“ஹலோ கிருபா… கிருபா லைன்ல இருக்கியா?” ஷாந்தனு பதற்றத்துடன் பேச, மீண்டும் அவளுக்கு அழைத்தான். அவ்வழைப்பு எடுக்கப்படவில்லை என்றதும் வம்சிக்கு அழைக்க, அவனது அழைப்பும் எடுக்கப்படவில்லை.
ஏதோ தவறாகப் பட்டதில், வேகமாக சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியில் சென்றவன், வண்டியை எடுக்க முற்பட, அவனது முகத்தில் தோன்றிய பதற்றத்தைக் கண்டு தனுஜாவும் அவன் பின்னே சென்றாள்.
அவன் நேரத்திற்கு அவனது வண்டியும் சதி செய்தது. டயரில் ஆணி கிழித்து பஞ்சராகி இருக்க, “ச்சை” என எரிச்சலுற்றவன், ஆட்டோ பிடிப்பதற்காக வெளியில் செல்ல, “என்ன ஆச்சு?” என மெல்லிய குரலில் கேட்டபடி அவன் பின் நின்றாள் தனுஜா.
அவளைத் திரும்பிப் பாராமல், “அர்ஜெண்டா வீட்டுக்குப் போகணும்” என்றவனின் குரலில் தெரிந்த அவசரத்தை உணர்ந்தவள், “என் வண்டில போகலாம்.” என்றதும் அவனும் உடனடியாக தலையசைத்தான்.
“நீ தள்ளு நான் ஓட்டுறேன்.” என்றவன், வண்டியை வாங்கி தீ வேகத்தில் ஓட்டி வீட்டிற்குச் செல்ல, அங்கு தனது நண்பன் கையில் இரத்தம் வழிய பேச்சு மூச்சற்று இருந்ததைக் கண்டு உறைந்து விட்டான்.
அவனோடு வந்த தனுஜாவும் வம்சியின் நிலை கண்டு அதிர்ந்து நிற்க, “மச்சி… டேய் என்னடா ஆச்சு…” என வம்சியை மடியில் போட்டு கதறினான் ஷாந்தனு.
“ஐயோ மச்சி… என்னை பாருடா.” எனக் கண்ணீரில் கரைந்தவன், அதன் பிறகே அவனது கை நரம்பு அறுக்கப்பட்டிருப்பதைக் கவனித்து தலையில் அடித்துக் கொண்டான்.
“ஐயோ டேய் ஏண்டா இப்படி செஞ்ச… வம்சி என்னைப் பாருடா” எனக் குரல் தேய அழுது தீர்த்தான்.
வம்சி தற்கொலைக்கு முயன்றிருப்பான் என்றெல்லாம் சிறிதும் நம்ப இயலவில்லை தனுஜாவிற்கு. ஷாந்தனுவின் அழுகுரலில் நிகழ்வு உணர்ந்தவள், விரைவாக செயல்பட்டு ஆம்புலன்ஸிற்கு அழைத்தாள்.
வம்சியின் பல்ஸை சோதித்து, “சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்.” என்று பரபரக்க, அதன் பிறகே அப்போதைக்கு கண்ணீருக்குத் தடை போட்டவன், ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல, வம்சி கிருஷ்ணா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
அத்துடன் மீண்டும் அங்கு போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த ஷாந்தனு, தேம்பி அழுத் தொடங்க, தனுஜாவிற்கும் நெஞ்சம் வலித்து அழுகை வந்தது. என்னவாகினும் வம்சி அவளுக்கு முதல் காதல் அல்லவா!
கட்டுப்பாடின்றி சிந்தனைகளும் இரு நாட்களுக்கு முன் நிகழ்ந்ததை அசைபோட்டது.
வம்சி கிருஷ்ணா வெளிநாட்டுக்குச் செல்லப் போவதை அறிந்த தனுஜா, ஸ்டாஃப் ரூம் வாசலில் அவனைப் பிடித்து விட்டாள்.
“என்ன சார் இது… திடுதிப்புன்னு கிளம்புறீங்க. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட போறீங்கன்னு நினைச்சா, ஃபேர்வெல் சாப்பாடு தான் போடுவீங்க போலயே.” என வருந்திட,
அதற்கு பதில் கூறாமல் புன்னகைத்தவன், “நானே உங்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன்” என்றவாறு, அவள் கொடுத்த கிரீட்டிங் கார்டை அவளிடமே நீட்டினான்.
