விஜயவாடா விஜயத்தின் நகரம்! விஜயனின் நகரம் என்றும் சொல்லலாம். பாண்டவனான அர்ஜுனன் இந்திரகீல மலையில் இருந்து தவம் செய்து சிவப்பெருமானிடம் பசுபாஸ்திரம் பெற்ற இடமாக விஜயவாடா கருதப்படுகிறது.
அந்த மெல்லொளிப் பொழுதில் அடிவானத்தில் ஆதவன் அரும்பத் தொடங்கிய நேரத்தில் நதியின் ஈரக்காற்று மோத காரில் பயணம் செய்தாள் கல்கி. அதிகாலை தரிசனம் என்பதால் வீட்டில் இருந்து ஐந்து மணிக்கெல்லாம் குடும்பமாய்க் கிளம்பிவிட்டனர். அவர்கள் வீட்டில் இருந்து பத்து நிமிடம் பயணம்தான்.
ஆனால் அதிகாலை ஈரம் நெஞ்சில் சாரல் வீசியது கல்கிக்கு. காரின் ஜன்னல் இறக்கப்பட்டிருக்க அத்தையின் அருகே பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்தவள் வெளியே வேடிக்கைப் பார்த்தாள். ப்ரகாஷம் பாரேஜைத் தாண்டி காரை செலுத்தினான் வரப்ரசாத்.
அவன் பக்கம் கல்கி பார்க்கவே இல்லை. பார்த்தால் அதன்பின் அவளால் வேறுப்பக்கம் பார்க்க முடியவில்லை. கோவிலுக்குப் போவதால் கல்கி புடவை உடுத்தியிருந்தாள். வரப்ரசாத்தும் எதாவது சட்டை பேண்ட் அணிந்து வருவான் என்று பார்த்தால் அவனோ அவன் அப்பாவைப் போலவே வேஷ்டி சட்டையில் வந்தான்.
அழகனாய்த் தெரிந்தான் அவள் விழிகளில்!! அதிலிருந்து அவளால் மீளமுடியவில்லை. கல்கியைப் புடவையில் பார்த்த யமுனா
“அழகா இருக்க கல்கி. இப்போதான் உன்னை புடவையில பார்க்கிறேன்” என்று திருஷ்டி எடுத்தார். அதனைப் பார்த்த வரப்ரசாத்
“ம்மா, நானும் கூட வேஷ்டி கட்டிருக்கேன். எனக்கும் எடுக்கலாம்” என்றதும் சிரித்தபடி அவர் மகனின் முகத்தை சுற்றி திருஷ்டி எடுக்க, வரப்ரசாத்தும் அது போலவே செய்தவன்
“எங்கம்மாவும் ரொம்ப அழகு. இதுல இன்னிக்கு உங்க சூர்யா பாவாவோட கண்ணே பட்டிருக்கும்” என்று சொல்ல, எல்லாவற்றையும் கல்கி ரசித்துப் பார்த்திருந்தாள். அவள் பார்த்தவரை அம்மாவிடம் இத்தனை இயல்பாய்ப் பாசம் காட்டும் மகனைப் பார்த்ததே இல்லை.
இந்திரகீலா மலையின் மேல் மகிஷாசுரமர்த்தினியாய் வீற்றிருந்தாள் கனகதுர்கா. விஜயவாடாவின் காவல் தெய்வம்!
மலை மேல் தெய்வம். எதிரே நதி என்று பார்க்கவே அத்தனை லாளிதமான காட்சி. அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. மலை மேல் இருக்கும் அம்மனை தரிசிக்க போகிறோம் என்ற ஆவலில் இருந்தாள் கல்கி.
“இது கிருஷ்ணா ஆறு கல்கி” யமுனா சொல்லவும்
“ஓஹ், இங்கிருந்துதான் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மாட்டேன் சொல்றாங்களா அத்த” என்றதும் எல்லாரும் சிரித்துவிட மகன் பக்கம் உட்கார்ந்திருந்த சூர்யா
“இங்க இருக்க ஃபார்மர்ஸுக்கும் வேணும்தானே டா கல்கி. நாலு ஸ்டேட்க்கு இந்த கிருஷ்ணா ரிவர் ரொம்ப முக்கியம்” என்றார்.
