நடுக்கத்துடன் மனதிலிருக்கும் பயத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியபடி அமர்ந்திருந்த ஆறடி ஆண்மகனின் ஒடுங்கிய தேகத்தைக் கண்டு முற்றிலும் உடைந்துப் போனாள் கிருபாஷிணி.
அவள் பார்த்துப் பழகிய வம்சி கிருஷ்ணா இவனல்லவே! கண்ணில் எப்போதும் ஒளிரும் குறும்பும் சன்ன சிரிப்பும் வார்த்தைக்கு வார்த்தை பதில் வைத்திருக்கும் இடக்கானப் பேச்சும் அன்பைப் பொழியும் முகமும் அவனது அடையாமாகிற்றே!
இப்போது, கண்ணிற்குக் கீழே கருவளையம் விழுந்து, வாடிப் போன முகத்துடன், உயிர்ப்பற்ற பார்வையுடன், சிரிப்பைத் தொலைத்து தனக்காக தன் மீதிருக்கும் மலையளவு காதலையும் மண்ணுக்குள் புதைத்திட நினைக்கும் இந்த வம்சியை இன்னும் இன்னும் காதலித்துத் தொலைத்தது அவள் மனது!
நண்பனை சரி செய்ய இயலாத இயலாமையுடன் ஷாந்தனு கண்ணில் வழிந்த நீருடன் நிற்க, தனுஜாவிற்கு இருவரது கண்ணீருமே ஒவ்வொரு விதத்தில் வலியைக் கொடுத்தது.
ஷாந்தனுவின் கையைப் பற்றி ஆறுதலுரைத்தவள், கிருபாஷிணியைக் கண் காட்டிட, அவளோ வம்சியின் மீதிருந்தப் பார்வையைத் திருப்பாமல் நின்றாள்.
சுபாஷ்வருக்கு என்ன உணர்வை வெளிப்படுத்துவது என்றே புரியவில்லை. தங்கையை அழுக வைத்தவனின் மீது கோபம் கொண்டே அவளை இழுத்துக்கொண்டு வந்தான். இங்கோ அவனது காதலின் நிலை கண்டு வருந்தியவனுக்கு, அவன் சொன்னது போல எந்த விபரீதமும் நிகழ்ந்திடக் கூடாதே என்ற பரிதவிப்பும் எழுந்தது.
பின் தெளிந்த முகத்துடன், கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், “ஷானு அண்ணா அவரு டேப்லட் போடல. சாப்பாடும் பாதி தான் சாப்பிட்டாரு. சாப்பிட வைங்க.” என்றதில், அத்தனை நேரம் முகம் காட்டிய பயத்தை மறைத்துக் கொண்டான் வம்சி கிருஷ்ணா.
ஷாந்தனு புரியாமல் அவளைப் பார்க்க, அவளோ எதுவும் நடவாதது போல “நான் வீட்டுக்குப் போயிட்டு வந்துடுறேன்.” என்று கிளம்பிய விட, வம்சி நிமிர்ந்து பார்க்கும் நேரம் அவள் அங்கு இல்லை.
இதயத்தில் எதுவோ பிசையும் நிலை. என்னவென சொல்லத் தெரியாமல், வம்சி தவித்தபடி அவள் சென்ற திசையையே பார்க்க, ஷாந்தனு அவனுக்கு உணவு கொடுக்க முயன்று தோற்றே போனான்.
“உடம்பு சரி ஆகி ஆஸ்ட்ரேலியா போகணும்ன்ற எண்ணம் இல்லையா உனக்கு” என்றதும் தான், சிறிது உண்டு விட்டு மாத்திரையை உட்கொண்டான்.
வம்சியைப் பற்றி விசாரித்த சந்திரிகாவிற்கு இன்னும் முழு விவரம் தெரியாது. அவரிடம் சொல்லி வருத்தப்படவைக்க, அண்ணன் தங்கை இருவருமே விரும்பவில்லை. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே குளித்துக் கிளம்பியவள், அலுவலகம் சென்று பார்வையிட்டு விட்டு, இரவில் தான் மருத்துவமனைக்குச் சென்றாள்.
