அடுத்த இரண்டு நாளும் கல்கியும் வரப்ரசாதும் பேசிக்கொள்ளவில்லை. அம்மாவைப் பேசிய கோபத்தில் அவனும், அவன் பேசாத கோபத்தில் அவளும் இருக்க மகளுக்கு உதயமூர்த்தி அழைத்தார். பொதுவாய் நலம் விசாரித்து முடித்தவர்
“என்ன கல்கி காலேஜ்ல டூர் போறாங்களாமே?” என்று கேட்க
“ஆமாம்பா, அடுத்த வாரம் பெங்களூர் போறாங்க” என்று கல்கி பதில் சொல்ல
“உனக்குப் போக ஆசையில்லையா?” என்று கேட்க, கல்கியிடம் பேச்சில்லை. மகளின் மௌனம் புரிந்த அவரும்
“நீ போய்ட்டு வா கல்கி. இப்போ ஃபீஸ் கட்டிட்டு சொல்லலாம் தானே?” என்று கேட்க கல்கிக்கு அதிர்ச்சி.
“அப்பா?” என்று கேள்வியாய் இழுக்க
“ஊருக்கு வந்தப்போ போக கூடாதுன்னு சொல்லிட்டு இப்போ இப்படி சொல்றானேன்னு பார்க்கிறியா?” என்று கேள்வி கேட்டவர்
“உன்னோட அத்தான் பேசினார். நீ நினைச்சிருந்தா எங்கிட்ட சொல்லாம கூட போயிருக்கலாம். ஆனா நீ என்னோட நம்பிக்கையைக் காப்பாத்தனும்னு அதை செய்யல, சரி உன்னோட ப்ரண்ட்ஸ் கூட ஸ்கூல் படிக்கும்போதுதான் எங்கேயும் போனதில்லை. இப்போ போய்ட்டு வா” என்றார் உதயமூர்த்தி.
‘ஜெகதீஷா?’ டேய் மாம்ஸ்! எனக்காக அப்பா கிட்ட எல்லாம் பேசியிருக்க, ஸோ ஸ்வீட்’ என்று அவள் மனதில் நினைக்க, உதயமூர்த்தியோ அதுவரை பொறுமையாய்ப் பேசியவர் கொஞ்சம் கண்டிப்பான குரலில்
“ஆனா ஒன்னு கல்கி, உன் வயசுக்கு மீறி பேசாத. உங்கத்தையை இனிமே நீ பேசக்கூடாது” என்று தங்கைப் பாசத்தில் கட்டளையாகச் சொல்ல
“அத்தையா?” என்று யோசித்தவள் “அப்பா, எந்த அத்தானை நீங்க சொல்றீங்க?” என்று கேட்டாள்.
“அத்தை மவன் தானே அத்தான்? யமுனா பையனைத்தான் சொல்றேன். அந்த தம்பி தான் இரண்டு நாள் முன்ன போன் செஞ்சு இப்படி டூர் போறாங்க, ஆனா நீ போகல சொன்னார். என் அம்மாவுக்காக நீங்க ஏன் உங்க பசங்களைத் தண்டிக்கிறீங்க? கல்கி நினைச்சா சொல்லாம கூட போயிருக்கலாம், இருந்தும் அவ உங்க பேச்சை மதிக்கிறா. உங்க இடத்துல இருந்து உங்களுக்காக யோசிக்கிற பொண்ணு அப்படி இப்படின்னு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசினார்” என்று பெருமிதமாய் சொல்லவும் கல்கிக்குக் கண்ணீர் வந்தது.
இரண்டு நாளாய் அவளிடம் முகம் காட்டாமல் இருந்ததென்ன? இன்று அவள் அகத்தின் அவாவை அப்பாவிடம் சொல்லி நிறைவேற்றி இருக்கிறானே என்று நினைக்கும்போதே நெஞ்சம் தழும்பியது. இது நாள் வரை அவளுக்காக யாரும் இப்படி பேசி அவளின் ஆசையை நிறைவேற்றியதில்லை. அவளின் அம்மாவும் அக்காவும் பேச நினைத்தாலும் அது தாத்தாவிடம் எடுபடாது, அவள் அப்பாவும் கேட்கமாட்டார்.
நெஞ்சடைக்க ஒரு நன்றியுணர்வு அவன்மேல் பெருகியது. எனக்காக செய்திருக்கிறான் என்ற எண்ணம் வண்ணம் தந்தது வஞ்சிக்கு!!
