ஊர்மிளாவை விமான நிலையத்தில் விட ஜெயனும் வினயனும் சென்றுவிட, ராஜீவனும் பாலச்சந்திரனும் குளித்து தயாராகி காலை உணவை முடித்தனர். வெகு வருடம் கழித்து நண்பன் வந்திருக்க, பாலா அவரை தங்கள் ரிசார்ட் அழைத்து சென்றார். ராஜீவனுக்கு நண்பனின் வளர்ச்சியைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே பேசியபடி இருவரும் மதிய உணவை மூணாரில் முடித்தனர். பாலச்சந்திரன் அவரின் தென்னந்தோப்புக்கு நண்பரை அழைத்து போனார். அது அவர் தாத்தா வாங்கியது, வருடங்கள் ஓட கொஞ்சம் கொஞ்சமாக அது பெரிதாக வளர்ந்திருந்தது. அந்த தென்னந்தோப்பில் தண்ணீர் தொட்டி இருக்க, மிக ரம்மியமான இடம்.
சிறு வயதில் ராஜீவன், இன்னும் சில நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விளையாட்டு, குளியல் என்று அவர்களின் பெரும்பான்மை பொழுது அங்கேதான். அந்த தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டில் உட்கார்ந்த பாலச்சந்திரன் ராஜீவனிடம்,
“இங்க வரப்ப எல்லாம் எனக்கு உன் நினைப்பு வந்திடும். நீ, உன்னி, ஜான்சன் நம்ம எல்லாம் இங்கதானே இருப்போம்” பாலா பழைய நினைவுகளில் மூழ்கி, ரசித்து சொன்னார்.
ராஜீவன் நண்பன் சொல்வதை அமைதியாகக் கேட்டார். அந்த இடம் அவருக்கு அமைதி கொடுத்தது, எந்த கவலையுமின்றி வாழ்க்கையை ரசித்த காலங்கள் அவை! நண்பர்களுடனான பொழுது, கல்லூரி சென்றால் அங்கே ப்ளஸ்ஸி என்று ராஜீவனின் வசந்த காலங்கள்!
“இந்த ஜான்சன் யூ.எஸ் போய்ட்டான், போன முறை வந்தப்போ எனக்கு அங்க இருந்து பெருசா ஒரு சட்டை வாங்கிட்டு வந்தான். உன்னி துபாய்ல ரெஸ்டாரெண்ட் வைச்சு செட்டில் ஆகிட்டான். ரெண்டு வருஷம் முன்னாடி அவன் பொண்ணு கல்யாணம் இங்க நம்ம கோட்டயத்துல நடந்தது. நான் போய்ட்டு வந்தேன்.”
“என் பசங்க இங்க நம்மளை மாதிரி வந்து ஒரே விளையாட்டுதான். நீங்க எல்லாம் ஊரை விட்டு போனதும், எனக்கு இங்க வந்தா உங்க ஞாபகமா இருக்கும். அவனுங்க குளிச்சு ஆட்டம் போடுவானுங்க!” என்று நண்பர்களை, பிள்ளைகள் குறித்து பேசினார்.
“இப்போ என்ன நீ குளிக்கணுமா?” என்ற ராஜீவன் பாலா எதிர்ப்பாராத நேரம் சட்டென்று தொட்டிக்குள் அவரை தள்ள,
“ஏடா! இருடா” என்று பாலா தன்னை நிலைப்படுத்தி நீரில் நின்றார்.
“டேய் ராஜீவா” என்று நண்பனையும் தண்ணீரில் இழுத்துவிட,
“பாலா, டிரஸ் இல்லடா” என்று ராஜீவன் புலம்ப,
“மோட்டர் ரூம்ல, பழைய வேஷ்டி எல்லாம் இருக்கும். அது போதும் நமக்கு” என்றபடி தண்ணீரில் உட்கார்ந்துவிட, ராஜீவனும் சிரிப்போடு நீரில் தலையைக் கொடுத்தார்.
“என்னயிருந்தாலும் அந்த நாட்கள் மாதிரி வராது” என்று சிலாகித்தார். பாலச்சந்திரன் அவரின் நண்பர்களை மிகவும் தேடியது அவர் பேச்சில் தெரிந்தது, அதுவும் மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்க, தேவிகுளத்தில் எங்கு சென்றாலும் அவருக்கு அது ஞாபகத்தடமாகவே இருக்கும். இப்போது அதனை உணர்ந்த ராஜீவனும் பாலாவின் பேச்சை ரசித்தார்.
