அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இரவு நேர வரவேற்ப்பில் உம்மென்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஜனனி.
என்னதான் தந்தையின் கரைச்சலுக்காக தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தாலும், மனம் அங்கே நிகழும் எதிலும் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் ஷியாமளனை சுற்றியே ஓட, கண்முன் நடப்பவை கிஞ்சித்தும் அவள் கருத்தை எட்டவே இல்லை.
பரசுராம் வேறு அதிமுக்கியமாய் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். கேட்டால், ‘உன் கல்யாணத்துக்கு செய்யோனுமுல்ல?’ என்று கேலி கேள்வி கேட்டு வைக்க, ஜனனி அதன்பின் அவர் பக்கம் கூட திரும்பவில்லை.
அன்று சௌமியை தரதரவென இழுத்துக்கொண்டு ஷோரூமுக்கு சென்றால், இவளை கண்டதுமே எப்படி திரும்பி போக சொல்வது? என்பதை போல பார்க்க ஆரம்பித்துவிட்டனர் வேலையாட்கள்.
கெத்தாக ‘தான் ஒரு வாடிக்கையாளர்’ என்று பந்தா காட்டிக்கொண்டு அவள் போக, ‘சாரி மேம்! டூ வீலர்ஸ் சேல்ஸ் இங்க இல்ல! அது மேடவாக்கம் பிரான்ச்! இங்க ஒன்லி கார் சேல்ஸ் தான்!’ என்று பணிவாய் ஒருவன் சொன்னதை கேட்டதும், ‘ஹப்பாடா!’ என்றிருந்தது சௌமிக்கு.
ஆனால், அடுத்தே, “ஏ சௌமி, நீ ஏன் ஒரு கார் வாங்கக்கூடாது?” என்று ஜனனி கேட்டதும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிப்போனவளை பிடிக்க முடியாதுப்போக , கூடவே ஷியாமளனும் அங்கே இல்லை என்பதால், நாளை பார்த்துக்கொள்வோம் என்று எண்ணி கிளம்பிவிட்டாள்.
மறுநாள் அவள் அழைத்தபோது ஒருத்தியும் அவள் அழைப்பை விவரமாய் எடுக்கவில்லை.
‘வேறு என்ன செய்யலாம்!’ என யோசித்தவளுக்கு, அவனது அதிகாலை நடைபயிற்சி நினைவில் ஆட, வைத்தாள் அலாரத்தை!
பரபரவென கிளம்பி அவனுக்கு முன்னரே சென்று காத்துக்கிடந்தாள். வந்தான் அவனும்!
இப்படி ஒருத்தி நிற்பதே தெரியாது என்பதை போல நேர்கொண்ட பார்வையாய் அவன் நடையை போட, ‘ஃபிராடுக்காரப்பய! கார்ல இருந்தே என்னை பார்த்துட்டான் போல! ஷாக்கை மறைச்சு கேசுவலா போறானாம்!’ போனவனின் புறமண்டையை பார்த்து நொடித்துக்கொண்டவள் மனம் தளரவில்லை.
பின்னாலேயே சுற்றினாள். ஏதேதோ பேசினாள்.
தினமும் இதே கதை தான்! ஒன்று எரிந்து விழுந்தான். இல்லையேல், காது கேட்காதவன் போல இருந்துக்கொண்டான்.
‘கம்முன்னு இருக்குறதுக்கு திட்டுறதே பெட்டர்!’ என்றே தோன்றிவிட்டது ஜனனிக்கு.
முதல் இரு நாட்கள் அவளுக்கு சிறு தயக்கம் இருந்தது. ஆனால், அதற்கடுத்த நாள் எல்லாம் தயக்கமாவது தக்காளிசோறாவது என்று எல்லாத்தையும் தூர எறிந்துவிட்டு வெட்கம், ரோஷம் இன்றி அவன் பின்னே சுற்ற ஆரம்பித்தாள்.
ஒருநாள் கவிதை கூட சொன்னாள்…!
