அடுத்த நாள் விடியல்காலையிலேயே எழுந்துவிட்டாள் ஆதினி. சின்ன விளக்கைப் போட்டுக் கொண்டு படித்தாள். படிப்பில் விளையாட்டுத்தனமிருக்காது, படித்தால் சிறப்பாக செய்வாள். அவளாக நினைத்து செய்ய வேண்டும். சிலர் அப்படித்தான்!! ஆயிரம் பேர் சொன்னாலும் அவளாக செய்தால் மட்டுமே உண்டு. படித்து முடித்துவிட்டாள். குளித்து ரெடியாகி வெளியே வர, அவள் தோழி ஷெரின் அப்போதுதான் எழுந்தாள்.
“ஷெரினே! நீ ரெடியாகிட்டு கூப்பிடு, நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்” என்ற ஆதினி தயாரானபடியே படுத்தாள். என்ன உறக்கம் வரவில்லை. மாலை போல் அப்பா அழைக்க வருவார். வீட்டுக்குப் போக வேண்டும் என்ற யோசனை. அப்போது அரிச்சந்திரன்? என்று அவனிடமே போய் நின்றது ஆதினியின் மனம்.
படித்து முடித்த பின் அவனை பார்த்திருக்கலாம், இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் காலம் போய் கல்யாணம் செய்திருக்கலாம் என்ற எண்ணம் மட்டும் மாறாது ஆறாது ஆதினியை ஆட்டி வைத்தது.
இந்த துயரம் இருக்கிறதே, அதன் தூரத்தை எல்லாராலும் ஒரே மாதிரி கடந்தோ மறந்தோ விட முடியாது! சிலர் துயரத்தை கடந்து வாழ்க்கை நடத்துவார், சிலர் அதனோடு போராடி வாழ்வர். சிலருக்கு பல காலம் எடுக்கும் இழப்பில் இருந்து இயல்புக்கு மீள, அதனோடு பொருந்தி வாழ. எல்லாம் இருந்த ஆதினிக்கு அம்மா இல்லாமல் போனதும் எதுவுமே இல்லா நிலை!
ஆதினி கல்லூரி மூன்றாம் ஆண்டில் சேர்ந்த புதிதில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவளின் அம்மா எதிர்ப்பாராது இறந்துவிட, அது ஆதினி குடும்பத்துக்கு பலமான அடி! அவளின் தாத்தாவுக்கு சென்ற வருடம் முடியாமல் போக, அவசரமாக வரன் பார்த்து நடந்தேறியது ஆதினி அரிச்சந்திரன் திருமணம்.
அந்த கோபத்தில் சில மாதங்கள் வீட்டினருடன் பேசாமல் இருந்தாள். அரிச்சந்திரனிடம் அவளால் குறையே சொல்ல முடியவில்லை. அப்படி தாங்கினான். ஒவ்வொரு செயலிலும் அக்கறை என்று ஆட்சி செய்தான். உடனிருந்த போது இந்த உண்மை புரியவில்லை. அம்மாவின் திடீர் இழப்பு, வீட்டினரின் திருமண பேச்சு, அம்மா இறந்து அதிலிருந்து மீள்வதற்குள் அவள் வீட்டிலிருந்து புகுந்து வீட்டிற்கு வந்தது எல்லாம் தீரா மன உளைச்சல் தந்தது.
துக்கம், துயரம் எல்லாம் தீரா கோபமாக மாறியது. புதிதாக கல்லூரியில் சேர்ந்தது , அந்த சூழல், தினமும் செய்த பயணம் எல்லாம் ஆதினியை தடுமாற வைத்தது. அதையெல்லாம் விட்டு விடுதி வந்த பின் சில மாதங்கள் நிம்மதியாக இருந்தாள், படிப்பில் மட்டும் கவனம் வைத்து என்று நாட்கள் போனது. மீண்டும் ஒரு வெற்றிடம், வீட்டில் ராஜ கவனிப்பு இந்த இளவரசிக்கு. அம்மா போன பின் இன்னும் அப்பா, தாத்தா, ஆத்தா என்று எல்லாரும் தாங்கினர்.
