பாலச்சந்திரன் அழைக்கவும் ராஜீவன் நண்பனிடம் “கொஞ்ச நேரத்துல வரேன்” என்றார். மகளின் முன் நிற்க, ஊர்மிளா விழியுயர்த்தினாள். அவள் முகம் அழுதழுது ஈரமாய் இருக்க, இப்போது கண்ணீர் இல்லையென்றாலும், வெளிப்படுத்த முடியாத வேதனை அவளிடம். அம்மாவை தேடினாள் பெண்.
“ஊர்மி! சில நேரம் இப்படித்தான், தெரிஞ்சுக்காம இருந்திருக்கலாம் தோணும்.” என்றதும் ஊர்மிளா அவரையே பார்த்தார். உண்மையில் உண்மையின் கனம் தாங்கவே முடியவில்லை!
எனக்கு இது எதுவும் தெரியாமல் போயிருக்கலாம், ரத்னவேலின் பேத்தியாக, பிரபா ஜமுனாவின் மகளாக நான் என் வீட்டில் மகிழ்வோடு இருந்திருப்பேன் என்று நினைக்காது இருக்க முடியவில்லை.
அதே நேரம் ராஜீவனுக்காக கசியும் அன்பினையும் பரிவையும், ஆதங்கத்தையும் தடுக்க முடியவில்லை. இன்னும் கோபம் வந்தது, அவர் தனியே இருப்பதால். மற்றபடி பிரபாவும் ஜமுனாவும் கிடைத்ததற்கு அவள் நிச்சயம் ஒரு துளியேனும் வருந்தவே இல்லை.
“தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி நடந்துட்டா பிரச்சனை இல்லை! உனக்கு வேற எதாவது கேட்கணுமா?” என்று கேட்க, அவள் இல்லையென தலையசைத்தாள்.
“ஓகே நீ ரெஸ்ட் எடு! நான் என் அப்பா, அம்மாவை பார்த்துட்டு வரேன்” என்றதும்
“அவங்க பாவம் தெரியுமா? யார்னு தெரியாத எங்கிட்ட அவ்வளவு அன்பா நடந்தாங்க. என்னைதான் வேண்டாம்னு விட்டீங்க, உங்க அப்பா அம்மா கிட்ட ஏன் வரல?” ஊர்மிளா வேகமாகக் கேட்டாள். ராஜீவன் அவளின் கேள்வியை எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் எதிர்கொண்டார். எல்லாருக்காகவும் யோசிக்கும் வகையில் ,மகளை வளர்த்திருந்த பிரபாகரனையும் ஜமுனாவையும் மனதுக்குள் மெச்சினாலும், அவள் சொன்னது உவப்பாக இல்லை.
சில கோபங்கள் தீராது, காலம் போனாலும் ஆறாது! அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எவ்வலியாகினும் உணர முடியும், உடல் வலியோ உள்ள வலியோ.. ராஜீவனுக்கு அப்படியொரு கோபம்.
“நீ இன்னிக்குப் பார்க்கிறவங்க வேற, நான் அன்னிக்குப் பார்த்தவங்க வேற!” என்று பெருமூச்சோடு சொன்னவர் பாலச்சந்திரனை பார்க்க சென்றார். அவர் முற்றத்து ஊஞ்சலில் நண்பனின் வரவுக்காகக் காத்திருந்தார்.
“ஏடா ராஜீவா! எவ்வளவு நேரம்? அம்மாவுக்கு இந்த பெரியவன் நீ வருவனு சொல்லிட்டான் போல, வந்தாச்சானு எனக்கு அவ்வளவு ஃபோன். காலையில கார்ல வந்ததால நீ வந்தது யாருக்கும் தெரியல, வா எப்பவும் பாலா எண்ட மோன கொண்டு வருவியானு கேட்டுட்டே இருப்பாங்க.”
பாலச்சந்திரன் பரபரப்பாக சொன்னவர், “விஜயனையும் பிந்துவையும் வர சொல்லியிருக்கேன். ஒரு தடவ அவங்களை பார்த்து பேசிடு! அப்புறம் அங்க போய் முழிக்கக் கூடாது..” என்ற நண்பன் அருகே அமைதியாக உட்கார்ந்தார் ராஜீவன்.
