கானலென புரிந்தும் கனவுகளில் புதைந்த என்னை கரம் பற்றிக் காதல் கொள்ள கஞ்சத்தனம் ஏனடா!!!
*****
“எ… என்ன இவ்ளோ சீக்கிரமா? ஒரு வருஷம் கழிச்சு தான போறேன்னு சொன்னீங்க?” ஏமாற்றம் நிறைந்த மனதுடன் கிருபாஷிணி விக்கித்து நிற்க, அவனிடமோ எவ்வித சுணக்கமும் வருத்தமும் துளியும் தெரியவில்லை.
“ஒரு வருஷத்துக்குள்ள ட்ரை பண்ணிடலாம்ன்னு நினைச்சேன். ஆனா, முதல் தடவையே நல்ல ஸ்கோர் வந்துடுச்சு, அதோட ஜாபும் கிடைக்கவும் அதை ஏன் மிஸ் பண்ணனும் பாஷிணி. அதான் உடனே அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்.” என்றவனது இதழ்களில் ரெடிமேட் புன்னகை.
எப்படி இவனால் இத்தனை எளிதாக இதை ஏற்க முடிகிறது? என்ற வேதனையுடன் எச்சிலை விழுங்கியவள், “க… காங்கிரேட்ஸ்” என்றாள் கண்ணில் எட்டாத புன்னகையுடன்.
“தேங்க் யூ! இதை இன்னும் ஷானுக்கிட்ட சொல்லலம்மா. அப்டியே கிளம்புறேன். பை” என்றதும்,
“என்ன வம்சி… இப்ப தான் நம்ம பார்த்து பழக ஸ்டார்ட் பண்ணுனோம். அதுக்குள்ள இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீங்க. நான் என்னென்னமோ நினைச்சேன்.” என சுபாஷ்வர் தங்கையின் முக வாட்டத்தை நொடியில் கணித்துக் கூற,
“என்ன நினைச்சீங்க?” எனப் புரியாத தொனியில் கேட்டவனிடம் என்னவென விளக்குவது என்று குழம்பிப் போனான்.
அதற்குள் வம்சிக்கு போன் வந்ததில், “ஐ ஹேவ் டூ கோ. அப்பறம் பாக்கலாம்” எனப் பொதுவாய் கூறி விட்டுக் கிளம்பியவன், ஷாந்தனுவின் அபார்ட்மெண்டிற்குச் செல்ல, அங்கு அவன் முறைத்தவண்ணம் இருந்தான்.
“போன் பண்ணுனா எடுக்க மாட்டியாடா?” என வம்சி கடிந்ததில்,
“நான் உன்மேல கோபமா இருக்கும்போது எப்படி போனை எடுக்குறது…” என சிலுப்பினான்.
“நான் என்னடா செஞ்சேன்?” முறுவலுடன் வம்சி கேட்க,
“என்னதான் செய்யல. தனுஜாகிட்ட ப்ரொபோஸ் தான பண்ணுனேன். அதுக்கு அவள் என்னமோ கண்ணைக் கசக்குறா. நீ என்னமோ என்னையவே தப்பு சொல்ற. என்னை பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் பொறுக்கி மாதிரி இருக்கா?” எனக் கோபம் கொண்டான்.
“அப்டி இல்லைடா. சடனா சொல்லவும் அவள் பயந்துருப்பா. ரொம்ப நல்ல பொண்ணுடா. நீயும் பட்டுன்னு பேசி இருப்ப. அதான் உன்னை திட்டுனேன்.” என விளக்கியும் அவன் கோபம் குறையாமல் நிற்க,
“சரி சரி இன்னும் பதினஞ்சு நாள் தான் உன்கூட இருக்கப் போறேன் அதுவரைக்கும் சிரிச்ச முகத்தோட இருப்பியாம்.” என்று அவனை கொஞ்சுவது போல விரலைக் குவிக்க, அதில் குழம்பியவன் விவரம் அறிந்து திகைத்தான்.
அடுத்த ஒரு வாரம் முழுதும் அவனாக கிருபாக்ஷிணியை அழைக்கவே இல்லை. அவளாக அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகளோடு உரையாடலை முடித்து விடுபவன், சில நேரங்களில் அழைப்பை ஏற்பதே இல்லை.
அன்று விடுமுறையாக இருக்க, ஷாந்தனுவிடம் வம்சி அபார்ட்மெண்டில் இருப்பதை உறுதி செய்து விட்டு அங்கு கிளம்பினாள்.
