“யெஸ், ஐ ஆம்!” என்றவன், அவள் தோள் தொட்டு முன்பக்கமாய் தள்ள, இரண்டடி நகர்ந்து பின் அப்படியே நின்றவள்,
“போடா, உனக்கு எல்லாம் கனிமொழி தேன்மொழின்னு எவளாவது வாய்க்கா வரப்புல திரிவா! அவளை தேடித்தேடி லவ் பண்ணு! நான் எல்லாம் உனக்கு செட்டே ஆவமாட்டேன்!” மெலிதாய் தேம்பிக்கொண்டே அவள் சொன்னதும், அடிவயிற்றில் இருந்து கிளம்பிய சிரிப்பை மறைக்க, முகத்தை தேய்ப்பவன் போல குனிந்துக்கொண்டான் அவன்.
அங்கிருந்த காவலாளி வேறு அவளை அழைக்கவே, கடுகடுவென உள்ளே சென்றாள். செக் இன் முடித்து சற்று தள்ளி வந்து எட்டிப்பார்த்தவளுக்கு கூப்பிட்டால் கேட்கும் தொலைவில் அவன் நிற்பது தெரிந்தது.
ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாகவாது ‘வா!’ என இரு கைகளையும் விரித்து விட மாட்டானா என்று அவள் ஏங்கிப்போய் பார்க்க, “பாய்!” என கையசைத்தான் அவன்.
“மன்னாங்கக்கட்டி!” உச்சிக்கு ஏறிய கோபத்துடன் நகரும் படிகட்டுகளில் அவள் ஏறப்போன நேரம்,
“ஜானு…ஊஊஊஊஊஊ….” என்ற சப்தம்!
‘ஜானு’வா?’
‘அவன் குரல் தான்!’ என மூளை சொன்ன வினாடி ஆசையாய் திரும்பி பார்க்க,
இருகைகளின் ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் ஒன்றிணைத்து தன் நெஞ்சுக்கூட்டின் அருகே இதயம் போல காட்டியவன், சத்தமாய்,
“மனம் விரும்புதே…
உன்னை….
உன்னைஈஈ….
உன்னைஈஈஈஈ” அவளை கைக்காட்டி இன்னும் இன்னும் சப்தமாய் அவன் சொன்னபோது, இறுதிசுற்றி ஹீரோயின் போல அவனை கட்டிக்கொள்ள தான் அவள் கையும் காலும் பரபரத்து அவனிடம் ஓடியது.
ஆனால், காவலாளி தடுத்துவிட, அவனை நோக்கி குழந்தை போல சினுங்கியவளை தள்ளி நின்றே ரசித்தவன்,
“சந்தோசமா போயிட்டு வா!” என்றான்.
“வேண்டாம்! வேண்டாம்… எதுவுமே வேண்டாம்… நான் இப்படியே வரேன் உங்களோட!” விட்டால் தடுப்பை தாண்டி குதித்துவிடுவாள் போன்ற வேகம் அவளுக்கு.
“போணுமா?” மனமே இல்லாமல் கேட்டவளை, “கண்டிப்பா போனும்!” என்று சொல்லி சினம் கொள்ள வைத்தான் அவன்.
“ப்ச் ஷியாம்! ஆஆஆ” காலை உடைத்துக்கொண்டு சிறுப்பிள்ளை போல சிணுங்கியவள், “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” போட எதுவும் அவனிடம் வேலைக்கு ஆகவில்லை. நகரும் படிக்கட்டுகளில் ஏறி நின்றுவிட்டு,
“போடா எரும! இம்சை! பைத்தியம்! சந்தோசத்தை அனுபவிக்க கூட விட மாட்டேங்குறான்! சேடிஸ்ட், க்ரூவல், அர்ரோகன்ட்… இந்த உலகத்துல இருக்க எல்லா கெட்ட வார்த்தையையும் இந்த நிமிஷம் உனக்கு நான் டெடிகேட் பண்றேன்” தன் போக்கில் கத்திக்கொண்டே போனவளை கண்ணை விட்டு மறையும்வரை பார்த்துவிட்டு அதிசந்தோசத்துடன் மேற்கொண்ட வேலைகளை கவனிக்க ஓடினான் அவன்.
