ஷியாமளனுக்கு மனமெங்கும் பாரம் ஏறி கிடந்தது. இதுநாள் வரை மனம் அறியாமல் கூட யாரையும் புண்படுத்தியதில்லை அவன். இன்றோ அவன் மனதில் அழுத்தமாய் அமர்ந்துக்கிடப்பவளை அதிகமாய் வதைத்துவிட்டான். நியாயமாய் அவள் மீதிருக்கும் கோபத்திற்கு அவன் பேசிவிட்ட பேச்சில் நிம்மதி தான் கிடைத்திருக்க வேண்டும்.
மாறாக, அவளுக்கு இணையாய்… ஏன் அவளை விடவே அதிகமாய் வேதனை அவனை அப்பிக்கிடந்தது.
அங்கே அவள் வேலைக்கு என்று வந்துவிட்ட நாள் தொட்டு ஒவ்வொரு நிமிடமும் இவனை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தாள்.
வெளியே பிடிக்காததை போல காட்டிக்கொண்டாலும் உள்ளூர அவன் மனம் அவள் புறம் சாயத்தான் செய்தது.
பெண் என்று ஒருத்தி அருகே இருந்தால் ஆணின் மனம் அவள் பக்கம் போவது இயல்பு தானே!
அதானே உலக வழக்கம்!? என்று தன்னைத்தானே சமன் செய்துகொள்வான்.
அவளும் அவனை சீண்டி விட்டு, கோபப்படுத்தி, சிரிப்பு காட்டி என எதாவது செய்துக்கொண்டே இருக்க, அவள் தன்னை முழுவதுமாய் ஆக்கிரமித்த உணர்வு தான் அவனுக்கு. வீட்டிற்குள் வந்து தன்னறைக்குள் நுழைந்து கதவடைத்துகொள்பவனுக்கு அவ்விடம் நிலவும் நிசப்தம் கூட மயான அமைதி போல தான் இருந்தது.
‘இருந்தாலும் தொல்லை, இல்லன்னாலும் தொல்லை’
‘இருக்கும்போது கொடுக்குற தொல்லையை விட, இல்லாதபோது கொடுக்குற தொல்லை தான் அதிகமா இருக்கு!’
‘அப்போ அவ இருந்தா பரவாலையா?’
கிட்டத்தட்ட இந்த நிலையை அடைந்திருந்தான்.
வீட்டில் தன் அறைக்குள் நுழைந்தால் தன்னை மீறி அன்னையின் முகத்தை பார்த்துக்கொண்டு நின்றுவிடுவான். எதுவும் கேட்க தோணாது. அவரும் எதையும் உணர்த்த முயன்றதாய் அவனுக்கு தோன்றியதில்லை.
மறுநாள் பொழுது விடிய, வேகவேகமாய் கிளம்புவான். அங்கே வேலை இருக்கே, பார்க்க வேண்டுமே! என்று சொல்லிக்கொண்டாலும், அவளை பார்க்கத்தான் செல்கிறோம் என்பது அவன் நெஞ்சறியும்!
அவனை கண்டதும், பளிச்சென சிரித்து “ஹாய்!” என அவள் கையசைக்கையில், சட்டென உற்சாகம் தொத்திக்கொள்ளும் அவனுக்கு. வெளியே காட்டிக்கொள்ள மாட்டான்.
அவன் நினைத்தால் ஷோரூமில் இருக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள முடியும்! ஏனோ அவனுக்கு அந்த எண்ணமே இல்லை. அவ்வப்போது வெளியே செல்வதை கூட மறந்து கடமையே கண்ணாய் அங்கேயே தான் இருந்தான்.
அவள் இருப்பை, அவள் பிரசன்னத்தை, அவள் குரலை, அவள் நகைப்பை, அவள் குறும்புகளை என ‘அவளின்’ அத்தனையையும் முன்பை போலவே அவன் மனம் ரசனையாய் அணுக, அதில் முழுதாய் முழுகவும் முடியாமல், ‘வேண்டாம்’ என வெளியேறவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்தான்.
‘அவள் செய்தது எத்தனை பெரிய தவறு? உன்னை ஏமாற்றியவளை நீ காதலிப்பாயா?’
