இதழ் ஒற்றலில் திளைத்திருந்த இரு இதழ்களும் நெருக்கமாய் பேசிக்கொள்ள, வெட்கம் தாளாமல் கிருபாஷிணி தான் விலகினாள்.
நாணப்புன்னகை அவள் அதரங்களில் நிரந்தரமாகப் பரவி இருக்க, சின்னத் தீண்டல்களால் தன் பெண்மையை சோதிக்கும் கள்வனின் செயல்களில் நெளிந்தாள்.
அவளை விட்டுத் தள்ளிச் சென்று விடு என்று ஒரு குரல் வம்சியை எச்சரித்தாலும், அவன் செல்லவில்லை.
மீண்டுமொரு முறை செவ்விதழ்களை சுவை பார்க்கவே உந்தியது அவனது காதல் மனம்.
அதன் பேச்சை தட்ட இயலாமல் அவளது கன்னம் பிடித்து நிமிர்த்தியவன், கிறக்கத்துடன் முத்தமிட விழைய, அவள் வம்சியின் மார்பில் கை வைத்து தள்ளி, “ஹாஸ்பிடல் வசி!” என்று ஹஸ்கி குரலில் முணுமுணுத்தாள்.
“அது இவ்ளோ நேரம் தெரியலையா?” என்றான் கேலி நகையுடன்.
இருவரது முகத்திலும் மலர்ந்த புன்னகை நிரந்தரமாக வீற்றிருக்க, சுபாஷ்வரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.
சந்திரிகா மகனைக் கண்டதும் அழுது ஆர்ப்பரிக்க, அவனோ குற்ற உணர்வுடன் “என்னை மன்னிச்சுடுங்கம்மா. கண்டவ பேச்சைக் கேட்டு பைத்தியக்காரன் மாதிரி உங்களை ஒதுக்கி வச்சுட்டேன்.” எனக் கண் கலங்க மன்னிப்புக் கேட்க,
“என்னப்பா இது… என் பையன் எப்படியும் ஒரு நாள் முழிச்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சுப்பா. அது இன்னைக்கு நடந்துடுச்சு.” என மகனை ஆரத்தழுவிக் கொண்டார்.
“சும்மா ஒன்னும் நடந்துடலம்மா. வம்சி பார்த்த வேலை தான்” என கிருபாஷிணி புத்துணர்வுடன் நடந்ததைப் பகிர, அவளது விழிகளில் வழிந்த காதலைக் கண்டு சந்திரிகாவும் சுபாஷ்வரும் ஒருவரை ஒருவர் அர்த்தப்புன்னகையுடன் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
அதன் பிறகு, சுபாஷ்வரும் பத்திரிகை அலுவலகத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அதுவும் அவளது பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு தானே தவிர, அதில் அவள் எடுக்கும் எந்த முடிவிலும் அவன் தலையிடுவதில்லை.
“உனக்கு உடம்பு சரி ஆனதும் வரலாமே அண்ணா. ஏன் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கிற.” என கிருபாஷிணி அதட்டினாலும்,
“நியாயமா உனக்குத் துணையா இருக்க வேண்டிய நேரத்துல எல்லாம் நான் என் பொறுப்பைத் தட்டிக்கழிச்சுட்டேன் கிருபா. இப்பவும் அதை செய்ய விரும்பல. இது என் மன திருப்திக்காக ப்ளீஸ்.” என்று வேதனையுடன் பேசுபவனை அதற்கு மேல் அவள் எதுவும் சொல்லவில்லை.
வம்சி கிருஷ்ணாவின் கல்லூரி விழாவும் வந்திருக்க, அதிகாலையிலேயே வம்சி அவளுக்கு அழைத்து விட்டான்.
“ம்மா ஒன்பது மணிக்கு வந்துடு. என்ன ட்ரெஸ் போட போற?” என ஆர்வமாக வினவ,
அப்போது தான் கண்ணைக் கசக்கியபடி எழுந்தவள், “வசிப்பா மணி ஆறு தான் ஆகுது.” என்று சிரித்தாள்.
அசடு வழிந்த வம்சி கிருஷ்ணா, “அது… உன்னை இன்னைக்கு காலேஜ்ல சீஃப் கெஸ்ட்டா பார்க்க போறேன்ல அதான் ஒரே பரபரப்பா இருக்கேன். நைட்டு தூக்கமே வரலை தெரியுமா!” என்று குறைபடக் கூற, அவனது பேச்சுக்களை எல்லாம் ஒன்று விடாமல் ரசித்தாள்.
