வடக்கு வீதி வணங்காமுடி – 3
இன்று 2018……..
அதே சதாசிவ இல்லம் தான்…. என்ன பழமையைத் தக்க வைக்கச் சற்று புதுமையை நாடினார்கள் போலும்.பழமை கொண்டு புதுமை இழைத்து அன்று போல் இன்றும் தனது கம்பீரத்தை காட்டி நின்றது கட்டிடம் அது மட்டுமா என்ன அவ்வீட்டின் மனிதர்களும் தான்.
வாருங்களேன் தொலைத்த வருடத்தை கடப்போம்…
ஈஸ்வர் – வானதி தம்பதியினர் எழுபதுகளில் நின்றனர். தனது ஒரே மகளான கன்னிக்காவிற்குத் தஞ்சையில் மாப்பிள்ளை எடுத்து அவருக்கு இரு பிள்ளைகள் ஒரு ஆண் மது கிருஷ்ணன், ஒரு பெண் மதுமிதா.
மது கிருஷ்ணன் படித்து முடித்து அதே தஞ்சையில் அனு என்ற பெண்ணைத் திருமணம் முடித்துத் தற்போது வெளி நாட்டில் வாசம் செய்கிறார். கட்டுமானம் பிரிவில் சிறப்புப் படிப்பு போலும்.
பெண் மதுமிதா அம்மாச்சி தாத்தா வீட்டில் வாசம் (அதாவது சதாசிவ இல்லம்) கல்லூரி மூன்றாம் ஆண்டு.
அருணகிரி – அகிலாண்டேஸ்வரி தம்பதியினர் இவர்களும் எழுபதில் தான் பயணித்தனர். அவர்களுக்கு ஒரே பெண் பிள்ளை தானே அக்காளான கன்னிகாவை கொடுத்த அதே இடத்தில் தம்பிக்குப் பெண் கொடுத்துத் தற்போது அக்கா தங்கை இருவரும் ஓரகத்திகள்.
அதாவது ஒரே வீட்டில் உள்ள அண்ணனை கன்னிகா மணம் முடிக்க தம்பியை இளையவளுக்கு மணம் முடித்தாயிற்று இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள்.
மகன் சங்கரன் அவரது மனைவி அகிலா இருவரும் தஞ்சை வாசி தான். இளைய பெண் இந்துமதி கல்லூரி முதலாம் ஆண்டு இவளும் அம்மாச்சி தாத்தாக்களின் வசம் தான்.
அடுத்து ஜோடி நம் வணங்காமுடி- பானுமதி அறுபதை தொட்டு நின்றனர். இவர்களுக்கு மூன்று செல்வங்கள் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் காதலை ருசி பார்த்ததின் பலன் முதல் மகன் ஸ்வாமிநாதன், அடுத்த இரு ஆண்டுகளில் பிறந்த செல்வம் விஸ்வநாதன்.
இரு பிள்ளைகளுடன் வாழ்க்கை வளமாகச் செல்ல வருடங்கள் சென்று ஒரு நாள் வணங்காமுடி நெகிழ்ந்த தருணம்.
அதாவது அந்திப் பொழுதில் செய்த வம்புக்கு வம்பாக வந்து பிறந்தான் பசுபதி நாதன். இது அப்பனை ஐந்து கொள்ளும் என்று கூற்றுக்கு ஏற்ப பிறந்த பிள்ளை.
(அதற்குள் இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டீர்களே என்று கேட்ட தோழிகளே இருநூற்றி பத்து வார்த்தைகளைக் கொண்டு அவ்விடத்தைக் கடந்த எனது நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள் அம்மா!… ம்மா!… மா!.. நான் பாவமில்லையா?…)
************
அடியேய்!…… அக்கா மகளே இந்து!……………… அடியேய்!……. அக்கா மகளே பொந்து!………. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாடி” கௌண்டமணி குரலில் பாடி அக்காள் மகளை வெறுப்பேற்றியதும் இல்லாமல்.
