வம்சி கிருஷ்ணாவின் தாய்வழி தாத்தா நரசிம்மன், ஜாதகத்தில் அதிக அளவில் நாட்டம் கொண்டிருப்பவர்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் நேரம் காலம் பார்ப்பவர். சகுணம் பார்த்து வாழ்பவர். அவரது மனைவி கஸ்தூரி. அவர்களது சொந்த ஊர் திருச்சியை அடுத்த காட்டூர் எனும் சிறு கிராமம்.
தனது ஒற்றை மகளான உஷாதேவிக்கு திருமணம் முடித்தபிறகு, “பேரனோ பேத்தியோ பெத்து எனக்கு குடுத்துடு மா… நாங்க வளர்த்துக்குறோம்.” என்ற நரசிம்மன் மகளை சென்னைக்கு அனுப்பவே பரிதவித்தார்.
திருமணமான அடுத்த மாதமே கருத்தரித்திருந்தார் உஷாதேவி. குடும்பமே மகிழ்வில் திக்குமுக்காடியது.
உஷாதேவிக்கு முதலில் மகள் தான் பிறப்பாள் என ஏதோ ஒரு ஜோசியர் கூறி இருக்க, பெண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பிறந்தது ஆண் பிள்ளையாகிப் போக, சிறு ஏமாற்றம் இருந்தாலும் நரசிம்மன் பேரனைத் தூக்கிக் கொஞ்சவே செய்தார்.
ஆனால், அவன் பிறந்த மறுநாளே, உஷாதேவிக்கு உடல்நிலை மோசமாகியது. இரத்தப்போக்கு அதிகமாக இருக்க, இறப்பின் வாயில் வரை சென்று உயிர்பிழைத்தார்.
பேரன் பிறந்ததுமே தனது மகளின் உயிரை காவு வாங்கும் அளவு வைத்து விட்டானே என்ற எரிச்சல் சற்றே எழுந்தாலும் அதனை அப்போதைக்கு வெளிக்காட்டவில்லை.
அதன்பிறகும் உஷாதேவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாது போக, நரசிம்மனின் தொழிலும் மெல்ல மெல்ல சரிந்தது.
அதில் வம்சியின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்டார் நரசிம்மன். அந்த ஜோசியரும் வம்சியின் வாழ்க்கையில் குழி பறிக்கத் தொடங்கினார்.
“இந்த ஜாதகம் பிறந்த தேதி, நேரமெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தா, இந்தப் பையனோட வீட்டுக்கு எப்பவுமே உபத்திரவமா தான் இருப்பான்.
இவனோட ஆறு வயசுல இவன் பாட்டிக்கு ஆபத்து. பத்து வயசுக்கு மேல இவனோட அம்மாவுக்கும் உடம்பு சரி இல்லாம போகும். இவனால அவன் தம்பி தங்கச்சிக்கும் பிரச்சனை தான். ரொம்ப துரதிர்ஷ்டமான ஜாதகம் ஐயா.” என வெகுவாய் வருந்திப் பேச, நிலைகுலைந்து போனார் நரசிம்மன்.
ஆனால் அவர் சொன்னது போன்றே, அவனுக்கு ஐந்து வயது முடிந்த நிலையில் கஸ்தூரி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட,
“இவன் பிறந்து எல்லாமே போச்சு, மறுபடியும் என் பேரனும் பேத்தியும் வந்ததும் தான், என் தொழிலே பழைய நிலைக்கு வந்துச்சு” என்று நரசிம்மன் அவனை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார். “குடும்பத்தைக் குலைக்கவே பிறந்த தலைப்பிள்ளை.” என்று அவனைப் பார்க்கும் நேரமெல்லாம் திட்டுவார்.
அது கூட புரியாத வயதில்லையே அவனுக்கு! முதலில் தாத்தா பாட்டி வந்தால் ஆர்வம் காட்டியவன், பிறகு மெல்ல மெல்ல அந்த ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டான். நரசிம்மனைப் பார்த்தாலே, அவனுக்குள் பயம் அப்பி விடும்.
நரசிம்மனுக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் கூட வம்சி பிறந்தபிறகு வேலையிலும் உடல்நிலையிலும் சரிந்ததொரு எண்ணம்.
