ஜெய் அதன் பின் ஊர்மிளாவிடம் ஒன்றும் பேசவில்லை. எல்லா கேள்விக்கும் பதில் அவன் அப்பாவிடம் உள்ளபோது ஊர்மிளாவிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது? இதில் ராஜீவனின் மகளை எனக்குத் திருமணத்திற்குப் பார்த்திருக்கிறார்.
‘வரட்டும், பார்க்கிறேன் அவரை’ என்று முயன்று பொறுமையாக இருந்தான். அவர்கள் வீடு வந்து சேரும்போது தேவிகுளத்தை முழுவதுமாக மழை நனைத்திருந்தது. வீட்டின் ஓடுகளில் இருந்து தண்ணிர் வழிந்து கொண்டிருக்க, ஜெய் ஜீப்பை வீட்டின் முன் நிறுத்தினான். ஊர்மிளா ஜீப் கதவை திறந்து இறங்க, மழை அவளை நனைத்து வரவேற்றது.
“மழையில நனையாத! உள்ள போ ஊர்மி” என்று சொன்ன ஜெய் ஜீப்பை ஷெட்டில் நிறுத்தினான். ஊர்மிளா மனதில் ஆயிரம் குழப்பத்தோடும், நிறைய நிறைய கோபத்தோடும் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள். அவள் முற்றத்து தூணில் சாய்ந்து நிற்க, அதற்குள் ஜெய் உள்ளே வந்தான். வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டே நுழைந்தவன்,
“அது கெஸ்ட் ரூம், டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ.” என்று ஜெய் சொல்ல
ஊர்மிளாவோ, “உங்கப்பா எப்போ வருவாங்க?” என்று கேட்டாள்.
“மழையா இருக்கு ஊர்மி! கொஞ்சம் லேட்டாகும், நான் கால் பண்றேன். நீ ப்ரஷ் ஆகும்மா” என்று பொறுமையைப் பிடித்து சொன்னான். அவள் எரிச்சலாக பார்த்தது ஜெய்க்குப் பிடிக்கவில்லை, கேட்டால் பதில் சொல்லவேண்டியதுதானே என்ற கோபம் கூட கொஞ்சம் இருந்தது, என்ன காட்டவில்லை.
ஊர்மிளாவுக்கும் அவன் சொன்னது புரிந்தது, லேசாக நனைந்த உடையோடு இருந்தாள். காலை விமானத்தில் கொச்சி வந்தாள். விமானம் தாமதமாக, இதோ இங்கு வர மாலை ஆகிவிட்டது. எர்ணாகுளத்திலிருந்து கேப் பிடித்து மூணாறு வந்தாள். பின் ஆட்டோ என்று மாறி வந்ததில் மிகுந்த களைப்பாக இருந்தாள், அம்மாவை தேடியது கன்றின் மனம். அதே நேரம் ராஜீவனை பார்க்காமல் போகக் கூடாது என்று உறுதியோடு இருந்தாள் ஊர்மிளா.
ஜெய் அறைக்கதவை திறந்து விட்டவன், ஹீட்டர் ஆன் செய்து வெளியே வந்து ஊர்மிளாவைப் பார்க்க,
“தேங்க்ஸ்” என்று உள்ளே நுழைந்தாள்.
ஜெய்ச்சந்திரனின் மன உணர்வுகள் வெவ்வெறு நிறமாக இருந்தன, அப்பா மீது கோபம். ஊர்மிளா மீது ஆர்வம், கொஞ்சம் கோபம், நிறைய ஏமாற்றம் என கலவையான உணர்வுகளை, அவனுக்கு அவளறியாது அன்று அள்ளிக்கொடுத்திருந்தாள் பெண். அவன் பெயரை கூட கேட்கவில்லை. இவள் யார் என எனக்கு சரியாக தெரியவில்லை, இவளுக்கு என்னை தெரியவில்லை. காரணங்கள் தெரியாது எரிச்சல் வந்தது.
