அமைதியான முன்மாலை நேரமது. அந்த மாடிவீட்டில் இருந்த நாகலிங்க மரத்தில் அடைகாத்த பறவைகளின் கீச்சொலிகள் மட்டுமே காதை நிறைந்திருந்தது. அந்த சத்தத்திலும் கூட சிந்தனை கலையாமல் படித்துக் கொண்டிருந்தான் ராமு.
“ராமு! நான் கபாலிஸ்வரர் கோவில் வரைக்கும் போகனும்டா. நீயும் வரியா?” என்று கேட்ட நண்பனை முறைத்தான் ராமச்சந்திரன்.
“படிச்சிட்டு இருக்கேன் டா. என்ன தீடீர்னு நீ கோவில் குளத்துக்கெல்லாம் போற? உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா நீ காலிடா மவனே” என்று ராமு கிண்டல் செய்ய
“டேய் கோவில் பக்கத்துல எங்க கட்சிக்காரர் வீடு இருக்கு. அவர்கிட்ட அப்பா நூத்தம்பது ரூபா எனக்குக் கொடுக்க சொல்லி கொடுத்திருக்கார். லெட்டர்ல சொல்லியிருக்கார், அதை வாங்கப் போகனும்” என்ற ஸ்டாலின் கொஞ்சம் புன்னகையுடன்
“அப்படியே ஷாந்தி விஹார்ல டர்க்கி ஸ்டாம்ப்ஸ்(Turkey Stamps) வந்திருந்தா அதை வாங்கி கோகிக்குக் கொடுக்கலாம், அவளை நாளைக்குப் பார்க்க போறேன்ல. அவளுக்கு ஸ்டாம்ப் கலெக்ஷன் தான் டா ஹாபி”
“உன்னோட வந்தா கோகிக்கு அது வாங்கனும் இது வாங்கனும் நைட் வரைக்கும் இம்சைக் கூட்டுவ. நீயே போய்ட்டு பத்திரமா வாடா” என்று சொன்ன ராமச்சந்திரன் உப்புக்கல்லையை வாயில் போட்டு மென்றபடியே, காந்தி உப்பு சத்யாகிரகம் செய்ததைப் படித்துக் கொண்டிருந்தான்.
அந்த ஒற்றை அறையின் வாசலில், அதுவரை கால் நீட்டி படித்துக் கொண்டிருந்த சூர்யா நண்பர்களின் பேச்சைக் கேட்டு
“ஹரே! ஸ்டாலின். நான் வரேன்” என்று எழ
“என்னடா இது? நானே இவன் படிப்பான்னு கூப்பிடாம இருந்தா இவனே வரேன்றான்” என்று ஸ்டாலின் ராமுவை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“அதே ஷாக் தான்டா எனக்கும். இந்த பய சரியே இல்லை” என்று சொன்னவன்
“ராணியக்கா போகும்போது வர சொன்னாங்க. டேய் சூர்யா சீக்கிரம் வாடா” என்று சொல்லி கீழே இறங்கிப் போனான்.
ஒரு மாடியின் மேல் இருந்து கீழ் வீட்டுப்பெண்ணை ஒரு ஆடவன் ரசித்துப் பார்க்கிறான். அவளும் வெட்கத்தில் தலைசாய்த்தாலும் தலைவன் கண் நோக்குகிறாள், அடுத்து அவர்களின் திருமணம் நடைபெறுகிறது. ஹேப்பி எண்டிங் வித் பஞ்சாப் நேஷனல் பேங்க்! ப்ளான் யுவர் சேவிங்க்ஸ் அண்ட் ப்ளான் யுவர் ஃப்யுச்சர் என்று முடிந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பரம் தூர்தர்ஷன் அலைவரிசையில் ஓடிக்கொண்டிருக்க, அதனை வாசல் பக்கம் இருந்த ஜன்னல் வழியே பார்த்தான் ஸ்டாலின்.
அவர்களின் ஹவுஸ் ஓனர் வீட்டின் சாலிடேர்(Solidaire) தொலைக்காட்சியைப் பார்த்து நின்றவனை ராணியக்காவின் குரல் கலைத்தது.
