ஒருவழியாய் ஷியாமளனுக்கு காரை நிறுத்த இடம் கிடைத்துவிட்டது. லாவகமாய் போக்குவரத்துக்கு இடையூறின்றி வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவனுக்கு என்னவோ மலையே புரட்டி போட்ட அயர்வு.
நகரின் முக்கியமான இடத்தில் பிரம்மாண்டமாய் மண்டபம் பிடித்து ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்தால், அத்தோடு முடிந்ததா? வருபவர்களின் சௌகர்யம் பேண வேண்டும் அல்லவா?
நிரம்பி வழிந்த மண்டபத்தில் காரை உட்செலுத்த கூட இடமில்லை. பார்கிங் ஏரியா கூட நிரம்பி இருக்க, வேறுவழியின்றி மார்த்தாண்டத்தை மண்டப வாசலில் இறக்கிவிட்டுவிட்டு இவன் வண்டியை நிறுத்த போக, அவன் நேரம்… அடுத்த அரை கிலோமீட்டருக்கு ஒரு இடமும் காலியாக இல்லை! கொஞ்சம் முன்னே, கொஞ்சம் முன்னே என்று போய் போய் இறுதியாய் ஓரளவு திருப்தியான இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
சில அடிகள் நடந்ததுமே அவன் ஃபோன் அடிக்க ஆரம்பித்தது.
‘இன்னும் காணோம்ன்னு மாமா கால் பண்றாங்க போல’ என்று நினைத்துக்கொண்டே அதை எடுத்து பார்த்தவனுக்கு அழைப்பது அவன் நண்பன் என்று தெரிந்ததும், அதிலும் அதிகம் அழைக்காத நண்பன் என்று தெரிந்ததும், சிறு யோசனையோடு,
“சொல்லுடா!” என்று பேச ஆரம்பித்தான் ஷியாம்.
நலம், நலமறிய அவா என்று சில நிமிடங்கள் போன பேச்சு, “மச்சி, எனக்கு கல்யாணம்!” என்று அவன் சொல்லிவிட, உண்மையிலேயே மகிழ்ந்து போனான் ஷியாம்.
மண்டபத்தை கிட்டத்தட்ட நெருங்கி இருந்தான். ஆர்கஸ்ட்ரா சப்தம் வேற காதை அடைத்தது. அங்கே போனால் பேசுவது கடினம் என்று எண்ணி அப்படியே சாலி ஓரமே நின்று பேச ஆரம்பித்துவிட்டான்.
நண்பனோடு பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. இறுதியில் அவன், ‘உனக்கு எப்போடா கல்யாணம்? ஏதாவது லவ்வு கிவ்வு அமைஞ்சுதா?’ என்று கேலி போல கேட்கவும் தான் ஷியாமின் துள்ளல் பேச்சு துவண்டு போனது.
“அதுக்கு என்னடா அவசரம் இப்போ?” பட்டும் படாமல் சொன்னவன், “சாரி மச்சி! ஒரு பங்ஷன் வந்தேன்! மாமா வெயிட் பண்றாரு! உனக்கு அப்பறம் கூப்பிடுறேன்!” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு அப்படியே நின்றான்.
‘கல்யாணம்… காதல்…’
இந்த வார்த்தைகளை கேட்டதுமே அவளும் அவள் சிரிப்பும் தான் கண் முன்னே வந்து தொலைக்கிறது.
‘ஏமாற்றியவள் மீது இன்னும் எனக்கு நாட்டம் இருக்கிறதென்றால் என்ன மாதிரியான ஜென்மம் நான்!?’
வெகு காட்டமாய் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
‘கூடாது! இது தவறு! அவள் வந்து ‘மன்னிப்பே’ கேட்டாலும் செய்தது தவறு தான்! நான் என் நிலைல திடமா நிக்கணும்! முன்னாடி மாதிரி அவ சிரிப்பையும், பேச்சையும் பார்த்து ஏமாறக்கூடாது! நான் என் அம்மா மாதிரி இல்லை!’
