு டிங் சத்தத்தோடு நின்றது.
யுவிக்கு லிப்ட் சத்தம் நன்கு காதில் விழ, “அப்பா! அம்லு வந்தாச்சுப் போல” என்று ஆர்வமாக வெளியில் ஓட, கதவில் இருந்து இடப்பக்கம் சென்றால் லிப்ட், எனவே சர்வா”வெயிட் யுவி!” என்று பின்னே சென்றான்.
லிப்ட் ஓபன் ஆகவும் யுவி வரவும் சரியா இருந்தது.
ஆனால் யுவி வெளியில் வந்தவர்களை கண்டு, “அங்கிள்! எங்க அம்லு.?” என பின்னால் தேடியவாறு கேட்டான்.
சர்வா யுவியைப் பார்த்ததால் அவர்களை பார்க்காமல் விட்டான்.
“அப்பா!” என்று சர்வாவின் கால்களை கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்தான் யுவி.
“யுவி!” என்று சர்வா அவனை தூக்கி சமாதானம் செய்ய, மீனாட்சி”அய்யோ! அம்லு வரா, நீ அழுவாதப்பா” என்று கூறி சமாதானம் செய்தார்.
ஆனால் அதை எல்லாம் யுவி காதில் வாங்கவில்லை…
திரவியும் இந்த முறை உண்மையை சொன்னான்.
“யுவி! அம்லு ஆன் தி வே, பீ ஹேப்பி, அங்கிள் சும்மா பிளே பண்ணினேன்” என்றான்.
சர்வா”டேய்! அறிவு இல்லை, அவனே ரொம்ப நேரமா நிரஞ்சிக்காக வெயிட்டிங், இப்ப போய் காமெடி பண்ணிகிட்டு” என்று அதட்டினான், அதில் அவனின் ஏமாற்றமும் அடங்கிருந்தது.
“இல்ல! அம்லுவை காணும்” என்று கூடுதலாக அழ ஆரம்பித்தான் யுவி.
“யுவி!” என்ற குரல் கேட்டு திரும்பியவன், மூச்சு வாங்க மாடிப்படிகளில் நின்ற அம்லுவைப் பார்க்க, தன் தந்தையிடம் இருந்து தாவி இறங்கி அவளிடம் ஓடினான்.
“அம்லு!”
“யுவி! எதுக்கு அழுதுட்டு இருக்க, உன் சத்தம் கீழ வரை கேக்குது” என்று அவனை தூக்கியப்படி வந்தாள்.
“அம்லு! நீ வரலனு அங்கிள் சொன்னாரு, அதான், நீ எங்க போன.?”
“நம்ம ப்ரண்ட்ஸ் கீழ நின்னாங்க அதான் பேசிட்டு வந்தேன்” என்று இவர்கள் அருகில் வந்தாள்.
“ஹப்பா! நான் தப்பிச்சேன் இல்லனா அப்பாவும், மகனும் என்னைய ஜூஸ் போட்டு இருப்பாங்க” என்று பயந்தப்படி சொன்னான் திரவி.
“வெல்கம் நிரஞ்சி!” என்ற சர்வாவை கண்ட நிரஞ்சி, “வரேன் சார், என்ன நீங்களும், யுவியும் இப்டி இளச்சுப் போயிட்டீங்க.?” என்று கேட்டுக் கொண்டே நடந்தாள்.
“வாங்கம்மா! வாடா!” என மற்றவர்களை அழைத்துக் கொண்டு சர்வாவும் அவள் கூடவே நடந்தப்படி,
“ம்ம்ம்! அப்டியா.? அப்பனா இப்ப தான் நாங்க ஃபிட்டா இருக்கோம் மேடம். இனி உன் சமையலில் மறுபடியும் வெயிட் ஏறப்போகுது.” என்று சிரித்தான்.
“சார்! இதுக்கு பேரு ஃபிட்டா, நோயாளி மாதிரி இருப்பது.”
“நிரஞ்சி! ஒரு வாரத்தில் ஒன்னும் மாறல, உன் பார்வைக்கு அப்டி தெரியும், நீங்க உட்காருங்கம்மா” என்று மீனாட்சியை அமர சொன்னான்.
“அம்லு! ஐ ஆம் மிஸ்ஸிங் யு” என்று அவளுக்கு முத்தம் வைத்தான் யுவி.
“மீ டு” என்று பதில் முத்தம் வைத்தாள்.
