“அக்கா!.. ஆளுக்கு ஒன்னா செஞ்சா சீக்கிரம் வேலை முடியும் அதான்”
“அதுக்குன்னு மேல ஏறி துடைக்கனுமா?” அகிலா கோபமாக.
திருமணதிற்கு இன்னும் ஐந்து நாட்கள் என்ற நிலையில். மூன்று தினங்கள் கடந்தால் உறவுகள் வர போக இருப்பார்கள் என்பதால் வீடு முழுமையும் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர் பெண்கள்.
கன்னலுக்கு ஒரு அளவிற்கு உடல் ஒத்துழைக்கச் சிறு சிறு வேலைகள் செய்தாள்.விமலா, இந்து, மது எனப் பெண்கள் வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்தனர்.
முக்கிய நிகழ்விற்கு சமைக்கவென்று சில பெரிய பாத்திரங்கள் எடுக்கப் பட்டு அதனை வானதியும் அகிலாவும் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.
வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று பானுமதி கோகாலியில் ஏறி மின் விசிறியை துடைக்க, அதில் ஆடிய கோகாலி சற்று நகர சமாளிக்க முடியாமல் கீழே விழுந்து விட்டார்.
அதில் இடுப்பிலும் விழுந்த வேகத்தில் கால் பெருவிரல் மடங்கித் தேய்ந்ததில் அடிபட்டு இரத்தமும் வந்தது.அதான் வானதி கடிந்து கொண்டு இருக்கிறார்.
“அத்தை வாங்க பக்கத்துல உள்ள கிளினிக் போயி டி..டி.. போட்டுட்டு வரலாம்” விமலா கவலையாகச் சொல்ல.
“வாங்க அம்மாச்சி போலாம்” பேத்திகளும் அழைத்தனர்.
“வேணாம்மா பேண்ட் எயிட் இருக்கு கால்ல நல்ல கழுவிட்டு அதைப் போட்டுக்குறேன்” என்றவர் கன்னலை பார்த்து,
“கன்னல் பசுபதிக்கு போன் போட்டு இடுப்புக்கு மட்டும் தைலம் வாங்கிட்டு வர சொல்லு.அவர்கிட்ட சொல்ல வேணாம் சத்தமில்லாம வந்து கொடுத்துட்டுப் போகச் சொல்லும்மா”
“சரிங்க அத்தை” என்றவள் கணவனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்ல, மறக்காமல் வணங்காமுடிக்குத் தெரியாமல் வந்து போகச் சொல்ல, சரி!… சரியென்று கேட்டுக் கொண்டான். இன்று தொழில் விஸ்தரிப்புக்காகப் பேசிய இடம் முடியும் தருவாயில் உள்ளது.
வேலன்,வணங்காமுடி,பசுபதி,ஈஸ்வர்,அருணகிரி என்று மொத்த ஆண்கள் கூட்டமும் அங்கே இருக்க பசுபதியால் நகரக் கூட முடியாத சூழ்நிலை.
அவசரம் என்று சொல்லி சென்றால், என்ன? ஏது? என்ற கேள்வி வரும் என்பதால் கடைக்கு அழைத்து மணியை விட்டு மருந்து வாங்கி,வீட்டில் கொடுக்குமாறு சொல்லிவிட்டு மீண்டும் பேச்சில் கலந்து கொண்டான்.
பேச்சோடு பேச்சிருந்தாலும் மகன் மீது ஓர் கண்ணை வைத்திருந்தவர். பசுபதி போன் பேசி விட்டு அவர் அருகில் அமர “என்னங்க யாரு போனுல” பசுபதியின் முகத்தைக் கூர்ந்து பார்த்து கேட்க.
“இல்லப்பா …..அது” என்று சமாளிக்க வந்தவன் அவர் பார்த்த பார்வையில் உண்மையை அழகாக கக்கி வைத்தான்.