“ஆஹ்..அப்புறம் காஃபி பொடி தீர்ந்துப்போச்சு. சுரேஷப்பாவுக்குக் காஃபி இல்லன்னா அவ்வளவுதான். லியோ காபி வாங்கிட்டு வந்திடு, அப்புறம் அம்பிகா அப்பளம் மறந்திடாத” என்று சொல்ல எல்லாம் கேட்டுக்கொண்டவன்
“அக்கா, எனக்கு நேரமாகுது. அப்பளமும் காபி பொடியும்தானே? வாங்கிட்டு வந்திடுறேன்” என்று சொல்லி ஸ்டாலின் அவனின் சைக்கிளை எடுக்கப் போக, சூர்யாவும் ராமுவின் சைக்கிளை எடுத்து வந்து தயாராக நின்றான்.
கேட்டைத் திறந்து சைக்கிளை வெளியே எடுக்க பின்னாலேயே வந்த ராணியக்கா,
“தம்பி இருடா! இந்தா இந்த வாண்டுக்கு இரண்டு ரூபா கடையில இருந்து எதாவது விளையாட்டு ஜாமான் வாங்கிட்டு வந்திடு. இல்லன்னா அழுது ஊரைக் கூட்டும்” என்று சொல்ல முறைத்தாலும், அவர் கொடுத்த இரண்டு ரூபாயை வாங்கியவன் நண்பனுடன் திருமயிலை நோக்கி சைக்கிளை மிதித்தான்.
மயிலை மாட வீதியிலே இருந்த வீடு என்பதால் சரியாக அதனைக் கண்டுபிடித்துவிட்டனர். பச்சை நிறத்தில் வெளியே பெயிண்ட் அடித்திருக்க, திண்ணை முழுவதும் கம்பிகள் கறுப்பும் சிவப்புமாய் இருக்க, வாசலில் பெரிய கோலம் வரவேற்றது.
“இந்த வீடாத்தான் இருக்கும். பாரு சுவத்துல கூட சூரியன் இருக்கறதை” என்றான் ஸ்டாலின்.
இருவருமாக கையில் இருந்த கடுதாசியை ஸ்டாலின் அப்பாவின் கட்சிக்கார நண்பரிடம் சேர்த்துவிட்டு, அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டனர்.
“உங்கப்பா கஷ்டப்பட்டு பணம் அனுப்புறான். ஒழுங்கா படிக்கனும் தம்பி. செர்வீஸ் கமிஷன் எழுதப்போறியாமே?” என்று அப்பாவின் நண்பர் கேள்வி கேட்க
“ஆமாங்க ஸார்” என்று ஸ்டாலின் பவ்யமாய் பதிலளித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த வீட்டுப் பெண்மணி டவரா செட்டில் மணக்க மணக்க பில்டர் காஃபி கொண்டு வந்து கொடுத்தார்.
“இவன் யார்னு தெரியுதா டி உனக்கு? நம்ம சீனி இருக்கானே அவன் புள்ளை. இங்கதான் தங்கி படிக்கிறான். இது இவனோட சினேகிதன்” என்றவர்
“இவன் பெயர் தெரியுமா? தலைவர் மாதிரி சீனியும் அவன் பிள்ளைக்கு ஸ்டாலின்னு பெயர் வைச்சிட்டான் ஹாஹா” என்று அதிர சிரித்தார் அந்த மாமா.
“உன் அண்ணன் கட்சிக்கூட்டத்துக்கெல்லாம் வரான். உன்னைப் பார்க்க முடியலயே. ஏன்?” என்று கேட்க
“படிக்கிற பையனை என்னத்துக்கு உங்க கட்சிக்குக் கூட்டத்துக்கெல்லாம் கூப்பிடுறீங்க?” என்று அவர் மனைவி திட்ட, அவரை முறைத்துப் பார்த்தார் அந்த மாமா.
