“சுபிட்சத்தை சமாளிக்கவும் திணறுகிறார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பாத்ரூம்களை அலங்கரிப்பதிலும் பத்தாவது மாடியில் அபத்தமாக வீனஸ் டிமிலோ சிலை அமைப்பதிலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களை விலைக்கு வாங்குவதுலும், அமெரிக்க கம்பெனிகளில் சிறுபான்மை ஷேர்கள் வாங்குவதிலும் செலவு பண்ணுகிறார்கள்
ஜப்பானில் நான் இருந்த பத்து நாட்களில் மொத்தம் மூன்று போலீஸ்காரர்களைத்தான் பார்த்தேன்” என்று சுஜாதா ‘கணையாழி’யில் எழுதிய கணையாழியின் கடைசி பக்கங்களை வாய்விட்டு சத்தமாய்ப் படித்துக் கொண்டிருந்தான் ராமச்சந்திரன்.
“சிறுபாமைன்னா என்ன ரா ராமு?” என்று சூர்யா கேட்க
“இத்தன நாளா தெரியாத வார்த்தையைக் கத்துக்கோன்னு நம்ம சொன்னப்போ எல்லாம், நான் தமிழ் தெரிஞ்சு என்னடா செய்யப் போறேன். எனக்குத் தெரிஞ்ச தமிழ் போதும்னு சொன்ன பய இன்னிக்கு அர்த்தம் கேட்கிறான்” கிண்டல் செய்தாலும்
“சிறுபான்மை டா! அப்படின்னா மைனாரிட்டி” என்று நண்பனுக்கு விளக்கினான் ராமச்சந்திரன்.
“சுஜாதா சமீபத்துல ஜப்பான் போயிருக்கார் போலயே டா” என்று ஸ்டாலின் கேட்க
“ஆமா! அதைப் பத்திதான் எழுதியிருக்கார். இங்க நம்ம பிரசிடெண்ட்டை வரவேற்க ஏர்ப்போர்ட்ல இருந்து மவுண்ட் ரோடு வரைக்கும் மரத்துக்கு மரம் போலீஸ் நின்னாங்கனு எழுதியிருக்கார், ஜப்பான் நல்லா வளமா இருக்காம்” என்று ராமச்சந்திரன் அந்த கட்டுரையை முடித்தான்.
“படிச்சு முடிச்சிட்டேன்னா அதைக் கொண்டு போய் ராணிக்கா கிட்ட கொடுத்துடு. மாதவன் ஸார் வரதுக்கு முந்தி அதைக் கொடுக்கலன்னா திட்டுவாங்க” என்றான்.
“டேய் அக்டோபர்ல வந்ததுடா, இன்னமுமா படிக்காம இருப்பார்?” என்று கேட்டான் ராமு.
“எப்ப வந்ததா இருந்தா என்ன? அவர் பயங்கர சுஜாதா விசிறிடா. எல்லாமே பத்திரமா வச்சிருக்கறது ஒரு போதை. மாதவன் ஸார் கிட்ட நீ கை மாத்தா ஐம்பது நூறு கூட வாங்கிடலாம், ஆனா கடனா சுஜாதா புக்ஸ் மட்டும் வாங்கிட முடியாது தெரியுமா?” என்று ஸ்டாலின் சிரித்தபடி நீல நிற மெட்ராஸ் செக் சட்டையை அணிந்து கொண்டான்.
“அது சரி கொடுத்துடுறேன், இருந்தாலும் நம்ம ஊர்ல நிறைய ஜனத்தொகை இல்லங்கடா. பாருங்க அங்க பணத்தை செலவு செய்ய வழியில்லையாம். இங்க பணம் இல்லை, என்னவொரு ஏற்றத்தாழ்வு பாரேன்” என்று ராமு புலம்ப
“டேய் எத்தனை குண்டு போட்டாலும் அங்க உள்ளவங்க ஊக்கத்தோட திரும்பி எழுந்து வராங்கடா, உழைக்கிறாங்க. அறிவியலும் வளர்ச்சி அடைஞ்ச ஒரு நாடு. கூடிய சீக்கிரம் நம்ம நாடும் அப்படி ஆகிடும் பாரேன்” என்றான் ஸ்டாலின்.