மிக அழுத்தமாய் சொல்லிக்கொண்டான்.
அரைமணி நேரத்துக்கும் மேலாய் அவன் அங்கேயே நின்றிருக்க, முயன்று தன்னை சீர் செய்துக்கொண்டு அந்த மண்டபத்துக்குள் நுழைந்தான்.
‘மாமா’வ வேற என்னை காணோம்ன்னு தேடிட்டு இருப்பாரே!’ என்ற எண்ணம் வர, கண்களை கூட்டத்துக்குள் சுழல விட்டான்.
ஜனத்திரளில் ஒரு ஆளை அடையாளம் காண்பது அத்தனை கடினமாய் இருந்தது. அலைபேசியில் அவருக்கு அழைப்பு விடுத்தான்.
எடுத்தவர், அவர் இருக்கும் இடத்தை சொல்ல, தோராயமாய்த் தேடிக்கொண்டே அங்கே சென்றான். அவனை கண்டதும், “இங்கே இங்கே” கையை உயர்த்தி அவர் சமிங்ஞை செய்ய, அவரை கண்டுக்கொண்டதும் லேசான முறுவலுடன் அவரை நோக்கி சென்றவனின் நடை அப்படியே தேய்ந்தது அவர் முன்னே சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பவளை கண்டு!!!
“டேய், வாடா!” கத்தி அழைத்தார் மார்த்தாண்டம்.
அவன் மனதில் தோன்றுவதை வார்த்தைகளில் வடிக்க இயலாது. அப்படியொரு விதமான உணர்வு!
அவளை பார்த்ததும் ஒரு ஆனந்தம்… கூடவே ஒரு ஆத்திரம்!
அவளை கண்டதும் ஒரு களிப்பு… கூடவே ஒரு கடுப்பு!
அவள் சிரித்து பேசுவதை கண்டதும் ஒரு சிலிர்ப்பு… கூடவே ஒரு சிடுசிடுப்பு!
மொத்தத்தில் என்ன உணர்வென பிரித்து சொல்ல இயலா வண்ணம் பிச்சைக்காரன் தட்டை போல அத்தனை ருசியும் [உணர்வும்] ஒருசேர ஒன்றி கலந்து இருந்தது அக்கணம் அவனிடம்.
மரக்கட்டை போல நடந்து சென்று மார்த்தாண்டத்துக்கு அருகே அமர்ந்தான் ஷியாம்.
“இதான் என் மருமகன் பரசு!” என்றவர், “டேய், என் சிநேகிதன் ஒருத்தனை பத்தி அடிக்கடி சொல்லிருக்கேனே… ஆல்பம்’ல கூட போட்டோ காட்டிருக்கேனே!” என்று நினைவு படுத்தியவர்,
“அவன் தான் இது… பரசுராம்! இது அவனோட ஒரே பொண்ணு ஜனனி!” என்றார் இன்முகமாய்.
இருவருமே இப்போது தான் அவனை முதன்முதலில் பார்ப்பதை போல் பார்த்து வைத்தனர்.
இவனுக்கு புருவங்கள் சுருங்கியது.
“வணக்கம் தம்பி!” அவர் சொல்ல, கூடவே, “ஹலோ!” என்று பல்வரிசை காட்டினாள் ஜனனி!
இவன் இருவரையும் திருதிருவென பார்த்துக்கொண்டிருக்க, “வணக்கம் சொன்னா பதில் வணக்கம் வைக்க மாட்டியா?” காதுக்குள் கடிந்தார் மார்த்தாண்டம்.
குழம்பிய நிலையிலேயே “வணக்கம்!” என்றான்.
அதற்குள் மேடையில் பரிசு கொடுப்பதற்கான ‘க்யூ’ ஆரம்பித்துவிட்டது.