“சரிங்க ஸார், கொஞ்சம் வேலையிருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று சொல்லி நண்பர்கள் இருவரும் கிளம்பினார்கள். ராணியக்கா சொன்னபடி மாதா தெருவில் அவர் கொடுத்த துணிகளை வாங்கியவர்கள், மறக்காமல் அம்பிகா அப்பள கடையில் நிறுத்தி அப்பளமும், பின் லியோ காப்பிபொடி கால் கிலோவும் வாங்கிக்கொண்டு சைக்கிளைப் பிடித்தபடி, மயிலையின் மாட வீதிகளில் மெல்ல நடைபயின்றனர்.
கோகிலாவுக்கு அஞ்சல் தலைகள் என்றால் பிடிக்கும் என்பதால், வெளி நாட்டு அஞ்சல் தலைகள் மாதிரி லஸ் கார்னரில்(Luz Corner)இருக்கும் ஷாந்தி விஹாரில் கிடைக்கும் என்பதால் அங்கு சென்று அவளுக்காக சில அஞ்சல் தலைகள் வாங்கினான் ஸ்டாலின். தன் காதலிக்காக ஸ்டாலின் அவளுக்குப் பிடித்தது வாங்கவும், சூர்யாவுக்கும் மனதில் யமுனாவைப் பற்றிய எண்ணங்கள்.
அவளுக்கு என்ன பிடிக்கும்? என்னைப் பிடிக்குமா?” என்று பல யோசனைகள் ஓட,
“என்னடா போலாமா?” என்றபடி அவன் தோளில் தட்டினான் ஸ்டாலின்.
“ஹரே ஸ்டாலின்! கோகிக்கு ஸ்டாம்ப் கலெக்ஷன் ஹாபி, யமுனாவுக்கு என்ன ஹாபி. என்ன பிடிக்கும்?” என்று வெகு ஆவலாய் நண்பனின் முகம் பார்க்க, ஸ்டாலின் நன்றாய் முறைத்தான் அவனை.
“ஏன்ட்ரா?” என்று சூர்யா கேட்க
“மண்ணாங்கட்டி! ஏன் டா இப்படி பண்ற? அந்த பொண்ணைப் பக்கத்துல பார்த்து இருக்கியா நீ? பேசி இருக்கியா? தேவையில்லாம ஆசையை வளர்க்காத சூர்யா. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன். நீ இங்க படிக்க வந்திருக்க, உன் அண்ணன் அதுக்காகத்தான் காசு செலவு பண்ணி அனுப்பியிருக்கார். படிச்சு எக்ஸாம் பாஸ் பண்ற வழியைப் பாருடா. நம்ம மட்டும் படிச்சு பாஸ் பண்ணல, எங்கப்பா என்னை கட்சியில சேர்த்துவிட்டுடுவார். நீ மூட்டையைக் கட்டிட்டு குண்டூர்ல போய் மிளகாய் வியாபாரம்தான் பார்க்கனும்” என்று நீண்ட அறிவுரை வழங்கினான்.
“உனக்குக் கோகியைப் பிடிச்சிருக்க மாதிரி, எனக்கு அந்த அம்மாயியைப் பிடிச்சிருக்கு டா” என்று சூர்யா தீவிரமாக சொல்ல
“டேய்! கோகியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். எத்தனை தடவ சொல்றது? புரிஞ்சிக்கோ டா.”
“நீ புரிஞ்சிக்கோ ஸ்டாலின். எனக்கு என்னவோ அந்த அம்மாயியைப் பார்த்ததிலிருந்து அவ முகம் மனசு விட்டுப் போகவே மாட்டேங்குது. ஆறு மாசமா நான் கஷ்டப்படுறேன்” என்றதும்
“டேய் கேம்ப் போனதே இரண்டு மாசம் முன்னாடிதானே? ஆறு மாசம்னு சொல்ற?” என்றான் ஸ்டாலின் யோசனையுடன்.