“இப்ப ரொம்ப முக்கியம்” என்று கடிந்த யமுனா “இந்த அம்மன் சுயம்புடா. தானாவே உருவானவங்க, அந்த காலத்துல தண்ணி போக வழியில்லாம இங்க வறட்சியாம். அப்போ சிவன்கிட்ட வேண்டவும் மலையைக் குடைஞ்சு கிருஷ்ணா தண்ணி போக வழி விட்டாராம். மலையைக் குடைஞ்சதால பெஜ்ஜவாடான்னு ஒரு பெயர் உண்டு. மல்லேஸ்வரர் இங்க இருக்க சிவப்பெருமான் பெயர்”
“நானும் உன் மாமாவும் கல்யாணம் முடிஞ்சு இந்த கனக துர்கா கிட்ட தான் வந்தோம். அதில இருந்து வருஷா வருஷம் இங்க வந்துடுவோம். நவராத்திரின்னா ரொம்ப விஷேஷம் , கிருஷ்ணா நதியில அன்னப்படகுல அம்மன் உலா போவா. நான் ஒரு நாலஞ்சு தரம் பார்த்திருக்கேன், ‘நவுக விஹாரம்’னு பெயர்” யமுனா சொல்லவும் அமைதியாய் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள் கல்கி.
“தசரா டைம்ல நீ வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” யமுனா சொல்ல கார் ஓட்டிய சிரஞ்சீவி
“அதுக்கென்ன? அடுத்த வருஷம் தஷராவுக்கு கல்கி வந்துட்டா போச்சு” என்றான். சூர்யா மகனை அர்த்தமாய்ப் பார்க்க அவன் கண்கள் சிரித்தன.
“விஜயவாடாவுக்கு விஜயபுரின்னு ஒரு பெயர் கூட உண்டு. மகிஷாசுரனை அழிச்ச பின்னாடி அம்மன் இந்த இடத்தில் தங்க மழை பொழிய வைச்சாங்களாம். அதனால தங்க அரளிப்பூ மாலைதான் கனகதுர்காவுக்கு.” என்றார் சூர்யா. மலையைச் சுற்றி வந்து காரை நிறுத்தினான் வரப்ரசாத். கல்கி புடவையில் இருக்க அவளை ரசித்த மனதைக் கட்டுக்குள் வைத்திருந்தான் சிரஞ்சீவி.
“நடந்தே போயிடலாமா இல்லை லிஃப்ட்ல போகலாமா?” என்று சூர்யா கேட்க
மஞ்சள் பூசிய வதனத்துடன் மங்களரமாய் காட்சி தந்தாள் அம்மன். அத்தனை நிறைவான அழகுடன் நிறைந்திருந்தாள் அந்த தாய். துன்பங்களைப் போக்கிடும் தாய்ப்போல் அத்தனை ஆதூரம் அவள் முகத்தில். அசுரனை அழித்தவள் ஆனாலும் ரௌத்திரமில்லை அவள் முகத்தில். விளக்கொளியில் வருபவருக்கு விடியலாய்க் காட்சித் தந்தாள்.
பொழுது மெல்ல மெல்ல புலர, மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்த அந்த காலைப்பொழுதில் அம்மனைக் காண காண அவளிடம் வேண்டுதல் வைக்க வேண்டுமென்றே தோன்றவில்லை. முகமண்டப தரிசனம் என்பதால் அம்மனை அருகே இருந்து அகம் குளிரக் கண்டார்கள்.
கனக மழை பொழிந்தவள் கனகமாய்க் காட்சித் தந்தாள். திவ்யமாய் தரிசனம் முடிந்து வந்தார்கள். யமுனாவின் மனதில் அமைதி மட்டும். முப்பது வருடங்கள் முன்பு இந்த அம்மன் முன் வந்து நின்றார். இன்றுவரை அவருக்கு ஒரு குறையுமில்லை.
யமுனாவும் சூர்யாவும் அந்த நாள் நினைவில் மெதுவே படியிறங்கினர். மஞ்சளும் குங்குமமுமாய் இருந்தன படிகள் முழுவதும். கல்கியும் யமுனாவுடன் போகப் பார்க்க
“அம்மடூ, நில்லு” என்று தடுத்தான் வரப்ரசாத்.
“ஏன்? எங்கத்தை கூட நான் போனா உங்களுக்குப் பொறாமை தாங்காதே” என்றாள் முணுமுணுப்பாய்.
