“சாப்பிடலன்னா அப்படியே விடுவியா?” என்று ஜெயன் சத்தமிட, வினயன் எழுந்தவன்
“ஜெயேட்டா! இதெல்லாம் அதிகம், நான் என்ன கெஞ்சவா முடியும்? வேணும்னா நீ போய் கூப்பிடு.” என்றான் கடுப்பாக.
“போடா!” என்ற ஜெய், ஊர்மி இருந்த அறைக்கதவை தட்ட, ஊர்மிளா கதவை திறந்தாள். திறந்தவளை பார்த்த ஜெய் திகைத்தான். ஈர முகம் அவனை அசைத்தது, கண்கள் சிவந்து இருக்க , ஊர்மிளாவை அப்படி பார்க்க முடியவில்லை. ஜெயனுக்கும் மனது கஷ்டமாகி போக,
“சாப்பிட வா ஊர்மி” என்றான்.
“இல்ல, எனக்குப் பசிக்கல… எனக்கு ஈவினிங் எதாவது ட்ரைன் இல்ல ஃப்ளைட் இருக்கா சொல்றீங்களா? நான் ஊருக்குப் போகணும்” என்றதும் ஜெய் அதிர்ந்தான். இன்று போய்விட்டால் பின் எப்படி பார்ப்பான், அவன் பிரியம் என்னாகும்? ஒரு நொடி திகைத்தாலும், சமாளித்துவிடலாம் என்று நினைத்தான்.
“ஊர்மி! உன் பெர்சனல் நான் பேச விரும்பல. பட் இப்படியே நீ உன் ஊருக்குப் போனா உன் அம்மா, அப்பா ஃபீல் பண்ண மாட்டாங்களா? உன் கவலை அப்படியே முகத்துல தெரியுது, அப்பா, ராஜீவன் மாமா வரட்டும்! நீ முதல்ல சாப்பிடு, நாளைக்குப் போகலாம்”
“எங்க வீட்டுக்கு வந்துட்டு நீ பட்டினியா போகக் கூடாது! ப்ளீஸ் வா, சாப்பிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு, நாளைக்கு ஊருக்குப் போகலாம்” என்றான். ஜெய் சொல்வது ஊர்மிக்கு சரியாகப்பட, தலையசைத்தவள்
“கொஞ்ச நேரத்துல வரேன்” என்றாள். ஜெய் சாப்பாடு எடுத்து வைத்து தம்பியை அழைக்க,
“நான் சாப்பிட்டேன், ஜெயேட்டா நான் மூணார் ரிசார்ட் போறேன்.” என்று கிளம்பிவிட்டான்.
ஜெயனும் அதுவரை உண்ணாது இருந்தவன், ஊர்மிளாவோடு உண்டான். ஊர்மிளா மனது அம்மாவிடம் போக வேண்டும் என்றே நினைத்தது. அவரிடம் அழ வேண்டும் போல, இருக்கும் மனபாரம் எல்லாவற்றையும் அப்படியே தூக்கியெறிய வேண்டும் என்ற உணர்வு. ராஜீவன் அவளை பிரபாகரனிடம் கொடுத்த பின்னாவது ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தியிருக்கலாம், பெற்றவர்களோடு பேசியிருக்கலாம்.
அப்படியென்ன இவருக்கு கோபம்? அப்படியென்ன காதல்? அந்த காதலின் சின்னமான அவளுக்கே காதல் பிடிக்கவில்லை. ஆனால் ராஜீவனை வாழ வைப்பதே அவர் காதலும், காதலின் நினைவுகளும், அவர்களின் பிரியத்தின் சின்னமான ஊர்மிளா என்பதும் அவளுக்குத் தெரியாது.
உண்டு முடித்தாலும் ஊர்மிளா முகம் தெளியவில்லை. ஜெயனுக்கு அவளை அப்படி பார்க்க பிடிக்கவில்லை, மாற்றம் எல்லாம் நாம் கொண்டு வருவதுதானே? கேரளா போன்ற இயற்கையின் கொடையையும் அதன் கொடுமையையும் அனுபவித்து, மழை காலங்களை மனவுறுதியோடு சமாளித்துப் போராடும் பூமியில் பிறந்தவன் அல்லவா? மாற்றங்களை ஏற்பவன், கூடவே மாற்றவும் தெரிந்தவன்.
