பாலச்சந்திரனுக்கு பெரிய பாரம் குறைந்த உணர்வு, நேற்று அச்சுதன் கேட்டது மனதை உறுத்தியது. நல்ல வேளையாக விஜயனை பார்க்க சொல்லிவிட்டார், ஜெய்க்கு ஏற்றார்போல் பெண் கிடைக்க வேண்டும் என்று சபரிமலை ஐயனுக்கு வேண்டுதல் வைத்தார்.
நல்ல நேரமாக அவர் சொல்லியிருந்த இடத்தில் சாதகமான செய்தி வந்தது. உடனே மூணாறில் இருந்த மகனுக்கு அழைத்து விவரம் சொல்ல,
“அப்பா! பொண்ணுக்கு என் ஃபோட்டோ அனுப்பி ஓகேவா கேளுங்க, ஓகேனா அவங்க ஃபோட்டோ எனக்கு அனுப்புங்க. உங்களுக்குத் திருப்தியா இருந்தா மட்டும் அனுப்புங்க” என்றான் மீண்டும் மீண்டும். அவன் வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வைத்துக்கொள்ள மாட்டான், சில விஷயங்கள் மனதில் பட்டால் உறுதியாக நின்றுவிடுவான்.
“சரிடா, அனுப்பிடுறேன். அவங்க அனுப்பினா உனக்கு வாட்ஸப் பண்றேன். நீ கொஞ்சம் டைம் எடுத்து, பொண்ணுகிட்ட பேசிட்டு கூட சொல்லு” என்றார்.
அடுத்த இரண்டு நாளில் ஊர்மிளாவின் பெயர், போன் எண்ணோடு அவளின் படம் ஜெய்ச்சந்திரனின் வாட்ஸப்பில் வந்து சேர்ந்தது. அந்த நேரம் ஜெய் அவன் அறையில் இருந்தான், ஸ்லீவ்லெஸ் பனியன், வேஷ்டி என்று இலகுவான உடையில் இருந்தபடி அக்கவுண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்க, வாட்ஸப்பில் அப்பாவிடமிருந்து செய்தி வர, இயல்பாக திறந்து பார்த்தான். ஒரு பெண்ணின் படம், கீழே அவளின் காண்டாக்ட் பெயரோடு இருந்தது.
“ஊர்மிளா” ஜெய்யின் இதழ்கள் பெயரை சாதாரணமாக சொல்ல, சொல்லி முடிக்கும்போது அந்த பெயர் பிடித்தது, பெண்ணையும் பார்க்க பிடித்தது.
ஒரு ஆகாய நீல சுடிதாரில் கையில் பூனைக்குட்டியைத் தூக்கிக் கொஞ்சிபடி இருந்தாள் ஊர்மிளா. திருமணத்திற்காக கொடுத்த புகைப்படம் போல அல்ல, மிக மிக இயல்பாக இருந்தது. ஊர்மிளாவை விட அந்த பூனைக்குட்டியைக் கண்டு ஜெயனின் முகத்தில் சிரிப்பு. பூனைக்குட்டியின் கழுத்தில் ‘ரோமியோ’ என்று ஆங்கிலத்தில் ஒரு டேக் இருந்தது.
பேசுவோமா என்று நினைத்தவன், கொஞ்சம் நேரம் போகட்டும் என்று நினைத்தான். அடுத்த நாளும் விடிய, குளித்து விட்டு உடை மாற்றியவன் போனை சார்ஜிலிருந்து எடுத்தான். கைகள் ஊர்மிளாவின் படத்தைத் தேடின, மனமோ அந்த பொண்ணை இப்படி அடிக்கடி பார்க்கிறது தப்பு என்று சொல்ல, அப்பாவிடம் இரு நாட்கள் முன் பேசியது நினைவில் ஓடியது. பெண்ணுக்கு என்னை பிடித்ததால்தானே அவள் படம் அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைத்தான்.
அவள் புகைப்படத்தை ஃபோனில் சேமித்தவன், அவள் எண்ணையும் ‘ஊர்மி’ என்று சேமித்தான். பார்த்ததும் காதல் இல்லை, ஆனால் பார்க்க பிடித்தது. அவளுக்கும் என்னை பிடிக்கும் என்ற எண்ணம் இன்னும் கொஞ்சம் திண்ணம் சேர்க்க, கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்மிளாவையே சுற்றியே அவன் எண்ணங்கள் வலம் வரத் தொடங்கின. அப்பா பேசி பார்க்க சொன்னார், இருந்தும் உடனே பேச மனம் வரவில்லை. என்னவென்று தெரியா ஒன்றை அவன் எதிர்ப்பார்த்தான்.
