டிரென்டியான ஜம்ப்சூட்டில் தயாராகி ஏற்கனவே பேக் செய்து ரெடியாய் இருந்த ட்ராலியை தாண்டி குறுக்கும் நெருக்குமாய் தன் அறைக்குள் நடந்துக்கொண்டிருந்தாள் ஜனனி.
பூட்டாமல் இருந்த கதவை திறந்து எட்டிப்பார்த்த பரசுராம், “நேரமாச்சு ஜனனி! நான் வேணுனா ஒருக்க ஷியாம் கிட்ட பேசி பார்க்கவா?” என்றார்.
“வேண்டாம் ப்பா” உடனே மறுத்தாள்.
“எனக்கு ஷியாம் தான் ப்பா முக்கியம்! அவர் வராம நான் போகல!”
“ஒருமுறை பேசிப்பார்க்குறேனே ஜனனி மா” மனம் கேளாமல் மீண்டும் அவர் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவள், “வேண்டாம் ப்பா” என்றாள். குரல் மெலிதாய் இருந்தாலும் அழுத்தமாய் சொன்னாள்.
அதற்குமேல் பேசமுடியாமல் வெளியேறியவர் மார்த்தாண்டத்துக்கு தான் அழைத்தார்.
“ஷியாம் என்ன செய்றாப்ல? ப்ளைட்டுக்கு நேரமாச்சுடா!” என்று சொன்னதும்,
“வெப் சீரீஸ் பார்த்துட்டு இருக்கான்” கடுகடுவென அவர் சொன்னதே, ஷியாமிடம் பேசி பேசி உண்டான கடுப்பில் இருக்கிறார் என்பதை பரசுராமிற்கு சொன்னது.
“எனக்கு ஜனனி டெல்லி போறதோ, கிளாஸ் அட்டென்ட் பண்றதோ முக்கியமே இல்லடா! இவ கொடுத்துருக்க ‘கெடு’க்குள்ள தம்பி வந்துடனும்… ரெண்டு பேரும் வாழ்க்கைல சேரனும்… இவ்ளோதான் என் எதிர்ப்பார்ப்பு!” ஆழ்ந்த குரலில் சொன்னார் பரசுராம்.
அதையே ஆமோதித்தவராய், “ஆமா பரசு! சும்மா வீம்பு பிடிச்சுக்கிட்டு உட்காந்துருக்கான்! பின்னாடி வருந்தப்போறது இவங்க ரெண்டு பேரும் தானே! ஒரு அளவுக்கு மேல என்னால அவன்கிட்ட பேச முடியல! காலைல வெளில போறவன் போல கிளம்பி வந்ததும் ஜனனியை பார்க்க தான் போறான்னு நினைச்சா, ஹால்ல உட்காந்து டிவி பாக்குறான்” என்றவருக்கு கடுப்பாய் வந்தது. ஓரக்கண்ணில் அவனை முறைத்துக்கொண்டே பேசினார்.
மறுபுறம் என்ன சொன்னதோ, “கண்டிப்பா சார்! ரொம்ப பெரிய உதவி இது! கரெக்ட் டைம்க்கு வந்துடுவோம்!” என்றுவிட்டு அவன் தாங்கியில் அதை வைக்க, பிடித்துக்கொண்டார் அவனை.
காரில் சென்று அவள் வீட்டின் முன்னே நிற்பதற்குள் வாசலை தாண்டி வந்துவிட்டார் பரசுராம். அப்படி ஒரு பிரகாசம் அவர் முகத்தில்.
இறங்கியவனின் கையை பற்றிக்கொண்டு, “என்னை தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை. மார்த்தாண்டம் சொன்னான்னு தான் அன்னைக்கு அப்படி உங்ககிட்ட பேச வேண்டியதா போச்சு!” என்று சொல்ல,
“ஐயோ மாமா! நான் தான் கோவத்துல ஒன்னு ரெண்டு வார்த்தை விட்டுருப்பேன். மன்னிப்பு நான்தான் கேட்கணும்… நீங்க இல்ல! பழசெல்லாம் பேச வேண்டாம் மாமா” தயவாய் சொன்னதும்,
“மார்த்தாண்டம் இப்போதான் நீங்க கிளம்பிட்டீங்கன்னு போன்ல சொன்னான்! இன்னும் ஜனனிக்கு தெரியாது! நீங்க உள்ளே போய் சர்ப்ரைஸ் பண்ணுங்க” என்றவரை சிரிப்புடன் பார்த்தவன் சத்தமின்றி சிலதை சொல்லிவிட்டு வீட்டிற்க்குள் நுழைந்தான்.
அறைக்குள் இருக்கிறாள் என தெரிந்தது. இவன் நேரே சென்று கதவை திறந்ததும், இவனை கண்டவள் வெயில் பட்ட கண்ணாடியாய் பளிச்சென சிரிக்க, இவனோ உர்ரென்ற முகத்துடன் ஒய்யாரமாய் நின்றிருந்த ட்ராலியை தரதரவென இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
சிரித்தவளின் முகத்தில் அப்படியே குழப்பம் குடிகொண்டது. அவன் வந்ததும் தன்னை தேடி வந்துவிட்டான் என அவள் மகிழ, ஒரு நொடிக்கூட அவளை பாராதவன் களவாணி போல பெட்டியை இழுத்துக்கொண்டு செல்வதை பார்த்து அவசர அவசரமாய் அவன் பின்னே ஓடினாள்.