காரணத்தை விட கட்டஞ்சாயா அவன் தலைவலிக்குத் தேவையாக இருக்க, சமையலறைக்குள் புகுந்தவன் டீ தயாரித்தான். தேயிலைத் துகளோடு அவன் மனமும் கொதிக்க, அப்பாவிற்கு அழைத்தான்.
“எங்கப்பா இருக்கீங்க?” என்று கேட்ட குரலே அவன் கோபம் சொல்ல, மழையில் சரியாக பாலச்சந்திரனுக்கு மகன் வார்த்தைகள் கேட்கவில்லை.
பாலச்சந்திரன், “என்னடா ஜெய்?” என்று மீண்டும் கேட்க
“எப்போ வீட்டுக்கு வரீங்க?” என்றான்.
“வந்துட்டே இருக்கோம், Lockhart(லாக் ஹார்ட்) எஸ்டேட் வந்துட்டேன் டா ஜெய். என்ன விஷயம்?” என்ற அப்பாவின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை ஜெய். போனை வைத்துவிட்டான், வரும்போது அவரை டென்ஷன் செய்ய வேண்டாம் என்ற எண்ணம்.
அவரோ மகன் வினயனிடம், “வினய்! ஜெய் போன் பண்ணினான், என்ன விஷயம் கேட்டா சொல்லாம வைச்சிட்டான், மழையில பேசுறதும் சரியா கேட்கல” என்றதும்
வினயன் அப்பாவிடம், “என்ன சொல்லியிருப்பான்? மழையில பத்திரமா வாங்கனு சொல்லியிருப்பான்ப்பா, அரை மணி நேரம் போயிடலாம். அவன் வந்துட்டான் போல” என்றான். பாலச்சந்திரன் முகம் டென்ஷனாக இருக்க,
“அந்த பொண்ணு வந்தா பார்த்துக்கலாம்ப்பா, பேசிக்கலாம்” என்று சமாதானம் சொன்னான்.
“சமாளிச்சிக்கலாம்பா” என்ற வினயன் காரை கவனமாக செலுத்தினான்.
இங்கு வீட்டில் பாத்ரூம் சென்ற ஊர்மிளாக்கு அழுகையாக வந்தது. சில நிமிடங்கள் அழுதவள், குளித்து உடைமாற்றி அறைக்கதவை திறந்தாள். மழை அந்த நடுமுற்றத்தின் வழியே பெய்து கொண்டிருக்க, மழையை பார்த்தபடி டீயைப் பருகினான் ஜெய்ச்சந்திரன். கதவு திறக்கும் ஓசையில் திரும்பியவன், ஊர்மிளாவை நோக்கி நடந்தான்.
கையில் ஆவி பறக்க பால் இல்லாத தேனீர் இருக்க, அதனை ஊர்மிளாவிடம் நீட்டினான்.
“இல்லை, வேண்டாம்” என்று மறுத்தாள். அவளுக்கு ப்ளாக் டீ குடித்து பழக்கமில்லை.
“ட்ராவல் பண்ணி வந்திருக்க, எதாவது குடிக்கணும். சாப்பிட ரெடி பண்றேன், இதை குடி ஊர்மி” என்று அழுத்தி சொல்ல
அப்போதுதான் ஜெய் தன்னை பெயரிட்டு அழைப்பது உரைத்தது, அவன் அப்பா சொல்லியிருப்பார் என்று அவளே நினைத்தாள்.
“இல்லை, எனக்கு பழக்கமில்லை. தண்ணி கொடுங்க போதும்” என்றாள். அவள் விழிகள் வாசலையே நோக்க,
“ஹில் ஸ்டேஷன், மழையில வர லேட்டாகும். பக்கத்துல வந்துட்டாங்க” என்ற ஜெய் அவளுக்கு குடிக்க வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தான். ஊர்மிளாவை ஏற்கனவே நிழலாய்ப் பார்த்திருந்தாலும் நிஜத்தில் ஆராய்ந்தான் ஜெய். ஊர்மி வலக்கையை இடக்கையினால் மூடி, பதட்டமாக தட்டிக்கொடுத்து வேடிக்கைப் பார்த்தாள்.