“பொறாமை இல்லை கல்கி. அவங்க டே இன்னிக்கு, தனியா விடேன் ப்ளீஸ்” என்றதும் தயக்கமாய் இவனுடன் நடந்தாள்.
கல்கி அமைதியாக வரவும் “அம்மா அப்பா கூட இருக்கனும்னு ரொம்ப ஆசைப்படுவாங்க. பட் அப்பாவோட வேலை, அது முடியாது. லவ் மேரேஜ்தான், ஆனா அவங்க ஒன்னா வெளியே போனதெல்லாம் கிடையாது. இப்போ பரவாயில்லை, முன்னாடி அப்பா நக்சல்ஸ் இருந்த ஏரியாவுல இருந்தார். அப்புறம் ராயலசீமா அங்கெல்லாம் ரொம்ப கேங் வார்ஸ் இருக்கும். ஸோ டியுட்டில தான் இருப்பார், ஆனா அம்மா கொஞ்சமும் அதைக் காட்டிக்க மாட்டாங்க. வேலைக்கும் போய்ட்டு என்னையும் பார்த்துப்பாங்க”
“அப்படி ஒரு புரிதல் அவங்களுக்குள்ள. மேரேஜ்ன்றது ஒரு பெண்ணுக்கு மட்டும் ஆண் துணையா இருக்கறது இல்லை கல்கி. ஒரு ஆணுக்கும் பெண் துணை தேவை, எஸ் அப்பாவோட மாரல் சப்போர்ட் அம்மாதான். உன்னை மாதிரி, நோ நோ அவங்களோட தைரியம் உனக்கும் இருக்கு. அம்மா தைரியமா இருந்ததால்தான் அப்பாவால டியுட்டில சரியா இருக்க முடிஞ்சது” என்றான்.
கல்கிக்குப் பேசவே தோன்றவில்லை. அவன் பேச்சைக் கேட்க மட்டுமே அந்த கணம் தோன்றியது. அவன் இப்படியெல்லாம் மனம் திறந்தவன் இல்லையே, அதனால் ரசித்து இருந்தாள்.
“அப்பா கல்யாணம் போது யுபிஎஸ்சி எழுதக் கூட இல்லை. ஆனா அம்மா நம்பி கல்யாணம் பண்ணினாங்க. அப்பாவுக்கு எல்லாவகையிலும் துணையாய் இருந்தாங்க. அம்மா அவங்க பொறந்தவீட்டை விட்டுட்டாங்க, அப்பா அவரோட வீட்டை விடல. வேற ஸ்டேட் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்தார்னு தாத்தா ஏத்துக்கவே இல்லை. வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது ஒரு வகைன்னா, வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டு விலக்கி வைக்கிறது ஒரு வகை. அப்பா அம்மாவுக்காக எல்லாமே தாங்கினார்” சொல்லிக் கொண்டே வந்தவன் கல்கியின் வழக்கத்திற்கு மாறான அமைதியில்
“போர் அடிக்கிறேனா?” என்று கேட்கவும் தலையசைத்து மறுத்தவள்
“நீங்க சொல்றதைக் கேட்டுட்டு இருக்கேன்” என்று புன்னகை செய்ய, அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான். அந்த புன்னகை ஈர்த்தது கல்கியை.
“அதோ ப்ரகாஷம் பேரேஜ். இது கிருஷ்ணா ரிவர். இந்திர கீலா ஹில்ஸ் இருந்து பார்த்தா விஜயவாடாவே தெரியும்” வரப்ரசாத் சுற்றிலும் பார்த்தபடி அவளுக்கு சொல்லிக் கொண்டு வந்தான். முதல்முறையாக அவனுடன் வெளியே வந்து அவன் போலிஸாக இல்லாமல் இயல்பாய்ப் பேசினான். சென்னையில் வெளியே சென்றிருந்தாலும் இப்படி உரையாடல் எல்லாம் நிகழ்ந்ததில்லை.
இளங்காலை ஈரம் கல்கியின் உள்ளும் புறமும். பேசிக்கொண்டே வந்தவன் “பார்த்தியா? நம்ம பின்னாடி வரோம்ன்றதையே மறந்துட்டு இரண்டு பேரும் ஜாலியா பேசிட்டு நடக்கிறதை” என்று வரப்ரசாத் சொல்ல
“அப்படி எல்லாம் இல்லை, உங்க கூடத்தானே வரேன். அதனால விட்டிருக்காங்க”
“ஆஹான்” என்று சிரித்தான். பேசிக்கொண்டே மலையில் இருந்து இறங்கி கார் அருகே சென்றுவிட்டனர். சூர்யாவும் யமுனாவும் வழியில் உறவினர் ஒருவரைப் பார்க்கவும் பேசிக்கொண்டு நின்றனர். வரப்ரசாத் கார் கதவில் சாய்ந்து நின்றான்.
