அதிகாலை 5.30ஐ தாண்டிய நேரம் அடுக்களைக்குள் இருந்து பெரிய பாத்திரம் ஒன்றை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் நீலா.
“பார்த்து பொறுமையா வாங்க அண்ணி” என்ற விஜயா, அவர் அருகே வந்ததும், அவரிடம் இருந்ததை வாங்கி கீழே வைக்க,
“ஐஞ்சு வகை சாதமும் ரெடி… வெல்லம் பச்சரிசி தயார் ஆகிட்டா கிளம்பிடலாம்” என்றார் நீலா.
விஜயா, “பழம், பூ, இலை எல்லாமே நானும் எடுத்து வச்சுட்டேங்க அண்ணி… நீங்க மஞ்சள் கயிறு மத்த உருப்படி எல்லாம் இருக்கான்னு ஒருக்க பார்த்துடுங்க” எனும்போதே,
“இந்தாமா வெல்லபச்சரிசி… எடுத்து வையு” என பாத்திரத்தை நீட்டினார் மங்களம்.
அத்தனை பொருட்களும் தயாராய் இருக்க கிளம்புவதற்கு ஆயத்தமாயினர்.
வாசலில் வந்து நின்ற காரில் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மூன்று பெண்களும் அமர, “அடியே அஷ்டா, சீக்கிரம் வா… வண்டியை வந்தாச்சு பாரு” என குரல் கொடுத்தார் நீலா.
அடுத்த வினாடி, “ இதோ வந்துட்டேன்ம்மா” என தன் கல்யாண பட்டில் மிதமான ஒப்பனையோடு விரைந்து வந்து விஜயா அருகில் அமர்ந்துக்கொண்டாள் அஷ்டலட்சுமி.
“கல்யாணத்துல இருந்தத விட இப்போ ஒரு சுத்து பூசிட்டா… இல்ல அண்ணி?” மருமகளை கண்களில் நிறைத்துக்கொண்டு அவர் சொல்ல,
அஷ்டா, “அப்பத்தா….!?” என முறைக்க, “என்னம்மா இப்படி சொல்றீங்க… இங்க இருந்தப்போ மட்டும் நீங்க என்ன வேலை வாங்கிட்டா புள்ளைக்கு சோறு போட்டீங்க?” என மருமகளுக்காய் பரிந்துக்கொண்டு விஜயா வர,
“நீங்க சும்மா இருங்கண்ணி… நீங்க இப்டி இருக்க போய்தான் இவ ஆட்டம் கட்டிட்டு இருக்கா! நிறைய சீரியல்லாம் பார்த்து ‘மாமியாராய் இருப்பது எப்படி?’ன்னு முதல்ல கத்துக்கோங்க… இல்லன்னா இவகிட்ட எல்லாம் சரிப்படாது” என்று புன்னகைத்தார் நீலா.
பிறந்த வீட்டு உறவு அவள் காலை வார, புகுந்த வீட்டின் உறவோ, “அதெல்லாம் என் மருமக செய்ய வேண்டியப்ப செய்வா பாருங்க” என விட்டுக்கொடுக்காமல் சொன்னது.
அஷ்டாவுக்கு இந்த இரண்டு நாட்களில் ஆயிரம் முறையாவது தோன்றியிருக்கும், ‘இப்டி ஒரு மாமியார் எல்லாம் யாருக்கு கிடைப்பார்?’ என்று.
சுற்றுலா முடிந்து வந்ததுமே மருமகளை காண இங்கே வந்துவிட்டிருந்தார் விஜயா. இருநாட்களாய் அவள் வீட்டில் தான், அவள் அறையில் தான் தங்கியும் இருக்கிறார்.
நடந்ததெல்லாம் மேம்போக்காய் நீலா சொல்லி தெரிந்திருந்தாலும் இந்த நிமிடம் வரை ஒருவார்த்தை ‘ஏன் இப்டி?’ என வரவில்லையே அவர் வாயில் இருந்து.
அஷ்டா தான் அவர் முகம் காண கூசி சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாள்.