‘அச்சச்சன் மாதிரி பண்றா’ என்று ஜெய் நினைக்க, அதை ஊர்மிளாவிடம் சொல்லியிருந்தால் அவ்வளவுதான். அவன் பேசாமல் இருந்ததால், அன்று ஊர்மி இருந்த மன நிலைக்கு தப்பித்தான். ஜெய் வெந்நீர் கொடுக்க, ஊர்மிளாவுக்கு இருந்த தொண்டை வலிக்கு இதமாக உள்ளிறங்கியது, ஆனாலும் புது ஊரின் தண்ணீர் கொஞ்சம் பிடிக்கவில்லை.
ஜெய்க்கும் அன்று வேலையில்லை, வானிலை அறிக்கையை முன்பே பார்த்துவிடுவதால் அன்று சுற்றுலா பயணிகளுக்கு டிரெக்கிங் ஏற்பாடு செய்யவில்லை. அமைதியாக அவனும் அப்பாவுக்காகக் காத்திருந்தான், ஊர்மிளாவை உட்கார சொல்ல அவளும் உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் களைப்பில் கண்ணயர்ந்து போனவள், உட்கார்ந்தபடியே உறங்க பார்த்த ஜெய்க்குக் கஷ்டமாக இருந்தது. எழுப்பலாம் என்று நினைக்க, காரின் சத்தம் கேட்டது. அப்பாவும், வினயனும் உள்ளே வர, இவன் ‘படித்துரா’ தூணை ஒற்றைக் கையால் பற்றி, இறுக்கமாக நின்றான். ஊர்மிளா இன்னும் விழிக்கவில்லை.
“என்னடா இங்கயே நிக்கிற?” என்று பாலச்சந்திரன் மகனை கேட்க
“உங்களைப் பார்க்க உங்க ப்ரண்ட் பொண்ணு வந்திருக்கா” என்றதும் அவர் விழித்தார்.
“ராஜீவன் மாமா பொண்ணு!” என்றான் அப்பாவை ஆழம் பார்த்து.
வினயன் இயல்பாக, “பிந்து வந்திருக்காளா?” என்று கேட்க,
“ஊர்மிளா!” என்று அவன் அழுத்தி சொல்ல, வினயனும் பாலச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“அப்போ இரண்டு பேரும் கூட்டு களவாணிங்க” என்று முறைத்தான்.
“அதில்லடா ஜெய், நான் சொல்றேன் கேளேன்” என்று அவர் ஆரம்பிக்க, ஊர்மிளா பேச்சு சத்தத்தில் விழித்து, சட்டென்று எழுந்து நின்றாள்.
அப்பாவையும் தம்பியையும் முறைத்த ஜெய் உள்ளே போக, ஊர்மிளாவைப் பார்த்து அதிர்ந்தார் பாலச்சந்திரன். அவள் முன் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“வாம்மா! எப்படி இருக்க?” என்று நலம் விசாரிக்க, மற்ற நேரமாக இருந்தால் ஊர்மிளா உள்ளத்து அன்பினை எதிரே இருப்பவரை உணரச் செய்திருப்பாள். ஆனால் இன்றோ?!
“உங்க ப்ரண்ட் எப்போ வருவார் அங்கிள்?” என்றாள் நேரடியாக. அந்த தாக்குதலில் பாலச்சந்திரன் அதிர, ஜெய்ச்சந்திரனோ பேசாமலே அப்பாவை பார்த்தான். அவன் முற்றத்து தூணை பிடித்தபடி, இவர்களை பார்த்த பார்வையில் யாரை சமாளிப்பது என்றே பாலனுக்குத் தெரியவில்லை.
