மதி அவனது மன வலிமையோடும் மனைவியின் கவனிப்பிலும் ஓரளவுக்கு மனைவி மற்றும் ஊன்றுகோல் உதவியோடு எழுந்து அடி வைத்து நடக்க ஆரம்பித்து விட்டான்..
எந்த நேரமா இருந்தாலும் அவனிடம் ஒரு சிறு அசைவு தெரிந்தாலே வள்ளி எழுந்து அவனுக்கு தேவையானதை செய்து விடுவாள்..
அப்படி பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டதின் பலன் தான் இன்று அவன் எழுந்து நடமாடும் அளவுக்கு வந்திருக்கிறது..
எலெக்சனுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருந்தது அதற்குள் அவன் குற்றமற்றவன் என நிரூபிக்க வேண்டும்.. அதற்கு என்ன செய்வது என்பது தான் அடுத்து கணவன் மனைவி இருவரின் யோசனையும்..
இடையில் பாண்டி மதிக்கு அழைத்து அவனது நலனை தெரிந்து கொண்டான்..
சும்மா சாதாரணமாக எடுத்தோம் கவுத்தோம் என ராவணனின் முன்பு போய் நின்று சொதப்பாமல் நல்லபடியாக சரியான திட்டம் தீட்டி அவன் வாயால் வாக்குமூலம் எடுக்க வேண்டும்..
இது மதியோ வள்ளியோ இருவராலும் முடியாத ஒன்று..
தலைவர் இதைப்பற்றி அவர்களிடம் பேசி பேசி அவர்களை இன்னும் பிரஷர் ஏத்தாமல் எதிர்க்கட்சித் தலைவரே ஓர் ஆளை வைத்து மதியை பற்றி இராவணன் முன்பு தவறாக பேசவிட்டு அவனை தூண்டி விட்டு அவன் வாயால் அவன் செய்தவற்றை கூறும் படி திட்டம் போட்டு அதை வெற்றிகரமாக முடித்து அந்த ஆதாரத்தை அவர் கைவசம் வைத்திருந்தார்..
ஆதாரம் எடுத்து ஒரு மாத காலம் ஆனதால் இன்னும் ஆதாரம் எடுக்கப்பட்டது பற்றி எதுவும் இராவணனுக்கு தெரியாது..
தேர்தலுக்கு போட்டியிடும் முதல் நாள் இதை கோர்ட்டில் சமர்ப்பித்து அவர்கள் திட்டப்படி மதியை எலெக்ஷனில் நிற்க வைக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டார்..
இந்த விஷயத்தை வள்ளி மற்றும் மதியிடம் நேற்றுதான் கூறினார். அவர்கள் தனியாக ஏதேனும் செய்யப்போய் அது வேறு பிரச்சினையை கொண்டு வரக்கூடாது என நினைத்தார்..
அதனால் அதை கேட்டதும் வள்ளி மற்றும் மதி இருவரும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தார்கள்…
இங்கு மீனாட்சி வீட்டில் மீனாட்சி வார விடுமுறை நாட்களில் தாய் வீட்டிற்கு சென்று காலை போய் பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து விடுவாள்..
பாண்டி தினமும் அழைத்து பேசுவான்.. அவர்கள் என்ன பேசுவார்கள் என்று சற்று நேரத்தில் கேட்டால் அவர்களுக்கே தெரியாது.. ஆனால் காதலாக அன்பாக பேசிக் கொண்டிருப்பார்கள்..
கணவன் மீது காதல் வந்தாலும் அதை படிப்பில் காட்டாமல் படிப்பில் நன்றாகவே கவனம் வைத்து படித்தாள்..
பரீட்சையில் அவள் வழமையான மார்க் எடுத்து இந்த வருடமும் அவள் தான் முதல் மாணவி…
கணவன் போய் இரண்டு மாதமாக சம்பளம் அனுப்பவில்லை.. இரண்டு மாத சம்பளத்தையும் பிடித்து வைப்பார்கள்.. அதனால் இன்னும் இரண்டு நாட்களில் சம்பளம் அனுப்புவதாக கூறியிருந்தான்..
