வம்சி கிருஷ்ணாவின் கூற்றில் அதிர்ந்து நின்ற கிருபாஷிணிக்கு இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
இருப்பினும் மனதைத் தேற்றிக்கொண்டவள், “உங்களுக்கு மட்டும் தான் சூசைட் அட்டெம்ப் பண்ண தெரியுமா?” எனக் காட்டத்துடன் கேட்டு விட்டு வெளியில் செல்ல, அதிர்வது அவன் முறையானது.
“கிருபா… சார்.. அவள் ஏதாச்சு பண்ணிக்கப் போறா” என தனுஜா பதற, “அவள் அம்மா, அண்ணனை விட்டுட்டு இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டா.” என்று தீர்மானமாய் கூறினான் வம்சி கிருஷ்ணா.
வெளியில் சென்றவளுக்கு அவனது பேச்சு காதில் விழ, மீண்டும் புயல் வேகத்தில் உள்ளே வந்தாள்.
சுற்றி முற்றி பார்த்தவள், ட்ரெஸ்ஸிங் செய்வதற்காக வைத்திருந்த சிறு கத்தியை கையில் எடுத்து, “என் அம்மாவை அண்ணன் பாத்துப்பான்.” என்று கையைக் கிழிக்கப் போக, நொடியில் நடக்க இருக்கும் விபரீதம் உணர்ந்து, தாவி அவளைத் தடுத்தான் வம்சி.
“அறிவு இருக்காடி உனக்கு. விடுடி அதை” என்று அதட்ட,
“உங்களைப் பார்க்க நான் வர்றதை உங்களாலேயே தடுக்க முடியாது. அப்படி தடுத்தா, செத்து ஆவியாகியாவது வருவேன்” என்று திட்டவட்டமாகக் கூறியவளைக் கண்டு கோபத்தை அடக்க இயலாமல் பளாரென அறைந்தான். அதில் அவள் கையில் வைத்திருந்த கத்தி கீழே விழுந்திட, கன்னத்தில் கை வைத்து திகைத்தாள்.
அவன் மேலும் பேச வரும் முன் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டதில் வம்சி செயலிழந்து போனான்.
அதுவும் ஒரு நொடி தான். அவளைத்தள்ளி விட முயல, இப்போது அவன் இதழ்களை சிறை பிடித்தாள்.
தனுஜா திருதிருவென விழித்தபடி நிற்க, ஷாந்தனுவோ ‘ஹாஸ்பிடல்க்கு உண்டான மரியாதை போச்சு உங்களால’ என்று புலம்பியபடி வெளியில் செல்ல, அவன் பின்னே தனுஜாவும் ஓடி வந்து விட்டாள்.
தன்னவளின் இதழணைப்பில் அத்தனை அழுத்தமும் பனித்துளியாய் கரைவதை வியப்புடன் எண்ணிக்கொண்டவனுக்கு எதையும் ஏற்க இயலவில்லை.
அதே நேரம் அந்த இதத்தை இழக்கவும் மனம் வராமல் அசையாமல் நின்றான்.
சிறிது நேரத்தில் அவளே விலகி, அவனது விழிகளை நேராய் பார்த்து, “இதுக்கு லவ், லஸ்ட்ன்னு என்ன பேர் வேணாலும் வச்சுக்கோங்க வம்சி. ஆனா என் ப்ரெசன்ஸ் உங்களை டிஸ்டர்ப் பண்ணுது. உங்களைத் தடுமாற வைக்குது… இதே என் இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் உங்களால இப்படி இழைஞ்சுருக்க முடியாது. உங்க தியரி படி இது லவ் இல்ல… லஸ்ட்ன்னே வச்சுக்குறேன்.” என மேலுதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்தியவள்,
“என்னை உங்களை விட்டுப் போக வைக்க முயற்சி பண்ணாதீங்க. அது நடக்காது.” என்றவள் விறுவிறுவென வெளியில் சென்று விட்டாள். அவளது பேச்சில் இடிந்து போனதென்னவோ ஆடவன் தான்.