தனுஜா புரியாமல் பார்க்க, “இதை வச்சுக்குறதுக்கு எனக்கு உரிமை இல்லை தனுஜா. ஏதோ ஒரு அசட்டுத்தனத்துல நீ உன் லவ்வை சொல்றதை கூட ரியலைஸ் பண்ணாம, உன்னை இன்சல்ட் பண்ணிட்டேனோன்னு ஒரு உறுத்தலா இருக்கு. அப்போ எனக்குப் புரியல. பாஷிணி நீ ஹர்ட் ஆருப்பன்னு சொன்னதும் தான் புரிஞ்சுது. உன்னைக் கஷ்டப்படுத்தி இருந்தா சாரி தனுஜா. நிஜமாவே நீ எனக்கு அன்பா குடுக்குற பரிசா தான் இது தோணுச்சே தவிர, காதலா நான் பார்க்கல.” என்றவனை எப்போதும் போல வியப்புடனே பார்த்தாள்.
பின் மெல்ல முறுவலித்து, “நிஜமாவே இப்ப தான் எனக்கு ஹர்ட் ஆகுது சார். இந்த கிரீட்டிங் கார்டை ப்ரொபோசலா நினைக்காம, ஒரு ப்ரெண்டா குடுத்த கிப்ட்ன்னு என் ஞாபகமா வச்சுக்கோங்களேன். வெளிநாடுலாம் போனா கண்டிப்பா என்னை மறந்துடுவீங்க. என்னைக்காவது ஒரு நாள் இதை எடுத்து பார்க்கும் போது, நம்ம கூட ஒரு பொண்ணு வேலை பார்த்துச்சேன்ற நினைப்பாவது வரும்ல…” என்றவள்,
“இல்ல… இது உங்ககிட்ட இருக்குறது உங்களுக்கும் கிருபாவுக்கும் தப்பா தெரிஞ்சா குடுங்க, நான் திரும்பி வாங்கிக்கிறேன்” என்று வலியுடன் பார்த்தாள்.
சட்டென கிரீட்டிங் கார்டை பின்னால் நகற்றியவன், “உன்னை என்னைக்கும் நான் தப்பா நினைச்சது இல்ல தனுஜா. இது என்ன பேச்சு?” எனக் கடிந்து கொண்டவன், மீண்டும் அந்த கார்டை பேகில் வைத்துக்கொண்டான்.
அதில் அவளது மனமும் இலகுவாக, “ஒரு ப்ரெண்டா உங்கிட்ட ஒன்னு சொல்லலாம்ல” என வம்சி கேட்டதில், “சொல்லுங்க சார்” என்றாள் வேகமாக.
“உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருந்தா, என் பிரெண்டையும் உன் சஜஷன்ல வச்சுக்கோயேன். நல்லா படிச்சு, சிக்ஸ் டிஜிட்ல சம்பாதிக்கிறான். அவன் சொந்த சம்பாத்தியத்துல சென்னைல ஒரு அபார்ட்மெண்டும் வாங்கி இருக்கான். அவனோட பேரண்ட்ஸ் திண்டுக்கல்ல இருக்காங்க. விளையாட்டுக்காக டீஸ் பண்ணிப் பேசுவான். மத்தபடி பக்கா ஜென்டில்மேன்… உனக்கு அவன்மேல் அபிப்ராயம் இருந்தா சொல்லு, உன் வீட்ல பேச சொல்றேன். அவன் வீட்டாளுங்களும் ரொம்ப நல்ல டைப்.
அவனுக்கு உன்னை விடவும், உனக்கு அவனை விடவும் கரெக்ட் மேட்ச் இருக்கும்ன்னு எனக்குத் தோணல. கம்பல்ஷன் இல்ல. பட் நடந்தா முதல்ல சந்தோஷப்படுற ஆளு நானா தான் இருப்பேன். யோசிச்சு சொல்லு தனுஜா.” எனக் கோரிக்கை விடுத்து விட்டு கிளம்பியவனை பெருமூச்சுடன் பார்த்தாள்.
