அச்சுதனுக்கு அதுவரை அப்படியொரு எண்ணமில்லை. ஆனால் அந்த எண்ணம் தோன்றியதும் அவரின் மனது மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தது. மகன் காதல் என்று வேற்று மத பெண்ணோடு வந்து நின்றபோது மகனே வேண்டாம் என்று உதறியவர். இப்போது ஜெய்ச்சந்திரன் ஒரே மதம் என்றாலும், அவன் வேறு மொழி, இனம். இருந்தும் அவனை பேரனாய் பிடிக்கும், பேத்திக்கு அவனை கட்டிவைத்தால் பேத்தி கண்முன் இருப்பாள். மகனை பிரிந்து மனைவி வருந்துவதை நித்தமும் பார்ப்பவர் தானே? பிந்து தான் சொன்னால் கேட்பாள் என்று நினைத்தார். இவர் யோசனையில் இருக்க, ஜெய்ச்சந்திரன் அச்சம்மா பாடி முடிக்க, அவர் எதிர்ப்புறம் அச்சச்சனின் அருகே அந்த திண்ணையில் உட்கார்ந்து,
“அடிபொலி அச்சம்மா!” என்றான் பாராட்டாக.
“அடே ஜெயா!” என்று சிரித்தார்.
“நல்ல திவசங்கள் அல்லே அச்சம்மா?(நல்ல நாட்கள் இல்லையா?)” என்று அவரை கேள்வியாகப் பார்த்தான். சின்ன வயதில் விளையாடி களைத்து பின் அந்த பூமுகத்திலே ஜெய், வினயன், விஜயன் எல்லாரும் படுத்துறங்க, அச்சம்மாவின் தாலாட்டு அரக்கபறம்பில் கானமாய் ஒலிக்கும். ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாதி திரு நாள்’ மகாராஜாவுக்கு பாடிய பாடல் என்று பாடல் உருவான கதையும் சொல்லுவார்.
அச்சம்மாவுக்கும் அவன் சொல்ல, அந்த நாள் ஞாபகங்கள். மெல்ல பேத்தியின் தலையை வருடியபடி ஜெய்ச்சந்திரனிடம் பழைய கதைகள் பேச, பிந்து வாழ்க்கையில் கேட்கும் முதல் தாலாட்டு, உணர்ச்சிவசத்தில் இருந்தாள்.
ஜெய்ச்சந்திரன் அச்சம்மாவிடம் வாங்கி வந்த தைலத்தைக் கொடுத்துவிட்டு கிளம்ப எத்தனிக்க,
“ஊணு கழிச்சிட்டு போவாம்டா(சாப்பிட்டு போலாம்டா)” என்று அவனை அச்சம்மா உண்ண அழைக்க, ஜெய்யோ,
“விஷப்பு தோணுனுல்லா அச்சம்மே(பசிக்கல அச்சம்மா)” என்று மறுத்தான். அவர்களிடம் விடைபெற்று அந்த தெருவில் இறுதியில் இருக்கும் அவன் வீடு சென்றான் ஜெய். அவன் நடந்து வர, வேகமாய் அவன் மேல் தாவி ஏறியது அந்த நாலு கால் ஜீவன்.
“ரொனா! ரொனால்டோ” என்று அதனை அணைத்துக் கொஞ்ச, ரொனால்டோவோ அவன் முகத்தை நக்கி அன்பை வெளிக்காட்டியது. சில நாட்களாக ரொனால்டோவை கவனிக்க அவனுக்கு நேரமில்லை. இன்று நண்பனின் திருமணத்திற்காக மதியத்திற்கு மேல் எந்த வேலையும் வைக்கவில்லை. விரைவாகவே விஷேஷம் முடிந்து வீடு வந்திருக்க, ரொனால்டோவுக்காக வாங்கி வைத்திருக்கும் பந்தினை தூக்கிப் போட, அது முட்டி மோதிட என்று ஒரே விளையாட்டு. சிறிது நேரம் விளையாடியவன்,
“ரொனால்டோ, சமத்தா இரு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.ரொனால்டோவும் அவன் பின்னே ஓடியது. பூமுகம் தாண்டி, வீட்டின் நடுவே உள்ள வான்வெளியான ‘நடுமுற்றம்’ வர, மீனின் வாசம் துளைத்தது.