அதற்குள் அவன் ட்ராலியை டிக்கியில் இருத்திக்கொண்டிருந்தான். வாசலில் நிற்கும் தந்தையை, “அப்பா?” என்று கலக்கத்துடன் அவள் அழைக்க,
அவர் பேசும்முன்னே, அவளிடம் வந்தவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போக, இழுப்பது அவன் என்பதால் மறுப்பின்றி வளைந்தாள். முன்சீட்டில் அவளை தள்ளியவன், கதவை அடித்து சாற்றிவிட்டு ஓட்டுனர் இருக்கையில் ஏறி, அவளறியாமல் பரசுராமிற்கு ஒரு சிரிப்பை கொடுத்துவிட்டு அதிவேகமாய் வண்டியை செலுத்தினான்.
சில நிமிடங்கள் அங்கே அமைதி மட்டுமே! என்ன பேசுவது என்றுக்கூட அவளுக்கு தெரியவில்லை. அவன் வந்துவிட்டதால் ‘தன்னை மன்னித்துவிட்டான்’ என நினைப்பதா? இல்லை இப்போதைய பாராமுகம் ‘உன்னை நான் மன்னிக்கவில்லை’ என சொல்வதை நம்புவதா? என அவள் குழம்பிக்கொண்டு இருந்தாள்.
அவனுக்கு சிரிப்பு பற்கள் தாண்டி வர பார்த்தது. எங்கே அவளை பார்த்துவிட்டால் சிரித்துவிடுவோமோ என்று பல்லை கடித்துக்கொண்டு சாலையில் மட்டுமே கவனமாய் இருந்தான்.
வண்டி விமானநிலையம் நோக்கி செல்வது புரிந்தது அவளுக்கு.
தயக்கம் உடைத்து, “ஷியாம்?” என்றாள்.
திரும்பவில்லை அவன்.
மீண்டும், “ஷியாம்?” என்றதும், ஸ்டியரிங்கில் ஓங்கி அவன் குத்த, இவளுக்கு பேச்சு தொண்டையுடன் நின்றுப்போனது.
அதன்பின் அவஸ்தையாய் கழிந்தது மேற்கொண்ட நிமிடங்கள்.
அவன் லாவகமாய் வண்டியை திருப்பி பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கிவிட, இவளும் உடன் இறங்கினாள். ட்ராலியை வெளியே இழுத்தவன், காரை பூட்டிவிட்டு இவளை மறுகையில் பற்றிக்கொண்டு அந்த சர்வதேச விமானநிலையத்துக்குள் நுழையப்போக, கால்களை அழுந்த ஊன்றிக்கொண்டு,
“நான் வர மாட்டேன்!” என்றாள் ஜனனி. திரும்பி கேள்வியாய் பார்த்தான் அவன்.
“எனக்கு இது வேண்டாம் ஷியாம்! நீங்க தான் வேணும்!” அழுகையை அடக்குவதில் கண்கள் சிவந்துப்போனது அவளுக்கு.
அவன் பிடி இறுக, வலுவாய் இழுத்தான் அவளை.
“ஷியாம், ப்ளீஸ்! என்னை மன்னிச்சுடுங்க தயவுசெஞ்சு! எனக்கு எதுவும் வேண்டாம், நீங்க மட்டும் போதும் ப்ளீஸ்” நின்ற இடத்தில் அவள் கெஞ்ச, அப்படியே கட்டிக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு. ஆனாலும் அழுத்தமாய் அவளை உள்நோக்கி இழுத்தான்.
“ஷியாம், தரைமட்டம் வரைக்கும் போய் கெஞ்சிட்டேன்! இதுக்குமேல என்ன செய்யனும்ன்னே தெரியல எனக்கு!” இன்னும் கொஞ்சம் போனாலும் நயனநதி மடை திறந்துவிடும் என்ற நிலை.
திரும்பி பார்த்தவன், “வா!” என்றான். அவனது அந்த ஒரே ஒரு சொல்லிற்கு அவள் அப்படியே அடங்கிவிட, மறுப்பில்லாது நின்றவளை இலகுவாய் இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
விமானத்தின் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
செக் இன் கவுண்டருக்கு இவளை போக சொல்லி சைகை காட்டினான். இவன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.
“போ!” இப்போது அவன் வார்த்தையை அவள் கேட்கவில்லை.
“ஒரேயடியா போயிடவா? உங்களுக்கு நான் வேண்டவே வேண்டாமா?” துளிர் கோபம் முளைக்க கேட்டவளை, கடினப்பட்டு முறைத்தான் அவன்.
“தப்பு பண்ணுனா மன்னிப்பே இல்லையா ஷியாம்? இதே நீங்க செஞ்சுருந்தா நான் இப்படி விட்டுருப்பேன்னு நினைக்குறீங்களா?” ஆதங்கமாய் கேட்டவள்,
“இந்த ஓரவஞ்சனை உலகத்துல எப்பவுமே ஆம்பளைங்களுக்கு ஒரு நியாயம், பொம்பளைங்களுக்கு ஒரு நியாயம்!” என்று புலம்ப, அறிவிப்பு மீண்டும் ஒலித்தது.
“நேரமாச்சு! போ!” என்றான். ஆத்திரமாய் வந்தது அவளுக்கு, கூடவே அழுகையும்!