“போய் நிப்போம் வாங்க! இப்போ நின்னா தான் சாப்பிட்டு கிளம்ப நேரம் சரியா இருக்கும்” என்ற மார்த்தாண்டம் பரசுராமை அழைத்துக்கொண்டு முன்னே சென்றுவிட, அவர்களை வால்பிடித்துக்கொண்டு ஓடினாள் ஜனனி.
அப்படியே யோசனையோடு அமர்ந்திருந்தவனை, “வாடா ஷியாமா!” என்று அழைத்தார் மார்த்தாண்டம்.
மனமே இன்றி எழுந்து போய் அந்த வரிசையில் நின்றான். முறையே மார்த்தாண்டம், பரசுராம், ஜனனி அவள் பின்னே ஷியாம்! அவனுக்கு பின்னரும் ஆட்கள் நிற்க ஆரம்பித்திருந்தனர். தேர் போல நகர்ந்துக்கொண்டிருந்தது வரிசை.
“நீங்க என்ன தம்பி பண்றீங்க?” பரசுராம் திரும்பிப்பார்த்து அவனிடம் கேட்க, “ஹான்?” என்று அப்பட்டமாய் குழப்பத்தையும் அதிர்வையும் முகத்தில் காட்டினான் அவன்.
‘அடப்பாவி! பொண்ணு தான் நடிகைன்னா அப்பன் மகா நடிகனா இருப்பான் போலயே!?’ இது தான் அந்த நேரம் அவன் மனதுக்குள் ஓடியது.
மார்த்தாண்டம், “கார் ஷோரூம் அவன் தான் பாத்துக்குறான்! அது இல்லாம டூ வீலர் ஷோரூம் ஒன்னு ஆரம்பிச்சு நடத்திட்டு இருக்கான்! ரொம்ப பொறுப்பான பையன்!” என்று சான்றிதழ் வழங்க,
‘அடேங்கப்பா! இது உலக நடிப்புடா சாமி!’ வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஷியாம்.
இடத்தை சொன்ன மார்த்தாண்டம், “அடுத்த வருஷம் கல்யாணம் செஞ்சு வச்சுடலாம்ன்னு இருக்கேன்! ஏதாவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு பரசு!” என்றவர்,
“என் வீட்டு புள்ளங்குறதால சொல்லல! ரொம்ப தங்கமான பையன் இவன்!” என்று சொல்ல அப்படியே அவர்கள் பேச்சு நீண்டுக்கொண்டு போவதை என்னவோ உலக அதிசயம் போல கண் சிமிட்டாது பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ வித்தியாசம் தோன்ற தன்னை குனிந்து பார்த்தான்.
அவன் மீது உரசும் நெருக்கத்தில் ஜனனி நின்றுக்கொண்டிருக்க, ‘அட, இவ கூடவா இவ்ளோ நேரம் நின்னோம்?’ என்று திகைத்தவன்,
“ஏய்… தள்ளி நில்லு” என்று அடிக்குரலில் சீறினான்.
அலட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்த்தவள், இன்னும் அவனை நெருங்க, அவன் பின்னே நகர முடியாதபடி ஆட்கள் வேறு நிற்பதில் கடுப்பாகிப்போனான்.
“ஏய், தள்ளுடி! எதுக்கு இப்படி வந்து உரசிக்கிட்டு இருக்க?” எரிச்சலாய் சொல்வது போல சொன்னாலும் குரல் பிசிறு தட்ட, வாய்க்குள்ளே சிரிப்பை அடக்கியவள்,
“ம்ம்…? நீங்க தங்கமாம்! உங்க மாமா சொன்னாரு! அதான் ஒரிஜினலா டூப்பிலிகேட்டான்னு உரசி பாக்குறேன்!” அவனுக்கு மட்டும் கேட்கும்படி முனுமுனுத்தவள், சிரிப்பை அவனுக்கு காட்டாது முகத்தை திருப்பிக்கொள்ள,
கன்னம் இரண்டும் முத்தம் கேட்குதே!’ என்று பாட ஆரம்பிக்க, தன்னியல்பாய் அவன் கண்கள் முன்னவளின் முகத்தை காண ஏங்கியது.