பாலாவுக்குக் கொஞ்சம் குளிராக இருக்க, அவர் நடுங்கினார்.
“டேய்! எனக்கு மட்டும் வயசாச்சா? உனக்குக் குளிரல?” பற்கள் தந்தியடிக்க கேட்டார்.
“பாலா! நான் காஷ்மீர்ல போஸ்டிங்ல இருக்கேன். இதெல்லாம் எனக்கு குளிரே இல்லை” என்று சிரிக்க, பத்து நிமிடம் பேசியபடி நீந்தி தொட்டியை விட்டு இறங்கினர். மோட்டர் ரூம் சென்று பார்க்க, வேஷ்டியும் துண்டும் இருக்க, ஆளுக்கொன்றை அணிந்தனர்.
“சட்டை எங்கடா?” ராஜீவன் கேட்க
“இது என்ன ஷோ ரூமா? மோட்டர் ரூம்டா! வீடு பக்கம் தானே, அப்படியே போய்க்கலாம். ரொம்ப பண்றான்” என்று கிண்டல் செய்தபடி நண்பனை பார்க்க, அவர் அச்சு அசலாக ஒரு கேரள தோற்றத்தில் இருந்தார். வேஷ்டியும், போர்த்தியை துண்டுமாக இருவரும் நடக்க, பாலாவிடம்
“ஏண்டா, உன் பெரியவனுக்கு நம்ம சைன்ஸ் டீச்சர் ஜெயமாலினி ஞாபகமாதானே நீ அந்த பெயர் வைச்ச?” என்று கேட்க
“அடப்பாவி! அதெல்லாமில்லை.” என்று அவசரமாக மறுத்தார்.
“கள்ளம் பறையண்டா!(பொய் சொல்லாத) ஏடா நான் உன் ப்ரண்ட் அல்லே! உண்மை சொல்லு! ஜெயன் ஜெயன்னு நீ கூப்பிடுறது அதனாலதானே? ராஜீவன் விடாமல் வம்பிழுக்க
“சத்தியம்டா ராஜீவா! நான் மோகன்லால் ஞாபகமா வைச்சேன், யுவஜனோத்ஸவம் படம் நம்ம எல்லாரும் சேர்ந்து பார்க்க போனோமே, அதுல லால் பெயர் ஜெயன் தானே? உனக்கு ஞாபகமில்லை. நம்ம ஜான்ஸன் கூட ஊர்வசியைப் பிடிச்சு போய் கட்டினா சிந்து(ஊர்வசியின் கதாபாத்திரம்) மாதிரி பொண்ணு கட்டணும் சொன்னா அல்லே..?” என்று பாலா நாற்பது வருடம் பின்னோக்கி கேட்க
“அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. ஜெயமாலினி டீச்சர் ஹொம்வொர்க் கொடுத்தா மட்டும் நீ அதை சரியா செஞ்சிடுவ, ஜெயா மிஸ் ரொம்ப அழகு இல்லை.. அப்படினு கேட்டது ஞாபகமிருக்கு. ஹான்.! அந்த படம் பார்த்துட்டு வரப்ப தானே நீ சரக்கடிச்சு உங்கச்சன்கிட்ட அடி வாங்கின?” என்றதும் அவசரமாக அவர் வாயை மூடினார் பாலா.
“இதெல்லாம் என் புள்ளைங்க கேட்டா அவ்வளவுதான்! ஞாபகமில்லனு சொல்லியே இவ்வளவு சொல்லு” என்றதும் ராஜீவன் சிரித்தார். பாலாவோ நண்பனின் சிரிப்பை பார்த்தபடி தோப்பின் முன்புறம் நடந்தார்.
“நீ பழசையெல்லாம் மறந்திருப்ப நினைச்சேன் ராஜீவா” என்று பாலா சொல்ல
“இல்லையே! அந்த ஜெயமாலினி டீச்சர் க்ளாஸ்ல மட்டும் சரியா பதில் சொல்லுவியே” என்றதும் ராஜீவன் தோளில் அடிபோட்ட பாலா
“சத்தியமா இல்லடா! அப்போ நல்லா நடத்துற மிஸ் அவங்க. அதனால நல்ல பெயர் எடுக்கணும் நினைச்சேன். எனக்கு துவன தும்பிகள் பார்வதி தான் பிடிக்கும்” என்றவர் மகனின் கார் அங்கே நிற்பதை பார்த்தார்.
