இப்படியே அந்த நாள் ஓடியது. இரவு உணவிற்கு நட்சத்திரா சமைத்துக் கொண்டிருக்க சூர்யா அவளுக்கு உதவினான். இருவரும் பேசிக்கொண்டே சமைத்து சாப்பிட்டனர்.
வழக்கம்போல நட்சத்திரா சிறிது நேரத்தில் சூர்யாவின் ரூமிற்குள் நுழைந்தாள். சூர்யா அவள் வருவதைப் பார்த்து கண்களை இறுக மூடிக்கொண்டான். நட்சத்திரா அவனருகில் வந்து தூங்கிட்டானா என்று பார்த்தவள் அருகிலேயே படுத்துக் கொண்டாள்.
சூர்யா இதற்காகவே காத்திருந்தது போல தூக்கத்தில் புரண்டு படுப்பது போல திரும்பி அவளை அணைத்துக்கொண்டான். நட்சத்திரா அவன் அணைப்பில் கிடைத்த சுகத்தோடு உறங்கி போனாள்.
மறுநாள் காலையில் கண்விழித்த நட்சத்திரா எழ முயற்சிக்க முடியவில்லை. சூர்யா அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு உறங்கினான். நட்சத்திரா அவன் கையை விலக்க முயல சூர்யா தூக்கத்திலேயே, “ஏய் குட்டச்சி… பேசாம தூங்கு டி சீக்கிரமா எழுந்து என்ன பண்ண போற…” என்று அவளை மேலும் இறுக்கிக் கொண்டு உறங்கினான்.
நட்சத்திரா ‘என்ன தூக்கத்திலேயே பக்கத்துல இருக்கிறது நான் தான் என்று கண்டு பிடித்து விட்டான். அப்போ நைட் நான் வந்தது இவனுக்கு தெரியுமா? அப்புறம் ஏன் இன்னும் கத்தாம இருக்கான்’ என யோசித்துக்கொண்டே மீண்டும் உறங்கி போனாள். சூர்யாவின் போன் அடிக்க கண்விழித்தவன் நேரத்தை பார்க்க அது எட்டு முப்பது ஆகியிருந்தது.
சூர்யா என்ன இவ்ளோ நேரம்
தூங்கிவிட்டேன் நான். எல்லாம் இவளால வந்தது இவ கூட சேர்ந்து நானும் தூங்குமூஞ்சி ஆகிட்டேன் என நினைத்துவிட்டு எழுந்து சென்று பிரஷ் ஆகி காபி போட்டுக் கொண்டு வந்து அவளை எழுப்பினான். நட்சத்திரா, “என்ன கொஞ்ச நேரம் தூங்க விடு மாமா…” என்று திரும்பி படுத்தாள்.
சூர்யா, “ஏய் குட்டச்சி டைம் 9 ஆயிருச்சு எழுந்திரு” என்றான்.
நட்சத்திரா, “ஒன்பது மணி ஆயிடுச்சா… என்று அரக்கப்பரக்க எழுந்தவள் மாமா சீக்கிரம் கிளம்பு ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்…” என்று விட்டு தானும் குளித்து கிளம்ப சென்றாள்.
அடுத்த 15 நிமிடத்தில் நட்சத்திரா கிளம்பி ரெடியாகி வந்தாள். சூர்யா நட்சத்திராவை பார்த்து சிலை ஆகிவிட்டான். நட்சத்திரா, “மாமா…” என்று உலுக்க சுயநினைவு பெற்றவன், “ஏன்டி ஃபங்ஷனுக்கு கிளம்பற மாதிரி சாரி எல்லாம் கட்டி இருக்க” என்றான். நட்சத்திரா பதில் சொல்லுமுன் காலிங் பெல் அடித்தது.
சூர்யா போய் கதவைத் திறக்க ஹரிஷ் நின்றிருந்தான். ஹரிஷ், “என்ன ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா… ஏன் இவ்வளவு லேட்டு? அங்க அம்மா அப்பா உங்களுக்காக வெயிட் பண்றாங்க” என்றான்.
நட்சத்திரா, “அண்ணா நான் ரெடியாகி விட்டேன். உங்க பிரண்டு தான் லேட் பண்ணிட்டாரு” என்றாள்.
ஹரிஷ், “என்னடா மச்சான் சீக்கிரம் கிளம்ப மாட்டியா… சரி வாங்க ரெண்டு பேரும்” என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஹரிஷின் தாய் சுதா ஆரத்தி சுற்றி இருவரையும் வரவேற்றாள். சூர்யா மைண்ட் வாய்ஸில் ‘புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியே ட்ரீட் பன்றாங்களே! எல்லாம் இவளால வந்துச்சு . இன்னும் என்ன பண்ணக் காத்து இருக்காளோ…? கடவுளே நீ தான்பா என்னை காப்பத்தனும்’ நினைத்துக் கொண்டான்.