அவள் இல்லாத இந்த ஆறு மணி நேரப் பொழுதுகளில் துளி தூக்கம் இல்லை வம்சி கிருஷ்ணாவிற்கு.
இத்தனைக்கும் அவனுக்குக் கொடுத்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் உறக்கத்தைத் தூண்டுபவன!
கொட்ட கொட்ட விழித்திருந்தவனிடம், “கொஞ்ச நேரம் தூங்கு வம்சி” என ஷாந்தனு கெஞ்ச அவனோ கிஞ்சித்தும் படுக்கவில்லை. படுத்தாலும் உடனே எழுந்து அமர்ந்து கொண்டான்.
கிருபாஷிணி உள்ளே நுழைந்ததும், இருவரும் வெளியில் சென்று அமர,
“ஏன் இவரு இப்படி இருக்காரு ஷாந்தனு. டாக்டரக் கூப்பிடலாமா பயமா இருக்கு” என்று மிரட்சியுடன் தனுஜா கேட்க,
“உனக்குத் தெரியுது. அது உன் க்ரஷ்க்கு தெரியலையே. நீ வேணும்ன்னா சொல்லிப் பாரு.” எனக் கிண்டலடிக்க, அவனை முறைத்தவள், “சும்மா க்ரஷு ப்ரஸுன்னு கலாய்க்காதீங்க” எனக் காட்டாமாகக் கூற,
“ஏன் கோவப்படுற… எனக்குக் கூட க்ரஷ் இருக்குத் தெரியுமா” என்றதும் அவள் யாரெனப் பார்த்தாள்.
“ராஷ்மிகா. மை டார்லிங்! தினமும் ஒரு தடவையாவது என் கனவுல தரிசனம் குடுத்துடுவாங்க.” என நெஞ்சில் கை வைத்து பீல் செய்து சொல்ல,
“பக்கத்துல இல்லாத, எட்டவே முடியாத பெர்சன் மேல வர்றதுக்கு பேர் தான் க்ரஷ். ஆனா, வம்சி சார் ஓகே சொல்லிருந்தா…?” என அவள் நிறுத்த,
“ஆனா சொல்லலையே… அப்போ இதுக்கு என்ன பேர்?” கையைக் கட்டிக்கொண்டு அவன் கேட்டதில், அவளிடம் பதில் இல்லை.
“எனக்கு அவரைப் பிடிக்கும். இப்போ ஒரு ப்ரெண்டா அவரைப் பிடிக்கும். இதை லவ்ன்னு கிளாசிஃபைட் பண்ண வேணாம். ஆனா, க்ரஷ்ன்னு சொல்லாதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு.” என்று முணுமுணுத்தாள்.
‘அப்பாடா இன்னும் லவ்வுன்னு சொல்லிடுவாளோன்னு பயந்தே போய்ட்டேன்…’ என்று நிம்மதியானவன்,
“சரி அப்போ என்மேல இருக்குறது என்ன தஜு?” என்றான் குறும்பாக.
அதில் சட்டென நிமிர்ந்தவள், “ஹான்?” என விழிக்க, அவன் அர்த்தப்பார்வை வீசினான்.
அவளோ பதிலற்று அமர்ந்திருக்க, “அப்ராட்க்கு டிக்கட் போடலாமா வேணாமான்னு சொன்னா, முன்கூட்டியே டிக்கட் புக் பண்ண வசதியா இருக்கும்.” என்றதில், அவளை மீறி குறுநகை பிறந்தது.