அவர்களுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு, “மச்சி… வீட்டுக்கு திங்ஸ் வாங்கணும். சூப்பர் மார்க்கெட் போயிட்டு வந்துடுறேன்” என்று ஷாந்தனு கிளம்பி விட, அவன் சென்ற அடுத்த சில நிமிடங்களில் அங்கு கிருபாஷிணி வந்தாள்.
அவளைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்தவன், பின் இறுகிய முகத்துடன் “என்ன திடீர்னு வந்துருக்க?” எனப் புருவம் சுருக்க, அவனிடம் இருந்து வரும் ‘ம்மா’ மிஸ் ஆனதில், அவளுக்கு கேவலும் கோபமும் ஒரு சேர எழுந்தது.
“உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு வர்றதுக்கு இது என்ன உங்க வீடா?” சுருக்கென பதில் அளித்தவள், “போன் பண்ணுனா ஏன் எடுக்கல?” என்றாள் சினத்துடன்.
“எல்லாம் பேக் பண்ணவே டைம் இல்ல. காலேஜ்ல இருந்து ரிலீவ் ஆகுற வொர்க் வேற. சோ… கொஞ்சம் பிசி. என்ன விஷயம்!” எனப் பட்டும் படாமல் பேசியதில்,
“இத்தனை நாள் விஷயம் இருந்தா தான் நம்ம மீட் பண்ணுனோமா என்ன?” கோபம் குறையாமல் கேட்டாள்.
“அநேகமா இது தான் நம்ம கடைசி மீட்ன்னு நினைக்கிறேன். நம்ம காண்ட்ராக்ட்டை இன்னையோட க்ளோஸ் பண்ணிடலாம் கிருபாஷிணி.” என வங்கியில் கணக்கை முடித்து விடுவது போல இயல்பாகப் பேசியவனைக் கண்டு ஆத்திரம் மழையாகப் பொழிந்தது.
“கான்டராக்ட்டா? நமக்குள்ள கான்டராக்ட் படி தான் எல்லாமே நடந்துச்சா வம்சி?” தொண்டை அடைக்க அவள் கேட்க,
“கான்டராக்ட்டை மீறி சில விஷயம் நடந்துச்சு தான். ஆனா அதுக்கு நான் மட்டும் காரணமில்லை. இட் வாஸ் ஜஸ்ட் அ செக்ஸுவல் திங்க்.” என வெகு அசட்டையுடன் கூறியவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு கண்களில் சிறு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“ஆனா, எல்லாமே கான்டராக்ட்க்காக தான கிருபாஷிணி. அண்ட் தேங்க்ஸ்… எனக்கு ஒரு ரியல் லவ் எக்ஸ்பீரியன்சை குடுத்ததுக்கு.” என்றவனின் சட்டையைப் பிடித்திருந்தாள்.
“என்னடா நானும் பாத்துகிட்டே இருக்கேன். ஓவரா பேசிட்டு இருக்க. உன் மனச தொட்டுச் சொல்லு. உனக்கு என் மேல உண்மையாவே காதல் வரல. உன் உணர்ச்சியை அடக்க முடியாம தான் முத்தம் குடுத்தன்னா, ஏன் அதோட விட்ட, மொத்தமா முடிச்சுட்டு கழட்டி விட்டிருக்க வேண்டியது தான…” எனப் பல்லைக்கடித்தாள்.
“கத்திப் பேசாத…” அழுத்தத்துடன் உத்தரவிட்டவன், “அப்படி எந்த அசம்பாவிதமும் ஆகிடக்கூடாதுன்னு தான் இதோட முடிச்சுக்கலாம்ன்னு சொல்றேன்” என்றான் அவள் கையை எடுத்து விட்டு.
“அப்போ உனக்கு என் மேல லவ் இருக்கு… அதை எக்ஸ்போஸ் பண்ணிடுவன்னு பயந்து ஓடுற… அப்படி தான” நக்கலாகக் கேட்க,
“கம் ஆன் கிருபாஷிணி. சில்லியா பேசாத. உன்னை மொத்தமா எடுத்துக்கணும்ன்னு தோணுறதுக்கு பேர் லஸ்ட். லவ் இல்ல.” என்றான் அழுத்தம் திருத்தமாக.