“அப்பா!!” என்று கத்திக்கொண்டே சமையலறைக்குள் போக, அங்கே இவன் வரவும் வினயன் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவன் விழித்தான். கையில் மீனின் முள் மட்டும் இருக்க, மீன் உள்ளே சென்றிருக்க, பாலச்சந்திரன் மகனுக்கு சூடாக மீன் சுட்டு கொடுத்தார்.
“என்னடா என்னை விட்டு உள்ள தள்ளிட்டு இருக்க” என்று கேட்டவண்ணம் தம்பியின் தோளில் அழுத்தமாக அடித்தபடி, அந்த சமையல் மேடையில் உட்கார்ந்தான் ஜெய்.
“வலிக்குதுடா பட்டி!” என்று ஜெய்ச்சந்திரனின் கையின் அழுத்தம் தாங்காது வினயன் கத்தினான்.
“ரிசப்ஷன்ல சாப்பிடலையாடா நீ?” என்று பாலச்சந்திரன் விசாரிக்க,
“இல்லப்பா, டயர்டா இருந்துச்சு. அங்க கூட்டம் வேற, லேட்டாவும்னு நான் வந்துட்டேன்” என்றான். ரொனால்டோவும் அப்பா பின் சுற்ற, அதற்கான கிண்ணத்தை எடுத்து, அவனுக்கும் மீன் வைத்தார்.
ஜெயனிடம், “இந்தா நீ சாப்பிடு” என்று தட்டில் சோறும், மீனும் வைத்துக் கொடுக்க
“அமிர்தம்!” என்று சிலாகித்தபடி ஜெய் உண்ண, பாலச்சந்திரன் தன் இரு மகன்களையும் பார்த்தார். மனைவியின் சமையலை அவரும் மிகவும் மிஸ் செய்தார். மூவருக்குமே சுஜாதா அம்மா போன்றவர், அவரின் இழப்பினை பாலச்சந்திரனால் இன்னும் கடக்க முடியவில்லை. அவர் மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது, மகன்களுக்காக புன்னகையோடு வாழ்வினை நகர்த்துகிறார். தான் நன்றாக இருக்கும்போதே மகன்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து, ஜெய்ச்சந்திரனுக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
அவர் யோசனையில் நிற்க, “அப்பா! எனக்கு இன்னொரு மீன்” என்று வினயன் கேட்க
“உன் பங்கு ஓவர்” என்று ஜெயன் வம்பிழுக்க,
“இந்தாடா” என்று பாலச்சந்திரன் தட்டில் வைத்தார். அவன் தட்டில் வைத்தவர் ஜெய்யின் தட்டிலும் ஒன்று வைத்தார். அவரும் தனக்கு உண்ண வைத்துக்கொண்டு,
“ஜெய்! பொண்ணு பார்த்துட்டு இருக்கேன், உனக்கு எப்படி பொண்ணு வேணும் சொல்லு” என்று கேட்க
“அப்பா! எனக்கு சும்மா எல்லா போட்டோவும் அனுப்பாதீங்க. உங்களுக்கு எல்லாம் பொருத்தமா இருக்குனு தோணிச்சுன்னா, அந்த பொண்ணுக்கும் பிடிச்சிருந்தா மட்டும் எனக்கு போட்டோ கொடுங்க. நீங்க எனக்கு பார்க்கிற பொண்ணு நம்ம வீட்டு மருமகளா, என் மனைவியாதான் நான் பார்ப்பேன். அதுக்கு ஏத்தமாதிரி பாருங்க” என்றவன் உண்டு தட்டைக் கழுவிவிட்டு போனான்.
“அப்போ நீங்க ஒவ்வொரு போட்டோவா காட்டி, இவன்கிட்ட ஒப்பினியன் கேட்க முடியாது ப்பா” என்று அண்ணனை தெரிந்தவனாக சொன்னான் வினயன்.