பாலச்சந்திரன் காலையில் எதாவது கேட்பார் என்று நினைக்க, மகனிடம் அவர் ஒன்றுமே கேட்கவில்லை. இவனும் அப்பா பேச சொல்லிவிட்டதால் ஒன்றும் கேட்கவில்லை என்று நினைத்தான். அவர் ஏதோ வேலை டென்ஷனில் இருந்தார் போல, வினயனோடு சீக்கிரமே கிளம்பிவிட்டார்.
அன்று மாலை மூன்று மணி இருக்கும். ஜெய்ச்சந்திரன் மூணாறில் இருக்கும் ரோஸ் கார்டன் அருகே இருந்தான். மூணாறு ரிசார்ட்டில் இருந்து அப்போதுதான் கிளம்பியிருந்தான், போகும்வழியில் டீ கடையில் நிறுத்தினான்.
“சுரேஷேட்டா, எனிக்கு கடுப்பத்தில் ஒரு சாயா(எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ)” என்றவன் ஜீப்பில் சாய்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்தான். தேனீர் கடையில் தாஸேட்டன்(கே.ஜே.யேசுதாஸ்) குரலில் பாடல் ஒலித்தது. சுரேஷ் ஏட்டன் பாடியபடி ஜெய் கேட்ட பதத்தில் டீ தயாரித்தார்.
‘மேகம் பூத்துத் தொடங்கி
மோகம் பெய்துத் தொடங்கி
மேதினி கேட்டு நெஞ்சில் புதியதொரு
தாளம்!’ (மேகம் பூத்து மோக மழை பெய்யத் தொடங்க, பூமி புது தாளத்தை உணர்ந்தது.- படம்: தூவனத்தும்பிகள்)
என்று பாடல் ஓட, ஜெய்யும் மெல்ல முணுமுணுத்தபடி ஜீப்பில் தாளம் போட்டான். லாலேட்டனின்(மோகன்லால்) தீவிர ரசிகன் அவன்! தீவிர சினிமா பிரியன்! வானமும் பாடல் போலவே இருக்க, மெல்ல மெல்ல சிறு தூறல்கள்.
இவன் மழையை ரசித்தபடி சுரேஷேட்டன் கொடுத்த சாயாவை வாங்கி பருகி, அவரோடு ஊர் கதை பேசி நின்றான். அப்போது அங்கு வந்து நின்றது ஒரு ஆட்டோ. ஆட்டோ டிரைவர் இறங்கி டீ கேட்க, உள்ளிருந்து இறுக்கமான முகத்தோடு இறங்கினாள் பெண்ணொருத்தி.
“சாயா’ம்மா” என்று ஆட்டோ டிரைவர் அவளிடம் கேட்க
“காஃபி அண்ணா” என்ற தமிழ் குரலில் திரும்பினான் ஜெய்ச்சந்திரன். அங்கு தமிழ் குரல் கேட்பது ஒன்றும் அதியசமில்லை, மலையாளமும் தமிழும் கலந்து தான் காற்றில் கேட்கும். பெரும்பாலும் ‘தமிழ் குரல்’ அவனுக்குத் தெரிந்த குரலாக இருக்கும். இல்லையேல் சுற்றுலா பயணிகளாக இருப்பர். இயல்பாக அவன் திரும்ப, நிச்சயம் அங்கே அவளை எதிர்ப்பார்க்கவில்லை. கல்யாண ஆசையில் கனவெது நனவெது என்று தெரியாமல் போய்விட்டதோ என்று நினைத்து, அந்த பெண்ணை ஊன்றி பார்க்க, உண்மையில் ஊர்மிளா!
ஊர்மிளாவை கண்டதும் ஜெய்யின் விழிகள் பிரகாசித்தன. “நேர்ல பார்க்க வந்துட்டாளா?” என்று வேறு திடீர் எண்ணம். ஜீப்பின் கண்ணாடியில் தன் முகம் பார்த்து, மேலுதடு வரை நீண்டிருந்த அடர் மீசையை நீவிவிட்டான். முதல்முறை ஒரு பெண்ணுக்காக தோற்றம் சரிசெய்தான், தன்னை அவள் பார்க்கிறாளா என்று பார்க்க, ஊர்மிளாவின் பார்வையோ தூர தெரிந்த மலைகளிலிருந்தது.
துளியாக தொடங்கிய மழை, தூறலாக நனைத்தது. தாஸேட்டன் குரல் மழையோடு கலந்தது.