தனது பெரிய அன்னையான வானதி மடியில் தலையும், அகிலா மடியில் காலும் வைத்து ஒய்யார சயனத்தில் இருந்து கொண்டு வேலை ஏவியவனை ஏக கடுப்பில் பார்த்து.தோசை வார்த்துக் கொண்டு இருந்த சின்னவள் விரைந்து வந்தாள்.
வந்தவள் பசுபதியை முறைத்துக் கொண்டே “இங்க பாருங்க மாமா இனிமே என்னை பாட்டு பாடி கிண்டல் பண்ணுற வேலையெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்.
அதுக்கு தான் உங்களுக்கு ஆள் வந்தாச்சே பிறகு என்ன? அப்புறம் இனி நீங்க பாடுற பாட்டை மாத்தனும். அக்கா மகளே இந்து இல்ல அருப்புக்கோட்டை அக்கா மகனு பாடனும்” என்று சிறியவள் இந்துமதி சிரிப்பை அதக்கி சொல்ல
படித்து கொண்டு இருந்த பெரியவள் மதுமிதா கிளுக்கி சிரித்தாள் அதில் கடுப்பான பசுபதி “மா பார்த்தீங்களா இவளுங்கள”
“பாப்பா கொஞ்சம் சும்மான்னு தான் இருங்களேன் டி நீங்க வேற… விடு டா தம்பி சின்னப் பிள்ளைங்க பொழைச்சு போகட்டும்….” பேத்திகளை கடிந்து கொண்ட அகிலாவை இருவரும் வாய் கோணி பலித்தனர் அதனை கண்டு கொண்ட பசு.
“பாருங்க நக்கல் பண்ணுறாளுக, இந்த வீட்டுல யாருக்குமே என்ன பத்தின அக்கறையே இல்ல” என்றவனைப் பாவமாகப் பார்த்து வைத்தனர் பெரியவர்கள்.
இந்தக் கூத்தை ஈஸ்வரும், அருணகிரியும் கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். செல்ல மகனது வாட்டம் பொறுக்காமல் ஈஸ்வர் “தம்புடு அப்பா உனக்கு நல்லது தாண்ட செய்வான்”
“பெரியப்பா!… எது நல்லது? இல்ல எது நல்லதுங்குறேன்? அவருக்கு மட்டும் கவர்மெண்ட்ல வேலை பாக்குற பொண்ணு எனக்கு ஒன்னாப்பு படிச்ச புள்ளையா? அதுவும் அருப்புக்கோட்டை கமுதி வாசம் என்ன நியாயம் இது?”
“எனக்கு முன்னாடி பிறந்தானுகளே அவனுக மாதிரியா நான் இருக்கேன். குடும்பத் தொழிலை எடுத்து நடத்துறேன் உங்க கூட இருந்து பார்த்துக்குறேன்,
நானும் எங்க அண்ணணுக்களை மாதிரி பிடிச்ச பொண்ணை இழுத்துட்டு வந்து இருக்கனும் அப்போ தெரியும் இவருக்கு” பொரிந்து விட்டான் பேச்சு வேறு சற்றுத் திசை மாறி செல்ல பெரியவராகக் கண்டித்தார் அருணகிரி.
“பசு அண்ணன் அண்ணிகளைப் பேச கூடாது அது தப்பு. அதுவும் அவங்க இல்லாத நேரம்…….. பேச்சு உன்னைக் கொண்டு தான் நினைவில் வை” கோபத்தில் தனது வார்த்தை வேலி தாண்டியதை உணர்ந்தவன் உடனே தனது தவறை சரி செய்தான்
“சாரி பெரியப்பா” முகம் சுருக்கி நின்ற மகனை கண்டு மனம் இளக.