உஷாதேவிக்கு, அடுத்த அடுத்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிடவே பொழுது ஓடிவிட, மூத்த மகனின் மென்மனதினையும் அதில் ஏற்படும் சிறு சிறு கீறல்களையும் ஆராய நேரமில்லை. ஆண்பிள்ளை தானே அதுவும் பெரியவன். அவனே வளர்ந்து விடுவான். மூத்தவன் பொறுப்பாகத் தானே இருக்க வேண்டும் என்ற அசட்டு எண்ணம் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயாருக்கு தலை தூக்க, சிறு வயது முதலே அவனே பள்ளிக்கூடம் கிளம்பிக் கொள்வதும், உடல்நிலை சரி இல்லாது போனாலும் அதனை சொல்லாமல் தானே சரி செய்து கொள்வதுமாக தனித்தே வாழ்ந்திருந்தான்.
இதற்கிடையில் சரியாக வம்சிக்கு பன்னிரெண்டு வயது முடியும் போது உஷாதேவிக்கு கர்பப்பையில் பிரச்சனை வர, அதனை நீக்குவதற்கு மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.
“இந்த ராசிகெட்டவனை கஸ்தூரி இறந்தப்பவே எங்கயாவது கொண்டு போய் விட சொன்னேன். கேட்டீங்களா மாப்பிள்ளை. இப்ப பாருங்க என் பொண்ணும் எவ்ளோ பெரிய ஆபத்துல இருக்கான்னு…” எனக் குமுறிட,
“எங்க போய் விடுறது மாமா. இப்ப வேற சைல்டு லைன் அது இதுன்னு நிறைய இருக்கு. இருக்குற பிரச்சனை போதாதா… சனியன் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்ன்னு பார்த்தா, நம்ம தலையை உருட்டுது. வந்து பிறந்துருக்குற நேரத்தைப் பாரு.” என அருவருப்புடன் முகத்தைச் சுளிக்க, ஏற்கனவே உஷாதேவி மருத்துவமனையில் இருந்ததில் பயந்து போனவன் தந்தையின் வார்த்தையில் அழத் தொடங்கி விட்டான்.
அண்ணாமலையோ, “இப்ப வேற ஓவர் சேட்டையாகிடுச்சு இவனுக்கு. ஸ்கூல்ல மத்த பசங்களோட சண்டை போடுறதா வேற புகார் வருது… நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் மாமா…” என நரசிம்மன் கையைப் பிடிக்க, “என்ன மாப்பிளை சொல்லுங்க” என்றார்.
“இவனை கொஞ்ச நாள் நீங்க கூட வச்சுருங்க. இங்க துர்காவுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடியட்டும். உங்ககிட்ட இருந்தா இவன் உருப்படியா வளரவாவது செய்வான். இருக்குற பிரச்சனைல இவனைக் கண்டிச்சுக் கூட வளர்க்க முடியல. இப்ப முழுப் பரீட்சை லீவு தான. ஸ்கூல் ஆரம்பிக்கும் போது கூட்டிட்டு வாங்க” என்று கோரிக்கை விடுக்க, முதலில் பிடித்தமின்மையை வெளிப்படையாகக் காட்டியவர், பின் இவன் இருப்பதால் மகளுக்கு ஏதும் ஆபத்து நேரக்கூடாது என்பதற்காக ஊருக்கு அழைத்துச் சென்றார்.
முன் செய்ததை எல்லாம் விட அதுதான் பெருங்குற்றம்! நரசிம்மனுடன் செல்ல மாட்டேன் என அடம்பிடித்த வம்சியை அடித்து மிரட்டி அனுப்பி வைத்தார் அண்ணாமலை.
ஏற்கனவே தாத்தாவின் மீது பயத்தில் இருந்தவன், அவர் தொட்டதெற்கெல்லாம் திட்டிக்கொண்டே இருந்ததில் இரவெல்லாம் அழுது கரைவான்.
“அம்மாகிட்ட போறேன் தாத்தா” என அழுபவனை, “ஏன் அவளும் சாகணுமா. இங்கயே இரு.” என்று எரிச்சலாக பதில் அளிப்பதில் இன்னும் மருகிப் போவான்.