“நீ எப்போடா அச்சன்’ட்யும் அம்மே’ட்யும் ஊர்மிளா உன் பொண்ணுனு சொல்ல போற? எனக்கு அச்சனை பார்க்கிறப்ப எல்லாம் பயமா இருக்குடா. அவர் வேற ஊர்மியை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனுட்டார், எனக்கு பக்குனு ஆச்சு! நம்ம உண்மை சொல்றது பெட்டர், அவருக்கா தெரிஞ்சா..” என்ற பாலனை முறைத்தார் ராஜீவன்.
“அச்சனுக்கு ஊர்மியை எப்படி தெரியும்?”
“நேத்து வீட்டுக்கு வந்தார்” என்றதும் ராஜீவன் வலதுகையைத் தலையில் வைத்து தேய்த்தவர்
“ஊர்மிளாவை உன் ரிசார்ட்லதானே தங்க வைக்க சொன்னேன்? வீட்ல கொண்டு வந்து வச்சதால தானே பிரச்சனை?” கோபமாகக் கேட்க
“டேய், போன தடவ உன் பொண்ணு சொல்லாம கொள்ளாம வந்துட்டா, என் பையன் பார்த்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டான். இப்போ என்ன என்னைக்கா இருந்தாலும் தெரியத்தானே வேணும்? உன் பொண்ணை எப்படி எங்கேயோ நான் தங்க வைப்பேன்?” என்று பாலச்சந்திரனும் கோபம் கொண்டார்.
“என்னைக்கும் தெரிய வேண்டாம்!” என்று ராஜீவன் அழுத்தமாக சொல்ல, சட்டென்று அவரை திரும்பிப் பார்த்தார் பாலா.
“ப்ராந்தானா டா நீ?” என்றார் கோபமாக.
“பாலா! நல்லா கேட்டுக்கோ, ஊர்மிளா பத்தி என்னைக்கும் அச்சனுக்கும் அம்மாவுக்கும் தெரியவே போறதில்லை, நீ சொல்ல போறதில்லை”
“தப்புடா ராஜீவா! அவங்க பாவம், என்னால பொய் சொல்ல முடியாது” என்றதும் ராஜீவன் கண்கள் சிவக்க
“எனக்கு எல்லாரையும் விட ஊர்மியோட சந்தோஷம், நிம்மதி முக்கியம் பாலா, இப்ப ஊர்மி அவங்க பேத்தினு தெரிஞ்சா என்ன மாறிட போகுது? விஜயனோட லவ்வர், அந்த பொண்ணையே அவங்க பேத்தியா நினைச்சிக்கட்டும். இப்ப அந்த பொண்ணை வேறயா பார்க்க மாட்டாங்களா? கொஞ்சம் நியாயமா யோசி” என்றார்.
“நியாயமெல்லாம் நீ பேசாத! அவங்களுக்கு அவங்க வீட்டு வாரிசு யாருனு தெரிய வேண்டாமா? உனக்கு புள்ளை இல்லைன்றதலாதானே நான் பொய் சொன்னேன்.”
“சரி நான் நியாயம் பேசல, ஆனா ஊர்மிளா எப்பவும் பிரபாகரன் பொண்ணுதான். இப்ப நீ அவளை பார்த்த தானே? உண்மை தெரிஞ்சு அவ எவ்வளவு தவிக்கிறா? வேண்டாம், போதும்! அவளுக்கு அங்க அழகான குடும்பம் இருக்கு. அது அப்படியே இருக்கட்டும்! நான் ஒரு தடவ என் அம்மாவை பார்க்கணும்னுதான் வந்தேன், சொந்தம் கொண்டாட இல்லை. முக்கியமா விஜயனுக்காக வந்தேன், இடையில் இந்த பிரச்சனை ஆகிடுச்சு, அதுக்காக எதுவும் மாறப்போறதில்லடா பாலா. மனசில்லாயோ?(புரிஞ்சதா?)” என்றார் ராஜீவன் தீர்மானமாக.
அவராலயே மகளோடு உரிமை கொண்டாட முடியாத போது, எப்படி அவர் அப்பாவும் அம்மாவும் கொண்டாட முடியும்? என் பெண்ணின் சந்தோஷம், நிம்மதி மட்டுமே எனக்கு முக்கியம் என்று உறுதியாக நினைத்தவருக்குப் பெற்றவர்கள் பின்னே போயினர்.