“ஊர்மி! இங்க வீட்ல இருந்து என்ன பண்ண போற? நாளைக்கு நீ காலையில ஊருக்குப் போகலாம், இப்போ என்னோட சூர்யநெல்லி வா. அங்க நம்ம கேம்ப் சைட் இருக்கு, இப்போ கிளம்பினா கூட சன் செட் பார்க்கலாம். தேவிகுளம் வந்துட்டு அதை மிஸ் பண்ணாத, பிரச்சனை எல்லாம் சோகமா இருந்தா போயிடாது, நம்மதான் அதை கடந்து போகணும்! கண்டிப்பா உனக்குப் பிடிக்கும், மனசு மாறணும்னா கொஞ்சம் இடமும் மாறணும். நாளைக்கு நீ உங்க வீட்டுக்குப் போகும்போது சிரிச்ச முகமா போக வேண்டாமா?” என்று ஜெயன் பேசியது வேலை செய்தது.
பத்து நிமிடங்கள் யோசித்தவளுக்கு வீட்டில் தனியாக இருக்க வேண்டுமே என்ற எண்ணம் ஜெயனுக்கு சம்மதம் சொல்ல வைத்தது.
“வினய் எங்க?” என்று கேட்க
“அவன் மூணார் போயிருக்கான், என்னோட வா. பத்திரமா உன்னை கொண்டு வந்து விடுறேன் மோளே” என்று ஜெயன் கொஞ்சம் கடுப்பாக சொல்ல, ஊர்மிளா முகத்தில் சின்னதாய் புன்னகை.
“ஷூ இருந்தா போட்டுக்கோ, இல்லைனா இரு” என்று அவளுக்குப் பொருத்தமாக ட்ரக்கிங்க் ஷூ கொண்டு வந்து கொடுத்தான்.
“அங்க நடக்க இதான் ஈஸி” என்றவன் ரொனால்டோவுக்கு உணவு வைத்து, கரும்பலகையில் செய்தி எழுதிவிட்டு ஊர்மிளாவோடு சூர்யநெல்லி புறப்பட்டான். போகும் வழியில் அரை மணி நேரம் இருவரிடமும் பேச்சில்லை.
ஊர்மிக்கு அவள் கவலை, ஜெயனுக்கு நாளை போய்விடுவாளோ, இவளுக்கு என் மனதை எப்படி சொல்ல என்று அவன் கவலை! பயணம் தொடங்கிய போது இருந்த மன நிலை அது தொடரவும் மாறியது, இரு பக்கமும் தேயிலை தோட்டங்கள், மலைகள் இருக்க மேகம் மலையோடு தொட்டு பேசியது. தேவிகுளம் காற்றோடு குளிர் கலந்திருக்க, ஜெயனின் மனது ஆசுவாசம் கொண்டது.
ஊர்மிளாவின் கண்களும் சிறிது நேரம் அமைதியாக மூடியிருந்தாலும், அந்த மலையின் வளைவு நெளிவுகளில் அப்படி ஒன்றும் உறங்கமுடியவில்லை. கண்களை திறந்து சுற்றிலும் பார்க்க, காஞ்சிபுரத்தின் நகரத்தையே பார்த்த பழகியவளுக்கு இந்த பசுமை ஈரமாய் மனதை தொட்டது. இயற்கை அமைதி கொடுத்தது.
ஊர்மிளா கண்விழிக்கவும் ஜெயன் அவளிடம், “பாட்டு போட்டுக்கவா ஊர்மி?” என்று கேட்க, அவள் தலையசைத்தாள்.
‘பாடம் பூத்த காலம்
பாடான் வன்னு நீயும்
பொன்னாட்டின் அப்புறத்து நின்னும்
புன்னாரம் சொல்லி நீ வன்னு’ என்று பாடியபடி வண்டியை செலுத்தினான்.
(சோலைகளில் பூக்கள் நிறைந்திருந்த காலத்தில்
நீ எனக்காக பாடி வந்தாய்
பொன்னாற்றின் அக்கரையிருந்து
எனக்கு அரவணைப்பு தந்தாய்)
முதலில் ஊர்மிளா அவன் பாடுவதை கவனிக்கவில்லை. மெல்ல தொடங்கி கொஞ்சம் சத்தமாகவே பாட ஆரம்பித்தான்.
“தூரே பகலிண்டே திரி மெல்லே தாழும்போல்
கிராமம் மிழி பூட்டும்போல்
பாடி தீராத்த பாட்டுமாய் ஸ்வப்னத்தின்
வாதிலில் வன்னவளே
நறுந்தேன் மொழியே, இனி நீ அறியும்
ஹிருதயம் பறையும் கத கேளு!”
