காகிதம் போல கனிந்த முகம் கண்டு காயங்களும் பறந்தோடுகிறது!
பிரம்மையா? பேருண்மையா? நானறியேன்!
*******
“இது என்ன இந்த உலகம் இவ்வளவு சின்னதா மாறிடுச்சா மிஸ்டர் வம்சி. இப்போ எல்லாம் எங்க திரும்புனாலும் பளீர் சிரிப்போட நீங்க வந்து நின்னுடுறீங்க?” கிருபாஷிணியும் பதிலுக்கு கேலியாய் வாரினாள்.
“இதை நானும் கேட்கலாம் மிஸ் கிருபாஷிணி. இது தினமும் நான் வாக்கிங் போற ஏரியா ப்ளஸ் டைமிங். இங்க நீங்க தான் புதுசா வந்துருக்கீங்க.” என்றான் குத்தலாக.
“அட… என்னமோ நான் உங்க வாக்கிங் டைமிங்கை ஃபாலோ பண்ணி வந்த மாதிரி பேசுறீங்களே.” முறைப்புடன் அவள் கண்களை உருட்ட, “யாருக்குத் தெரியும். என்னை நீங்க இரகசியமா ஃபாலோ பண்ணலாம்ல.” என்றபடி அவளருகில் இடைவெளி விட்டு அமர்ந்தான் வம்சி கிருஷ்ணா.
“எனக்கு வேற வேலையே இல்லை பாருங்க.” என நொடித்துக் கொண்டவள், பின், “அது இருக்கட்டும். ஒன்னு மார்னிங் வாக்கிங் போவாங்க. இல்லைன்னா ஈவ்னிங் போவாங்க நீங்க என்னங்க வித்தியாசமா அர்த்த ராத்திரில வாக்கிங் போறீங்க அதுவும் பீச்ல. நீங்க எதையும் நார்மலாவே செய்ய மாட்டிங்களா?” என்று கிண்டலடித்தாள்.
“மார்னிங் அவசரமா எந்திரிச்சு காலேஜ்க்கு கிளம்பணும். அந்த நேரத்துல வாக்கிங் போக சுத்தமா மூட் இருக்காது. ஈவ்னிங் டைம்ல ரிலாக்ஸ் பண்ணவும், நோட்ஸ் எடுக்கவுமே சரியாப் போய்டும். சோ இந்த நேரத்தை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன்” என்று விளக்கம் கொடுக்க,
“ம்ம்… எங்க உங்க கான்டராக்ட் காதலி. 8 டு 8 டியூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போய்ட்டங்களா” மீண்டும் அதே நக்கல்.
வம்சி மெல்ல முறைத்து, பின் முகம் வாடி, “ஏங்க நீங்க வேற… பிரேக் அப் ஆகிடுச்சு” என்றான் சோகமாக.
“அச்சச்சோ! என்ன ஆச்சுங்க.” அவள் உண்மையான வருத்தத்துடன் கேட்க,
“ப்ச்… செட் ஆகல. அந்த பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலை போல.” என்று தோளைக் குலுக்கிக் கொண்டவனிடம்,
“ஆனாலும் பரவாயில்லை. ரெண்டு நாள் தாக்குப் பிடிச்சு இருந்துருக்கா அந்தப் பொண்ணு. அதுக்கே நீங்க சந்தோஷப்படணும்.” என சிரிப்பை அடக்கிக்கொண்டு கூற, அவன் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்தது.
“இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா நானே பிரேக் அப் பண்ணிருப்பேன் கிருபாஷிணி” என்றவனின் சினம் மிகுந்த குரலில், அவள் ஏனெனப் பார்த்தாள்.
“எனக்கும் அந்தப் பொண்ணோட செட் ஆகும்ன்னு தோணல. உங்ககிட்ட சரளமா பேசுற அளவுக் கூட என்னால அந்தப் பொண்ணுகிட்ட பேச முடியல. பேச டாபிக்கே இல்லாத ஃபீல். ஆனா பாருங்க, நான் வந்ததுல இருந்து ரெண்டு பேரும் மாறி மாறி பேசிட்டு இருக்கோம்.” என்றவனுக்கே ஆச்சர்யம் தான்.