“இது என் மேல சத்தியம்டா பாலா! நீ மீற மாட்ட நினைக்கிறேன்.” என்றார் இன்னும் அழுத்தமாக.
“ஏண்டா இப்படி? இப்படி அழகா ஒரு பொண்ணு பெத்துட்டு யார்கிட்டயோ கொடுத்து, ஏன் உனக்கு நாங்க எல்லாம் இல்லையா?” என்று பேசும்போதே
“மாமா!” என்று வந்தான் விஜயன், கூடவே பிந்துவும். அவர்கள் வரவும் பேச்சை நிறுத்திய பாலச்சந்திரன்
“இவன் ஷோபனா பையன் விஜயன்! உன்னை மாதிரி பிரேமப் பிராந்தன்!” என்றார் கடுப்பாக.
“எப்படி இருக்க விஜயன்?” என்று அவன் தோளோடு அணைத்துக் கேட்டவர், அவன் அருகே குட்டி விழிகளோடு அவரை பார்த்த பிந்துவிடம்
“பிந்து, ரைட்?” என்று கேட்டவர் அவள் புன்னகையோடு தலையசைக்கவும் விஜயனிடம் “சந்தோஷமா இருங்க” என்றார்.
“தேங்க்ஸ் மாமா, எனக்காக வந்ததுக்கு” விஜயன் மாமன் கை பிடித்து சொல்ல
“மாங்காதொலி!(மாங்கா தோல்- நக்கலாக, எரிச்சலாக சொல்வது) வேற என்ன செஞ்சான் உனக்காக? தேங்க்ஸ்தான் இவனுக்கு இப்போ முக்கியம்” என்றார் நக்கலாக. ஊர்மிளாவை பற்றி பெரியவர்களிடம் சொல்லக்கூடாது என்றதில் நண்பன் மேல் நிறைய கோபம்.
அப்படியென்ன இவனுக்கு பிரச்சனை? மனைவி இல்லையென்றால் இங்கே வந்திருக்கலாமே, இவன் மகளை நாங்கள் எப்படி பார்த்திருப்போம் என்று மனதுக்குள் நண்பனை வறுத்தவர், பேசுவதற்குக் காத்திருந்தார்.
“இவன் வேற..” என்ற எரிச்சல் வர, வினயனை அழைத்தார். மாடியில் இருந்தவன் கீழிறங்க, “ஊர்மியோட இரு!” என்றபடி மற்றவர்களோடு அரக்க பறம்பில் வீடு சென்றார். தெருவில் சிலர் எட்டிப்பார்க்க, பாலச்சந்திரன் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தபடியே அச்சுதன் வீடு சென்றார்.
அரக்க பறம்பில் வீடு செல்லவுமே ராஜீவனுக்கு கடைசியாக அங்கிருந்து மனைவியோடு சென்றது நினைவில் வந்தது, அப்பாவின் வார்த்தைகள், ஆத்திரம், சுடுசொற்கள், சாபம் எல்லாம் நினைவில் வர தொண்டையடைத்தது. ப்ளஸ்ஸீயோடு வந்தவர் இன்று மனைவியின்றி நிற்கிறார்.
“செத்தாலும் நீ என் வீட்டு வாசல மிதிக்க கூடாது! பெத்தவங்க பேச்சை மீறி இவளோட நிக்கிற இல்லை, உன் அம்மா இவ்வளவு அழறா.. அப்பவும் நீ இந்த பொண்ணு முக்கியம்னு நினைக்கிற இல்லை. இதுக்கெல்லாம் அனுபவிப்ப ராஜீவா..!” என்ற அப்பாவின் வார்த்தைகள் இன்னும் காதுக்குள் கேட்டது. காதுகள் அடைத்து, கால்கள் நகர மறுக்க நிலைகுத்திய பார்வையோடு வீட்டின் வாசலை பார்த்தார். கடைசியாக ப்ளஸ்ஸீயோடு நின்ற இடம்! வேற்று மத பெண்ணை மணந்த மகனை வீட்டுக்குள் கூட அச்சுதன் அனுமதிக்கவில்லை.