“சரி நீங்க பார்த்து முடிச்சுட்டு வாங்க நான் கிளம்புறேன்” என்றவரை மற்ற ஆண்கள் என்னவென்று பார்க்க அவர்களிடம் விடயத்தைச் சொன்னான் பசுபதி.
“நீ போ வணங்கா!.. நாங்க இருக்கோம்” ஈஸ்வர் சொல்ல.
வேலன்,”வணங்கா நம்பப் போகலாம்”
“இல்ல வேலா நீ இரு. நல்ல படியா பார்த்து முடிச்சுட்டு வாங்க” என்றவர் அவர்களது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பத் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் பசுபதி.
“என்ன கன்னுகுட்டி அடி பலமா”
“அதெல்லாம் இல்ல மாமா அப்பா கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க……”
“அது சரி அவன் கேட்கும் போது சமாளிக்க வேண்டியது தானே தம்பு” அருணகிரி தம்பியின் கோபத்தை எண்ணி ஆதங்கமாகச் சொல்ல.
“வெளி ஆளா இருந்தா செய்யலாம். இவர் கிட்ட பொய் சொல்லிட்டு பிறப்பாடு யாரு வாங்கிக் கட்டிக்கிறது.அதுக்கு உண்மைய சொல்லி எங்க அம்மா கிட்ட இரண்டு அடி வாங்கிக்கிறேன்” என்றவனைப் பார்த்து மூவரும் சிரித்தனர்.
ஈஸ்வர் சிரிப்பின் ஊடே “ஆனா நீ பொழைச்சுக்குவா டா தம்பு”
“அது யாரு மகன்” என்று வாரினார் வேலன். மீண்டும் பேச்சு இடத்திற்குத் தாவ வெற்றிகரமாகப் பேசி அவர்கள் எண்ணிய விலைக்கே இடத்தை முடித்து விட்டனர்.
***********
சென்னையில்…….
விசு மனைவிக்குப் போன் அடிக்க மறுமுனை எடுக்கப் பட்டதும் ஒரே கூச்சல் தான்,
“ஏய்!… என்ன நீ ரொம்ப அநியாயம் பண்ணிக்கிட்டு இருக்க, மனுஷன் இங்க தனியா கிடந்து சாவுறான், நீயும் போன் பண்ண மாட்ட நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்ட என்னடி நீ” பிரிவு சொல்லி கொடுத்த பாடம் சரியாக வேலை செய்தது போலும்.
“எதுக்கு விசு கத்துறீங்க அத்தை விழுந்துட்டாங்க அதான்” என்றதும் கோபம் மறந்து “அய்யயோ!… என்ன ஆச்சு எப்படி?”.
“வீட்டை சுத்தம் பண்ணுனோம் ஆளுக்கு ஒரு வேலைனு… அத்தை மேல ஏறி துடைக்கிறேன்னு விழுந்துட்டாங்க”
“ரொம்ப அடியா விமலா ஹாஸ்பிடல் போனீங்களா?”
“இடுப்புல லைட்டா அடி அப்புறம் கால் கட்டை விரல் நகம் விலகி ரெத்தம் வருது பேண்ட் எயிட் போட்டுருக்கோம்”
“சரி டி!.. சாரி!… நீ போன் எடுக்கலை அதான் கோபம், தனியா இருக்கவே பிடிக்கலை வேற அதான்” என்றதும் மறுபுறம் அமைதி. அவளது நிலையும் புரியத்தான் செய்தது இருந்தும் தன்னைச் சமாளிக்க முடியவில்லை அவனால்.
“விம்மி என்னடி? சாரி இனி சண்டை போடுறதை குறைக்கப் பார்க்குறேன்”
“ப்ச்.. அதெல்லாம் இல்ல விசு உங்க கஷ்டம் புரியுது. கொஞ்ச நாள் ப்ளீஸ்!…. எனக்கு இங்க தான் நல்ல இருக்கு.
