பாலச்சந்திரன் மகனை முறைத்தவர், “அவன் ரெடியா வந்தா நிக்க சொல்லுடா, நான் போய் ரெடியாகிட்டு வரேன்” என்று வினயனிடம் சொல்லி அறைக்குப் போனார்.
“ஜஸ்ட் மிஸ்!” என்று பக்கத்தில் விழுந்த சொம்பை எடுத்த வினயன் அப்பா, அண்ணாவுக்குமிடையே நடக்கும் இந்த கூத்தை ரசித்தான். சிறிது நேரத்தில் ஜெயன் கீழே இறங்கினான். படிகளில் இறங்கும்போதே அவன்
‘ஒன்னாம் ராகம் பாடி..
ஒன்னிலே மாத்ரம் தேடி..’ என்று உற்சாகமாகப் பாடினான்.
“டேய்! ஒழுங்கா சொல்லுடா! எப்படிடா? ஒன்ஸ் பார்த்தே இப்படி விடாம இருக்க? அப்பா உன்னால எவ்வளவு டென்ஷன் ஆகுறார் தெரியுமா? ஏற்கனவே இருக்க பிரச்சனைல, நீ வேற ஊர்மி ஊர்மினு அவரை கடுப்பேத்துற.. அது ஒரு குழப்பம்னு உனக்குத் தெரியும்லடா?” என்று வினயன் அண்ணனை கேட்க, ஜெய் முகத்தில் ஊர்மிளாவால் கொடுத்த உற்சாகம் வடியவில்லை. இன்னும் ரசித்து பாடலை முணுமுணுத்தவன், முற்றத்தைப் பார்த்தபடி இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஒற்றை காலை ஊன்றி,
“நான் ஊர்மிளாவை லவ் பண்றேன் எப்போ சொன்னேன்?” என்று கேட்க, வினயன் சொம்பு எங்கே என்று பார்த்தான்.
“டேய்! அப்பாவை டென்ஷன் பண்ணினது பத்தாதுனு என்னை வேற ஏண்டா இம்சை பண்ற?” என்று வினயன் கத்த
“ஷ்!” என்று அவனை அடக்கியவன் “லவ்.. அது எனக்கு நிஜமா தெரியலடா! எனக்கான பொண்ணுனு அப்பா அனுப்பின ஃபோட்டோவ பார்த்தேன், ஒகே பார்க்க நல்லாயிருக்கா! அவ்வளவுதான் எனக்குத் தோணிச்சு. ஆனா ஊர்மியை நேர்ல பார்க்கும்போது அவளை என் மனைவியா பார்த்தேன். உனக்குப் புரியுதா? முதல்முறை உன்னைப் பார்க்கிறப்ப… என் தம்பினு பார்க்கிறப்ப ஒரு பாசம் வரும் இல்லையா? அப்படி மனைவின்ற பார்வையில நான் பார்த்த முதல்.. கடைசி பொண்ணும் அவதான்! அவளுக்கு எதாவது கஷ்டம்னா எனக்கு அந்த கஷ்டத்தைப் போக்கணும்னு தோணுது… “
“ஒரே நாள்ல காதல்.. அதுல எனக்கு நம்பிக்கையில்லை! இது காதலுமில்லை! அதே நேரம் அவளை பார்க்கிற பார்வையில எனக்கு வேற யாரையும் பார்க்க, நினைக்க கூட முடியல! எனக்கு அவளை பிடிச்சிருக்கு!!! ஒரே நாள்ல பிடிக்கலனாலும், ஒவ்வொரு நாளும் அவளை பிடிக்க எனக்கு ஒரு காரணம் கிடைச்சுட்டுதான் இருக்கு!”
“அப்பா தெரியாம அனுப்பின ஃபோட்டோ யாரோவா இல்லாம ஏன் அவளா இருக்கணும்? வந்தவ என்னை ஏன் முதல்ல பார்க்கணும்.? தெரியாத ஊர்ல இருந்தவ எப்படி தேவிகுளம் அச்சச்சன் பேத்தியானா?… ” என்று ஜெய் ஊஞ்சலில் ஆடியபடி தம்பியைக் கேட்க, அண்ணன் சொல்வதை கேட்டவனுக்கு சுவாரசியமாக இருந்தது.
