ஆண்டனி ஹென்றிக்கு தகவல் அனுப்பி ஒரு வாரக்காலம் கடந்திருந்தது.
செவ்வியை பற்றி ஒருநாள் ராணியிடம் கேட்டிருந்தான் ஆண்டனி. அதற்கு அவளோ, “என்ன? காணாமல் போய்விட்டாளா? அச்சச்சோ! எனக்கு தெரியாதே! நான் என்னவென்று பார்க்க சொல்கிறேன்!” என்றாள் வருத்தமாய்.
ஆண்டனிக்கு ஒன்றுமே புரியவில்லை. செவ்வி இறுதியாய் சந்தித்தது ராணியை தான் என்று அவள் தங்கை அலர் சொல்ல, அதை பற்றி ஒரு வார்த்தை கூட ராணி பேசவில்லை. போதாததற்கு அவள் காணாமல் போனதே தெரியாது என்று சொல்கிறாளே! ஆனால், அலர் ராணியிடம் முறையிட்டதாக தானே சொன்னாள்!?
எல்லாம் யோசித்து யோசித்து குழப்பம் தான் கூடிப்போனது ஆண்டனிக்கு. ராணியின் பேச்சை மீற முடியாமல், அவள் அறியாது ஆங்கிலத்தில் அவன் நிகழ்வதை எழுத்தாக்க, அதையும் ஒருநாள் கண்டுக்கொண்டவள் சினம் கொண்டாள்.
“இன்னொரு முறை இப்படி ஒரு தவறை செய்தாய் என்றால், அது தான் உன் இறுதி நாளாக இருக்கும்… என்னை சீண்டிப்பார்க்காதே!” என்று மிரட்டிவிட்டே சென்றாள்.
ஆண்டனிக்கு எப்போது ஹென்றி வருவான், அவனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு இங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது.
இப்போதெல்லாம் ராணி அதிக நேரம் அந்த ஆய்வகத்துக்குள்ளே அடைந்துக்கிடக்க, அவனுக்குள் வலுவாக மனம் நெருடியது. ஏதோ துர்நாற்றம் கூட மெலிதாக வருவதை போன்றதொரு பிரம்மை!
ஆய்வகத்தை துப்புரவு செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்று ஒருநாள், வேலையாள் ஒருத்தி கேட்டதற்கு கூட, அத்தனை கோபம் கொண்டு, ‘நான் சொல்லும் அலுவலை மட்டும் பார்’ என்று கத்தியிருந்தாள் ராணி!
அன்று பொழுது புலர்ந்த நேரம், கையில் சிறு பெட்டியுடன் இறங்கி வந்த ராணி, வீட்டின் அத்தனை வேலையாட்களையும் வர சொல்லி பணிந்தார். ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டு காசுகளை கொடுத்தவள், குறிப்பிட்ட நால்வரை தவிர்த்து மீதமிருந்த அத்தனை பேரையும் வேலைநீக்கம் செய்திருந்தாள்.
அதிர்ந்து போனவர்களுக்கு தைரியமாய் ‘ஏன்?’ என்று காரணம் கூட கேட்க முடியாது போனது. அவள் முகமும் தோரணையும் அவர்களை பல அடிகள் எட்டி நிறுத்தியது. ஆண்டனி அவளிடம் மெதுவாய் வினவியபோது,
“இது என் கோட்டை! என் அரண்மனை! யார் இருக்க வேண்டும், இல்லாமல் போக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது!” என்றாள் அதிகாரமாய். அவள் பேச்சிற்கு வேறு உள்ளார்த்தம் இருக்குமோ என சந்தேகம் கொண்டது ஆண்டனியின் மனம்!
அதன்பின்னே அந்த அரண்மனைக்குள் மொத்தமே ஐவர் தான், ராணியையும் சேர்த்து! சமையலுக்கு அலர், வீட்டை பாதுகாக்க ஒருவர், காவலுக்கு ஒருவர் என்று மூவர்… இவர்களோடு ஆண்டனி!