எந்த ஆணிற்கு தான், தன்னை விட தான் விரும்பும் பெண் அதிகாரத்திலும் ஆதிக்கத்திலும் பெரிய அளவில் இருப்பது பிடிக்கும்.
காதல், காதலி என்று வந்து விட்டால், ஈகோவும் மட்டம் தட்டும் குணமும் தானாகத் தலை தூக்கிப் பெண்ணின் மனதில் விரிசலை உருவாக்கி விடுபவர்கள் மத்தியில், வம்சி புதுமையாகவே தெரிந்தான்.
“என்னம்மா நான் பேசிக்கிட்டே இருக்கேன். பதிலே இல்லை. தூங்கிட்டியா?” வம்சி கேள்வியாய் வினவ,
நாக்கைக் கடித்துக் கொண்டவள், “இல்லப்பா… அது… என்ன ட்ரெஸ் போடலாம்ன்னு பாத்துட்டு இருந்தேன்” என்று விட்டு வேகமாக வார்டரோபை திறந்து சமாளித்தாள்.
“புடவை கட்டிட்டு வருவியாம்மா?” அவன் எதிர்பார்ப்புடன் கேட்க,
“வாடாமல்லி கலர் புடவை இருக்கா பாஷிணி. அந்த கலர் உனக்கு அழகா இருக்கும். அது இருந்தா கட்டிட்டு வாயேன்.” என்றிட,
“வாடாமல்லி கலரா… சரி ட்ரை பண்றேன்.” என்று பட்டும் படாமல் பதில் சொல்லி விட்டு முறுவலித்தாள்.
“சரி உன் இஷ்டம்.” என அவனும் அவளை வற்புறுத்தாமல், “எனக்கு ஒரு டவுட்டு கேட்கவாம்மா?” என்றான்.
“கேளுங்கப்பா”
“உன் வீட்டுக்கு வரும்போது பார்த்தேன். அங்க ரெண்டு கார் நின்னுச்சு. ஆனா அதை விட்டுட்டு நீயும் உன் அண்ணனும் வண்டில போய் ஏன்மா புதையல் எடுக்குறீங்க.” என்று சிரியாமல் கேட்டு நக்கலடிக்க,
“வசிப்பா… கலாய்க்காதீங்க.” என்று தரையில் காலை உதைத்தாள்.
அவன் கலகலவென சிரிப்பது கேட்டதும், “எனக்கும் அவனுக்கும் கார் ட்ரைவிங்க்கே தெரியாதுப்பா. ரெண்டு பேருமே எல் போர்டு.” என்று இரகசியம் போல கூறியவள், “எனக்கு என் ஸ்கூட்டில வர்றது தான் பிடிக்கும். அதான் அப்பா போனதுக்கு அப்பறம் டிரைவரும் வச்சுக்கல.”
என்றாள்.
“ரொம்ப நல்லது! ஆனா, காலேஜ்க்கு அழகா புடவை கட்டிட்டு ஸ்கூட்டில வர்றதை விட, கார்ல வந்தா மாஸா இருக்கும் பாஷிணிம்மா. என்னமோ உனக்கும் அந்த வண்டிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு.” என்று மூக்கைச் சுருக்கினான்.
“நல்லா தான் இருக்கும். நான் வேணும்ன்னா ட்ரைவர் அங்கிளை கான்டாக்ட் பண்ணிப் பாக்குறேன் வசி” என்றாள்.
அவனோ ஒரு கணம் தயங்கி பின், “எனக்கு கார் ஓட்டத் தெரியும். நான் வந்து உன்னைக் கூட்டிட்டு போகட்டா?” எனக் கேட்க,
“ஆல்ரெடி வண்டிக்கு உங்களை ட்ரைவரா யூஸ் பண்றது பத்தாதாக்கும்” என வாரியவள், “சரி வாங்க. எனக்கு டபிள் ஓகே” என்று போனை வைத்துவிட்டு, கிளம்பத் தொடங்கினாள்.
எட்டு மணி அளவிலேயே கிருபாஷிணியின் வீட்டிற்கு வந்து விட்டான். காலையிலேயே சுபாஷ்வர் பத்திரிகை அலுவலகம் சென்று விட, சந்திரிகா உறக்கத்தில் இருந்தார்.
எஸ்தரும் இன்னும் வராததால், கிருபாஷிணிக்கு போன் செய்தவன், “நான் வீட்ல தான் இருக்கேன்ம்மா கிளம்பிட்டியா?” எனக் கேட்க,
“இதோ வந்துட்டேன் வசி.” என்றவள், மாடியில் இருந்து கீழே இறங்க, அவள் மீது பார்வையை செலுத்தியவன் உறைந்து போனான்.