“இதுக்கு எதுக்கு அப்ராட், வீடியோ கால்லேயே பேசிடலாம்.” மெல்லிய குரலில் அவள் கூற, அதைப் புரிந்து கொள்ளாதவன், “சரி நீ ஓகே சொல்லு. வீடியோ கால் போடலாம்” என்று அங்கேயே நின்றான்.
“நீங்க இந்த ஜென்மத்துல கமிட் ஆக மாட்டீங்க” என்று தலையில் அடித்துக் கொண்ட பிறகே, “ஹே அப்போ ஓகே வா?” என மகிழ்வுடன் கேட்க,
“நேத்து வரை கூட உங்க மேல ஒரு ஸ்பார்க் வரும்ன்னு எதிர்பார்க்கல. நீங்க என் கூட இருக்கும் போது ரொம்ப சேஃபா ஃபீல் பண்றேன். வம்சி சாரை லவ் பண்ணது உங்களுக்கு சங்கடமா இல்லைன்னா, என் அக்காகிட்ட பேசுங்க” என்றவளின் கையைப் பற்றியவன்,
“ஆமா, இந்த அம்மா மட்டும் தான் உலகத்துல லவ் பண்ணுனாங்க… என் ஸ்கூல் , காலேஜ் லவ் லிஸ்ட்லாம் கேட்டு நீ என்னை ரிஜெக்ட் பண்ணாம இருந்தா போதும். இங்க காதல் யார் வேணாலும் பண்ணலாம் தஜு. ஆனால் அது ஜெயிச்சாலும் தோத்தாலும் அதுல ஒரு நேர்மை இருக்கணும். அந்த நேர்மை தான் உன்னை அதிகமா பிடிக்க வச்சுச்சு. ஐ லவ் யூ சோ மச் தஜு. இட் மீன்ஸ் அ லாட்.” எனத் தலை சாய்த்து காதலைப் பகிர்ந்தவனின் மீது நேசம் பொங்கியது.
——
கண் சிவந்து அமர்ந்திருந்தவனின் கோலம் கொண்டு உள்ளுக்குள் குமுறினாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை கிருபாஷிணி.
“தூங்கலை?”
“தூக்கம் வரல!”
“ஏன்?”
அவனிடம் பதில் இல்லை.
“ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்ன?” கேட்கும் போதே ஒரு வித ஏக்கம் வெளிப்பட்டது அவனது குரலில்.
“என் வேலையையும் நான் பார்க்கணுமே! நீங்க ஆஸ்திரேலியா போனதுக்கு அப்பறம் மறுபடியும் பழைய வாழ்க்கையை லீட் பண்ணனும்ல.” எவ்வித பூச்சும் இன்றி இயல்பாகக் கூறியவளை உணர்வற்றுப் பார்த்தான்.
“சரி நைட்டு சாப்பிட்டுட்டு டேப்லட் போட்டுட்டு தூங்குங்க. அப்பறம் அன்டைம்ல சாப்புடுற மாதிரி ஆகிடும். ஷானு அண்ணாவைக் கூப்புடுறேன்” என்றவள், வெளியில் அமர்ந்திருந்த காதல் புறாக்களை அழைத்தாள்.
ஷாந்தனுவிடமே உணவைக் கொடுக்கக் கூறி விட்டு, மடிக்கணினியுடன் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து விட, அவளை விசித்திரமாகப் பார்த்த ஷாந்தனு, உணவை ஊட்டி விட முயன்றான்.
வாயை இறுக்கி மூடியவன் தான், ஷாந்தனு எவ்வளவு கெஞ்சியும் திறக்கவில்லை.
“என்னடா இப்படி அடம்பிடிக்கிற. ஏற்கனவே பகல் முழுக்கத் தூங்கல நீ. இதுல சாப்பிடாம இருந்து எதையாவது இழுத்துக்காத.” என என்னென்னவோ கூறியும் அவன் அசையாமல் இருக்க, “உனக்கு ஆஸ்திரேலியாக்கு குணமாகிப் போகணும்ன்னு ஆசை இருக்கா இல்லையா?” மதியம் எய்த அம்பையே மீண்டும் எய்ய, அப்போதும் திணக்கமாக அமர்ந்து கிருபாஷிணியை வெறித்தானே தவிர எதிர்வினை ஆற்றவில்லை.
