சூர்யா அப்படி சொல்லிவிடவும் யமுனாவிற்கு என்னவோ போல் ஆனது, அவனிடம் முன்பிருந்த பயமோ தயக்கவுணர்வோ தத்தையிடம் கொஞ்சமும் இப்போது இல்லை. அண்ணனுக்குப் பிறகு அதிகம் பேசிய ஆண் என்ற அளவில் நிற்பவன் அவன். அவனிடம் பயமின்றி பாடம் சம்மந்தமாய் எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறாள், ஒன்றாய் படித்து இருக்கிறாள். ஆனால் ஒரு ஆணுடன் தனியே படம் பார்க்கும் அளவிற்கு தனக்குத் தைரியம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே யமுனாவிற்குத் தோன்றியது.
யமுனாவின் தயக்கம் கண்டு, “ஏய்! நீ ரொம்ப ஆசைப்பட்ட இல்லை, என்னைத் தவிர யாரோடவும் நீ அவ்வளவா வெளியே போறதே இல்லை. இன்னிக்கு உனக்காக நம்ம கரகாட்டக்காரனே பார்ப்போம், ஸ்டாலின் நீங்க நாலு டிக்கெட்டே எடுங்க” என்று கோகிலா தோழிக்காக சொன்னாள்.
தோழி தனக்காக யோசிக்கவும் யமுனா உடனே,
“இல்லடி, நானும் ரஜினி படமே பார்க்குறேன், அதுவும் நான் பார்க்காத படம் தானே?” என்று சொல்ல
“அதெல்லாம் வேண்டாம், நாங்க இன்னொரு நாள் பார்த்துக்கிறோம். என் சாத்துக்குடி ஆசைப்பட்ட படம்தான் இன்னிக்கு” என்றாள் கோகிலா.
“அய்யோ கோகி, என்னடி உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு? இப்ப என்ன நான் ஆசைப்பட்ட படம் பார்க்கனும், அவ்வளவுதானே? நான் கரகாட்டக்காரனே பார்க்கிறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, பக்கத்துல இருக்க தியேட்டர்தானே? முடிஞ்சதும் ஒன்னா போகலாம்” என்று சூர்யாவைப் பார்க்காமல் யமுனா கோகியிடம் சொல்ல, ஸ்டாலின் சென்று டிக்கெட் எடுத்து வந்தான்.
சூர்யாவும் அவனுக்கும் யமுனாவுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க, அந்த பணத்தை உடனே அவனிடம் கொடுக்க, அவனும் மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டான்.
சூர்யாவும் யமுனாவும் ‘தேவிகலா’விற்குள் நுழைந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் படம் பார்க்க உட்கார்ந்தனர். சூர்யா ஒருவார்த்தை, ஒரு பார்வை யமுனாவை பார்க்கவில்லை. அவன் விழியைக் கண்டவளுக்கு அவனின் விழைதல் தெரியவில்லை, அகமெல்லாம் அவள் புறம் சாய்ந்து இருப்பதை அறியாதவள் சூர்யாவுக்குத் தன் மேல் வருத்தமோ என்று வருத்தமாய் இருக்க,
“சூர்யா?” என்று மெல்ல அழைத்தாள். அதில் சுடரும் விழிகளுடன் யமுனாவைப் பார்த்தான் சூர்யா.
“ஏன்ட்டிமா?..என்னம்மா?” என்றவன் மாற்றிப் பேச
“எனக்குப் பிரச்சனையில்லை சொல்லிட்டேன், உங்க வசதி எப்படியோ அப்படி பேசுங்க” என்றதும்
“ம்ம்” என்றான்.
“என் மேல கோவமா?” என்று கேட்க தன் முன்னே இருந்த திரையைப் பார்த்தவண்ணம்
“இல்லையே” என்றான். அவன் பார்வை கூட பாவை பக்கம் இல்லாமல் இருக்க, அது கூட யமுனாவைப் பாதிக்க
“நான் கிராமத்தில பொறந்த பொண்ணு சூர்யா, அங்க நாங்க ஆம்பிள பசங்க கிட்ட பேசக்கூட மாட்டோம். உறவுக்காரங்க கிட்ட தான் பேசுவோம். பசங்க கூட ப்ரண்ட்ஷிப் எல்லாம் அங்க யோசிக்க கூட முடியாது. நான் இதுவரைக்கும் இப்படி யார் கூடவும் படத்துக்கு எல்லாம் போனது இல்லை. அதான் டக்குன்னு அப்படி சொல்லிட்டேன், உங்க மேல பயமெல்லாம் இல்லை, தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்” என்றாள்.