‘காற்றை கண்டவுடன்
நடனமாடும் மரங்களை போல,
உன்னை கண்டவுடன்,
என் மனமும் நடனமாடுகிறது!’
இப்படி அவள் சொல்லிவிட்டு அவனை பார்க்க, நடந்துக்கொண்டிருந்தவன், நின்று பொறுமையாய் தன் ஷூவை கழட்டினான்.
‘ஆத்தி!’ அதிர்ந்தவள் சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என பார்த்துக்கொண்டே அலார்ட்டாய் பின்னே நான்கடி நகர, கையில் ஷூவை எடுத்தவன் உள்ளே இருந்த மணலை கொட்டி, தட்டிவிட்டு மீண்டும் காலில் அணிந்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.
‘இது கொஞ்சம் டேஞ்சரஸ்!’ என்று தோன்ற அன்றோடு கவிதை கழுதையை விட்டுவிட்டாள்.
அவன் பின்னே ஒரு நாய்க்குட்டி போல சுற்றுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை அவளால்.
அவன் நின்று இரு வார்த்தைகள் கூட பேசுவதில்லை.
முன்பும் சுற்றினாள் தான். ஆனால், அவனும் இசைந்துக்கொடுத்தான்! இப்போது கொஞ்சமும் அசையாமல் அவன் இருக்க,
‘நீ இப்படியே இருந்துருந்தா எனக்கு தொல்லையே இல்லையே!? எதுக்கு நல்லவனா இருந்து என் மனசை கலைச்ச?’ என்று நியாயமே இன்றி அநியாயத்துக்கு அவன் மேல் கோபம் வந்தது அவளுக்கு.
‘இது சரிப்படாது! நம்ம பழைய டெக்னிக்கை யூஸ் பண்ணுவோம்!’ இப்படி நினைத்தவள் ஒரு நாள் நேரமே வந்து ஒளிந்து நின்றுக்கொண்டாள்.
‘மவனே, நீ மட்டும் என்னை தேடுன! மாட்டுன என்கிட்ட!’ என்று சுவாரசியமாய் அவன் வருகைக்காக அவள் காத்திருக்க, காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் அங்கே ‘வார்ம் அப்’பை ஆரம்பித்தான்.
சில நிமிடங்களிலேயே அவன் கண்கள் சுற்றும் முற்றும் அலைப்பாய ஆரம்பிக்க, குஷியாகிப்போனது அவளுக்கு.
‘தேடுறான்!’ குஷியாய் மேற்கொண்டு பார்க்க, அவன் தன் நடையை ஆரம்பித்திருந்தான். என்னதான் நேராய் நடந்தாலும் அவ்வப்போது சுற்றிலும் பார்ப்பதும் பின்னே பார்ப்பதுமாய் இருக்க ஏக சந்தோஷம் அவளுக்கு.
சில நிமிடங்களுக்கு பின்னே இடுப்பில் கைவிட்டு நின்றுவிட்டான். தூரத்தில் யாரையோ தேடுவதை போல அவன் நிற்க,
‘மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் காட்டெரும மாட்டிக்கிட்டான்!’ என குதியாட்டம் போல் இருந்தது அவளுக்கு.
தன் குஷியை மறைத்துக்கொண்டு கெத்தாக நடந்துப்போனவள் அவன் முதுகை தட்ட, திரும்பியவனை பார்த்து, “என்னை தானே தேடுறீங்க? ஐ க்நொவ்!” என்றாள் மிதப்பாய்.
மேலும் கீழும் பார்த்தான் அவளை.
“ப்ச் ஷியாம்! பொய் சொல்ல ட்ரை பண்ணாதீங்க! என்னை தான் தேடுனீங்க… சரியா?” என்று கேட்க,
“ம்ம்!! அதேதான்!!!” என்றவன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து போக, நிதானமாய் சில நொடிகள் யோசித்தவளுக்கு,
‘அந்த நாய் நான்தானா?’ என்று புரிய, “ஆஆ…. மம்மிஈஈஈஈ!!!” என்று அழுகையாய் வந்தது.