சிரஞ்சீவியின் செயல் சிரபுஞ்சி மழையாய்க் கல்கியின் காய்ந்த மனதை நனைத்தது. படிப்பென்பது அவளின் வாழ்க்கை, அதற்காகப் போராடியதே போதும் என்று நினைத்தவள் அப்பாவிடம் இதற்காகப் பேசாது விட்டுவிட்டாள். கேளாமலே நிறைவேறிய ஆசையென்றால் இதுவாகத்தான் இருக்கும் அவளுக்கு.
‘தங்கச்சி பையன் சொல்லவும் ஒத்துகிட்டாரா?’ என்று தோன்றினாலும் அதிகம் பேசினால் அப்பா கோபப்படுவார் என்பதால்
“அத்தையைப் பேசலப்பா நான்” என்றாள் அமைதியாக.
“சரிம்மா, பணம் இருக்கா. அப்பா போட்டுவிடட்டுமா?” என்று கேட்டவர்
“வெளியூர் போற நான் போட்டே விடுறேன். அப்புறம் பத்திரமா இருக்கனும், உங்க டீச்சர் சொல்றது கேட்டு இருந்துக்கோ” என்று பல அறிவுரைகள் சொல்லி போனை வைத்தார்.
என்கிட்ட சண்டைப்போட்டாலும் அப்பா கிட்ட பேசியிருக்காங்க என்று நினைத்தவளுக்கு அவனுக்கு நன்றி சொல்லவேண்டும் போல் இருந்தது. சொல்லால் சொல்லாது செயலால் செய்ய நினைத்தவள் தான் கேட்காமலே தனக்காக அவன் அப்பாவிடம் பேசியிருக்க அவனுக்குப் பிடித்தது எதையாவது செய்ய நினைத்தவள்
‘பங்காரத்துக்கு என்ன பிடிக்கும்?’ என்று யோசித்தவள் ‘காரம்’தான் பிடிக்கும் என்று கண்டுபிடித்து யூ ட்யூபில் பார்த்து அவனுக்காக எர்ர கார சட்னி செய்துவைத்தாள். அவன் வரவும் தோசை சூடாக செய்யலாம் என்று நினைத்தவள் அப்பா டூர் போக அனுமதி கொடுத்த சந்தோஷத்தை அஞ்சனா, அம்மா, யமுனா என்று எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.
சிரஞ்சீவி வீடு வந்தவன் ஹாலில் இருந்த கல்கியைக் கண்டுகொள்ளாது அவனது அறைக்குள் போய்விட்டான். உடைமாற்றி சாப்பிட டைனிங் ஹால் வர கல்கி சூடாக தோசையைக் கொண்டு வந்து அவன் தட்டில் பரிமாற அவன் விழி அவளிடம் வினாவியது. அவளுக்காக அப்பாவிடம் கூட பேசியவன் இன்னமும் அவளிடம் பேசாமல் இருக்க அது வருத்தமாகவும் கோபமாகவும் கல்கிக்கு உருமாற, வேண்டுமென்றே
“வசந்திக்கா சட்னி வைச்சிட்டுப் போய்ட்டாங்க. தோசை சூடா நானே செஞ்சுக்கிறேன் சொல்லிட்டேன்” என்றவள் கிச்சனுக்குள் போக, வரப்ரசாத் தோசையைப் பிரித்துப் பார்க்க உள்ளே எர்ர காரம். அடுத்த தோசைக் கொண்டு வந்தவளைப் பார்த்தவன்
“நான்தான் செஞ்சேன், ஏன் நான் செஞ்சா சாப்பிட மாட்டீங்களா?” என்றாள் கல்கி. பதில் பேசாமல் அவன் சாப்பிட இப்போதும் இவன் என்னிடம் சாதாரணமாய்ப் பேசமாட்டானாமா என்ற கோபம் சரமாரியாய் அவளுள் எழ
“எனக்காக அப்பா கிட்ட எல்லாம் பேசுவீங்க, எங்கிட்ட பேச மாட்டீங்களா?”
சிரஞ்சீவிக்குக் கல்கி பேசிய வருத்தம் இன்னும் இருந்தது. கூடவே அவனது ஈகோவும் தலைத்தூக்கியது.