எப்படி சொல்லுறது ஆ!..அஹான்!.. ஒரு பாசிட்டிவ் வைபிரேஷன் அது மாதிரி ப்ளீஸ் விசு” கெஞ்சிய பெண்ணை எண்ணி சிறு புன்னகை அவனிடம்.
“சரிம்மா பாரு அம்மாக்கு டிடி போட்டுரு” அவன் பேசி கொண்டு இருக்கும் போதே தாடல் புடாலெனச் சத்தம்.
“ஹே!… என்ன சத்தம்? என்ன ஆச்சு?” விசு பதற.
கிசு கிசு குரலில் “மாமா வந்துட்டார் போல விசு நான் அப்புறம் பேசுறேன்”
“சரி எனக்கு என்னனு பேசு, இல்லனா மெசேஜ் பண்ணு அப்புறம் இதே யோசனையவே இருக்கும் வேலை செய்ய முடியாது”
“கண்டிப்பா விசு நேரத்துக்குச் சாப்பிடுங்க நான் கூப்புடுறேன்”.
“ஹ்ம்ம்!…” என்றதும் போனை அனைத்தவள் வேகமாகக் கூடத்திற்கு ஓட அங்கே வணங்காமுடி பானுமதியை முறைத்தவாரே வானதியிடம் பேசி கொண்டு இருந்தார்.
“சொல்லுங்க அண்ணி நான் பேசுனா மட்டும் பேசிட்டேனு சொல்றீங்க. இப்படி பண்ணி வச்சா நான் எப்படி பேசாம இருக்க”
“சின்ன அடித்தான்” சன்ன குரலில் பானுமதி சொல்ல.
“பேச்சை கேட்டிங்களா? சின்ன அடியாம். முன்ன மாதிரி எனக்கு எதையும் தாங்க முடியல அண்ணி சின்னதா இருந்தா கூடப் பதறது.
அந்த அளவுக்கு அவங்க உடம்பும் சரியா இல்லை பயந்து வருதுங்கண்ணி”.
“புரியுது கொழுந்து அவளும் வேணுன்னு பண்ணல கோகாலி கால் சரியில்லை போல அதான் விழுந்துட்டா”
“ஏன் வீட்டுல ஆம்புளைங்களே இல்லையா? மத்த வேலையெல்லாம் பார்த்துட்டு இதை எங்ககிட்ட சொல்ல வேண்டியது தானே? நாங்க செய்ய மாட்டோமா?
உங்களுக்கும் வயசு திரும்பல அண்ணி வேலை வாங்கிப் பழகுங்க” அவர்களுக்கும் ஒரு குட்டு வைத்தவர்.
“கொழுந்து நீங்களும் வர வர ரொம்பத் தான் கோப படுறீங்க, அதுவும் எல்லார் முன்னாடியும்” சிறு கண்டிப்பு அவரிடம். அனைவர் முன்பும் பானுமதியை எப்படி நீ சாடலாம்? என்ற கேள்வி இருக்க.
“எல்லாத்துக்கும் பயம் தான் காரணம். வயசு போகுது. அது போக இந்த வருசத்துல மூணு, நாலு முறை நோவு கண்டாச்சு அண்ணி” என்றவரது குரலில் ஆதங்கம் மிகுந்த வலி இருக்க அமைதியாகி விட்டார் வானதி.
அதன் பின் மௌனமாக இருவரும் மருத்துவமனை கிளம்பி சென்று வந்தனர்.
*************
மருத்துவரிடம் காட்டி விட்டு மருந்துகளை வாங்கிக் கொடுத்தவர் மௌனமாக அவரை வீட்டில் இறக்கி விட்டு கடைக்குச் சென்று விட்டார்.
இரவில் வெகு நேரம் வேலனிடம் பேசிவிட்டு வந்தவர். இரவு உணவை தவிர்க்க அது வரை அமைதியாக இருந்த பானுமதி.