மீனாட்சிக்கு ஆங்கிலம் புரியவில்லை என்றாலும், அவர்களின் பாசம் விளங்கியது, பிரிவால் ஏங்கி இருந்திருக்கார்கள் என…
அவரின் மனமும் தாயுள்ளம் தானே, நிரஞ்சியை பிரிந்து தவிப்பவருக்கு யுவியின் பாசம் விளங்கியது, தாய் இல்லாத பிள்ளை இவள் மேல ப்ரியமாக இருக்கானு.
அவரும் அதை நிறைவாக தான் பார்த்தார்.
“சர்வா! ஒரு வழியா அம்லுவை கொண்டு வந்து சேர்த்துட்டேன், இனி உன் பொறுப்பு” என்று நிம்மதியாக அமர்ந்தான் திரவி.
“ஏன்டா! என்ன ஆச்சு.?”
அதற்குள் யுவி அம்லுவை தான் செய்திருக்கும் ஆக்டிவெட்டிஸை காட்ட கூட்டி சென்றான்.
“என்ன ஆச்சா! கிளம்பும் போது ஒரு போர்களமே நடந்தது, எப்டியோ போர் முடிந்து வந்துட்டோம்.”
சர்வா”அம்மா! நீங்க இன்னைக்கு இருந்துட்டு நாளைக்குப் போங்களே, பாவம் நிரஞ்சி ஆசைப்படுறாங்கள, அவங்களை இப்டி நான் பாக்கல, எப்பவும் சிரிச்சுட்டு இருந்தா தான் அது நிரஞ்சி” என்றான் மீனாட்சியிடம்.
மீனாட்சிக்கும் கஷ்டமாகியது…
“இல்ல தம்பி! அங்க மாடுங்க நிக்குது, நான் போகலைனா அப்டியே கெடந்துடும்”
“ஓகேம்மா! ஒரு நாள் நைட் தானே, நிரஞ்சிக்காக யோசிங்க, அங்க யார்கிட்டாச்சும் ஃபோன் பண்ணி பாத்துக்க சொல்லுங்க, ஒருத்தர் கூடவா இல்ல அங்க அவசரத்துக்கு உதவ…”
“இருக்காங்க, நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை, சரி! தங்குறேன், நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க.” என்றார்.
“ஐ! அம்மா, தங்கப் போறீயா.?” என்று தன் தாயிக்கு கன்னங்களில் முத்தத்தை வழங்கினாள்.
திரவி”நல்லதும்மா, நான் சொல்லனுமுனு நினைச்சேன் சர்வா சொல்லிட்டான். தங்குங்க காலையில் வந்து கூட்டிட்டுப் போய் பஸ் ஏத்தி விடுறேன்.”
“நீ ஏன்டா அலையுற.? நாளைக்கு சண்டே தானே நானே பஸ் ஏத்தி விடுறேன். நோ ப்ராப்ளம்” என்றான் சர்வா.
“இட்ஸ் ஓகேடா! அப்ப நான் கிளம்புறேன், நீங்க எல்லாம் ரெஸ்ட் எடுங்க, பைம்மா, அம்லு வரேன். யுவி இப்ப ஹேப்பியா.? என்னைய அந்தர் ஆக்கிட்ட கொஞ்ச நேரத்தில்…” என்று கூறி விடைப் பெற்றான் திரவி.
*
இரவு உணவு முடிந்து, யுவியை தான் தூங்க வைப்பதாக கூறி சர்வா அழைத்து சென்றான், அம்மா மகளுக்கு தனிமைக் கொடுத்தவாறு விலகினான்.
யுவியும் அம்லுவைப் பார்த்த மகிழ்ச்சியில் சர்வாவோடு சென்றான்.
மணி பத்து இருக்கும்…
மீனாட்சி, பாத் ரூம் போக வெளியில் இருக்கும் அறைக்கு வந்தார்.
போயிட்டு திரும்பும் போது, கிச்சனில் சத்தம் கேட்க அங்கு சென்றார்.
சர்வா தான் நின்று ஏதோ செய்துக்கொண்டு இருந்தான்.
“என்ன தம்பி செய்றீங்க.? தூங்கலையா!”
“வாங்கம்மா! நாளைக்கு ஞாயிறு தானே, நான் லேட்டா தான் தூங்குவேன். சும்மா படம் பாத்துட்டு இருந்தேன் டீ குடிக்கலாமுனு தோணுச்சு, அதான் போட்டுப் போக வந்தேன், நீங்களும் குடிக்குறீங்களா.?” எனக் கேட்டான்.
“ஏன்! நான் டீ வேணாமுனு சொல்லவே மாட்டேன். ஆனா இருங்க நான் போட்டு தரேன் நகருங்க” என்று அவர் நுழைந்தார்.