ஆனால் நட்சத்திரா அவனை கண்டுகொள்ளாமல் வெகு நாட்கள் பழகியது போல சுதாம்மா ஜெயராஜ் அப்பா என்று சாதாரணமாக பேசினாள். சூர்யா இவ மட்டும் எல்லார் கூடவும் சுலபமா மிங்கில் ஆகுறா என நினைத்துக்கொண்டான்.
சுதா, “சூர்யா உனக்கேத்த நல்ல அழகான பெண்ணா தான்டா பார்த்திருக்க. குணமும் நல்ல குணமா இருக்கு” என்றார். சூர்யா என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்து வைத்தான்
ஜெயராஜ், “சூர்யா ஒரு வருஷமா இங்க தான் இருக்க. எங்க கிட்ட கூட சொல்லாமல் மறைச்சிட்ட ஹரிஷ் சொன்னப்ப கூட நான் நம்பலை” என்றார்.
சூர்யா இதற்கு பதில் கூறாமல் முழித்தான். ஜெயராஜ், “சூர்யா ஷங்கரும் ஷீலாவும் கூட லவ் மேரேஜ்தான்… அவங்க உங்க லவ்வ அக்செப்ட் பண்ணிப்பாங்களே. ஏன் நீங்க இன்னும் வீட்டில சொல்லல நான் வேணும்னா பேசட்டா…” என்றார்.
இதைக் கேட்ட இருவரும் பதறிக்கொண்டு வேண்டாம் என்றனர். மற்ற மூவரும் சூர்யாவையும் நட்சத்திராவையும் கேள்வியாக பார்க்க. நட்சத்திரா, “எங்க அப்பா அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட், இந்த விஷயம் தெரிஞ்சா என்னை படிக்க விடமாட்டாங்க” என்று வேகமாக கூறி முடித்தாள்.
ஜெயராஜ், “அப்படியா..? சரி நீங்க கவலைப்படாதீங்க. நீங்க படிச்சு முடிச்ச பிறகு நானே உங்க வீட்டில பேசி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார்.
சுதாவும் தன் பங்கிற்கு, “நாங்க பேசுறோம்.. நீங்க கவலைப்படாதீங்க என்றவர், சரி உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க கேட்போம் யாரு பஸ்ட் ப்ரொபோஸ் பண்ணுனது” என்றார்.
நட்சத்திரா, “சூர்யா மாமா சொல்லுவாங்க…” என்று அவனை கோர்த்து விட்டாள்.
சூர்யா மைண்ட் வாய்ஸில் ‘ஐயோ இப்படி கோர்த்துவிட்டுடாளே! நான் என்ன இவள மாதிரி பொய் சொல்வதில் பிஹச்டியா வாங்கி இருக்கேன். இப்ப என்ன சொல்லி சமாளிப்பேன்’ என யோசித்தான்..
சூர்யாவின் முகத்தைப் பார்த்த நட்சத்திரா வாய்க்குள்ளே சிரித்துவிட்டு, “நானே சொல்றேன் சுதாம்மா. அவர் கொஞ்சம் கூச்சபடுறாரு” என்றவள் தன் வழக்கமான வேலையை ஆரம்பித்தாள்.
நட்சத்திரா தனது லவ் ஸ்டோரியை கூற ஆரம்பித்தாள், “அம்மா அன்னைக்கு எனக்கு முதல் நாள் காலேஜ். ராகிங் இருக்குமோ என்று பயந்து கொண்டே போனேன். கரெக்ட்டா என் கிளாஸ்கிட்ட போகும் போது சீனியர்ஸ் என்ன கூப்பிட்டாங்க. நான் போன உடனே என்னை ஒரு சீனியர்கிட்ட ப்ரொபோஸ் பண்ண சொன்னாங்க. நான் பயந்து போய் முடியாது என்று சொன்னேன். அதுல ஒரு சீனியர் மச்சான் அந்த பொண்ணு பயப்படுது. பேசாம நீயே அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணி விடு” என்று சொன்னாங்க. அப்பதான் சூர்யா மாமா என்கிட்ட ப்ரபோஸ் பண்ணாரு. அப்புறம் அவங்க என்ன போக சொல்லிட்டாங்க.”
“நானும் சும்மா ராகிங் தானே என்று விட்டு விட்டேன். ஆனால் அன்னைக்கு சாயந்திரம் மாமா என் கிட்ட வந்து, காலையில உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனேன்ல அதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலன்னு கேட்டார். இதைக் கேட்டவுடனே எனக்கு தூக்கிவாரிபோட்டது. நான் அது ராகிங் தானேனு கேட்டேன். சூர்யா மாமா அது ராகிங் இல்ல. உண்மைதான் உன்ன பார்த்த உடனே எனக்கு புடிச்சிருச்சு. நீ தான் என் வாழ்க்கை என்று முடிவு பண்ணிட்டேன்.”
“நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். அப்புறம் ரெண்டு வருஷம் என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தாரு. நான் எங்க போனாலும் பின்னாடியே வருவாரு. முதல்ல எனக்கு பிடிக்கலை. அப்புறம் அவர் என் மேல வச்சி இருக்க அன்பை பார்த்து எனக்கு அவர ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது.”
“ஒரு நாள் அவள் காலேஜ் வரவே இல்லை.
எனக்கு அன்னைக்கு முழுவதும் மனசு கஷ்டமா போயிடுச்சு. எப்படா அவரை பார்ப்போம் என்று தோனுச்சு. அப்போதுதான் அவர் மேல நான் எவ்ளோ லவ் வச்சிருக்கேன்னு தெரிஞ்சது. மறுநாளே அவர்கிட்ட என் காதலை சொல்லிட்டேன்.”
“அப்போதான் என் அக்காவுக்கு கிஷோர் மாமாவ நிச்சயம் பண்ணாங்க. அக்கா கல்யாணம் முடிஞ்ச உடனே அம்மா அப்பா ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு கிளம்பிட்டாங்க. நான் கொஞ்ச நாள் சூர்யா மாமா வீட்டில்தான் தங்கி இருந்தேன். அப்போ தான் ரொம்ப சந்தோஷமா வாழ்க்கையை என்ஜாய் பண்ணோம்.”
“திடீர்னு சூர்யா மாமா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பிட்டாரு. என்கிட்ட கூட முன்னாடியே சொல்லவே இல்ல.”
“அதான் அவர் கூட சண்டை போட்டுட்டு ஒரு வருஷம் பேசல. என்னால இவரை விட்டு இருக்க முடியலை. அதான் நான் இங்கே கிளம்பி வந்துட்டேன்” எனக் கூறி முடித்தாள்.
இதைக்கேட்ட மூவரும், சூப்பர் லவ் ஸ்டோரி. நீங்க எப்பவுமே இதே மாதிரியே சந்தோஷமா இருக்கணும் என்றனர்.
ஹரிஷ், “இவனா உன் பின்னாடி சுத்துனான். என்னால நம்பவே முடியல. காலேஜ்ல ஒரு பொண்ணு கிட்ட கூட பேச மாட்டான். ஆனால் நிறைய பொண்ணுங்க இவன் கிட்ட வந்து பேசுவாங்க. சூர்யாவுக்கு ஒரு ரசிகர் மன்றமே வச்சி இருக்காங்க” என்றான்.
இதைக் கேட்டதும் நட்சத்திராவின் முகம் மாறியது. ‘ஐயோ! எத்தனை பேர் கிட்ட இருந்து என் மாமாவை நான் காப்பாத்தணுமோ?’ என நினைத்தாள்.
ஹரிஷ் நட்சத்திராவின் முகத்தை பார்த்துவிட்டு, “தங்கச்சிமா நீ ஒன்னும் கவலைப்படாதே! உன் ஆளு கன் பார்ட்டி. எந்த பொண்ணையும் திரும்பி பார்க்க மாட்டான். ஒரு வருஷம் அவன் கூட பழகுனதை வச்சு அவன் குணத்தை அறிஞ்சு சொல்றேன்” என்றான்.
நட்சத்திரா, “அண்ணா மாமா மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அவர் பின்னாடி சுத்துற பொண்ணுங்க தான் பாவம். அவுங்களை நினச்சு தான் பீல் பண்றேன்” என்றாள்.
இது எதற்குமே சம்பந்தமில்லாதது போல சூர்யா டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹரிஷ், “அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு வேலை பாத்துருக்க சூர்யா.”
சூர்யா மனதிற்குள் ‘சொன்னாலும் சொல்லலனாளும் நான் அப்பாவி தான். இவ தான் எல்லா வேலையும் பார்க்கிறா’ என நினைத்துக்கொண்டான்.
“சரி நேரமாகிவிட்டது எல்லோரும் சாப்பிட வாங்க” என அழைத்தார் சுதா. பலவகையான பதார்த்தங்களுடன் அறுசுவை உணவை பரிமாறினார்.
சூர்யா ‘இன்னைக்கு தான் உருப்படியா ஒரு பொய் சொல்லி இருக்கா. அதனாலதான் நல்ல சாப்பாடு கிடைச்சு இருக்கு ‘ என நினைத்தான். நட்சத்திரா அவன் காதருகில், “மாமா இப்ப நீ என்ன நெனச்ச என்று நான் சொல்லட்டா…”
சூர்யாவிற்கு பகீரென்றது. மனசுல நினைக்கிறத கூட கண்டுபிடித்து விட்டாளா…? என நினைத்தவன், “என்ன நினைச்சேன்?” என்றான்.
