ஹென்றி நாட்டை விட்டு சென்று மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. எப்படி ஒவ்வொரு நாளும் மித்ரங்காவிற்கு கழிந்தது என்று கேட்டால்…!? அவளுக்கு தான் செய்ததாக ஒரு விடயம் கூட சொல்வதற்கு இருக்காது. ஏனெனில் அறையை விட்டே அவள் வெளிவரவில்லையே!
.
தன் தனிப்பட்ட வேலைகளை கூட ஏதோ இயந்திரகதியில் தான் செய்வாள். கணவன் நொடிக்கூட பிரியாது, அருகேயே இருந்து சுகம் காட்டிவிட்ட பலன், இப்போது அவனில்லாமல் உலகமே இயங்காததை போன்று ஒரு வெறுமையை அவளுக்கு இட்டது.
வேளைத்தவறாது உணவுகள் அவளை தேடியே வந்துவிடும். உண்ணவே மனமில்லை என்றாலும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவுக்காக உண்பாள். சில நேரம் அதுக்கூட இருக்காது! இப்படியே இன்னும் எத்தனை நாட்கள் கழிந்திருக்குமோ!? அன்று காலை கண்விழித்தது முதலே ஹென்றியின் நினைவுகள் என்றைக்கும் இல்லாததாய் அதிகமாய் அவளை வாட்ட, அவன் அதிகம் புழங்கும் அவன் ஆய்வகத்தில் அவன் வாசம் தேடி ஓட சொல்லி உந்தியது மனம்!
மனம் ஏதோ அவனையே காணப்போவதாக எண்ணி உவகைக்கொள்ள, அவசர குளியலோடு தன்னை மிதமாய் அலங்கரித்துக்கொண்டு பல நாட்களுக்கு பின் தன் அறை கதவை திறந்தாள்.
தன் அரண்மனையே தனக்கு புதிதாய் தெரிந்தது. வெகு நாட்களுக்கு பின் சில அடிகள் நடப்பதாலோ என்னவோ அவளால் முன்னைப்போல சுறுசுறுப்பாய் எட்டு வைக்க முடியவில்லை. படிகளில் அவள் மெல்ல இறங்கிவரும்போது கீழே தன் இருக்கையில் இருந்து வேலை செய்துக்கொண்டிருந்த ஆண்டனியின் கண்கள், தன்னியல்பாய் மேல்நோக்க, அங்கே முழு மூன்று மாதங்களுக்கு பிறகு, மித்ரங்காவை கண்ட மாத்திரத்தில், விரிந்த அவன் விழிகள் அதிர்ச்சியை பிரதிபலிக்க, தன்னால் அவன் இருக்கை விட்டு எழுந்தான்.
அவனை கண்டதும், உடலில் இருந்த கொஞ்ச சோம்பல் கூட ஓடி சென்று அவளுடைய இயல்பான மிடுக்கை அவளுக்கு கொண்டு வந்தது. அவனை ஒரு அலட்சிய பார்வையோடு கடந்தவள் கால்கள், அடுக்களையில் கேட்ட பேச்சுக்குரலில் கவனம் பெற, ‘கொண்டவன் இல்லையென்றால் இப்படிதான்!’ என்று கோபத்தோடு அவர்களை பேச்சை விடுத்து வேலையை கவனிக்க சொல்ல சென்றவளின் கால்கள் அப்படியே வேரோடி போய் நின்றுவிட்டன.
அவள் காதில் விழுந்த பேச்சு அவளை இயங்கவிடவில்லை.
“நிஜமாக தான் சொல்கிறாயா அக்கா? அத்தனை மோசமாகவா இருந்தது?” ஒருத்தி கேட்க,
“மோசமாகவா? அதைவிடவே மோசம்! ராணியின் முகத்தை காண சகிக்கவில்லை. எத்தனை அலட்டல் தான் அழகி என்று!? இவள் வனப்புக்காக தான் அந்த ஆங்கிலேயன் இவளை கொணர்ந்ததே! திரும்பி வருபவன், இவள் முகத்தை கண்டான் என்றால், தலைதெறிக்க தன் சொந்த நாட்டுக்கே திரும்பி ஓடிவிடுவான்!” என்றவள் குலுங்கி சிரிக்க, கூடவே சிரித்த முன்னவளும்,
“எனக்கும் அவரை பார்க்க வேண்டும் போல உள்ளதே!” என்றாள் சிரிப்பும் ஆர்வமுமாய்.
“அதற்கென்ன? இன்று காலை உணவை நீ எடுத்துச்செல்!” என்றாள் மற்றவள்.
அந்த இருவரும் பேசிக்கொண்டதை கேட்டவளுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை. மெல்ல கையுயர்த்தி தன் முகத்தை தொட்டுப்பார்த்தாள். ஏதோ சொரசொரப்பாக இருந்ததை போல தெரிந்தது. அப்போது ஹென்றி அவளுக்காக தருவித்துக்கொடுத்த கண்ணாடி நினைவு வர, வேகமாய் அவ்விடம் விரைந்தாள்.