ஷாந்தனுவின் சேட்டைப் பேச்சுக்கள் அவளை எரிச்சலூட்டுவது உண்மை தான். அவன் மீது ஈர்ப்பு வரவில்லை என்றாலும், இப்போதும் அவன் பிடித்த கரங்கள் சிலிர்க்கிறது. அவள் கண்ணைப் பார்த்துக் காதலைக் கூறிய கணம் மனதை ஏதோ செய்கிறது. இதற்கு என்ன பெயரென்று தெரியவில்லை என்றாலும் வம்சியிடம் காதலை சொல்லி விட்டு அவனது நண்பனை திருமணம் செய்ய எத்தனிப்பது உவர்ப்பாக இல்லை.
—–
கண்ணில் நீர் தேங்க அபார்ட்மெண்டிற்கு சென்ற கிருபாஷிணியை வாட்ச்மேன் தடுத்தார்.
“மேடம்… வம்சி சார் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டாரு. ஆஸ்பத்திரிக்கு தான் தூக்கிட்டுப் போயிருக்காங்க.” என்றதும், ஒரு நொடி சிலையாய் மாறியவளுக்கு உடலிலுள்ள இரத்தமெல்லாம் வற்றிப்போனது போல உணர்வுகள் மரத்துப் போனது.
“எந்த ஹாஸ்பிடல்” விரக்தியுடன் கேட்டவளுக்கு கண்ணீர் கூட இறுகிப் போனது.
“லைஃப் லைன் ஹாஸ்பிடல்ன்னு நினைக்கிறேன் மேடம். ஷாந்தனு சார் அப்படி தான் ட்ரைவர்கிட்ட சொன்னாரு…” என்றதும் மருத்துவமனை நோக்கிப் பறந்தாள்.
ஐசியூ வாசலில் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஷாந்தனுவை உயிர்ப்பின்றிப் பார்த்தவள் ஐசியூ கண்ணாடி வழியே வம்சியைப் பார்க்க முயல, அங்கோ ஸ்க்ரீன் கொண்டு மூடப்பட்டிருந்தது.
அந்நேரம் மருத்துவர் சேகர் வந்தவர், “போலீஸ்ல கேஸ் பைல் பண்ணிட்டீங்களா? சூசைட் கேஸ்… பிளட் நிறைய லாஸ் ஆகியிருக்கு. பல்ஸும் நார்மலா இல்ல. லெட்ஸ் ஸ்ஸீ” என அவர்களின் மனதில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட, தளர்ந்து தரையில் அமர்ந்தாள் கிருபாஷிணி.
மெளனமாக வெளியேறிய கண்ணீர், விசும்பலாக மாற, தனுஜா தான் அவளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.
ஷாந்தனுவோ “இது சூசைட் இல்ல டாக்டர்… அது… அவன்… அவன் கண்ட்ரோலை இழந்துட்டா இப்படி தான் பண்ணிப்பான்” என நிலையை விளக்க,
“இதை நீங்க முன்னாடியே சொல்றது இல்லையா. இப்படிப்பட்ட பேஷண்ட்டை எந்த மெடிகேஷனும் இல்லாம வீட்ல வச்சிருக்கீங்க. மத்த யாருக்கும் எதுவும் ஆகி இருந்தா என்ன ஆகியிருக்கும்…” என்று சேகர் கண்டித்தார்.
“இல்ல டாக்டர்… அவனுக்கு எல்லாம் சரி ஆகிடுச்சு. இப்போ திடீர்ன்னு ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியல. நார்மல் லைஃபை தான் லீட் பண்ணிட்டு இருந்தான். டாக்டர் மெடிகேஷன் கூட சஜஸ்ட் பண்ணல.” என அவன் விளக்கிட,
“என்ன மிஸ்டர் புரியாம பேசுறீங்க. இந்த மாதிரி மெண்டல் இஸ்யூ உள்ளவங்க எப்ப, என்ன மாதிரி நடந்துப்பாங்கன்னு தெரியாது. ஹிஸ்டீரியாவுக்கு பெர்மனன்ட் கியூர் இருக்குன்னு உங்களுக்கு யார் சொன்னது. எப்ப வேணாலும் அவங்க வெறிப்பிடிச்ச மாதிரி நடக்கலாம்.” என்று எரிச்சலாக, வெடுக்கென எழுந்து நின்றாள் கிருபாஷிணி.