ஹென்றியின் இனத்தவனை, அவன் ஆசையாய் நியமித்தவனை அவன் இல்லாத நேரம் வெளியே அனுப்ப மித்ரங்காவிற்கு மனம் இல்லை.
நடப்பவை எல்லாம் ஒன்றுக்கொன்று முரணாக, விநோதமாக இருக்க, மித்ரங்காவிடம் சென்று, ‘எனது தாய்மொழியில் ஒரு புனைவு கதை எழுத எனக்கு அனுமதி வேண்டும்! வேலையின்றி சோம்பிக்கிடக்க இயலவில்லை’ என்று வேண்டுதலாய் கேட்டு அனுமதி வாங்கியிருந்தான் ஆண்டனி.
அதன்பின்னே, ராணியின் கவனத்தை ஈர்க்காது, அவன் இங்கே நடப்பவைகளை பதிவு செய்ய ஆரம்பித்திருந்தான்.
வாசலுக்கு சென்ற அலர் வேகவேகமாய் உள்ளே ஓடி வந்தாள். அவளை மறித்த ஆண்டனி, “என்ன ஆகிற்று!?” என்றான் அவள் வேகம் கண்டு கேள்வியாய்.
பதட்டத்துடன், “காவலுக்கு இருக்கும் ரங்கையனை காணவில்லை” என்றாள்.
“காணவில்லை என்றால்? எங்கே போயிருக்க போகிறான்!? பக்கத்தில் எங்கேனும் உலவிவிட்டு வர சென்றிருப்பான்!” என்றான் அவன்.
“மூக்கனும் அவ்வாறு தான் நினைத்திருந்தானாம்! ஆனால், இன்று மாலை தொட்டும் அவனை காணவில்லை” என்று சொல்ல, “எப்போதிருந்து அவனை காணவில்லை?” என்று வினவினான் ஆண்டனி.
“நேற்று இரவில் இருந்தே காணவில்லையாம்!” என்றவளுக்கு வருத்தம் தான்! தொலைந்து போன தன் அக்காளே இன்னும் கிட்டவில்லை. இதில் இன்னொருவன் வேறு தொலைந்துப்போக, பயம் வேறு வந்தது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே வந்து நின்றாள் மித்ரங்கா! அவள் பார்வையே, ‘என்ன விஷயம்?’ என்று விசாரிக்க, அலர் சொன்னதை கேட்டவளோ, “அவன் தந்தை தவறிவிட்டதாக தந்தி வந்தது” என்றவள்,
“நான் தான் ‘போய்வா!’ என்று அனுப்பி வைத்தேன்!” என்று நிதானமாய் அழுத்தமாய் சொன்னாள்.
அதைக்கேட்டு ஆசுவாசமடைந்த அலர், நெஞ்சில் கைவைத்து பெருமூச்சுடன், “பயந்தே போனேன் ராணி! எங்கே என் அக்காள் போல அவனும் தொலைந்துவிட்டானோ என்று!” என்றாள்.
ஆண்டனி அவள் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, “உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா ராணி!?” என்றாள் அலர்.
அவளைக்கண்டு சிரித்தவள், “எனக்கு தேவை வரும்போது உன்னை அழைக்கிறேன்!” என்றாள் இன்முகமாய். ஆனால், அதுக்கூட ஆண்டனிக்கு வேறு பொருளாக தான் தோன்றி திகில் கொள்ள செய்தது.
மேலும் பல நாட்கள் கடந்து ஓடியது. ஆண்டனிக்கு அந்த அரண்மனைக்குள் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ விபரீதமாக நடக்கப்போவதாக அவனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.
இப்போது வீட்டில் வெறும் மூவர் மட்டுமே! காவலுக்கு இருந்த மூக்கன் விறகு வெட்ட சென்ற நேரம், காட்டெருமை தாக்கி இறந்து கிடந்தான். ஆட்கள் குறைந்துக்கொண்டே வருவது அவனுக்கு சொல்லத்தெரியாத படபடப்பை எந்நேரமும் கொடுத்தது.
அப்போது அலர் மாடியேற, “நில்… எங்கே போகிறாய்?” என்று தடுத்தான் ஆண்டனி.