‘மூணே நாள்ல முத்திடுச்சு!’ என்று மனதில் அண்ணனை கமெண்ட் அடித்தான்.
அதே நேரம் சந்தோஷமும் கூட! ஜெய் பெண்களிடம் பேசவே யோசிப்பவன், அப்படியானவன் ஊர்மிளாவிடம் இவ்வளவு உரிமையும் பிடித்தமும் கொண்டுள்ள போது, வேறு யாரையும் நினைக்க மாட்டான் என்று தெரிந்தது.
“பாரு, நேத்து அவ ஃபோன் பண்ணலனு டென்ஷனா இருந்தேன், அப்பா நைட் பேசவும் இன்னும் குழப்பம். அதெல்லாம் காணாம போகிற மாதிரி விடிஞ்சதும் ஃபோன் பண்றா” என்று கண்கள் சுருங்க, சிரிப்புடன் சொன்ன ஜெயேட்டனை பார்த்த வினயனுக்கும் அண்ணனின் இந்த தோரணை பிடித்தது.
“எல்லாம் சரிடா! பேசாம நீ அவங்ககிட்ட ப்ரோபோஸ் பண்ணிடுடா. அதை விட்டு அப்பாவை அச்சச்சன்ட்ட பேசுனு டென்ஷன் பண்ணாத! ராஜீவன் மாமா ஒன்னும் அவங்களை வளர்க்கல!” என்றவனின் கையைப் பிடித்து ஊஞ்சலில் உட்கார வைத்தவன், தம்பியின் தோளில் கைப்போட்டு
“அடேய் வினயா! ஒரு விஷயத்தை ஈசியா செய்ற வழியை யோசிக்கணும்! நான் லவ் பண்ணி, அவ ஓகே சொல்லி அப்புறம் வீட்ல பேசணும். அதை முதல்லயே செஞ்சுட்டா பெட்டர்! ராஜீவன் மாமா இல்லைனா பிரபாகரன் மாமா…” என்று ஜெய் கண்சிமிட்ட
“எண்டே அம்மோ! என்ன ப்ளாண்டா?” என்று அண்ணனை பார்த்தான்.
“ஹாஹா!” என்று சிரித்த ஜெயன் “முதல்ல விஜயன் ப்ராப்ளம் முடிப்போம். அப்புறம் இதை பேசுவோம்” என்றவன் அப்பாவுக்காகக் காத்திருந்தான். பாலச்சந்திரன் மகன்கள் இருவரும் ஒன்றாக பேசி சிரிப்பதை பார்த்து, சின்னவன் பெரியவனை சரிகட்டிவிட்டான் என்று நினைத்து அவர்களிடம் புன்னகையோடு வந்தார். பெரியவன் சின்னவனை சரிகட்டிவிட்டான் என்று தெரியவில்லை.
அப்பா வரவும் எழுந்த ஜெய், “அப்பா! முதல்ல எனக்கு ஒரு பொண்ணு பார்த்தீங்க. இல்ல..?” என்று ஆரம்பிக்கவுமே, பாலச்சந்திரன் சின்ன மகனை மெச்சுதலாகப் பார்த்தவர்
“ஆமா, ஆமா.. அந்த பொண்ணு பெய..” என்று அவசரமாக சொல்ல வர, “அப்பா!” என்று ஜெய் நிறுத்தினான்.
“என்னடா?”
“அவங்க வீட்ல எனக்கு இப்போ கல்யாணம் செய்ற ஜாதகம் இல்லை, இல்லை.. எனக்கு இப்போ விருப்பமில்லைனு ஏதோ சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க! இனி பொண்ணு எல்லாம் பார்க்க வேண்டாம். விஜயன் விஷயம் முடியவும், ஊர்மி அப்பா பிரபாகரன் நம்பர் வாங்கி பேசுங்க. மழை லேசா இருக்கு, எனக்கு சூர்ய நெல்லில கொஞ்சம் வேலை, இப்பவே கிளம்பினா சரியா இருக்கும்” என்றவன் அவர் பதில் பேசும் முன் கிளம்பிவிட்டான்.