ஷியாமளனுக்கு மூன்று நாட்களும் மூன்று நொடிகள் போல ஓடியது. ஆனால், ஜனனிக்கு ஒரு நாளை கடத்தவே பெரும் பாடு! இடையிடையே அவனுக்கு தொடர்பு கொண்டாலும் அவன் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் ‘வேலை இருக்கு, அப்பறமா கூப்பிடுறேன்’ இல்லையோ, ‘வெளியே இருக்கேன், தெரிஞ்சவங்க வீட்டுக்கு வந்துருக்கேன்’ என்பான். அவன் தான் இப்படி என்றால், அவள் தந்தை கூட அதையே செய்ய,
‘டேய் என்னடா நடக்குது!?’ என தனியே மண்டையை பிய்த்துக்கொண்டு இருந்தாள்.
ஆசையாசையாய் எதிர்ப்பார்த்த அவளது மூன்று நாள் கான்பிரன்ஸ் என்னவோ பள்ளிக்கூட பிராத்தனை கூடம் போலவும், அங்கே நின்று பேசும் கரன்சிங் அவள் காதலை கெடுக்க வந்த துரோகி போலவும் தெரிந்தது அவளுக்கு.
இருப்பினும் முக்கியமான வாய்ப்பாயிற்றே என்று முடிந்தமட்டும் கவனமாய் இருந்து குறிப்புகள் எடுத்து, வந்த வேலையை பார்த்தாள்.
மூன்று நாள் முடிந்த கையோடு சூரியனே இன்னும் டியுட்டிக்கு வந்திராத நேரத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டாள் அவள்.
வெறும் மூன்றே மணிநேர பயணம்! மூன்று நாட்கள் பொறுத்தவளுக்கு இந்த மூன்று மணி நேரம் பெரும் கொடுமையாய் இருந்தது.
மனித இனத்திற்கு இறக்கையை கொடுக்காத கடவுளை கண்டபடி வசைப்பாடினாள்.
‘ஓட்டுறானா? இல்ல உருட்டுறானா?’ முகமறியாத பைலட்டை வேறு ஏசினாள்.
‘அவனவன் லவ்வுக்காக அமெரிக்கா போறான். இந்தா இருக்கு டெல்லி… என் பின்னாடியே வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு தோணுச்சா பாரு! சாம்பிராணி!’
அவளை புலம்ப வைத்தவனையும் விடவில்லை.
‘நகர்ந்து தொலைஞ்சா என்ன? திநகர் தெருல போறோம்ன்னு நினைப்பு!’ முன்னே சென்றவர்களை எல்லாம் முந்தித்தள்ளிக்கொண்டு வெகுவேகமாய் வெளியே வந்தவள் அந்த விடிந்தும் விடியாத நேரத்தில் அவனை ஒரு துளி கூட எதிர்ப்பார்க்கவில்லை.
கைகால்கள் துள்ள ஓடி சென்றாள் அவனை கட்டிக்கொள்ள. அவனோ இவளுக்கு பின்னே இருந்த ட்ராலியை இழுத்துக்கொண்டு, “வா வா! நேரமாச்சு” என்று வாசலுக்கு விரைய, ‘பே!’ என நின்றாள் இவள்.
காரில் ஏறியதும் அடுத்த சில அடி தொலைவிலே இருந்த ஒரு கடைக்குள் அவளை இழுத்துக்கொண்டு சென்றான். அந்த நேரத்தில் கதை திறந்திருப்பதையே அவள் ஆச்சர்யமாய் பார்க்க, அதைவிட அது ஒரு பெண்கள் அழகு நிலையம் என்றதும் பேரதிர்ச்சி ஆனது.
உள்ளே அவளை விட்டவன் உடனே வெளியேறிவிட்டான். அடுத்த பதினைந்தே நிமிடங்கள்!!!
அவளுக்கு சிம்பிளான ‘உப்படா சில்க்’ புடவை கட்டி மிதமான அலங்காரம் முடிந்திருந்தது. கதவை திறந்து வந்தவன் அவளை பார்த்து திருப்தியாய் சிரித்தான்.