“கிருபா!” ஷாந்தனு பாவமாக அழைக்க, அவளோ அனைத்தும் காதில் விழுந்தாலும் புரியாத பாவனையுடன் நிமிர்ந்து, “என்னண்ணா சாப்பிட்டு முடிச்சுட்டாரா?” எனக் கேட்க,
“ஆக, நீ எதையுமே கேட்கல அப்படி தான?” என்றான் முறைப்பாக.
“இப்ப என்னவாம் உங்க ப்ரெண்டுக்கு. இந்த நோட்டீஸ் பீரியட்ல வேலை பார்க்காம ஓபி அடிப்பீங்களே அதே மாதிரி தான் இந்த ஒரு வாரத்தை நான் நோட்டிஸ் பீரியடா எடுத்துக்குறேன். கூடவே தான் இருப்பேன். ஆனா, அவர் வேலையை அவரு பாத்துக்கட்டும்… ஆஸ்திரேலியா போனதற்கு அப்பறம் முடியாமப் போனா அங்க வேற கான்டராக்ட் காதலி அரேஞ்சு பண்ணிப்பாரு உங்க பிரெண்டு. சாப்பிடலைன்னா வச்சுட்டு போங்க.” என்று எகத்தாளத்துடன் பதில் கூறியவள், மீண்டும் மடிக்கணினியில் புதைந்தாள்.
அன்று கல்லூரியில் அவனைத் தவிர்த்து, அவனது பொறாமைத் தீயை கிளப்பி விட்டதை தெரியாமல் செய்தவள் இன்று அதனைத் தெரிந்தே செய்தாள்.
அவனைத் தவிர்த்தாள்! கூடவே இருந்து கொண்டு தவிர்ப்பது அவனால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்று இத்தனை நாட்களில் தெரிந்து வைத்திருந்தவள், அதையே கடைபிடித்தாள்.
வம்சிக்கோ, தன்னை யாரோ போல எண்ணி அவள் பேசியதில் கோபம் கொப்பளித்தது.
இருவரது கண்ணாமூச்சி விளையாட்டையும் கண்டு சிரிப்பு எழ, “சரி மச்சி அப்போ நீயே சாப்பிட்டுக்க…” என்றவன், நைசாக தனுஜாவை இழுத்துக்கொண்டு வெளியில் செல்ல,
வம்சி தட்டைக் கையில் எடுத்துக் கொண்டான்.
ஏற்கனவே ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, மறுகையில் கத்தியால் காயம் ஏற்பட்டு இருந்தது.
இரு கையுமே வலித்தும், முயன்று இட்லியைப் பிய்க்க முயன்றான். “ஸ்ஸ்” அவனை மீறி வலியில் முனகி விட, அவளோ சட்டென எழுந்தாள்.
தனக்கு ஊட்டி விட வரப்போகிறாள் என்றெண்ணி அவன் ஆர்வத்துடன் பார்க்க, கையில் ஸ்பூனுடன் வந்தவள், இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் தோய்த்து வைத்து விட, அதில் அவனது சினம் எல்லையைக் கடந்தது.
தட்டைக் கீழே வைத்து விட்டு, நகரப்போனவளின் கையை இறுக்கப் பற்றி தன்னருகே இழுத்தவன், “என்னடி… என்னை சீண்டிப் பாக்குறியா?” என சீறிட,
“நான் என்ன பண்ணுனேன். நீங்க தான உங்களை விட்டுப் போக சொன்னீங்க. அதை தான் செஞ்சுட்டு இருக்கேன்.” என்று சிலுப்பினாள்.