கிருபாஷிணியை முறைத்த ஷாந்தனு, “இன்னொரு தடவை சூசைட் அது இதுன்னு பேசுன நானே உன்னை அடிச்சுடுவேன் கிருபா.” என கண்டிக்க,
“சும்மா மிரட்ட தான் அப்படி செஞ்சேன். நான் எகிறலைன்னா, அவரு எனக்கு மேல எகிறுவாரு” என்றதில் உள்ள உண்மை உறைக்க, “கரெக்ட் தான். இருந்தாலும் இனிமே இப்படி செய்யாத. ப்ளீஸ்.” என்றான்.
“நீ இருந்து அவனைப் பார்த்துக்கோ, அவனுக்கு வெளி சாப்பாடு சேராது. நான் வீட்டையும் க்ளீன் பண்ணிட்டு, சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன்.” என்றதில், “நானும் ஹெல்ப்புக்கு வரட்டுமாண்ணா.” எனக் கேட்க, “வேணாம். நான் பாத்துக்குறேன்.” என்று விட்டு கிளம்பிட,
தனுஜாவும் வீடு இருந்த நிலையைப் பார்த்தாலே… அதில், “நான் வரட்டுமா. தனியா எப்படி க்ளீன் பண்ணுவீங்க?” எனத் தயக்கத்துடன் கேட்டாள்.
“வேணாம்” ஷாந்தனு பட்டென பதில் அளித்திட, ‘அவளே வரேன்னு சொல்றா… கிடைச்ச சான்சை யூஸ் பண்றதை விட்டுட்டு…’ என மனதினுள் புலம்பிய கிருபாஷிணி, “ஆமா அண்ணா தனுஜாவையும் கூட்டிட்டுப் போ.” என்று கோர்த்து விட்டாள். இன்னும் அவர்களுக்குள் நிகழ்ந்த பிரச்சனை அவளுக்குத் தெரியாது.
“ம்ம்…” என்றவன், அவளது ஸ்கூட்டிலேயே அவளை அழைத்துக்கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு சென்றாள்.
வீடே போர்க்களமாகக் காட்சியளிக்க, கண்ணாடி துகள்களெல்லாம் தரையில் கிடந்தது. தனுஜா அவற்றை எடுக்கப் போக, அவளைத் தடுத்தவன், “கண்ணாடி குத்திட போகுது தனுஜா. நானே க்ளீன் பண்றேன்.” என்றதும், “சரி அப்போ நான் சமைக்கிறேன்…” என்றவள் வரும் வழியிலே வாங்கி வந்த சமையல் பொருட்களை எடுத்துக்கொண்டு அடுக்களை நோக்கி சென்றாள்.
அவள் பார்க்காத நேரமெல்லாம் அவளைப் பார்வையால் விழுங்கியவன், “மிளகாய் தூள் எங்க இருக்கு? கரம் மாசாலா எங்க” எனக் கேட்டு வரும் போது மட்டும் சிரத்தையாக அவளைப் பாராமல் தவிர்த்தான்.
ஒவ்வொரு தடவை அவள் அழைக்கும் போதும் சலிக்காமல் வந்து எடுத்துக் கொடுத்தான்.
“இட்லி சட்டி எங்க இருக்கு ஷாந்தனு.” என சத்தம் கொடுக்க, அவனிடம் பதில் இல்லை.
“எங்க போனான்?” என எண்ணியபடி வெளியில் வர, அவன் கையில் ஒரு கிரீட்டிங் கார்ட் இருந்தது. வம்சியின் பேகில் இருந்தும் பொருட்கள் கொட்டி இருந்ததில், அவனுக்கு கொடுத்த ‘கார்ட்’ ஷாந்தனுவின் கையில் சிக்கி இருந்தது.