“வருவான்மா, அவன் இன்னும் எனக்குக் கூப்பிடல. நீ வரேனு சொல்லலயேம்மா?” என்று ஊர்மிளாவை கேட்க
“இதுவே லேட் அங்கிள், உங்க ப்ரண்ட் என்னை பார்க்கணும். இல்லை அவரை பார்க்க நான் காஷ்மீர் போறேன்” என்று ஊர்மிளா பிடிவாதமாக சொன்னாள். காஞ்சியில் இருந்து தேவிகுளம் வரவைத்தது அந்த பிடிவாதம்தானே? ராஜீவனை பார்க்காது, அவரை கேள்விகள் கேட்காது அவள் மனதின் அலை ஓயாது!!
பாலச்சந்திரனுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில், இது வேறா என்று தோன்றியது. இந்த பெண்ணின் பிடிவாதம் பார்க்க, அச்சுதனையும் ராஜீவனையும் பார்ப்பது போலவே இருந்தது. கத்தாமல், கரையாமல் அழுத்தம்!!
ராஜீவனுக்கு பெண் இருப்பதே நேற்றுதான் பாலச்சந்திரனுக்கே தெரியும், இன்று நேரில் வந்து நிற்கிறாள்.
“அடே ராஜீவா! உன்னை நான் கொல்லப்போறேன்” என்று மனதில் நண்பனை வறுத்தார்.
“என்னம்மா தனியா அவ்வளவு தூரம் போவியா? அவன் வரேனு சொன்னா வருவான், கொடுத்த வார்த்தையை ராஜீவன் மீற மாட்டான்! நீ சாப்பிட்டியா?” என்று அவர் உபசரிக்க, ஜெய்யிடம் பார்வை போகவில்லை. அவனை, அச்சுதனை எல்லாம் சமாளிக்க வேண்டும் என்று நினைத்தாலே ஊரை விட்டு ஓடிவிடலாம் போல இருந்தது.
“இல்ல அங்கிள், எனக்கு அவரை பார்க்கணும்” என்று மீண்டும் சொல்ல ஜெய் கடுப்பானான். அவள் களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது, நேற்று இரவு பூனைக்குட்டியைப் புன்னகையோடு கொஞ்சிய அவள் முகம் ஜெய்ச்சந்திரனின் மனதில் ஆழ பதிந்திருந்தது. இன்று இந்த முகம் உவப்பாக இல்லை.
“காஷ்மீர்ல இருந்து அவர் வரவரைக்கும் சாப்பிடாம இருப்பியா?” என்று ஜெய் அதட்டலாகக் கேட்க
“நான் லஞ்ச் சாப்பிட்டேன்” என்றாள் ஊர்மிளா.
“சரிம்மா, நீ ரெஸ்ட் எடு! நம்ம பேசுவோம்” என்று பாலச்சந்திரன் சொல்ல, ஊர்மிளா தயங்கி நின்றாள்.
“போம்மா, ராஜீவன் வருவான்” என்று சொல்ல ஊர்மிளாவும் அறைக்குள் சென்றான்.
பாலச்சந்திரனை ஜெய் அசராமல் பார்க்க, அவருக்கு இந்த சூழலை எப்படி தீர்க்க என்று தெரியாமல் நின்றார்.
வினயன் உடனே,
“ஜெயேட்டா! அது பிந்து இருக்காளே அவ நம்ம விஜயனோட லவ்வர்!” என்றதும் ஜெய் அதிரவில்லை. ஊர்மிளா வந்ததுமே இப்படி எதாவது இருக்கும் என்று ஊகித்திருந்தான். அதிலும் பிந்து அச்சுதனை போல, அச்சம்மாவை போல கொஞ்சமும் இல்லை, அம்மா சாயல் என்று நினைத்தான்.
