“உஷா… ராத்திரி முழுக்க அவன் வீட்டுக்கு வரலையா?” அண்ணாமலை அடுக்களையில் நின்றிருந்த உஷாதேவியிடம் சத்தம் கொடுக்க, “தெரியலைங்க… ஷாந்தனு வீட்ல இருந்துருப்பான். இன்னும் ஒரு வாரத்துல வெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னான். அது உண்மையா பொய்யான்னு கூட தெரியல. இவனுக்கு யாரு வெளிநாட்டுல வேலை குடுக்குறா… எனக்கு என்னமோ இவன் எங்கயாவது போய் பிரச்சனையை இழுத்துட்டு வருவானோன்னு பயமா இருக்கு” என்றார் எரிச்சலுடன்.
சோபாவில் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்த அப்சரா, “உள்ளூர்ல அசிங்கப்பட்டது போதாதுன்னு வெளிநாட்டுக்குப் போய் அசிங்கப்படணும்ன்னு ஆசை போல. பாத்துக்கோங்கப்பா. அங்க போனதும் அவனால ஏதாவது பிரச்சனை வந்தா, அவனோட பேரண்ட்ஸ்ன்னு உங்களை தான் கூப்பிடுவாங்க. பக்கத்துலன்னா பெத்த பாவத்துக்காகப் போய் சமாளிக்கலாம். இதே ஆஸ்திரேலியா வரைக்கும் போகணும்ன்னா, கஷ்டம். உங்களையும் வயலன்ஸ்ல உள்ள தூக்கிப் போட்டுற போறாங்க” என்று பெற்றோரை பதற விட்டாள்.
வம்சி கிருஷ்ணா, வெளிநாட்டுக்குச் செல்லப்போவதாய் வீட்டாரிடம் கூறியதும், அவனது மடிக்கணினியை சோதித்து விவரங்களை அறிந்து கொண்டவளுக்கு பொறாமைத் தீ பற்றி எரிந்தது. ‘ஏதோ சும்மா சொல்றான்னு பார்த்தா, இவன் கெட்ட கேட்டுக்கு ஆஸ்திரேலியால இருக்குற நம்பர் ஒன் யூனிவர்சிட்டில இருந்து ஜாப் ஆஃபர் வந்துருக்கு. இவன் படிச்ச ஸ்கூல்லயும் டென்த்ல நம்பர் ஒன், ட்வெல்த்ல நம்பர் ஒன், இவன் மார்க்கை வச்சு சேர்ந்த காலேஜ் சென்னைல நம்பர் ஒன். இப்ப வேலை பாக்குற காலேஜ் கூட டாப் ஒன் காலேஜ் தான். அங்க இருந்து துரத்தி வீட்ல உட்கார வைக்கலாம்ன்னு பார்த்தா, ஆஸ்திரேலியால கூட கிரேட் குறையல இவனுக்கு…’ என அப்பட்டமாகக் குமுறினாள்.
‘இந்த மனநிலை சரியில்லாதவனுக்கு கூப்பிட்டு வேலை கொடுக்குறாங்க பாரு அவங்களை சொல்லணும், மெடிக்கல் சர்டிபிகேட் எல்லாம் பார்ப்பானுங்களா மாட்டாங்களா… இவன் வேலை பாக்குற காலேஜ்ல எனக்கு சீட் கூட தரலை. பாத்துக்குறேன்… இவன் எப்படி ஆஸ்திரேலியா போறான்னு பாக்குறேன்.’ என்று சபதம் எடுத்துக் கொண்டவள், பெற்றோர் மூலம் அவனது கனவுகளை தவிடு பொடியாக்கும் முயற்சியில் இறங்கினாள்.
