“கேர்ள்ஸ்… இந்த வீக்’க்குள்ள உங்க தீசிஸ் டாபிக்கை ஹெலன் மேடம்க்கிட்ட ரெஜிஸ்டர் பண்ணிடுங்க!” என்று சொல்லிவிட்டு போனாள் ஒருத்தி.
“ஜனனி நீ மட்டும் தான்டி இன்னும் குடுக்கல நம்ம கேங்’ல!” என்றாள் மெர்லின்.
“சரி நான் போய் என்ரோல் பண்ணிட்டு வரேன்!” என்றவள் நேரே ஹெலன் மேமின் முன்னே நின்றாள்.
“டாபிக் டிசைட் பண்ணிட்டியா?” என்றவர்,
“ரொம்ப நல்ல சான்ஸ்… மிஸ் பண்ணிடாத!” என்றார்.
ஜனனி தலையாட்ட, அவளிடம் டாப்பிக் என்ன என்று கேட்டவரின் முகம் அதீத அதிருப்தியை தான் காட்டியது.
“வாட் ஜனனி? இது வொர்கவுட் ஆகாதுன்னு போன மாசமே சொன்னேனே!” என்றார் அவர்.
“மேம்! இது ரொம்ப யூனிக் டாபிக்… யாருமே பண்ணமாட்டாங்க!”
“ஐ க்நொவ் தட்! ஆனா, இது சொதப்புனா என்ன செய்வ? ஃபீல்ட் வொர்க் பண்ணாம உன் கற்பனை’ல தீசிஸ் பண்ணலாம்ன்னு இருக்கியா?”
“ம்ச் மேம், இதெல்லாம் சப்பை மேட்டர்!” என்றாள் அசட்டையாய். அந்த மேடம் இவளுக்கு மிகவும் நெருக்கம்!
அவள் தலையில் கொட்டியவர், “பீ சீரியஸ் இடியட்!” என்று சொல்ல,
“மேம்! இதெல்லாம் நான் பார்த்துக்குறேன்! அவுட்புட் எப்படி வருதுன்னு மட்டும் நீங்க பாருங்க! சும்மா லெப்ட்’ல விட்டு ரைட்’ல வாங்கப்போறேன்!” என்றாள் பில்டப்பாய்.
“நோ ஜனனி! இது என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது! உன் விளையாட்டுத்தனத்தால ரொம்ப பெரிய ஆப்பர்சூனிட்டியை இழந்துடாத!”
மேடம் இப்படி சொல்ல, “மேம், எனக்கு இதைவிட பெஸ்ட் டாபிக் தோணவே இல்லை! நான் இதையே பிக்ஸ் பண்ணிருக்குறேன்!” என்றாள் அவள் திண்ணமாய்.
அவள் பிடிவாதம் உணர்ந்தவரும், ‘போய்தொல!’ என்ற மனநிலையோடு அவள் சொன்ன தலைப்பையே பதிந்துவிட்டார்.
***
ஷோரூமில் தன் கண்ணாடி கேபினுக்குள்ளே சிரித்த முகமாய் அமர்ந்திருந்தான் ஷியாமளன்.
மனம் ஒரே துள்ளலாய் இருந்தது. தன்னையறியாமல் சிரிப்பதும், எங்கோ வெறிப்பதும், நிமிடத்திற்கு இருமுறை மொபைலை எடுத்து பார்ப்பதும் என என்னவோ செய்துக்கொண்டிருந்தான்.
கண்ணாடி கதவு பேருக்காய் இருமுறை தட்டப்பட்டு, உடனே திறக்கப்பட அதுகூட தெரியாமல் அமர்ந்திருந்தவனிடம் வந்த மார்த்தாண்டம், “என்ன மவனே! சீக்கிரமே கல்யாணம் பண்ணணும் போலருக்கேடா!” என்றார் கிண்டலாய்.
அவர் பேசியதில் தெளிந்தவனோ, “வாய்ப்பில்லை மாமா! உங்க வயசுக்கு பொண்ணு தேடி, கிடைச்சு… ஹும்! யூ ஆர் டூ லேட்!” என்றான் பெருமூச்சாய்.