இப்போது நினைத்தாலும் அவமானமாய் இருக்க, அருகே இருந்த தந்தையை கைமுட்டியை இடித்தாள் ஜனனி.
“ஸ்ஸ்… என்னமா?”
“ப்பா! இந்த ஷியாம் என்னை ரொம்ப அசிங்கப்படுத்துறான் ப்பா!” சிணுங்கினாள் கோவத்துடன்.
“பண்ணதுக்கு அனுபவி!” என்று சொல்லிவிட்டு வேடிக்கையை தொடர்ந்தார் பரசுராம்!
“யூ டூ டேடி!?” என்றவள், “ப்ச்… நான் தான் சாரி சொல்றேனே! என்ன செய்யணும் இதுக்கு மேல? எனக்கு சத்தியமா புரியல” என்றாள் தலையில் கைவைத்து.
“நீ ரொம்ப ஜாலியா சுத்துறல? அதான் நீ உன் தப்பை உணரலன்னு நினைக்குறார் போல!”
வெடுக்கென நிமிர்ந்தவளுக்கு கோபம் தான் வந்தது.
“தப்பு பண்ணேன்! அதை முழுசா உணர்ந்து மன்னிப்பு கேட்டேன்! ஒரு வாரம் உயிர்போவ அழுது தீர்த்தேன்! என்ன செய்யணும் இதுக்கு மேல? மூஞ்சியை பாவமா வச்சுக்குறது, எந்நேரமும் அழுத்துட்டே இருக்கிறது, இயல்பான சுபாவத்தையே விட்டுட்டு பைத்தியம் மாதிரி சுத்துறது… இப்படி எல்லாம் செஞ்சுட்டா நான் முழுசா சந்திரமுகியா மாறிட்டேன்னு ஒத்துப்பாங்களா?”
“ஹான்… இதான்!!! இப்படி துடுக்கு பேச்சு பேசுறது தான் நீ தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்குறன்னு நம்ப வைக்கல போல அவரை!” என்றதும்,
“ப்பா! தட்ஸ் மீ! நான் இதுதான்! என் இயல்பை எப்படி ப்பா நான் விட முடியும்!? அது எப்படி என்னை விட்டு போகும்… எனக்கு புரியல!” என்றவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை.
“ப்ச் இல்ல ஜனனி! நீ கொஞ்சமும் கில்டி ஆகாம சிரிச்சு பேசிக்கிட்டு இருக்குறதை பாக்குறப்போ அவருக்கு கோபம் தான் வரும்”
“ஏன் வரணும்? இதெல்லாம் பிடிச்சு தானே லவ் சொன்னாரு? இப்போ இதெல்லாம் நான் மறந்து, என் இயல்பையே விட்டுட்டு போய் அவர்கிட்ட நின்னா, அது எப்படி நானா இருப்பேன்? ‘அந்த என்னை’ விரும்பினவருக்கு, ‘இந்த என்னை’ எப்படி பிடிக்கும்? ஐ ஜஸ்ட் கான்ட் அன்டர்ஸ்டேன்ட்!”
வேடிக்கை பார்க்கவிடாமல் தொணதொணக்கும் மகளிடம் கடுப்பை காட்ட முடியாமல், “விடுமா! அவரே மனசு மாறி வருவாரு!” விட்டேத்தியாய் சொன்னார் பரசுராம்! என்றாவது ஒருநாள் என்றால், பொறுப்பாய் பதில் சொல்லலாம்! எந்நேரமும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவரும் எவ்வளவு தான் தாங்குவார்…?
வீட்டில் இருந்தால் தான் இவளோடு இம்சை என வெளியே அழைத்து வந்தால், அங்கு வந்தும் இதே பேச்சென்றால் நொந்துப்போனார் மனிதர்.
“என்ன ப்பா ஈசியா விட சொல்றீங்க? அதெல்லாம் விட முடியாது! நான் மட்டும் அன்னைக்கு அவர் லவ் சொன்னபோ ஓகே சொல்லிருந்தா இவ்ளோ சீனே ஆகிருக்காது! யோசிக்காம உண்மையை கொட்டி தொலைச்சுட்டு இப்போ அவதிப்படுறேன்!” என்று புலம்பினாள்.