சம்பளம் அனுப்பினால் அந்த பணத்தில் என்ன செய்ய வேண்டும் வீட்டிற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என அனைத்தையும் முன்பே மீனாட்சியிடம் கூறி இருந்தான் பாண்டி..
அவளும் அதன்படியே செய்வதாக கூறியிருந்தாள்..
ஒரு சில நாட்களாக அவளுக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது அவள் அதை உணராமல் இருந்தாள்..
ஒரு நாள் காலேஜில் திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்..
லதா பயந்து போய் மருத்துவமனையில் சேர்க்க அவளை பரிசோதித பெண் மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து கூறினார்..
கணவனின் முதல் ஆசையை அவள் நிறைவேற்றி விட்டாள்..அந்த சந்தோசம் மீனாட்சிக்கு அப்படி ஒரு மகிழ்வை கொடுத்தது..
உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார்கள்..
விஷயத்தை மீனாட்சி அவள் தாய் குடும்பத்திற்கு சொல்லிவிட்டு மாமியார் மற்றும் அவர்களிடமும் கூறினாள்…
வழமையான மற்ற மாமியார்கள் போன்று மருமகள் குழந்தை உண்டாயிருக்கிறாள் என சந்தோசமாக இனியாவது அவளை ஏற்றுக்கொண்டு பார்த்துக் கொள்வார்கள் என முட்டாள்தனமாக மீனாட்சி நினைத்து விட்டாள்..
அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் இந்த இரண்டு மாத காலமாக பொருத்திருந்தவர்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என ஒரு ஆட்டம் போட்டு பிரளயத்தை உண்டு பண்ணி விட்டார்கள்..
லலிதா மூலம் உடனடியாக மீனாட்சியின் தாயை வரவழைத்தார்..
மீனாட்சியின் தாய் கோமதி மற்றும் அன்பு இருவரும் வந்ததும்..
பாண்டியின் அம்மா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்..
பக்கத்து ஊரில் இருந்து ஆட்டோ பிடித்து லலிதா அழைத்ததும் உடனடியாக வந்து விட்டார்கள்..
வரும்போது மகள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு ஸ்வீட் செய்து எடுத்துவந்தார் கோமதி..
அந்த வீட்டு ஹாலில் நடுநாயகமாக கதிரையில் அமர்ந்திருந்தார் பாண்டியின் அம்மா..
கோமதியும் அன்பும் உள்ளே வந்ததும் அவர்களையும் அமர வைத்து பேச்சை ஆரம்பித்தார்..
“ வாங்க சம்மந்தி அம்மா இருங்க.. நான் உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு பார்த்து நல்ல நாள் குறிச்சி நிச்சய தட்டு மாத்தி ஊரை அழைச்சி விருந்து வச்சி கல்யாணம் பண்ணி வச்சோம் பாருங்க.. நீங்க எனக்கு சம்பந்தி ஆகுறதுக்கு..
எனக்கு அதிகமா பேச பிடிக்காது.. பேச வேண்டியதை சுருக்கமாகவே சொல்லிடுறேன்..
உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கிறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. உங்க பொண்ணு வயிற்றில் இருக்கும் குழந்தை உங்களுக்கு வேண்டுமா?.. வேணாமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும்…
உங்க வீட்டுக்கு முதல் பேரகுழந்தை அதை நீங்க பார்க்கணும் கொஞ்சனும் என்று ஆசை இருந்தா நான் சொல்லுறதை நீங்க செஞ்சா மட்டும் போதும்..
நான் சொல்லுறதை நீங்க கேட்க முடியலன்னு சொன்னால் இந்த குழந்தை இருந்த இடம் தெரியாம அழிஞ்சு போயிடும்..
