தாரகை இரவில் அழைக்கவும் ஏதோ முக்கியம் போல என்று நினைத்து எடுத்தாள் ஆதினி.
“ஆதி நல்லாயிருக்கியா?” தாரகையின் குரல் அன்பாய் வந்தது. எட்டு மாதமாகிறது, நாத்தனார் என்ற அலட்டல் எல்லாம் காட்ட மாட்டாள். திருமணத்திற்கு முன்பே ஆதினிக்கு அவளை தெரியும், ராஜதுரை அண்ணனின் மனைவியாக. அதனால் சாதாரணமாகவே பேசுவாள்.
“நான் நல்லாயிருக்கேன் அத்தாச்சி, நீங்க எப்படி இருக்கீங்க? அண்ணா எப்படி இருக்காங்க?” என்று ஆதினி விசாரிக்க, பொதுவாக பேசிய தாரகை
“பொங்கலுக்கு எப்போ வர ஆதி?” என்று கேட்க
அது வேறா? என்ற சோர்வு ஆதினியிடம். தீபாவளியின் போது இவளுக்கு செமெஸ்டர் இருந்ததால் அதற்குப் படிக்கிறேன் என்று தப்பித்து விட்டாள். அப்போது போக ஆவலும் இல்லை. இப்போது போக ஆசை இருக்கிறது, ஆனால் அரிச்சந்திரன் அவன் அழைக்கவே இல்லையே. தன்மானம் தடுத்தது! உன்னை அவன் எதற்குமே கண்டுகொள்ளவில்லையே என்ற கோபம்.
இன்று கல்லூரி வந்தவன் கூட எப்படி இருக்கிறாய் என்று கேட்காமல் திட்டிவிட்டு அல்லவா போனான்?
“இரண்டு நாள்தான் லீவ் அத்தாச்சி, நான் வரேன் அப்போ உங்களை பார்க்க” என்றாள் பாசமாக. ஆதினி தன்னிடம் எப்படி நடக்கிறார்களோ அப்படியே நடப்பாள். பிடித்தவர்கள் என்றாள் அதிக உரிமை, அதீத பாசம் என்று கொஞ்சம் வேறு மாதிரியும் படுத்தி வைப்பாள். பிடிக்கவில்லை என்றாலும் அப்படியே! ஆதினி அதீதமானவள்! செயல்களில் அவசரமானவள்.
“ஆதி, என்னை பார்க்க வரது இருக்கட்டும். உங்களுக்கு வரிசை கொண்டு வருவாங்க. நீங்க பொங்கல் விருந்து போகணும். ஒரு வாரம் லீவ் போட்டு வா” என்று தாரகை சொல்ல
“இல்ல அத்தாச்சி, அவ்வளவு லீவ் கிடையாது” ஆதினி என்னமோ பயந்தவள் போல் மறுக்க, தாரகை அப்படி கிடையாதே.
“என்ன கிடைக்கிற லீவ்தான் எடுக்கணுமா? நான் பேசுறேன் உன் மேம் கிட்ட” என்றாள். தாரகை தைரியம் முன்பே அவளுக்கு பிரசித்தம். ஆதினிக்கு கூட கல்லூரியில் விடுமுறை எடுக்க பயமில்லை. ஆனால் அரிச்சந்திரன், அவன் என்னை அழைக்கவே இல்லையே. ஒதுக்கி வைக்கிறான் என்று தெரிய, அது கோபம், எரிச்சல், துவேஷம் எல்லாம் தந்தது. அதற்காகவே எதையாவது இழுத்து விட்டு அவனை வரவைத்து வம்பு செய்தாள்.
ஆதினி பட்டென்று, “லீவ் எல்லாம் எனக்கு பிரச்சனையில்லை. உங்க அண்ணா என்னை வீட்டுக்குக் கூப்பிடவே இல்லை அத்தாச்சி” என்று கணவனை மாட்டிவிட்டாள்.
“என்ன? அண்ணா கூப்பிடலையா? ஆதினி அது நம்ம வீடு! உன்னை யார் கூப்பிடணும்?” என்று தாரகை கேட்க, ஆதினி அமைதியாக இருக்க
“உரிமை, சுதந்திரமெல்லாம் யாரும் நமக்குக் கொடுக்க மாட்டாங்க ஆதி, நம்ம எடுத்துக்கணும். உன் வீட்டுக்கு வர யார் உன்னை கூப்பிடணும்? அண்ணா உன்னை பேசினானான்னா அப்போ சொல்லு. இப்போ லீவ் போட்டு வர வழியைப் பாரு.” என்று பேசி வைத்தவள் உடனே அண்ணனுக்கு அழைத்தாள்.
அரிச்சந்திரன் தங்கையுடன் எப்போதும் வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து இரவில் கதை பேசுவான். பல வருட பழக்கம், இதோ ஒன்றரை வருடமாக அப்படி இல்லை. திருமணம் முடிந்து தங்கை போய்விட்டாள், வந்தால் ஒன்றாக அமர்ந்து கதையடிப்பார்கள். இல்லையென்றால் இப்படி இரவும் தனிமையும் மட்டும் அரிச்சந்திரனின் துணை. மனைவி என்று ஒருத்தி வந்த பின்னும் அதே நிலை என்பது அவனுக்கு சோர்வை தந்தது. இளைப்பாற இடம் தேடியவனை விடாமல் இம்சை செய்தாள் ஆதினி.