பாலச்சந்திரன் சின்னவனை பார்த்தபடி ஊஞ்சலில் உட்கார, “அப்பா! அண்ணா ரொம்ப விரும்பிட்டான் போல, அவன் எல்லா டிசிஷன்லயும் ஸ்ட்ராங்கா இருப்பான் தெரியும்ல., ராஜீவன் மாமா ப்ரண்ட் தானே? அந்த பிரபாகரன்.. அவர் கிட்ட பேசுங்களேன்” என்றதும் வினயனை முறைத்தார்.
“எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?” என்று கோபமாகக் கேட்க
“ம், கண்ணாடி போடாம மெஸெஜை மாத்தி அனுப்பினது..” என்று வினயன் நக்கல் செய்ய
“இல்லை! உன் பேச்சைக் கேட்டது” என்றார் கடுப்பாக. வினயன் அப்பாவை முறைத்தான்.
“உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க? முதல்ல விஜயன் லவ் பண்றான், சேர்த்து வைங்கனு வந்த! இப்போ அண்ணனுக்குப் பிடிச்சிருக்கு சேர்த்து வைங்கனு சொல்ற.. பெரிய காதல் தூதுவனா?” என்று எரிச்சலாகக் கேட்க
“பின்னே! எங்க காலேஜ்’ல என் நேமே லவ்-வினய் தெரியுமா? லவ்-வி’னு தான் என்னை கூப்பிடுவாங்க” என்று அவன் டீஷர்ட்டின் காலரை தூக்கிவிட, பாலச்சந்திரன் முற்றத்தில் விழுந்த வெயிலை வெறித்தார்.
“அப்பா! யாராச்சும் அவன் கல்யாணம் பண்ணிதானே ஆகணும்? பிடிச்ச பொண்ணுன்னா அவன் சந்தோஷமா இருப்பான்ல. பழைய படம்ல வர அப்பா மாதிரி பண்ணாத டாடி” என்று அவர் தோளை அணைத்துக்கொள்ள
“அதில்லடா வினயா! நான் காதலுக்கு எதிரி எல்லாமில்லை! ஆனா நான் பார்த்த காதல் எல்லாம் பிரச்சனை! ராஜீவன் காதல் அவனை ஊரை விட்டே போகவச்சது, இப்போ விஜயன் காதல் பொய் சொல்ல வைக்குது! அட்லீஸ்ட் உன் ஜெயேட்டன் ஒழுங்கா லவ் பண்ணலாமில்லை, அப்பா அவங்கிட்ட பேசு இவங்கிட்ட பேசுனு என்னை இல்ல படுத்துறான்!” என்றதும் வினய் சிரிப்போடு அப்பாவிடம் ஜெய் சொன்னதை சொல்ல,
“உன் அண்ணனங்காரன் வில்லண்டா! அந்த பொண்ணையும் ரூம்ல வச்சு சாத்தி, லவ் பண்ற வழியும் அடைச்சிட்டான்! அதான் என் தலையை உருட்டுறான். அந்த பொண்ணு இவனை லவ் பண்ணாது தெரிஞ்சு என்னை பேச சொல்றான்!” என்றவர்
“இவன் சந்தோஷமா இருக்கிறது பார்த்து எனக்குப் பயமா இருக்குடா வினய்! விஜயனை பிந்து லவ் பண்றா, பிரச்சன இல்லை. இவன் விஷயம் இவனை அந்த பொண்ணு…” என்ற பாலச்சந்திரன் யோசனையில் புருவம் சுருக்கினார்.
“டேய்! இவனுக்கு ஏன் அந்த பொண்ணு காலையில போன் பண்ணிச்சு?” என்று கேட்டார்.