“எங்க உன் குங்குமம், பொட்டு எல்லாம்?” என்று கேட்கவும் கல்கி விழித்தாள்.
“அச்சோ!” என்று தலையில் கைவைத்தவள்
“வியர்த்துச்சுன்னு துடைச்சேன். அழிச்சிட்டேன் போல, கோவில் வந்துட்டு வெறும் நெத்தியோட இருக்க கூடாது. அத்தைட்ட குங்குமம் வாங்குறேன்” என்று முன்னே போனவளை நெருங்கிய வரப்ரசாத்
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “அங்க ஏன் போற? நான் தரேன்” என்று சொல்ல அவள் எதிர்ப்பார்க்காவண்ணம் அவன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டினான். வரப்ரசாத்தும் அப்படி செய்ய நினைத்து செய்யவில்லை, ஆனால் சூழலும் காதலும் கண நேரத்தில் அவனைத் தூண்டிவிட்டிருந்தன.
அரை நொடிக்கும் குறைவான செயல்தான்.! ஆனால் கல்கியின் அகம் ஆட்டம் கண்டுவிட்டது. அவன் மீதான விருப்பம் எங்கு தொடங்கியதென தெரியாவிட்டாலும் எங்கு முடியப்போகிறது என்று தெள்ளத்தெளிவாய் அகம் அறிய, அறிவு விழித்துக்கொண்டது.
அவனையும் மீறி அகம் சொல்லிவிட்டான். திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அன்பும் அதனைக் கொண்ட வாழ்வும். இந்திர கீலா மலையில் வைத்து அவன் காதல் சொல்ல வேண்டும் என்று இருக்கும்போது எதனால் தடுக்க முடியும்?
தன் மனதை சொல்வதற்கு முந்தையை கணம் வரை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை சிரஞ்சீவியிடம். தன்னையும் மீறிய செயல் அது, அது கல்கியால்..! அவளின் மீது தான் கொண்ட காதலால் என்று தெரியும் அவனுக்கு. சொல்லிய பின்னும் பெரிதாய் வருத்தமேதுமில்லை. கல்கிக்குத் தன் மீது இருக்கும் விருப்பம் அவனுக்குத் தெரியும். கல்கியும் தேவையின்றி உரிமை எடுப்பவளோ உறவை வளர்ப்பவளோ கிடையாது.
தன் மீதான அன்பை வெளிக்காட்ட அவள் தயங்கதே இல்லை. அவனும் அப்படித்தானே? ஆனால் வார்த்தையால் வெளிப்படுத்த இருவரும் இதுவரை நினைக்கவில்லை. தனது செயலை தானே எதிர்ப்பார்த்திடாத போது கல்கி இதை எவ்வாறு எதிர்க்கொண்டாள் என்ற எதிர்ப்பார்ப்பு அவனிடம் இருக்க கல்கியின் முகத்தைப் பார்க்க அதில் அவ்வளவு அதிர்ச்சி, குழப்பம் என்று கலவையான உணர்வுகள்.
“கல்கி..?” என்று இவன் கேள்வியாய்ப் பார்க்க அவளிடம் பதில் இல்லை. அவள் நெற்றியில் மின்னிய குங்குமம் இவனுக்குப் பார்க்க பார்க்க ஒரு புது உணர்வைத் தந்தது. ஆனால் கல்கியின் கலக்கம் அந்த உணர்வை அனுபவிக்க விடவில்லை. வரப்ரசாத் இந்த ஒரு வருடத்தில் கல்கியின் மறுபாதியாய் அவளில் கலந்து இருந்தான்.
உள்ளுக்குள் ஒரு உணர்ச்சிப்பெருக்கு அவளிடம். அவனின் நொடி நேர நெருக்கத்தில் முதலில் மயக்கம் என்றால் அது தெளிந்து அடுத்து கல்கியிடம் கலக்கம் மட்டுமே!