(நாள் இருளும் போது
ஊர் கண்மூடும் நேரம்
என் பிரியமானவளே, நீ என் கனவில்
உன் தீராத பாட்டோடு வந்தாய்
நறுந்தேன் மொழியே, என் இதயத்தின் கதையினை கேளு)
ஜெயனுக்குப் பிடித்த பாட்டு, அவன் ப்ளேலிஸ்ட் போட்டு அவன் மனம் போல் பாட, அதுவோ அவன் மனதினை பாடியது. ஜெயனுக்கு அந்த நிமிடங்கள் மிகவும் ரசனைக்குரியவை.
அருகே பிடித்த பெண், பிடித்த பாடல், அவனின் ஊர் என்று அவன் முகத்தில் அழகு கூடியிருந்தது, அவன் அப்பா பார்த்திருந்தால் சுந்தரன் என்று சொல்லியிருப்பார். என்ன அருகே இருந்த சுந்தரிக்குத் தெரியவில்லை.
ஜெயன் பாடியபடி வண்டி ஓட்ட, “என்ன ஜெய், பாட்டு எல்லாம் பாடுறீங்க?” அவள் கேட்க,
“உனக்குப் புரியுதா?” என்று கேட்டான். புரியவும் வேண்டும், புரிய வேண்டாம் என்று இருமுக உணர்ச்சி. புரிந்தால் என்ன சொல்வாள் என்ற ஆவலில் கேட்டது அவன் காதல்! அதே நேரம் புரியவில்லை என்றால் கூட பரவாயில்லை பிடிக்கவில்லை என்றால்?
“தமிழ் பாட்டெல்லாம் சார் கேட்க மாட்டாரா?” ஊர்மி கொஞ்சம் இயல்புக்குத் திரும்பி கேட்டாள்.
“கேட்பேன், ரொம்ப ரேர்! எங்க ஊர்ல இதானே ஃபேமஸ், லாலேட்டனோட ஒன் ஆஃப் தி பெஸ்ட் சாங்! எம்.ஜி ஸ்ரீகுமார் சார் பாட்டு. லாலேட்டனை உனக்கு உன்னை போல் ஒருவன், இருவர்லதானே தெரியும், ஆனா எனக்கு அவரை அவரோட சாக்லேட் பாய் காலத்துல இருந்தே தெரியும். எங்க குட்டிக்காலம் எல்லாம் அவரோட மம்முக்கா, ஜெயராமேட்டன், சுரேஷேட்டன் படம் பார்த்து வளர்ந்தவங்க.” என்று அந்த நாள் ஞாபகத்தை அவன் ரசித்து, நினைத்து ஊர்மிளாவிடம் பகிர்ந்தான்.
“ஹலோ! எனக்கு ஜார்ஜ் குட்டியைத் தெரியும். நான் மூவி க்ரிடிக் தெரியுமா?” ஊர்மிளா கொஞ்சம் பெருமையோடு சொல்ல
“ஓஹ், பின்னே?” என்று அவன் சிரிப்புடன் கேட்க
“என்ன?” என்று அவள் பார்த்தாள்.
“அப்புறம்?” என்று அவன் சொல்ல
“காஞ்சிபுரம், விழுப்புரம், அப்புறம்…” என்றதும் அவன் முறைக்க
“இல்ல, தமிழர்கள் எங்க இருந்தாலும் தமிழ் உணர்வோட இருப்பாங்க சொல்வாங்க, வெளி நாட்டுல இருந்தா கூட… நீங்க பார்டர் பக்கம் இருந்துட்டு… லாலேட்டன், மம்முக்கா… சொல்றது என்ன? பாட்டு கேட்கிறது என்ன?” என்று அவர்கள் உரையாடல் சகஜமாக சென்றது.
“ஹாஹா! யார் எப்படியோ? தேவிகுளம் என் ஊர்! எங்க கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்தே இங்க இருக்கோம். எங்களுக்கு வாழ்க்கைக் கொடுத்தது இந்த ஊர், என் ஊரோட என் உணர்வு கலந்திருக்கு, எனக்குப் பிடிச்ச விஷயங்கள் எல்லாம் என் ஊர்ல இருக்கு, என் ஊர் மேல எனக்கு நன்றி இருக்கு, பாசமிருக்கு! எல்லாரும் பாராட்டணும்னு நான் என்னை வேறயா அடையாளம் பண்ணிக்க மாட்டேன்! தமிழ் பேசுறதால நான் தமிழ் நாட்டுக்காரன் இல்லையே! அப்படி சொன்னாலும் அது பொய், எனக்கு தமிழ் நாட்டோட என்ன கனெக்ட் இருக்கு?”