“இருக்கட்டும்மா… நானே போடுறேன், எல்லாம் உங்கப் பொண்ணு சொல்லி தந்தது தான் தைரியமா குடிக்கலாம்” என்று சிரித்தான்.
“அவளுக்கே நான் தான் சொல்லிக் கொடுத்தேன். நீங்க இன்னைக்கு நான் போடுற டீயை குடிச்சுப் பாருங்க” என்று உள்ளே செல்ல, சர்வா மெதுவாக நகர்ந்தான்.
“நீங்க போங்க தம்பி, நான் போட்டு எடுத்துட்டு வரேன்”
“ம்ம்ம்!” என்று சர்வா வெளியில் சென்றான்.
*
மீனாட்சி டீயைப் போட்டு எடுத்துக் கொண்டு ஹாலிற்கு சென்றார்.
“அவளுக்கு அங்க இன்னைக்கு நல்ல வேலை தம்பி, அதான் பேசிட்டே அவளை அறியாம நல்லா என் மடியில் படுத்துத் தூங்கிட்டா” என்றார் சோகமாக.
சிறிது நொடி அமைதியாக டீ அருந்தினர்.
“சில நேரங்களில் யுவி மாதிரியே நிரஞ்சியும் சின்னப் பிள்ளையா இருக்காங்க, அது நல்லதா கெட்டதானு தெரியலம்மா!”
“எனக்கும் அது தோணுதுப்பா, என்ன செய்ய, இப்ப எனக்கு இருக்க ஒரே கவலை எனக்கு அப்புறம் அவ வாழ்க்கை எப்டி அமையுமுனு தான், இன்னைக்கு அவ மாமியார் பேசினது என்னால தாங்க முடியல, அவளை தனியா விட்டுப் போக மனசில்லை, ரெண்டு மனசா தான் இருந்தேன். நீங்க தங்க சொன்னதும் ஏதோ என் குலசாமி காளம்மனே சொன்ன மாதிரி இருந்துச்சு தங்கிட்டேன்”
“கவலைப்படாதீங்கம்மா, எல்லாம் நல்லா நடக்கும்…”
“ம்ம்ம்! சீக்கிரம் அம்லு புருசன் கூட போய் புள்ளை குட்டி ஆனா தான் எனக்கு நிம்மதியே தம்பி”
“நிரஞ்சி வாழ்க்கையில் அவங்களை தவிர நீங்க எல்லாரும் முடிவு எடுக்குறீங்க.?” என்றான் சர்வா பட்டென்று.
“என்னப்பா சொல்ற.?”
“இல்லம்மா! அவங்களை ஒன்னு படிக்க வச்சு கல்யாணம் பண்ணி இருக்கனும், இல்ல கல்யாணம் பண்ணிட்டு படிக்க அனுப்பிய வரை படிக்க விடனும். ரெண்டு இல்லாம இடையில் குழந்தைனா அது எந்த மாதிரி முடிவு, இதுக்கு எதுக்கு படிக்க அனுப்பனும்.?”
“நீங்க சொல்றது புரியுது தம்பி, நான் படிக்க அனுப்பல, அவ புருசன் முடிவு அது. இப்பவும் அவரு தான் கூப்பிடுறார் அங்க, அவளுக்கு படிப்பு உதவியா இருக்குமுனு எனக்கு புரியுது ஆனா இப்ப அவ மாமியார் பேசினதை கேட்டதும், இன்னும் எத்தனை பேர் இப்டி கேப்பாங்கனு தோணுதுப்பா.”
“அதுக்காக ஒரு குழந்தையை பெத்துட்டா அது எல்லார் வாயை அடைச்சுடுமா, குழந்தை வந்த பிறகு கடக்கக் கூடிய வாழ்க்கை பத்தி உங்களுக்கு தெரியாததா.? ஒன்னு நிரஞ்சி படிப்பை நிறுத்தனும், அது மட்டுமில்ல நிரஞ்சி அமெரிக்கா போகப் போறது இரு மாதங்களோ அல்லது அதை விட சிறிது நாட்கள் கூட, குறைச்சு அவ்ளோதான், ஜெகன் இல்லாம தனியா நிரஞ்சி அவங்க மாமியாரோடு சமாளிக்க முடியுமா.? எத்தனை நாட்கள் திரவி வருவான், நீங்க வந்துப் பாப்பீங்க.?” என்றான் உண்மையான கேள்வியாக…
மீனாட்சிக்கு விளங்க தான் செய்தது.