எனக்குத் தோன்றுவதை எந்த மறைவுமின்றி இவனிடம் பகிரலாம். சரியாய் இருந்தால் துணை இருப்பான், தவறாய் இருந்தால் சரி செய்ய வழி சொல்லுவான் என்ற ஆழமான நம்பிக்கையைக் கல்கிக்குத் தந்திருந்தான் வரப்ரசாத்.
இதுவரையில் அவனின் அன்பை அனுபவித்தவளுக்கு ஆராய்ச்சி செய்யத் தோன்றியதே இல்லை. அதன் எதிர்காலம் என்னவென்ற எண்ணம் சிறிதும் கிடையாது. அன்பென்றால் சொல்லிக் கொண்டோ கொஞ்சிக் கொண்டு இருந்ததில்லை. தள்ளி நின்றாலும் கல்கிக்குத் தேவையான நேரத்தில் துணை இருப்பான்.
இப்படியான ஒரு உறவுக்குத்தான் அவள் ஏங்கினாள். அந்த நேரத்து மழையை அதன் குளுமையை அனுபவிக்கும் மனப்பாங்கு மட்டுமே மங்கையிடம். அதற்காக அவன் மீது பிடித்தமில்லை என்றில்லை. மிகவும் பிடிக்கும் அவனை! அதில் துளியும் அவளுக்கு சந்தேகமில்லை. கல்கி இப்படி தனக்குள்ளே யோசனையில் இருக்க, யமுனாவும் சூர்யாவும் கார் அருகே வந்து நின்றனர்.
யமுனா கல்கியின் முகம் பார்த்தவர் “பொட்டு எங்க? கொஞ்சுண்டு குங்குமம் மட்டும் இருக்கு” என்று கேட்டார்.
“நானும் காலேஜ்ல சில டைம் இப்படி பண்ணிடுவேன். அதான் எப்பவும் ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட் வைச்சிருப்பேன்” என்றவர் அவரின் கைப்பையில் இருந்து பொட்டை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டவர். லேசாய் இருந்த குங்குமமத்தின் மீது தன்னிடமிருந்த கோவில் குங்குமத்தை அழுத்தி வைத்துவிட்டார்.
“அவுனு? எனக்குப் பிடிச்சதுன்னா செய்றீங்க? நானாவோட ஃபேவரைட், அதனால் செய்றீங்க”
“ஆமா செய்றேன். மதியத்தும் அப்பாவுக்குப் பிடிச்சதுதான், குண்டூர் கோடி குரா” யமுனா சிரிக்க இந்த பேச்சில் கல்கி கலந்து கொள்ளவே இல்லை. வரப்ரசாத் அதனைக் கவனித்தாலும் அப்பா அம்மாவின் முன் பேசமுடியவில்லை. யமுனா கவனித்தவர் “என்னாச்சு கல்கி? பசிக்குதா டா? பத்தே நிமிஷம் போயிடலாம்” என்று சொல்ல
“இல்லத்த பசிக்கல” என்றாள்.
“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க
“அது..காலையில சீக்கிரம் எழுந்தேன்ல. அது கொஞ்சம் தலைவலியா இருக்கு” என்று சொல்ல
“இப்போ வீட்டுக்குப் போய்ட்டு சாப்பிட்டு தூங்கிடு. மதியம் சமைச்சிட்டு நான் எழுப்புறேன்” என்றார்.
வீடு வந்தபின் அம்மாவுடன் அவள் சுற்ற, தனியே அவளிடம் பேச முடியவில்லை. கல்கி என்ன நினைக்கிறாள் என்று கவலையாய் இருந்தது. மனதுக்கும் அறிவுக்குமான பெரும் போர்!! நடுவே கல்கிக்குப் போன் வரவும் அவள் அறைக்குள் நின்று பேச, கிச்சன் சென்ற வரப்ரசாத்
“ம்மா, கோடி குரா செய்ய நம்ம தோட்டத்து மிர்ச்சி யூஸ் பண்ணாதீங்க. கல்கி நேத்து பெத்த நானா வீட்ல சரியா சாப்பிடல பார்த்தீங்க தானே?” என்றான். மகனின் பேச்சில் யமுனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தன் பக்க உறவுகளை அவனும் அன்புடன் பார்க்கிறானே என்று நினைத்தார்.