“சூர்யா போலாமா?” என்று ஸ்டாலின் கேட்க
“இப்பல்லாம் இந்த சூர்யா பய முன்ன மாதிரி இல்லடா, உங்கூட ஊர் சுத்த ஆரம்பிச்சுட்டான். வெள்ளிக்கிழமையான்னா ஒலியும் ஒளியும் கேட்கிறான், நம்மளை தண்ணீ பிடிக்க விடுறான், இளையராஜா பாட்டு எங்க ஓடினாலும் நின்னு கேட்கிறான்” என்று ராமு சிரிக்க
“எல்லாம் தல் தல் காதல்! படுத்தும்பாடு டா” என்று ஸ்டாலினும் கூட சேர்ந்து சிரித்தான்.
“லேட் ஆயிப்போயிந்தி ரா ஸ்டாலின், சீக்கிரம் வா” என்று அவனை அவசரப்படுத்த
“கோகிலாவுக்குக் கிஃப்ட் வாங்க நீ கூட அவசரப்படல, சூர்யாவுக்குத்தான் ரொம்ப அவசரம் போல”
“பின்ன, கோகி எப்படியும் கூட யாராவது அழைச்சிட்டு வருவா. நம்ம சூர்யாவுக்காக இப்போ எல்லாம் யமுனா கூடத்தானே அவ வரா. இவன் நல்ல நேரம் அந்த புள்ள சாதாரண செருப்பு போட்டிருக்கு. அடிச்சா கூட ரொம்ப வலிக்காதுன்னு நினைக்கிறேன்” என்று ஸ்டாலின் நக்கலாக சூர்யாவை பார்த்தான்.
“யமுனா அப்படியெல்லாம் கிடையாது” என்றான் கடுப்பாக.
“ஏண்டா ஸ்டாலின்! அடிச்சா வலிக்காதுன்னு சொல்றியே அனுபவமோ? பார்த்துடா ஈவ் டீசிங்க்ல உள்ள போயிறாதீங்க” என்று ராமு சொல்ல
“அதுக்குத்தானே இவனையும் அந்த பொண்ணையும் தனியா விடாம கூட கோகிலாவோட சுத்துறோம், பிரச்சனை வந்தா கோகி கூட இருப்பாளே” என்ற ஸ்டாலின்
“மணி ஆச்சுடா, நாங்க ப்ராட்வே போயிட்டு வந்திடுறோம்” என்று சொல்லி ஸ்டாலின் கீழே இறங்க, கூடவே சூர்யாவும் இறங்கினான். அவனின் சைக்கிளுக்குக் காற்று குறைவாக இருக்க
“அப்படியே இவன் சைக்கிளுக்கும் அடிச்சுக் கொடுத்துடுபா ஸ்டாலின். இவன் ஓட்டிப்பழகனும்னு கேட்டான்” என்று தன் மகன் சைக்கிளுக்கும் காற்றடிக்க சொல்லி பம்ப்பினைக் கொடுத்துவிட்டுப் போக, கணையாழி இதழைத் தருவதற்காக கீழே இறங்கிய ராமு இதனைக் கண்டு நக்கலாய் நண்பனை பார்த்தான்.
“அது எப்படி டா? என்னை மட்டும் வேலை வாங்குறாங்க. இவனும் நிக்குறான், நீ கூடத்தானே புக் வாங்க வந்த, உன்னை எதாவது செய்ய சொல்றாங்களா?” என்று முணுமுணுத்தபடியே சைக்கிளுக்குக் காற்றடித்தான்.
“அது உன் முக ராசி அப்படி இருக்குடா. நாங்க ரொம்ப பேசாம மாடியேறிடுவோம், இவன் சுத்தம்! ராணியக்கா தமிழ் பேசுற வேகத்துக்கு இவனுக்கு ஒன்னுமே புரியாது. நீதான் நின்னு கதைப்பேசுவ, செஞ்சாலும் ஒன்னும் குறைஞ்சிட மாட்ட. உன் கோகிக்குக் கிஃப்ட் வாங்க காசு மிச்சம் பிடிக்க, மாடியில காய வைக்கிற மாவடு வத்தல்னு ஆட்டையைப் போடுற இல்ல, செய் செய்” என்று சொன்னவன் ராணி அக்காவை அழைத்து புத்தகத்தைக் கொடுத்துவிட்டு மாடியேறினான்.