“ஜெயன் வந்துட்டான் போலயே” என்றபடி சுற்றி பார்க்க, இவர்களை நோக்கி வந்தான் ஜெயன். ராஜீவனிடம் மகனின் எண்ணம் சொல்ல நினைத்து பாலா
“டேய்! ராஜீவா உன் பொண்ணை என் வீட்டுக்கு மகளா அனுப்பல, மருமகளா அனுப்புறியா?” என்றதும் அவர் முகத்தில் அதிர்ச்சியே. ஜெயன் அருகே வந்துவிட,
“ஜெய் ஊர்மிளாவை விரும்புறான்” என்றார். ராஜீவன் யோசிக்க நேரமெடுக்கவில்லை.
“பாலா! இது கண்டிப்பா நடக்காது” என்றதும் பாலா முகம் வாடியது. ஜெய்யோ கடும்கோபத்தோடு இருந்தான்.
பின்னே எவ்வளவு தடைகள்? ஆவலாக ஒரு பெண்ணை திருமணத்திற்குப் பார்த்து ஆசை வளர்த்தால், அவள் அவனுக்காக பார்த்தவள் இல்லை. அதையும் மீறி அவளாகவே அவன் இருக்குமிடம் வந்தது எல்லாம் அவனுக்கு நம்பிக்கை தர, கூட இருந்த அந்த மூன்று நாட்களிலே வாழ்வின் மீதி நாட்களும் அவளுடன் கழிக்க கனவு கண்டது அவன் காதல்.
இன்று தைரியம் வந்து தன் மனதை சொல்லி, என்ன சொல்வாளோ என் எண்ணம் நிறைவேறுமா என்று ஆயிரம் ஆயிரம் எண்ணத்தோடு உழன்றவன், அப்பாவாகவே அந்த பேச்சை எடுக்க, கொஞ்சம் ஆசுவாசப்பட அதற்கும் ராஜீவன் மறுக்க எரிச்சல் கொண்டான்.
“ராஜீவா!” என்று பாலா பேச வர
பாலாவின் தோளில் கைப்போட்ட ராஜீவன், “ப்ளீஸ் பாலா! நீ கேட்டு என்னை மறுக்க வைக்காத! இது நிறைவேறாது! உன் மேல..” என்று அவர் பேச அதில் குறுக்கிட்டான் ஜெய்.
ஜெயன் அன்று இருந்த மன நிலையில் இந்த வார்த்தைகள் வெப்பமாக அவனை சுட,
ஜெய்யிடமிருந்து அந்த வார்த்தைகளை இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை. அவன் சொன்னது உண்மையென்றாலும் ராஜீவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் காட்டாமல் இருக்க, பாலாவுக்குப் பொறுக்கவில்லை. பட்டென்று அவனை அறைந்தார்.
“உனக்கு என்ன உரிமை இருக்கு இவனை பேச, ஊர்மிளாவ உனக்கு எப்போ தெரியும்டா?” என்று கத்த
“ஏடா பாலா! வளர்ந்த பையனை அடிக்கிற?” என்று திட்டினார் ராஜீவன்.
மகனை முறைத்து “மன்னிப்பு கேளு” என்றார். ஜெயன் ஒன்றும் அப்பாவிடம் முதல்முறை அடிவாங்கவில்லை. சின்ன வயதில் அப்பாவின் அடிக்குப் பயந்து அம்மாவின் பின் ஓடியவர்கள்தான். இல்லையென்றால் வாசலை தாண்டிவிட்டால் போதும், அரக்க பறம்பில் அடைக்கலமாகிவிடலாம். அச்சுதனும் பத்மினியும் பாலாவை அடிக்க விடமாட்டார்கள்.
கல்லூரி காலம் முதலே அடியெல்லாம் இல்லை. இவர்களும் சேட்டை குறைத்திருக்க, இன்று ராஜீவன் முன் அடித்துவிட ஜெயனுக்கும் அப்பாவின் மீது கோபம். அப்பாவின் வார்த்தைக்காக,
“சாரி மாமா” என்று ராஜீவனிடம் சொல்லியவன் வேகமாக காரை எடுத்து கொண்டு போனான். ராஜீவன் கூட ஜெய் மீது கோபம் கொள்ளவில்லை. ஆனால் பாலச்சந்திரனுக்கு அவ்வளவு கோபம்.