“ராணிக்கு… பால் கொண்டு செல்கிறேன்!”
“அவர் கேட்டாரா?”
“இல்லை… நானாக தான்!” அவள் சொல்ல, “வேண்டாம்! போகாதே! இப்போது மட்டுமல்ல, என்னிடம் சொல்லாமல் இங்கு எங்கும் நீ செல்லக்கூடாது!” என்று அவன் சொல்ல, சிறு எரிச்சல் கொண்டவள்,
“பார்க்கிறீர் தானே!? இத்தனை பெரிய அரண்மனைக்குள் வேலைக்கு இருப்பது நான் ஒருத்தி தான்! நிமிடம் நிற்காமல் உழைக்கிறேன்! ஒவ்வொன்றையும் உம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்க முடியுமா என்ன!?” என்றாள். இத்தனை நாள் பழக்கத்தில் அவனிடம் இருந்த பயம் போயே போனது.
அவனோ, “சொன்னால்….கேள்! என்னிடம் சொல்லாமல் எங்கும் போகக்கூடாது!” என்றவன், “ராணியே அழைத்தாலும்!” என்று நிறுத்த, அவள் புருவங்கள் சுருங்கியது.
“பேச்சில் என் பெயர் அடிப்படுகிறதே! என்ன சேதி!?” என்று மேலிருந்து கேட்ட ராணியின் குரலில் இருவருக்குமே திடுக்கென்றானது.
“ஒன்றும் இல்லை ராணி! உங்களுக்காக பால் கொணர்ந்தேன்!” என்று அவளுக்கு கொடுத்தாள் அலர்.
எடுத்துக்கொண்டவள், ஆண்டனியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றாள். அந்த பார்வை கண நேரத்தில் அவனிடம் எதையோ உணர்த்தியதோ!? யோசனையில் நின்றவனுக்கு எப்படியேனும் அந்த ஆய்வகத்தை திறந்து பார்த்துவிட வேண்டும், தன் ஐயத்துக்கெல்லாம் விடை அதில் தான் உள்ளது என்று அவனுக்கு திடமாக தோன்றியது.
அன்று ஆண்டனிக்கு மிகவும் மகிழ்ச்சியான தினமாக அமைந்தது. சர் ஹென்றி எந்நேரமும் இங்கே வந்து விடுவார் என்று அவனுக்கு தெரியும்! ராணிக்கு தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தான் ஹென்றி.
இத்தனை நாட்களுக்கு பின் தன்னை காணப்போகும் தன் மனைவியின் உணர்ச்சிகளை நேர்க்கொண்டு பார்க்க வேண்டும் என்று பெரும் அவா அவனுக்கு.
அவன் இல்லாத நேரத்தில் அவள் அடைந்த இன்னல்கள் அவனை வெகுவாய் வாட்ட, இனி அவளை நொடியேனும் பிரியக்கூடாது என்று உறுதி பூண்டிருந்தான்.
ஆண்டனி வாசலை பார்த்தபடி எதிர்ப்பார்ப்போடு நிற்க, அவன் அருகே வந்த மித்ரங்கா, “யாரையும் எதிர்நோக்குகிறாயா?” என்றாள் கேள்வியாய். திடுமென அருகே கேட்ட குரலில் திணறினாலும், சமாளித்து, “ஆமாம்!” என்றான்.
“யார்?!” அவள் வினவ, அவன் பதில் உரைக்கும்முன்னே, வெளியே கேட்ட வாகன சத்தத்தில் எதிர்ப்பார்ப்பும் திகைப்புமாய் வாசலுக்கு ஓடினாள் மித்ரங்கா!
அங்கே நான்கு சக்கரங்கள் வைத்த வண்டி ஒன்றில் இருந்து சிரித்த முகமாய் இறங்கினான் ஹென்றி! அவனை கண்டதும் அவள் முகத்தில் அத்தனை பிரகாசம்! இத்தனை நாள் தொலைந்துப்போன தேஜஸ் கூட ஒருநாளில் மீண்டுவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு இந்த நொடி, அத்தனை அழகாய் மின்னியது அவள் வதனம்!