“அது நுவ்வு…ப்ச். நீ கோகிலாவைப் பார்க்க ப்ரஸ்ட் டைம் காலேஜ் திறந்தப்ப, என்னையும் ராமுவையும் அழைச்சிட்டு வந்த இல்ல, அப்போ அவ யார் கூடவோ, அவ அண்ணய்யான்னு நினைக்கிறேன். அவரோட காலேஜ்குள்ள போனா அப்போ பார்த்தேன். அமைதியா இருக்கான்னு தோணீச்சு. ஆனா அன்னிக்குக் கேம்ப் போய்ட்டு வந்த பின்னாடி என்னால அவளைப் பார்க்காம பேசாம இருக்க முடியலடா. அண்டர்ஸ்டாண்ட் மீ ப்ளீஸ்! கேம்ப்ல க்ளாரா மேம் கொஸ்டின் கேட்டப்போ அப்படியே திணறின அவ பார்வை.. எல்லாரும் சிரிச்சதும் அவ கண்ணு கலங்கினதும் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு”
“டேய் உனக்கு தமிழ் தகராறு, அந்த பொண்ணுக்கு இங்கிலிஷ் தகராறு. ஸோ இது ஒரு காம்ப்ளக்ஸ், காதல் இல்லைடா” என்று புரியவைக்க
“உங்கிட்ட ஹெல்ப் கேட்டா நீ இஷ்டத்துக்கும் பேசுவியா ரா?” என்று சூர்யா கோபமாகக் கேட்க
“பின்ன என்னடா? கரகாட்டக்காரன்ல ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்கன்னு பாடியிருக்காங்க இல்ல, நீ என்ன ஸ்டேட் விட்டு ஸ்டேட் லவ்வா?” என்றான் கிண்டலாக.
“இந்திரா காந்தி பையன் ராஜீவ் காந்தி ஒரு வெளி நாட்டுப்பொண்ணைத் தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கார், காதலுக்கு மொழி நாடு எல்லாம் லேதுரா ஸ்டாலின்”
“அப்படியா அப்போ நீயே அந்த யமுனா பொண்ணுகிட்ட பேசி உன் காதலை வளர்த்துக்கோ. நானும் பார்க்கிறேன்” என்றதும் சூர்யாவின் முகம் வாடிப்போக,
நண்பனின் தோளில் தட்டிய ஸ்டாலின்
“விடு டா, காந்தியும் ராஜாஜியும் சம்மந்தி ஆகலையா? அது மாதிரி உன்னையும் ஏத்துப்பாங்க. கோகிலா கிட்ட சும்மா உன் ப்ரண்ட்ஸோட வா பார்க்கனும்னு சொல்லியிருக்கேன். நீ பொறுமையா பேசு, அது ஊர்க்கார பொண்ணு. பயந்து ஊரைக் கூட்டி அடிவாங்கிடாம பார்த்துக்கோ” என்றதும் சூர்யாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
“ஆனா ஒரு கண்டிஷன்?” என்று ஸ்டாலின் நிறுத்த
“நீ போன மாசம் ஒரு டெரிகாட் சட்டை வாங்கினியே, அதான் டா உங்க சிரஞ்சீவி விஜயஸாந்தி நடிச்ச படம் பார்க்க, நம்ம ரெட்டி கூட ராயல் தியேட்டருக்குப் போட்டு போனியே, அந்த சட்டையை நாளைக்கு எனக்குத் தரனும்” என்று கேட்டான். சூர்யாவும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டான். அப்படியே பேசிக்கொண்டே நடந்தனர்.
“டேய் எனக்குப் பயங்கரமா பசிக்குது, வா டா ஜன்னல் கடையில பஜ்ஜிப் போட்டிருப்பாங்க. பாரு க்யூ நிக்குது, நம்மளும் இரண்டு வாங்கி சாப்பிட்டுப் போவோம்” என்று கபாலிஸ்வர் கோவில் தெருவில் இருந்த ஜன்னல் கடையில் கம்மர்கட்டும், மிளகாய் பஜ்ஜியும் வாங்கி உண்டுவிட்டு வீடு நோக்கி அவர்களின் சைக்கிளை மிதித்தார்கள்.
நவம்பர் 4, 1989
அன்று மதியம் உண்டு விட்டு படம் பார்க்க போகலாம் என்று தோழிகள் திட்டமிட்டிருக்க யமுனாவும் மேகலாவும் விடுதியில் உண்டு முடித்து கல்லூரி வாசலில் மற்ற தோழிகளுக்காக காத்திருக்க, பேருந்தில் வந்து இறங்கினார்கள் கோகிலாவும் சாந்தியும்.