நண்பர்கள் இருவரும் பேருந்து பிடித்து ப்ராட்வே சென்றனர், பூக்கடை பேருந்து நிலையத்தில் இறங்கி எதிர்ப்பக்கம் நடந்து தம்பு செட்டித்தெருவைக் கடந்து உள்ளே சென்றனர். ஒவ்வொரு தெருவிலும் சில இடங்களில் மக்கள் கூட்டம் இருந்தது. இவர்கள் ஒரு வளையல்கடையில் புகுந்தார்கள். ஏற்கனவே கோகிலாவின் அளவு வளையல் ஒன்று வட்டம் போட வேண்டும் என்று எப்போதோ ஸ்டாலின் வாங்கி வைத்திருந்தான். அதனைக் கொடுத்து அதன் அளவில் வண்ண வண்ண கண்ணாடி வளையல்கள் இரண்டு டஜன் வாங்கினான்.
அதனைப் பார்த்த சூர்யாவுக்கும்
“ஏன்ட்ரா யமுனாவுக்கும் வளையல் வாங்கவா?” என்று கேட்க
“அட மட சாம்பிராணி! அளவில்லாம எப்படி வாங்குறது?” என்று முறைத்தான்.
“கோகி ப்ரண்ட்தானே டா? அவளும் இவளும் ஒரே க்ளாஸ்தானே? பத்தாதா?” என்று சூர்யா யோசிக்க
“இதுக்கு முன்ன இந்த வளையல் எல்லாம் நீ வாங்கினதே இல்லையா?” என்றதும் இப்போது சூர்யா முறைத்தான்.
“நான் யமுனாவைத் தவிர எந்த பொண்ணையும் பார்த்ததில்லை, வேற யாருக்கு நான் வாங்கித் தரப்போறேன்? அம்மாவுக்கு வாங்கி தரனும் நாக்கு சால சால ஆசை ரா, ஆனா அந்த பாக்கியம் லேது ரா” என்றதும் நண்பனின் தோளில் கைப்போட்டவன்
“ஸாரி டா சூர்யா, ஃபீல் பண்ணாத. அம்மா உங்கூடவேதான் இருப்பாங்க. யமுனா மட்டும் உனக்கு ஓகே சொல்லட்டும், அப்புறம் பத்து டஜன் வாங்கிக் கொடுத்துடு உன் ப்ரியத்தம்மாவுக்கு” என்று ஸ்டாலின் உற்சாகப்படுத்தவும் லேசாய் ஒரு புன்னகை உதயமானது சூர்யாவின் முகத்தில்.
அப்படியே பாரீஸ் கார்னரில் இருக்கும் பர்மா பஜார் கடைகள் பக்கமாய் இருவரும் நடக்க,
“இங்க எதுக்குடா?” என்று ஸ்டாலினை சூர்யா பார்க்க
“கோகி வீட்ல டேப் ரெகார்டர் வாங்கியிருக்காங்கன்னு போன தடவ பார்த்தப்ப சொன்னாடா. அப்போ கேசட் வாங்கிக்கொடுத்தா அவளுக்கு சந்தோஷமா இருக்கும்ல, அதான் அவளுக்கு கமல், ரஜினி இரண்டு பேரும் பிடிக்கும். நினைத்தாலே இனிக்கும் கேஸட் வாங்கிக் கொடுத்திடலாம் நினைச்சேன், கூடவே ஒரு இளையராஜா ஹிட்ஸ் வாங்கிட்டா கோகிலா அப்படியே வானத்துல பறப்பா” என்று தன் கோகிலத்தைப் பற்றி பேசுகையில் அப்படியொரு புன்னகையுடன் ரசித்து ஸ்டாலின் சொல்ல, அதையெல்லாம் ரசிக்கும் மன நிலை இல்லை சூர்யாவிடம்.
“நீ கொண்டு போய் கொடுத்தா வாங்கிக்குமா அந்த பொண்ணு?”
“வாங்குற அன்னிக்குக் கொடுப்பேன் ரா” என்று சொன்ன சூர்யா இளையராஜாவின் இரண்டு கேஸட் வாங்கவும்
“ஒரே மாதிரி இரண்டு கேஸட் எதுக்குடா?” என்று கேட்டான் ஸ்டாலின்.