“ஹெ…ஹென்றி!” என்றவள், சிரிப்பும் அழுகையுமாய் ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொள்ள, அவளை மீறிய ஆசையோடும் அன்போடும் அவளை இறுக்கமாய் கட்டிக்கொண்டான் ஹென்றி. வந்த வண்டி திரும்பி சென்றுவிட்டதை கூட உணராது அங்கேயே நின்றிருந்தனர்.
ஆலம் கரைத்து கொண்டு வந்த அலரின் வருகை தான் அவர்களை சற்று மீட்டது. வீட்டுக்குள் கூட அவனை விட்டு இம்மியும் விலகாது ஓட்டிக்கொண்டே வந்தாள் மித்ரங்கா!
கூடத்தில் இருந்த மெத்தை இருக்கையில் இருவரும் அமர, அவர்களுக்கு முன்னே இதமான சூட்டில் பானங்கள் வைக்கப்பட்டது. அதன்பின்னே அவர்களுக்கு தனிமை கொடுத்து அலறும் ஆண்டனியும் தள்ளி சென்றுவிட்டனர்.
ஹென்றியின் நெஞ்சில் சாய்ந்திருந்தவள், “போதுமா? என்னை பிரிந்திருந்தது!?” என்றாள் தாங்களுடன்.
அவளை இன்னமும் நெஞ்சோடு இறுக்கியவன், “மரித்துக்கொண்டிருந்தேன்! உன்னை கண்டதும் தான் உயிர் திரும்பி வருகிறது!” என்றான்.
“பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது!” அவள் நொடிக்க, அவள் கழுத்தை பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தியவன், “வேறு எதில் குறைச்சலை கண்டாயாம்!?” என்றான் குறும்புடன். அத்தனை நெருக்கத்தில் வெகு நாட்களுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்திருக்க, மித்ரங்காவிற்கு அவனை காண காண திகட்டவில்லை. முன்பை விட பொலிவாய், பட்டை தீட்டிய வைரம் போல ஜொலித்தான் அவன்.
ஆனால், தன்னை நினைத்தவளுக்கு மனம் நொந்தது. முகமெங்கும் ஆங்காங்கே சிவந்து, தடித்து, மேடுபள்ளமாய்… உடல் வேறு முன்பை விட இருமடங்காய்…! அவளுக்கு கழிவிரக்கம் தோன்றியது.
சட்டென கண்கள் கலங்க, “எப்படி இருக்கிறேன்!? கொஞ்சமும் உங்களுக்கு பொருந்தாமல்…” என்றவளுக்கு விம்மல் வெடிக்க, அடக்கியவள், அவன் நெஞ்சோடு முகத்தை புதைத்துக்கொண்டாள்.
அவள் குனிந்த வேகத்தில் தன் இடக்கை கொண்டு அவள் முகம் தாங்கி நிமிர்ந்த்தியவன், அவள் கண்களை பார்த்து,
“வானில் உலவும் நிலவு, மெலிந்தாலும், வளர்ந்தாலும்… அதில் கலங்கங்கள் தெரிந்தாலும்… அழகுதான்! அந்நிலவிலும் மேலானவள் எம்ராணி! பேரழகானவள்… என்றுமே எம் கண்களுக்கு!” என்றான் நிறுத்தி நிதானமாய், அதற்கும் மேலே குன்றா காதலாய்.
அவன் பேச்சில் சிலிர்த்தவள், விம்மலோடு தாவி கட்டிக்கொண்டாள் அவன் கழுத்தை!!! இருவருக்கும் நடுவே எந்த இடைவெளியும் இன்றிப்போனது. அன்றிரவு முழுக்க, ஒருவரையொருவர் பிரிந்த காலத்தில் நிகழ்ந்ததை எல்லாம் பேசி பேசியே, இரவை விரட்டினர். பேச்சு வற்றும் நேரம், உதடு வியர்க்கும் அளவு முத்தங்கள் வீசப்பட்டது கணக்கின்றி!!!