“ப்ச் விடு தம்புடு பொண்ணு பிடிக்கலைன்னா நாங்க தட்ட மாத்தும் முன்னே பேசி இருக்கலாம். உன் பிடித்தம் தாண்டி அப்பா உன்ன நெருக்க மாட்டான்” என்றதும் ‘உச்’ என்று கொட்டிய பசுபதி.
“பெரியப்பா!… அது முடியாது பெரியப்பா!… அப்படி சொல்ல முடிஞ்சா தான் சொல்லி இருப்பேனே நான் அவர்கிட்ட தனியா பார்த்து பேச போனேன் கல்யாண பேச்சானு கேட்டாரு,
ஆமான்னு தலையைத் தான் ஆட்டுனேன். ஒரே வார்த்தை தான் அதுக்குச் சொன்னாரு பொண்ணு பிடிச்சா நான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைக்குறேன். இல்லையா நீயே பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணு நான் கூட நிக்கிறேன்னு. இதுல எங்க நான் என் விருப்பத்தைச் சொல்லுறது”
“அது சரி அவன் கிட்ட யாரு பேச” அருணகிரி சலித்துக் கொள்ள.
“என்ன பெரியப்பா நீங்களே இப்படி சொன்னா? உங்க தம்பி தானே”
“தம்பி தான் ஆனா பல விஷியத்துல தகப்பண்டா. அவனை எதிர்த்து பேச முடியல அவன் முகத்தைப் பார்த்து எது சொன்னாலும் சரினு தான் சொல்ல வருது” அலுத்துக் கொண்டார் ஈஸ்வர். பெரியவன் என்ற பதவி இருந்தாலும் சிறியவன் கருத்து அவரையும் மண்டியிட வைத்தது மெய் தானே.
ஈஸ்வர் கூற்றில் எரிச்சலாக “நல்ல வந்துச்சு போங்க” தலையில் கை வைத்து கொண்டவனைப் பாவமாகப் பார்த்த வானதி மேலும் அவனைத் தேற்றும் பொருட்டு
“அப்புனு” பசுபதியின் தாடை பிடித்துக் கொஞ்சி “பானுவும் வேலனும் பேச போயிருக்காங்க கண்டிப்பா நல்ல முடிவு தான் வரும்”
“யாரு எங்க அம்மாவும்? வேலன் மாமாவும்?……”
“ஹ்ம்ம்” என்று தலையை பலமாக ஆட்டினார் வானதி
“நல்ல ஆள் பார்த்து அனுப்பி வச்சீங்க பேச போங்க மா நீங்க”
“என்னடா இப்படி சொல்லுற” முகம் கசங்கினார் பெரியவர்.
“எங்க அம்மா என்ன தர்க்கம் பண்ணாலும் வணங்காமுடி ஒரு பார்வை பார்த்தாலே போதும் கவுந்துடு வாங்க. வேலன் மாமா ஓடிடுவாரு வேணா பாருங்க இரண்டும் பேரும் தோத்து போயி தான் வருவாங்க,
“போச்சு!.. போச்சு!… என் வாழக்கையே போச்சு!… இனி என் பொழுது கம்மா, ஊரணினு தண்ணீ இல்லாத செம்மண் காடு தான். அந்தக் காட்டு சிறுக்கி கையில சிக்கி சின்னா பின்னமாகப் போகுது” புலம்பும் அவனைப் பார்த்து தவித்தனர் அவ்வீட்டு மக்கள்.
பசுபதி கடைக்குட்டி என்றால் அனைவருக்கும் அத்தனை பிரியம். அதுவும் மதுமிதா இந்துமதிக்கு சொல்லவே வேண்டாம்.கேலியாகப் பேசி, பாசமாகப் பார்த்து, கடமையைக் கண்ணியமாகச் செய்யும் இந்தக் குட்டி மாமனை பிடிக்காமல் இருக்குமா என்ன?.