“ஒன்னு என் ப்ரியத்தம்மாவுக்கு, இன்னொன்னு எனக்கு. அவளும் நானும் ஒரே நேரத்தில் இந்த பாட்டைக் கேட்கும்போது அவ என் கூடவே இருக்கமாதிரி இருக்குமே” என்றவனை ஆவென பார்த்தான் ஸ்டாலின்.
அப்படியே கோகிலாவிற்கு அங்கே குறைந்த விலையில், ஒரு கைக்கடிகாரமும் வாங்கி மகிழ்வுடன் இருவரும் வீடு சென்றனர்.
“என்னடா லவ்வர் பாய்ஸ், என்ன வாங்குனீங்க?” என்று ராமு கேட்க
“இளம் வயசு பொண்ண வசியம் பண்ண வளவிக்காரன்..” என்று உற்சாகமாய்ப் பாடியபடி வாங்கி வந்திருந்த கண்ணாடி வளையல்களைக் காண்பித்தான்
ஸ்டாலின்.
“இதுல கலகலன்னு சத்தம் கேட்கும்போதெல்லாம், என் ஞாபகம் வரும் என் கோகிக்கு” என்று ஸ்டாலின் சொல்ல
“அடேய்! என்னடா இப்படி பண்ற?” என்று ராமு சிரிக்க
“நானே பரவாயில்லடா, இவன் இன்னும் காதலே சொல்லாம என்ன என்ன சொல்றான் தெரியுமா?” என்று இருவரும் சேர்ந்து சூர்யாவைக் கிண்டல் செய்தனர்.
அன்று கோகிலாவின் பிறந்தநாள். தோழிகளுடன் வெளியே செல்ல ஆசை இருந்தபோதிலும், ஸ்டாலின் அன்றைய நாள் முழுவதும் அவளுடன் இருக்க ஆவல் கொண்டிருக்க, இவள் காதல் மனமும் அதற்கே இசைந்து கொடுத்தது. யமுனாவை மட்டும் அழைத்து வந்தாள்.
அவர்களுக்கு முன்பாகவே திருமயிலை கபாலிஸ்வரர் கோவிலின் வடக்கு மாட வீதியில் இருந்த ‘காளத்தி கடை’யின் முன் ரோஸ்மில்க்கை வாங்கிக் குடித்தபடி ஸ்டாலின் நிற்க, பன்னீர் சோடாவுடன் நின்றான் சூர்யா.
இருவருக்குமே மனம் கொண்ட மங்கையரைக் காண மனதெல்லாம் ஆவல் மிகுந்திருக்க, மிகுந்த சிரத்தை எடுத்து டிப்டாப்பாக கிளம்பி இருந்தனர். இதில் ஸ்டாலின் வேறு,
“இந்த சட்டை எப்படிடா இருக்கு? பாயும் புலில சூப்பர் ஸ்டார் போட்டிருப்பார், செங்கல்பட்டுல நசீர் பாய்னு எங்களுக்குத் தெரிஞ்சா ஒரு அண்ணா இருக்கார்டா. நம்ம பட்ஜெட்ல டாப்பா சட்டைத் தச்சுக் கொடுப்பார், கோகி பார்த்துட்டா அப்படியே ஷாக் ஆகிடுவா பாரு” என்று சூர்யாவிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டான்.
கோகிலாவிடம் முன்பே இங்கு நிற்பதாக சொல்லியிருக்க, அவர்கள் சரியாக கடையின் முன் வந்து நின்றனர்.
“கோகி, உனக்கு ரோஸ்மில்க்?” என்று கேட்க
“எனக்கு வேண்டாம், யமுனா உனக்குடி?” என்று கேட்க யமுனா இல்லையென தலையசைத்தாள். சூர்யா கோகிலாவிடம் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவன், தன் தலைவியிடம் சின்னதாய் ஒரு தலையசைப்பு அவ்வளவுதான். ஸ்டாலினும் கோகிலாவும் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவன் கொண்டு வந்த பரிசுகளால் கோகிலாவின் விழிகள் வியப்பில் விரிய,
“உன் சுடிதார் சூப்பர் கோகி, இந்த வளையலை போட்டுக் காட்டு” என்றதும் அவளும் போட, இவன் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்தான்.