“வாட் உனக்காகவா? உனக்காக ஒன்னும் நான் செய்யல, எங்கம்மாவ யாரும் குறை சொல்லக் கூடாதுன்னுதான் மாமா கிட்ட பேசினேன்” என்றதும் கல்கிக்கு கடுப்பாகியது. ஒன்றும் பேசாமல் அவள் கோபத்துடன் கிச்சனுக்குள் போய் அடுத்தடுத்து தோசைகள் அவனுக்கும் அவளுக்குமாக செய்தவள் உண்ண வந்து உட்கார்ந்தாள்.
“இந்த தோசை எனக்காக செஞ்சது போல?” நக்கலாய் அவன் கேட்டாலும் உள்ளே நாயகியின் செயலை நயந்தான்(விரும்பினான்).
“அவுனு? உனக்கும் காரம் பிடிச்சதால்தான் எர்ர காரம் செஞ்ச நீ?” என்ற சிரஞ்சீவி வேண்டுமென்றே தோசையில் கை வைக்காமல் அவளை சீண்டினான். அவன் சாப்பிடாமல் இருக்க அந்த செய்கையில் கல்கிக்கு கோபம் எழ
“என்ன இப்போ? உங்களுக்காகத்தான் செஞ்சேன். எனக்காக அப்பா கிட்ட பேசுனீங்கன்னு நினைச்சு செஞ்சேன். அதான் இல்லைன்னு சொல்லிட்டீங்களே?” என்று கல்கி முகம் திருப்ப
“கல்கி, இங்க பாரு?” என்று சிரஞ்சீவி சொல்ல, இவன் சொன்னால் நான் கேட்கனுமா என்று அவள் அப்படியே இருந்தாள்.
“அம்மடூ! இக்கட சூடு ரா பிள்ளா” என்று அவன் சொல்ல
“சுடத்தான் போறேன் உங்களை, அப்பா கிட்ட பேசிட்டு எங்கிட்ட சொல்லவே இல்லை. ஏன் நம்ம இதுக்கு முன்னாடி சண்டை போட்டதில்லை? நீங்க சொல்றதுதான் எப்பவும் சரியா? இரண்டு நாளா எங்கிட்ட பேசாம இருந்துட்டு இப்போ என்ன அம்மடூ?” என்றாள் முறைத்த விழிகளுடன்.
“ஏன் நீ எங்கிட்ட பேச வேண்டியதுதானே?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
உண்மையில் சிரஞ்சீவிக்கு அவளிடம் பேசாமல் இயல்பாகவே இருக்க முடியவில்லை. ஆனால் காதலுடன் அவனில் சில கட்டுப்பாடுகளும் தனக்கென விதித்துக் கொண்டான். அதனாலேயே கொஞ்சம் தள்ளி இருந்துகொண்டான்.
“அது? நீங்கதான் என்னைக் கோபமா பேசுனீங்க. நான் ஒன்னும் பேசல” என்று கல்கி சொல்ல இருவரின் தோசையும் ஆறிக்கொண்டிருக்க
“ஓகே! முதல்ல சாப்பிடலாம். அப்புறம் பேசிக்கலாம்” என்றவன் சாப்பிட கல்கியின் கயல்விழிகள் அவனிடம் வினா வைத்து ஆர்வமாய் அவன் விழிகள் பார்க்க, அவள் விழியின் மொழி படித்தவன்
“தோசை எங்க பின்னி செய்ற அளவுக்கு நல்லா இருக்கு” என்றான் பாராட்டாக. தனக்கென அவள் செய்த செயலில் அவன் நெஞ்சுக்குள் சாரல்!!
“நான் ஜஸ்ட் சாப்பிட்டதும் நல்ல இருக்கவும் சொன்னேன்” என்றவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு. எவ்வளவு ஈகோ இவளுக்கு என்று எண்ணிக்கொண்டான்.
இருவரும் உண்டு முடிக்கவும் “எப்படி அப்பாவை பேசி ஒத்துக்க வைச்சீங்க” என்று கல்கி ஆர்வமாய்க் கேட்க
“ஒத்துக்கிற மாதிரி பேசிதான்” என்றான் தோளைக் குலுக்கிக் கொண்டு.
“ப்ச், அப்பாவை எல்லாம் கன்வீன்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம்.”