அவளுக்கும் தெரியும்! இந்த பாடலை அவன் மிகவும் ரசிப்பான் என்று! திரும்பி பார்க்க சொல்லி தூண்டினாலும், அடமாய் நின்றுக்கொண்டான்.
பாடல் முடியவும் இவர்கள் முறை வந்து மேடை ஏறவும் சரியாய் இருந்தது. மணமகன் அருகே பெரியவர்கள் இருவரும் நின்றுகொள்ள, மறுபக்கம் இளையவர்கள் ஜோடியாக நிற்க வேண்டிய கட்டாயம். ஜனனி மணப்பெண் அருகே சென்று நின்றுவிட்டாள். இவன் அவள் அருகே தான் நின்றாக வேண்டும்!
அவன் மனதிலோ,
ஒரு ஆனந்தம்… ஒரு ஆத்திரம்…!
ஒரு களிப்பு… ஒரு கடுப்பு…!
ஒரு சிலிர்ப்பு… ஒரு சிடுசிடுப்பு…!
தட் அதே ‘பிச்சைக்காரன் தட்டு’ மொமென்ட்
வெகு நேரம் அங்கே வீணடிக்க முடியாதே… அவள் அருகே நின்றதும் புகைப்படம் எடுக்கப்பட, மேடையை விட்டு இறங்கி உணவு உண்ண சென்றனர் நால்வரும்.
பெரியவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட கதைகள் இருந்தது பேச!
இருந்ததா? அல்லது வேண்டுமென்ற உருவாக்கப்பட்டதா? என்ற குழப்பம் வேறு அவனுக்கு.
ஜனனி அவனிடம் அதிகம் பேசவில்லை. உடன் நடந்தாள்… அமர்ந்தாள்… வயிறு முட்ட உண்டாள்…!
கிளம்பும்போது அத்தனை உரிமையாய், “பை ஷியாம்!” என்று கையசைத்து தலைசாய்த்து சிரித்துவிட்டு போனவளின் வரிவடிவம் அவன் வீட்டிற்கு வந்து பலமணி நேரம் கடந்தும் கண் விட்டு மறையவில்லை.
மார்த்தாண்டம் வேறு அவளை அமைதியான, அடக்கமான, ஒழுக்கமான, தெய்வீகமான என்று எல்லா ‘மான’ போட்டு மானாவாரியாய் புகழ்ந்து தள்ள,
‘இவ தான் என்னை ஏமாத்துனவ’ என்று சொல்லிவிடுவோமா என்றுக்கூட தோன்றியது. ஆனால், அவனால் சொல்ல முடியவில்லை. அவளை அவர் தவறாய் நினைத்துவிடக்கூடாது என்று ஒரு மனம் திடமாய் சொல்ல, அவர் பேச்சை எல்லாம் மௌன சாமியாராய் கேட்டுக்கொண்டிருந்தான்.
அங்கே ஜனனி மொட்டை மாடி நிலவை வெறித்த பார்வை பார்த்துக்கொண்டு நிற்க, மெதுவாய் வந்து உடன் நின்றான் பரசுராம்.
அவர் வருகை உணர்ந்து திரும்பியவள், “தூங்கலையா ப்பா?” என்று வினவ,
“ப்ச்! எப்படி ம்மா தூக்கம் வரும்? அந்த பையன் நம்மளை என்ன நினைச்சுருக்கும்? நாடக கோஷ்டின்னு முடிவே செஞ்சுருக்கும்!” என்று வருத்தமாய் சொன்னார். அதே தான் அவளுக்கும் தோன்றி உறுத்திக்கொண்டிருந்தது.
‘நான் தான் ஜனனி! ஷியாம் சொல்லிருப்பாரு!’ என்று அவள் சொன்னதும் மார்த்தாண்டத்தின் முகம் அப்படியே மாறிப்போயிருந்தது.