“இப்போ எதுக்குச் சாப்பிடாம இருக்கீங்க”.
“வேணாம்” என்று ஒற்றைச் சொல்லில் மறுத்தவர் தங்களது அறைக்குள் புக. அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அகிலா.
“பானு உனக்கும் சாப்பிட எடுத்துக்கிட்டு ரூம்க்கு போ. இங்க ஒன்னும் வேலையில்லை அப்படியே இருந்தாலும் பிள்ளைங்க இருக்கு பார்த்துக்கும்”
“சரிக்கா”
தனக்கு இரண்டு அவருக்கு நான்கு என்ற கணக்கில் ஆறு இட்லியும் சாம்பாரையும் எடுத்து சென்று அறைக்குள் வைத்துக் கொண்டு இருக்க.
அதற்குள் வணங்காமுடி அறைக்குள் வந்து கதவை தாளிட்டு இருந்தார்.
அவரது அரவம் உணர்ந்து “சாப்பிட வாங்க” பானுமதி அழைக்க அசைந்து கொடுத்தார் இல்லை.
“உங்களுக்கு என்ன அம்புட்டு அலட்சியம் அதுவும் உங்களைக் கொண்டு. இனி என்ன? எல்லாக் காரியமும் முடிஞ்சு போச்சு. இனி இந்தக் கிழவன் தானே அப்படின்னு யோசனை போல, அதான் உங்களைப் பார்த்துகிறதுல அலட்சியம்”
“தண்டல் காரரே! சின்ன விஷயம்……”
“வேணாம் பேசி என்ன கத்த வைக்காதீங்க உங்களுக்கு எல்லாமே சின்னது தான். உங்களை மாதிரி தைரியம் எனக்குக் கிடையாதுங்க என்ன விட்டுருங்க,
வயசு போகப் போகப் பயந்து வருது உடம்புல சத்தில்ல, அது போக ரெத்தமில்லைனு டாக்டர் அம்மா சொல்லறாங்க,வயசு கூடக் கூட ஒரு கட்டத்துல மாத்திரை மருந்து கூட வேலை செய்யாது. படிச்சவுங்க தானே உங்களுக்குத் தெரிய வேணாம்.
என்ன அலட்சியம்.. என்ன அசால்ட்டு… ரொம்பச் சுளுவா வரும் பதில் ‘சின்னக் காயம் தானே’ ” பானுமதி போலவே பேசி காட்ட கண்ணில் நீர் வழிய முறைத்துக் கொண்டு நின்றார் பானுமதி.
“அதானே உடனே கண்ணீர் விட்டுருங்க அம்புட்டு பேரும் என்ன வில்லன் கணக்கா பார்த்து வைக்கட்டும். நீங்க செய்ற சேட்டைக்கு நான் தாங்க அழுது வைக்கனும்”
“பிள்ளைங்களை எண்ணி நோவு, அதுங்களுக்கு வேலை செஞ்சு நோவு, இப்ப வீட்டுக்குச் சுத்தம் செஞ்சு நோவு. புஞ்சை உடம்புக்கு எதுவும் ஆகலைனா ஆகாத காரியத்தை ஏன் செய்யனும்?”
நியாயமாக மனிதன் கேட்டு வைக்க பதில் சொல்ல முடியாமல் “தண்டல் காரரே!….ரொம்பத் திட்டுறீங்க என் மேல அன்பே இல்லை”
“தப்பு பண்ணிட்டு அதைச் சமாளிக்கத் தெரியலனா ஒன்னாங் க்ளாஸ் பாப்பா மாதிரி பழியைத் தூக்கி ஏன் மேல போற்றனும் என்ன” என்றவர் முகத்தில் அத்தனை கோபம்.
இன்று என்ன பேசினாலும் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவர் வேகமாக வெளியில் சென்று தப்பிக்க பார்க்க.
அவரது நோக்கத்தை அறிந்தவர் அவர் செல்லும் முன் காத்தாட்டம் இருந்தவரை கக்கத்தில் பிடித்துக் கொண்டார்.