“கஷ்டமா இருந்தாலும் செஞ்சுட்டேன் தானே?” என்று வரப்ரசாத் கேட்க
“எங்கப்பா ஏதோ தங்கச்சி பையன் சொல்றாருன்னு ஒத்துட்டு இருப்பார்” என்று கல்கி சொல்ல
“எப்படியோ உனக்கு உன் ஆசை நிறைவேறிடுச்சுல, ஜாலியா போய்ட்டு வா” என்றான்.
கல்கி வேண்டாம் என்று வாய் சொன்னாலும் அவள் விழிகளில் இருந்த விருப்பம் கண்டுகொண்டான் சிரஞ்சீவி. அதனால் அவளுடன் சண்டையிட்ட அன்றே உதயமூர்த்தியிடம் அழைத்துப் பேசினான். அவர் ஒன்றும் உடனே எல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை.
“உங்களுக்குத் தெரியாம செய்ய வாய்ப்பு இருந்தும் கல்கி அதை செய்யல, அப்போ அவளோட நியாயமான ஆசையை நிறைவேத்தனும்தானே மாமா? உங்களோட பயம் தேவையில்லாதது. நாளைக்குத் திரும்பிப் பார்த்தா காலேஜ்ல வாங்குற மார்க்ஸ் விட இதுதான் சந்தோஷம் தரும். நீங்க உங்க ப்ரண்ட்ஸ் கூட எங்கேயும் போக மாட்டீங்களா என்ன? அம்மா உங்களை ஏமாத்தினதால் கல்கியைத் தண்டிக்காதீங்க மாமா”
“கூடவே ஸ்டாஃப்ஸ் போவாங்க. நூறு பொண்ணுங்க வர இடம், கல்கிக்கு ஆசையிருந்தும் உங்களுக்குப் பிடிக்காதுன்னு போக மாட்டேன் சொல்றா” என்று கிட்ட தட்ட ஒரு மணி நேரம் பேசியவன்
“இப்பவும் முழுமனசோட அனுப்பறதுன்னா அனுப்புங்க. நான் பேசினேன் கூட சொல்லவேண்டாம். உங்களுக்கு அனுப்ப இஷ்டம்னா மட்டும் இதைப் பத்தி பேசுங்க. இல்லைன்னா வேண்டாம்” என்று சொல்லியிருக்க அவன் சொல்வதில் இருந்த நியாயம் அவருக்குப் புரிந்தது, கூடவே சொன்னவன் மேலும் ஒரு அபிமானம் இருந்தது. அதற்காகவே ஒத்துக்கொண்டார்.
***************************
கல்கி இரண்டாம் ஆண்டில் இருந்தாள். கல்லூரி தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தது. சென்ற செமெஸ்டரிலும் அவள்தான் முதல் மாணவி. இந்த ஓராண்டில் மாதம் மாதம் உதயமூர்த்தி வந்து மகளைப் பார்த்துவிடுவார். தையல் நாயகி கூட இரு முறை வந்துவிட்டார்.
சிரஞ்சீவியின் காதல் எல்லைக் கடக்காமல் மட்டுமல்லாது சொல்லைக் கடக்காத காதலாகவும் இருந்தது! வார்த்தைகளில் கூட கவனமாய்த்தான் பேசினான்.
அகமெல்லாம் கல்கிக்கான அன்பு அருவியென பொழிந்தாலும் அச்சமும் இருந்தது. ஒருவேளை அவளுக்கும் தன்னைப் போல் ப்ரியம் இல்லையென்றால் என்ற பயம், அப்படி இல்லாமல் போனால் என்று நினைக்க கூட முடியவில்லை. ஒன்றின் மீது உண்மையான ப்ரியம் வைத்தால் ப்ரபஞ்சமே அதற்காக உதவி செய்யும் என்ற வரிகளுக்கு ஏற்ப தன் மனதை திடப்படுத்தினான்.
காதல் என்ற சொல்தான் இல்லை. மற்றபடி செயலில்களில் அவளின் மீதான அன்பு வெளிப்பட்டுவிடும், அவளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித்தருபவன் தேவையென்றால் கண்டிப்புடனும் நடப்பான்.
காதலுக்கு மரியாதை செய்தான் என்பதை விட மரியாதையாய்க் காதல் செய்தான்!