“இப்ப என்ன பண்ண சொல்றீங்க?” கொழுந்து விட்டு எரிந்த ஆத்திரத்துடன் அவள் கேட்க,
“இந்த மாதிரி பேஷண்ட்டை சுத்தி ஆட்கள் எப்பவும் இருக்கணும். பெட்டர் வெளில உலாவ விடாம வீட்லயே வச்சு இருந்தா மத்தவங்களுக்கு ஆபத்து இல்லாம இருக்கும். பார்க்க நார்மலா இருந்தா, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்லிட முடியாது.” எனப் பேசிக்கொண்டே போக, அவரது சட்டையைப் பிடித்தாள்.
“நீ டாக்டர் தான… டாக்டர் மாதிரி பேசு. அதுக்காக நல்லா இருக்குறவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரில போட்டு அடைக்க சொல்றியா. என் வசிக்கு இதுலாம் ஒரு பிரச்சனையே இல்ல. மரியாதையா போய் ஹெல்த் இஸ்யூக்கு மட்டும் ட்ரீட்மெண்ட் பண்ணு. அவன் மெண்டல் இஸ்யூவுக்கு நீ ஒரு மயிரும் புடுங்க வேணாம்.” எனப் பேசியதில் கடுப்பான சேகர்,
“மரியாதையா பேசு. இந்த பேஷண்ட்டை நான் உள்ள அலோ பண்ணிருக்கவே கூடாது. போலீஸ் கேசுன்னு போட்டு வச்சுருப்பேன். போனா போகுதுன்னு ட்ரீட்மெண்ட் பார்த்தா ஓவரா பேசுற.” என்று எகிறினார்.
“ஓஹோ போட்டு வச்சுருந்து அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா நீ நல்லா நடமாடி இருப்பன்னு நம்பிட்டு இருக்கியா. நானே உன்னை நார் நாரா கிழிச்சு இருப்பேன். போலீஸ் தான வேணும்… இப்ப யார் இங்க வரணும்… கமிஷனர, டி. எஸ். பி, எஸ். பி, ஐஜி… யார் வரணும்ன்னு சொல்லு. இல்ல மொத்தமா அத்தனை பேரையும் இங்க வரவைக்கட்டுமா?” என்றவள் கையில் போன் இல்லாமல், “அண்ணா போன்!” என்று கையை நீட்ட அவளது கோபத்தை ஏற்கனவே ஒரு முறை அறிந்ததில் ‘செத்தான் சேகரு’ என எண்ணியபடி போனை கொடுத்தான்.
உடனடியாக வெங்கடேஷிற்கு போன் செய்தவள், விவரம் கூற, “நான் பாத்துக்குறேன்மா” என்று விட்டு, துரிதமாக செயல்பட, அடுத்த அரை மணி நேரத்தில் ஐஜி சந்திரன் அங்கு வந்து சேர்ந்தார்.
“என்னமா என்ன பிரச்சனை?” எனக் கேட்டவர், சோமேஸ்வரின் நெருங்கிய நண்பர்.
“இந்த டாக்டர் ட்ரீட்மெண்ட் பண்ணாம போட்டு வச்சுருப்பாராம் அங்கிள்… மெண்டல் இஸ்க்யூ உள்ள பேஷண்ட்டு ஹெல்த் இஸ்யூ ஆனா கூட பார்க்க மாட்டாராமே. இவர் தியரி படி எல்லாரையும் மெண்டல் ஹாஸ்பிடல்ல அடைச்சு வைக்கணுமாம். எனக்கு என்னமோ இந்த ஆளு ஒரிஜினல் டாக்டரானே சந்தேகமா இருக்கு. எதுக்கும் அவர் சர்டிபிகேட்ஸ் எல்லாம் செக் பண்ணுங்க” என்று எகத்தாளத்துடன் பேசிட, சேகருக்கு வியர்த்துக் கொட்டியது.
ஏற்கனவே அவள் மிரட்டியதில் லேசாய் பயந்தவர், உண்மையில் ஐஜி நேரில் வந்ததில் வெளிறி விட்டார்.
“சார் சார் அதெல்லாம் இல்ல சார். நான் ட்ரீட்மெண்ட் பண்ணி, எப்படியாவது பேஷண்ட்டை காப்பாத்திடுறேன்.” என்று ஐசியூவிற்குள் ஓடி விட, சந்திரன் அவனை அசட்டையுடன் பார்த்தார்.