ஒரு பச்ச குழந்தையை அழிச்ச பாவத்தை எனக்கு தேடி தர மாட்டீங்கன்னு நினைக்கிறேன்…
எனக்கு மூன்று பொண்ணுங்க இருக்காங்க.. அவங்க கல்யாணமே அவன் ஒருதன் சம்பாத்தியத்தில் தான் இருக்கு..
வேணாம் வேணாம்ன்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம உங்க பொண்ணு தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னு அடம் பிடித்து கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ்ந்துட்டு தான் அவன் இப்ப வெளிநாட்டுக்கு உழைக்க போயிட்டான்..
இந்த வீட்டை பெரிசா கட்டனும்.. மூன்று பொண்ணுங்களுக்கும் சீர் குடுத்து நல்ல மாப்பிள்ளைகளா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்..
இப்படி அவனுக்கு பல பொறுப்புகள் இருக்கு..
இன்னும் அதுல ஒரு பொறுப்பையும் நிறைவேற்றலை..
அப்படி இருக்கும் பொழுது இன்னொரு பொறுப்பா இந்த குழந்தையும் வந்துவிட்டது என்று தெரிஞ்சா அவன் குழந்தைக்கு அதிகமா பணம் அனுப்பி செலவழிக்க ஆரம்பிச்சா எப்படி கூடிய சீக்கிரத்திலேயே வயசுக்கு வந்த என் பொண்ணுங்களுக்கு நான் நல்ல இடமாக பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்..
இவளோட பாட்டி முதல் கொண்டு இங்க இருக்கிற யாருமே அதாவது என் வீட்டு ஆளுங்க உங்க வீட்டு ஆளுங்க யார் மூலமும் இவ குழந்தை உண்டாகி இருக்கிற விஷயம் பாண்டிக்கு தெரியக்கூடாது..
யாரும் சொல்லக்கூடாது.. நீங்க இல்லாம வேற யார் மூலமாகவும் சொல்லலாம்னு நினைத்தாலும் அழிச்சிடுவேன்..
வேறு யார் மூலமாவும் அவனுக்கு இந்த தகவல் போக கூடாது..
இதுக்கு சம்மதம்னா இந்த பால்ல அடிச்சு சத்தியம் பண்ணுங்க..
உங்க பொண்ணு இந்த வீட்ல மருமகளா பேரக் குழந்தையை சுமந்துகிட்டு இருப்பா..
இல்லன்னா உங்க வீட்ல வாழ வெட்டியா வந்து இருப்பா..
இப்பவே கையோட அழைசிட்டு போங்க..
நீங்க எல்லாரும் நினைக்கலாம் நீயும் பொண்ணுங்களை பெத்தவ தானே ஏன் இந்த பொண்ணோட வாழ்க்கையை இப்படி பாலாக்குறேன்னு..
என் பொண்ணுங்களுக்கு இந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்று தான் இப்ப இவளுக்கு எடுத்து சொல்லுறேன்..
நீங்களும் ஒரு பொண்ணு பெத்தவங்க என்ன மாதிரி உசாரா இருக்க வேணாம்..
பாண்டி வந்து கேட்டால் நீங்களும் வெட்கமே இல்லாம உங்க பொண்ண இந்த சின்ன வயசுல படிக்கிற வயசுல கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா?..
நாலு விஷயத்தை யோசிக்கிற அறிவு வேண்டாம்..
செலவே இல்லாம ஒரு இளிச்சவாய் கிடைச்சிட்டான்னு எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே சம்மதிச்சிட்டீங்களோ?..
இப்ப புத்தகத்தை சுமந்து விட்டு காலேஜ் போக வேண்டிய வயசுல வயித்துல புள்ளைய சுமந்துகிட்டு படிக்கிற பிள்ளைகளுக்கு மத்தியில வெக்கமே இல்லாம வயிற்றை தள்ளிட்டு போய் உங்க பொண்ணு படிக்கப் போறா…
இல்ல புள்ளைய சுமந்துகிட்டு படிக்க போக வெக்கம் என்றால் படிக்காமல் வீட்டுல இருக்கட்டும்..