கடந்த இரு நாட்களாய், அவன் தேர்ந்தெடுத்தப் பெண்ணுடன் வெளியில் சுற்றியும் குறுஞ்செய்தியில் தகவல் பரிமாற முயன்றும் தோல்வியே அடைந்தான். அவள் பேசும் விஷயத்தில் அவனால் ஒன்ற இயலவில்லை. அதே நேரம் அவனது மெல்லிய அன்பில் அவளை ஒட்ட வைக்கவும் இயலவில்லை.
உண்மையைச் சொல்லப் போனால், அவன் சொன்ன பிறகே கிருபாஷிணியும் அதனை உணர்ந்தாள்.
அவள் சாதாரணமாகப் பேசியே பல நாட்கள் ஆகிறது. ஆனால், இவனிடம் மட்டும் பதிலுக்குப் பதில் எப்படி பேச முடிகிறது எனத் தன்னை எண்ணியே வியந்தவள், அந்நிய ஆணின் முன் அதனை வெளிப்படுத்தப் பிடிக்காமல்,
“நம்ம மீட்டிங்ஸ் அஃபிஷியல் தான. சோ பேச விஷயம் இருக்கலாம்” என மேம்போக்காகப் பதில் கூறிட,
அவளை சங்கடப்படுத்த விரும்பாதவன், “ம்ம் இருக்கலாம்” என்றான் கடல் அலைகளைப் பார்த்தபடி.
இருவரிடமும் சில நொடிகள் மௌனம் அரங்கேற, அவனே அதனைக் கலைத்தான்.
“காதல்ல முன் அனுபவம் ஏதாவது இருக்கா உங்களுக்கு.” எனக் கேட்டவனைப் புரியாமல் பார்க்க,
“ஐ மீன், லவ்வ விலை குடுத்து வாங்க முடியாது. கால வரையறைக்குள்ள அடக்க முடியாது ஃபீல் பண்ணி பேசுனீங்களே அதான் கேட்டேன்” என்றான்.
“செத்தா தான் சுடுகாடு தெரியுமா என்ன… தெரிஞ்சவங்க செத்தாக் கூட புதைக்க சுடுகாட்டுப் போவோம் தான. அந்த மாதிரி தான் இதுவும்!” காட்டத்துடன் கிருபாஷிணிக் கூறியதில், கரத்தை மேலே தூக்கியவன், “ஐ ஆம் சரண்டர்” என்றான் பவ்யமாக.
அவனது செயலில் விழித்துப் பின் சிரித்து விட்டாள்.
“டைம் ஆச்சு கிளம்புறேன்.” என எழுந்தவளோடு அவனும் எழுந்தான்.
“அப்போ மறுபடியும் ஒரு ‘ஆட்’ குடுக்கணுமா?” கிருபாஷிணி சிரிப்புடன் கேட்க,
அவன் மந்தகாசப் புன்னகை வீசி, “வேணாங்க. நீங்க சொன்ன மாதிரி டைம் வேஸ்ட் தான்.” என ஒப்புக்கொண்டவனை நிம்மதியுடன் ஏறிட்டவள், “ஹப்பாடா இப்பவாவது புருஞ்சுதே சந்தோஷம்!” என்றாள்.
அவளுடன் நடந்தபடியே, “அப்பறம் சொல்ல மறந்துட்டேன். இந்த வாரம் உங்க மேகஸின் மறுபடியும் பேக் டூ ஃபார்ம் வந்துருக்கு. வெரி இன்டரஸ்டிங் டாபிக்ஸ். கன்டென்ட்ஸ சூப்பரா சூஸ் பண்ணிருக்கீங்க” என மனதாரப் பாராட்டினான் வம்சி.
மலர்ந்த புன்னகை வீசியவள், “தேங்க் யூ!” எனத் தலை சாய்த்துக் கூற, அவள் மீது படிந்த சுவாரஸ்யப் பார்வையை அதிகப்படுத்தியவன், “நான் ஒன்னு கேட்டா என்னை ஈவ் டீசிங்ல புடிச்சுக் குடுத்துட மாட்டீங்களே.” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தான்.
“எதுவோ கேட்க வந்துட்டு நிறுத்திட்டா என்ன அர்த்தம் வம்சி. என்ன… உங்களுக்காக நானே பொண்ணை இன்டர்வீயூ பண்ணனுமா?” எனக் கேட்டாள் குறும்பு மின்ன.