அவளது புடவை தலைப்பில் ஒதுங்கிட்டிருந்த ஆரத்தை சரிசெய்துவிட்ட விஜயா, “கூட்டத்துல எங்கேயும் தனியா போய்டாதமா சரியா!? ஜனக்கூட்டம் இருக்க இடத்துல யாரையும் ஒன்னும் சொல்லமுடியாது”
‘நகைகள் பத்திரம்’ என்பதை மறைமுகமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘சரி’ என தலையசைத்த அஷ்டாவுக்கு அதற்குமேலும் இந்த குற்றவுணர்ச்சியை பிடித்து வைக்க இயலாது போக, “அத்தே என்னை மன்னிச்சுடுங்க” என்றாள் அவருக்கு மட்டுமே கேட்கும்படி.
அவள் கரத்தை அழுத்தி கொடுத்த விஜயா, “இனி ஒருமுறை இப்படி மன்னிப்பு கேட்காத மாதிரி நடந்துக்கோ” என்றுவிட்டார்.
‘மன்னிப்பா? எதற்கு? ஏன்? என்ன நடந்தது? உன் பக்க நியாயம் என்ன?! என்ன செய்தாய் நீ?’ இப்டி ஒன்றுமே கேட்காது சுருக்கமாய் அவர் முடித்துவிட அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
அவள் பார்வையை உணர்ந்து திரும்பியவர், “அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்… என் பையனை நீ சந்தோஷமா வச்சுருந்தா அதுமட்டுமே போதும்” என்றவர், “சந்தோஷமா இருக்கீங்க தானே!?” என்று கேட்க,
பதிலற்ற அவள் கன்னசிவப்பு காட்டிக்கொடுத்தது இருவரின் வாழ்வும் துவங்கிவிட்டதை.
இதைத்தாண்டி வேறென்ன வேண்டும் அவருக்கு?
கார் கரூர் பைபாஸ் ரோட்டை நெருங்கையிலேயே மக்கள் கூட்டம் திரலென இருப்பதை காண முடிந்தது.
அன்று ஆடிப்பெருக்கு திருநாள்.
குடும்பம் குடும்பமாய் காவேரி அன்னையை தரிசிக்க வருவதும் போவதுமாய் அந்த அதிகாலையிலேயே கூட்டம் களைக்கட்டியது.
கிடைத்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு குடமுருட்டி அய்யாலம்மன் படித்துறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் நால்வரும்.
எங்கு காணினும் மக்கள் வெள்ளம்!!!
ஆங்காங்கே நீர்மோர் பந்தலும், உணவு பொட்டாலங்கும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
நொறுக்கு தீனி கடைகள், ராட்டினங்கள், விளையாட்டு ஜாமான் கடைகள் என கிடைத்த இடத்தில் அமர்ந்து பலரும் போனி பார்க்க அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்ற அஷ்டாவின் கண்கள் அவள் கணவனை தேடியது.
நீலாவோ, “மாப்பிள்ளை தம்பி இங்க தானே நம்மளை நிக்க சொல்லுச்சு?!” என விஜயாவிடம் கேட்க,
சொன்னது போல அவர்கள் வந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மடித்து கட்டிய பட்டுவேட்டி சட்டையுடன் பளிச்சென வந்து நின்றான் வீரா.
“சாமி கும்பிட்டுடலாமா தம்பி?!” என்றார் மங்களம்.
“மாமாவும் அண்ணனும் வரட்டும் பாட்டி… சேர்ந்து போய்டுவோம்” என்றவன் கண்கள் தூரத்தில் அவர்களை தேட, சண்முகமும் சிதம்பரமும் வேக எட்டுகளுடன் வந்துக்கொண்டிருந்தனர்.
திருவிழா சமயம் எப்போதும் அன்னதானமும் நீர்மோர் பந்தலும் அமைப்பது வீராவின் வழக்கம். இம்முறை சற்று கூடுதலாகவே ஏற்பாடு செய்திருந்தான். அதை மேற்பார்வை பார்க்க காலையில் நேரமே மூன்று ஆண்களும் அங்கே வந்திருந்தனர்.
அனைவருமாய் சேர்ந்து படித்துறையில் கிடைத்த இடத்தில் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைக்க, அஷ்டா அவர்களுக்கு உதவ ஆரம்பித்தாள்.