பின்னே இருவரும் அங்கிருந்து கிளம்ப, “ஏதாவது பங்ஷன் போறோமா?” என்றாள் அவள்.
ஏனெனில் அவள் அலங்காரம் அப்படி இருந்தது. மணபெண்ணிற்குரிய ஆடம்பரமின்றி கல்யாண வீட்டுக்கு போகும் சற்று அதிகப்படி அலங்காரம் மட்டுமே!
அவன் சிரித்தானே ஒழிய பேசவில்லை.
“ஃபர்ஸ்ட் டைம் என்னை புடவைல பாக்குறீங்க… ஏதாவது சொல்லலாம் ல?” ஆவலாய் கேட்டிட,
“இப்போ நேரம் இல்லை! எல்லாத்தையும் பொறுமையா நைட் பார்த்துட்டு சொல்றேன்!”
அவன் என்னவோ இயல்பாக தான் சொன்னான்! இவளுக்கு தான் முகம் குப்பென சிவந்துப்போக அதற்கு மேல் பேச்சுக்கூட வரவில்லை அவளுக்கு. அவள் இயல்பிற்கு மீண்ட நேரம் கார் நின்றது.
மீண்டும் அதே விமான நிலையம்! திருதிருவென விழித்தவள், “மறுபடியுமா?” என்று கேட்க, ‘ஆம்!’ என சிரித்தான் அவன்.
எதை கேட்டாலும் சொல்ல மாட்டான் என்று புரிந்துப்போனது.
“ப்ளைட்டுக்கு இன்னும் எவ்ளோ நேரம் இருக்கு?”
“இருவது நிமிஷம் இருக்கு!”
“எனக்கு காரப்பொறி சாப்பிடனும் போல இருக்கு!” பாவம் போல சொல்லிவிட்டு குறும்பாய் சிரித்தவளை, ‘அடிங்!’ என்று பொய்யாய் முறைத்தவன், இறுக்கமாய் கரத்தை பற்றிக்கொண்டு அழைத்து சென்றான்.
மீண்டும் விமானம்! ஒருமணி நேரம் பயணம்!
அவன் தோளில் சுகமாய் சாய்ந்துக்கொண்டாள்.
‘மெல்ல உருட்டிக்கிட்டே போடா ராசா!’ பைலட்டிடம் மனதில் வேண்டினாள்.
ஒருமணி நேரம் பயணம் ஒரு நொடி போல கழிய, விறுவிறுவென நகர்ந்து சென்ற கூட்டத்தை,
‘இவ்ளோ வேகமாய் ஓடி என்னதான் செய்யப்போறாங்களோ?’ என்று பொறுபொறுத்தாள்.
அங்கே தயாராய் நின்றிருந்த ‘கேப்’பில் இருவரும் ஏற, மீண்டும் அவன் தோளில் பயணம்!
‘கடவுள் ஏன் மனுஷங்களுக்கு இறக்கை கொடுக்கலன்னு புரியுது! காட் ஸ் கிரேட்!’ என்றாள்.
அந்த நாற்பது நிமிட பயணமும் பட்டென முடிந்துப்போக இறங்கி நின்றவள் அந்த இடத்தை நிமிர்ந்துப்பார்த்து, “ஷியாம்?” என்றாள் திகைப்புடன்!
சிரித்தவன், “வா! எங்க குலதெய்வம் இது!” என்று முன்னேற, அந்த ‘மருதமலை’ கோவிலை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.
“வா!” என்று அவள் கரத்தை பற்றியவனின் மறுகையில் ஈரம் தோய்ந்த இரு மாலைகள் இருக்க,
“ஷியாம்?” என்றாள் புரிந்தும் புரியாமலும்.
“என்ன?” அடக்கிய சிரிப்புடன் வினவினான்.
“கல்யாணமா?”
“ஆமா!”
“நமக்கா?”
“ஆமா!”
“நிஜமாவா?”
“ஆ…ம்…மா” அழுத்தி சொன்னான்.