அதுமட்டுமா ஸ்வாமிநாதனும் விஸ்வநாதனும் பொறியியல் படித்துச் சிங்கார சென்னையில் வேலைக்குச் செல்ல,
தானும் அதே துறை என்றாலும் அதிலும் சிறப்புத் தொழில் நிர்வாகம் எடுத்துப் படித்துக் குல தொழிலை கையில் எடுத்து, அதில் புதுமை சேர்க்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறான் பசுபதி.
ஊரும், உறவும், காவேரி நதியும், வீடும் என்ற பிடித்தம் அவனை கட்டி போட. அதிலும் தனது சிறப்பினை நிலை நாட்டி நின்றான் இளையவன். அது சரி இது வணங்காமுடியின் இரத்தம் அல்லவா.
*****************************
ஸ்வாமிநாதன் – மீனு , விஸ்வநாதன் – விமலா
ஸ்வாமியும் விசுவும் இருவரும் தங்களுடன் வேலை செய்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டனர் அதிலும் பெரியவனுக்கு மூன்று வயதில் ஒரு மகள் உண்டு .
மகன்கள் காதல் என்று வந்த பொழுது வணங்காமுடி ஒரே பார்வை தான் பார்த்தார் பிறகு எந்தப் பேச்சுகளும் இல்லை.
இத்திருமணத்தில் உள்ள அல்லவை நல்லவை எல்லாம் மனைவியிடம் பகிர்ந்து கொண்டு வாக்கு வாதம் செய்தார். பானுமதிக்குப் புரிந்தாலும் வழமை போல் அவரும் தமிழ் மண்ணின் பெண் அல்லவா.
தாலி கொடியை தள்ளி வைத்து தொப்புள் கொடியை அரவணைத்துக் கொண்டார். அதிலே உன் செயல் உன் வினை என்று விட்டார் வணங்காமுடி, ஆனால் மனிதரை சும்மா சொல்லவிட முடியாது.
பார்த்து வைத்த திருமணம் போல் முகம் கோணாமல் அனைவரையும் அரவணைத்து படு விமர்சையாகத் திருமணம் செய்து வைத்தார் மனிதர்.
தற்போது கடைக்குட்டி திருமணத்தைத் தன் பொறுப்பில் தரவும். அவர் எண்ணம் கொண்டு ஒரு மணம் தன் பிள்ளைக்கு என்று யோசித்தவர்.
தனது ஒன்று விட்ட அக்கா மகளை எடுக்க முடிவு செய்து விட்டார். இவர் பங்காளி முறையில் அக்கா பெயர் செல்வி…. பூர்வீகம் அருப்புக்கோட்டை தற்போது கமுதியில் வசிக்கின்றனர் .
பொன்னுசாமி- செல்வி தம்பதிக்கு இருபது வருடம் சென்றும் பிள்ளை பேறு இல்லை வருடங்கள் போக தவித்தவர்களுக்கு வரமாக வந்து பிறந்தாள் கன்னல்மொழி.
உறவினர் ஒருவர் மூலம் பெண் இருக்கு என்ற விடயம் வணங்காமுடி செவி தீண்ட. என்ன சிறப்பை கண்டரோ கன்னல்மொழியிடம் தனக்கு மருமகள் இவர் தான் என்று காலம் தாழ்த்தாமல் தட்டையே உறவுகள் சூழ மாத்திவிட்டார் மனிதர்.
அதனால் தான் புலம்பி தவிக்கிறான் பசுபதி. இதில் சிறப்பு என்னவென்றால் பெண்ணுக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை அது தனி கதை…. காரணம் கேட்டால் பசுபதியின் நிலை கவலை கிடம் தான்.
*********
சதாசிவம் அடகு கடை இன்னும் பெரிய கடையாக உருவாகி பக்கத்திலே நகை மற்றும் வெள்ளி விற்பனை கடையாக இருந்தது.
அதில் உள்ளடங்கிய அறையில் குளு குளு காற்று குளிர் சாதன உதவியால் அறையெங்கும் வீசி நிற்க வழமை போல் வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் வணங்காமுடி.