அதைக்கண்டதும், “அச்சோ… என் அக்கா மவ வேலை செய்யுறதை பார்க்க ரெண்டு கண்ணு பத்தலையே ஆண்டவா!” என சிதம்பரம் சொல்ல,
“மாமா?!” என அவள் அவரை முறைக்க நிமிடத்தில் எல்லோர் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
மனைவி செய்வதை பார்த்துக்கொண்டு நின்ற வீராவை சங்கடமாய் ஏறிட்டார் சண்முகம்.
அவருக்கு ‘தான் ஒரு நல்ல தந்தை இல்லையோ?’ என்ற உறுத்தல் அதிகமாய் இருந்தது.
மகள் கோபித்துக்கொண்டு வந்த பின்னர் இவராய் சென்று வீராவிடம் ஒருவார்த்தைக்கூட பேசியிருக்கவில்லை.
அவனாகவே வந்தான்… இணைந்தான்… சிரித்தான்.
அவனிடம் மனம் விட்டு பேசினாலன்றி தன் உறுத்தல் குறையாது என ஸ்திரமாய் தோன்ற, “வீரா ஒரு நிமிஷம்!” என்றழைத்தவர் அவனை சற்று தள்ளி தனித்து அழைத்து சென்றார்.
“சொல்லுங்க மாமா” என்றான் எந்தவித விகல்பமும் இல்லாமல்.
எப்படி பேசுவது என ஆயிரம் தயக்கம் இருந்தாலும் அத்தனையும் ஒத்துக்கிவிட்டு, “நான் என் பொண்ணை சரியா வளர்க்கலன்னு நினைக்குறேன்” என முதல்முறையாய் ஒப்புக்கொண்டார் சண்முகம்.
‘இப்போது என்ன?’ என்பதை போல அவன் புருவம் சுருக்க,
“இனி எனக்கு புள்ள பாக்கியமே கிடைக்காதோன்னு ரொம்ப ஏங்கி, நிறைய வேண்டுதலுக்கு அப்புறம் பொறந்தவ அவ… அவளுக்கு ஒவ்வொரு வயசு ஏறும்போதும் எங்க இவளும் எனக்கில்லாம போய்டுவாளோன்னு பயந்து பயந்தே அவளை வளர்த்தேன். ஒருவார்த்தை திட்டுனது இல்லையே இதுவரை!
திட்டுறது என்ன? ஒரு பார்வை கூட கோபமா பார்த்தது இல்ல… எனக்கு என் பொண்ணுன்னா உயிரு. என் அம்மாக்கும் அப்படிதான்…
ஆனா, நீலா தான் எப்பவும் ஏதாவது சொல்லிட்டே இருப்பா அவளை. அப்போ எல்லாம் நான் நீலாவை தான் திட்டுவேன் சும்மா இருன்னு…
ஆனா அது எவ்ளோ பெரிய தப்புன்னு என் பொண்ணு எனக்கு உணர்த்திட்டா!!!” என்றவர்,
“பொத்தி பொத்தி வளர்த்த புள்ளைய நானே என் கையாள அடிச்சிட்டேன்… 10நாளுக்கு மேல ஆகிப்போச்சு, அவ வாயால என்னை ‘அப்பா’ன்னு கூப்பிட்டு” என்றவருக்கு கண்கள் கலங்கியது.
வீரா அவரை ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்போ அடிச்சதுக்கு பதிலா… நல்லது கெட்டது சொல்லிக்குடுக்குற வயசுலயே அவளை அடிச்சு வளர்த்துருந்தா இப்போ இப்படி புத்தி இல்லாம தான் தலையில தானே மண்ணள்ளி போட பார்த்திருக்க மாட்டா!”
சலிப்புடன், “என் பொண்டாட்டி மனசே இப்போதானே இந்த மரமண்டைக்கு புரியுது” என முனகினார் சன்னமாய்.
வீரா அவரை பேசவிட்டு கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தான்.
“அவ புத்தி ஏன் இப்டி கோணலா போச்சுன்னு எனக்கு தெரியல வீரா. ஆனா, என் பொண்ணு இயல்புலயே அப்டி கிடையாது அது மட்டும் நான் உறுதியா சொல்லுவேன்…
அவ கெட்ட பொண்ணு இல்ல…” என்றவர் கண்களில் இருந்து ஒரு துளி வழிந்தே விட்டது.