கல்கிக்கு அவன் மீதான பாசம் நித்தமும் பெருகிக் கொண்டே போனது. அவளின் கனவுகளின் நாயகனாய்! கற்பனையின் நிஜமாய் இருந்தான் வரப்ரசாத்.
அவன் சொல் மீது மரியாதை உண்டு! செய்கை மீது ரசனை உண்டு! மொத்தத்தில் அவன் மீது ஈர்ப்பு உண்டு!
ஆனால் அந்த ப்ரியத்தின் வகைதான் வஞ்சிக்குத் தெரியவில்லை. பிரிய நேரிடும்போதுதான் ப்ரியம் உணர்வாளோ என்னவோ?
வரப்ரசாத் எதாவது சொன்னால் எதிர்த்துப் பேசாமல் கல்கி கேட்டுக்கொள்ளமாட்டாள். அவனுக்கும் காதல் இருந்தாலும் கண்டிப்புடனே அவளிடம் நடப்பான்.
அந்த வாரம் கல்கிக்கு இண்டர்னெல்ஸ் இருக்க, ஹாலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். சிரஞ்சீவியிடமிருந்து அப்போது போன் வர
“சொல்லுங்க மிஸ்டர். காரம்” என்றாள்.
“கல்கி! என்னோட மாமா ஒருத்தவங்க ஃபேமிலியோட நம்ம வீட்டுக்கு வராங்க. கொஞ்சம் டீ மட்டும் போட்டு வைக்கிறியா? நான் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு டென் மினிட்ஸ்ல வீட்டுக்கு வந்துடுறேன்’ என்று சொல்லவும்
“டீ தானே பண்ணிடுறேன்” என்று சொன்னவள் அவன் சொன்னது போல் தேனீர் கலந்து முடிக்க, சிரஞ்சீவி வந்தவன் சிரூடையை மாற்றிவிட்டு வர, அந்த மாமா அவர் மனைவி மகளுடன் வீட்டிற்கு வந்துவிட அவர்களை வரவேற்றவன் கல்கியை அறிமுகம் செய்தான். அவர்களுக்குத் தமிழ் சுத்தமாய்த் தெரியாது என்பதால் இவனே எல்லாம் பேசியவன் கல்கியிடம்
“உனக்கு எக்ஸாம் இருக்குல போய் படி” என்று சொன்னவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
அதுதான் கல்கியை உறுத்தியது! அவ்வளவு இயல்பாய் சரளமாய் அவர்களுடன் தெலுங்கில் அவன் உரையாட கல்கிக்குக் கோபம் வந்தது. அவளுடன் அவன் இப்படி பேச மாட்டானே. அவள் சொல்வதைக் கேட்டபடி அமைதியாக இருப்பான்.
அவனின் சொந்தம் என்றதும் எப்படி சிரிக்க சிரிக்க வாய் ஓயாமல் பேசுகிறான் என்று எரிச்சல் வந்தது. யாரிடமோ அவன் பேசிவிட்டு போகட்டும் என்று நினைக்க முடியவில்லை. அஞ்சனாவிடம் வேறு யாரும் நெருக்கம் காட்டி அக்கா என்று பேசினால் கூட கல்கிக்குப் பொறுக்காது. ஜெகதீஷைக் கூட
“அத்தைப் பசங்க முக்கியமா இல்லை உன் மாமா பசங்க முக்கியமா?” என்று கேட்டு வம்பிழுப்பாள்.
அதனால் யமுனாவிற்கு அழைத்தவள் “உங்க ப்ரசாத் ரொம்ப மோசம்” என்று ஆரம்பித்து
“அவர் சொந்தங்காரங்கன்னதும் உங்க பையன் நல்லா பேசுறார். ஒருவருஷத்துல இவ்வளவு நேரம் எங்கிட்ட கூட பேசினதில்ல” என்று படபடவென பொரிந்து தள்ளியவள்
“நான் ஏன் அவங்க பேசுறதைக் கேட்க போறேன். உங்க மாமா முகத்தைப் பார்த்தாலே அவர் பேசுறது எனக்குப் புரியும்” என்றார் யமுனா.