தோழிகள் எல்லாம் சல்வார் அணிந்திருக்க, யமுனா மட்டும் பாவாடை தாவணியில் இருந்தாள். அவளுக்கு அம்மாவின் கவனிப்பில் நீளமான முடி, பின்னலிட்டு முன்னால் தொங்கவிட்டிருந்தாள். நெற்றியில் கோபுரப்பொட்டு, ஒற்றைக் கல் வைத்த சின்ன மூக்குத்தி. காதில் தங்கத்தில் ஜிமிக்கி ஆடியது.
“நீயும் எங்களை மாதிரி டிரஸ் பண்ணியிருக்கலாமில்லடி. படம் முடிச்சிட்டு பீச்சுக்குப் போக வசதியா இருக்குமே” என்று சாந்தி கேட்க
“இல்ல சாந்தி. எங்கிட்ட இரண்டு மூணு சுடிதார்தான் இருக்கு, துவைச்சுப்போட்டுட்டேன், எங்க வீட்ல எல்லாம் அதைப் போட்டா அம்மா திட்டுவாங்க” என்றாள் யமுனா.
“விடுங்கடி ட்ரசா முக்கியம். சாத்துக்குடி தாவணியில நல்லாதான்டி இருக்க, படம் ஆரம்பிக்கிறதுக்குள்ள போகனும், சீக்கிரம் நடங்கடி” என்று கோகிலா அதட்டவும் எல்லாரும் நடந்தார்கள்.
“ஏன் டி சாந்தி? நேத்து ஒரு கதை சொன்னியே…நடக்கிற வரைக்கும் அதை சொல்லு. வேகமா நடக்கலாம்” என்று மேகலா கேட்க
“என்ன கதை?” என்று யமுனா ஆர்வமாய்க் கேட்க
“எல்லாம் தூர்தர்ஷன்ல ஒரு நாடகம் போடுறான். ஃபாஜின்னு(fauji) அதுல அபிமன்யூ ராய்னு ஒரு பையன் வரான்டி. என்ன அழகா சிவப்பா இருப்பான் தெரியுமா?” என்று சாந்தி ரசித்து வர்ணித்தாள்.
“அந்த பையன் பேரு ஷாருக்கானாம், எங்க பெரியம்மா பொண்ணு பம்பாயில இருக்காளே, அவ லெட்டர் போட்டிருந்தா போன வாரம். அதுல சொன்னா” என்று கோகிலா கூடுதல் தகவல் தந்தவள்
“என்ன இருந்தாலும் கமலஹாசன் அளவு யாரும் அழகில்லடி” என்று சேர்த்து சொன்னாள். இப்படியே பேசி சிரித்து தியேட்டரை படம் போடுவதற்குள் அடைந்துவிட்டனர். இவர்கள் வருவதற்கு முன்பே, ஸ்டாலின் நண்பர்களுடன் காத்திருந்தவன் சேர்த்து டிக்கெட் எடுத்துவிட்டான். கோகிலாவைக் கண்டதும் புன்னகையுடன் அவளிடம் டிக்கெட்டை நீட்ட, தோழிகளிமிருந்து பணம் வாங்கி அவனிடம் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக் கொண்ட ஸ்டாலின்,
“படம் பார்த்துட்டு பீச் போகும்போது பார்க்கலாம் கோகி” என்ற ஸ்டாலினிடம்
“உனக்கு இந்த சட்டை நல்லாயிருக்கு” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கோகிலா போக, காதலனுடன் பேசிவிட்டு வந்த தோழியை மற்றவர்கள் கிண்டல் செய்ய, ஒருவழியாக படம் முடிந்து வெளியே வந்தார்கள்.
“என்னடா சூர்யா படம் நல்லாயிருந்துச்சா?” என்று ராமு கேட்க
“ஹ்ம்ம். மன்ச்சிதி ரா.(நல்லா இருந்துச்சு) அதுவும் சிரஞ்சீவி கலக்கிட்டார்ல, என்ன ஃபைட்” என்று சிலாகித்துப் பேச
“அடப்பாவி! டேய்! இது ரஜினி படம் டா” என்று ஸ்டாலின் சூர்யாவின் கழுத்தைப் பிடித்தான்.