“ஆமாம்டா, நான் பார்த்துக்கிறேன். கோடி குரா மட்டும் அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி காரமா செய்றேன். மீதியெல்லாம் நான் வேற மிளகாய்த் தூள் யூஸ் பண்ணிக்கிறேன்” என்றார் யமுனா. அம்மாவிடம் சொல்லிவிட்டு அவன் வெளியே வர கல்கி அவனைப் பார்த்து நின்றாள்.
கண்களில் அவனின் மீதான காதலும் கூடவே கண்ணீரும் சேர்ந்திருந்தது. அவள் அப்படி கலக்கமாய் இருப்பதைப் பார்த்த வரப்ரசாத்திற்கும் தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. சூர்யா அவர் அலுவலகம் சென்றிருந்தார். யமுனாவும் கிச்சனில் இருக்க, கல்கியை நெருங்கி நின்றவன் அவள் கரம்பற்றி ஹாலுக்கு இழுத்துவந்தான்.
“அம்மடூ! ஏன் இப்படி இருக்க?” என்று அவள் முகம் பார்த்து கேட்டவனுக்கு அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியாத தவிப்பு இருந்த்து. தன்னால் அவன் தவிப்பது பொறுக்காதவள்
“உங்களுக்கு என்னைத் தெரியும்தானே?” என்று கேட்க அவள் பேச்சில், அதன் அர்த்தத்தில் அவன் அவளை ரசித்து நின்றான். இவ்வளவு நேரம் அலைப்பாய்ந்த அகத்தில் ஒரு அமைதி.
“உன்னைத் தெரியும் கல்கி. பட் உங்கிட்ட சந்தோஷமே தெரியலயே? நான் எதுவும் தப்பு பண்ணிடலையே?” என்று தெளிவுப்படுத்திக் கொள்ளக் கேட்டான். கல்கியால் அவன் மீது தவறு சொல்லவே முடியாது. தவறென்றால் அவள்தான் தவறு!! அவள் மட்டும்தான் தவறு!!
“உங்க மேல எந்த தப்பும் இல்லை, எனக்குக் கோபமும் இல்லை” என தெளிவாகவே கல்கி சொல்லவும் அவள் கையை விட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தவன்
சூர்யா யமுனாவின் திருமண நாள் பரிசாக அவர்களின் புகைப்படங்களைக் கொலாஜ் செய்து அந்த கொலாஜிலும் அவர்களின் உருவம் வருவது போல் செய்துவைத்திருந்தாள். இரண்டே நாளில் எல்லாம் செய்த தர ஆளில்லாமல் இருக்க சிரஞ்சீவியிடம் கல்கி உதவி கேட்கவும் இங்கு விஜயவாடாவில் அவனுக்குத் தெரிந்த இடத்தில் சொல்லியிருந்தான்.
“எஸ்! மறந்துட்டேன், நான் போய் வாங்கிட்டு வரேன் கல்கி. அம்மாட்ட சொல்லிடு” என்று வரப்ரசாத் கிளம்பி போனான்.
மதியம் யமுனா ஒரு சிறிய விருந்தே சமைத்திருந்தார். கல்கிக்காக பிரியாணி, கணவருக்காக குண்டூர் கோடி குரா என்று பார்த்து பார்த்து செய்திருந்தார். உணவுக்குப் பின் தன் இடையளவு ஒருந்த பெரிய ஃப்ரேமை எடுத்து வந்து அத்தை மாமாவுக்குப் பரிசளித்தாள் கல்கி.
“அத்தை, உடனே பிரிக்காதீங்க. அஞ்சு ஐடியா கொடுத்தா, நான் பண்ணினேன், உங்க பங்காரம் அவர் ப்ரண்ட்கிட்ட சொல்லி ஃப்ரேம் பண்ணிக் கொடுத்தார். அஞ்சுவும் உங்களுக்கு விஷ் செய்யனும் சொன்னா. விடியோ கால் செய்றேன் அவளும் கிஃப்ட் பார்க்கட்டும்” என்று சொல்லி அஞ்சனாவிற்கு அழைத்தாள். அவளிடம் பேசி முடித்து கல்கி அப்பாவிற்கு அழைக்க, அவரும் விடியோ காலில் வந்தார். தையல் நாயகி மகள் மருமகனை ஆசிர்வாதம் செய்தார். யமுனாவின் மனம் நிறைந்து இருந்தது.