“அடடே! ஓவர் லவ்ஸூ போங்க” என்றவள்
“ஏன் அத்த? மாமா சொந்தக்காரங்களை எல்லாம் பார்க்கும்போது எங்களை எல்லாம் நினைப்பீங்களா நீங்க?” என்று கேட்டாள் கல்கி. யமுனாவுடன் கல்கியின் பேச்சு இயல்பாய் வந்தது. அவர் எதுவும் தவறாக நினைக்க மாட்டார் என்று தெரியும் அதனால் மனதில் உள்ளதை மங்கை கேட்டுவிட
“அது எப்படி நினைக்காம இருக்க முடியும்?”
“அப்போ ஏன் எங்களைத் தேடி வரவே இல்லை?”
“எப்படி கல்கி வர சொல்ற? எங்கப்பா வீட்ல வேலை செய்ற ஆளுங்க கூட அவரோட ஜாதிக்காரங்களா இருக்கனும்னு நினைக்கிறவர். அவர்கிட்ட வேற மொழி பேசுற ஒருத்தரைக் காதலிக்கிறேன்னு சொல்ற தைரியம் எனக்கில்லை. அதனால நாங்களே கல்யாணம் செஞ்சுக்கிட்டோம், ப்ரசாத் பொறந்தப்போ பேரனைப் பார்த்தாச்சும் மனசு மாறுவார்னு வந்தேன். அவர் எங்களை ஏத்துக்கல, அவங்களும் என்னை ஒதுக்கிட்டாங்க. நானும் விலகிட்டேன்”
“ஆனா இவரோட சொந்தம் பார்க்கிறப்போ மனசுல ஏக்கம் வரும். அதையும் மீறி ஒரு பிடிவாதம் அவங்க உன்னை நினைக்கலதானே? தப்பு செஞ்சா கூட மன்னிக்கலதானே? அப்படின்னு தோணும்” என்ற யமுனா
“இப்போ நீ ஏன் அவங்க பேசுறதைக் கவனிக்கிற? அவனுக்கு தெலுங்கு ரொம்ப நல்லா வரும். ஏதோ அங்க காலேஜ் படிச்சு தமிழ் பேசுறான், இங்க என்னோட மட்டும்தானே பேசுவான். அதனால கூட ரொம்ப பேசி இருப்பான் கல்கி. உனக்கு எக்ஸாம்னு சொன்னதானே படி முதல்ல” என்று கொஞ்சம் அதட்டலாய் சொல்ல
“ஓகே ப்ரோஃபஸர்” என்று சொல்லிவைத்தாலும் அவன் ஏன் என்னிடம் இவ்வளவு பேசவில்லை என்ற கேள்வி அவள் மனதை குடைந்தது. பேசவேண்டும் என்ற ஆவல் பெருகியது. பேசாமல் இருப்பவன் மீது கோபம் கூடியது. அந்த வாரம் முழுக்க இதனை மனதில் வைத்து சரியாக அவனிடம் பேசவில்லை கல்கி. இவளுக்குத் தேர்வு என்பதால் இரவு உணவின் போது கூட அவளுடன் பேசாமல் தாமதாகவே வந்து உண்பான் சிரஞ்சீவி. தேர்வு முடிந்தும் பாவை பாராமுகம் காட்ட சிரஞ்சீவி என்னவென்று விசாரிக்க
கல்கியின் பேச்சில் அவனுக்கு ஆனந்தம் பாதி என்றால் அதிர்ச்சி மீதி. தான் பேசவில்லை என்று அவள் நினைக்கிறாள் என்ற எண்ணம் ஆனந்தம். அவள் பேச்சை அவன் ரசிப்பதை எப்படி சொல்வான்? அதுதானே அவன் அமைதியின் காரணம்.
கல்கி எப்போதும் என் பேச்சை வீட்டில் காது கொடுத்தே கேட்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்க, இவன் அவள் மொழிகளை விழியகற்றாமல் உள்வாங்கிக் கொண்டிருப்பான், உள்ளத்தினால் ரசித்திருப்பான்.
“உங்கிட்டவும் நல்லாதானே கல்கி பேசுறேன்” என்று சிரஞ்சீவி சமாதானம் செய்ய
“என்ன அவுனு? ஹம்ம் அதானே? அந்த ஆந்திரா மாமா பொண்ணுட்ட மட்டும் செல்லி செல்லின்னு எத்தனை செல்லமா பேசுனீங்க?” என்றதும் அவனுக்கு சிரிப்பு வர, அவளின் பொறாமை உணர்வில் இவனுக்கு காதல் பெருகியது.