உருவத்திலும் முடியிலும் மட்டுமே மாற்றம் உள்ளம் அதே போல் தான் என்பது போல தனது எதிரில் அமர்ந்திருக்கும் நண்பனையும் மனைவியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார்.
“என்ன சங்கதி பேச வந்துட்டு என் முகத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்க” இருவரையும் பார்த்து பொதுவாகக் கேட்டு வைக்கப் பானுமதி கண்ணால் வேலனை கெஞ்ச பேச்சை தொடங்கினார் வேலன்.
கன பொழுதில் மனைவியின் கண் ஜாடை கண்டவர் வேலனை பார்க்க
“அது ஒண்ணுமில்ல வணங்கா எல்லாம் நம்பக் கண்ணு குட்டி (இது வேலனின் சிறப்பு அழைப்பு) கல்யாணம் விஷயம் தான்”
“ஓ!…. அதுல என்ன பேச இருக்கு வேலா தட்டு தான் மாத்தியாச்சே. நீயும் இரண்டு பெண் பிள்ளை பெத்து கரை சேர்த்தவன் தான் யோசிச்சு பேசு” என்றதும் வாயை இறுக்க மூடி கொண்டார் மனிதர்.
வணங்காமுடி சொல்ல வருவது சரிதானே நிச்சயம் பண்ண பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்வது நியாயமா?….
ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது மணவறை வந்தும் கூடக் கல்யாணம் நிற்பது சாதாரண நிலை என்ற எண்ணம் வர சிக்கிய வார்த்தைகளை முயன்று கோர்த்து பேசினார்.
“எல்லாம் நியாயம் இல்ல தான் வணங்கா, ஆனா கண்ணு குட்டிய யோசி… நல்ல புள்ள பொறுப்பும் அதிகம்.சுட்டி தானே ஒழிய அவனால நமக்கு எந்தச் சறுக்கும் இல்லையே அப்படி பட்ட புள்ள நம்மை நம்பி அது வாழ்க்கையைக் குடுத்திருக்கு அதுக்கு நியாயம் செய்ய வேணாமா?”
வேலன் பேச பானுமதி வணங்காமுடியை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். பெண்ணுக்கு ஆர்வம் கணவன் வாய் மொழி வார்த்தைக்கு, ஆனால் வேலனது பேச்சுக்குச் சிரித்துக் கொண்ட வணங்காமுடி.
“நான் என்னவோ அவன் வாழ்க்கையைக் கெடுத்த மாதிரியே எல்லாரும் பேச்சுக்கு வரீங்க. திருச்சி தான் வாழ்விடம் இங்கேயே தொழில்னு ஆகி போச்சு. அப்போ அவனுக்கு ஏத்த மாதிரி தானே பொண்ணு பார்க்க முடியும்”
“இப்போ நான் என்ன பேசுனாலும் உங்களுக்குப் புரியாது, ஆனா என் முடிவு ஒண்ணே ஒன்னுதான் கன்னல்மொழி தான் என் மருமக. அதில் மாற்றம் இருந்தா நீங்களே பெண் பார்த்து முடிங்க எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை”
“அது போக வேலா!…”என்றவர் பேச்சை வேலனை கொண்டு கண்ணை மனைவியிடம் பதித்து “என் கையில் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அது சரியாதான் செய்வேன்” என்றவர் நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்து செல்ல பானுமதி கலங்கி போனார் இது மனைவிக்கான குட்டு.