கணவனும் மனைவியும் அந்த கொலாஜில் இருந்த நூற்றுக்கணக்கான புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டு அது எல்லாம் எங்கே எடுத்தோம் என்று மலரும் நினைவுகளை மலர்ந்து முகத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். மாலை மகனுக்குப் பிடித்த மிர்ச்சி பஜ்ஜி, கணவருக்குப் பிடித்த பூர்ணம் புரெலா என்ற இனிப்பை செய்தார்.
“மிளகாய்ப் பஜ்ஜி” என்று கல்கி அதனை ஆசையாய் வாயில் வைக்கப் போக
“கல்கி! இது குண்டூர் மிளகாய். தண்ணீயைக் குடிச்சிட்டு சாப்பிடு” என்று எச்சரிக்கை செய்தான் வரப்ரசாத். கல்கியும் தலையாட்டிவிட்டு பஜ்ஜியை சட்னியில் தொடப் போக
சூர்யா உடனே “பாப்பா, அது வேண்டாம். பஜ்ஜியும் காரம் அதுவும் எர்ர காரச் சட்னி ரொம்ப எரியும். முதல்ல கொஞ்சமா பஜ்ஜியை சாப்பிடு” என்றார்.
“அந்த காரமெல்லாம் வேண்டாம்னா இந்த ஸ்வீட் சாப்பிடுடா” யமுனா கல்கியின் அருகே ஸ்வீட் இருந்த தட்டை நகர்த்தியபடி
“இது நல்லா இருக்கும் கல்கி. உங்க மாமாவுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது மட்டும்தான், நம்ம சுழியன் மாதிரிதான்”
“பரவாயில்லத்த கும்பகோணத்துல பொறந்தாலும் இன்னிக்கு முழுசா குண்டூர் காரங்க மாதிரி எல்லாம் செய்றீங்க” கல்கி கிண்டல் செய்ய
“எல்லாம் எனக்காகத்தான்” என்ற சூர்யாவின் வார்த்தைகளில் அவ்வளவு காதல்! அதில் ஒரு கர்வம்!
யமுனா கல்கியை ஸ்வீட் சாப்பிட சொல்லவும்
வரப்ரசாத் உடனே “கல்கிக்கு காரம் தான் பிடிக்கும்” என்று அவளைப் பார்க்க
“அதுக்காக காரமே சாப்பிட முடியுமா? அதுவும் நம்ம மிளகாய்க் காரம் தாங்காது. அத்தை செஞ்சதுக்காகவாச்சும் கொஞ்சம் இந்த பூர்ணம் சாப்பிடு கல்கி” என்றதும் கல்கி அதனை எடுத்து உண்டாள். போண்டா போல இருக்க, உடைத்தால் உள்ளே வெல்லப்பூர்ணம், வெண்ணெய் சேர்த்திருப்பார் போல. வித்யாசமாய் இருந்தாலும் சுவையாய் இருந்தது.
“நல்லா இருக்குத்த” என்றாள்.
அவளை அன்பாய்ப் பார்த்த யமுனா
“அடிக்கடி நீ இனிமே அத்தை வீட்டுக்கு வரனும் கல்கி. அஞ்சனாவையும் வர சொல்லியிருக்கேன். நதியா கல்யாணம் முடிஞ்சு வரேன்னு சொன்னா” என்றார். அவரின் உறவுகள் வந்திருக்க உள்ளத்திற்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது. கல்கி கிளம்பும்போது அவளுக்கென வாங்கி வைத்திருந்த சுடிதாரைத் தந்தார் யமுனா. கல்கி இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினாள்.
இரவு எட்டு மணிக்கு விமானம். வீட்டிலே உண்டு முடித்தனர். அவசரமாய் கிளம்பியிருக்க அவகாசம் இல்லை பேசுவதற்கு. வீடு வந்த சேர பன்னிரெண்டு மணி ஆகிவிட அடுத்த நாள் கல்கிக்குக் கல்லூரி என்பதால் சிரஞ்சீவியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அதனையும் விட கல்கி தன்னை தவறாய் நினைக்கவில்லை. அவளின் விருப்பத்தை விழியால் இத்தனை நாள் கண்டவனுக்கு இன்று மொழியாலும் சொல்லிவிட நிம்மதியாக இருந்தான்.
கல்கி அவன் மீது தவறில்லை என்றாளே தவிர தன் மீது தவறு இருக்கிறது என்று தன்னையே நொந்துகொள்கிறாள் என்று அறியாது போனான் வரப்ரசாத்.