இதுவே அவன் நிம்மதியை கெடுத்தது.
தன்னை மீறி அவளை ரசிக்கும் தருணங்களை எல்லாம் வெறுத்தான். சிடுசிடுக்க ஆரம்பித்தான். அவன் நடவடிக்கைகள் கொஞ்சகொஞ்சமாய் மாறிப்போனது. காரணமேயின்றி கண்ணில் படுபவரை எல்லாம் ஒன்றும் இல்லாத காரணத்திற்கு கூட வைதான். மார்த்தாண்டமோ அவள் அருகே இருந்தால் இவன் மனம் மாறுவான் என்று நினைத்திருக்க, அதற்கு தலைகீழாய் மாறிப்போனது அவன் நிலை.
நாளுக்கு நாள் கூடிய அவன் சிடுசிடுப்பில் சிக்கினாலும் தூசு போல தட்டி விட்டு செல்லும் ஜனனி, ஒரு நாள் அதீத உற்சாகத்தில் துள்ளி குதிக்காத குறையாக ஷோரூமிற்கு வந்தாள்.
கண்ணில்படுபவர்க்கு எல்லாம் கையிலிருந்த இனிப்பை வழங்கியவளை, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டும், ஒன்றும் சொல்லாமல், ‘ஷியாம் சார் எங்கே?’ என்றே கேட்டுக்கொண்டு ஓடினாள்.
சர்வீஸ் செக்ஷனில் நின்று மேற்ப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தவன் இவள் இப்படி ஓடி வருவதை கண்டதும், “ஹே பார்த்து வா!” என்றிருந்தான் தன்னை மீறி.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் முன்னே நின்றவளை அவன் குழப்பமாய் பார்க்க, மற்றவர்கள் சுவாரஸ்யமாய் பார்த்தனர்.
அங்கிருந்த அனைவருக்கும் அவர்களின் காதல் கதை அரசல் புரசலாய் தெரிந்திருந்தது.
சலித்தாலும், அதில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டவன், “சொல்லு” என்று கேட்க,
“யூ நோ வாட்? இன்னும் மூணு நாள்ல நான் டெல்லிக்கு போகப்போறேன்!” என்றாள் கண்கள் மின்ன.
அவனுக்கு புரியவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.
“புரியலையா? டெல்லில நடக்கப்போற கரம்சிங் சார் கான்ஃபிரன்ஸ்’க்கு என் தீசிஸ் செலெக்ட் ஆனதால நான் போகப்போறேன்!!!” என்று சொன்னவள், நின்ற இடத்திலேயே குதித்துக்கொண்டிருந்தாள். அப்படி ஒரு உற்சாகம் அவள் வதனத்தில்.
வதனம் மட்டும் அல்ல, அவளது உடலின் ஓவ்வொரு அங்கமும் துள்ளிக்கொண்டிருந்தது.
நிதானத்துடன் அவளை பார்த்தவன், கையில் இருந்த இனிப்பை வாயில் போட்டுக்கொள்ள,
“எனக்கு இது ரொம்ப பெரிய ஆசை ஷியாம்! எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா அவர்? அவரை மீட் பண்ணவே ரெண்டு வருஷம் அப்பாய்ட்மென்ட் வாங்கிட்டு வெயிட் பண்ணணும்! ஆனா எனக்கு… அவரோட ஸ்பீச்’ச, அதுவும் நேர்ல போய் கேட்குற அளவுக்கு சேன்ஸ் கிடைச்சுருக்கு! ஐ ஜஸ்ட் கான்ட் எக்ஸ்பிரஸ் ஹவ் ஹேப்பி ஐ’யம் நவ்… ஒருவிதமா ஹேப்பி… க்ளவுட்நைன்… அதையும் தாண்டி ‘எக்ஸ்டசி மோட்'” அவள் பேசிக்கொண்டே போக,
“எங்க வேணாலும் போலாமே!” என்றவன், “ட்ரீட் நல்லா ஹெவியா குடுக்கணும்… ஏன்னா இந்த தீசிஸ்’சே என் கண்ணீருல தானே செஞ்சு முடிச்சது?” என்று சொல்ல, ஒரு கணம் தான்! வெறும் ஒரே கணத்தில் அவளிடம் கொட்டி வழிந்த அத்தனை உற்சாகமும் துள்ளமும் காணாமல் போயிருந்தது.