“தெரியலப்பா!” என்றதும் பாலச்சந்திரன் “சரி, வா. உங்க அச்சச்சன் கூப்பிட்டார், போய்ட்டு வருவோம். ஒவ்வொரு பஞ்சாயத்தா பார்ப்போம்” என்றார். இருவரும் அரக்கபறம்பில் இல்லம் சென்றனர். அச்சுதன் பாலச்சந்திரனிடம் விஜயன் பிந்து திருமணம் பற்றி பேசி, ராஜீவனை வர சொன்னார். விஜயனுக்காக மகிழ்ந்தது பாலச்சந்திரனின் மனம். வீடு வந்தவர் ராஜீவனுக்கு அழைத்தார்.
***************
‘இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை’- உதம்பூர் தலைமையகம் (Headquarters, Northern Command of Indian Army- Udhampur, Jammu and Kashmir)
லெஃப்டினன்ட் ஜெனரலுடனான சந்திப்பு முடிந்து, அவர் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றார் ராஜீவன். அவர் அலைப்பேசி எடுத்து பார்க்க, பாலச்சந்திரனிடம் அவ்வளவு அழைப்பு. அவரின் வேலையாள் காஃபி எடுத்து வந்து தர, அதனை பருகியபடி நண்பனுக்கு அழைத்தார்.
அதற்குள் அந்த வேலையாள், “சாப்! சக்கரை போட மறந்துட்டேன்” என்று ஹிந்தியில் சொல்லியபடி சக்கரையோடு வர,
ராஜீவனோ, “பரவாயில்லை, கசப்பு எனக்குப் பழக்கம்!” என்றபடி கையசைக்க அவர் சென்றுவிட்டார்.
“டேய்! எத்தன தடவ போன் போடுறது? எப்போ வரனு சொன்ன நீ? உன்னை நம்பி நான் பெரிய வேலையெல்லாம் செஞ்சு வச்சிட்டேன்” என்று எடுத்தவுடனே பாலச்சந்திரன் கேட்க, ராஜீவன் பொறுமையாக
“பாலா! இங்க அமர்நாத் யாத்ரா ஸ்டார்ட் ஆகப்போகுது, செக்யூரிட்டி ப்ராப்ளம் வராம பார்க்கிறது எங்க பொறுப்பு! அதுல பிஸீயாகிட்டேன், என்ன விஷயம் சொல்லு!” என்றார்.
“அடேய்! ராஜீவா! உன்னால நான் காசி யாத்திர போயிடுவேன் போல, உங்கச்சன் இன்னிக்கு நீ எப்போ வர கேட்டுட்டார், ஷோபனா பையனுக்கு மாமனா ஒன்னும் பண்ணல, அவன் கல்யாணத்தை ஆச்சும் பண்ணி வை! சீக்கிரம் ஊருக்கு வா” என்று அழைக்க
“ஓகே!” என்ற ஒற்றை வார்த்தையில் பாலச்சந்திரனுக்கு என்னமோ செய்தது.
“உனக்கு எதாவது பிரச்சனையா ராஜீவ்?” பாலாவின் குரல் அக்கறையாக வர, இதற்காகவே இத்தனை ஆண்டுகள் நண்பனிடம் பேசவில்லை. அவரை கண்டுகொள்வார் பாலா.
“எஸ், பாகிஸ்தான் கூட பிரச்சனை, சால்வ் பண்ண வரியா?” வேண்டுமென்றே கிண்டல் செய்ய
“இப்போ எனக்கு இருக்கிற பிரச்சனைக்குத் தேவிகுளமே பாகிஸ்தான் டா!” என்று சிரித்த பாலச்சந்திரன்
“சீக்கிரம் வாடா!” என்றார் மீண்டும்.
“இன்னும் இரண்டு நாள்ல இங்க வர்க் முடிச்சிட்டு, டெல்லில மீட்டிங்! அங்கிருந்து நேரா ஊருக்கு வந்துடுறேன், ஒரு மூணு நாலு நாள் டைம் கொடு பாலா.” என்று பேசிவைத்தார். போருக்கு செல்ல ராஜீவன் பயந்ததில்லை, ஊருக்கு செல்ல அவ்வளவு பயம்! ஊர்மிளாவை பார்க்க, அவளிடம் பேச பயம்!!