“முதல சாப்பிட்டுட்டு எங்கன வேணாலும் போங்க” என்றவரது கையைச் சிறு பிள்ளை போல் விளக்கி கொண்டே ஓ!…. வென்று அழுது வைத்தார் பானுமதி.
“ஒன்னும் வேணாம் நான் சாப்பிட மாட்டேன்” என்று அடம் பிடிக்க.
“எனக்கு பொறுமையே இல்லங்க ஒழுங்கா சாப்பிடுங்க”
“இதுக்கு முன்னாடி என்னை சத்தம் போட்டிங்க தானே”
“புரியாம பேச கூடாது சும்மா இருந்த உங்களைத் திட்டி வச்சேன்னா?”அவரது கேள்வியில் தலை குனிந்து நின்ற பானுமதி மெது குரலில் விசும்பி கொண்டே “இனி இது போலச் செய்ய மாட்டேன்”.
“ஹ்ம்ம்!.. சாப்பிடுங்க”
“நீங்க?”
“வரேன்” இருவரும் சாப்பிட அமர பானுமதி தட்டில் உள்ள சாப்பாட்டைப் பார்த்தவருக்கு உச்சிக்கு ஏறியது.
அவரது பார்வை புரிய “நேரம் ஆச்சுல்ல செரிக்காதுங்க” பாவம் போல் பானுமதி.
“இப்போ புரியுதா? உங்களுக்கு இனி சாப்பாடும் அளவு தான். இதுல விழுந்து வரிவச்சு நோவை விலை கொடுத்து வாங்கனுமா சொல்லுங்க?”என்றவர் வேகமாக வெளியில் சென்று இரு வாழை பழங்களை எடுத்து வந்து அவர் கையில் திணித்து உண்ண வைத்தார்.
இருவரும் உண்டு படுத்த பிறகே வெளியில் உள்ளர்வர்கள் நிம்மதியாகக் கண் மூடினர்.
இன்று வழமைக்கு மாறாக வணங்காமுடி அமைதியாக இருக்க. அவரை இறுக்கி கொண்டு கண் மூடி கொண்டார் பானுமதி.
பேச்சுகளற்ற அணைப்பு ஆயிரம் கதை பேசி இரவை கழித்துக் கொண்டு இருந்தது.
முதுமை முன் நின்று பயம் காட்டியது போலும்.இது உள்ளது தானே என்ன வயதானவர்கள் அதனை வெளியில் சொல்வதில்.
அந்த பயம் தான் வணங்காமுடிக்கும் அதிலும் பானுமதிக்கு இருமுறை வந்த காய்ச்சலில் உடல் மெலிந்து கிடக்க.அது போகச் சத்துக் குறைவு என்று மருத்துவர் சொல்ல வணங்காமுடிக்கு கவலையாகி போனது.
அவரது அதீத கோபத்திற்குக் காரணமும் அதுவே. அது புரியாமல் இன்னும் வேலைகளை இழுத்து கொள்கிறார் பானுமதி.
வானதி அகிலாவும் இதே போல் தான்,ஆனால் இப்பொழுது இளசுகள் சற்றுக் கை கொடுக்க அவர்களுக்கும் ஓய்வு கிட்டியது.
இளமை என்பது பாட புத்தகம். முதுமை என்பது அதனை எழுதிய ஆசிரியர்.
தாங்கள் கற்ற கல்வியை, தாங்கள் பட்ட அடியை, தாங்கள் தாங்கிய சுமையை, தாங்கள் சுகித்த வாழ்க்கையைப் பேனாவாகக் கொண்டு அதில் அனுபவம் என்ற மையை நிரப்பி எழுதிய ஆசிரியர் தான் முதுமை.
பயம் கொள்ள வேண்டாம் ‘வரம் பெற்ற பருவமென்றால் அது முதுமையே!.’