அக்கம் பக்கத்திலிருக்கும் சிறுவர்களுடன் விளையாடுபவன், சிறு தவறு செய்தாலும் தண்டனை என்னவோ கொடூரமாக இருக்கும்.
பிரம்பால் அடி வெளுத்து விடுவார். கண்டிப்புடன் வளர்க்கிறேன் பேர்வழியென பிஞ்சு மனதில் பலநூறு கீறல்களை உருவாக்கி, அதில் பயமென்னும் அமிலத்தை ஊற்றிப் பொசுக்கினார்.
ஒருமுறை, வீட்டில் இருக்கும் பொருள் ஒன்றை உடைத்ததற்கு, இரவு முழுதும் வெளிச்சம் இல்லாத ஸ்டோர் ரூமில் போட்டு பூட்டி வைத்து விட்டார்.
“தாத்தா தெரியாம செஞ்சுட்டேன் தாத்தா. இனிமே எதையும் உடைக்க மாட்டேன் தாத்தா…” என்ற சிறுவனின் கதறல் எல்லாம் அவர் காதில் விழவே இல்லை. இப்படி கடுமையாய் தண்டித்தால் தான் தவறு செய்யமாட்டான் என்று ஆணித்தரமாக நம்பினார் அப்பெரியவர்.
அவன் மீது ஊர்ந்த பல்லியை எண்ணி இன்னும் கூட அவனுக்கு அருவருப்பாய் இருக்கும்.
தொடையில் சூடு வைப்பது, பெல்ட்டால் விளாசுவது என அவன் செய்யாத தவறுக்கும், பேசி சரி செய்யும் சிறு சேட்டைகளுக்கும் அவர் கொடுத்த கடுமையான தண்டனை அவனை வெகுவாய் பாதித்தது.
இது போதாதென்று, அவனது ஜாதகத்தில் இருக்கும் குறைகளைக் களைய பரிகாரம் செய்கிறேன் பேர்வழியென அவனை கோவில் கோவிலாக இழுத்துச் சென்றார்.
நாள் முழுக்க உண்ணா விரதம், இரவு நேரம் முழுதும் உறங்காமல் பூஜை செய்வது, அதை மீறி உறங்கினால் முதுகிலேயே சுள்ளென அடிப்பது, என அவனை வருத்திக் கொள்ளும் பரிகாரம் பலவற்றை செய்தார்.
பல நாட்கள், அடுத்து என்ன தண்டனை வருமென்ற அச்சத்திலேயே கழிய, சில நாட்கள் உறக்கமின்றி கழிந்தது.
இவை அனைத்தும் சேர்ந்து அழுத்தி அழுத்தி ஒரு நாள் வெடித்து விட்டான்.
உஷாதேவிக்கும் உடல் பூரண குணமடைய, நரசிம்மன் பேரனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
அன்று காலையில் இருந்தே ஒரு மாதிரியாக இருந்தவனை யாரும் கவனிக்கவில்லை. முந்தைய நாளும் பரிகாரமென உறங்காமல் இருந்ததில் கண் முழுக்க உறக்கம் இருந்தது. அன்று தான் அவனுக்கு பள்ளியும் தொடங்கிட, பள்ளிக்கு கிளம்பாமல் உறங்கியவனை அடித்து எழுப்பினார் அண்ணாமலை.
“என்னடா தூங்குற. இன்னைக்கு முதல் நாள் ஸ்கூலுக்கு போகணும்ல எந்திரிடா.” என்று அதட்டிட, எப்போதுமே அவர் குரல் சற்று கட்டையாக தான் இருக்கும்.
அதில் சிறுவனின் முகம் சிறிது சிறிதாய் மாற, “சொல்றேன்ல எந்திரிடா…” என்று மீண்டும் கத்தியதில், அவன் அவரை விட அதிகமாகக் கத்தினான்.
அப்போது ஆரம்பித்த முதல் தாக்கமே இந்த ட்ரமாட்டிக் ஹிஸ்டீரியா.
“எமோஷனல் டிஸ்ட்ரஸ்ன்னால உணர்வுகளை அடக்க இயலாமல் வெடித்து விடுவார்கள்” என்ற மருத்துவரின் கூற்று குடும்பத்தார் யாருக்கும் புரியவில்லை. ஆனால், அவனுக்கு மனநிலை சரி இல்லாமல் போய்விட்டுட்டது என்று மட்டும் புரிந்தது.