விளையாட்டாய் அவன் தோளில் ‘பட்’டென தட்டியவர், “வாய் கூடி போச்சு உனக்கு!” என்றதோடு, “நான் வரவரைக்கும் ஷோரூம்’மை பார்த்துக்கோடா! எவனாவது உள்ள வந்து காரை தூக்கிட்டு போய்டப்போறான்! அதுக்கூட தெரியாம விட்டத்தை பார்த்து இளிச்சுக்கிட்டு இருப்ப நீ!!!” என்றார்.
வெட்கமாய் போனது அவனுக்கு. அப்படியா இருக்கிறோம்!? என்று அவன் நினைக்க, அவன் மொபைலில் குறுஞ்செய்தி சத்தம்!
விரைந்து அதை திறந்தது அவன் விரல்கள்.
“சார்? எங்கே இருக்கீங்க?” என்று வந்திருந்தது அவளிடம் இருந்து.
“ஷோரூம்!” என்று அனுப்பினான்.
“மொபைல்ல ஜிபிஸ் இருக்கா?” அவள் தான்!
எதற்கு? என்று கேட்க்காமல், “இருக்கே!!! ஏன்?” என்றான் அவன்.
“உங்கக்கிட்ட தொலைஞ்ச என்னை கண்டுப்பிக்க தான்!” கண்ணடிக்கும் ஸ்மைலியோடு அவள் அனுப்பியிருக்க பார்த்தவன் முகத்தின் ரத்த நாளமெல்லாம் சிவந்து தான் போனது.
வெட்கம் வந்தால் பெண்களுக்கு மட்டும் தான் கன்னம் சிவக்குமா, என்ன? ஆண்களுக்கும் சிவக்கும் தான்! ஆனால், பெண்கள் தான் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதே இல்லையே!
அவன் மொபைலை பார்த்து ‘சுப்ரமணியபுரம் ஜெய்’ போல பல்லைக்காட்டிக்கொண்டிருக்க, அவனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே, ‘சீக்கிரம் விபூதி அடிக்கணும்’ என்ற முடிவோடு வெளியே சென்றார் மார்த்தாண்டம்.
இன்றோடு அவளிடம் தன் நம்பரை கொடுத்து ஒரு வாரம் ஓடி விட்டது. அன்று நம்பரை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரே பரபரப்பு!
இனி மெசேஜ் அனுப்புவாளோ? இரவெல்லாம் ஃபோன் போட்டு தொல்லை செய்வாளோ? அப்படி செய்தால் என்ன செய்வது? திட்டிடலாமா? என்று தோன்ற,
அவன் மனமே, ‘திட்டிடுவியா?’ என்று நக்கலாய் பதில் கேள்வி கேட்டது.
எப்படியோ, அவள் அழைத்தாலோ, செய்தி அனுப்பினாலோ நல்லவிதமாய் ‘புத்தி’ சொல்லி வைத்துவிட வேண்டும் என்ற கொள்கையோடு அன்று இரவு முழுக்க காத்திருந்தவனுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது.
‘அவள் அழைக்கவே இல்லை!!!’
‘நம்பரை குடுத்துட்டு மட்டும் வந்துருக்கக்கூடாது! பதிலுக்கு வாங்கிட்டும் வந்துருக்கணும்!’ என்ற காலம் கடந்த ஞானோதயம் வேறு வர அரைக்கண்ணில் மொபைலை பார்த்துக்கொண்டு விடியற்காலையில் உறங்கியிருந்தான்.
மறுநாள் முழுக்க அவனுக்கு இதே நிலை தான். எதிலும் வேலை ஓடவில்லை. வீட்டு வாசலை கூட அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தான். ‘இன்றும் வருவாளோ!?’ என்று!
எதற்க்காக இப்படி அலைகிறான்? என்று கேட்டால், ‘எல்லாம் அவளுக்கு புத்தி சொல்லி திருத்தத்தான்!’ என்பான் மனசாட்சியே இன்றி!
அவனை வெகுவாய் காக்க வைத்து இலகுவாய் மாலை போல அழைத்தாள், ‘ஃப்ரீ’யா?’ என்று கேட்டு.
உள்ளுக்குள் இருந்த ரோஷக்காரன், ‘பிஸி’ன்னு சொல்லுடா’ என்று உசுப்ப, அதை மீறிய நியாயக்காரனோ, ‘அவளை எப்படியேனும் திருத்தியே ஆக வேண்டும்! அதற்கு அவளை சந்தித்தே தீர வேண்டும்!’ என்று முடிவெடுத்து, அவள் சொன்ன இடத்திற்கு அவளுக்கு முன்னே சென்று காத்திருக்க வைத்தான்.