அதைக் கண்டதும் விழி தெறிக்க அதிர்ந்தவன், இறுகிய முகத்துடன் மீண்டும் அதனை வம்சியில் பேகில் வைத்து விட்டான்.
அவன் கையில் கிரீட்டிங் கார்டுடன் நிற்கும் போதே தனுஜா வந்து விட்டாள். வந்தவள், ஷாந்தனுவின் கண்கள் பிரதிபலித்த அதிர்வையும் ஏமாற்றத்தையும் வலியையும் கண்டு கொண்டாள்.
அதன் பிறகு, அவளுக்குத் தேவையான அனைத்தையும் சமையல் மேடை மீது வைத்து விட்டவன், அதன் பிறகு மருந்துக்கும் அவளை திரும்பிப் பார்க்கவில்லை. பேசவும் இல்லை.
அது அவளுக்கு சுருக்கென இருந்தது போலும்! சமையல் வேலையை முடித்து விட்டு, “கிளம்பலாமா?” என தனுஜா கேட்க, “நீ வீட்டுக்கு கிளம்பு. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன். வண்டி நைட்டுக்குள்ள வந்துடும்.” என்று வேறு எங்கோ பார்த்து பதில் கூற, அவளுக்கு மெல்ல சினம் எழுந்தது.
“நான் எங்க வரணும் வரவேணாம்ன்னு நீங்க சொல்லத் தேவை இல்லை. நான் வந்தது வம்சி சார்க்காக. உங்களுக்காக இல்லை.” என்று வெடுக்கென கூறியதில், “தெரியுது” என்றான் அர்த்தப்பார்வையுடன்.
“தெரிஞ்சா சரி தான்…” என முணுமுணுத்தவள், “நான் சாப்பாடை எடுத்துட்டு போறேன். நீங்க வேணும்ன்னா ஆட்டோ பிடிச்சு பொறுமையா வாங்க” என்றவள், அவனை உண்மையாகவே விட்டுச் சென்றாள்.
வம்சி கிருஷ்ணாவை நார்மல் வார்டிற்கு மாற்றி இருக்க, மாத்திரையின் விளைவில் மயக்கத்திலேயே தான் இருந்தான்.
கிருபாஷிணியும் அவனை விட்டு நகரவே இல்லை. இடையில் சுபாஷ்வரும் வந்து பார்த்தான். அவனது நிலை கண்டு இரக்கம் வந்தாலும், தங்கையின் வாழ்வும் அதனுள் அடங்கி இருக்கிறதே என தமையனாக கவலையும் உள்ளுக்குள் எழுந்தது.
அப்போதைக்கு எதுவும் பேசாமல், “நீ வம்சியைப் பார்த்துக்கோ கிருபா. வேலையை நான் பாத்துக்குறேன்.” என்று விட்டுச் செல்ல, இரவு உணவு வேளை நெருங்கும் போது தான் ஷாந்தனு அங்கு வந்தான். வந்தவன், தனுஜாவை முறைத்து விட்டு, கண் விழித்த வம்சியிடம் நலம் விசாரித்து, “சாப்பிடுடா. மாத்திரை போடணும்” என்றான்.
“இப்ப வேணாம்” என வம்சி மறுக்கும் போதே, எதையும் கண்டுகொள்ளாமல் தனுஜா கொண்டு வந்த கேரியரில் இருந்த இட்லி, சாம்பாரை தட்டில் வைத்து ஒரு விள்ளல் எடுத்து வம்சியின் வாயருகே கொண்டு சென்றாள் கிருபாஷிணி.
அவளிடம் வாதம் செய்ய தெம்பில்லாமல் வாங்கிக் கொண்டவனை, ஷாந்தனு கேலி நகையுடன் பார்த்து விட்டு நகர, தனுஜாவிற்கும் அங்கிருக்க அசௌகரியமாக இருக்க, வெளியில் சென்றாள்.