அதன்பிறகு, மருத்துவமனையில் அனுமதித்து வைத்தியம் செய்தார்கள். வீட்டிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் சொல்லியும், “வீட்ல ரெண்டு சின்ன பசங்க இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது. இங்கயே இருக்கட்டும் காசு தான் அழியுது இவனால” என அண்ணாமலை நொந்து கொண்டார்.
உஷாதேவிக்கோ, மூத்த பிள்ளை ராசி இல்லாமல் தான் போய் விட்டானென்று பார்த்தால், மனநிலை சரி இல்லாதவனாகவும் மாறி விட்டானே என்று தலையில் அடித்துக் கொண்டார்.
பெற்ற பிள்ளை ஊனமாக இருந்தால் கூட பெற்றெடுத்த தாய்க்கு குழந்தையை ஒதுக்க மனம் வருமா? வராது என்ற வாதம் நிறைய வந்தாலும், ஒரு பிள்ளை சரி இல்லாமல் போய் விட்டது என்று அவனை ஒதுக்கியே விட்டார் உஷாதேவி.
அந்நேரத்தில் எஸ்தரின் ஆதரவும் அரவணைப்பும் இல்லையென்றால், நிஜமாகவே பைத்தியக்காரன் ஆகி இருப்பான். அவர் மட்டுமல்ல, ஷாந்தனுவும் ஷாந்தனுவின் பெற்றோரும் கூட அவனுக்கு அன்பை வழங்கவே செய்தனர்.
ஆனால், அவன் எதிர்பார்ப்பது குடும்பத்தாரின் அன்பை தானே! அது கிடைக்காமல் போகும் போதும், பயம் அதிகரிக்கும் போதும், மனதிலும் உடலிலும் ஏற்பட்ட காயம் தாக்கத்தை உண்டாக்கும் போதும் மூர்க்கனாகி விடுவான். தன்னை தானே வருத்திக்கொண்டால் அனைத்தும் சரி ஆகி விடும் என நரசிம்மன் அவன் மனதில் பதித்த எண்ணம் ஆழமாய் வேர்விட்டதில், கட்டுப்பாடுகளை இழந்த நேரமெல்லாம் அவனையே தாக்கிக்கொள்வான்.
சில மாதங்களில் முழுதாய் அதனை முழுதாய் சரி செய்தது எஸ்தர் காட்டிய அன்பு.
மனதை பூங்காவாக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ட குப்பைகளையும் மனதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்ற எஸ்தரின் அறிவுரைகளை சிரத்தையாக பின்தொடர்ந்தான்.
அதற்பிறகு வயது மூப்பின் காரணமாக நரசிம்மன் இறந்து விட, இந்த காயங்களும் குத்திக் காட்டும் வலியும் சற்றே மட்டுப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலாக தாய் தந்தையரின் உதாசீனம் அவனை வருத்தியது.
மகிழன் கூட தமையன் மீது ஓரளவு கருணை காட்டுவான். ஆனால் அப்சரா நரசிம்மனின் பேத்தி என அவ்வப்பொழுது நிரூபிப்பாள்.
நரசிம்மன் காட்டிய கொடூரத்தை விட அதெல்லாம் கம்மி தான் என்பதை உணர்ந்து அவனும் எதையும் கண்டுகொள்ளாமல் கடக்கப் பழகி விட்டான்.
மேலும் சில மாதங்கள் மாத்திரைகளின் உதவிகளில் வாழ்ந்தவன், பின் படிப்பில் கவனத்தை செலுத்தி அதில் வெற்றி கண்டான்.
அக்கம் பக்கத்தினர், வம்சியை அதிகமாகவே வெளியில் விடாதீர்கள் எனக் கூறியதில், பள்ளி செல்லும் நேரம் தவிர எதற்கும் அவனை வெளியில் விடுவதில்லை. அந்த சிறிய அறைக்குள் அடைத்து வெளியில் தாழ் போட்டு விடுவர். அந்த தனிமையை போக்கிக்கொள்ள, படிப்பையே ஆயுதமாக எடுத்தான்.