***
“எங்கே போகிறீர்கள்?” ஆய்வக அறையின் ரகசிய திறப்பில் கைவைக்க போன ஹென்றியை வேகமாய் வந்து தடுத்தாள் மித்ரங்கா!
எழுந்த கை கீழ இறங்க, திரும்பிப்பார்த்தவன், “ஆய்வகத்துத்தான்! உள்ளே நுழைந்து எத்தனை திங்கள் கடந்துவிட்டது!?” என்றவன் குரலில் அவன் காதலியை காண துடிக்கும் ஏக்கம் தெரிந்தது.
“என்னைவிட எப்போதும் உங்களுக்கு ஆய்வகம் தானா முக்கியம்!? அதற்காக தான் என்னை தனியே விட்டு இத்தனை நாட்கள் வருத்தினீர்! இப்போதும் என்னை மறந்து ஆய்வு என்று மீண்டும் ஓட பார்ப்பது என்ன நியாயம்?” கோபித்துக்கொண்டு அவள் பேச, மறுநொடி அந்த இடத்தில் இருந்து வேகமாய் நகர்ந்து அவளை நோக்கி வந்து சேர்ந்தான் ஹென்றி!
“என்ன இது மித்ரா? உன்னை மறந்து நான் செல்வேனா? நீ சொன்னதற்காக தான் முன்பும் உன்னை தனியே விட்டு மனமின்றி சென்றேன்?” அவளது குற்றச்சாட்டில் திகைத்தவனாய் அவன் பேச, அவள் ஒன்றுமே சொல்லாமல் நின்றாள்.
அவளை நெருங்கி கரத்தோடு கரம் கோர்த்தவன், “என் மீது கோபமா என் ராணிக்கு?” என்றான், அவள் தாடையை ஒற்றை விரலால் உயர்த்தியபடி.
வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டவள் மௌனம் சாதிக்க, இன்னமும் நெருங்கியவன், “என்ன செய்ய வேண்டும் என் ராணியின் கோபம் தீர?!” என்றான் கொஞ்சும் குரலில்.
அடிக்கண்ணால் அவனை முறைத்தபடியே பார்த்தவள், “சொன்னால் செய்துவிடுவீர்களா?” என்றாள், ‘நீ செய்ய மாட்டாய்’ என்ற தொனியில்.
“கண்டிப்பாக… நீ சொல்லி தான் பாரேன்!” என்றான்.
“நான் சொல்லும்வரை ஆய்வகத்தின் பக்கமே போகக்கூடாது! என்ன? சம்மதமா?” சவால் விடுபவளாய் அவள் கேட்க ஒரே நொடி தாமதித்தவன், மறு கணமே, “உனக்காக எதையும் செய்வேன்! இது எம்மாத்திரம்!” என்றவன்,
“நீ சொல்லும்வரை இந்த பக்கமே வர மாட்டேன்!” என்றான். அவன் சொன்னதும் அவள் சந்தோசப்பட்டு சிரிக்க, அவனும் அவளை தோளோடு அணைத்துக்கொண்டு சிரிக்க, தன் இருக்கையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த ஆண்டனிக்கு ஹென்றியிடம் வெகு விரைவிலேயே பேசிவிட வேண்டும் என்று தோன்றியது.
கண்டிப்பாக அந்த ஆய்வகத்துக்குள் என்னவோ இருக்கிறது என்று நூறு சதவிகிதம் உறுதியாய் தோன்றி உறுத்திக்கொண்டிருந்தது அவனுக்கு.
அந்த உறுத்தல் அவனை அன்று மாலையே ஹென்றியிடம் பேச வைத்தது. தோட்டத்தில் காலாற உலாவிக்கொண்டிருந்த ஹென்றியிடம் வந்து நின்றான் ஆண்டனி.
அவனை கண்டதும் புன்னகித்த ஹென்றி, “நானே உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன்!” என்றவன், “நான் இல்லாத காலத்தில் எம் அரண்மனையையும் ராணியையும் நல்ல முறையில் பாதுகாத்ததற்கு மிக்க நன்றி!” என்றான்.