அவன் விலகி போகப்போக தான் அவனை நெருங்க வேண்டும்! அவன் வேண்டுமே வேண்டும் என்ற ஆவல் பெருக ஆரம்பித்திருந்தது அவளுக்கு. எங்கே இப்படியே இருந்து, என்னை விலக்கியே வைத்துவிடுவானோ என்ற பயம் சில நாட்களாய் அப்ப, அது இப்படி புலம்பல்களாய் கொட்ட ஆரம்பித்திருந்தது.
சில நிமிடங்கள் நகத்தை கடித்து துப்ப ஆரம்பித்தாள்.
“அம்மாடி, வரியா… கிப்ட் கொடுத்து போட்டோ எடுத்துட்டு வந்துடலாம்!”
இப்படி கேட்ட தந்தையை முறைத்துப்பார்த்தவள், “நான் எவ்ளோ ஃபீலிங்கா பேசிட்டு இருக்கேன்?” என்றதும்,
“ஓ, இன்னும் பேசிட்டு தான் இருக்கியா? பேசி முடிச்சுட்ட போலன்னு நினைச்சேனே!” என்று அவர் சீரியஸாய் சொல்ல, ‘ஆஆங்!’ சிணுங்கினாள் கவலையாய்.
“அட என்னம்மா பிரச்சனை உனக்கு?”
“அவன் தான் ப்பா! இம்சை பண்றான்!” என்றவள், “ப்பா? நம்ம ஏன் இந்த படத்துல வரமாதிரி அவனை கடத்திட்டு வந்து கட்டாய கல்யாணம் பண்ணிட கூடாது!” என்றாள் வெகு தீவிரமாய்.
பரசுராம் அதிர்ந்து பார்க்க,
“தாலி கட்ட வச்சுட்டா போதும்… கொஞ்ச நாள் முரண்டுப்பிடிப்பான்! அப்பறம் மஞ்ச கயிறு மேஜிக்’ல வழிக்கு வந்துடுவான்!” அவள் முகத்தில் துளியும் கேலியில்லை.
“ஹும்? உன்னை பெத்த புண்ணியவதி என் பொண்டாட்டியை நினைச்சு பார்த்தேன்!” கடுகடுவென சொன்னார்.
“லூசாப்பா நீங்க? என்னை அவனுக்கு பொண்டாட்டியாக்க வழி பாருங்கன்னா, செத்துப்போன உங்க பொண்டாட்டிக்கூட டூயட் ஆடுறீங்க?” அவரை மிஞ்சி கடுகடுத்தாள்.
“அடியேய்! நான் உனக்கு அப்பன்!” பல்லை கடித்தார்.
“ப்ச்! அப்பாக்கிட்ட தானே கல்யாண விஷயம் பேசமுடியும்?” என்றவள், “சொல்ல தெரியுதுல? ‘எனக்கு ஷியாமளன் தான் மருமகன்!'” அவரை போலவே சொல்லிக்காட்டி,
“சொன்னா மட்டும் ஆச்சா? என்ன செஞ்சீங்க நீங்க?” என்றாள்.
“நான் கல்யாணமே பண்ணாம இருந்துருக்கணும்! இந்த கொடுமை எல்லாம் தேவை தான் எனக்கு!” தலையில் அடித்துக்கொண்டார்.
“ப்ச்! போங்க ப்பா! எல்லாருக்கும் நான் வாய் பேசுறது தான் தெரியுது! என் மனசுல இருக்க கஷ்டம் புரியல! தப்பு செஞ்சுட்டோம்ங்குற கில்ட்டை மறைச்சுக்கிட்டு ஒவ்வொரு முறையும் ஷியாமை ஃபேஸ் பண்ண நான் படுற கஷ்டம் எனக்கு தான் தெரியும்!” என்றவளுக்கு இமைகள் நனைய ஆரம்பித்தது.
பரசுராம் அமைதியாகிப்போனார்.
