வீட்டின் விளக்குகள் நின்றதுமே இரு பெண்களும் வித்தகனை நெருங்கிவிட்டனர். அவனை ஆளுக்கு ஒரு புறமாய் நெருக்கிக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், அவனை கட்டிக்கொண்டு கண்களை இறுக மூடி பயத்தில் உறைந்து நிற்க, ‘பயப்படக்கூடாது’ என்ற வித்தகனின் வார்த்தை நினைவு வந்ததும், முயன்று தங்கள் பயத்தை விரட்டி இயல்பாக முயன்றனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டு மெல்ல தங்கள் இமைகளை பிரித்துப்பார்க்க, கரும்இருட்டு!
‘பயப்படல… நாங்க பயப்படல!’ மெலிதாய் பவி சொல்ல, அதையே பின்பற்றி, ‘பயம் இல்ல’ என்று முனகினாள் சம்யுக்தா. அவர்கள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டுக்கு பழக ஆரம்பித்தது. கண்ணில் தெரியும் இடமெல்லாம் ஏதோ ஒன்று நிற்பது போலவும், அசைவது போலவுமே தெரிந்தது அவர்களுக்கு. அதைவிட, தங்கள் முதுகுக்கு பின்னே யாரோ இருப்பதை போலவும் வேறு அரவம் உணர, கிலி பிடித்தது. ஆனாலும், ‘பயப்படக்கூடாது’ என்று மனதுக்குள் உருப்போட்டனர்.
சில நிமிடங்கள் பிடித்தது அவர்கள் இறுக்கம் சற்று இளக! அது பொறுக்காததை போல சட்டென அந்த பெரிய கூடத்தில் நான்கு மூலைகளிலும் பொத்தானை அழுத்தியதை போல ஒரே நேரத்தில் சுடர்விட்டு எரிந்தது நான்கு ஆளுயர மெழுகுவர்த்திகள்!
இருட்டு தான் பயத்தை கொடுக்கும் என்று தெரியும்! வெளிச்சம் கூடவா பயம் கொடுக்கும்?! கொடுத்ததே!!! திடீரென வந்த வெளிச்சத்தில், இருள் விலகாத அந்த மெல்லிய மஞ்சள் ஒளியில், ஒட்டிப்பிணைந்திருக்கும் இந்த மூவரின் நிழலுருவும் எதிரே ஆஜாபாகுவென மேற்கூரை வரை ஒரு ராட்சசன் போல நீண்டிருக்க, அதை கண்டவர்களுக்கு அடிவயிறே கலங்கியது.
எல்லாம் அறிந்த வித்தகனுக்கே விலுக்கென்று தூக்கிப்போட்டதென்றால் பெண்களை சொல்லவும் வேண்டுமா?! ஏற்கனவே அவனை பசை போல தான் ஒட்டியிருந்தார்கள். இப்போதோ, விரலிடுக்கில் பட்ட ஃபெவிகுவிக் போல பிரிக்க முடியாத அளவு நெருக்கம்! அவர்கள் இடையே புக, காற்று கூட ‘எக்ஸ்கியூஸ் மீ’ கேட்குமளவு நெருக்கம்!
அந்த பேயை விட இந்த பேதைகள் படுத்தும் பாடு தான் வித்தகனுக்கு பெரும் பாடாய் இருந்தது.
அவனும் ஆண் தானே!! அவனுக்கும் இந்த மயக்கம், கிறக்கம், நடுக்கம் எல்லாம் இருக்கும் தானே!!!
“அ…அது ஒன்னும் இல்ல… நிழல்!” வெளியே கூட வராத குரலில் அவன் கடினப்பட்டு உரைக்க, அதெல்லாம் காதில் விழுந்தால் தானே அந்த பெண்களுக்கு?!
“உப்ப்” இழுத்து வைத்திருந்த மூச்சை சிரமத்துடன் வெளிதள்ளியவன், “சம்மு… என்னை விடு!” என்றான் அவள் பக்கம் தாழ்ந்து.
“மாட்டேன்! மாட்டேன்!!!” என்றவளோ இன்னமும் முடிந்தவரை அவனை இறுக்கிக்கொள்ள, ‘இவள் தேற மாட்டாள்’ என்று எண்ணியவன், மறுப்பக்கம் திரும்பி, “பவி… ப்ளீஸ் லீவ் மீ!” என்றான் மெல்லிய குரலில்.
சம்முவை போல ‘மாட்டேன்’ என்று இன்னும் இறுக்கிக்கொள்ளாமல், பிடியை சற்றே தளர்த்தியவள், தலையை அவன் தோளில் இருந்து நிமிர்த்தாமலே, “ப்ளீஸ்… எனக்கு… நான்… ஐ’யம் கம்போர்டபில்… ப்ளீஸ், கரென்ட் வர வரைக்கும் இப்படியே இருக்கேன்!” என்றாள் கெஞ்சலாய்.