“அங்கிள் என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்! தயவுசெஞ்சு இப்படி பாக்காதீங்க! ரொம்ப அசிங்கமா இருக்கு!” என்றவளுக்கு என்ன முயன்றும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
இப்படி ஒருவர் முன்னே தான் தலைதாழ்ந்து நிற்கும் நிலையை, அதிலும் அதை விட மோசமான நிலை தன்னால் தந்தையை ஏற்ப்பட்டதை எண்ணி அவள் மருக, மகள் அழுவது பொறுக்காமல்,
“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுடா!” என்ற பரசுராம் மொத்தமாய் ஒன்று விடாமல் சொல்லி முடித்தார்.
“என் பொண்ணு செஞ்சது பெரிய தப்பு! ஆனா அவ இப்போ மனசு திருந்திட்டாடா! ஷியாமை அவ ரொம்ப விரும்புறா! நீ மனசு வச்சா ரெண்டு பேருக்கும் ஒரு நல்லது செய்ய முடியும்!” என்று இறைஞ்சலாய் சொல்ல, அப்படியே அமர்ந்திருந்தார் மார்த்தாண்டம்.
மார்த்தாண்டம், “கண்ணை துடை மா! நல்ல காரியம் நடக்குற இடத்துல நாலு பேரு பார்த்த நல்லா இருக்காது!” அதட்டல் போல சொன்னதும் வேகவேகமாய் துடைத்துக்கொண்டாள்.
“ஹும்! ஷியாம் அன்னைக்கு மனசு ஒடிஞ்சு போய் கதறுன கதறல் இன்னும் என் கண்ணை விட்டு போகல! அவன் சொன்னதை வச்சு பார்த்ததை நீ ரொம்ப மோசமான பொண்ணா இருப்பன்னு நினைச்சேன்!” என்றவர்,
“ஆனா, இப்போ உன்னை நேர்ல பார்த்ததும் அப்படி நினைக்க முடியல!” என்றார்.
“அவ மோசமான பொண்ணெல்லாம் இல்லடா! ஏதோ புத்தி போன போக்கு! ஆழம் தெரியாம காலை விட்டுட்டா! நல்லா அடிச்சு போட்டேன் இருந்த கோவத்துல!” முகம் கசங்க சொன்ன நண்பனின் கரத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டார் மார்த்தாண்டம். ஆயிரம் சங்கதி சொன்னது அந்த ஒரு பிடிப்பு!
“இல்லப்பா! அங்கிள் நாளைக்கு செய்ய சொன்னதை நினைச்சா தான்…” தயக்கமாய் இழுத்தாள்.
“எதுவும் யோசனை இல்லாம சொல்லிருக்க மாட்டான்! தைரியமா இரு!” என்றவர் மெல்ல மெல்ல பேசி அவளை உறக்கத்திற்கு இட்டு சென்றார்.
மறுநாள் காலை விடிந்தபோதே ஷியாமளனுக்கு ஒரு வித இனம்புரியா உணர்வு.
வழமை போல குளித்துக்கிளம்பி ஷோரூமுக்கு சென்றான். என்னவோ அன்று அவன் அன்னை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போன்றதொரு உணர்வெழ, கண்முன் இருக்கும் அவர் நிழலை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தான்.
கதவு தட்டப்பட்டது.
பார்வையை திருப்பவே இல்லை.
“வாங்க!” குரல் மட்டும் கொடுத்தான்.
உள்ளே நுழைந்த உருவம், “குட் மார்னிங் சார்!” என்று உற்சாகமாய் சொல்ல, அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவன் திகைத்தான்.
ஜனனியை, அதிலும் அவள் கழுத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் பளிச்சென தொங்கும் அவன் ஷோரூம் அடையாள அட்டையுடன்!!!
‘ஈஈ’யென இளித்துக்கொண்டு நின்றாள்.
‘என்னடா இது!?’ என்பது போல அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தான்.
அப்போது அவனுள் தோன்றும் உணர்வுகள் என்னவாய் இருக்கும்!?