அவன் சொன்னதை கிரகிக்க சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு.
“நம்ம வெட்டிங்’ன்னா இன்னும் கிராண்டா ரெடி ஆகிருப்பேன்ல? ப்ச்… போ ஷியாம்!” அதுதான் இப்போது தன் கவலை என அவள் சொல்ல,
“நான் இங்கேயே இருக்கேன், நீ போய் கடை திறந்ததும் புடவை வாங்கி ப்ளவுஸ் தைச்சு அலங்காரம் செஞ்சுக்கிட்டு வரியா?” என்றதும்,
“அச்சச்சோ, என்ன ஷியாம் நீ? நேரமாச்சு பாரு வா!” என்று அவன் கரத்தை பற்றிக்கொண்டு மலை ஏற ஆரம்பித்துவிட்டாள் அவள்.
சிரித்துக்கொண்டே அவனும் உடன் ஏற, “என்னால் நம்ப முடியல நமக்கு இப்போ கல்யாணம்ன்னு!” லேசாக மூச்சு வாங்க சொல்லிக்கொண்டே வந்தாள்.
“அப்போ நம்ம ஓடி போய் கல்யாணம் செஞ்சுக்குறோமா?”
“இல்ல, ஏறிப்போய்!” சிரித்துக்கொண்டே அவன் சொல்ல,
“அப்பாக்கு மட்டும் சொல்லலாம் ஷியாம்!” என்றாள்.
“சொன்ன உடனே வருவாரா?”
‘முடியாது தானே!’ என்று நினைத்தவள், “வீடியோ கால் பண்ணுவோமா?” என்று கேட்க, அதற்கும் சிரித்தான்.
“சிரிச்சுக்கிட்டே இருங்க! இந்த சிரிப்பை இத்தனை நாள் எதுக்குள்ள ஒளிச்சு வச்சீங்களோ?” ஆதங்கம் எட்டிப்பார்த்தது அவளிடம்.
நெருங்கி வந்து தோளோடு அவளை பற்றியவன், “சாரி!” என்றான்.
“ம்ச்! அதெல்லாம் வேண்டாம்! கல்யாணத்துக்கு பிறகாவது என்னை கண் கலங்காம பார்த்துக்கோங்க” என்று சொல்ல,
“இதை நான் தான் உன்கிட்ட சொல்லணும்!” என்றான். பேசிக்கொண்டே மலை ஏறிவிட்டனர்.
அங்கே இருவீட்டு பெரியவர்களும் ஜம்மென வேட்டிசட்டையில் நிற்க, ஜனனி பெரிதாக எல்லாம் அதிரவில்லை. இதை அவள் எதிர்ப்பார்த்தாள் தான்!
ஏற்கனவே நேரம் நெருங்கிவிட்டதால் மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் ஐயர் மந்திரங்களை ஓத கடவுளை மனதார வணங்கியவர்கள் ஒருவரைஒருவர் பார்க்க அங்கிருந்த பெரியவர்கள் ஆசீர்வாதத்தில் கடவுளின் சந்நிதானத்தில் அவள் கழுத்தில் மங்கலநாணை பூட்டினான் ஷியாமளன்.
ஜனனி ஷியாமளன் ஆனாள் அவள்!
தாலி கட்டியதோடு அவள் நெற்றியில் அழுத்தமாய் அவன் பதித்த முத்தம், அவள் அத்தனை சஞ்சலங்களையும் ஒரே நொடியில் களைந்துப்போட, சந்தோசமாய் அவள் கண்ணில் இருந்து இரு முத்து சிதறியது.
“முன்னவே சொல்லிட்டாங்க! நான் தான் கேட்கல!” என்றான்.
கோவில் பிரகாரத்தை கைகோர்த்து சுற்றிவந்து ஒவ்வொரு கடவுளாய் வணங்கும்போது இருவர் மனதிலும் எந்த வேண்டுதலும் இல்லை. இந்த ‘அருகாமை’ மட்டும் என்றும் அகலாது இருக்க வேண்டும் என்ற திண்ணம் மட்டுமே!