மொத்தமாக நொறுங்கிப் போனவளின் முகத்தில் அறை வாங்கிய உணர்வு.
விம்மிய நெஞ்சத்தை அரும்பாடுபட்டு அடக்கியவள், “ப்பா… ப்ளீஸ்… என்னை ஹர்ட் பண்றதுக்காக இப்படி பேசாதீங்க. ரொம்ப வலிக்குது. சரி அது வெறும் கான்டராக்ட் லவ்வாவே இருக்கட்டும். அதுல ஒரு துளி கூட உண்மை இல்லையாப்பா.” ஏக்கத்துடன் கேட்டவளை உணர்வற்றுப் பார்த்தவன், “இல்லை” என்றான் பட்டென.
அந்த பதிலில் நிலைகுலைந்து இரண்டடி பின்னால் நகர்ந்தவளின் கால்கள் வலுவிழந்தது போல தள்ளாடியது.
“நீ கிளம்புனா நானும் கிளம்புவேன். எனக்கு வேலை இருக்கு…” அனைத்தும் முடிந்தது போல அவன் பேசிட, அவளோ இன்னும் நிலை மாறாமல் நேர்ந்த அதிர்வுகளின் கணம் தாளாமல் தொய்ந்திருந்தாள்.
“ஓகே… நீ இருந்து ஷானுவைப் பார்த்துட்டு போ.” என்றவன், ஐந்தடி வாசலை நோக்கி நடக்க,
“ஐ லவ் யூ வசி” என்ற கிருபாஷிணியின் ஆழ்ந்த குரலில் சட்டென நின்றவன், கையை இறுக்கி மூடி கொண்டான்.
“கான்டராக்ட் முடிஞ்சதுக்கு அப்பறம், இந்த வார்த்தையை சொல்லி அர்த்தமே இல்லையே” என அவளைப் பாராமல் கூற,
“கான்டராக்ட் அப்ப கூட நீங்க சொன்ன இந்த வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லைன்னு இப்ப தான் புரியுது. ஆனா, நான் அர்த்தத்தோடு தான் சொல்றேன். ஐ லவ் யூ. அண்ட் ஐ மீன் இட். கான்டராக்ட்ன்னு பேர் வச்சு நீங்க என்மேல காட்டுன காதலை வாழ்க்கை முழுக்க உண்மையா அனுபவிக்கணும். ஐ ஜஸ்ட் லவ் யூ ப்பா.” தேய்ந்த குரலில் அவள் காதலை கூற,
திரும்பி விறுவிறுவென அவளருகில் வந்தவன், “உனக்குப் பைத்தியம் எதுவும் பிடிச்சு இருக்கா. ரூல்ஸ் படி, உண்மையா உனக்கு என்மேல காதல் வந்தா என்கிட்ட சொல்லணும்ன்னு சொன்னேன்ல. சரி விடு. நீயே ஒத்துக்கிட்டு ஏத்துக்கிட்ட கான்டராக்ட்டை நீயே உடைக்காத. நீ நினைக்கிறது இந்த ஜென்மத்துல நடக்காது.” என்றான் வெறுப்பைத் தேக்கி.
அன்பையும் கனிவையும் மட்டுமே பார்த்துப் பழகிய முகத்தில் வெறுப்பையும் சீறலையும் பார்க்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. என்னவோ உயிரே மொத்தமாக பறிபோனது போல மொத்த சக்தியும் இழந்து நின்றவளுக்கு அவனுடன் வார்த்தையில் போராடி ஜெயிக்க இயலவில்லை. அதற்கு தெம்பும் இல்லை.
சலனமின்றி நின்றவளை கண்டுகொள்ளாமல் மீண்டும் ஐந்தடி சென்றிருப்பான்.
“ஆஸ்திரேலியா போயிட்டு திரும்பி வர்ற ஐடியா இருக்கா?” என்ற பாவையின் கேள்வியில் நின்றவன், “இல்ல” என்றான் இறுக்கமாக.
“எப்பவுமேவா?”
“எப்பவுமே.”
“ஏன்?” என்ற அவளின் கேள்விக்கு அவனிடம் வெறும் மௌனம் மட்டுமே!
பெருமூச்சு விட்டவள், “சரி நீங்க வர வேணாம். ஆனா, இவ்ளோ நாள் பழகுனதுக்கு… ஐ மீன் வெறும் கான்டராக்ட் பேஸ்ல போலியா காதலிச்சதுக்கு ஈடா எனக்கு ஒரே ஒரு ஃபேவர் பண்ணனும்.” என்றாள் கடினத்துடன்.