‘ஏதே… கரென்ட் வருமா? அடிப்பாவி, அப்ப இவ்ளோ நேரம் கரென்ட் போச்சுன்னா நினைச்சுட்டு இருந்த?’ என்று மனதில் நினைத்தவன், ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், உடம்பே கழண்டுவிடும் போல இருந்தது. இப்படியே வெகு நேரம் நிற்க முடியாது என்று உணர்ந்து, அப்படியே… அங்கேயே சரிந்து அமர்ந்தான், பெண்களுடன்.
நல்லவேளை கடவுள் அவனுக்கு இரு கைகளை கொடுத்தார். அதனால் சண்டை இல்லாமல் ஆளுக்கு ஒன்றாய் கவ்விக்கொண்டு அமர்ந்துவிட்டனர். ஒருவேளை, ஒரு கை மட்டும் தான் என்றால், என்ன ஆகிருக்கும்!? இப்படி கிறுக்குத்தனமா அவன் எண்ணம் இன்னும் எங்கெங்கோ சென்று கவிதை கிறுக்கிக்கொண்டிருக்க, நேரம் எத்தனை கடந்ததோ!?
வெடுக்கென அவன் தோளில் இருந்து தலையை தூக்கிய சம்யுக்தா, “பிரஷாந்த் எங்க?” என்றாள் பதட்டமாய். அவள் கேட்டதும் தான் வித்தகனுக்கும் உரைத்தது. பெண்களின் கட்டுக்குள் சிக்கியவனுக்கு அவன் என்னவானான் என்று யோசிக்கக்கூட வரவில்லை. இருட்டில் அருகே தான் இருப்பான் என்று நினைத்திருந்தான்.
பவித்ராவும் சற்று அதிர்வாக நிமிர்ந்து அமர, மூவரின் கண்களும் தன்னியல்பாய் அந்த கண்ணாடி அருகே சென்றது. அங்கே தானே அவன் நின்றிருந்தான்! ஆனால், இப்போது காணவில்லையே!!!
சம்யுக்தா நடுக்கமாய், “ப்…ப்ரஷு…!” என்று அழைக்க, அதுவரை இல்லாமல், அந்த வீட்டில் அவள் குரலில் மூலைமுடுக்கெல்லாம் பட்டு எதிரொலித்தது. நெஞ்சுக்குள் ஒரு திடீர் நடுக்கம்!
எச்சில் கூட்டி விழுங்கியவள், “ப்ரஷூ!?” என்று மீண்டும் சத்தமாய் அழைக்க, சத்தம் பன்மடங்காய் எதிரொலித்தாலும் விடாமல் அழைத்தாள்.
பதில் இல்லை என்றதும், வித்தகனின் கரத்தை விடுவித்து எழுந்துவிட்டாள் சம்யுக்தா. அவள் எழுந்ததும் வித்தகனும் எழுந்துவிட, அவன் மணிக்கட்டை பற்றிக்கொண்டே பவித்ராவும் எழுந்தாள்.
“பிரஷாந்த்… எங்க இருக்க?” அவள் மீண்டும் கத்த, எந்த பதிலும் இல்லை. சுற்றிலும் பார்வையை ஓட்டி, அவனை தேட ஆரம்பித்தாள். கண்ணில் படும் இடம் எங்கிலும் அவன் இருப்பது தெரியாது போக, “ப்ரஷு, பயமா இருக்கு! விளையாடாம வா!” என்றவளின் குரலில் அழுகையின் சாயல். கத்திக்கொண்டே நடு கூடத்தை அடைந்திருந்தாள் சம்யுக்தா. பயத்தில் வித்தகனின் கரத்தை விடாமல் இருந்தவள், இப்போது பயத்தை விடுத்து, அவன் பெயரை கத்திக்கொண்டு நின்றாள்.
வித்தகனும் ஒவ்வொரு இடமாய் நின்ற இடத்தில் இருந்தே அலசினான். அவனுக்கு அந்த கண்ணாடி இருந்த இடம் கண்களை உறுத்த, அவன் கால்கள் மெல்ல அவ்விடம் பெயர்ந்தது.
சம்யுக்தா, இன்னும் சத்தமாய், “பிரஷாந்த்…!” என்று கத்த, “ஹே, கத்தாத… பயமா இருக்கு” என்றாள் பவித்ரா, எதிரொலிப்பு ஏற்ப்படுத்தும் நடுக்கத்தில்.