வெளியில் கிளம்பி வந்த மகிழனுக்கு, ஏனோ அப்பேச்சு வார்த்தை உவர்ப்பாக இல்லை. சிறு வயதில் அவனைப் பார்த்து பயந்த நாட்களெல்லாம் உண்டு. அதன் பிறகு அவனால் எந்த ஆபத்தும் இருக்கவில்லை. அவனும் அமைதியாக தான் இருந்தான். வம்சியிடம் சென்று பேச பயந்தே மகிழன் தமையனிடம் பழகவே இல்லை. பிடிக்கும் பிடிக்காது என்றதை எல்லாம் தாண்டி, அவனே வாழ்க்கையில் முன்னேற ஒரு பாதையைப் பிடித்து செல்கிறான், அதைக் கெடுப்பது போல பேசக் கூடாதே…
“அவனோட மெண்டல், ஹெல்த் ஸ்டெபிலிட்டியை செக் பண்ணாம விசா எல்லாம் தரமாட்டாங்கப்பா. இங்க இருந்தா தான், சும்மா நச்சு பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அவன் தான் போகட்டுமே…” என்று வாயைத் திறக்க, உஷாதேவி அடுக்களையில் இருந்து வந்து, “என்னடா வாய் நீளுது. அவருக்குத் தெரியும் என்ன செய்யணும்ன்னு… உனக்கு என்ன சொல்லிட்டு உன் வேலையைப் பார்த்துட்டுப் போய்டுவ… அவன் செஞ்சு வைக்கிற வேலைக்கு நாங்க தான அல்லோலப்படணும்!” என்று எரிச்சலடைய,
இப்போது மகிழனுக்கு கோபம் வந்து விட்டது.
“இல்ல தெரியாம தான் கேட்குறேன் அப்படி அவனால நீங்க என்ன அல்லோலப்பட்டீங்க. அவனுக்கு சீட்டு வாங்க அலைஞ்சிங்களா? இல்ல வேலை கிடைக்க தான் யார் கால்லயும் விழுந்தீங்களா? சொல்லப்போனா அவன் உங்களுக்கு பெருமை சேர்த்துத் தர்ற மாதிரி…” என்று பேசி முடிக்கும் முன், “போதும் நிறுத்துறியா என்று பொங்கினாள்” அப்சரா.
“இங்க பாரு…” என்று அவள் நெற்றியில் இருந்த தழும்பைக் காட்டியவள்,
“சின்ன வயசுல அவன் வெறிப்பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டதுல ஏதோ ஒரு பொருளோட முனை பட்டு என் நெத்தில ஏற்பட்ட தழும்பு இன்னும் மறையல. என் ப்ரெண்ட்ஸ் எல்லாம், உன் அண்ணன் மனநிலை சரியில்லாதவனாமேன்னு கேட்கும் போதெல்லாம் எவ்ளோ அசிங்கமா இருக்கும் தெரியுமா. ஒரு தடவை என் பர்த்டேக்கு என் ப்ரெண்ட்ஸை கூப்பிட்டுருக்கும் போது, பைத்தியக்காரன் மாதிரி கத்த ஆரம்பிச்சுட்டான். அப்போ என் ப்ரெண்ட்ஸ், உன் அண்ணனுக்கு மட்டும் தான் ஹிஸ்டீரியாவா இல்லை உனக்கும் இருக்கான்னு கேட்டு கேட்டே இன்சல்ட் பண்ணுனாங்க. இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். நீ வக்காலத்து வாங்கிட்டு வராத… என்ன திடீர்ன்னு உன் அண்ணன் மேல பாசம் பொங்குதோ. அவன் ஆஸ்திரேலியா போனா, அப்படியே நீயும் அவன் கூட ஜாயிண்ட் அடிச்சு பாரீன் போய்டலாம்ன்னு அவனைக் காக்கா பிடிக்கிறாயாக்கும்” என்று நாக்கில் நரம்பின்றிப் பேசினாள்.
“அறைஞ்சேன்னா தெரியும்…” என எகிறிய மகிழனை அண்ணாமலை அடிக்கப் போனார்.
“உனக்கும் அவனை மாதிரி புத்தி கெட்டப் போச்சாடா.” என்று கண்டித்தார்.