‘பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே’
என்று சூர்யாவிற்கு ஏற்றது போல பாடல் ஓட, அவனுக்கு அர்த்தம் தெரியவில்லை. கடையில் இருந்த ரேடியோவில் சிலோன் பண்பலையில் யேசுதாஸ், எஸ் ஜானகி குரலில் பாடல் ஒலிக்க, யமுனாவின் இதழ்கள் மெல்ல பாடலை முணுமுணுக்க, இசையை பெண் ரசிக்க, பெண்ணை அவன் ரசித்தான்.
மயிலை வீதியில் மையல் கொண்டு மங்கையை அவன் கண்டும் காணாமல் கண்டிருக்க, அதற்குள்ளாக ஒற்றைக் கையில் ஸ்டாலினின் வளையல்கள் குலுங்க, இன்னொரு கையில் அவன் வாங்கிய வாட்ச் என்று கோகிலா புன்னகை முகமாக, தோழியிடம் வந்து நின்று காதலன் தந்த பரிசுகளைக் காட்டி மகிழ்ந்தாள்.
நால்வருமாக கோவிலுக்குச் சென்று மயிலை நாதனை வணங்கிட, ஸ்டாலினும் கோகியும் ஜோடியாக நிற்க, கோகியின் அருகே யமுனா நிற்க, யமுனாவுக்கு எதிரே நின்று கொண்டான் சூர்யா. எப்படியாவது என்னை இவளுடன் சேர்த்து வைத்து விடு ஈஸ்வரா என்று அவன் வேண்டிக்கொண்டான். கோவிலில் தரிசனம் முடித்ததும் எல்லாரும் வெளியே வர
“கோகி, படம் பார்க்க போலாமா?” என்று கேட்டான்.
“ம்ம், சூப்பர்ஸ்டார் படம் பணக்காரன் வந்திருக்கு. அதுக்கு போவோம்” என்று கோகிலா சொல்ல தேவி தியேட்டர் வந்தனர். அங்கு தேவி பாரடைஸில் பணக்காரன் ஓட, தேவிகலாவில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது கங்கைஅமரனின் கரகாட்டக்காரன்.
யமுனாவிற்குக் கோகிலா என்றால் இஷ்டம். அமைதியான யமுனாவிற்கு அட்டகாசமாய்ப் பேசும் கோகிலா பிடித்தவளாகிப்போனாள். அதற்காகவே அவள் அழைத்த போதெல்லாம் வெளியே வந்தாள். கூடவே ஊரில் அத்தனை கட்டுப்பாடுகளின் இருக்க, இங்கே கிடைத்த சுதந்திர உணர்வினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, பிடித்த படிப்பு. நல்ல தோழிகள் என்று அருமையானதொரு கல்லூரி வாழ்க்கை. இப்படி அடிக்கடி வெளியே வருவது கூட உற்சாகமாய், ஊர் சுற்றும் அனுபவம் கூட பிடித்ததுதான் இருந்தது.
கரகாட்டக்காரனின் போஸ்டரைக் காணவும் யமுனாவின் கவனம் ஒரு நொடி அங்கே போனது. தன் மனதில் உள்ளதை வாய் விட்டு கேட்கவில்லை, அதை விட இன்று கோகிலாவின் பிறந்த நாள் அவளின் இஷ்டம்போல் படத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தாள் யமுனா. யமுனாவின் மீதே பார்வை வைத்திருந்தவனுக்கு அவள் பார்வை தெரிய, ஸ்டாலினிடம் மெல்ல கிசுகிசுத்தான்.
“இவன் கரகாட்டக்காரன் பார்க்கனும்னு ஆசைப்படுறான், நம்ம மட்டும் பணக்காரன் பார்க்க போவோம்” என்று ஸ்டாலின் சொல்ல
“ஏன் டி நீயும் கரகாட்டக்காரன் பார்க்கலதானே? உனக்கும் அந்த படத்துக்கு டிக்கெட் எடுக்க சொல்லவா?” என்று கோகிலா கேட்க
“இல்லை, இல்லை. வேண்டாம் நான் உங்கூடவே வரேன்” என்று யமுனா எப்படி இவனுடன் தனியே படம் பார்க்க என்று நினைத்து அவசர அவசரமாய் மறுக்க, அதில் சூர்யாவின் மனம் மிகவும் வருத்தப்பட்டது.
“உனக்கு இஷ்டமில்லன்னா வேண்டாம் யமுனா, என்னைப் பார்த்து பயப்படாத” என்று சூர்யா சொல்ல யமுனாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.