அரிச்சந்திரனும் அப்படியே!! இங்கு வந்து ஹாஸ்டல் உணவு பிடிக்காமல் போனது, அவள் வேலையை அவளே பார்க்க ஒரு சோர்வு. வீட்டு நினைவு தாக்கியது, கூடவே அரிச்சந்திரனின் நினைவும். ஆதினிக்கு எல்லாம் அவசரம். சட்டென்று முடிவினை எடுப்பாள். அந்த நேரம் மனம் என்ன சொல்கிறதோ அதுவே அவள் சொல், செயல் ஆகிவிடும்.
பிரிந்து விடலாம் என்ற போது கூட, பொறுமையாக பேசியவன் அவள் கணவன். தவறு, என்று மன்னிப்புக் கேட்டபோதுதான் கோபமாக நடக்க ஆரம்பித்தான். தவிர்க்க ஆரம்பித்தான், தயலினை தவிக்க விட்டான். விலகி செல்ல, இவளின் கர்வத்தில் அடி!! என்னை கண்டுக்க மாட்டியா? எனக்கு மட்டும் உன் நினைவு, உனக்கு ஏன் இல்லை என்ற கேள்வி, எதிர்ப்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம் எல்லாம் சங்கமித்து சஞ்சலமாகி ஆதினியை அரிச்சந்திரனை தவிர வேறு யோசிக்க விடாமல் செய்தது.
அவன் கவனத்தை தன் பக்கம் திருப்ப செய்த செயல்கள் எல்லாம் அவனை இன்னும் கோபம் கொள்ள வைத்ததுதான் மிச்சம்.
“இன்னிக்கு ஒழுங்கா டெஸ்ட் எழுதலன்னா அட்வகேட் என்னை சும்மா விட மாட்டார். இந்த எச்.ஓ.டி வேற ஓவரா டோஸ் விட்டுட்டார் போல. படிக்கிற புள்ள மனசை கெடுக்காத ஷெரின். என் வீட்டுக்காரர் பெயரை காப்பாத்துற மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்த ஆதினிக்கு இருக்கு” என்று தோழியின் தோளில் கைப்போட்டபடி பேசிக்கொண்டுமெஸ்ஸை நோக்கி நடந்தனர்.
ஜம்பமாக பேசிவிட்டாலும் ஆதினிக்கு அரியின் நினைவே. காலையில் மெஸ் உணவினை உண்ண, மனமோ கணவனின் கைப்பக்குவத்துக்கு ஏங்கியது. முயன்று மனதை தேர்வின் பக்கம் திருப்பினாள்.
தேர்வு எழுதும்போது வேகமாக முடித்து விட்டாள். நன்றாகவே எழுதினாள். அன்று கல்லூரியில் பொங்கல் விழா இருக்க, ஆதினியும் அதில் பங்கேற்கிறாள். தேர்வு அரை நாளில் முடிந்து விட, விழாவுக்கு ப்ராக்டீஸ் சென்றபோது பொங்கல், கணவன், வீடு. தாரகை அழைத்தது என்று மீண்டும் மீண்டும் அதையே மனம் நினைத்தது.
‘நான் வேண்டாம் சொன்னதெல்லாம் நோட் பண்ணிட்டு இப்போ பாயிண்ட்டா போட்டு தாக்குறான் அந்த வக்கீல், நீ கூப்பிடாம நான் வர மாட்டேன் டா’ என்று மனதில் கறுவிக்கொண்டாள்.
கணவன் பற்றிய எண்ணமே சூழ, ஆதினிக்கு ‘என்னை அந்த அரிச்சந்திரன் கிட்ட இருந்து யாராச்சும் காப்பாத்துங்களேன்’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
“ஹே! ஈவினிங் ஃபங்க்ஷன் நம்ம டிபார்ட்மெண்ட் பிச்சு உதறணும். வா டி என்ன சும்மா உட்காந்திருக்க, நேத்து வேற மேடம் சாகசம் எல்லாம் பண்ணிட்டீங்க.” என்று ஆதினியின் தோழன் நிரஞ்சன் அழைத்தான்.
“அடேய் இருடா வரேன்” என்று ஆதினி எழுந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கினாள்.