“ம்ம்ஹும். அந்த பொண்ணே நீங்களா இருந்தா நல்லா இருக்கும்!” எனப் பட்டென உரைத்து விட்டவனைக் கண்டு திகைத்து நின்றவள் விழி வழியே நெருப்பை உமிழ்ந்தாள்.
“என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க? உங்கள மாதிரி பொழுது போகாம கான்டராக்ட்க்கு லவ் பண்ற பைத்தியம்ன்னு நினைச்சுட்டீங்களா! இல்ல நீங்க என்ன சொன்னாலும் ஈஈ ன்னு இளிச்சுட்டு பின்னாடி வந்துடுவேனா? இன்னொரு தடவை என் முன்னாடி வந்தீங்க மரியாதை கெட்டுடும்.” எனப் பற்களை நறநறவெனக் கடித்து தீயாக சுட்டாள்.
வம்சியின் முகம் நொடியில் களையிழந்து போக, “பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லுங்க. நான் ஒன்னும் உங்களை ஃபோர்ஸ் பண்ணல. அதுக்காக வார்த்தையை விடாதீங்க கிருபாஷிணி” என்றான் கண்டிப்புடன்.
“அப்படி தான்டா பேசுவேன். உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் கேட்பியா?” என மரியாதையையும் காற்றில் பறக்க விட்டிருந்தவள், ஏற்கனவே பல அழுத்தத்தில் இருந்தாள். வம்சிக்கும் அவள் தன்னை ‘ரோட் சைட் ரோமியோ’வாகப் பேசியது பிடிக்கவில்லை.
அதே நேரம் வேறொரு பெண்ணின் குரல் அவர்களுக்கு அருகில் கேட்டது.
“ரொம்ப நல்லா இருக்கு. உபதேசம் எல்லாம் ஊருக்குத் தான். சொந்த வாழ்க்கைக்கு கிடையாதுன்றது சரியாத் தான் இருக்கு” என்ற கொந்தளிப்பான வார்த்தைகளில் திரும்பிய கிருபாஷிணி திகைத்தாள்.
“சரிதா…” கிருபாஷிணியின் இதழ்கள் மெல்ல முணுமுணுக்க, “ரொம்ப யோக்கியம் மாதிரி பேசி என் வாழ்க்கையைக் கெடுத்துட்டு, இப்போ இந்த ராத்திரி நேரத்துல எவன் கூடவோ ஒட்டிக்கிட்டு நிக்கிற.” என சரிதா அருவருக்கும் பார்வையை வீச,
அதன் பிறகே அவர்கள் நிற்கும் நிலை உறைத்தது. இருவரும் காரசாரமாகப் பேசியதில் யார் காதிலும் விழுகாமல் இருக்க கொஞ்சம் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் அருகருகே நின்று ‘சுவீட் நத்திங்ஸ்’ பேசுவது போலத் தான் இருக்கும் என்ற உண்மை உறைக்க இருவருமே சட்டென ஓரடி பின்னால் நகர்ந்தனர்.
அதற்கு மேல், தான் அங்கிருப்பது சரியல்ல எனப் புரிந்தவன், சரிதாவை அழுத்தமாகப் பார்த்து, “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சிஸ்டர். ரெண்டு பேரும் அஃபிஷியலா தான் பேசிட்டு இருந்தோம்.” எனத் தீர்க்கத்துடன் உரைத்து விட்டு, கிருபாஷிணியிடம் கிளம்புவதாகக் கண்ணசைத்து விட்டு கிளம்பியே விட்டான்.
கிருபாஷிணிக்கோ கோபம் இன்னும் அதிகமானது. ‘எல்லாம் இவனால வந்த வினை. யாருக்கு வந்த கேடோன்னு கிளம்பிட்டான்.’ எனக் கடுகடுத்தவள், மறுநாள் அவன் அலுவலகத்திற்கு வந்ததும் ஆத்திரத்தை மழையாகப் பொழிந்து விட்டாள்.