இவ படிச்சி உத்தியோகம் எடுத்து எங்களுக்கு பேர் வாங்கி தரணும்.. அதனால நாங்க சாப்பிடனும் என்ற கட்டாயம் எல்லாம் எங்களுக்கு இல்லை..
சரி கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் தான் ஆம்பள புள்ள அவசரப்பட்டுட்டான்.. ஒரு பொட்ட பிள்ளைக்கு புத்தி எங்க போச்சு?.. எதிர்காலத்தை பற்றியோ இல்லை இப்ப படிக்கிற விஷயத்தை பற்றியோ யோசிக்க வேண்டாம்…
அவன் தொட கேட்டான். நீ தொட்டுக்கோன்னு விட்டதும் அதன் பலன் பிள்ளை வந்து தங்கிட்டு..
இன்னும் ரெண்டு நாளைல சம்பளப் பணம் அனுப்புறேன்னு சொல்லி இருக்கான்..
சம்பள பணம் அனுப்ப முன்னமே அதுல இருந்து ஒரு பைசா கூட உங்க மகளுக்கு போகக்கூடாது என்று தலையில் எழுதி இருக்கு யாரு என்ன பண்ண முடியும்..
இனிமே எங்க மகன் சம்பாத்தியத்தில ஒரு பைசா கூட உங்க மக எடுத்து செலவழிக்க கூடாது..
போடுற துணிமணியிலிருந்து அவ படிப்பு செலவு அவ சாப்பாட்டு செலவு பிள்ளையோட மருத்துவ செலவு எல்லாமே உங்க செலவு தான்..
போகும் போது அவ கையில கொஞ்சம் பணம் கொடுத்துட்டு போயிருப்பான் அது மட்டும் தான் இனி அவன் வரும் வரைக்கும் அவனோட பணம் என்று அவகிட்ட இருக்கணும்..
தினமும் பணமா குடுப்பிங்கலோ இல்ல சாப்பாடு கொடுப்பீங்கலோ அது உங்க வசதியை பொருத்தது..
பைவ் ஸ்டார் ஹோட்டல் நடத்துறீங்க உங்களுக்கு சாப்பாட்டுக்கா பஞ்சம்?..
இவ என்ன சொல்றது நம்ம என்ன கேக்குறதுன்னு நீங்க ஏதாவது நெனச்சு முடிவெடுத்து பண்ணினீங்கன்னா உங்க பொண்ணு உங்க பேர குழந்தையை இழந்துட்டு உங்க வீட்ட வந்து ஒப்பாரி வைக்கும் அப்ப தெரியும்..
நான் பெத்த அவனையே நான் மதிக்கிறது இல்ல.. அவனே எனக்கு பெரிய விஷயம் இல்லை.. இதுல அவன் பெற போறதை பற்றியா நான் கவலைப்பட போறேன்..
எனக்கு முக்கியம் என் பொண்ணுங்க நல்லா இருக்கணும்.. வாழ போற இடத்துல கண் கலங்காம சந்தோஷமா இருக்கணும்..
நீங்க என்ன மாதிரி முன்கூட்டியே முடிவு செய்யாததால இப்போ உங்க பொண்ணு இங்க இப்படி கஷ்டப்படுறா..
உங்க பொண்ணோட கஷ்டம் என் பொண்ணுங்களுக்கு கிடைக்க கூடாது என்று தான் நான் இவ்வளவு பாடுபடுறேன்..
இதுல என் மேல எந்த தவறும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல..
என் பொண்ணுங்க வாழ்க்கைக்காக என்னவும் பண்ணுவேன்..
நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம் நல்லதா எடுத்துக்கிட்டு பால்ல சத்தியம் பண்ணிட்டு சத்தியத்தை அவன் நாடு திரும்பற வரைக்கும் காப்பாத்தினீங்கன்னு சொன்னா எல்லாருக்குமே நல்லது…
அவன் கடமையை முடிச்சிட்டு நாடு திரும்பி வந்ததும் குழந்தையை பார்த்து என்ன ஏதுன்னு அவன் பொண்டாட்டி கிட்ட விசாரிச்சு அதுக்கப்புறம் உண்மை தெரிஞ்சாலும் எனக்கு அதை பற்றி எந்த கவலையும் இல்லை..