அதில் இடையூறாக ஆட்டோ டிரைவரின் குரல் கேட்டது. சுரேஷேட்டன் தேவிகுளம் என்பதால் அவரிடம் ,
“அண்ணே! தேவிகுளத்தில் பாலச்சந்திரன் யாரு? உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
உடனே ஜெய் திரும்பினான். உண்மையில் என்னை பார்க்கவா? என்ற கேள்வி.
“இதோ, நம்மட ஜெயண்டே அச்சன்!(நம்ம ஜெயனோட அப்பா)” என்று ஜெய்ச்சந்திரனைக் காட்டினார் சுரேஷன்.
அதுவரை பெண்ணிடம் பேச தயக்கம் கொண்டு, தள்ளியிருந்த ஜெய் தயக்கம் உதறினான். ஆட்டோவின் பக்கத்தில் நின்ற ஊர்மிளா அருகே சென்றவன்,
“நீங்க தேவிகுளம் பாலச்சந்திரனை பார்க்கணுமா?” என்று கேட்க, அந்த தமிழ் குரலில் ஊரை விட்டு வந்திருந்த ஊர்மிளாவுக்கு சொல்லமுடியாத ஒரு ஆறுதல்.
“ஆமா, நீங்க?” என்றதும்
“நீங்க தேடுறவர் இவரோட அப்பா” என்றார் ஆட்டோ டிரைவர்.
“நான் வீட்டுக்குப் போறேன், என்னோட வாங்க” என்றழைத்தான். அங்கே மெல்ல தொடங்கியது ஜெயனின் உரிமை. ஊர்மிளா இருந்த மனநிலைக்கு இவன் உரிமையெல்லாம் உரைக்கவில்லை. மழை வேறு வலுக்க,
“இவரோட போறதுன்னா போங்கம்மா” என்றார் ஆட்டோக்காரர். ஊர்மிளாவும் இவன் வீட்டிற்கு இவனோடு போய்விடலாம் என்று நினைத்தாள். ஆட்டோவுக்குக் காசு கொடுத்து, ஜெய்யின் ஜீப்பில் ஏறினாள் ஊர்மிளா. மழை நனைக்காமல் இருக்க, ஜீப்பின் மேற்கூரை மூடினான். ஜெய் மனதில் மெல்லிய தூறல், பதட்டம், கேள்வி என்று கலவையான மன நிலையில் இருந்தான். அவள் மீது ஒரு ஆர்வம் இருந்தது. ஜீப்பை ஓட்டிக்கொண்டிருக்கையில்,
‘இவ என்னை ஃபோட்டோவுல பார்க்கலையா? என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல’ என்று நியாயமான கேள்வி வர, அவன் மனம் சுணங்கியது. அதே நேரம் அப்பாவை ஏன் பார்க்க வேண்டும்? எல்லாவற்றையும் அவளிடமே கேட்கலாம் என்று நினைத்து ஊர்மிளாவைப் பார்க்க, மழையில் நனைந்த தடம் அவள் முகத்தில். ஈரம் துடைக்காமல் இருந்தாள், விழிகள் வேடிக்கைப் பார்க்காமல் மூடியிருக்க, எப்போதும் பயணங்களில் பேசாதவன் பாவையிடம் பேசினான்.
“ஊர்மிளா! என்ன விஷயமா அப்பாவைப் பார்க்க வந்திருக்க?” என்று அவள் பெயரை உச்சரித்தது கூட அவள் உணரவில்லை.
“பிரபா… ப்ச்.. பிரிகடியர்(Brigadier Rajeevan) ராஜீவன்” என்றாள் பிடிக்காத ஒரு பாவனையில்.
அதுவரை தனக்கு பார்த்திருக்கும் பெண் என்ற ஆவலில் கேள்விகள் கேட்டவன், அவள் பதிலில் அதிர்ந்து போனான். அந்த அதிர்வைக் காட்டாமல் ஜீப்பை சரியாகக் கையாண்டான் ஜெய்.
கண்கள் சுருங்க, “ராஜீவன், தேவிகுளம் ராஜீவன் உங்கப்பாவா? மிலிட்டரில இருக்காரே?” என்று மீண்டும் உறுதிப்படுத்த கேட்டான்.
ஊர்மிளா இப்போது எரிச்சலான பார்வையை அவனுக்குக் கொடுத்தாள்.
“ரொம்ப டவுட்னா உங்கப்பா கிட்ட கேளுங்க” என்றவள் பேச விரும்பாமல் கண்களை மூடினாள்.
ஜெய் இப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்கவே இல்லை, அவள் பேச்சும் பொய்யாகவும் இல்லை. குழப்பத்துடனும் கோபத்துடனும் வீடு நோக்கி வண்டியை செலுத்தினான் ஜெயன். மழையும் அவர்களோடு தேவிகுளம் சென்றது.