“ஐயோ! கோபம் போலண்ணா”
“விடுமா நீ என்ன செய்வ பிள்ளைக்குனு பார்பியா புருஷனுக் குனு பார்பியா விடு, ஆனா ஒன்னு காரணம் இல்லாம அங்க போயி பெண் தேடி இருக்க மாட்டான்”
“ஹ்ம்ம் சரிதான் எனக்கு புரியுது, ஆனா பிள்ளை ரொம்பச் சோணகி போறான் அவன் கேட்குற கேள்விக்கு என்னால பதிலே சொல்ல முடியலே ண்ணே”
“இந்தக் காலத்து பிள்ளைங்க இருக்கிற நிலையில நம்பக் கண்ணு குட்டிக்குக் கோவில் தான் கட்டணும் அப்படி இருக்கறவன் கேள்வி கேட்டா பதில் சொல்லித்தான் ஆகனும், ஆனா வணங்காமுடிகிட்ட யார் பேசுறது பார்த்த தானே,
நீயும் பொண்ண பெத்தவன் தானடானு நாசுக்கா நறுக்குன்னு கேட்டான் பாரு” என்றவரை பாவமாகப் பார்த்தார் பானுமதி. இருவரும் பசுபதி வாக்கை மெய்யாக்கி விட்டு வெற்றிகரமாகத் தோல்வியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வந்தனர்.
*********
அங்குக் கமுதியில்…….
“இங்க பார் கன்னல் திருச்சில எங்க அண்ணன் குடும்பம் பெயர் போனது சதாசிவ பிள்ளைன்னு எங்க சித்தப்பா நல்ல பெயர் எடுத்து ஏகபோகமாக வாழ்ந்தவர்.
இந்தச் சம்பந்தம் அமைஞ்சது அதுவும் உறவுல பெரும் சலசலப்பு எத்தினி பேருக்கு பொறாமை தெரியுமா? நானும் உங்க அப்பாவும் செஞ்ச புண்ணியம் நமக்கு நல்ல வரன் அமைஞ்சு இருக்கு.
தயவு செஞ்சு கொஞ்சம் வாய் அடக்கி, உன் குசும்பு இந்தக் கத்தி பேசுறது, பெரியவங்க கிட்ட பட்டு பட்னு பேசுறது இதையெல்லாம் ஊரோட நிறுத்தி புடு சொல்லிட்டேன் விவரமா பொழைச்சுக்கோ ”
தாயின் பேச்சில் இந்த ஒருவாரமாக அதிலும் திருமணம் உறுதி நடந்த தினத்தில் இருந்து தாய் பாடும் பல்லவியில் பொறுமை இழந்த அரிவை பெண்
“ம்மா உனக்கு அம்புட்டு தான் சொல்லிட்டேன் ரொம்பத் தான் நீட்டி முழக்குற அதுவும் பிறந்த வீடுன்னு ரொம்பப் பவுசு காட்டுற…
ரொம்பப் பேசுனா இந்தக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லி புடுவேன் பார்த்துக்க” என்று கன்னல்மொழி சொல்ல அவரது பேச்சில் அதிர்ந்து நின்றார் செல்வி.
அதிர்ச்சி என்ன அதிர்ச்சி இரு மேலும் உன் உயிரை உறைய வைக்கிறேன் என்று கங்கணம் காட்டினாள் போலும் கன்னல்.
“பெரிய மாப்புள!…. பொண்ணு பார்க்க கூட வரல கேட்டா வேலையாம் பெரிய மன்மதனா உன் அண்ணன் மவன் நான் படிக்கலைனு வேணான்னு யோசனையாமே அந்தக் கருவா குஞ்சுக்கு” என்று துடுக்காகச் சொல்ல
அந்த “கருவா குஞ்சில்…….” நெஞ்சையே பிடித்துச் சாய்ந்து விட்டார் செல்வி மேலும்
“என்னங்க இங்க வாங்களேன் இவ இந்தக் கல்யாணத்த நிறுத்தாம விட மாட்ட போலயே நான் என்ன செய்வேன்” எட்டுக் கட்டையில் கத்தி கொண்டே செல்வி ஒப்பாரி வைக்க.
அவரது குரலிலும் பேச்சிலும் பயந்து கொண்டு ஓடி வந்தார் பொன்னுசாமி பிள்ளை. இவர் கமுதியின் தமிழ் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அது சரி வாத்தியார் புள்ள மக்கு” வணங்காமுடி கணக்கு சரிதான் போலையே.