“தம்பி! அப்ப நிரஞ்சிக்கு என்ன தான் வழி.? அவ அமெரிக்கா போக வேண்டாமா.? மாப்பிள்ளை இங்க வர சொல்லனுமா.? அது முடியுமா! இதை பத்தி யார் கிட்ட பேசுறதுனே புரியலப்பா, நேசன் கிட்ட அடிக்கடி பேச முடியல, இங்க திரவி தம்பியும் பாவம் இவங்க ஒன்னா வாழனுமுனு தான் அதுவும் நினைக்குது.”
“இதுல தெளிவா முடிவு நிரஞ்சி தான் எடுக்கனும்.”
“அவளை பத்தி தான் உங்களுக்கே இன்னேரம் புரிஞ்சு இருக்குமே தம்பி”
“ம்ம்ம்! ஆனா நிரஞ்சிக்கு ஒன்னுமே தெரியாதுனு சொல்ல முடியாதும்மா, அவங்களுக்கும் சில விஷயங்கள் புரியும், நிரஞ்சி கண்டிப்பா ஜெகன் கூட வெக்சேன் போயிட்டு வரட்டும். ஆனா குழந்தை பத்தி அவங்க தான் முடிவு செய்யனும். என்னைய கேட்டா படிப்பை முடிச்சுட்டு லைஃபை தொடங்கலாம், ஜெகன் கூட ஓரளவு புரிதல் வந்துடும் அவங்களுக்கு, எனக்கு தெரிஞ்சு நிரஞ்சியும் ஜெகனும் கணவன் மனைவியா இன்னும் சரியா பேசக் கூட ஆரம்பிக்கல. அவங்க இத்தனை நாள்கள் இந்த வீட்டில் இருந்ததில் நான் புரிஞ்ச விஷயம் இது, தப்பா நினைக்காதீங்க… ஏனா குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை சரியா அமையலனா அது குழந்தையை தான் பாதிக்கும் அதுக்கு எடுத்துக்காட்டு யுவி இருக்கான்.” என்று நிறுத்தினான் சர்வா.
“தம்பி!” என்றார் அவர்.
“ஆமாம்மா! உண்மையை தான் சொல்றேன்.” என சந்திரா, யுவி பற்றிக் கூறினான்.
“ம்ம்ம்! திரவி தம்பி மேலோட்டமா சொன்னுச்சு தம்பி, ஆனா இப்டியும் ஒரு பொண்ணு இருக்காளனு தெரிஞ்சுக்க முடியுது, கண்ணுக்கு முன்னாடி இருக்கும் போது நம்பாமல் இருக்க முடியல. உங்க மனசுக்கு இப்டி நடந்து இருக்குனா அந்தக் கடவுளுக்கே கருணை இல்லைனு தான் அர்த்தம்.” என்று வருந்தினார்.
“என் கதையை சொன்னது ஒரு உதாரணத்துக்கு தான்மா, யுவிக்கு நான் இருக்கேன். ஆனா நிரஞ்சிக்கும் அந்த தைரியம் வரனும் எல்லாத்தையும் சமளிக்குற திறமை கிடைக்கனும்மா, அதான் என்னோட எண்ணம். ஏனா! நிரஞ்சி மாதிரி பொண்ணு கிடைப்பது கஷ்டம், அது புரியவில்ல ஜெகன் வீட்டிற்கு, நீங்க கவலைப்படாதீங்க நிரஞ்சிக்கு நானும், திரவியும் பொறுப்பு, அவங்களை பாத்துக்க வேண்டியது எங்களோட கடமையா நினைச்சுக்குறேன் உங்களுக்காக…”
“எனக்கு நீங்களும், திரவியும் இருப்பது தான் தைரியமே தம்பி, இல்லனா நான் அவளை என் கூடவே கூட்டிட்டுப் போய் இருப்பேன். நீங்க சொல்றதும் சரி தான், அவ இனி உங்க பொறுப்பு, அவ வாழ்க்கையை புரிஞ்சுக்குற திறமை இருந்தா போதும், மத்தவங்க ஒரு சொல் சொன்னா அது அவளுக்கு உரைக்கனும் ஆனா இவ மக்குப் பொண்ணா இருக்கா, ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறா, பெத்த எனக்கே விளங்காத குணம் அவளுக்கு இருக்குறது.”