முந்தைய நாள் இரவு நடந்த நிகழ்வினால் இன்னும் தலைவலி விடவில்லை கிருபாஷிணிக்கு. சரிதா மீதிருந்த ஆதங்கம் ஒரு புறம், தன்னிடம் முறையற்ற கேள்வி கேட்ட வம்சியின் மீதிருந்த கோபம் ஒரு பக்கமென காலையில் அலுவலகம் வந்ததிலிருந்தே சிடுசிடுவென இருந்தாள்.
வெங்கடேஷும் அவளது மனநிலைப் புரிந்து, அவள் அறைக்கு வராமல் இருக்க, மெதுவாகக் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் வம்சி கிருஷ்ணா.
“வெங்கி அங்கிள் ஒரு அரை மணி நேரம் கழிச்சு வாங்க.” என்று கையிலிருந்த கோப்பைப் பார்வையிட்டபடி நிமிர்ந்து பாராமல் பதில் கூறியவளின் பேச்சில் வெப்பம் அடித்தது.
“ரொம்ப சூடா இருக்கீங்க போல?” என்ற ஆடவனின் குரலில் கண்ணை மூடித் திறந்தவள், மெல்ல நிமிர்ந்து முறைத்தாள்.
“உங்களை யாருங்க இப்ப வர சொன்னது? நேத்து என்னை டென்ஷன் பண்ணுனதும் இல்லாம நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டீங்க.” என்று பொறிந்துத் தள்ளினாள்.
அவள் எதிரில் அமர்ந்தவன் பொறுமையாக, “சில் கிருபாஷிணி சில்! நேத்து வந்த பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியல. சட்டுன்னு நம்ம ரெண்டு பேரையும் தப்பாப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. நான் அங்கேயே இருந்து விளக்கம் சொல்லிக்கிட்டே இருந்தாக் கூட அதை நம்புற ஆள் போல தெரியல. இன்னும் அவங்க என்னவெல்லாம் பேசுவாங்களோ, என்னை மாதிரி ஒரு தர்ட் பெர்சன் முன்னாடி உங்களை இன்சல்ட் பண்ணணும்ன்றது கூட அவங்க நோக்கமா இருக்கலாம். என் முன்னாடி அவங்க பேசுறது உங்களை சங்கடப்படுத்தலாம். உங்களை ஆக்வார்டா ஃபீல் பண்ண வைக்க வேணாம்ன்னு தான் நான் உடனே கிளம்புனேன். அந்த பிரச்னையைப் பார்த்து பயந்து உங்களை மாட்டி விட்டுட்டு ஓடணும்ன்னு இன்டென்ஷன் எனக்கு இல்ல. அண்ட், நான் கிளம்பிட்டா, நீங்க அதை கரெக்ட்டா ஹேண்டில் பண்ணிடுவீங்கன்ற நம்பிக்கை இருந்துச்சு. சோ தட்! நான் செஞ்சது தப்புன்னா ஐ ஆம் சாரி.” என அவன் செய்த செயலுக்கானக் காரணத்தைக் கூறி மன்னிப்பும் கேட்டவனை பேச்சற்றுப் பார்த்திருந்தாள்.
உண்மை தானே. அவன் சென்ற பிறகும் கூட சரிதா பேச்சை நிறுத்தவில்லை. கண்டமேனிக்கு வாய்க்கு வந்ததைப் பேசினாள். அதனை எல்லாம் இவன் கேட்டிருந்தால், தன்னை ஏளனமாகக் கூட நினைத்திருக்க கூடும். அல்லது, அங்கேயே இருந்து தன்னை இழிவுபடுத்துவதை வேடிக்கைப் பார்த்து, அந்நிலையை அவனுக்கு சாதகமாகக் கூட உபயோகித்திருக்க இயலும்!
பாவையின் மௌனத்திலேயே புரிதலை உணர்ந்தவன், “உங்க கோபம் கொஞ்சம் குறைஞ்சுருச்சா?” மென் புன்னகையுடன் அவன் வினவ, அதில் ஒட்டி இருந்த மீதி கோபமும் எங்கோ பறந்து போனது.
இதென்ன மனநிலை என்று புரியாமலேயே தலையை ஆட்டி வைத்தாள். அதில் சிரிப்பைப் பெரிதாக்கியவன், “இன்னும் குழப்பம் தீரலை போலயே.” என்றான் கேலியாக.