யமுனாவின் பக்கம் லேசாய்ப் பார்வையைத் திருப்பியவன்,
“நானும் கிராமத்துல இருந்துதான் வரேன், எனக்குப் புரிஞ்சது யமுனா. தப்பா எல்லாம் நினைக்கலம்மா, நம்ம ப்ரண்ட்ஸ்தானே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியும்தானே? அதனால்தானு உங்கூட வர ஒத்துக்கிட்டேன்” என்று சமாதானம் சொல்ல, யமுனாவின் முகத்தில் ஒரு புன்னகை.
‘பாட்டாலே புத்தி சொன்னார்’ என்று ராஜாவின் குரல் கேட்கவும் திரையரங்கம் கரகோசம் எழுப்பியது. இவர்களின் கவனமும் திரையில் விழுந்தது.
‘ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்’ என்று மாங்குயிலே பூங்குயிலே பாடல் வரும்போது யமுனா மெல்ல முணுமுணுக்க, கூடவே சேர்ந்து சூர்யாவும் முணுமுணுக்க அதுவரை அவன் பக்கம் பார்க்காதவளின் பார்வை அவன்மேல் விழ,
“உங்களுக்கு இந்த பாட்டு தெரியுமா? தமிழ் பாட்டெல்லாம் பாடுவீங்களா?” என்றாள் ஆச்சர்யமாய் அகல விரிந்த விழிகளுடன்.
“இதுல என்ன இருக்கு? நான் ஹிந்தி சாங்ஸ் கூட பாடுவேன், கிஷோர் குமார் பாட்டுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்மா. இளையராஜா சாங்க்னா எனக்கும் இஷ்டம்தான், தமிழ் பாட்டும் கேட்பேன். இப்ப ரொம்ப கேட்குறேன்” என்றான் அவள் விழிகளைப் பார்த்தபடி.
இப்பொழுது அதிகம் கேட்பதற்கு காரணம் கேட்பாளோ என்று ஆசையாய் சூர்யா பார்க்க, யமுனா எப்போதுமே அதிகம் பேசமாட்டாள். அது அவளின் குணமும் அன்று. அதனால்
“ஆமா ராஜா பாட்டு யாருக்குத்தான் பிடிக்காது?” என்றாள் சின்ன புன்னகையுடன்.
அப்படியே இருவரும் படத்தில் ஆழ்ந்திருக்க, யமுனா சிரிக்கும் போதெல்லாம் இங்கே சில்லென்ற மழை இடியின்றி சூர்யாவின் அகத்தில் பொழிந்தது. பேசாமல் இருந்தாலும் கூட அந்த அருகாமை தந்த அமைதி, எல்லாம் ஒரு அலாதியான அனுபவமாய் இருந்தது.
உரிமையாய் உறவாய் அவளுடன் இருக்கும் பொழுதுக்காக மனம் ஏங்கியது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களே, அதன் பின் இவன் இங்கிருப்பானா என்று தெரியாது. யமுனாவிடம் அதற்குள் தன் மனம் திறக்க வேண்டுமே என்ற தவிப்பும் கூட சேர்ந்து கொள்ள பெரும் அவஸ்தை அவனிடம்.
சொல்லாமலும் இருக்க முடியவில்லை, சொல்லாமல் இப்படி அருகே இருக்கும் உணர்வினை அகம் திறந்த மகிழ்வில் அனுபவிக்கவும் முடியவில்லை, பெயரில்லா ஒரு போராட்டம்!!
இப்படி அவன் உணர்வுகளில் தவித்திருக்க, திரையில்
“மாரியம்மா மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்” என்று பாடல் ஒலிக்க, நாயகனும் நாயகியும் வேப்பிலையுடன் ஆட, யமுனா “அம்மா தாயே” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள, அதனைப் பார்த்த சூர்யாவுக்குச் சின்ன சிரிப்பு, பக்கத்து இருக்கையில் அவன் இருக்க, அந்த சிரிப்பு தெள்ளத்தெளிவாய் அவள் காதில் விழ
“எதுக்கு சிரிக்கிறீங்க? சாமி விஷயத்துல எல்லாம் இப்படி விளையாடக் கூடாது. கன்னத்துல போட்டுக்கோங்க” என்று யமுனா கொஞ்சம் அதட்டலாய் சொன்னாள். அவனுக்கும் கடவுள் பக்தி உண்டுதான், ஆனால் இப்படி படத்தில் வரும் கடவுளுக்கு எல்லாம் பரவசம் அடையாதவன் அவன், பாவை பேச்சில் பரவசமானான்.