துடுக்காய் இருக்கிறாள், வருத்தம் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அவள் வருந்தி பேசுவதை, அது சில நிமிடங்களே ஆகினும், தாங்க முடியவில்லையே! ஒருவேளை அவள் இதேபோல இருந்தால்? அவளை நினைத்தே ஊன் உறக்கம் அற்று போய்டும் நமக்கு! என்று புரிந்தது.
அது கொடுத்த அழுத்தம் அவரை பேசவிடவில்லை.
சிறுது நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர் இருவரும்.
“டேய்… பரசு!!!!” மண்டபத்தில் ஆரவார இரைச்சலை மீறிக்கொண்டு ஒலித்தது ஒரு குரல். அது வந்த திக்கில் பார்க்க, ஒருவர் எல்லோரையும் தள்ளிக்கொண்டு வேகவேகமாய் வந்துக்கொண்டிருந்தார் இவர்களிடம்.
பார்த்த பரசுராமிற்கு கண்கள் பிரகாசமானது. அருகே இருந்த மகளை உசுப்பி, “அங்க பாரு என் காலேஜு பிரன்ட் மார்த்தாண்டம்!” என்றார் பரசுராம்!
பார்த்த ஜனனிக்கு ‘ஐயையோ!’ என தொண்டைக்குழி அடைத்துப்போனது.
அருகே வந்துவிட்டவர் ஆரத்தழுவிக்கொண்டார் பரசுராமை.
நண்பர்கள் இருவரும் வெகுநாட்கள் சென்று சந்தித்துவிட்ட பூரிப்பில் மிதந்துக்கொண்டிருக்க, நைசாக நழுவிவிடலாமா என்று தோன்றியது ஜனனிக்கு.
‘வாய்ப்பில்லை ராஜா’ என்பதை போல, “இது என் பொண்ணு ஜனனி டா” என்று அறிமுகப்படுத்தினார் பரசுராம்.
“யப்பா! பசங்களை பார்த்தா தான் நமக்கு வயசானதே தெரியுது!” என்ற மார்த்தாண்டம், “உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்குமா!” என்றார்.
கல்லூரி விழாக்களில் எல்லாம் பொறுப்பாளராய் முன்னே நிற்ப்பவளை பார்த்திருக்க அனேக வாய்ப்புண்டு தானே!
“உங்க வீட்டு ஃபோன் நம்பர் தொலைச்சுட்டேன் டா!” பரசுராம் சொல்ல,
உரிமையாய், “போட்டேன்னு வையு! ஃபோன் போனா என்ன? வீடு தெரியாதா உனக்கு? வர மனசில்லைன்னு சொல்லு” என்றார் மார்த்தாண்டம்.
“என்னடா நீ? வேலை கிடைச்சு ஊர விட்டு போனேன்! இப்போ மூணு வருஷமா தான் சென்னை! எல்லாம் மாறிப்போச்சு! என்ன செய்ய சொல்ற?” என்று கையை விரிக்க, தாமும் தானே இத்தனை நாள் தொடர்புக்கொள்ளவில்லை என்ற எண்ணத்தில் அந்த பேச்சை விட்டுவிட்டார் மார்த்தாண்டம்.
ஆனாலும், ஜனனியின் முகம் வெகு பரிட்சயமாய் தோன்ற, “உன்னை பார்த்த மாதிரியே இருக்குமா!” என்றார் மீண்டுமாய்.
தந்தையின் இந்த நிலை தன்னால் தானே என்று நினைத்து வெதும்பியவள், அழுத்தமாய் மூச்செடுத்து, “அங்கிள்! நான் ஜனனி!” என்றாள்.
“சொன்னியே மா!” என்றார் அவர்.
தயக்கம் துறந்து, “அங்கிள் நான் ஜனனி! ஷியாம் சொல்லிருப்பாருன்னு நினைக்குறேன்!” என்று சுருக்கமாய் சொல்ல, அதிக விளக்கம் தேவைப்படவில்லை அவருக்கு. அவர் பார்வை அப்படியே மாறிப்போனது.