“இவ்வளவு நாள்கள் நிரஞ்சிக் கூட நானும், யுவியும் இருந்திருக்கோம். அவங்க குணம் ஓரளவு எனக்கு புரியுதும்மா, அவங்களால யாருக்கும் எந்த சங்கடமும் வராம பாத்துக்குறாங்க, அதே நேரம் மத்தவங்க சங்கடத்தை ஈஸியா தீர்த்து வைக்க முயற்சி செய்றாங்க, அதுலையும் வெகுளியாகவே நடந்துகிறாங்க, என் தங்கச்சி பிருந்தா விஷயத்தில் நான் பார்த்தது” என விவரித்தான்.
“வாய்ப்பே இல்லமா, இத்தனை நாள்கள் இங்க இருந்த நிரஞ்சி இந்த ஒரு வாரம் இல்லாததால எங்களுக்கு அவங்க இடம் இந்த வீட்டில் நிரம்பாமல் இருப்பது புரியுது , அப்ப உங்களுக்கு எல்லாம் அவங்களை விட்டு இருப்பது கஷ்டம் தான். நீங்க மனசை விடாம இருங்க, நிரஞ்சி குணத்துக்கு எல்லாம் நல்லாதவே நடக்கும். நானும், திரவியும் இங்க தானே இருக்கோம் பாத்துக்குறோம்.”
“இப்ப தான் தம்பி மனசு நிம்மதியா இருக்கு, நீங்க யாரோ! எனக்கும் உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஆனா இந்த நேரத்தில் என்னோட மனக்குறையை கேக்குற சாமியா உங்களை பாக்குறேன், ரொம்ப நன்றிங்க தம்பி, என் மனசுல ஒரு உறுத்தல் இருந்தது ஒரு ஆம்பளை தனியா இருக்க வீட்டுல வயசுப் பொண்ணை அதுவும் கல்யாணமாகியவளை தனியா தங்க வச்சு இருக்கோமுனு, அந்த உறுத்தல் எல்லாம் சிதறிப் போச்சுய்யா. நீயும் உன் மனசும் தங்கம் அது நிரஞ்சிக்கு எப்பவும் நல்லதே நினைக்குமுனு நம்பிட்டேன். சும்மாவ, அம்லு சர்வா சார், யுவினு சொல்லிட்டே இருந்தானு இப்ப புரியுது. நீ நல்லா இருப்பப்பா” என்றார் மனதார.
“உங்க மனசு புரியுது, அதுக் கூட தெரியாதவனா நான். எனக்குமே ஆரம்பத்தில் இப்டி தங்க வைப்பது சமூகத்தில் தப்புனு தோன்றியது, ஆனா நிரஞ்சியோட கேரக்டருக்கு சத்தியமா யாரும் அப்டி நினைக்க முடியாது, இந்த அப்பார்ட்மென்டே நிரஞ்சிக்கு நட்புகள். யாரும் இதுவரை அவங்களை கேள்விக் கேக்கலை. எனக்குமே அதுக்கு அப்புறம் தான் புரிந்தது, நிரஞ்சிக்கு சரியான இடம் இது தான் இருக்கட்டும், நீங்க தைரியமா போயிட்டு வாங்க”
மீனாட்சிக்கு மனசு நிறைந்தது, நிம்மதியாக மூச்சு விட்டார்.
சர்வாவும் அதன் பிறகு பொதுவா பேசினான்.
சட்டென்று முழித்த நிரஞ்சி, மீனாட்சியை காணாமல் வெளியில் வர அங்கு சர்வா, அம்மா பேசுவதை கேட்டுக் கொண்டே அப்படியே நிற்க, அவர்கள் முடிக்க தானும் அறைக்குள் தூங்க சென்றாள்.
மனதில் பல சிந்தனைகள் வர ஓரளவு சர்வா கூறியது விளங்கியது. ஆனால் நடைமுறையில் அவளுக்கு அனுபவமே பாடத்தைப் புகட்ட வேண்டுமென்பது விதி.
அடுத்த நாள் விடிந்தது, மீனாட்சி கிளம்பியதும் நேற்று மாதிரி சிணுங்கவில்லை நிரஞ்சி, அதே மாதிரி மீனாட்சியும் தெளிவாக கிளம்பினார்.
சர்வா மீது நம்பிக்கையாக, அவனும் அவருக்கு ஆதரவாகப் பேசினான், வருந்தாமல் இருக்க வேண்டும் என்று…
ஒரு வழியாக மீனாட்சியை பஸ் ஏற்றி விட்டனர்.
மாலை வந்தது…
சர்வா, நிரஞ்சி, யுவி மூவரும் பிருந்தாக்குப் புடவை எடுக்க கிளம்பினர்…