அதற்கு ஈடாக பள்ளியில் ஷாந்தனுவின் கள்ளம் கபடமில்லா நட்பு அவனை அவ்வப்பொழுது உயிர்த்தெழ வைத்தது.
படித்து வேலைக்கு சென்ற பின்னும் கூட, இன்னும் அவனை பைத்தியக்காரன் போன்றே பாவித்தது அவனது குடும்பம்.
இரு நாட்கள் தொடர்ந்து வம்சி வெளியில் தங்கினால் கூட, எதுவும் பிரச்சனை செய்து தங்களை இக்கட்டில் மாட்டி விடுவானோ என்ற பயம் கொள்ளும் அண்ணாமலை அவனை எங்கும் தங்க விடுவதில்லை. அதற்கும் காரணமிருந்தது, சிறு வயதில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, அவனுக்கு உறக்கத்தில் நடக்கும் வியாதியான சோம்னாம்புலிசம் இருந்தது. இன்சோம்னியாவால் உறங்காமல் சிரமப்படுபவன், உறக்கம் வந்தாலும் நிம்மதியாய் உறங்க முடியாது.
அவனாக நடந்து வேறொரு வீட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் பொருட்களை உடைத்து விடுவான். சில நேரம் என்ன செய்கிறானென அவனுக்கே தெரியாது. அதனாலேயே ஆழ்ந்த தூக்கம் வேண்டுமென கடற்கரையில் நடையோ நடையென நடப்பான். தன்னை மீறி அயர்ந்து உறங்கி காலையில் தான் எழ வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தாலும் சில நேரம் அதற்கு எதிர்மாறாக நடப்பதும் உண்டு.
அந்நேரமெல்லாம் தாய் தந்தையரிடம் திட்டு வாங்கி அறைக்குள் முடங்கி கிடந்து பயத்தில் உறங்காமல் இருந்த நாட்களும் உண்டு.
வம்சி கிருஷ்ணாவின் கருமை சூழ்ந்த கடந்த காலத்தின் எச்சம் நிகழ் காலத்திலும் காலை சுற்றும் பாம்பாய் அவனை உருக்கி, எதிர்காலத்தையும் சூன்யமாக்கிட, இதற்கெல்லாம் காரணகர்த்தாவாகிய நரசிம்மனின் மீது சினம் பீறிட்டது கிருபாஷிணிக்கு. அவனது குடும்பத்தாரின் மீதும்.
எத்தனை வலி! எத்தனை வேதனை! எத்தனை அழுத்தத்தை அச்சிறு இதயம் தாங்கி இருந்தால், தன்னை மீறி வெடித்திருக்கும்!
அதையும் தாண்டி, எப்படியும் சீர்கெட்டுப் போகாமல், குணத்திலும் பண்பிலும் சிறந்து விளங்கியவனுக்கு குடும்ப அன்பும் கிடைத்திருந்தால்…!!!
இவன் அன்பை பெறுவதற்கு தகுதி அற்றவர்கள் அவர்கள். இனி அது தேவையும் இல்லையே… உலகிலுள்ள மொத்த அன்பையும் அவனிடம் கொட்டத்தான் அவள் இருக்கிறாளே! ஆனால், அதனை அவன் ஏற்றுக்கொள்வானா? கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க, மனதின் ரணங்கள் அதிகமாய் வலித்தது.
“பேஷண்ட் கண்ணு முழிச்சுட்டாரு.” என்ற தாதியர் குரலில் ஷாந்தனுவும், கண்ணீர் மல்க அமர்ந்திருந்த தனுஜாவும் உடனடியாக உள்ளே விரைய, கிருபாஷிணிக்கு கால்கள் பின்னிக்கொண்டது.
பின் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவள், அவன் எப்படி தன்னை ஒதுக்கினாலும் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் சில நிமிடங்கள் கழித்தே உள்ளே சென்றாள்.
ஆனால், அவள் இடைவெளி விட்ட அந்த சில நிமிடங்கள் ஆடவனின் கற்பனைக் குதிரை தறி கெட்டு ஓடி, அவளே தன்னை விட்டு சென்று விட்டாள் என்ற முடிவிற்கு வந்து விட்டதை பேதை அறியாது போனாள்!