“ராஜீவன் மாமா லவ் பண்ணினாருனு அச்சச்சன் அவரை அரக்கபறம்பில் உள்ள சேர்க்கல. மொத்தமா ஒதுக்கிட்டார், விஜயனை அப்படி செஞ்சா அவனுக்குத் தாங்க முடியாது, ராஜீவன் மாமா வைஃப் இறந்துட்டாங்க, அவருக்கு யாருமில்லைனு ஒரு இரண்டு வருஷம் முன்னாடி அப்பாவுக்குத் தெரிஞ்சது. ரொம்ப வருஷம் கழிச்சு அப்பா டெல்லி போனப்போ அவரை மீட் பண்ணும்போது சொல்லியிருக்கார். அது விஜயனுக்கும் தெரியும், பிந்துவுக்கு யாருமில்லை. அவ ஆர்ஃபன், அச்சச்சன் நிச்சயம் லவ் மேரேஜ் ஒத்துக்க மாட்டார், அவன் அப்பா கிட்ட ஹெல்ப் கேட்டான். பிந்துவை யாருமில்லாத ராஜீவன் மாமா பொண்ணு சொல்லிட்டா, அவளை சேர்த்துப்பார். அவங்களுக்குக் கல்யாணம் பேசி, பிந்துவை பிடிச்சிட்டா அப்புறம் உண்மை தெரிஞ்சாலும் பிரச்சனை இல்லை. அப்பாவுக்கும் ராஜீவன் மாமா தனியா இருக்கிறது வருத்தம். எல்லாருக்கும் நல்லதுனு அப்பா பொய் சொல்ல ஒத்துக்கிட்டார்.” என்று வினயன் எல்லாம் சொல்லி முடிக்க, ஜெய் ஒற்றைக் கையால் தலையைத் தேய்த்தான்.
“உங்க ட்ராமா திறமை எல்லாம் இதுல காட்டியிருக்கீங்க? இல்லப்பா?” என்று ஜெய் பாலனை கேட்க
“டேய்! அவன் தனியா இருக்கான், இப்படியாச்சும் குடும்பத்தோட சேரட்டும்னு அக்கறையில செஞ்சேண்டா.” என்று பாலச்சந்திரன் விளக்கம் சொல்ல
“போதும்பா! புதுசா உறவுனு ஒரு பொண்ணு வந்தா டி.என்.ஏ டெஸ்ட் கூட எடுக்காம அச்சச்சனும் அச்சம்மாவும் நம்பினாங்களே, ஏன்? ஏன்னா கொண்டு வந்தது அவங்க பாலச்சந்திரன்! அந்த நம்பிக்கையை உடைச்சிட்டீங்க! விஜயன் சொன்னா உங்களுக்கு எங்க போச்சு அறிவு? ப்ரண்ட் தனியா இருந்தா, அவர் முயற்சி செய்யணும்.” என்று ஜெய் அப்பாவிடம் கோபத்துடன் கேட்டான்.
“அடேய் ஜெய்! விஜயன் அப்பா இல்லாத பையன், நீங்க என் அச்சனிடத்தில் இருந்து இதை செய்யணும், அச்சச்சனை மீறுற தைரியம் இல்லனு கெஞ்சினான். என்ன நஷ்டம்னு நானும் ஒத்துக்கிட்டேன், இந்த ராஜீவனை நம்பி செஞ்சது என் தப்பு!” என்று அவரும் கோபமாக பதில் சொன்னார்.
“அது இருக்கட்டும், அப்போ இந்த ஊர்மிளா யாரு?”
“இவதான் ராஜீவனோட பொண்ணு! ராஜீவன் வைஃப் பிரசவத்துல இறந்துட்டாங்க. இவளை ராஜீவன் ப்ரண்ட் பிரபாகரன் வளர்த்திருக்கார். அந்த பொண்ணுக்கு இப்போதான் உண்மை தெரியும் போல, அதான் ராஜீவனை பார்க்கணும்னு கிளம்பி வந்துட்டா” என்றதும்
“எண்டே அம்மோ!(ஓ மை மதர்!!- அய்யோ அம்மா!)” என்று தலைசுற்றிப்போனான் ஜெய்.