“அதானே ஜனனி உண்மை?” என்றதும், சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க மௌனமாய் தலை குனிந்தாள்.
“என்ன பேசவே மாட்டேங்குற? உன்னோட இந்த சக்சஸ்’க்கு நான்தானே முக்கிய காரணமே! அதை சொல்லக்கூட உனக்கு மனசு வரலையா?” என்றவன்,
“என்னை நம்ப வச்சு, ஏமாத்தி கழுத்தறுத்து ஒரு வேலை செஞ்சுருக்க… அதுக்கான வெகுமதி உனக்கு கிடைக்குது! வெட்டுன உனக்கு மட்டும் பரிசு கொடுத்து, வெட்டுப்பட்டு கிடக்குற என்னை மட்டும் ஒதுக்கி வச்சா அது நியாயமா சொல்லு?” என்றான்.
“அதெப்படி கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம என்கிட்டேயே வந்து இந்த விஷயத்தை சொல்ல முடியுது உன்னால?” என்றான் கோவத்துடன்.
“என்னை நெத்தில என்ன கேனகிறுக்கன்னு எழுதி ஒட்டிருக்கா? அப்பப்பப்பா! என்னமா நடிக்குறீங்க நீயும் உங்க அப்பாவும்! என்னை யாருனே தெரியாதாம் உங்க ரெண்டு பேருக்கும்! இல்ல?
கூசல?! என் முன்னாடி சிரிச்சுக்கிட்டு வந்து பேசும்போது இப்படி பேசிதானே இவனை கவுத்தோம்ன்னு நினைச்சு உடம்பு கூசல?” அத்தனை வெறுப்பாய் கத்தியவன்,
“ஒருவேளை இதான் உன் தொழிலேவா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி உரைக்க,
“போதும் ஷியாம்!!!” என முடிந்தமட்டும் கத்தினாள் ஜனனி. அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் இரண்டும் அழுகையை அடக்குவதால் சிவந்து போயிருந்தது.
“போதும்… இதுக்குமேல ஒன்னும் பேசாதீங்க” என்றவளுக்கு குரல் உடைய, அவள் கண்கள் கலங்குவதை நெஞ்சில் ஏறிய பாரத்துடன் வெறித்தான் ஷியாம்.
“நான் செஞ்சதுக்கு விளக்கமோ, நியாயமோ குடுக்க நான் எப்பவும் நினைச்சது இல்லை! தப்பு… பெரிய தப்பு! செஞ்சுட்டேன்!!! என்ன பண்ண சொல்றீங்க? மன்னிப்பு கேட்டு கேட்டு அலுத்துட்டேன்! இன்னும் என்ன தான் செய்யணும்? கால்ல விழனுமா?” என்றவள், பட்டென குனிய, பதறி விலகினான் அவன்.
“ஏய், என்ன பண்ற?” சுற்றிலும் ஆட்கள் பார்க்க, அப்படியொரு படபடப்பு அவனுக்கு. அதே ஆட்கள் முன்னிலையில் தான் அவளை இப்படி பேசியிருக்கிறோம் என்பதை மூளையை அடையவில்லை.
குனிந்தவள், அவன் விலகிவிட்டதால் அப்படியே மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.
“என்னால முடியல ஷியாம்! தப்பு செஞ்சவங்க எல்லாம் சபிக்கப்பட்டவங்களா? அவங்களுக்குன்னு ஒரு மன்னிப்பு? அவங்களுக்கு ஒரு பிடித்தமான வாழ்க்கை? அமையவே கூடாதா என்ன?” என்றவள்,
“பொண்ணுன்னா தப்பே பண்ணக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா? அப்டி தப்பு செஞ்சுட்டா அவளுக்கு மன்னிப்பே கிடைக்காதா? இல்ல, கிடைக்க கூடாதா?” என்றாள்.