“என்கிட்ட கான்டராக்ட்க்கு லவ் பண்ண சொன்னவரோட பேச்சை எந்த அளவு நம்புறதுன்ற குழப்பம் தான்” என்று வாரியவளிடம், “இந்த சுதந்திர நாட்டுல விருப்பப்படி காதலிக்கக் கூட முடியலை பாருங்களேன்.” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
ஏனோ அவளுக்கும் புன்னகையே வந்தது. ‘ம்ம்ஹும்… இவன் பேச்சிலேயே நம்மை வளைத்து விடும் வித்தைத் தெரிந்தவன்’ என்ற எச்சரிக்கை உணர்வு எழ, “எனிவேஸ்… இதோட தெரிஞ்சோ தெரியாமலோ ஏற்படுற நம்ம மீட்டிங்கை நிறுத்திடுறது நல்லது மிஸ்டர் வம்சி.” என்று அழுத்தமாகவே உரைத்தாள்.
அதில் அவனது விழிகளும் வியப்பில் மிளிர, “அட இதை சொல்ல தான் கிருபாஷிணி நானும் வந்தேன். இனிமே நம்ம வெளில பார்த்துக்கிட்டா கூட தெரியாதவங்களைப் பார்த்த மாதிரி கடந்து போய்டலாம்.” என்று தீவிரத்துடன் உரைத்து விட்டு, “குட் பை” கூறியதோடு எழுந்து சென்று விட்டவனைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.
—-
கிருபாஷிணியின் அலுவலகத்தில் இருந்து நேராக தனது வீட்டிற்குச் சென்றான் வம்சி கிருஷ்ணா.
அவனது வீடு கூடுவாஞ்சேரியில் அமைந்திருந்தது. அந்த அபார்ட்மெண்ட் அவனது நண்பனுக்கு சொந்தமானது. அவ்வப்பொழுது அவனும் அங்கு தங்கி கல்லூரிக்குச் சென்று வருவான். மீதி நாட்கள் தனது வீட்டிற்குச் சென்று விடுவான்.
சின்னச் சின்னதாய் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடு அது. வம்சியின் தாத்தா காலத்தில் காடாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கிப் போட்ட இடம். இப்போது மெய்ன் ஏரியாவாக மாற்றம் கண்டது. சுற்றிலும் நெருக்க நெருக்கமாக வீடும் வந்து விட்டது.
மகளுக்காக அவரே வீடும் கட்டி சீதனமாகக் கொடுத்திருந்தார். அதில் தான் வம்சியின் குடும்பம் வசிக்கிறது.
அவன் உள்ளே நுழைந்ததும் ஹாலில் செய்தித் தாளில் மூழ்கி இருந்த அண்ணாமலை மகனைக் கண்டதும் புருவம் சுருக்கிப் பார்த்து விட்டு, குனிந்து கொள்ள, தாய் உஷாதேவி அடுக்களையில் இருந்து கையைத் துடைத்தபடி வெளியில் வந்தார்.
வம்சியைக் கண்டதும், “இன்னைக்கு லீவாக்கும்” என நொடித்தபடி கேட்டு விட்டு மீண்டும் அடுக்களைக்குச் சென்று விட, தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த அவனது தம்பி மகிழன் “ஹாய் அண்ணா” என்றதோடு முடித்துக் கொண்டான்.
அறைக்குள் அலைபேசியில் பிசியாக இருந்த அவனது தங்கை அப்சரா, தமையனின் வரவு அறிந்தும் வெளியில் வரவில்லை.
எப்போதும் கிடைக்கும் வரவேற்பு இது தான் என்பதால், அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல், அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
நான்கடி கட்டிலும், சிறிய மேஜையும், ஒரு பீரோலுக்கும் போக ஒருவர் நடக்க இடமிருந்தது.
கட்டிலில் டொம்மென விழுந்தவன், சில நிமிடங்கள் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ‘வெளியிலாவது சாப்பிட்டு விட்டு வந்திருக்கலாம்.’ என்ற எண்ணம் தோன்ற, அந்நேரம் மூடிய அறைக்கதவின் அடி வழியே கீறிச்சிட்டபடி வந்தது சாப்பாடுத் தட்டு. இட்லியும் சாம்பாரும் சட்னியும் மணக்கவே செய்தது. ஆனால் அதனைக் கொடுக்கும் விதம் அல்லவா தவறு!