மூன்று இட்லிகளை மறுக்காமல் வாங்கியவன், “போதும்” என்றான். நினைவு தெரிந்த நாள் முதல், சாப்பாடு தட்டைக் கையில் கொடுத்தது கூட இல்லை. தூக்கி எறிந்ததை அவனாக எடுத்து உண்டு தான் பழக்கம். ஹிஸ்டீரியா வருவதற்கு முன்பு கூட குடும்பத்தாருடன் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வரம் கிடைத்தது. அதன் பிறகு, கதவு இடுக்கு வழியே வரும் உணவு தான். பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அதை சாப்பிட்டே ஆக வேண்டும். அருகில் நின்று பரிமாறி தலை கோதும் அன்னையின் அன்புக்காக பல நாட்கள் ஏங்கி இருக்கிறான். இன்றளவும் அது கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கப்போவதில்லை.
புதைத்து வைத்திருந்த ஏக்க உணர்வுகளெல்லாம் கிருபாஷிணியின் ஒற்றைச் செயலில் பிரளயம் எடுக்க, “இன்னும் ஒரு இட்லி வைக்கிறேன் வசிப்பா. அதுவே குட்டியா தான் இருக்கு. தனுஜா அவள் சைஸ்லயே இட்லி ஊத்தி வச்சுருக்கா.” எனப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இன்னொரு இட்லியை உண்ண வைத்தவள்,
“அச்சச்சோ… சாம்பாரை நிறைய ஊத்திட்டேன். இதுக்காக இன்னொரு இட்லி சாப்பிடுவீங்களாம். வேஸ்ட் ஆகிடும்.” என மூக்கைச் சுருக்கியதில், அவன் நெஞ்சை அடைத்த உணர்வுகளை வெளிக்காட்டாமல் மெளனமாக இருந்தான்.
அவளோ மீண்டும் ஏதோ பேச வர, “இதுக்கு மேல சாப்ட்டா வயிறு வெடிச்சுடும்.” என்றதும் தான் சிரிப்பை அடக்கிக்கொண்டு “சரி உடம்பு சரி இல்லாததுனால இதோட விடுறேன்.” என்று வெகு சலிப்புடன் கூறிக்கொண்டாள்.
அவன் வாயை ஈரக்கைகளால் ஒற்றி எடுத்து, தனது முந்தானையால் துடைத்து விட்டவள், மாத்திரையையும் போட வைக்க,
அவள் தன் மீது காட்டிய உரிமைகளை ரசிக்கவும் வெறுக்கவுமாக இருவேறு மனநிலையில் தத்தளித்தது அவன் மனது. அவளை இன்னுமாக ரசித்து வைக்கும் கண்களை கண்டித்தவன், அவளைக் காணாமல் கண்ணை மூடிப் படுத்துக்கொள்ள, மூடிய விழிகளிலும் அவளது புன்னகை முகமே!
வெளியில் எட்டிப் பார்த்த கிருபாஷிணி ஷாந்தனு ஒரு மூலையிலும் தனுஜா ஒரு மூலையிலும் போனை உபயோகித்தபடி அமர்ந்திருந்ததைக் கண்டு, “நீங்களும் சாப்பிட வாங்க” என்று அழைக்க, தனுஜா எழுந்தாள்.
“சார் சாப்ட்டாங்களா கிருபா. நீயும் சாப்பிடு.” என்றபடி உள்ளே வந்தவள், இன்னும் ஷாந்தனு எழாமல் இருப்பதைக் கண்டு “நீங்க சாப்பிட வரல.” என்றாள்.
“எனக்கு வேணாம்.” என அவளை நிமிர்ந்து பாராமல் பதில் கூறியதில், ஏனோ அவளுக்கு சுறுசுறுவென கோபம் எழுந்தது.
வெடுக்கென அவன் போனைப் பறித்தவள், “நான் உங்களை லவ் பண்ணேன்னு சொல்லி ஏமாத்துனேனா?” எனக் கேட்க அவனோ குழப்பத்துடன் “இல்லை” எனத் தலையாட்டினான்.