கண் விழித்ததும் தன்னெதிரே அழுது வீங்கிய முகத்துடன் நின்ற நண்பனைக் கண்டதும், “ஷானு” என முணுமுணுத்தான்.
“இப்ப பரவாயில்லையடா…” என அவன் கேசம் கோதி மென்மையாய் வினவ, கண்ணை மூடித் திறந்தான்.
அருகில் தனுஜாவும் நின்றதில், புரியாமல் பார்த்தானே தவிர ஒன்றும் கேட்கவில்லை. மீண்டும் அவனது கருவிழிகள் அறை முழுக்கச் சுற்றியது.
அவள் இல்லை! அவன் தானே துரத்தி அடித்தான். பிறகெப்படி வருவாள்! அதிலும் தான் அத்தனை முரட்டுத்தனமாக நடந்த பிறகும் எப்படி வருவாள்!
இறந்த பின்னே ஒரே ஒரு முறை அவள் முகத்தைப் பார்க்க தன்னை வரச் சொன்னாளே… இப்போது உயிரோடு இருக்கும் தன் முகத்தைப் பார்க்கக் கூட அவள் விரும்பவில்லையோ… இத்தனை காலம் ஏற்பட்ட வலியை விட, இந்த வலி அவனை அணு அணுவாய் கொய்தது. இந்த நிலை வந்துவிடக் கூடாது என்று தானே, எப்படியாவது நாட்டை விட்டு, அவளை விட்டு கண்காணாத தேசத்திற்கு ஓடிவிட வேண்டும் என அடித்துக்கொண்டான்.
கண்ணில் தேங்கிய நீர்த்துளிகளை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே இழுத்துக்கொண்டான். ஆனால், அவனது எண்ணமெல்லாம் தவறு என்று உணர்த்துவது போல, அங்கு வந்தாள் கிருபாஷிணி.
ஒரே கணம் அதிர்ந்து பார்த்தவன், பின் உணர்ச்சி துடைத்த முகத்துடன், “ஷானு… கான்டராக்ட் முடிஞ்சுடுச்சுல. இனிமே என்னைத் தேடி யாரும் வரத் தேவை இல்லை.” என்றதில், கிருபாஷிணி முறைத்தாள்.
ஷாந்தனுவோ, “இதை எல்லாம் அப்பறம் பேசலாம். நீ ரெஸ்ட் எடு. கையை கட் பண்ணி வச்சுருக்க பாரு.” என்றான்.
பொதுவாக அவன் அப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ளும் போது அவன் செய்யும் எதுவும் நினைவில் இருக்காது. அதே போல அவன் நரம்பை அறுத்துக் கொண்டதும் அவனுக்குத் தெரியவில்லை என்று விளக்கினான்.
அதே உணர்வற்ற முகத்துடன் “தெரியும்!” என்றான் வம்சி கிருஷ்ணா.
“என்ன தெரியும்?” கிருபாஷிணி கூர்மையாய் கேட்க,
“கை நரம்ப அறுத்துக்கிட்டது தெரியும்.”
மூவரும் குழப்பத்துடன் அவனைப் பார்க்க, ஷாந்தனு “கண்ணு முழிச்சதும் சிஸ்டர் சொல்லிருப்பாங்க…” என்று சமாளித்துக் கொண்டான்.
“இல்ல… எனக்கு தெரிஞ்சு தான் செஞ்சேன்” வம்சி தீவிரத்துடன் கூற, இப்போது ஷாந்தனுவிற்கு பயம் நெஞ்சைக் கவ்வியது.
“என்னடா சொல்ற?”
“நான் நார்மல் ஆனதுக்கு அப்பறம் தான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணேன்.” என நிதானமாகக் கூறியவனை திகைத்துப் பார்த்த கிருபாஷிணி, “ஏன் வசி…” என்றாள் தவிப்பாக.
“நீ இன்னொரு தடவை என்னைப் பார்க்க வந்தா திரும்ப பண்ணுவேன்…” என்றவனின் குரலில் அத்தனை அழுத்தம்.
அவனது கூற்றில் பூமியே நழுவி காலடியில் செல்வது போல உறைந்து போனாள் கிருபாஷிணி.