அது எல்லாம் அவன் கருத்தில் நிலைக்கவில்லை. தினசரி பழக்கம் போல அதனை எடுத்து உண்ணத் தொடங்கினான். இன்னொரு இட்லி வேண்டுமாவென அவர்களும் கேட்கவில்லை. அவனும் அந்த மூன்று இட்லியில் வயிற்றைப் பாதி நிரப்பிக்கொண்டான்.
உண்டு முடித்ததும், அதே போல தட்டைக் கதவு இடுக்கு வழியே வெளியில் தள்ளி விட்டவன், குளியலறையிலேயே கையை கழுவி விட்டு, அறையில் இருந்த தண்ணீர் பாட்டிலைப் பார்த்தான். அவன் ஒரு வாரம் முன்பு வந்த போது பிடித்து வைத்தத் தண்ணீர். வெளியில் சென்று அவர்களை சுணங்க வைக்கப் பிடிக்காமல், அதனையே குடித்துக் கொண்டான்.
அன்று முழுக்க அறையினுள்ளேயே வாசம் செய்தவனுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் வந்தது.
மறுநாள், ஞாயிற்றுக் கிழமையாக இருக்க, வெளியில் இருந்து உஷாதேவி குரல் கொடுத்தார்.
“நாங்க விசேஷத்துக்கு போறோம். உன் தங்கச்சி மட்டும் வீட்ல இருக்கா. சாப்பாடு ஆர்டர் பண்ணிடு” என்று உத்தரவு கொடுக்க, அதற்கு வம்சி பதில் அளிக்கும் முன்னே, விறுவிறுவென அறையில் இருந்து வெளியில் வந்தாள் அப்சரா.
“என்னது இவனும் என் கூட இருக்கானா. ம்மா… தெரிஞ்சு தான் பேசுறியா? நான் எப்படி இவன் கூட இருக்க முடியும். நானும் வந்து தொலைக்கிறேன். ச்ச்சே” என சலித்துக் கொண்டவள், அவனை விட ஆறு வருடம் இளையவள்.
சற்றே யோசித்த வம்சி, “ம்மா… நான் வெளில போறேன். வர நைட்டாகும். அவள் பங்க்ஷன்க்கு போக பிடிக்கலைன்னா வீட்ல இருக்கட்டும்” என்று விட, “ரொம்ப சந்தோசம்” எனத் தோளைக் குலுக்கி விட்டு சென்றாள் அப்சரா.
“ப்ச், அப்ப சீக்கிரம் கிளம்பு. நாங்களும் கிளம்பணும்ல” என்று உஷா தேவி எரிச்சலுடன் பேச, “ம்ம். அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடுவேன்.” என்றவன் அப்போது தான் எழுந்திருக்கவே செய்தான். ஆனாலும் சொன்னது போன்றே ஐந்தே நிமிடத்தில் குளித்துக் கிளம்பி காலேஜுக்கு கொண்டு செல்லும் பையுடன் வெளியில் வந்து விட்டவன், யாரிடமும் சொல்லாமல் வண்டியில் பறந்து விட்டான்.
ஆனால் எங்கு செல்ல என்று தான் தெரியவில்லை. பெரியதாக நண்பர்கள் வட்டமும் இல்லை. இன்று கல்லூரியும் இல்லாதது பெரும் சலிப்பைத் தந்தது. ‘ப்ச்… எங்க போறது. திரும்பத் திரும்ப அதே மால், அதே பீச், அதே பார்க்ன்னு பார்த்து போர் அடிக்குது.’ என முணுமுணுத்துக் கொண்டான்.
அந்நேரம், அவனது அலைபேசி அழைக்க, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, அசுவாரஸ்யத்துடன் போனை பார்த்தவனின் விழிகளில் ஒரு மின்னல் வெட்டியது.
கிருபாஷிணியிடம் இருந்து வந்த அழைப்பு அது.
“ஹலோ!” என அவன் ஆர்வத்துடன் கூற, எதிர்முனையில் கேட்ட செய்தியில் திகைத்துப் பின், வண்டியைப் புயல் வேகத்தில் ஓட்டிச் சென்றான்.