“உங்களை லவ் பண்ணிட்டே உங்க பிரெண்டு கூட அஃபேர்ல இருந்தேனா” சுள்ளென தனுஜா கேட்க,
“என்ன பேசுற…” என்று கோபத்துடன் எழுந்தான்.
“பின்ன, நீங்க நடந்துக்குறது அப்படி தான் இருக்கு.” என்றதும், சட்டென அமைதியானான்.
“நான் வம்சி சாரை விரும்புனேன். அதை சொல்லவும் செஞ்சேன். அவர் நோ சொல்லிட்டாரு அவ்ளோ தான்.” என அவர்களுக்குள் நிகழ்ந்த அனைத்தையும் பகிர்ந்தவளை, சற்றே வியந்து பார்த்தான்.
“இதை நான் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னு பாக்குறீங்களா… நீங்க ப்ரொபோஸ் பண்ணும் போது எனக்கு பயம் மட்டும் தான் இருந்துச்சு. எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியாம அழுதுட்டேன். அதுக்கு அப்பறம் வம்சி சார் உங்களைப் பத்தி சொன்னதும் கூட எனக்கு இதெல்லாம் சரியா படல.
இதோ இப்ப நீங்க என்னை துரோகி மாதிரி பார்த்தீங்களே அதே மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியும் நடந்தா… அதான், அப்படியே விட்டுட்டேன். ஆனால் இன்னைக்கு குடும்பமே ஒதுக்கி வச்ச ஒருத்தரை உங்க நட்பால இன்னும் உயிர்ப்போட வச்சு இருக்கீங்கன்னு தெரிஞ்சதும், உங்க மேல மதிப்பு வந்துச்சு. நல்ல அபிப்ராயம் வந்துச்சு. அதான் உங்ககிட்ட சாதாரணமா பேசுனேன். அது தப்புன்னு இப்ப தெரிஞ்சுடுச்சு.” எனப் படபடவென பொறிந்து விட்டு நகர முயன்றவளின் கரத்தைப் பற்றினான்.
“பைத்தியம் மாதிரி பேசாத தனுஜா. உன்னை நான் தப்பா நினைச்சேன்னு நான் சொன்னேனா? நீ ப்ரொபோஸ் பண்ணுனன்னு வம்சியும் என்கிட்ட சொல்லல. சடனா அந்த கார்டுல நீ விட்ட அம்பை பார்த்ததும் என் ஹார்ட்டுல பெரிய சைஸு ஓட்டை விழுந்துடுச்சு. அன்னைக்கு நான் ப்ரொபோஸ் பண்ணுனப்ப கூட இதை நீ சொல்லலையேன்னு கொஞ்சம் கடுப்பா இருந்துச்சு. அந்த கடுப்பை காட்டிடுவேனோன்ற பயத்துல தான் உன்னை வீட்டுக்குப் போக சொன்னேன். அதுவும் இல்லாம நீ ஹாஸ்பிடல்க்கு வந்துட்டு கிளம்ப இன்னும் இருட்டிடும். உன் வீட்ல என்ன சொல்லுவாங்களோன்ற எண்ணமும் ஒரு காரணம்.
அது புரியாம, ‘நீ எனக்காக வரல வம்சிக்காக மட்டும் தான் வந்தேன்’னு சொல்லவும் கொஞ்சம் பொஸசிவ் ஆகிட்டேன். அதுக்காக துரோகி அது இதுன்னு பேசுவியா?” என இடுப்பில் கை வைத்து முறைத்தான்.
அவனது விளக்கத்தில் மெல்ல கோபம் மறைந்து இயல்பானவள், “இப்பக் கூட நான் செஞ்சதை சாப்பிட பிடிக்காம தான வரல…” அவள் மெல்லிய குரலில் கூறியதும்,
“நீ என்ன எனக்காகவா செஞ்ச… உன் க்ரஷ்க்காக தான செஞ்ச…” என்று நொடித்துக் கொண்டான் கேலியாக.