சட்டென அவளை திரும்பி முறைத்தவள், “உனக்கு கொஞ்சம் கூட பதட்டமே இல்லல? உன் ஃபியான்ஸ்’ஸ காணோம்! கொஞ்ச நேரம் அவனோட இருந்த எனக்கே, அவன் இல்லன்னதும் பதறுது! நீ எப்படி இப்படி கல்லு மாறி இருக்க?” என்றாள் காட்டமாய்.
அவள் கேட்டதில், கேட்ட விதத்தில் பவித்ராவுக்கும் கோவம் வந்தது. என்னவோ அவளை ஒரு ‘ராட்சஸி’ போல, ‘வில்லி’ போல அல்லவா சித்தரிக்கிறாள்!?
“உனக்கு தெரியுமா? எனக்கு பதட்டம் இல்லன்னு! உன்னை மாறி என்னை ரியாக்ட் பண்ணத்தெரியாது!” என்றாள் பவித்ரா.
ஆனால் அவளை பதிலை மதியாதவள், “ஹான், ரொம்ப தான் பதறுவ! அவன் இல்லாம போகணும்ன்னு தானே நினைப்ப நீ!? உனக்கு என்னவோ தெரிஞ்சுருக்கு, அதான், ப்ளான் பண்ணி ஏதோ ‘ப்ளடி மேரி, பிரிட்டானியா மேரி’ன்னு கதை சொல்லி அவனை அனுப்பிட்ட?!” என்றாள் சம்யுக்தா.
அவளது அபாண்டமான பழியில் வாயை பிளந்த பவித்ரா, “ஹே, என்ன நீ? என்னெனவோ பேசுற? நான் வேணுன்னு எதுவுமே செய்யல!” என்று சொல்ல, அதை காதில் வாங்காமல், பிரஷாந்த் காணவில்லை என்ற பதற்றத்தில் மேற்கொண்டு சம்யுக்தா பேச, அதற்கு பவித்ரா பதில் பேச என இருவருமே அது ‘பேய் வீடு’ என்பதையே மறந்து, தங்கள் பயத்தை மீறி, வார்த்தை போரில் மும்மரமாய் ஈடுப்பட, அது எதிலும் தலையிடாத வித்தகனின் கால்கள் அப்போது அக்கண்ணாடி முன்னே நின்றன.
மெழுகுவர்த்தியின் அரை வெளிச்சத்தில், அந்த கண்ணாடியில் தன் உருவை மெதுமெதுவாய் கீழிருந்து மேலாய் அவதானிக்க ஆரம்பித்தான் வித்தகன். அவன் ஷூ அணிந்த கால்களில் இருந்து கொஞ்சகொஞ்சமாய் அவன் பார்வை மேலேறியது. கண்கள் அவன் கழுத்தில் இருந்து மெல்ல முன்னேறி அவன் முகத்தை அடைந்தபோது… கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தின் கண்களில் அவன் பார்வை நிலைத்தது.
என்னோ அது அவனை வசீகரித்தது. அதை உற்று பார்க்க சொன்னது. தலையை இருபுறமும் மெல்ல அசைத்து பார்த்தான். பிம்பமும் அதே போல அசைந்தது. அவன் கால்கள் இரண்டடி பின்னால் போக, பிம்பமும் பின்னால் நகர்ந்தது. அவன் நான்கடி முன்னாடி நகர, பிம்பமும் அவனை நெருங்கி வந்தது. அவன் தன் ஆட்காட்டி விரலை எடுத்து கண்ணாடியில் தெரிந்த தன் உருவின் மீது வைத்தான். எதுவும் வித்தியாசமாய் இல்லை அவனுக்கு. பின், நெருங்கி வந்து அந்த கண்ணாடி வழி பின்னே தெரியும் கூடத்தை கண்காணித்தான்.
அவனுக்கும் கண்ணாடிக்கும் சில அங்குல இடைவெளி மட்டுமே!!! அவன் கவனம் முழுக்க, அவன் பின்னே இருக்கும் இடத்தில் தீவிரத்துடன் குவிந்திருக்க, அவனருகே தெரியும் அவன் பிம்பம் அவனைக்கண்டு தன் கோரைப்பற்கள் காட்டி சிரித்தது அவனுக்கு தெரியவில்லை.