கோபம் தலைக்கேற, கையை விட்டு விட்டு, அவளது இடையைச் சுற்றி வளைத்து அருகில் இழுத்தவனது இதழ்கள் அவள் இதழ்களுக்கு அருகில் நெருங்கி இருக்க, ஒரு கையால் அவளது கையைப் பற்றி இட்லியை எடுக்க வைத்து, அவன் வாயில் திணித்துக் கொண்டான்.
மீண்டுமொரு முறை அதே போல செய்ய, “ப்ச்…” என அவன் கையை உதறியவள், தானே எடுத்து ஊட்டி விட, அவன் இதழோரத்தில் வெற்றி நகை.
“நீ சாப்பிடல…” அவள் இதழ்களை பார்வையால் வருடியபடி வம்சி கேட்க,
“அப்பறம் சாப்பிடுறேன்.” என்றாள் அவனைப் பாராமல்.
“இப்பவே சாப்டேன்!” என்ற ஆடவனின் தொனி புரியாமல் கிருபாஷிணி நிமிர,
“இன்னும் ஒரு வாரம் நம்ம கான்டராக்ட் இருக்குல்ல. ஐ மீன், உன் தியரி படி நோட்டீஸ் பீரியட்…” என ஆழ்ந்த குரலில் கேட்டதில், ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“அப்போ சரி, சாப்பிடு.” என்றவன், தனது வாயில் இருக்கும் இட்லியை அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினான்.
இதனை எதிர்பாராமல் திகைத்தவள், அவனைத் தள்ளி விட முயல, அவன் அதற்கு அனுமதித்தால் தானே!
மெல்ல, நிதானமாக அவளை இட்லியை விழுங்க வைத்தவன், விலகி அவள் முகம் பார்க்க, அதுவோ சிவந்திருந்தது.
“ஊட்டு!” இதழ்களை ஈரப்படுத்தியபடி அடுத்த விள்ளலை வம்சி கேட்க, கிருபாஷிணி முறைக்க முயன்று தோற்று விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
ரசனைப் புன்னகை வீசியவன், “இது எனக்குடி. ஊட்டு” என்றிட, நிமிராமலேயே கொடுத்தவள், அவன் உண்டு முடித்து “இது உனக்கு… சீக்கிரம் குடு.” என்று கேட்க, “வசி… ப்ளீஸ்” என நகர முயன்றாள்.
அவன் தான் ஏற்கனவே கிடுக்குப் பிடியாக அவளை சுற்றி வளைத்திருந்தானே!!!
“பிடிக்கலையாம்மா?” வெண்பிளான்ட் அணிந்த கரத்துடன் அவள் கன்னத்தைப் பற்றிக்கொள்ள,
“பிடிச்சுருக்கே. அதான் வலிக்குது!” வேதனை நிறைந்த பாவையின் குரலில் இறுக்கத்தைத் தளர்த்தியவன்,
“ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி பேசி பைத்தியம் மாதிரி நடந்துக்குறேன்ல… ஹிஸ்டீரியாவை விட ரொம்ப மோசமானது இந்த காதல் நோய். மிருகத்தை மனுஷனாக்கும். மனுஷனை மிருகமாக்கும். என்னை வெறிப்பிடிக்க வைக்குதுடி உன் காதல்! உன்கூடவே இதே மாதிரி உரசிகிட்டே இருக்கணும்ன்னு என் உடம்பு கேட்குது… உன்னை விட்டுத் தூரமா போய்டுன்னு என் மனசு அழுத்துது. ஆனா தூரமா போகும் போது உன் தவிர்ப்பும் உதாசீனமும் என்னை மிருகமாக்குது. நான் என்ன செய்றதுன்னே தெரியல பாஷிணிம்மா!” என்று தேய்ந்த குரலில் கூறியவனின் கண்களில் கண்ணீர் மின்னியது.