“நீ ஏதோ சின்ன பொண்ணுன்னு நினைச்சு, வாயை நீட்டி இருப்பான். நீ ஒரு நிஜ சொர்ணாக்கான்னு தெரியாது போலடாம்மா.” என வாரியதில், வம்சி அழைக்கும் “ம்மா…” என்ற வார்த்தை அவளுள் தீயாய் ஊடுருவி தீக்காயத்தை ஏற்படுத்த கண்ணில் நீர் கசிந்தது.
அவளை விசித்திரமாகப் பார்த்த சந்திரன், “அரசல் புரசலா நீ ஒரு பையன் கூட சுத்துறது கேள்விப்பட்டேன். இது அந்த பையனா?” எனக் கேட்க, அவள் கண்ணில் நீர் தேங்க அவரைப் பார்த்தாள்.
“உனக்கு அட்வைஸ் பண்ண அவசியம் இல்ல. மெச்சூர்ட்டான பொண்ணு. எந்த முடிவா இருந்தாலும் ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சு எட் கிருபா. என்ன பிரச்சனைன்னாலும் உடனே என்னை காண்டாக்ட் பண்ணு.” என்றவர் கிளம்பி விட, தனுஜா தான் நடப்பதை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
வம்சிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்து அதிர்ந்தவளுக்கு, கிருபாஷிணியின் கோபமும் வம்சியின் மீது கொண்ட நேசமும் வியப்பைக் கொடுத்தது.
ஷாந்தனு தான், கிருபாஷிணியைப் பாராமல் பார்வையை தாழ்த்திக் கொண்டான்.
அவனைக் குற்றம் சொல்லும் பாவனையுடன் பார்த்தவள், “நீ யாருன்னு கூட எனக்குத் தெரியாது. வசியோட ப்ரெண்டுறதை தவிர… ஆனாலும் உன்னை நான் வாய் நிறைய அண்ணன்னு தான கூப்பிட்டேன். என்கிட்ட இதை நீ சொல்லிருக்கணுமா இல்லையா?” என ஆதங்கத்துடன் வினவியவள் தேம்பினாள்.
“ப்ளீஸ் கிருபா… என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காத. என்னை எப்படி சொல்ல சொல்ற கிருபா…” என கேசத்தை அழுந்தக் கோதியவன்,
“எனக்கு அவனை அஞ்சாங்கிளாஸ் படிக்கைல இருந்து தெரியும். அவன் முகத்துல இதுவரை மருந்துக்கு கூட சந்தோஷத்தை பார்த்ததே இல்லை கிருபா. அவன் மனநிலை புரிஞ்சு, அவனை அரவணைக்கிற குடும்பமும் அவனுக்கு கிடைக்கல. உன்னைப் பார்த்ததுக்கு அப்பறம் அவன் ஹேப்பியா இருந்தா. என்னைக்கா இருந்தாலும் உன்னை விட்டுப் பிரியிறதுல உறுதியா இருந்தான். வாழ்க்கைல கொஞ்ச மாசமாவது அவன் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்ன்னு தான், அவன் செஞ்ச இந்த முட்டாள்தனத்தை தடுக்காம விட்டேன்.
ஆமா செல்ஃபிஷா தான் இருந்துட்டேன். என் ப்ரெண்டுக்காக… அவன் மனசு விட்டு சிரிக்கிற ஒரு சிரிப்புக்காக.” எனக் கொந்தளித்தவன், கண்ணீரை சட்டையில் துடைத்துக் கொண்டான்.
“அவனைப் பத்தி தெரிஞ்சு, நீயும் அவனை இளக்காரமா பார்த்து, இதோ இந்த டாக்டர் மாதிரி ஏதாவது பேசி, அவனை கஷ்டப்படுத்திட்டா அவனுக்கு இருக்குற ஒரு ஹோப் கூட போய்டுமே. கடைசி வரை அவனைப் பத்தி உனக்குத் தெரியவே கூடாதுன்னு இருந்தான். உன்னை விட்டுட்டு வெளிநாடு போனா கூட, உன்னைப் பத்தின சந்தோஷமான நிகழ்வுகள் மட்டுமே அவன் ஞாபகத்துல இருக்கணும்னு நினைச்சு தான் இதை மறைச்சானே தவிர உன்னை ஏமாத்தணும்ன்னு இல்ல கிருபா.