“ஆம்பளை ஆயிரம் தப்பு பண்ணுவான்… மன்னிச்சுடுன்னு வந்து நின்னுட்டா உடனே அவனை பொண்ணுங்க ஏத்துக்கணும்! அதே பொண்ணு ஒரே ஒரு தப்பு செஞ்சுட்டா கூட அவளை மன்னிக்க மனசு வர மாட்டேங்குதுல உங்களுக்கு?” விரல் நீட்டி கேட்டவள் மெல்ல எழுந்து நின்றாள்.
தெளிவான முகத்துடன், அவனை நேருக்கு நேர் பார்த்து, “ஐ ஸ்டில் லவ் யூ! என் தப்பை சரி பண்ணனும்ன்னு சொல்ற ஐ லவ் யூ இல்ல இது… ஐ ரியல்லி ரியல்லி லவ் யூ! புரியுதா?” கத்தியவள்,
“மூணு நாள் தான் உங்களுக்கு டைம்! நீங்களே வந்து என் ‘சாரி’யை அக்சப்ட் பண்ணிக்கிட்டு ஏர்போர்ட் கூட்டிட்டு போங்க! இல்லன்னா, நான் இந்த ‘கான்ஃபிரன்ஸ்’காக தானே உங்க பின்னே சுத்துனேன்னு நினைக்குறீங்க?” நிதானமாய் நிறுத்தி,
“உங்களை விட எனக்கு எதுவும் பெருசில்லை ஷியாம்! நீங்க வழியனுப்பாம நான் டெல்லிக்கு போகபோறதில்லை!” ஸ்திரமாய் சொன்னவள், திரும்பி வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
இவன் தான் சிலையென அவளை பார்த்துக்கொண்டே நிற்க, ஒரு நொடி நின்று, அவனை திரும்பி பார்த்தவள்,
“அழுது, கதறி ஆர்ப்பட்டாம் செஞ்சு ஸீன் போடாம சவாலா பேசிட்டு போறாளேன்னு அசால்ட்டா இருக்காதீங்க ஷியாம்! யூ ப்ரோக் மை ஹார்ட்!” இறுதி வரியை சொல்கையில் அவள் குரல் நலிந்து பிசிறு தட்ட ஆரம்பித்தது.
அழுகையை வெகுவாய் அடக்குகிறாள் என்பது அவள் தாடை துடிப்பதில் தெரிய, இவன் தான் துடிதுடித்து போனான்.
“சுக்குநூறா உடைச்சுட்டீங்க! வலிக்குது!” அடக்கியும் அவளை மீறி ஒரு துளி கன்னத்தில் வழிந்துவிட்டது.
வேகமாய் துடைத்தவள், “யூ ஒன்லி கேன் ஹீல் மை வூன்ட்! காத்திருப்பேன் வருவீங்கன்னு! ஒருவேளை நீங்க வரலன்னா நான் எப்பவும் உங்க முன்ன வரவே மாட்டேன்!” என்றவள் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.
அத்தனை பேருக்கு மத்தியில் நிற்க முடியாமல் தன் கேபினுக்குள் புகுந்துக்கொண்ட்வான் தன்னைத்தானே கண்மண் தெரியாமல் அடித்துக்கொண்டான்.
‘ஏண்டா இப்டி பேசுன? ஏன்? ஏன்?’ ஒவ்வொரு வார்த்தைக்கும் தன்னைத்தானே சரமாரியாய் அவன் அடித்துக்கொள்ள, மனம் அமைதியடைய மறுத்தது.
‘அவளை இவ்ளோ ஹர்ட் பண்ற அளவுக்கு என்ன வன்மம் டா அவமேல உனக்கு?’
‘அவ இல்லாம இருப்பியா நீ? முடியுமா உன்னால?’
உள்ளம் கேட்க, வாய்விட்டே, “நோஓஓ…!” என்று கத்தினான்.
முகத்தை அழுந்த பற்றிக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தவனுக்கு அவள் வேகமாய் தன் ஒரு துளி கண்ணீரை துடைத்த நொடி வந்துப்போக,
“ஜானுமா! ஜானுமா! சாரிடா!” உளற ஆரம்பித்தான்.