“ப்ச்… இப்போ எதுக்கு மாமா இதெல்லாம்!?” என்ற வீரா அவரை நெருங்க,
“இல்ல இல்ல வீரா.. இதை நான் சொல்லியே ஆகணும் இப்போ…” என்றவர்,
“அவளுக்கு எப்பவும் நான் சொல்றதையோ, இல்ல என் அம்மா சொல்றதையோ கேட்டு செஞ்சே தான் பழக்கம் … அவளை சுயமா யோசிச்சு முடிவெடுக்க விட்டதே இல்ல நாங்க..
தேவையில்லாத நிறைய விஷயத்துக்கு பயப்படுவா… ஆனா, உண்மையிலேயே பயப்பட வேண்டியது விஷயத்துக்கு அஞ்சாம நிப்பா!
வயசு ஏறுனா பக்குவம் வந்துடும்ன்னு நாங்க தப்பு கணக்கு போட்டுட்டோம்…”என்றார் தூரத்தில் இருக்கும் மகளை பார்த்துக்கொண்டே.
“என்னதான் நீங்க பிரச்சனையை பெருசுப்படுத்தாம அவளை ஏத்துக்கிட்டாலும், உங்களுக்கு அவமேல எந்தமாதிரி எண்ணம் இருக்குன்னு தெரியலையே!? நானா இருந்தா திரும்ப சேரணும்ன்னு நினைக்கக்கூட மாட்டேன். அந்த வகைல நான் உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது” என்றார்.
“ச்ச…ச்ச… இதென்ன மாமா நன்றி அது இதுன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு?”
“இல்ல வீரா… அவ ரொம்ப உஷாரா இருக்கோம்ன்னு நினைச்சு கண்டவங்க பேச்சை கேட்டு கிறுக்குத்தனம் பண்ணிட்டா… அவ செஞ்சதெல்லாம் மறந்து, மன்னிச்சு அவளை ஏத்துக்குறது பெருசு…” என்று சொல்ல,
“மாமா கொஞ்சம் நிறுத்துங்க… என்ன நீங்க ‘ஏத்துக்குறேன்’ன்னு எல்லாம் பெரிய வார்த்தை சொல்றீங்க” என்றவன்,
“நான் ஒன்னு கேட்குறேன்… அதுக்கு உண்மையா ஒரு பதில் சொல்றீங்களா?” என்றான்.
சண்முகம் விழிக்க, “இப்போ நான் குடிகாரனா, காசை வீணடிக்குறவனா, பொறுப்பில்லாதவனா இருந்தா… இதெல்லாம் சொல்லி உங்க பொண்ணு உங்ககிட்ட வந்து அழுதா என்ன செய்வீங்க நீங்க?” என்றான்.
சண்முகத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“இப்படிப்பட்ட புருஷன் உனக்கு தேவையில்ல… விட்டுட்டு வந்துடுன்னு சொல்லுவீங்களா? இல்ல, அனுசரிச்சு போய், உன் வழில அவரை மாத்த பாரும்மா’ன்னு புத்தி சொல்லுவீங்களா? சொல்லுங்க” என்றான்.
‘அதெப்படி விட்டுவிட்டு வா!’ என சொல்ல முடியும்?’ என்றுதான் சண்முகத்திற்கு தோன்றியது.