“சாமி விஷயம் விளையாடாதீங்க சூர்யா, அப்புறம் பரீட்சையில ஃபெயில் ஆகிடுவீங்க” என்று சொல்ல, அடக்க முடியாத சிரிப்பை பெரும்பாடு பட்டு அடக்கினான்.
“சரி சரி. நான் ஒன்னும் சொல்லல” என்று அவன் சமாதானமாய் சொல்ல, ஒருவழியாய் படம் பார்த்து முடித்து இருவரும் வெளியே வர, அவளைப் பத்திரமாய் அழைத்து வந்து நண்பனுக்காகக் காத்திருந்தான்.
கோகிலாவும் ஸ்டாலினும் பணக்காரன் படம் பார்த்துவிட்டு வர, ஸ்டாலின் நண்பனின் தோளில் கைப்போட்டு,
“என்னடா மாங்குயிலே பூங்குயிலே…என்ன சேதி?” என்று சூர்யாவின் காதில் கிசுகிசுக்க
“ஒன்னும் இல்லடா”
“என்னடா இப்படி சொல்ற, ராமராஜன் துண்டை விட்டு கனகா கிட்ட லவ்வை சொல்ற மாதிரி நீ ஒரு கர்ச்சிஃப் ஆச்சும் போட்டு உன் காதலை இன்னேரம் சொல்லியிருப்பேன் நினைச்சேனே டா” என்று ஸ்டாலின் வருத்தமாய் சொல்ல
“சொல்லனும்னு தோணுது, சொன்னா யமுனா பேசுவாளோ மாட்டாளோ அவாய்ட் பண்ணிடுவாளொன்னு பயமாவும் இருக்குடா. உள்ள அவ கூட படம் பார்த்தப்போ அவ்வளவு சந்தோஷம் இருந்துச்சு, அதே நேரம் பயமும் இருந்துச்சு, போடா” என்று சலித்துக் கொண்டான் சூர்யா.
“இன்னிக்கு என் பர்த்டேனால என் டிரிட் உங்க எல்லாருக்கும்” என்ற கோகிலா எல்லாரையும் மவுண்ட் ரோட் புஹாரிக்கு அழைத்துச் சென்றாள். மட்டன் பிரியாணியும் சமோசாவும் ஆர்டர் செய்து எல்லாரும் உண்ண, சூர்யா அன்று சனிக்கிழமை என்பதால் மீல்ஸ் வாங்கி சாப்பிட
“நீங்க ஏன் சாப்பிடல?” என்று சூர்யாவிடம் யமுனாவாகக் கேட்க, ஸ்டாலினும் கோகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதிலும் கோகிலாவிற்குத் தோழி இப்படி இயல்பாய் ஒருவனிடம் பேசுவதே ஆச்சர்யம்தான்.
“எங்கம்மா பெருமாளுக்காக சனிக்கிழமை சாப்பிட மாட்டாங்க. வீட்ல யாரும் சாப்பிட மாட்டோம் யமுனா, அப்படியே பழகிடுச்சு” என்றான்.
“கோகி உனக்குத் தெரியுமா? புஹாரில சிக்கன் 65 ரொம்ப ஃபேமஸ், 1965ல இருந்து போடுறாங்க” என்று ஸ்டாலின் விளக்கம் சொல்ல
“ஃப்ர்ஸ்ட் பேட்டல் ஆஃப் பானிபட் எப்போ நடந்துச்சு சொல்லு?” என்று கேட்டான் சூர்யா. அவன் முகத்தில் ஒரு கிண்டல் தெரிய, ஸ்டாலினோ முறைக்க
“சொல்லுங்க, அண்ணா கேட்கிறார்ல” என்று கோகிலா ஸ்டாலினை முறைத்தாள்.
“1565 ஆஹ் டா, இல்லை இல்லை 1525” என்று ஸ்டாலின் உளறிக்கொட்ட, கோகிலா முறைத்தாள்.
“சிக்கன் 65 கண்டுபிடிச்சது மட்டும் தெரியும், படிக்கிறது மட்டும் தெரியாது. ஒழுங்கா படி ஸ்டாலின். நீ வேலைக்குப் போனாதான் அப்பா உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணித் தருவார். ஏற்கனவே அவங்க கட்சி ஆட்சியிலன்னு நம்ம வீட்டுக்கு நடுவில கட்சி சண்டை வேற, என் சித்தப்பா உனக்குக் கட்டிக்கொடுக்கவே கூடாதுன்னு நிக்குறார். ஒழுங்கா நீ ஐபிஎஸ் பாஸ் பண்ணினாதான் என்னால தைரியமா வீட்ல பேச முடியும்” என்று கோகிலா சீரியஸாகப் பேச ஸ்டாலின் சூர்யாவை முறைத்தான்.