அவன் இடுப்பில் கை வைத்து திரும்பி நின்றபடி, “ம்ம்” என உறும,
“கொஞ்ச வருஷம் கழிச்சு, நான் செத்துட்டேன்னு தகவல் வந்தா என்னை ஒரு தடவை கடைசியா பார்க்குறதுக்காக வருவீங்களா?” மொத்த ஏக்கத்தையும் வார்த்தைகளில் தேக்கி கேட்டதில், அவனது உடல் அதிர்ந்தது.
அதிகபட்ச கோபத்துடன் அவளை நெருங்கி அவளது கழுத்தைப் பிடித்தவன், “ஏய் என்ன பேசுற?” என்று கர்ஜிக்க, அவன் முகத்தில் புதிதாய் கண்ட சினத்தையும் கனலை கக்கும் குரலையும் முதன் முறை பார்த்தவளது கண்களில் பயம் தெறித்தது.
கண்ணை மூடி நிதானித்தவன், “முட்டாள்தனமா எதையாவது உளறாம, போய் வேலையைப் பாரு” என்று அவன் கண்டிக்க, தைரியத்தை திரட்டி, “வருவீங்களா இல்லையா?” என்றாள் பிடிவாதமாக.
அவன் பதில் பேசாமல் நிற்க, “உங்க கூட வாழுற ஆசை தான் நிறைவேறாது. அட்லீஸ்ட் செத்ததுக்கு அப்பறமாவது கடைசி ஆசை நிறைவேரும்ன்ற நம்பிக்கையோட வாழ்ந்துட்டு போறேனே…” தலையைச் சாய்த்து கேட்டதில் உள்ளுக்குள் கொந்தளித்த அத்தனை உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வர முயன்று அதில் வெற்றி கண்டவன்,
“சரி வரேன். ஆனா, நான் செத்தா அந்த தகவல் கூட உனக்கு வராது!” என்று அவள் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சிட, நீர்மணி ஒரு உருண்டோடி அவள் கன்னம் வழியே வழிந்தது.
அதனை சலனமற்றுப் பார்த்தவன் மீண்டும் ஐந்தடி எட்டு வைக்க, தன் கண்ணீரைக் கண்டதும் பதறும் ஆடவனின் நேசத்தை எதிர்பார்த்து நின்றது அவளது கன்னங்கள்!
அவனோ, “ப்ச் இப்போ என்ன?” அவள் அழைத்தது போல இருந்ததில் எரிச்சலுடன் நின்று கேட்க,
“நான் கூப்பிடவே இல்லை” என்றாள் மிடுக்காக.
இனியும் இங்கு நிற்பது சரியல்ல என்றுணர்ந்தவன் அடுத்த அடி எடுத்து வைக்கும் முன், பின்னிருந்து அவனை அணைத்தாள் கிருபாஷிணி.
அவன் முதுகில் பாவையின் கண்ணீர் வெப்பமாகச் சுட, அதனை ஒதுக்கித் தள்ளியவன், அவளை படாரென விலக்கினான்.
அவனது சுளித்த முகத்தைக் கண்டதும், “என்னடா ரொம்பத் தான் சலிச்சுக்குற. இவ்ளோ நாள் இனிச்சது இப்ப மட்டும் கசக்குதா. இங்க பாரு… நீ ஆஸ்திரேலியா போ இல்ல அண்டார்டிகா கூட போ. ஆனா நீ எங்க போனாலும் அங்க நானும் வருவேன். உன் இஷ்டத்துக்கு என் வாழ்க்கைக்குள் வந்து எல்லாத்தையும் மாத்திட்டு கண் காணாத இடத்துக்குப் போவ அதை நான் பார்த்துட்டு இருக்கணுமா…?” எனக் குரலை உயர்த்திச் சண்டை இட, “கிருபாஷிணி… அமைதியா பேசு.” எனக் கண்டித்தான்.