“உஷ்…” என ஆள்காட்டி விரலால் அவனது வாயை மூடியவள், “எதுவும் யோசிக்க வேணாம். எதுவும் பேசவேணாம். நாளைக்கு நடக்கப்போறதை இன்னைக்கே யோசிச்சுப் பயந்தா இன்னைக்கான வாழ்க்கையை நம்ம வாழ முடியாது வசிப்பா. இப்போ எனக்குப் பசிக்குது. ஊட்டி விடுங்க.” எனக் கண் மூடி அவனை நெருங்கி நின்றாள்.
அவளைத் தொண்டை அடைக்கப் பார்த்தவன், மீண்டும் முத்தங்களால் உணவை ஊட்டிக்கொள்ள இருவரது மனமும் வயிறும் நிறைந்தே போனது.
அவனது கைவண்ணத்தில், அவளது அதரங்கள் வலித்து சிவந்து தடித்தது.
“இன்னொரு இட்லி?” குறும்புடன் வம்சி கேட்க, “சாப்பிட்டு வயிறு வலிச்சா அதுல ஒரு நியாயம் இருக்கு. எனக்கு வாய் வலிக்குதுப்பா.” என்றாள் சிறு வெட்கத்துடன்.
அதில் அவனுக்கும் புன்னகை எழ, அவனை மாத்திரையை உட்கொள்ள வைத்தவள், “தூங்குங்க” என்று படுக்க வைத்தாள்.
அவனோ படுக்காமல், அருகில் வைத்திருந்த சங்கிலியை எடுக்க, கிருபாஷிணியின் முகம் மாறியது.
அதனைப் பிடுங்கி தூரப் போட்டவள், “அது வேணாம்ப்பா” என்றாள்.
“வேணும்மா. எங்கயாவது நடந்து போய்ட்டா தேவையில்லாத பிரச்சனை” அவன் படபடக்க,
“உஷ்… நீங்க எங்கயும் போக மாட்டீங்க. அப்படி போனா, உங்களை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். இப்போ படுங்க” என்று அதட்டினாள்.
“இல்ல உன்னால முடியாதும்மா. அதைக் குடு ப்ளீஸ்” என்று கெஞ்சிட,
“இப்படி எல்லாம் சொன்னா நீங்க கேட்க மாட்டீங்க” என்றவள், மெத்தையில் அமர்ந்து அவனை மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.
“நான் முழிச்சு உங்களைப் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன். படுங்க” என்றதில்,
“இல்லம்மா சில நேரம் எனக்கு தூக்கமே வராது. எவ்ளோ நேரம் நீ என்னைப் பார்த்துக்கிட்டே இருக்க முடியும்.” என எழ முயல, வம்படியாகப் படுக்க வைத்தவள், “யோவ் ப்ரொபஸரே… ஒழுங்கா படுயா.” என்று போலிக் கோபத்துடன் முறைத்தாள்.
அதில் மென்மையாய் இதழ் விரித்தவன், இன்னும் தயக்கம் அகலாமல் கண்களை அங்கும் இங்கும் உருட்டிக் கொண்டிருக்க, அவ்விழிகளுக்கு மென் முத்தம் ஒன்றைக் கொடுத்தாள்.
அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், அவனது கேசத்தையும் வருடிக் கொடுத்து, மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்.
கண்ணோடும்
நெஞ்சோடும் உயிரால்
உன்னை மூடி கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும்
மதி முகமே உன் ஒலி
அலை தன்னில் நானிருப்பேன்
எங்கே நீ சென்றாலும் அங்கே
நான் வருவேனே மனசெல்லாம்
நீதான் நீதானே ஓஹோ …
நீ தூங்கும்
நேரத்தில் என் கண்கள்
தூங்காது கண்மணியே
ஹோ கண்மணியே
பூ ஒன்று உன்
மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய்
போகுமே ஓ ஓ
இறுதி வரியில் விசும்பியவள், ஆடவனைக் குனிந்துப் பார்க்க, அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.