அவனோ அப்சராவைப் பார்த்து, “இவ்ளோ நாள் ஏன் பொங்கலைன்னு கேட்டியே இதோ இதுக்கு தான். என்ன சொன்னாலும் காதுல ஏத்திக்க மாட்டீங்கன்னு தெரியும். அதான், மூடிக்கிட்டு இருந்தேன்…. ஆமா நீ உனக்காக வாழுறியா? இல்ல உன் ப்ரெண்ட்ஸ்க்காக வாழுறியா… பேசுறவங்க நல்லா இருந்தாலும் பேசுவாங்க இல்லைன்னாலும் பேசுவாங்க. என்னமோ பண்ணித் தொலைங்க… அவனை மாதிரி நானும் வெளிநாட்டுக்குப் போனா தான் எனக்கு நிம்மதி…” என்று கடுகடுத்து விட்டுச் சென்றதில், அப்சராவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
“ப்ச் அப்பா இவனை விடுங்க. வம்சி வெளிநாட்டுக்குப் போக கூடாது. அவனைப் பிடிச்சு இங்கயே பூட்டி வைங்க.” என்று வஞ்சத்தைக் கக்க, அண்ணாமலையும் தலையாட்டினார்.
அது அவளுக்குப் போதவில்லை. அன்று தன்னை அவமானப்படுத்திய கிருபாஷிணியைக் கலங்க வைக்கும் அளவு சினம் எழ, இழிவாய் புன்னகைத்துக் கொண்டாள்.
—–
காலையில் எழும்போதே ஷாந்தனுவின் வீடியோ காலில் தான் கண் விழித்தாள் தனுஜா. கூடவே இதழ்களில் புன்னகை தங்கியே இருந்தது.
“குட் மார்னிங்…” சோம்பலாய் அவள் காலை வணக்கம் கூற, “குட் மார்னிங். என்ன இன்னும் விடியலையா? ஏதோ எங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு தூங்கிட்டு இருக்க.” என்று ஷாந்தனு கேலி செய்தான்.
“அதெல்லாம் உடனே செஞ்சுடுவேன். இன்னைக்கு காலேஜும் லீவ் தான். ஒன் அவர்ல வந்துடுறேன்.” என்றிட, “இப்ப பயம் இல்லையா?” எனக் கேட்டான் குறும்பாக.
“இல்ல நைட்டுல மட்டும் தான் பயம்… இப்ப பிரெண்டு வந்துடுவா…” என சிவந்த முகத்துடன் தனுஜா கூறியதில், “போனை வைடான்னு இன்டைரக்ட்டா சொல்ற அப்படித் தான?” என்றான் நக்கலாக.
போனை அணைத்து விட்டவளுக்கு இரவில் நிகழ்ந்த அனைத்தும் மனக்கண்ணில் மீண்டுமொரு முறை காட்சியானது.
‘ஐயோ கடவுளே! இன்னைக்கு நைட்டு என்னைக் காப்பாத்து…’ என அனைத்து விளக்குகளையும் போட்டே வைத்திருந்தவளுக்கு ஷாந்தனு போன் செய்தான்.
“தஜு இது என் நம்பர் தான். வீடியோ கால் பண்றேன் அட்டென்ட் பண்ணு” என்று உத்தரவாகக் கூறி விட்டு போனை வைக்க, அவளோ புரியாமல் அவன் செய்த வீடியோ காலை அட்டென்ட் செய்தாள்.
“என்ன?” அவள் குழப்பத்துடன் கேட்க,
“உனக்குப் பயமா இருக்குன்னு சொன்னீல. அதான், நைட்டு நான் வீடியோ கால்லயே இருக்கேன். பேசிக்கிட்டே தூங்கிடலாம். எப்படி என் ஐடியா?” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
அவளோ முறைக்க, “இதுக்கே முறைச்சா, நான் இதுக்கு முன்னாடி யோசிச்ச ஐடியாவுக்கு என்னை அடிக்கவே செய்வியோ… நல்லவேளை அந்த ஐடியாவை டிஸ்கார்ட் பண்ணிட்டேன்” என்று இளித்தான்.
“என்ன ஐடியா செஞ்சீங்க?”