அவன் ஆசையாகக் கேட்ட அதே வாடாமல்லி வண்ணத்தில் புடவை அணிந்திருந்தவள், மஞ்சள் கொஞ்சும் அழகுடன் அவன் முன் நிற்க, காதலுக்கு அவன் அளித்த விளக்கங்களும் விதிமுறைகளும் தூள் தூளானது.
அப்போதே அவளை அள்ளி எடுத்துக்கொள்ள கரங்கள் பரபரக்க, எண்ணம் செல்லும் போக்கில் தன்னையே திட்டிக்கொண்டவன், “மார்வலஸ்…” எனக் கண் சிமிட்டி விட்டு, காரை நோக்கி சென்றான்.
‘அடப்பாவி… உனக்காக உனக்குப் பிடிச்ச கலர்ல ரெடி ஆகிட்டு வந்தா, ஒத்த வார்த்தைல கிளம்பிட்டான்.’ என்றவளுக்கு அந்த பாராட்டு போதவில்லை போலும்!
காரில் ஏறி அமர்ந்ததும், இருவரும் ஒன்றும் பேசாமல் பயணித்தனர்.
ஜாஸ்மின் பிளேவரில் பாவையின் மீதிருந்து வந்த பெர்பியூம் வாசம் ஆடவனின் நுண்ணிய உணர்வுகளை எல்லாம் சோதித்துக் கொண்டு இருக்க, அமைதியாகத் தன்னை அடக்கிக்கொண்டிருந்தான்.
“இந்த ட்ரெஸ்ல நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன். திரும்பிப் பார்க்கக் கூட பிடிக்காத அளவுக்கு…” உர்ரென்ற முகத்துடன் கிருபாஷிணி முணுமுணுக்க, முதலில் புரியாமல் பார்த்தவன், புரிந்தபின் காரை ஓரம் கட்டினான்.
“என்ன சொன்ன?” கண்ணைச் சுருக்கி அவன் மீண்டும் வினவ,
“ம்ம்ம்… இந்த ட்ரெஸ்ல நான்…” எனக் கடுப்புடன் அவள் ஆரம்பிக்க,
அவளது பின்னந்தலைக் கூந்தலை கொத்தாகப் பற்றி தன் புறம் இழுத்தவன், ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் உதட்டுச் சாயம் பூசி இருந்த உதடுகளை ஒற்றை விரலால் அழுத்தமாக வருடி விட்டு, “தேவதை மாதிரி… ம்ம்ஹும் தேவதையே நீ தான்டி. என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற.” என மோகத்துடன் கூறி விட்டு, அழுத்தம் திருத்தமாக தன்னிதழ்களை அவளிதழ்களோடு பொருத்தினான்.
ஆழமாய் தாபமாய் தாகம் தணிக்க, அவளது உமிழ்நீர் கொண்டு தன்னை தணித்துக் கொள்ள முற்பட்டவனுக்கு தாகம் மட்டும் தீர்ந்தபாடில்லை.
ஏற்கனவே அவன் சொன்ன ‘டி’ யில் சிலிர்த்திருந்தவள், இந்த முத்தத்தில் மொத்தத்தையும் மறந்து போனாள். உயிரின் ஆழம் வரை வருடி, நெருடி விட்டது அம்முத்தம்.
எத்தனை நிமிடங்கள் நீடித்தது என்று தெரியவில்லை. உதடு வலித்த பிறகே, அவனைத் தள்ளி விட்டாள்.
கன்றி சிவந்து போன இதழ்களை ரசனையுடன் ஏறிட்டவன், “லிப்ஸ்டிக் வச்சு இருக்கியா?” எனக் கேட்க, அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சம் கொண்டு, தலையை மட்டும் ஆட்டினாள்.
“குடு!” முத்தம் கொடுத்து விட்டு சம்பந்தமின்றி பேசியவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், அவனது கண்ணில் வழிந்த மோகம் கண்டு, திணறிப் போனாள்.
விரல்கள் நடுங்க லிப்ஸ்டிக்கை எடுத்து அவனிடம் நீட்ட, அவளது நாடியைப் பற்றி நிமிர்த்தியவன், செவ்விதழ்களுக்கு சிவப்பு வண்ணம் பூசத் தொடங்கினான்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், “அய்யயோ என்னப்பா இவ்ளோ லிப்ஸ்டிக் போட்டு இருக்கீங்க.” எனப் பதறி துடைக்கப் போக,
அதனைத் தடுத்தவன், “இல்லன்னா, உன் லிப்ஸ்ல இருக்குற என் பல்தடம் தனியா தெரியும் பரவாயில்லையா?” என்றான் குறும்பு மின்ன.