“ரஜினியும் நல்லா நடிச்சிருந்தார் டா. ஆனா சிரஞ்சீவியும் வந்தார்ல” என்று பேச ராமுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பின்னே இரண்டரை மணி நேர படத்தில் ஐந்து நிமிடம் வந்ததை சிலாகித்துப் பேசினால்?
கோகியும் தோழிகளுடன் வெளியே வந்தவள் பேருந்தில் ஏறிக்கொள்ள, ஸ்டாலினும் அவன் நண்பர்களும் அதே பேருந்தில் ஏறினார்கள். ஸ்டாலினும் கோகிலாவும் ஒரே இருக்கையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வர, சாந்தியும் மேகலாவும் நாடகம் பற்றி பேசிக்கொண்டிருக்க, யமுனாவுக்கு அருகே ஒரு பாட்டி வந்து உட்கார்ந்துவிட்டார். ராமு உட்கார இடம் கிடைத்து சூர்யாவையும் அழைக்க,
“நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லி யமுனாவைப் பார்க்கும்படி நின்றுகொண்டான் சூர்யா. ஆனால் யமுனாவின் பார்வையோ வெளியே பரந்து விரிந்த நகரத்தில் இருந்தது.
கடற்கரை வந்தவுடன் எல்லாரும் இறங்க, கோகிலாவிடம் ஸ்டாலின்
“கோகி! உன் ப்ரண்ட் யமுனா கிட்ட என் ப்ரண்ட் சூர்யா ஒரு நிமிஷம் பேச நினைக்கிறான். கொஞ்சம் உன் ப்ரண்டை கூப்பிடு டி” என்றதும் கோகிலா அவனை குறுகுறுவென பார்க்க
“நல்ல பையன் டி கோகி. சும்மா இரண்டே வார்த்தை பேசிட்டுப் போய்டுவான்” என்றதும் யமுனாவைத் தன்னோடு அழைத்துக்கொண்டாள் கோகிலா. மேகலாவும் சாந்தியும் முன்னே நடக்க, பின்னால் கோகியும் யமுனாவும் நடக்க
“இதான் நான் ப்ரஸ்ட் டைம் பீச் வரது தெரியுமா கோகி?” என்று யமுனா சிரித்தபடி சொல்ல, அந்த சிரிப்பில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான் சூர்யா. யமுனாவின் இந்த சிரிப்பு ஆழ அகத்துனுள் இறங்கி இதம் செய்தது.
எல்லாரும் அலைகளில் கால் நனைக்க, கோகியும் ஸ்டாலினும் தனியே இருக்கட்டும் என்று யமுனா விலகி வர, சூர்யா யமுனாவிடம் பேச வை என்று ஸ்டாலினிடம் ஜாடை காட்ட, ஸ்டாலின் கோகிக்கு ஜாடைக் காட்ட, கோகி யமுனாவிடம்
“இந்த அண்ணாவும் ஸ்டாலின் கூடத்தான் படிக்கிறார் யமுனா. நல்லா படிப்பாங்களாம்” என்று அறிமுகம் செய்ய யமுனா சூர்யாவைப் பார்த்தவர்
“நல்லா இருக்கீங்களா அண்ணா?” என்று கேட்டுவிட அவ்வளவுதான் சூர்யாவுக்கு அவ்வளவு கோபம் வந்துவிட்டது.
“அண்ணய்யாவா? நான் உனக்கு அண்ணாவா?” என்று கொதித்துப் போய் யமுனாவிடம் கேட்க
“என்னாச்சுண்ணா? கோகி?” என்று யமுனா தடுமாறி நிற்க
“என்னை இனிமே அண்ணான்னு நீ சொல்லக்கூடாது, அர்த்தமாயிந்தா?” என்று கடுமையாய்ப் பேச, யமுனாவிற்கு சூர்யாவின் அன்பு புரியும் முன்னே அச்சம் வந்து அவளிடம் ஒட்டிக்கொண்டது.