இன்று வழக்கில் பெயில் வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிட்டான். காலையில் அந்த கோபத்தை ஆதினியிடம் காட்டியிருக்க, அவளும் சளைத்தவள் இல்லையே. அடுத்து என்ன செய்வாளோ என்ற கவலை. இப்படி செய்து அவள் படிப்பு பாழாகிவிடுமோ என்ற யோசனை. என்னதான் நினைக்கிறாள் அவள் என்று புரியவில்லை.
யோசனைகளில் இருக்க, தாரகை அழைக்கவும் பெரிய புன்னகை. “சொல்லு ராஜாத்தி!” என்று உற்சாகமாக பேச
“சாப்பிட்டியாடா அரி?” என்று நலம் கேட்டவள் ஆதினியைப் பற்றி விசாரித்து
“ஆதினியை நீ ஏன் பொங்கலுக்குக் கூப்பிடல” என்று கேட்டாள்.
“இங்க வரதுக்கு அவளை யாரு கூப்பிடணும் தாரா?”
“டேய் வக்கீலு! எங்கிட்ட இந்த பாயிண்ட்லாம் பேசாத! உரிமையை முதல்ல நம்ம கொடுக்கணும். நம்ம வீடுனு அவளுக்கு ஃபீலே இல்லை. உன்னை யார் பெரிய இவன் மாதிரி அவளை ஹாஸ்டல்’ல விட சொன்னது? அதுவும் ஒன்றரை மணி நேரத்துல போற காலேஜுக்கு. பாவம் சின்ன பொண்ணு!”
“அவ படிக்கதானே போயிருக்கா? அவளுக்கு டெய்லி போக கஷ்டம். அவளாதானே இஷ்டப்பட்டு போனா?” என்று அரி கேட்க
“அவ போனாலும் ஏன் லீவுக்கு வரல. என்னடா நினைச்சிட்டு இருக்க அவ என்னமோ காலேஜே அவ பார்த்துக்கிற மாதிரி லீவ் இல்லைன்றா, நீ என்னடான்னா கோர்ட்டே கதினு கிடக்குற, இந்த ஊர்ல நாங்க மட்டும் வேலை வெட்டி இல்லாம இருக்கோமா?” என்று கிண்டலாகக் கேட்டாள் தாரகை. அரி பதில் பேசும் முன், தாரகைக்கு ஏதோ தோன்ற,
“யாரையும் நமக்கு முழுசா பிடிக்காதுண்ணா, கொஞ்சம் பிடிச்சா அதை முழுசா பிடிச்சு வைச்சுக்கணும்.” என்றாள் அழுத்தமாக.
“இப்போ இதை ஏன் டி எனக்கு சொல்ற?” அரி தங்கையிடம் கேட்க
“ஏன் சொல்றேனு புரியாத மாதிரி நடிக்காதடா” என்றாள் கடுப்பாக. தங்கையின் பாவனையில் சிரிப்பு வந்தது அரிச்சந்திரனுக்கு.
‘இந்த பொண்ணுங்க எல்லாம் டேஞ்சர்’ என்று மனதில் நினைத்தவன் “ஏன் டி என் பொண்டாட்டியை எனக்கு முழுசா பிடிக்காதுனு உங்கிட்ட எப்பவாச்சும் நான் சொன்னேனா?” என்று சிரிப்போடு கேட்டான்.
“நீ டிஃபன்ஸ் மோடுக்கு போகாத அரி! உன்னை எனக்குத் தெரியும். அப்படி நீ ஆதினிக்கிட்ட பிடிச்ச மாதிரி காட்டியிருந்தா நீ கூப்பிடலனு அவ சொல்ல மாட்டா.” என்று அண்ணனை பேச விடாது செய்தாள் தாரகை.
“ப்ச், தாரா! ஏன் டென்ஷன் ஆகுற? அவ படிக்கிறா, அதனால தள்ளி இருக்கேன்” என்று அரி விளக்கம் சொல்ல, தாரகைக்குத் தெரியாதா அரியை?
“அப்போ கண்டிப்பா நீ என்னை டென்ஷன் பண்ற மாதிரி ஏதோ செஞ்சிருக்க” தாரகை கோபத்துடன் கேட்க
“எம்மா தாயே! ஓவரா பண்ணாத, இன்னிக்குக் கூட என் பொண்டாட்டியை போய் பார்த்துட்டு வந்தேன்” என்றான் அரி சலிப்பாக.
நேற்றிலிருந்து சரியான உறக்கமே இல்லை அவனுக்கு, உறங்க நினைத்தாலும் மனதில் வெற்றிடம். வழக்கு குறித்த எண்ணங்கள், இதில் ஆதினி வேறு கல்லூரியில் பேச்சு வாங்க வைத்து விட்டாள். எல்லாம் முடித்து ஓய்வாக உட்கார்ந்தால், அடுத்து உடன்பிறப்பு. நொந்து போனான் அரிச்சந்திரன்.
“இதுக்கு அவார்ட் கொடுக்கணுமாடா அண்ணா? இடியட், நீ அவளை பார்த்தும் கூட அந்த புள்ள உன்னை பார்க்க ஆர்வமே காட்டாம இருக்கு. எனக்குக் கடுப்பா இருக்கு! நம்ம காதல் பரம்பரைக்கு நீ ஒரு கரும்புள்ளிடா!” என்று அண்ணனை வறுத்தெடுத்தாள்.
“போனவன் அவளை பொங்கலுக்கு வா’னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதுக்கு கூட வாய் வலிக்குதா?” என்று வாய் வலிக்காமல் பேசினாள் தாரகை.