என்ன என்னை கொடுமைக்கார மாமியாரா எல்லாரும் பார்ப்பாங்க..
அப்படி நினைக்கிறவங்க நினைச்சுட்டு போகட்டும்.. அப்படி நினைக்கிறவங்க இந்தா ஒரு லட்சம் உன் பொண்ணோட கல்யாணத்தை நல்லபடியா முடின்னு பணம் தர மாட்டாங்களே…
அதனால யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை..
அவன் வந்து என்கிட்ட கேள்வி கேட்டா அவனுக்கு அப்ப என்ன பதில் சொல்லனுமோ அதை நான் சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்..
சரி ரொம்ப லேட் ஆகுது நான் சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டேன்.. நீங்க ஒவ்வொருவரா வந்து சத்தியம் பண்ணிட்டு கிளம்புங்க.. அப்புறம் இன்னைக்கு மதியான சாப்பாட்டுல இருந்து உங்க பொண்ணுக்கு இனி எல்லாமே உங்களோட செலவு பொறுப்பு தான்… அதற்கான ஏற்பாடு பண்ணிடுங்க… அவன் முதல் மாதம் அனுப்புற சம்பள பணத்துல ஒரு பைசாவும் நீ எடுக்காம அப்படியே பணம் எங்க கைக்கு வரணும்.. அதையும் இப்பவே சொல்லிடுறேன்..
ஏண்டி லதா அவசர குடுக்க… என் வயித்துல தான் நீயும் வந்து பொறந்த. அதனால உன் வாழ்க்கைக்கும் சேர்த்து தான் நான் போராடுறேன் அதை மனசுல வச்சுக்கோ..
அண்ணன்னு அவன் பின்னாடி சுத்தி கடைசில உனக்கு ஒன்னும் பண்ணாம பொண்டாட்டி புள்ளனு சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிடுவான். நீ நடுத்தெருவுல நிக்காத..
உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் நீயும் இனிமே அந்த போனை எடுத்து ஆட்டிகிட்டு அண்ணாட்ட சொல்ல போறேன் அண்ணாட்ட சொல்ல போறேன்னு கிளம்பினா உன் அண்ணா குழந்தை உயிரோடு இருக்காது..
எல்லாருமே ரொம்ப கவனமா நடந்துக்கிட்டீங்கன்னா யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை அவ்வளவு தான் நான் சொல்லுவேன்..” என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்..
நடப்பது நடக்கட்டும் என நினைத்து ஒவ்வொருவரும் வந்து சொம்பில் நிறைந்திருந்த பால் மீது சத்தியம் பண்ணிவிட்டு சென்றார்கள்..
அவன் வந்து அவனுக்கு குழந்தை இருப்பதை தெரிந்து கொள்ளும் வரை யாரும் அவனுக்கு குழந்தை இருப்பதை பற்றி சொல்ல போவதில்லை…
மீனாட்சி இன்னும் பல துன்பங்களை அனுபவிக்கப் போகிறாள்..
அன்பு மதியம் அவளுக்கு உணவை வாங்கி கொடுத்துவிட்டு கையில் பணமும் கொடுத்துவிட்டு பத்திரமாக இருக்கும் படி கூறிவிட்டு சென்றான்..
இவ்வளவு கஷ்டப்படும் திருமண வாழ்கை அவளுக்கு தேவை தானா?..
இப்பொழுதாவது இந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கொண்டால் அவள் எதிர்காலத்தில் நன்றாக இருப்பாளோ என்னமோ?..
அவளது இந்த முட்டாள் தனமான சத்தியம் பண்ணி கொடுத்த முடிவினால் பல துன்பங்களை அனுபவிக்கப் போகிறாள்…