“நான் அப்படி தான் கத்துவேன் யூ சீட்டர்.” என அவனது சட்டையைப் பற்றி இழுத்தவள், “அதெப்படிடா கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம, உன்னால என்னை விட்டுப் போக முடியுது. கான்டராக்ட் பேஸ்ல பழகுனோம்ன்னு சொல்லு, உனக்கு வெளிநாட்டுக்கு போகணும்ன்னு ஆசை இருக்குன்னு சொல்லு… ஆனா என் மேல இருந்தது லவ் இல்லன்னு சொல்லாத. என்னால அதை ஒத்துக்க முடியாது. நீ என்னை விரும்புன… அதை உன் கண்ணுல நான் பார்த்தேன். அதை ஒத்துக்கிட்டு எங்க வேணாலும் போய்த் தொலை.” என காட்டுக் கத்தாக கத்தினாள்.
அவனோ கையையும் கண்ணையும் இறுக்கி மூடி, “வாயை மூடிக்கிட்டு கிளம்பி போ.” என பெருமூச்சுடன் கூற, அவளோ அவனது மாற்றங்களை கவனியாமல், “முடியாது… என்னால உன்னை மாதிரி போக முடியாது. ஐ லவ் யூ டா… ஐ லவ் யூ…” என அவள் காதலையும் கத்தியே கூறியதில், அவன் முற்றிலும் பொறுமை இழந்து, அவளை ஓங்கி தள்ளி விட, சுவற்றில் முட்டி நின்றாள்.
அவனோ மொத்த சத்தத்தையும் குத்தகைக்கு எடுத்தவன் போல ஆக்ரோஷத்துடன், “கத்தாதன்னு சொன்னா கேட்க மாட்டியா? நான் போவேன். போக தான் செய்வேன். ஆஆஆஆ” என தலை முடியைப் பிடித்து கத்தியவன், ஆவேசம் அடங்காமல் வீட்டிலுள்ள அத்தனை பொருட்களையும் தரையில் உடைத்து தள்ளி கத்திக்கொண்டே இருந்தான்.
இதயம் அதிகபட்சமாகத் துடித்தது கிருபாஷிணிக்கு. “வசி…” என அவனருகில் செல்லப்போக, “ஏய்… போய் தொலைடி. போக சொன்னா போக மாட்டியா. போ… போ… போ… போ… போ…” என்று விசித்திரமாகக் கத்திக்கொண்டே இருக்க, அச்சம் பரவி நடுங்கத் தொடங்கினாள்.
குரலை உயர்த்திக் கூட பேசாதவன் இப்போது விடாமல் கர்ஜித்து, கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதைக் கண்டதும் வெளிப்படையாகவே கரங்கள் நடுங்கியது அவளுக்கு.
அதே நடுக்கத்துடன் அவளது போனை எடுத்தவள், ஷாந்தனுவிற்கு அழைக்க, அங்கோ அவன் எதிரில் வந்த தனுஜாவை முறைத்தபடி ஷாப்பிங் செய்து கொண்டிருந்தான்.
கிருபாஷிணியின் எண்ணைக் கண்டதும் “சொல்லு கிருபா…” என்றிட, அவளோ “அண்ணா… அண்ணா… வசி…” எனப் பேசும் முன், அவள் போனைப் பிடுங்கி கீழே போட்டவன், “போக சொன்னேன்ல போக மாட்டியாடி.” என அவளை மீண்டும் சுவற்றில் தள்ளினான்.
கையை ஓங்கி அடிக்க வர, அவளோ வெடவெடத்து கண்ணையும் முகத்தையும் மூடிட, அவனோ கை முஷ்டியை வைத்து சுவரில் நங்கு நங்கென்று குத்திக்கொண்டிருந்தான்.
“ஐயோ வசி…” என அவள் தடுக்க முயல, “ஏய் ….ஆஆஆ” என இன்னுமாக கத்தியவன், மேலும் ஆவேசத்துடன் சுவரை உடைக்க, அவனது முகமோ ரௌத்திரத்தை டஜன் கணக்கில் தாங்கி இருந்தது. பார்க்கவே கொடூரமானவனாக இருந்தவனை தான் விரும்பிக் காதலித்த வம்சி கிருஷ்ணா என்று நம்பவே அவளுக்கு அத்தனை கடினமாக இருந்தது.
ஒவ்வொரு அணுவும் பயத்தில் நடுங்கித் துடிக்க, அதற்கு மேல் அங்கு நிற்கவே பயந்தவளாக அவளது வீட்டிற்கு சென்று விட்டாள்.
எப்படி வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இன்னும் உடல் உதறிக்கொண்டு தான் இருந்தது. இதயத் துடிப்பு சீராக மறுத்தது.