வந்தாள் அவளும்!
வழமையான துள்ளலும், சிரிப்புமாய்! பார்த்த கணமே மனம் லேசாகி பறப்பதை போல இருந்தது அவனுக்கு.
“ஹாய்!” என்றவளிடம்,
“உன்னை பார்த்தாலே ஒரு எந்தூஸ்டியாஸ்டிக் ஃபீல்… பொசிடிவ் வைப்ஸ்… ஒரு ப்லெஸ்ட் ஃபீல்!” என்று தன்னைமீறி சொல்லியிருந்தான்.
அவள், “ரியல்…..லி?” என்று முட்டை கண்ணை விரித்ததும் தான், ‘அய்யயோ?’ என்றானது அவனுக்கு.
அதன்பின்னே அவள் தான் பேசினாள்… பேசினாள்… பேசினாள்… பேசிக்கொண்டே இருந்தாள்.
நடுநடுவே அவனை ‘ம்ம்’கொட்ட மட்டும் அனுமதித்தாள். அவனும் சலித்துப்போகவில்லை. கல்யாணம் ஆகுவரை பெண்கள் பேசுவதை கேட்க ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் தானே! அதற்கு இவன் மட்டும் விதிவிலக்கா என்ன!?
அவளை பற்றிய எல்லாம் சொன்னாள். கேட்டவனுக்கு சிரத்தை இன்றியே அவையெல்லாம் மனதில் பதிந்தது.
இதுவே அடிக்கடி நடந்தது. இந்த வாரத்தில் மட்டும் நான்கு முறை சந்தித்தாகி விட்டது. சந்தித்தபோதெல்லாம் அவள் மட்டுமே பேசினாள்.
‘இனி சந்திக்கக்கூடாது! அந்த பெண்ணை திருத்த வேண்டும்!’ என்று ஒவ்வொருமுறையும் நினைத்து தோல்வியை சந்திப்பவன்,
‘அவ எங்க என்னை பேசவிடுறா!? நான் மட்டும் பேச ஸான்ஸ் கிடைச்சா இந்நேரம் பேசியே திருத்திருப்பேன் அவளை!’ என்று சப்பைக்கட்டு கட்டிக்கொள்வான்.
நேரில் சந்திப்பவள் ஏன் மொபைலில் அதிகமாய் பேசுவதே இல்லை! என்று வேறு தோன்றும் அவனுக்கு.
எதற்கு பேச வேண்டும்!?
அவளை திருத்தத்தான்!
அவனது இந்த தெளிவைக்கண்டு அவன் மனசாட்சியே ஒரு கட்டத்தில் மன உளைச்சளுக்கு ஆளாகி போய்விட்டதென்றால் பாருங்கள்!!!
அவளிடம் ஒருமுறை அதை நாசூக்காய் கேட்டும் விட்டான்.
“வீட்டுக்கு போய்ட்டா எனக்கு நிறைய வேலை இருக்கு சார்! ஃபைனல் இயர் தீசிஸ் வொர்க் போயிட்டு இருக்கு! தி பெஸ்ட் அண்ட் யுனிக் தீசிஸ்’க்கு செம்ம ஆஃபர் இருக்கு தெரியுமா?” என்றவள்,
“தி கிரேட் சைக்காலாஜி ப்ரொபசர் கரம்சிங்’கோட கான்ஃப்ரென்ஸ் அட்டென்ட் பண்ற சான்ஸ்! தட்ஸ் மை ட்ரீம்! அவர் என்னோட மானசீககுருன்னே சொல்லலாம்! அப்படி ஒருத்தரை மீட் பண்ண கிடைக்குற சான்ஸ்! அதை மட்டும் நான் மிஸ் பண்ணிடவே கூடாது!” என்றாள்.
இப்படி தெளிவாய் தீர்கமாய் கனவுடன் சொன்னவளை அவனும் அதற்குமேல் எதிர்ப்பார்க்கவில்லை. அவளாக பேசினால் தான் பேசுவான்.
இப்போதும் அவளாக தான் ‘எங்கே இருக்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறாள்.