“சொல்லுங்க மாமா, நல்லாயிருக்கீங்களா? தாத்தா எப்படி இருக்கார்?” என்று நலம் விசாரிக்க,
“நல்லாயிருக்கோம் மாப்ள, நேத்து ஆதிகிட்ட பேசினேன். அவ பொங்கலுக்கு இங்க வரணும்னு இஷ்டப்படுறா, இன்னிக்கு சாயங்காலம் நான் அவளை அழைக்க போறேன். அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு, இரண்டு நாள் இங்க இருக்கட்டும், பொங்கல் அன்னிக்கு அங்க போகலாம், நீங்களும் இங்க வரணும்” என்று அழைத்தார்.
‘அப்பா, பொண்ணு எல்லாம் முடிவெடுத்துட்டு பேசுவாங்க’ என்று அரிச்சந்திரனுக்கு தோன்றினாலும்,
“ஆதினியை நான் ஈவினிங் போய் அழைச்சிட்டு வரேன் மாமா. இங்க தாராவுக்கு வரிசை கொடுக்கணும், அதுக்கு வேலை இருக்கு. பொங்கல் அண்னிக்கு நானே அவளை அழைச்சிட்டு வரேன். அப்படி வரலனு சொன்னா நான் அங்க வந்து விடுறேன்” என்றான்.
“இல்ல மாப்ள, ஆதி கோச்சுப்பா” ரவிக்குமார் தயங்க
“அவளுக்குனு கொஞ்சம் பொறுப்பு இருக்கு மாமா, அவளை நான் பார்த்துக்கிறேன்” என்றான் அழுத்தமாக. ரவிக்குமாருக்கு மகளின் விருப்பம் தானே எல்லாம். அவள் வாடியது பொறுக்காமல் சொல்ல, இப்போது அரியும் இப்படி பேச அவருக்கு தயக்கம்.
“சரி மாப்ள, ஆதிக்கு நான் சொல்லிடுறேன்” என்றதும்
“இல்ல மாமா, நானே சொல்லிக்கிறேன்” என்றான் அதற்கும். அரிச்சந்திரனுக்கு சர்ப்பரைஸாக போக எண்ணம்.
‘அந்த அரைடிக்கெட் வீட்டுக்குக் கூப்பிட்டாதான் வருமோ? பார்த்துக்கிறேன்’ என்று நினைத்தான்.
மாமனாரிடம் பேசி முடித்தவன் திருவாரூர் கிளம்பி சென்றான். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை, முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன. எல்லாம் முடித்து பார்க்க மணி நாலாகியது. அவன் நண்பர்களிடம் பேசிவிட்டு காரை எடுத்துக் கிளம்பினான். அவன் எப்போதும் இருசக்கரம், இன்று மனைவியை அழைக்க தங்கையின் கார் எடுத்து வந்திருந்தான்.
அங்கே மனைவி படிக்கும் கல்லூரி செல்ல, பார்த்தால் பொங்கல் விழா களைக்கட்டியிருந்தது. இவன் சென்று மேடை தெரியும்வண்ணம் ஒரு இடத்தில் உட்கார, ஆதினி உற்சாகமாக பறையடித்துக் கொண்டிருந்தாள். அரிச்சந்திரன் கால் மேல் கால் போட்டு கொண்டு ஒரு ஓரமாய் மனைவியின் செயலை ரசித்து பார்த்தான்.
தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது.
திருவிழாக்கள், மங்கள இசை, துக்க நிகழ்வு என்று எல்லா இடங்களிலும் பறை இருக்கும். தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் அதற்கு மிகவும் பிரசித்தமான இடங்கள்.தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
“என்ன அடி அடிக்கிறா!” என்று மனம் மெச்சியது. ஆதினி வியர்க்க வியர்க்க, உற்சாகம் வடியாமல் சிரித்த முகத்தோடு முன்னேயும் பின்னேயும் அடியெடுத்து அதே தாளத்தோடு அடிக்க, இங்கே அரிச்சந்திரனின் தரையில் இருந்த ஒற்றைக்காலும் தாளம் போட்டது. சில நிமிடங்கள் அந்த கொண்டாட்டத்தை ரசித்தவன் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினான்.