டீ – பாய் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை வாயில் சரித்தாள். நீரெல்லாம் வெளியில் சிந்தி சிதறிட, தொண்டைக்குழி அந்தத் தண்ணீரை ஏற்காமல் இன்னுமாக நடுங்கியது.
சந்திரிகாவின் அறையில் இருந்த வந்த எஸ்தர்,
“எந்தா பெண்குட்டி முகம் பேடிச்சது போலே தோணுன்னு ” எனக் கேட்க,
வெளிறிப்போய் இருந்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.
“அம்மா உறங்குகயான்னு. ஞான் வீட்டில் போயிட்டு பின்னே வராம்” என்று கிளம்ப, ஏதோ நினைவு வந்தவளாக “சேச்சி” என அழைத்தாள்.
“உங்க… உங்களுக்கு வம்சியை எப்படித் தெரியும்?” எனக் கேட்க, அவரோ புருவம் சுருக்கினார்.
“அவன் நின்னொடு ஒன்னும் பரஞ்சில்லா” என்றதில், அவள் இடவலமாகத் தலையசைத்தாள்.
எஸ்தரோ மேலும் மலையாளத்தில் கூறத் தொடங்கினார்.
“வம்சி ஹிஸ்டீரியா பேஷண்ட் மோளே. சின்ன வயசுல ரொம்ப நாள் ஹாஸ்பிடல்ல இருந்து தான் ட்ரீட்மெண்ட் பண்ணுனான். நான் தான் அவன்கூட இருந்தேன். ஆனா, அப்பவே அதை சரி பண்ணியாச்சு. இப்ப பாரு நல்லா படிச்சு நல்ல நிலமைல இருக்கான்.” என்று பெருமையாகக் கூறியவரை அதிர்ந்து பார்த்தாள் கிருபாஷிணி.
“ஹி… ஹிஸ்… ஹிஸ்டீரியாவா” வாயில் இருந்து காற்று தான் வந்தது அவளுக்கு.
“ம்ம்… வம்சி இதை உன்கிட்ட பரஞ்சில்லா? ஆச்சர்யம் தான். பொதுவா அவன் யார்கூடவும் அவ்ளோவா பழக மாட்டான். அப்படியே பழகுனா கூட அவனைப் பத்தி சொல்லிடுவான். ஆனா அதுக்கு அப்பறம் யாரும் அவன்கூட பழக மாட்டாங்க. நான் உனக்கு தெரியும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்.” என்றதில்,
“சரி ஆகிடுச்சா… இல்ல… இன்னும் முழுசா சரி ஆகலையா?” சற்று முன் அவன் காட்டிய மூர்க்கத்தனத்தில் இருந்து மீளாதவளாக கேட்க,
“என்ன சொல்ற மோளே. அவன் வித்தியாசமா எதுவும் நடந்துக்கிட்டானா” எனப் பயத்துடன் கேட்டார்.
அவரை பதற்றப்படுத்த விரும்பாதவள் “இ… இல்ல சேச்சி சும்மா கேட்டேன்.” என்று சமாளித்தாள்.
அதில் சற்று சாந்தமானவர், “முழுசா சரி ஆகி தான் அவனை வீட்டுக்கு அனுப்புனோம் மோளே. சின்ன வயசுல சில நேரம் ரொம்ப ரூடா நடந்துப்பான். ஆனா என்ன… எப்பவும் யாரையும் அட்டாக் பண்ண மாட்டான். அவனை அவனே காயப்படுத்திக்குவான். ஒரு தடவை க்ளுகோஸ் பாட்டிலை வச்சு அவன் தலையை அவனே உடைச்சுக்கிட்டான். ஒவ்வொரு தடவை அவன் கத்தி கண்ட்ரோலை இழந்து நடந்துக்கும் போதும் அவன்கிட்ட இருந்து அவனை காப்பாத்துறதே ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்று அவர் பேசிக்கொண்டே செல்ல, ஒவ்வொரு வார்த்தைகளையும் முழுதாய் உள்வாங்கியவள், சரேலென நிமிர்ந்தாள்.
‘அவனை அவனே காயப்படுத்திக்குவான்’ என்ற வாசகம் அவளைக் கொய்ய, சற்றும் யோசியாமல் விறுவிறுவென அபார்ட்மெண்டை நோக்கிச் சென்றாள். அங்கோ அவன் இரத்தவெள்ளத்தில் மயங்கி இருந்தான்.