அப்படியும் நான் பல தடவை சொன்னேன்… உங்கிட்ட உண்மையை சொல்ல சொல்லி… அதுவும் இல்லாம, அவனுக்கு தான் எல்லாம் சரி ஆகிடுச்சே. அப்பறமும் ஏன் அவன் வாழ்க்கையை வீணாக்கணும்ன்னு எவ்ளோவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் கல்யாண வாழ்க்கைக்குள்ள போக விரும்பல. இப்ப ஏன் திடீர்னு இப்படி ஆச்சுன்னும் எனக்குத் தெரியல கிருபா… உன்னை விட்டுப் போற டிப்ரெஷன்ல மறுபடியும் அவனுக்கு பிரச்சனை ஆகிடுச்சான்னு தெரியல” என்றான் பாவமாக.
உதடு கடித்து கேவலை அடக்கிய கிருபாஷிணிக்கு, வம்சியின் நேசமும், தன்னை காதலித்தும் கூட அந்த காதலை தூக்கி எறிந்து விட்டு தனக்காக தன்னை விட்டுப் பிரிய எடுத்த அவன் முடிவும் மனதைப் புண்ணாக்கியது.
“நல்லா இருந்தவருக்கு நானே நோயா வந்துட்டேனா…” விழி நிமிர்த்தி ஆதங்கத்துடனும் அழுகையுடனும் கேட்டவளைக் கண்டு ஷாந்தனுவின் விழிகளும் கலங்கிப் போனது.
“ச்சே… அதெல்லாம் இல்ல கிருபா. அவன் குடும்பம் அவனை படுத்துற பாட்டுக்கு அவனுக்கு இந்த வியாதி திரும்ப வராம இருந்தா தான் அதிசயம். நீ வந்ததுனால தான் இது லேட்டா நடந்து இருக்கு. இல்லன்னா எப்பவோ அவனுக்கு கிறுக்கு பிடிச்சு இருக்கும்” என்றான் வெறுப்புடன்.
தனுஜா கிருபாஷிணியின் கையைப் பற்றி, “எனக்கும் இவரு சொல்றது தான் சரின்னு தோணுது. சார் கொஞ்ச நாளாவே சரி இல்ல கிருபா. எப்பவும் சின்னதா ஒரு ஸ்மைலோட தான் இருப்பாரு. ஆனா. கொஞ்ச நாளா, யார்கிட்டயும் அவ்ளோவா பேசுறது இல்ல. எப்பப் பார்த்தாலும் எங்கயாவது வெறிச்சுப் பார்த்துட்டு உட்காந்து இருப்பாரு. உன்னைப் பார்த்தா மட்டும் தான், அவர் முகத்தில உயிர்ப்பே வரும். அதை நானே நிறைய தடவை கவனிச்சு இருக்கேன்.” என்றிட,
அப்படி என்ன அவனுக்கு கவலையா இருக்கும் என்ற யோசனை தான் மற்ற இருவருக்கும்.
சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் சேகர், “இப்ப பேஷண்ட் அவுட் ஆஃப் டேஞ்சர். கொஞ்ச நேரம் கழிச்சு பாருங்க.” என்றதுமே மூவருக்கும் நிம்மதி மூச்சு வந்தது.
கிருபாஷிணி, “எப்படி… சின்ன வயசுல இருந்தே இருக்குன்னா… இப்ப வரை ஏன் சரி பண்ணல.” என ஷாந்தனுவிடம் கேட்டாள்.
அவனோ முகம் இறுக, “எப்படி கிருபா சரி ஆகும். அவன் தாத்தாவால தான் அவனுக்கு இந்த பிரச்சனையே வந்துச்சு. அது புருஞ்சும் கூட அவனோட பேரண்ட்ஸ் அவனை ஒதுக்கி தான் வச்சாங்க. வீட்டுக்குள்ளேயே ஜெயில் கைதி மாதிரி வாழ்ந்துட்டு இருக்கான். அப்படிப்பட்ட குடும்பத்தோட இருக்குறது ஒண்ணும் உனக்கு தலையெழுத்து இல்லன்னு, பலதடவை சொல்லிட்டேன். ஆனா அதுக்கு அவனும் ஒன்னும் பண்ண முடியாது. அவன் வீட்டுக்கு வரலைன்னாலும் அதுக்கும் பிரச்சனை பண்ணுவாங்க.” என சலித்திட,