மேலும் மும்மரமாய் அவன் பார்வை சுற்றுபுறத்தில் பதிந்திருக்க, சிரித்துக்கொண்டிருந்த அவன் உருவம், இப்போது சட்டென சிவந்து கோபத்தில் ஜொலிக்க, மெதுவாய் அதன் வாய் விரிந்தது. கத்தி முனை போன்ற கூர்பற்கள் பளபளக்க, அருகே தெரியும், அவன் முகத்தை குறிவைத்து, பிளந்த வாயுடன், கண்ணாடியில் இருந்து அவனை விழுந்து அது வெளி வந்த நொடி…
“கி…ய்ய்ய்ய்ய்ய்” என்ற பெருமொலி ஒன்று அறையின் ஒரு மூலையில் இருந்து மறுமூலைக்கு பரவ, திடுக்கிட்டு திரும்பினான் வித்தகன்.
அதைத்தொடர்ந்து, ‘ஆஆஆஆ’ என பெண்கள் அலறும் சத்தம் வேறு காதை அடைத்தது. உடனே அவர்களிடம் விரைந்தான் வித்தகன், கண்ணாடியில் அவன் பிம்பம் தேங்கி நிற்பதை உணராது!
“என்னாச்சு!?” அவன் வினவ, “தெரியல… என்னவோ பறந்து போச்சு!” என்றாள் பவித்ரா.
“எனக்கு பிரஷாந்த் வேணும்!? எங்க ஜி போனான் அவன்? அவனுக்கு எதாவது ஆகிருக்குமா? எனக்கு பயமா இருக்கு!” என்றாள் அழுகையை அடக்கி.
“எனக்கும் தெரியல என்ன ஆச்சுன்னு!” என்ற வித்தகன், செய்வதறியாது நிற்க, திடீரென நெஞ்சுக்கூட்டை அதிர வைக்கும்படியான சத்தம்!!!
படபடவென யாரோ எதையோ தட்டும் சத்தம்.
பெண்கள் மீண்டும் கட்டிக்கொண்டனர் அவனை!!!
படபடவென்ற அச்சத்தமோ கொஞ்சமும் நிற்காது கேட்க, முதல்கட்ட பயம் மறைய, அது எங்கிருந்து வருகிறது என்று உன்னிப்பாய் செவி சாய்த்தான் வித்தகன்.
அதை உணர்ந்தார் போல, “மாடில இருந்து வருதுஜி!” என்றாள் சம்யுக்தா.
மூவருக்கும் செய்வதறியாத நிலை. அங்கே போக வேண்டுமா வேண்டாமா என்று!!! வித்தகன் முன்னேற போக, அவன் கரம் பற்றி தடுத்தாள் பவித்ரா.
சம்யுக்தா, “நாங்களும் வரோம்!” என்று சொல்லிவிட, மூவரும் மெல்ல மெல்ல பெரும் தயக்கத்துடனும், அளவு கடந்த பயத்துடனும் அந்த அகண்ட படிகட்டுகளில் பாதம் பதித்தனர். மேலே முன்னேற முன்னேற அந்த சத்தம் காதை பிளந்து, நெஞ்சை அதிர வைத்தது. மேலே வந்ததும் ஏகப்பட்ட அறைகள் அவர்கள் கண்ணில் பட்டது. வெளிச்சமற்ற இருட்டு வேறு!!! கீழே எரியும் மெழுகுவர்த்திகள் மேலே மெல்லிய ஒளியை தான் பாய்ச்சின.
சத்தம் இடப்புறமிருந்து வந்தது. தாங்கள் போவது சரியா? தவறா? என்றே புரியாத நிலையாகினும், அடித்துக்கொள்ளும் கதவை திறந்து பார்க்க தான் தூண்டியது!
வெகு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த கனமான கதவுகள்! வெளிச்சமாய் இருந்தால், நன்றாக ரசித்திருக்க முடியும்!
இன்னமும் விடாது அடித்துக்கொண்டிருந்தது கதவு!!! வித்தகன் கதவில் கை வைத்தான். இருபெண்களும் அவன் பின்னே நின்றனர். மூச்சை இழுத்துப்பிடித்தவன், ‘நடப்பது நடக்கட்டும்’ என்ற எண்ணத்துடன் வலுக்கொண்டு அக்கதவை இழுக்க, அவனுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் அகல திறந்துக்கொண்ட கதவின் வழியே, வியர்வையில் குளித்து, மூச்சிரைக்க, பதறிக்கொண்டு வெளியே வந்து விழுந்தான் பிரஷாந்த்!!!!
மூவரின் கண்களும் நிலைகுத்திப்போயின!
கீழே விழுந்தவனோ, சுருண்டுப்படுத்து நெஞ்சை பிடித்தபடி இருமிக்கொண்டிருதான். மூச்சு பலமாய் வாங்கியது!
அவனை கண்ட அதிர்ச்சி சில நொடிகள் தான்!!! அதன்பின்னோ, “ப்ரஷூ!!!!!!” என்ற ஆனந்த கூவலுடன் அவனை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் சம்யுக்தா ராணி!!!