“ஜெய்க்கு ஏத்தமாதிரியே பார்த்திடலாம்டா” என்றார் பாலச்சந்திரன். அடுத்த நாள் காலையில் அச்சுதனிடமிருந்து பாலச்சந்திரனுக்கு அழைப்பு வந்தது. பாலச்சந்திரனும் அரக்க பறக்க அரக்க பறம்பில் வீடு போனார்.
“எந்தாடா பாலா?(என்னடா பாலா) ஆளை காணும்?” என்று அச்சுதன் கேட்க
“நிறைய வேலை அச்சா” என்றார் பாலா.
“அது ஒன்னுமில்லடா! எனிக்கு ஒரு ஆஷயமுண்டுடா பாலா(எனக்கு ஒரு யோசனை உண்டு)”
“சொல்லுங்க அச்சா” என்று பாலா கேட்க, அவரின் முகத்தை பார்த்தா அச்சுதன்
“ஜெயனுக்குப் பிந்துவைக் கல்யாணம் பண்ணி வைக்கலாமா?” என்று கேட்டிட, பாலச்சந்திரன் விழிகளில் அதிர்ச்சி. நட்பு இரு குடும்பத்துக்கும் நாற்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறது, ஆனால் உறவாக மாற அச்சுதன் விருப்பப்படுவார் என்று பாலச்சந்திரன் நினைக்கவில்லை. இருந்தும் சில நேரம் ஆசைகள் பிடித்தாலும், பிடித்து வைக்க முடியாது. அப்படியொரு நிலையில் இருந்தார் பாலச்சந்திரன்.
“அச்சா!” என்று தயக்கமுடன் அவர் விழிகள் அச்சுதனை பார்க்கவுமே, அச்சுதன் புரிந்து கொண்டார்.
“எந்தாடா?” என்று கேட்க
“ஜெய்க்கு சுஜா சொந்தத்துல ஒரு பொண்ணு பார்த்திருக்கு, பேச்சு போய்ட்டிருக்கு. பிந்துவை ஜெய் அப்படி பார்க்கல அச்சா” என்று சொல்ல, அதில் அழுத்தமாய்த் தெரிந்த மறுப்பினை உணர்ந்தார் அச்சுதன்.
“ஞான் கொரே பிரதிக்ஷிச்சு, பச்ஷே குழப்பமில்லா. நீ அல்லே அச்சன்? நிண்டே இஷ்டம்!” என்றார் புரிதலோடு. ( நான் ரொம்ப எதிர்ப்பார்த்தேன், இருந்தாலும் ஓகே. நீதானே அப்பா, உன் இஷ்டம்).
“சாரி அச்சா” என்று பாலச்சந்திரன் மன்னிப்புக் கேட்க
“போடா மோனே!” என்று அவர் தோளில் தட்டினார். பாலச்சந்திரனுக்கு அப்போது வேறு யோசனை தோன்ற, உடனே அதை சொல்லவும் செய்தார்.
“அச்சா! விஜயனுக்கு பிந்துவை பேசினா என்ன?” என்று கேட்க
“விஜயன் ஒத்துக்குவானா? அவன் அப்ராட் போக ஆசைப்படுறான். பிந்து இங்க கல்யாணம் பண்ணினா எங்களுக்கு சந்தோஷம். ஜெயன்னா இங்கயே இருக்கான், எனக்கு அப்புறமும் அரக்க பறம்பில் வீட்டுக்குப் பெயர் வாங்கிக் கொடுப்பான். விஜயன் மாடர்ன், அவன் சரி வர மாட்டான்.” என்றார் மலையாளத்தில்.
“நீங்க எதுக்கும் விஜயன், ஷோபனா, அம்மா எல்லாரையும் கேளுங்க அச்சா. கேட்டு முடிவெடுங்க” என்றார். அச்சுதனுக்கும் அந்த யோசனை இருந்தது, ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளுவானா என்று தெரியவில்லை. அவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தார்.