அவள் அனுப்பிய செய்தியையே திரும்ப திரும்ப பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.
பணியாள் ஒருவன் வந்து கதவை தட்டினான். கவனம் களைய, “சொல்லுப்பா!” என்று அவன் நிமிர,
“சார், ஒரு மேடம் உங்களை கேட்டு வந்துருக்காங்க!” என்றான் அவன்.
அவ்வளவுதான்… பரபரப்பாய் எழுந்துவிட்டான். என்னவோ அவனை தேடி அவள் ஒருத்தி மட்டும் தான் வருவாள் என்று நினைத்தான் போலும். விறுவிறுவென அவன் வெளியேற ரிசெப்ஷன் அருகே நின்று கண்களால் ஷோரூமை சுற்றிக்கொண்டிருந்தாள் அவள்.
நான்கே எட்டில் அவளை அடைந்தவன், “சொன்னா நானே வருவேன்’ல? இங்க எதுக்கு வர?” என்றான் மெல்லிய குரலில் சுற்றிலும் தங்களை வேடிக்கை பார்க்கும் பணியாட்களை காட்டி.
அவள் அப்பாவி போல விழித்து, “ஏன் கோபால், நான் இங்கே வரக்கூடாதா?” என்று அபிநயமாய் கேட்க, சிரிப்பாய் வந்தது.
‘நல்லவேளை மாமா இல்லை!’ என்ற நினைப்போடு, “வா!” என்று அவன் கேபினை நோக்கி கைக்காட்டி அவன் திரும்ப,
“இந்த ஷோரூம் தானாம்மா?!” என்ற குரல் கேட்டது.
அவளருகே ஐம்பது வயதில் நல்ல கம்பீரமாய் நின்றிருந்தார் ஒருவர்.
அவன் கேள்வியாய் அவளை பார்க்க, “என் அப்பா மிஸ்டர் ஸ்ரீனி!” என்றாள் பெருமையாய்.
அவளை ஒருமுறை பார்த்தவன், “ஆமா அங்கிள்… ஏன்?” என்று கேட்க,
“இல்ல… இந்த கழுதை இப்படி சொல்லி தான் எல்லா இடத்துக்கும் என்னை இழுத்துட்டு போவா… அங்க போன பிறகு தான் தெரியும், அவங்களை இவளுக்கு யாருன்னு கூடதெரியாதுன்னு… ஆனா அங்கிருந்து கிளம்புறதுக்குள்ள பேசி கீசி ஃபிரன்ட் புடிச்சுடுவா! அதான் இங்கயும் அதே மாறியோன்னு நினைச்சு கேட்டேன்!” என்று சிரிக்க,
“அப்பா!!!” என கோபம் போல சிணுங்கி, அவர் கைகளில் தொங்கினாள் அவள்.
பார்க்கவே கவிதையாய் இருந்தது.
அந்த கணம் அவளை பார்த்தபோது,
‘உன் முந்தானையில் முகக்கவசம் கொடு!
ஆயுள் முழுக்க ஆக்சிஜன் இன்றி வாழ்ந்திடுவேன்!’ என்று என்றோ பார்த்த கவிதை ஒன்று கண்முன்னே வர,
அவளை திருத்தணும்’ன்னு சொன்னியேடா! என்றது மனம்!
‘நம்ம ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு திருத்தக்கூடாது!?’ என்று இவன் அதனிடம் எதிர்கேள்வி கேட்க,
‘உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா!’ என்று ஓய்ந்துப்போய் ஓரம் போய் நின்றது அது.
அதற்கடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஷியாமளனுக்கு ரம்யமானதாய் அமைந்தது.
கூவம் ஆற்றை பார்த்துக்கூட ஹைக்கூ எழுதும் அளவுக்கு கிறங்கிப்போய் கிடந்தான்.
காதல்…!!!
இது அது தானா?
யாரிடம் கேட்பது என அவன் குழம்பிய நின்ற நாட்கள் அவையெல்லாம்!!!
அவன் ரிங்டோன் கூட…
‘மனம் விரும்புதே…. உன்னை! உன்னை!!!’
அந்த அளவுக்கு அவன் அகஜகமெல்லாம் ஜனனி நின்று ஆள ஆரம்பித்தாள்.