ஆண்டனிக்கு சற்று அருகில் இருந்த அந்த கண்ணாடி முன்னே நின்றவளுக்கு, அதிர்ச்சியில் நெஞ்சடைக்கும் உணர்வு.
அவள் கன்னத்தில் ஒரு இடம் விடாமல் அத்தனை கொப்புளங்கள், காய்ந்த வடுக்கள், இளஞ்சிவப்பிலான மேடுகள். கன்னம் தாண்டி நெற்றிக்கு கூட பெயர்ந்துவிட்டது போலும். அவள் முகமே அவள் கண்களுக்கு விகாரமாய் தெரிந்தது.
அதைவிட அவள் உடல்!? வயிறு முன்னோக்கி புடைத்திருக்க, அது அவளின் சிசுவை நினைவுப்படுத்தினாலும், அவளின் கவர்ச்சியான அங்க வளைவுகள் எங்கே போனதென்றே தெரியவில்லை. மொத்தத்தில் பிரபஞ்ச அழகியாக இருந்தவள், இப்போது பெயரளவில் கூட அழகியாக இல்லை.
பார்க்க பார்க்க அழுகையும் ஆத்திரமும் கிளம்பியது. அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் குறித்துக்கொண்டிருந்தான் ஆண்டனி. அவன் வேலையே அதுதானே!!!
தன் தோற்றத்தை தானே காண சகியாதவள், ஆத்திர மிகுதியில் தவித்தாள். அடுத்து என்ன செய்வதென தெரியாது திணறினாள்.
‘உன் அழகு முகத்தை தரிசிக்காமல் என் நாட்கள் எப்படித்தான் விடியப்போகிறதோ!?’ என்று ஹென்றி ஏக்கத்துடன் சொல்லி சென்றது வேறு அகால ஒலியாய் கேட்டு அவளை இம்சித்தது.
‘இல்லை… இல்லை… இது நானே இல்லை… இந்த முகம் என்னுடையது இல்லை… எனக்கு இது வேண்டாம்… வேண்டவே வேண்டாம்!’ மனது ஓலமிட, என்ன செய்கிறோம் என்றே அறியாமல் அருகே கைக்கு கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து, தரையோடு தட்ட, அது சில்லுசில்லாய் உடைந்தது.
அதில் ஒரு துண்டை எடுத்து தன் முகத்தில் கிழிக்க அவள் இட்டுசென்றதை, கணநேரத்தில் யூகித்து, வேகமாய் வந்து அவள் கரத்தை பற்றினான் ஆண்டனி. சத்தம் கேட்டு மற்றவர்களும் வந்துவிட, அவள் செய்கை கண்டு அதிர்ந்து நின்றனர்.
“விடு… என்னை விடு!” கைகாலை உதறிக்கொண்டு கத்தியவள், அவன் பிடி இளகாமல் இருக்க, வேறு வழியின்றி அழுகையோடு மடிந்து அமர்ந்தாள். அவள் அமரவும் அவள் கரத்தை அவன் விட, திடீரென ஆவேசம் கொண்டவள் போல, இருகைகளாலும் தரையை ஆங்காரமாய் அவள் அடிக்க, உடைந்த துண்டுகள் எல்லாம் அவள் கரங்களை பதம் பார்த்து ரத்தத்தை கொட்டியது.
ரத்தம் தோய்ந்த கரங்களை முகத்தில் அடித்துக்கொண்டு அழுதவளை காண அங்கிருந்த அனைவருக்குமே மனம் கனத்தது. அவளை பகடி பேசிய பெண்கள் கூட அவளை பாவமாக பார்த்தனர்.
வெகு நேரம் அழுதவள், அப்படியே அரை மயக்கத்திற்கு சென்றுவிட, அவள் கரங்களுக்கு மருந்திட்ட ஆண்டனி, அவளை அறைக்கு கொண்டு செல்ல பணிந்தான்.
“அடிப்பாவி!!! வெறும் சாதாரண பிக்மெண்டேஷன் பிரச்சனை… அதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்!?” சம்யுக்தா வாயை பொத்திக்கொண்டு வியப்பாய் கேட்க,
“இப்போதான் அது சாதாரண பிக்மெண்டேஷன்… அந்த காலத்துல அவங்களுக்கு அது வியாதி மாதிரி தானே!?” என்றான் பிரஷாந்த். வித்தகனும் ஆமோதிப்பாய் தலையாட்ட, “பாவம் ல ராணி!” என்றாள் பவித்ரா, முகத்தை சுருக்கிக்கொண்டு.
“பாவம் இல்ல, பைத்தியம்!” வெடுக்கென சொன்ன பிரஷாந்த், அடுத்த பக்கத்தை புரட்ட, அங்கே ஒன்றுமேயில்லை. அவன் மேற்கொண்டு இருந்த சில பக்கங்களையும் புரட்ட, எழுத்துகள் இல்லா வெற்றிடமே காட்சி தந்தது.