ஆண்டனி தான் பேச வேண்டியதை எண்ணிக்கொண்டே ஹென்றியிடம் ஒருவித சங்கடத்துடன் தலையாட்ட, “உரிமப்பட்டயம் பெறுவதற்க்கான அத்தனை ஏற்ப்பாடுகளையும் செய்து முடித்துவிட்டேன்! இன்னும் ஒருமாத காலத்திற்குள் என் கண்டுபிடிப்பை அவர்கள் முன் சமர்ப்பித்தால் மட்டும் போதும்! என் கனவு அதன் முதல் படியை அடைந்துவிடும்!” என்றான் முகம் விகாசிக்க.
“என் வாழ்த்துகள் சர் ஹென்றி!” ஆண்டனி சம்பிரதாயமாக சொல்ல, “இந்த கணம் என் குழந்தையும் என்னோடு இருக்கும் என்று கனவு கண்டிருந்தேன்! அது தான் பொய்த்துப்போனது” என்றவன் குரலில் வருத்தம் இழையோடியது.
“அது யாருமே கிஞ்சித்தும் எதிர்ப்பாராதது” ஆண்டனியும் சொல்ல, கடந்துப்போன துயரத்தை நினைத்து சில நொடிகள் பேச்சின்றி நின்றுப்போனான்.
பின் தன்னை மீட்டெடுத்தவன், “உன் எழுத்துப்பணி எந்த நிலையில் இருக்கிறது!?” என்றான் கேள்வியாய்.
ஆண்டனி பதில் சொல்லாமல் நிற்க, “நான் இல்லாத நேரம் நடந்தவவை எல்லாம் அறிந்துக்கொள்ள ஆர்வம் மேலோங்குகிறது. எங்கே எடுத்து வா!” என்று கை நீட்டினான்.
ஒன்றுமே பேசாது ஆண்டனி தலைகுனிய, புருவம் சுருக்கிய ஹென்றி, “என்ன ஆனது!?” என்றான். அப்போதும் ஆண்டனி பேச தயங்கி நிற்க, “மித்ரங்கா… அவள்… அவள் எதுவும் சொன்னாளா?” என்றான் ஹென்றி. விலுக்கென நிமிர்ந்த ஆண்டனி, வார்த்தையின்றி அவனை வெறிக்க,
“என்ன சொன்னாள்!?” என்றான் ஹென்றி.
“அவர்களை பற்றியும், இங்கு நடப்பதை பற்றியும் எழுதவே கூடாது என்றார்! மீறி எழுதியபோது மிரட்டினார்!” என்றவன், “சர் ஹென்றி! இங்கு நடப்பது பலதும் விசித்திரமாக, மர்மமாக உள்ளது! நீங்கள் இல்லாத சமயம் ராணி முழுநேரமும் உங்கள் ஆய்வகத்துக்குள்ளே தான் இருந்தார். எங்கள் யாருக்குமே உள்ளே அனுமதி இல்லை. வீட்டின் வேலையாட்கள் அத்தனை பேரையும் வெளியனுப்பினார். அதையும் தாண்டி இருந்த சிலரும் காணாமல் போக ஆரம்பித்தனர்.
இப்போது அலரும் நானும் மட்டுமே எஞ்சியுள்ளோம்!” என்றபோது ஹென்றி முகம் சிறிதே மாறினாலும், உடனே,
“அவள் பொலிவிழந்து இருப்பதைக்கண்டு அவளுக்கு மற்றோர் முன்வர தாழ்வுமனப்பான்மை இருந்திருக்கும். அதனால் வேலையை விட்டு நீக்கியிருப்பாள்!” என்றவன், “என் நினைவில் இருந்து மீள முடியாது என்னை நினைத்து என்னிடத்தில் வெகு நேரத்தை கழித்திருப்பாள்! அவ்வளவே!” என்றான் ஹென்றி.