கண்டிப்பாக ‘வாழ்ந்து பார்!’ என்றுதானே சொல்லுவோம்! தன் மகள் வாழ்வை சீர் செய்து வைக்கத்தானே யோசிப்போம்?! என்று சண்முகம் நினைக்கையிலேயே,
“குடிக்குறது, கெட்ட சகவாசம், ஊதாரித்தனம் இதெல்லாம் விட ‘சுயபுத்தி’ இல்லாம இருக்குறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல…
என்னால அஷ்டாவை அனுசரிச்சு, அவ வழியிலயே போய் அவளை சரி செய்ய முடியும்ன்னு தோணுச்சு… அதுக்கு அவளும் தயாராகணும்னு தான் உங்க வீட்ல இருந்தவளை நான் வந்து பாக்க… பேச செய்யாம இருந்தேன்…
நான் எதிர்ப்பார்த்த மாதிரியே அஷ்டா அவ செஞ்சது தப்புன்னு உணர்ந்துட்டா…
இனியும் இதுபோல வேறொரு தப்பு செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்ன்னு கேட்டா? என்கிட்ட பதில் இல்லை… மனுஷங்கன்னா தப்பு செய்யதானே செய்வாங்க!!! ஆனா, இனி என்ன நடந்தாலும் அவ என்னை விட்டு போக மாட்டான்னு மட்டும் உறுதியா தோணுது எனக்கு…
தவறான துணையோட காலம் முழுக்க கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சு தான் அவ இத்தனையும் செஞ்சது… நான் அவளுக்கான சரியான துணை தான்னு அவ உணர்ந்துட்டாலே போதும்!” என்றவன், “அதை அவ எப்பவோ உணர்ந்துட்டா…” என்றான்.
“யார் சொன்னது இல்லன்னு!? ஏகப்பட்ட கோபம்… அவ உங்கக்கூட போன பிறகு என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ணவே முடியல… எனக்கு இவ்ளோ கோபம் வரும்ன்னு அன்னைக்கு தான் எனக்கே தெரிஞ்சுது மாமா!” என இயல்பாய் சிரித்தான் வீரா.
சண்முகம் அவனையே பார்க்க,
“கோபத்தை விட உறவு முக்கியம் மாமா! அதுலயும் பொண்டாட்டி!!! கட்டைல போறவரைக்கும் துணையா வரவங்க… கோபப்பட்டு உறவை தூக்கி போடுறவன் நான் இல்லை… கோபம் இருந்துச்சு… இப்போ போயிடுச்சு” என்றான் மீண்டும் அதே புன்னகையுடன்.
சண்முகத்திற்கு வியப்பாய் இருந்தது, இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று!!!! அஷ்டா எத்தனை ஜென்மத்தில் செய்து வைத்த புண்ணியமோ என்றுதான் அவருக்கு தோன்றியது
வயதுக்கு மீறிய அவன் பக்குவம் அவரை உண்மையில் வியப்பிலாழ்த்தியது.
அவர் அப்படியே நின்றார்.
“பொண்ணு பார்த்துட்டு போனதும், சிதம்பரம் அண்ணே என்னை பார்க்க வந்தாரு…” என்றவன் அன்று அஷ்டா பற்றி சிதம்பரம் சொன்னதை எல்லாம் சொல்ல, இது சண்முகத்திற்கு புது செய்தி அன்றோ!!!
“அவர் ‘அரைவேக்காடு’ன்னு சொன்னபோ அதோட அர்த்தம் எனக்கு அப்போ புரியல… இப்போ புரியுது!!!” என சிரிக்க, சண்முகத்திற்கும் லேசாய் சிரிப்பு எட்டிப்பார்த்தது.
“அவர் சொன்னதுக்கு ‘அவளுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்து நான் வளர்த்துக்குறேன்’னு ஜம்பமா சொன்னேன். சொன்ன வார்த்தையை காப்பாத்த வேண்டாமா மாமா!? அதனால இனி ‘என் பொண்டாட்டி என் பொறுப்பு’ நீங்க உங்க பொண்ணை பத்தி ஒரு கவலையும் படவேணாம்.. சரிங்களா மாமா!?” என்றான்.
அவர் நிம்மதியாய் தலையசைக்க, “இனி நம்ம பங்க்’ல மேனேஜர் வேலை அவளுக்கு.. படிச்சுட்டு எதுக்கு வீட்டுல இருக்கணும்? நாலு பேரை பார்த்து பேசி, உலக விவரம் தெரிஞ்சா தான் புத்தி விரியும். வேலைக்கு வர சொன்னேன்… அறைக்குறையா தலையாட்டுனா… வந்துடுவான்னு தான் நினைக்குறேன்.. இல்லன்னா வர வைக்கணும்” வீரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
“எவ்ளோ நேரமா கத்துறேன்…. அப்டி என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்… சாமி கும்பிட நேரமாச்சு… வாங்க மொதோ!” என வீராவின் கரம் பிடித்து இழுத்துக்கொண்டு அவள் நடக்க,
“ஹே மாமா!!” என்றான் வீரா, அப்படியே நின்றுக்கொண்டிருந்த சண்முகத்தை காட்டி.