வெட்கம் பிடுங்கித் தின்ன, “முதல்ல கிளம்புங்க. வர வர நீங்க ரொம்ப நாட்டியா இருக்கீங்க” என அவனைக் குறை கூறியதில்,
“சும்மா இருந்தவனை நீ தான ‘நான் நல்லா இல்லையா’ன்னு கேட்டு சொறிஞ்சு விட்ட… இதுல என் தப்பு எதுவும் இல்லம்மா” என சிரித்தவனின் தோளில் செல்லமாக அடித்தவள், அதில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டாள்.
கல்லூரி வந்ததும், அவனே அவளை மெதுவாக வர சொல்லி விட்டு ஆடிட்டோரியத்திற்குச் செல்ல, கிருபாஷிணி உள்ளே நுழைந்ததும் பூங்கொத்துடன் வரவேற்றான்.
யாரும் அறியாமல் அவர்களது பார்வை பரிமாற்றங்கள் பல கதைகள் பேசிட, விழா எப்படி ஆரம்பித்து எப்படி முடிந்தது என்று கூட தெரியவில்லை அவர்களுக்கு.
நாட்கள் அதன்போக்கில் நகர, மனதிலிருக்கு பாரமெல்லாம் அகன்று தாய் தமையனுடன் நிம்மதியுடன் கழிந்தது கிருபாஷிணியின் பொழுதுகள்.
கூடவே ஆடவனின் தித்திக்கும் காதலும் அவளை மெய்மறக்க வைக்க, வானத்தில் மிதந்து கொண்டு இருந்தாள்.
அன்று அலுவலகத்திற்கு கிளம்பிக் கீழே வந்த தங்கையை ஆராய்ச்சியுடன் பார்த்த சுபாஷ்வர், “கிருபா உங்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கணும்ன்னு நினைச்சேன். கேட்கட்டா…” என்றான்.
“கேளுண்ணா” என்றதில்,
“உனக்கும் வம்சிக்கும் இடைல என்ன இருக்கு?” எனக் கையைக் கட்டிக்கொண்டு வினவினான்.
நொடியில் கன்னங்கள் சிவந்து விட, தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
“என்ன இருக்கும்ன்னு நினைக்கிறண்ணா?”
“நான் நினைக்கிறது இருக்கா இல்லையான்னு தெரியாம எப்படி நினைக்குறது.” அவனும் சூசகமாகவே பேசிட, அவள் மென்னகை புரிந்தாள்.
அந்நேரம் வம்சி பரபரப்புடன் வீட்டினுள் நுழைய, அவனைக் கண்டு விழி விரித்தவள், “வசி என்ன சொல்லாம கொள்ளாம வந்துருக்கீங்க” என வியந்தாள்.
“அப்படி என்ன குட் நியூஸ்? எங்ககிட்டலாம் முதல்ல சொல்ல மாட்டீங்களா?” என சுபாஷ்வர் முந்திக்கொண்டு வினவியதில் முறுவலித்தான்.
“உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒண்ணா சொல்ல தான் வீட்டுக்கே வந்தேன் சுபாஷ். இல்லன்னா பாஷிணிகிட்ட மட்டும் தனியா சொல்லிருக்க மாட்டேனா?”
“நல்லா ஐஸ் வைக்கிறீங்க வம்சி.” அவன் தலையாட்டி சிரித்துக் கொள்ள, கிருபாஷிணியும் புன்னகையுடன் “சும்மா இருண்ணா. என்ன விஷயம்ப்பா” என்றாள் ஆர்வத்துடன்.
“ஐ. இ. எல். டி. எஸ் எக்ஸாம் எழுதுனேன்ல… 8.5 ஸ்கோர் பண்ணிருக்கேன்” என்றதில்
“வாவ்… காங்கிரேட்ஸ் வசி.” என அவனை கையைப் பிடித்து குலுக்கியவள்,”செம்ம நியூஸ்… சரி அது என்ன ரெண்டாவது குட் நியூஸ்” என வினவ,
அவனோ ஒரு நொடி கூட தயங்காமல், “ஆஸ்திரேலியால நான் எதிர்பார்த்த ஜாப் ஆஃபர் வந்துடுச்சு. விசா, டிக்கெட் எல்லாம் இன்னும் பத்து நாள்ல வந்துடும். மேக்சிமம் பதினஞ்சு நாளைக்குள்ள பறந்துடுவேன்.” என்று கையால் சைகை செய்து விசில் அடித்தவனை, மெல்ல மெல்ல சிரிப்பு மறைய அசைவின்றி பார்த்திருந்தாள் கிருபாஷிணி.