“அப்போ உங்க ப்ரண்ட் ஏன் பொய் சொல்லணும்?” என்று ஜெய் கேட்க, பாலச்சந்திரன் “தெரியலடா” என்றார் சோர்வாக.
சோர்வாக மகன் பின்னால் பார்த்தவர் அதிர்ந்தார். ஊர்மிளா எல்லாவற்றையும் கேட்டிருந்தாள், குடிக்க தண்ணீர் எடுக்க வந்தவள் வினயன் பேசவும் அப்படியே நின்றுவிட, இவர்கள் பேச்சில் கவனிக்கவில்லை. ஊர்மிளாவிற்கு இன்னும் இன்னும் கோபம் வந்தது, ஆனால் இவர்கள் யாரோ, இவர்களிடம் எப்படி காட்ட?
“உங்க் ப்ரண்ட் மாதிரி நீங்களும் பொய் சொல்லியிருக்கீங்க, இல்ல அங்கிள்?” என்று கோபமூச்சு விட்ட ஊர்மி,
“எனஃப்! நான் யாரையும் நம்புறதா இல்லை. உங்க ப்ரண்ட் அப்பா அம்மா இங்கதானே இருக்காங்க? நானே விசாரிச்சுக்கிறேன், எல்லா உண்மையும் அவங்களை கேட்டு தெரிஞ்சிக்கிறேன்” என்றவள் அறைக்குள் சென்று தன் பையை எடுத்தபடி வேகமாக வெளியே வர, பாலச்சந்திரன் திகைத்தார்.
“நான் சொல்றதை கேளும்மா! உன் கோபம் புரியுது, எல்லாருக்கும் ஒரு நியாயம் இருக்கும்! கொஞ்சம் பொறுமையா நம்ம பேசுவோம்” என்று அவளிடம் பேச, ஊர்மியோ
“எல்லாருக்கும் நியாயம் இருந்தா அநியாயம்னு ஒன்னு ஏன் இருக்கு அங்கிள்? உங்களை எனக்கு நேத்து வரைக்கும் தெரியாது! எனக்கு உங்க கூட பேச ஒன்னுமே இல்லை, நான் எனக்கு சம்மந்தப்பட்டவங்க கிட்டயே பேசிக்கிறேன்” என்று வேகமாக அடியெடுத்து வைக்க, பாலா இயலாமையுடன் பார்க்க, ஜெய் சட்டென்று ஊர்மிளாவின் முன் நின்றான்.
“அவசரப்பட்டு எதுவும் செய்யாத ஊர்மி! பொறுமையா பேசலாம், உள்ள போ” என்று அழுத்தி சொல்ல, இவன் யாரு என்று அவளுக்கு எரிச்சல் மிகுதியானது.
“மைண்ட் யுவர் பிஸ்னஸ்!” என்று சீறிய ஊர்மிளா, தன் சொல்பேச்சு கேட்மாட்டாள் என்று ஜெயனுக்குப் புரிந்தது. ஏற்கனவே நிறைய குழப்பங்கள், பொய்கள்… இவள் எதாவது பேச போய் இன்னும் பெரும்பிரச்சனை ஆகிவிட கூடாது என்று ஜெய் நினைத்தான்.
ஊர்மிளா முற்றத்தைக் கடக்க நினைக்க, ஜெய் விடவில்லை. அழுத்தமாக அவள் கரத்தைப் பற்றி அறையை நோக்கி இழுத்தான்.
“ஜெய்!” என்று பாலா மகனை அதட்ட, வினயனும் “ஜெய் என்னடா?” என்று கத்தினான்.