“உங்களுக்கு வேற தனியா சொல்லனுமாப்பா… வாங்க நீங்களும்!” போறபோக்கில் அவள் சொல்ல….
‘புருஷனோட சேர்ந்துட்டா அவளே வந்து பேசுவா பாருங்க’ என்று மனைவி சொன்னது நேரத்தில் நியாபகம் வந்தது.
எப்படியோ மகள் பேசியதே போதும் என அவர்கள் பின்னே ஓடினார் சண்முகம்.
இலையில் வெற்றிலைப்பாக்கு பழத்துடன் ஐவகை சாதம் இருக்க, வெல்லம் பச்சரிசியை கோளவடிவில் உருட்டி வைத்திருந்தார் மங்களம். காதோலை, கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், இவற்றுக்கு நடுவே மஞ்சள் சரடுகளும் இருந்தன.
காவேரி அன்னையை நினைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டவர்கள், மஞ்சள் தடவிய கயிறை ஆண்கள் தங்கள் கைகளிலும், பெண்கள் கழுத்திலும் கட்டிக்கொண்டனர்.
அதன்பின்னே அங்கிருந்த சிறிய திடலில் அஷ்டாவை அமரவைத்து தாலிபிரித்து கோர்த்து கட்ட, முன்பின் அறியாத பல சுமங்கலிகளின் ஆசிர்வாதம் அக்காவேரி அன்னையால் அவளுக்கு கிட்டியது.
எல்லாம் முடிந்ததும் குடும்பமாய் அய்யாலம்மனை தரிசிக்க அந்த நீண்ட வரிசையில் சென்று நின்றனர்.
கரைபுரண்டு ஓடும் காவேரி போல மகளின்/மகனின்/பேத்தியின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அளவற்று கிட்டவேண்டும் என்ற வேண்டுதல் தாண்டி அப்பெற்றோருக்கு வேறு எண்ணம் எதுவும் இல்லை.
“ஷ்…. ஷ்….” தன் முன்னே நின்றிருந்த மனைவியை அழைத்தான் வீரா.
“என்னங்க!?” என்றவளிடம், ‘அங்கே பார்!’ என ஜாடை காட்ட, அவர்களுக்கு முன்னே நின்றிருந்த சண்முகம், நீலாவின் கரத்தில் மல்லிகை சரத்தை திணிப்பது தெரிந்தது.
நீலா, “சாமிக்கு தான் மாலை வாங்கிட்டோமேங்க… இது எதுக்கு?”
மனைவி இன்னமும் பூவை சிகையில் ஏற்றாமல் இருப்பதைக்கண்டு, “இப்போ நீ வச்சுக்குரியா இல்ல நான் வச்சு விடவா?” என்றார் மிரட்டல் போல்.
நீலாவுக்கு தலையே சுற்றிப்போனது.
“உங்களுக்கு தான் இது பிடிக்காதே!?”
“உனக்கு பிடிக்கும் ல!? அப்ப இனி எனக்கும் பிடிக்கும்” என சொல்லும் கணவனை விழியகற்றாமல் பார்த்த நீலாவுக்கு, அத்தனை வருட மனத்தாங்கல் கூட விலகி போகும் போல இருந்தது.
காதலோ, கவனிப்போ, கரிசனையோ…. இருபதில் கிடைத்தால் தானா!? அறுபதில் கூட அதன் தித்திப்பு திகட்டாத அமிர்தமாகவே இருக்கும்.
நீலா அவர் வாழ்வு புதிதாய் ஆரம்பிப்பதாய் உணர்ந்து அம்மனை கண்களில் நிரப்பி நின்றார், மனதில் ஆயிரம் நன்றிகளோடு…!
அவர்கள் பேசிக்கொண்டது கேட்காவிடினும், தந்தை மல்லிகை பூவை கொடுத்ததும் அதை அன்னை சிகையில் சூடிக்கொண்டதும் தெரிய, ‘பார்ரா’ என ஏதோ அதிசயத்தை பார்ப்பவள் போல நின்றிருந்தாள் அவள்.