“கூகுள் எல்லாம் யூஸ் பண்ண மாட்டியா?” என்று சிரஞ்சீவி தீடீரென கேட்க
“ஏன்?” என்று கல்கி பார்க்க
“செல்லின்னா தங்கச்சி” என்றவன் சிரிப்புடன் அறைக்குள் போக, கல்கியோ தங்கச்சியா? என்று ஆசுவாசம் அடைந்தாலும் தங்கச்சினா கூட என்னை விட முக்கியமா என்று எண்ணியது அவள் மனம்.
அறைவாசலில் நின்று பாவை பாவனைப் பார்த்தவன்
“உன்னையும் வேணும்னா செல்லமா செல்லின்னு சொல்லவா?” என்று கேட்க கல்கிக்கு அதிர்ச்சி. என்னை தங்கை என்பானா இவன் என்ற எரிச்சலில்
“இந்த செல்லி பல்லின்னு எல்லாம் என்னை சொல்ல வேண்டாம். நான் ஒன்னும் உங்க தங்கச்சி இல்லை, மாமா பொண்ணு பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் முறைப்புடன். ஒருவாரம் சென்றபின் கல்கி டீவியில் தெலுங்குப் படம் பார்த்தாள். கையில் ஒரு பேனாவும் பேப்பரும் இருந்தது. அவளைப் பார்த்த சிரஞ்சீவி
“என்ன இந்த சேனல் பார்க்குற? உனக்குப் புரியறதுல வைச்சுப் பார்க்க வேண்டியதுதானே கல்கி” என்றவன் ரீமோட்டை எடுக்கப் போக அவனிடமிருந்து அதனைப் பறித்தவள்
“புரியனும்னுதான் பார்க்கிறேன்” என்று டீவியில் கவனமானாள். சிரஞ்சீவியும் கல்கியை சில மாதங்களாய்ப் பார்க்கிறான், அவனுடன் சண்டையிட்டாலும் கூட அவளாகவே பேசுகிறாள். அவனுக்குப் பிடித்த உணவுப் பண்டங்களை அம்மாவிடம் கேட்டு செய்கிறாள்.
கல்கிக்கும் தன் மீது காதலோ என்று தோன்றினாலும் அவளிடம் வாய்விட்டு கேட்க முடியவில்லை. அவளின் படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தான். இப்போது அவளைப் பார்க்க டீவியில் பேசபேச சப்டைட்டிலைப் படித்து அவள் குறிப்பு எடுக்க,
“அம்மடூ! ஏமிரா இதி? நோட்ஸ் எடுக்கிறியா நீ?” என்று சிரித்துவிட்டு
“தெலுங்கு தெரிஞ்சு என்ன செய்யப்போற நீ? உனக்கு அவசியப்படாது” என்றான்.
“எனக்கு அவசியம் தெரிஞ்சுக்கிறேன் உங்களுக்கு என்ன?” என்றாள். யமுனா சொன்ன ‘அவனுக்குத் தெலுங்கு நல்லா தெரியும் அதனால சரளமா பேசுறான்’ என்ற வார்த்தைகள் இப்படி கல்கியைத் தூண்டிவிட்டிருந்தன. அவனுக்கு சரளமாய்த் தமிழ் தெரியவிட்டால் என்ன நான் அவன் மொழி கற்கிறேன் என்ற எண்ணம். அப்போதாவது அவன் என்னிடம் நிறையப் பேசுவானா என்ற எதிர்ப்பார்ப்பு.
ஆனால் இந்த எண்ணமெல்லாம் ஏன் எனக்கு என்ற கேள்வியில்லை அவளிடம். அவனைப் பிடித்திருந்தது.! அவனுக்குப் பிடித்ததெல்லாம் பிடித்திருந்தது! அது மட்டுமே அவளுக்கு. கல்கியின் இந்த பரிமாணத்திலும் அவளின் பார்வையிலும் சோஃபாவின் பின் நின்றபடியே குனிந்து முன்னே இருந்தவளின் முகம் பார்த்து
“பேசாமயே ஒருத்தர் மனசைப் புரிஞ்சிக்கறவங்களுக்கு மொழி தேவையில்லை. உனக்கு இது எப்பவுமே அவசியப்படாது கல்கி!” என்று முதல்முறை தன்னவளிடம் காதல் மொழி பேச, பேச்சற்று அவன் விழிகளைப் பார்த்தாள் கல்கி.!