நட்சத்திரா, “இன்னைக்கு தான் இவ சொன்ன பொய்யால நல்லது நடந்துச்சுன்னு தானே நினச்ச…” என்றாள். சூர்யாவிற்கு பேரதிர்ச்சி. அவன் ரியாக்சனை பார்த்த நட்சத்திரா, “கவலைப்படாத மாமா! இன்னும் நிறைய இது மாதிரி இருக்கு அப்பப்பா எடுத்து விடுறேன்” என்றாள்.
இதைக் கேட்ட சூர்யாவிற்கு தூக்கி வாரி போட்டது. என்னது நிறைய வச்சிருக்காளா? இவ அப்பப்பா தோன்றதையே சொன்னாலே நான் காலி. இதுல யோசிச்சி வேற வச்சிருக்காள். சூர்யா உன் பாடு திண்டாட்டம் தான் என நினைத்துக்கொண்டான்.
இவர்கள் இருவரும் பேசியதை பார்த்த சுதா, “ரெண்டு பேரும் அப்புறமா பேசிக்கோங்க. இரண்டு பேரும் ஒண்ணாதன இருக்கப் போறீங்க. இப்ப சாப்பிடுங்க” என்றார். சூர்யாவும் நட்சத்திராவும் அசடு வழிந்தனர்.
சூர்யா, “ஆமா ஆன்டி மேக்னா எங்க? வந்ததிலிருந்து அவளை ஆளையே காணோம்” என்றான்.
சுதா, “அவ பிரெண்ட்ஸ் கூட வெளியே போய் இருக்கா” என்றார்.
நட்சத்திரா யாரது மேக்னா? என யோசிக்க ஹரிஷ், “மேக்னா என் தங்கச்சி. அவளுக்கு உன் வயது தான். உன்னோட கிளாஸ் தான் படிக்கிறா. நாளைக்கு உனக்கு அவளை அறிமுக படுத்துகிறேன்” என்றான். நட்சத்திரா,” சரி அண்ணா” என்றாள். பின் இருவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து விடைபெற்றனர்.
சூர்யா, “ஏய் குட்டச்சி இங்க வாடி உன் கிட்ட பேசணும்.”
“மாமா ஒரு அஞ்சு நிமிஷம் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று சென்றவள் சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் வந்து, “சொல்லு மாமா…” என்றாள்.
சூர்யா செய்தறதையும் செஞ்சிடு எவ்வளவு தைரியமாக பேசுறா? இவளுக்கு தைரியம் கூடிப் போச்சு என நினைத்தவன், “ஏன்டி நான் உன் பின்னாடி சுத்துனேனா..” நட்சத்திரா, “இல்லயே மாமா….”
“உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனேனா..?” நட்சத்திரா, “இல்லையே மாமா…”
“அப்புறம் ஏன்டி அப்படி பொய் சொன்ன?”
நட்சத்திரா, “என்ன மாமா நீ லூசு மாதிரி பேசுற… நான் சொன்னதெல்லாம் பொய் தான். நான் தான் உன் பின்னாடி சுத்துனேன். நான் தான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன். ஆனா நீ இன்னும் அக்செப்ட் பண்ணலையே! நான் உண்மையை சொல்லி இருந்தா என் லவ்வை நீ அக்சப்ட் பண்ணிட்டன்னு சொல்லி இருக்கணும். அது எப்படி மாமா நடக்காத விஷயத்தை நடந்துச்சுன்னு நான் பொய் சொல்ல முடியும். அது தப்பில்லையா..?” என்றாள்.
இதை கேட்ட சூர்யா, “அடிப்பாவி! அப்போ இவ்ளோ நேரம் அளந்துவிட்டதை எல்லாம் எந்த காலத்துல நடந்தது? அது தப்பா தெரியலையா உனக்கு..” என்றான். நட்சத்திரா ஈஈஈ என இளித்தாள்.
சூர்யா கோவமாக அவளைத் திட்ட வர வீட்டிலிருந்து அவன் போனிற்கு வீடியோ கால் வந்தது. அவன் போன் அலறியது. அதை பார்த்த சூர்யா, “ஏய் குட்டச்சி அம்மா கால் பண்றாங்க. நீ இங்க இருக்குறது அவங்களுக்கு தெரியாது. பேசாம இருக்கணும்…. என்ன சரியா?” என்றான்.
நட்சத்திரா முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, “சரி மாமா ” என்று தலையை ஆட்டினாள்.
சூர்யா இவ மாடுலைஷனே சரி இல்லையே! என்ன பண்ண காத்திருக்காளோ? என நினைத்துக்கொண்டே காலை அட்டன்ட் செய்தான். நட்சத்திராவின் மூளை விவகாரமாக யோசிக்க ஆரம்பித்தது.
கவிதைகள் தொடரும்…..