அப்போது முன்னே செல்லும் கூட்டத்தில் அவளுக்கு தெரிந்த முகமொன்று தெரிய,
“ஏங்க…ஏங்க… அவ என் ஸ்கூல் பிரண்ட்… பார்த்து எவ்ளோ வருஷமாச்சு தெரியுமா!? இன்னைக்கு எப்படியாவது பேசணும்?” என்றாள் அவள் உற்சாகமாய்.
“ஐயையோ… மறுபடியும் பிரண்ட்’ஆ?” அதிர்ச்சி போல வீரா பாவ்லா காட்டியவன், “நீயே இப்போதான் உன் பிரண்ட் புருஷனோட சேர்ந்துட்டான்னு என்கூட சேர்ந்துருக்க… இதுல இன்னொன்னா!?” என்றான் பயம்போல.
“ப்ச்… என்னங்க நீங்க!? இனி நான் யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன் தெரியுமா?”
“இதுவே நம்புற மாதிரி இல்லையே!!!”
“நான் வேணுனா உங்கமேல சத்தியம் செய்யவா?” என்றதும், “அடியே!!!!!” என பின்னால் சாய்ந்தவன்,
“உன்மேல ஏகப்பட்ட நம்பிக்கை வந்துடுச்சு…” என்றான் உடனே.
அவளோ, “நிஜமாவே இனி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே உண்மைன்னு நம்பி என் தலைல நானே மண்ணள்ளி போட்டுக்க மாட்டேங்கங்க… இந்த கோவில்ல வச்சு சொல்றேன்… இது சத்தியம்” என்றதும், வீராவுக்கு அஷ்டா இந்த இரண்டு நாட்களிலேயே சற்று வளர்ந்துவிட்டதை போல தோன்றியது.
அவன் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நிற்க, “உங்களுக்கு நிஜமாவே என்மேல உள்ள கோபம் போய்டுச்சா?!” என்றாள்.
“இன்னும் எத்தனை முறை இதையே கேட்க நீ”
“என் மனசு அதை நம்புற வரைக்கும் கேட்பேன்” என்றாள்.
“ஆரம்பிச்சுட்டாடா சந்தேக மன்னி” என அவன் போலியாய் அலுக்க,
“சந்தேகம்ன்னதும் தான் எனக்கு நியாபகம் வருது… ஆமா, நீங்க ஏன் என்னை அப்பப்ப… ‘உஸ்…உஸ்..’ன்னு பாம்பு மாறி கூப்புடுறீங்க…?”
“உனக்கு ‘இஸ்க்கு இஸ்க்கு’ன்னா கேட்டுச்சு?!” என கிண்டலாய் கேட்க, அவள் முறைத்ததும்,
“அட என் லூசு பொண்டாட்டியே… நான் உன்னை ‘உஸ்… உஸ்…’ன்னு கூப்பிடல… ‘ஷ்….ஷ்…’ன்னு கூப்புடறேன்”
“அதான் ஏன்?” என்றாள் புரியாமல்.
“மக்கு…. “அஷ்…அஷ்…”ன்னு நான் சுருக்கி கூப்புடுறது உன் காதுல இசுக்கு இசுக்கு ன்னு விழுது… போதுமா விளக்கம்?!” முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அவன் சொல்ல….
“ஹை…. எனக்கு இது செல்ல பேரா???” என குதூகலித்து சிரித்துக்கொண்டிருந்தாள் அஷ்டா.
கோவில் வெளியே நின்ற வரிசையில் இருந்து முன்னேறி பிரகாரத்தின் சுற்று பகுதிக்கு முன்னேறியிருந்தனர்.
சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் மீண்டுமாய் அவனிடம், “உங்களுக்கு அவ்ளோ கோபம் வந்துச்சே… எப்படி உடனே என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டீங்க…?! என்னோட சகஜமா, ஒண்ணுமே நடக்காத மாதிரி இயல்பா இருக்கீங்க.. உங்களை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு எனக்கு” என்றாள் அவனைப்பார்த்து.