பெரியவர்கள் நகர்ந்துவிட, ஓரிடமாய் அவன் தோளில் தலைசாய்த்து அமர்ந்துவிட்டாள் அவள்.
“பத்து நாள்ல ரிசெப்ஷன்! ரொம்ப கிரான்டா! அதுக்கான வேலை தான் போயிட்டு இருக்கு அதான் பேச முடியல!” அவள் விரல்களை ஒவ்வொன்றாய் பிடித்துக்கொண்டே மெதுவாய் சொன்னான்.
அவன் தோளில் தாடை ஊன்றி நிமிர்ந்து பார்த்தவள், “தனியா போலாமா?” என்றாள்.
அவனுக்கும் அதே எண்ணம் தான்! இறுக்கமாய் கட்டியணைக்க பலநாளாய் கைகள் வேண்டியது. கணக்கின்றி முத்தங்கள் இட, இதழ்கள் இறைஞ்சிக்கொண்டிருந்தன.
இனி அவளை தள்ளி நிறுத்தி பேசவே இயலாது என்று அவனது ஒவ்வொரு உணர்வும் இடித்து சொல்லவும் தான் இந்த அவசர திருமணம்.
ஆனாலும் பெரியவர்களிடம் உடனே செல்கிறோம் என எப்படி சொல்வதென அவன் சங்கடப்பட்டு, “உடனே போணுமா?” என்றான்.
“ஏன்… உங்களுக்கு வேண்டாமா?” என்றவளை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை அவனால்.
தன் கைசந்தில் இருந்த அவள் கரத்தை இன்னும் இழுத்து தன்னோடு வைத்துக்கொண்டவன்,
“இங்கிருந்து நேரா ஊட்டி! மினி ஹனிமூன்… ஜஸ்ட் ஃபோர் அ வீக்! ரிசெப்ஷன் முடிஞ்சதும், மால்டீவ்ஸ்” என்றான், அவனின் வேகத்தை ஆசையை உணர்த்தும் பொருட்டு.
அதை உணர்ந்தவளுக்கு சூடாக ரத்தம் முகத்தில் ஏறுவதை போல இருக்க, அவன் தோளில் முகத்தை அழுத்தி மறைத்துக்கொண்டாள்.
“ஜானு…?” விழிகளை மட்டும் உயர்த்தினாள். அந்த கண்களை ஆழமாய் பார்த்தவன், “ஐ லவ் யூ!” என்று உரைக்க, அவளுக்கு உறைந்துப்போனது அந்த நிமிடம்!
அவனால் அதற்குமேல் தாக்குபிடிக்க முடியவில்லை. வேகமாய் அவளுடன் எழுந்தவன், “வா!” என்று இழுத்துக்கொண்டு விரைந்தான்.
மார்த்தாண்டம், “டேய் எங்கடா?”
நின்றவன், கூச்சத்தை விட்டு, “ஊட்டி! ஹனிமூன் போறோம்!” என்று சொல்ல, தடுக்கும் எண்ணம் இரு பெரியவர்களுக்கும் இல்லை!
அவள் கரத்தை பற்றிக்கொண்டு நடந்தவனுக்கு,
“ஒரு களிப்பு… ஒரு கிளுகிளுப்பு…!
ஒரு சிலிர்ப்பு… ஒரு சிலுசிலுப்பு…!
ஒரு பூரிப்பு… ஒரு புல்லரிப்பு…!”
தட் சேம் பிச்சைக்காரன் தட்டு?
நோ..நோ..நோ..!
பணக்கார வீட்டு கல்யாணத்தின் ‘பஃபே தட்டு’ போல கமகமக்க ஆரம்பித்தது ஷியாமின் உணர்வுகள்!!!
இனி காலம் முழுக்க,
“மனம் விரும்புதே… உன்னை… உன்னை… உன்னை….!!!”
மாற்றி மாற்றி இசைத்துக்கொள்ள வேண்டியது தான் மிட்சம்! அந்த மிட்சமும் நிச்சயம் நடக்குமாதலால் இவங்களோட இருந்த பழக்கவழத்தை நம்ம இத்தோட நிறுத்திக்குவோம்!!!