படாரென அறைக்கதவு திறக்க உள்ளே நுழைந்த மார்த்தாண்டம், “என்னடா சொன்ன ஜனனிய? அதுவும் அத்தனை வேலையாளுங்க முன்னாடி?” என்றார் அதிஉக்கிரத்துடன்.
தவறு செய்த பொடியன் போல அவர் முகம் பார்க்க கூட பயந்தவன், “கோவத்துல… என்னை மீறி!” என்று பேச திணற, கையை ஓங்கிக்கொண்டு வந்தார் அவர்.
அசையாமல் நின்றவனை அடிக்க முடியாது, “ச்சே!” என்றவர், “அந்த பொண்ணு மேல எனக்கும் கோவம் இருந்துச்சுடா! ஆனா, அவ மன்னிப்பு கேட்டு அழுதப்போ அவ கிட்ட பொய் இல்லை! அதனால தான் உன் பக்கமா இருந்து உன்னை சமாதானப்படுத்தட்டும்ன்னு உள்ளே விட்டேன்! உன்ன முன்னபின்ன தெரியாதமாதிரி நான்தான் நடந்துக்க சொன்னேன்” என்றவரை திகைப்பாய் பார்த்தான்.
‘எல்லாம் தெரியுமா?’ என்ற பார்வையில்.
“இப்படி பண்ணுவன்னு நான் கொஞ்சமும் நினைக்கல ஷியாமளா!” அத்தனை அதிருப்தி அவர் குரலில்.
“சரி எனக்கு ஒன்னே ஒன்னு சொல்லு! ஜனனியை தவிர வேற ஒரு பொண்ணை உன்னால கல்யாணம் செஞ்சுக்க முடியுமா? யோசி!”
“அப்பறம் என்ன இதுக்குடா இந்த வீராப்பு எல்லாம்? முதல்ல போய் அவளை பேசி சமாதானப்படுத்து!” என்றுவிட, வேகமாய் வெளியேற போனவனை தடுத்தவர்,
“இப்போ வேண்டாம் ஷியாமா! நீ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுருக்க! இப்போ ஒன்னு செஞ்சுட்டு, அது தப்போன்னு பின்னால வருந்தக்கூடாது! அதனால வீட்டுக்கு போ… அமைதியா யோசி! மனசை சமநிலைப்படுத்து… அப்பறமா முடிவெடு! ஏன்னா இது உன் வாழ்க்கை!” என்று சொல்ல,
“அவ தான் என் வாழ்க்கை” என வாய்வரை வந்ததை அப்படியே விழுங்கிக்கொண்டு அவர் சொன்னதற்கு தலையாட்டி, வீட்டிற்கு சென்று சேர்ந்தான் ஷியாம்.
வீட்டுக்குள் நுழைந்தவனுக்கோ ஒரு நிமிடம் கூட அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். என்னென்னவோ செய்தாள். ஏதேதோ சொன்னாள். கலகலவென சிரித்தாள்.
இப்போதே சென்று அவளை பார்ப்பாமோ என்று எழுந்த பேராவலை அடக்குவதே பேரும் பாடாய் இருந்தது அவனுக்கு.
இன்று அவள் அழுததை தான்டி அவளை பற்றிய மற்றவைகளை எல்லாம் மெல்ல மெல்ல ருசித்து அசைப்போட்டான்.
ஒருநாள்,
“ஷியாம் சார்! மன்னிப்பு கேட்குறவன் மனுஷன்… மன்னிக்குறவன் பெரிய மனுஷன்னு உலக நாயகனே சொல்லிருக்காரு! அவர் சொல்லைக்கேட்டு பெரிய மனுஷனாவீங்கன்னு பார்த்தா இப்படி சின்னபுள்ளையாவே இருக்கீங்களே?” அத்தனை தோரணையாய் அவள் பேசியதற்கு அவன் அன்று முறைத்துவிட்டு போயிருக்க, இன்று அதை நினைத்து நினைத்து ரசித்தான்.
மனம் அமைதி அடைய அடைய, அவளை சீண்டிப்பார்க்க அவனுக்கு ஆவல் எழுந்து நின்றது.