“இதென்ன பாகுபலியாடா? பார்ட் டூ எல்லாம் எழுத!?” பிரஷாந்த் கேட்டதும், “ஏய், கொஞ்சம் பார்த்து பேசு! நம்ம எங்க என்ன நிலைமைல இருக்கோம்ன்னு மறந்துட்ட போல நீ!” சம்யுக்தா எச்சரித்ததும் தான் அவனுக்கு அவர்கள் நிலையே நினைவு வந்தது.
“கண்டிப்பா இதுக்கு தொடர்ச்சி இருக்கும்! இந்த வீட்ல தான் இருக்கணும் அது!” வித்தகன் சொல்ல, “நீ மறுபடியும் கேளேன்! தூக்கி போடுவாங்கல்ல?” என்றாள் பவித்ரா.
இரு ஆண்களும் அவளை முறைக்க, “ஈசி மெதட்’ன்னு சொன்னேன்!” என்றாள் முனகலாய்.
“நமக்கு வேற வழி இல்லை! இங்க என்ன நடந்துச்சுன்னு தெளிவா தெரிஞ்சா தான் இங்கிருந்து நாம எப்படி வெளில போக முடியும்ன்னு யோசிக்கவே முடியும்! அதுக்கு அந்த இன்னொரு புக் ரொம்ப அவசியம்! நம்ம ரெண்டா பிரிஞ்சு ஒவ்வொரு இடமா தேடுவோம்!” என்றான் வித்தகன்.
“கரெக்ட்டு! நான் உன்னோட வரேன்!” பிரஷாந்த் வித்தகனுடன் நிற்க, இருபெண்களும் பீதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“நாங்க எப்படி போவோம்? எங்களால முடியாது” ஒருசேர இருவருமே சொல்ல, பின்பு ஆணொன்று பெண்ணொன்றாக பிரிந்து செல்ல முடிவானது.
வெகு நேரம் ஆகிவிட்டதால் நால்வரும் பசியை அடக்க சற்று செறிவூட்டப்பட்ட நீரை உள்ளே தள்ளிக்கொள்ள, “சம்மு, வா!” என்றான் வித்தகன்.
அவள் அசையாது நின்றாள். அதை கவனியாதவன், அவள் கரத்தை பற்றிக்கொண்டு மாடியேற நகர, அவள் அப்போதும் அசைந்தாளில்லை.
“என்னாச்சு? வா! நம்ம மேல தேடலாம்! இவங்க கீழ தேடட்டும்!” என்றவன் சொல்ல, மெதுவாய் அவனருகே சென்று அவனது முகத்தை ஏறிட்டவள், தன் கரத்தை மிக மெதுவாய் அவன் கரத்தில் இருந்து விலக்கிவிட்டாள்.
அவன் முகத்தில் கேள்விக்கோடுகள் அதிகரிக்க, “நீங்க பிடிக்க வேண்டிய கை என்னோடது இல்ல! என் கையை நீங்களா விடவும் இல்ல! இப்பவும் எனக்கு உங்களை பிடிக்கும்! நம்ம கடைசி வரைக்கும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாம நண்பர்களா இருப்போம்! நோ மோர் ரெக்ரட்ஸ்” என்றவள், திரும்பி செல்ல… அவன் கரம் அவள் கரத்தை பற்றியது.
“புரியல!” என்றான் வித்தகன் ஒற்றை வார்த்தையாய். உண்மையில் அவள் சொன்னது விளங்கியது தான்! நிச்சயத்தை ரத்து செய்கிறாள் என்று புரிந்தது. ஆனால், அதை நம்ப தான் இயலவில்லை.
“உங்களுக்கு புரிஞ்சுது ஜி!” என்றவள், அவன் கரத்தை அழுத்த, ஏதோ அதில் தட்டுப்பட்டது. அவள் கரத்தை விடுத்து, அவன் தன் உள்ளங்கையை விரித்துப்பார்த்தான். அதில் அவள் விரலில் தான் அணிவித்த மோதிரம் இருக்க, ‘நிஜமாகவே எல்லாம் முடிந்துவிட்டதா?’ என்ற அதிர்வோடு பார்த்தான் அவளை.
அதிர்ச்சி இருந்ததே ஒழிய, வருத்தம் இல்லை! என்னவோ ஒரு ஆசுவாசம்! மனதை அழுத்திக்கொண்டிருந்தது விலகிவிட்டதை போன்றதொரு பிரம்மை.
அவன் தன் உள்ளங்கையை பார்த்தது பார்த்தபடி நிற்க, அவன் தோளில் மெல்ல கரம் வைத்தாள் பவித்ரா.
“போலாமா?” அவள் கேட்க, சிறு தலையாட்டலுடன் அங்கிருந்து மாடி படிகளில் ஏறினர்.