“எனக்கு தாய்மொழி தமிழ், மரியாதை இருக்கு. அந்த மொழி தெரிஞ்சவங்க கிட்ட அந்த மொழில பேசுறது மரியாதை! ஆனா கேரளம் என் ஊர்! இங்கதான் எனக்கு எல்லாம்” என்று அவன் நிலை மாற்றாமல் சொன்னவன் மேல் ஊர்மிளாவுக்கு மரியாதை வந்தது.
ஆதாயத்திற்காக, அரசியலுக்காக மொழியுணர்வை பேசுபவர்கள் மத்தியில் அவனின் இந்த நிலை மாறாத நியாயம் புரிய, புன்னகை அவளிடம்.
பேசியபடி சூர்ய நெல்லியில் இருக்கும் அவர்கள் கேம்ப் சைட் வந்துவிட்டான் ஜெயன். ஊர்மி இறங்கி நின்றாள்.
“சாக்கோ!” என்று கத்தினான். ஜீப் சாவியை அவனிடம் கொடுத்தவன் ஏதோ சொல்லிவிட்டு ஊர்மியை அழைத்துக்கொண்டு நடந்தான்.
“ஊர்மி! நடப்பியா? ட்ரெக் பண்ணி பழக்கம் இருக்கா?” என்று சந்தேகமாகக் கேட்க, ஊர்மிக்கு சட்டென ரோஷம்.
“நான் திருப்பதி மலையேல்லாம் ஏறி இருக்கேன், ஐநூறு படி இருக்க கோவில் எல்லாம் ஏறியே போயிருக்கேன்” பெருமையாக பேசினாள் ஊர்மிளா. ஜெயனுக்கு அவள் பேச்சில் சிரிப்பு எழ, அதனை அடக்கி
“அடிபொலி! அப்போ என்ன வா இப்போ ஸ்டார்ட் பண்ணினா சன் செட் முன்னாடியே போயிடலாம் ஊர்மி” என்றவன் “ஷூ நல்லா போட்டுக்கோ, வாஷ்ரூம் இங்க கீழ ஸ்டெப்ஸ் பக்கமா இருக்கு, போய்ட்டு வா” என்று முன்னறிவிப்பு எல்லாம் கொடுத்தான். ஊர்மிளாவும் வாஷ்ரூம் சென்று வந்து,
“ரெடி” என்று ஊர்மிளா வர
“ஃபாலோ மீ” என்று சொல்லி ஜெய் முன்னே நடக்க, ஆரம்பம் எல்லாம் நன்றாகவே இருந்தது. முதலில் சூர்ய நெல்லியில் அவர்கள் கேம்ப் சைட் பக்கமிருந்து செங்குத்தாக தார் சாலை இருக்க, ஊர்மிக்கு ஜெயனுடன் பேசியதில் மனதில் அப்பா, அம்மா, ராஜீவன் என்ற எண்ணங்கள் மேலே மிதக்கவில்லை.
இயல்பாகவே இருந்தாள் ஊர்மி, உற்சாகம் வேறு அந்த மலையைப் பார்க்கவும். ஒரு முறை கூட மலையேற்றம் செய்யாமல், அவனிடம் ஜம்பமாகப் பேசியதால் கொஞ்சம் துறுதுறுப்போடே அந்த தார்சாலையில் ஏறிவிட்டாள்.
அந்த தார் சாலை முடியும்போதே மூச்சு வாங்கியது. உயர ஏற ஏற ஆக்சிஜன் குறைய, மூச்சுக்கு சிரமப்பட்டாள். ஜெயன் மெதுவாகவே நடந்தான், ஊர்மிளாவோ அவனை முந்தி போனவள் முடியாமல் நிற்க,
“கொஞ்சம் மெதுவா நடக்கணும். ரேஸ் இல்லை, பொறுமையா பார்த்து நட!” என்று சொல்லி முன்னே நடந்தான். ஊர்மிளா ஒரு இருபது நிமிடம் அமைதியாக நடந்தாள். தார் சாலை முடிந்து, பாதையற்ற தடங்கள் அதன்பின்.