சில நொடிகள் மௌனித்த ஆண்டனி, “ஆனால், ஆய்வகத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதை போல உள்ளது!” என்று சொல்ல, ஹென்றி திகைத்து பதில் பேச வரமுன், “என்ன இங்கே ரகசியம்!?” என்று வந்தாள் மித்ரங்கா.
இருவரின் பேச்சும் அப்படியே நின்றுப்போனது. ஹென்றியிடம் காதலாய் பேசிக்கொண்டே அவன் கைப்பிடித்து அங்கிருந்து அவனை அழைத்துசென்றவள், தங்களையே பார்த்துகொண்டு நிற்கும் ஆண்டனியை ஒரு தீப்பார்வை பார்த்துவிட்டுப்போக, அந்த பார்வை… அவள் பார்வையின் தாக்கம் ஆண்டனியை திகில்க்கொள்ள வைத்தது.
ஏனோ அவன் கண்களுக்கு மித்ரங்கா ஒரு சூனியக்காரி போல தெரிந்தாள்.
“அலர்… அலர்…!” நல்ல உறக்கத்தில் இருந்தவளை யாரோ உலுக்க, சோம்பலாய் கண்திறந்து பார்த்தவள் முன்னே நின்றுக்கொண்டிருந்தாள் மித்ரங்கா. அவளை கண்டதுமே வாரிச்சுருட்டிக்கொண்டு அலர் எழுந்து நிற்க,
“எனக்கு வயிறு உபாதையாக உள்ளது! நீ ஒரு கச்சாயம் செய்வாய் தானே!? அது செய்து தருகிறாயா?!” அவள் சுளித்த முகத்துடன் வயிற்றை பிடித்துக்கொண்டு ஏற்க, பதறிய அலர், “இதோ… இப்போதே தருகிறேன் ராணி!” என்றவள் வேகவேகமாய் அடுக்களைக்கு ஓடினாள்.
தான் கேட்டதும் தூக்கத்தை விடுத்து ஓடுபவளை கண்டு கோணலாய் சிரித்தவள் மெல்ல நகர்ந்து கூடத்தின் மெத்தை இருக்கையில் கால் மேல் காலிட்டு அமர்ந்தாள். சில நிமிடங்கள் கடந்திருக்கும். திடீரென சத்தம்!
கடிகாரம் மூன்று மணி ஆனதன் அடையாளமாய் ஓலமிட்டது!
மித்ரங்காவின் முகத்தில் ஒரு விசித்திர புன்னகை! மெல்ல எழுந்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
மேலும் சில நிமிடங்கள் கடக்க, கையில் குவளையுடன் வேகவேகமாய் கூடத்தை நோக்கி வந்த அலர், அங்கே இருந்த வெறுமையில் தயங்கி நிற்க,
“இங்கே… ஆய்வகத்தில் இருக்கிறேன் அலர்! இங்கே கொண்டு வா!” என்ற குரல் கேட்க, சட்டென திரும்பினாள் அலர். ஆய்வகத்துக்கான கதவு திறந்து கிடந்தது. ஏனோ மனம் அலற, குவளையை இறுக பிடித்தபடி அவள் சில நொடிகள் தயங்க, “வா!!!” என்ற மித்ரங்காவின் கட்டளை குரலில் வேக எட்டுகளுடன் முன்னேறினாள்.
உள்பக்கமாக குழி போல இறங்கும் படிகட்டுகள்! அரண்மனையின் அடித்தளம்! ஓரிருமுறை சென்றிருந்தாலும் இப்போது செல்வதற்கு திக்கென ஆனது அலருக்கு.
முதல் இரண்டு படிகளில் கால் வைக்கையில் அவளது பாதி உருவம் மறைந்திருந்தது. மூன்றாம் படியில் இறங்கும்போது அவள் தலை மட்டுமே வெளியே தெரிய, ஆண்டனியின் அறைக்கதவு திறந்தது.
அவன் வெளியே வரவும் அலர் முற்றிலுமாய் உள்ளே இறங்கவும் நேரம் சரியாக இருந்தது. அவள் இறங்கியதும் அறைக்கதவு மூடிக்கொண்டது.