“கோபம் எல்லாருக்கும் வரது தான் அஷ்டா… கோவம் வராத மனுஷன்னு யாரும் இருக்க மாட்டாங்க… பொறுமையோட உதாரணமா சொல்ற இந்த பூமாதேவி கூட எப்பபாவது ஒருக்க தன் சீற்றத்தை காட்டத்தானே செய்றாங்க?” என்றவன்,
“என்னை பொறுத்தவரைக்கும் தப்பை உணர்ந்து வருந்துறவங்களை வதைக்கக்கூடாது. அது பிரயோஜனமில்லாதது.
ஒரு பெண்ணை பார்த்தா கல்யாணம் பண்ணிக்க ஆசை வரணும்னு சொல்லிட்டு இருந்த எனக்கு, உன்னை பார்த்தப்போ மட்டும் தான் அந்த எண்ணமே வந்துச்சு… ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சுட்டு நீ ஏதோ தப்பு பண்ணுணன்னு கோபத்துல உன்னை ஒதுக்கிட்டா!? அப்பறம் என்ன இருக்கு எனக்கு வாழ்க்கைல!? இனி இந்தமாதிரி எந்த தப்பும் நீ செய்யாம இருக்கணும்….
நானும் எந்த தப்பும் பண்ணாம இருக்க முயற்சி பண்ணுவேன்… ஒருவேளை தப்பு பண்ணுனா, சொல்லி புரியவை.. கேட்டுக்குறேன்… இப்டி ஒருத்தரையொருத்தர் அனுசரிச்சு வாழ்றது தானே வாழ்கை!?” என்றான்.
கணவனை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘இப்படி ஒருத்தனை விட்டு போய் விட நினைச்சியே?’ என அவள் மனம் இடித்தது.
அவர்கள் அம்மன் சன்னதிக்குள் நுழைந்திருக்க, மனைவி தன்னையே பார்ப்பதைக்கண்டு,
“கற்பூரம் காட்டுறாங்க பாரு… வேண்டிக்கோ” என்றான் கை கூப்பி நின்றபடி.
“என்ன வேண்டனும்?”
“உனக்கு என்ன வேணுமோ கேளு சாமிக்கிட்ட….”
இன்னமும் அவன் மீதான அவளது மயக்க பார்வை மாறவில்லை.
“நான் கேட்காமலே உங்களை எனக்கு குடுத்த சாமிக்கு, அடுத்து எனக்கு என்ன குடுக்கணும்ன்னு தெரியாதா?”
இப்படி சொல்பவளை கோவில் பிரகாரத்தில் வைத்து கொஞ்சவா முடியும்!?
இருப்பினும் அவள் காதருகே தணிந்து, “இன்னும் பத்தே மாசத்துல உங்களை மாதிரியே ஒரு குட்டி பாப்பா வேணுன்னு கேளு” என்றான் அவள் கன்னம் சிவப்பதை காணும் ஆவலுடன்.
அவன் எதிர்ப்பார்த்தது நடந்தாலும், “புள்ளை குடுன்னு புருஷன்க்கிட்ட கேட்காம, சாமிக்கிட்ட கேட்க சொல்றீங்களே? ப்ச்… நீங்க ரொம்ப மக்கு பாஸ்!!!” என அவள் கேலி செய்தபோது, அது கோவிலாக மட்டும் இல்லாதிருந்தால்….!?
“நீ எல்லாம் என்னை கிண்டல் பண்ற அளவுக்கு ஆகிட்டேன் பார்த்தியா?!” என சுகமாய் நொந்துக்கொண்டவன், அதற்குமேல் பேசும்முன்னே, ‘என்னையும் கொஞ்சம் பார்’ என அய்யாலம்மன் மணியோசை மூலம் அவர்களை தன்பக்கம் இழுத்துக்கொண்டாள்.
பொறுமையும், சகிப்புத்தன்மையும், நெஞ்சம் நிறைந்த காதலும் இருந்தால் மட்டும் போதும், எப்பேர்ப்பட்ட தவறையும் மன்னித்து, இணைக்க!!!
இப்படியொரு ஒரு வீராவை பெற்ற அஷ்டலட்சுமி, உண்மையில் அதிர்ஷ்டலட்சுமி தான்!!!