“அதுவா… நீ தனியா இருக்கியே உனக்குத் துணைக்கு நான் வந்து கூட இருக்கலாம்னு பார்த்தேன்.” என்றதுமே அவளது விழிகள் நெருப்பைக் கக்க, “இரு இரு… அப்பறம் லேடீஸ் தங்குற வீட்டுக்குள்ள வந்து இருக்குறது முறையா இருக்காதுன்னு உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டலாம்னு பார்த்தேன்…” என்றிட, இன்னும் அவள் கண்களில் இருந்து நெருப்பு வந்து கொண்டே தான் இருந்தது.
“அட இரும்மா… நீ பாட்டுக்கு ஃபயரை அனுப்பி விட்டுக்கிட்டே இருக்க. இந்த நேரத்துல ஃபயர் சர்விஸ்க்கு கூட ஆள் இருக்காது” என்று பம்மியவன், “அப்பறம் இதுவும் ஜென்ட்ஸ் இருக்குற வீடு. என் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன், நான் ஒரு பொண்ணு கூட தங்குனேன்னு ஊர் முழுக்கப் பரப்பி, என்னை பிளே பாயா மாத்திடுவான். அதான் வீடியோ காலே போய்டுவோம்ன்னு இந்த முடிவுக்கு வந்துட்டேன். நீ ஓகே மட்டும் சொல்லு, எவன் என்ன நினைச்சாலும் பரவாயில்லைன்னு, சமத்தா உன் கூடவே வந்து இருந்துக்குறேன்…” என்றான் குறும்பு மின்ன.
அவளுக்கோ கோபம் மறைந்து சிரிப்பு எழ, “ஹே உன் பயத்துக்காக தான் சொன்னேன் தஜூ. வேற எந்த உள் அர்த்தமும் இல்லை” என்றதில்,
பற்வரிசை தெரிய சிரித்து விட்டாள்.
“யூ நோ வாட் தஜு… நீ சிரிக்கும் போதெல்லாம் ஒரு நாலு ஏஞ்சல்ஸ் என் பின்னாடி நின்னு வயலின் வாசிச்சுக்கிட்டே இருக்காங்க” என்று பீல் செய்து கூற,
“ஷாந்தனு நீங்க என்னை ஃப்ளர்ட் பண்றீங்க” என்றாள் கேலியாக.
“வேற என்ன செய்ய… உருகி உருகி காதல் டயலாக் சொன்னா, நீ ஓகே சொல்லிடப் போறியா என்ன!” என நொடித்திட, அவள் சிரித்தாள்.
அதன் பிறகு, நிறைய பேசினார்கள்… அனைத்துமே வெறும் ஸ்வீட் நத்திங்ஸ். போனை டேபிள் மீது வைத்து சார்ஜ் போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்தபடி அவனிடம் பேசிக்கொண்டே அவள் உறங்கியும் விட, சில நிமிடங்கள் உறங்கும் அவள் முகத்தைப் பார்த்தபடி அவனும் உறங்கிப் போனான்.
காலையில் கண் விழிக்கும் போதே உறங்கும் பெண்ணவளின் முகத்தை ரசித்து விட்டே அழைப்பைத் துண்டித்து விட்டு குளித்துக் கிளம்பினான்.
—–
“நீ வீட்டுக்குப் போ கிருபாஷிணி.” இன்னும் இரு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அவனுக்கு அவள் அருகில் இருப்பதில் பிடித்தமில்லை.
அவளோ சிரத்தையாக, அவனுக்கு மதிய உணவை ஊட்டி விட்டபடி, “போகணும். அம்மாவைப் பார்த்துட்டு, ஃப்ரெஷ் ஆகிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுறேன். அதுக்குள்ள நீங்க ஒரு குட்டித் தூக்கம் போட்டுடுங்க.” என்றாள்.
“திரும்ப வரத் தேவை இல்லை.” வம்சி உறுதியாகக் கூற, “அதை நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றாள் வெடுக்கென.
“நான் சொல்லாம வேற யார் சொல்லுவா? இப்ப நீ என்ன பிளான்ல தான் இருக்க…” சற்றே சலிப்புடன் வம்சி கிருஷ்ணா வினவ,
“வேற என்ன பிளான்… உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு ஃபேமிலி இஸ்திரி ஆகுற பிளான் தான்” எனக் குறும்புடன் கண் சிமிட்டினாள்.