ஆண்டனி நேரத்தை பார்க்க மணி மூன்று என்றே காட்டியது. அதில் இருந்த நொடி முற்கள் இயங்கவில்லை என்பது அவன் கருத்தில் பதிந்தது. ஏனோ அவனுக்கு அந்த ராத்திரி பொழுதில் தூக்கம் பிடிக்கவில்லை. மௌனமாய் வந்து தன் இருக்கையில் அமர்ந்தவன், தன் மேஜையின் மேல்பலகையை மெல்ல திறந்து அதில் இருந்த புத்தகத்தை வெளியே எடுத்தான். எழுதிய பக்கங்களை புரட்டியவன், புதிதான பக்கத்தில் எழுத ஆரம்பித்தான்.
“ராணி… ரா…ணி!” அழைத்துக்கொண்டே உள்ளே சென்றவளுக்கு கும்மிருட்டில் ஒன்றுமே கண்ணுக்கு புலப்படவில்லை. அதைவிட நாற்றம்! அதுதான் அவளுக்கு உயிர்வாதனையாக இருந்தது. குடலை பிரட்டிக்கொண்டு வருகிறது என்று சொல்வதை அந்த க்ஷணம் தான் உணர்ந்தாள் அவள். நறுமணமும் நாற்றமும் கலந்து ஒருமாதிரி பிரட்டி எடுத்தது.
ஆனாலும், சிறுசிறு அடிகளாய் எடுத்து வைத்து முன்னேறியவள், அந்த அடைத்த அறையில் எதிரொலிக்கும் தன் குரல் கேட்டே பயந்தவளாய், “ராணி!” என்று முனக, அவள் பின்னே ஏதோ சத்தம்!
சட்டென அவள் திரும்ப, என்னவோ ஒன்று இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வந்து அவள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டது. அதிர்வில் அவள் கரங்கள் வலுவிழக்க, கையில் இருந்த குவளை கீழே விழுந்து சிதறியது.
எழுதிக்கொண்டிருந்த ஆண்டனியின் செவியில் அந்த சத்தம் விழ, திடுக்கிட்டான்! சத்தம் எங்கிருந்து வருகிறது என நொடிப்பொழுதில் அவனால் கணக்கிடமுடியவில்லை. மீண்டும் ஏதேனும் சத்தம் வருமா என்று செவிகளை கூர்மையாக்கி காத்திருந்தான்.
அலரால் இழுத்த மூச்சை வெளிவிட முடியவில்லை. தேங்கிய எச்சிலும் விழுங்க முடியாமல் தவித்தது. இப்போது தான் தொண்டைக்குழியில் வலி பரவ ஆரம்பித்தது. கைகள் தன்னால் மேலெழுந்து தன்னிடம் ஒட்டிக்கொண்டிருப்பதை தொட்டுப்பார்க்க, கூரிய கம்பி போன்ற ஏதோ ஒன்று!
தொண்டைக்குழியில் அது சொருகி நிற்க, ரத்தம் குபுக்கென வெளியேற ஆரம்பித்திருந்தது. அப்போது அவள் எதிரே ஒரு தீக்குச்சியின் வெளிச்சம்! சிறு வெளிச்சம் பெரும் வெளிச்சமாய் மாறி அந்த அறையை பிரகாசமாக்கியது கணத்தில்! மெழுகுவர்த்தியை ஏற்றிய ராணி கையில் இருந்த தீக்குச்சியை அசட்டையாய் ஊதி கீழே போட்டாள்.
அலரின் மனமோ ஏதேதோ பேச நினைக்க, அவளால் நாவை கூட அசைக்க முடியவில்லை. தொண்டைக்குழியில் சொருகி நிற்கும் பளபளக்கும் கம்பி… இல்லை இல்லை… அது கம்பி இல்லை. அம்பு! இப்போது தான் வெளிச்சத்தில் நன்றாக பார்க்க முடிந்தது. கழுத்தில் இருந்து வழிந்த குருதி, நிலத்தை தொட, வேகமாய் வந்து அதை ஏந்திக்கொண்டன ராணியின் கரங்கள்.