அவளோ பல்லைக்கடித்து முறைத்து வைத்து, “எல்லாருக்காகவும் தான் செஞ்சேன்.” என்றதில், அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளிப்படுத்தினான். அவனது சிரிப்பில் அவளும் புன்னகை மலர, உள்ளே சென்றாள். அவள் பின்னே அவனும் செல்ல, கிருபாஷிணி கண்ணை மூடி படுத்திருக்கும் வம்சியை வெறித்துக் கொண்டிருந்தாள்.
பின், மூவரும் உண்ட பிறகு, “நீ வீட்டுக்குப் போ கிருபா. நைட்டு ஒரு ஆள் தான் இருக்கணும். நான் பாத்துக்குறேன்” என்று ஷாந்தனு கூறியதில், “இல்லண்ணா நான் இருக்கேன். நீ கிளம்பு” என உறுதியாய் கூறியதும் அவனாலும் மறுக்க இயலவில்லை.
தனுஜா, “காலைல ஏதாச்சு வேணும்ன்னா கால் பண்ணு கிருபா. நானே சமைச்சு எடுத்துட்டு வரேன்.” என்றதும், “உனக்கு ஏன் சிரமம்…” என கிருபாஷிணி மறுத்ததில் தனுஜாவின் முகம் சுருங்கிட, “சரி வசிக்கு மட்டும் எடுத்துட்டு வா. நாங்க கேண்டீன்ல சாப்ட்டுக்குறோம். எல்லாருக்கும் செய்ய கஷ்டமா இருக்கும்.” என்றாள் வேகமாக.
அதில் புன்முறுவல் பூத்தவள், “ஆமா உங்க மூணு பேருக்கும் தனி தனியா சட்டி வச்சு செய்ய போறேன் பாரு.” எனப் போலியாய் முறைத்தவள், கிளம்பி விட, ஷாந்தனுவும் ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டே கிளம்பினான்.
அவனது வண்டியும் சர்விஸ் முடிந்து வந்திருக்க, “உன் வீடு வரைக்கும் வரேன் தனுஜா. ரொம்ப லேட் ஆகிடுச்சு.” என்றதில் அவளும் மறுக்கவில்லை.
அவளது அபார்ட்மெண்ட் தெருவிற்கு முன்னால், இன்னும் தெரு விளக்கு இல்லாததால் இருட்டடைந்து இருக்கும். அவன் வருவது அவளுக்கும் நிம்மதியாகவே இருந்தது.
இருவரும் தனி தனி வண்டியில் ஒன்றாகச் செல்ல, அவளது அபார்ட்மெண்ட் வாசலில் வண்டியை நிறுத்தினான்.
“தேங்க்ஸ்…” என அவனிடம் கூறும் போதே, அங்கு வந்த மற்றொரு இளம்பெண் “ஹே தனு வந்துட்டியா. இன்னைக்கு எனக்கு நைட் ஷிஃப்ட். இன்னொரு ரூம் மேட்டும் அவசரமா ஊருக்குப் போய்ட்டா. இன்னைக்கு நைட்டு தனியா சமாளிச்சுடு நாளைக்கு காலைல வந்துடுறேன்.” என்றதும் பேந்தப் பேந்த விழித்தவள்,
“என்னடி பொசுக்குன்னு தனியா விட்டுட்டுப் போறீங்க…” என மிரண்டாள்.
“சாரிடி. அவள் ஊருக்குப் போறான்னு தெரிஞ்சு இருந்தா, நான் ஷிஃப்ட் மாத்தி இருப்பேன். எல்லாம் கொலாப்ஸ் ஆகிடுச்சு. ஒண்ணும் பயப்படாத தலைமாட்டுல வெளக்கமாறு வச்சுட்டுப் படு பேய் பிசாசு எதுவும் வந்துடாது.” என்று அப்பெண் சிரிப்புடன் கூற, தனுஜா காட்டத்துடன் முறைத்தாள்.
அதில் அவள் தப்பித்து ஓடி விட, ஷாந்தனு அவளைக் கேள்வியாய் பார்த்தான்.
“ப்ச்… இந்த வீட்ல வேற மூணு ரூம் இருக்கு. அவ்ளோ பெரிய வீட்ல நைட்டு எப்படி தனியா இருக்கப் போறேன்னு தெரியல.” எனப் புலம்பியவள், “சரி நீங்க கிளம்புங்க” என்றாள்.
“நீ ஏன் தனியா இருக்க. பேரண்ட்ஸ்?” என இழுத்தான்.
“ரெண்டு பேரும் உயிரோட இல்ல. ஒரு அக்கா மட்டும் தான். அவளும் கல்யாணம் ஆகி அப்ராட்ல செட்டில் ஆகிட்டா. எனக்கு வெளிநாடு போக விருப்பம் இல்லை. அதான் இங்கயே இருந்துட்டேன்.” என்றவளை சிறு அதிர்வுடன் பார்த்தவன், பின் தன்னை சமன்செய்து கொண்டு, “அப்போ உன்னை பொண்ணு கேட்கணும்ன்னா, அப்ராட் போகணுமா…” என வருந்துவது போல பாவனை செய்தான்.
இப்போது திகைக்கும் முறை அவளது ஆனது. சன்ன சிரிப்புடன் “குட் நைட் தஜு” என்றவன், வண்டியில் பறந்து விட, அவள் இதழ்களிலும் சிறு முறுவல் பிறந்தது.
அப்போது வெடுக்கென வம்சி எழுந்து விட, அவளும் பதறி எழுந்து, “என்னாச்சுப்பா?” எனக் கேட்க, “எனக்குத் தூக்கம் வருது” என்றான் படபடப்பாக.
“தூக்கம் வந்தா தூங்குங்க வசி…” என்றவளுக்கு பதில் கூறாமல், “என் பேக் என் பேக் எங்க?” என அங்கும் இங்கும் தேடினான்.
“வசி ரிலாக்ஸ்… உங்க பேக் எடுத்துத் தரேன் இருங்க.” என்றவள், சற்று நேரம் முன்பு ஷாந்தனு கொண்டு வந்த அவனது ஷோல்டர் பேகை எடுத்துக் கொடுத்தாள். அதனைக் கரம் நடுங்கத் திறந்து எதையோ அவன் தேட, “கையை ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்கப்பா. என்ன வேணும்னு சொல்லுங்க நான் எடுத்துத்தரேன்.” என்றதற்கு பதில் கூறாமல் இன்னும் தேடினான்.
பின் தேடியது கிடைத்து விட்ட நிம்மதியுடன் அதை வெளியில் எடுக்க, கிருபாஷிணிக்கு சில்லிட்டுப் போனது. பெரிய அளவிலான இரும்புச் சங்கிலி அவனது கைகளில். அந்த ஏ.சி அறையிலும் அவளுக்கு வியர்த்து நெஞ்சம் பயத்தில் துடிக்க, அடுத்து அவன் என்ன செய்வானோ என்ற பதைபதைப்புடன் எச்சிலை விழுங்கினாள்.
அவனோ அவசரமாக அந்த சங்கிலி கொண்டு அவனது கால்களை கட்டில் கால்களுடன் கட்டி விட்டு நிமிர, பாவையின் விழிகளில் தெறித்த பயத்தைக் கண்டு உள்ளுக்குள் உடைந்து போனான்.
“தூக்கத்துல நடந்து எங்கயாவது போய்டுவேன் அதான்” என அவளைப் பாராமல் கூறி விட்டு, மீண்டும் படுத்துக் கண்ணை மூடிக்கொள்ள, பெண்ணின் கலங்கிய விழிகளின் வழியே அவன் கலங்களாகத் தெரிந்தான்.