“ஏன் டா இப்படி?” என்று அவனைப் பார்க்க
“அவரை ஏன் பேசற? அண்ணா ஒழுங்கா படிக்க சொல்லுங்கண்ணா இவனை” என்று கோகிலா சூர்யாவிடமும் சொல்ல
“விடு கோகி, ஃப்ரீயா இருக்கலாம்னு வந்துட்டு இங்கேயும் படிப்பு பத்திக் கேட்டதுல அண்ணா டென்ஷன்ல தப்பா சொல்லிட்டார். உடனே சண்டைப் போடாத பாவமா இருக்கு” என்று யமுனா ஸ்டாலினுக்காகப் பேசினாள்.
அதனைப் பார்த்த ஸ்டாலின்
“பாருடா என் தங்கச்சியை” என்றதும் சூர்யா உடனே
“சும்மா தான் டா கிண்டல் பண்ணினேன்” என்றவன் கோகிலாவிடம்
“படிப்பான்மா, நான் தீடீர்னு கேட்கவும் மறந்துட்டான். நீ கோவப்படாதம்மா” என்று சமாதானம் சொன்னான்.
கோகிலாவும் சமாதானமாகி அவள் தட்டில் இருந்த அந்த குட்டி வெங்காய சமோஸாவை அவன் தட்டிற்கு மாற்றினாள்.
“உனக்குப் பிடிக்கும்ல, சாப்பிடு” என்றதும் ஸ்டாலினும் சந்தோஷமாய் அதனை எடுத்துக் கொண்டான்.
எல்லாரும் உண்டு முடிக்க, கோகிலா
“எனக்கு பிஸ்தா ஐஸ் வேணும், யமுனா உனக்கு?” என்று கேட்டவள் பின் யமுனா பதில் கூறும் முன்பே
“நீ சாப்பிடதே இல்லைனு சொன்ன இல்லை. இன்னிக்கு டேஸ்ட் பண்ணி பாரு, என்னைக்கும் மறக்க மாட்ட” என்றவள் அவளுக்கும் சேர்த்து புஹாரியின் ஸ்பெஷலான பிஸ்தா ஐஸ் வாங்க,
“உங்களுக்கு?” என்று மற்றவர்களிடம் கேட்டாள்.
“எங்களுக்கு டீ, டேய் உனக்கு?” என்று சூர்யாவைப் பார்க்க
“டீயே சொல்லு” என்றான். திருப்தியாய் எல்லாம் உண்டு பேருந்து பிடித்து கடற்கரை வந்தனர்.
நாலரை மணியாக இருக்க, வெயிலும் வெப்பமும் கலந்த கடற்காற்று மோத, யமுனாவும் சூர்யாவும் ஒரு பக்கம் நடக்க, கோகிலாவும் ஸ்டாலினும் ஜோடியாக நடந்தனர்.
பெண்கள் இருவரும் கடலில் கால் நனைக்க, ஸ்டாலினும் கடலில் கால் நனைத்தவன் நண்பனின் அருகே உட்கார்ந்தான்.
“இங்க பாரு சூர்யா, இப்படியே வேடிக்கைப் பார்த்திட்டே இருக்கப் போறியா?” என்று கேட்டான்.
“இல்லையே, அப்புறமா வீட்டுக்குப் போய்டுவோம்ல. ரொம்ப நாள் ஆச்சு பீச்சுக்கு வந்து அதான் பார்க்குறேன்” என்று சூர்யா பதில் சொல்ல
“நீ கடலை வேடிக்கைப் பார்க்கிறதை சொல்ல நான். யமுனாவையும் சேர்த்து பார்க்கிறதை சொன்னேன் டா இடியட். சீக்கிரமே உன் மனசை சொல்லிடு. அந்த பொண்ணு கிராமத்துல இருந்து வந்திருக்கா, எப்போ கல்யாணம் செய்வாங்கன்னு சொல்ல முடியாது, புரிஞ்சுக்கோ” என்றான் ஸ்டாலின் சீரியஸாக.
“ஏன்ட்ரா நுவ்வு? எனக்கும் ஆசை இல்லையா என்ன? அப்படி சொல்லி யமுனா என்னோட பேசாம போய்ட்டா, உனக்கென்ன சின்ன வயசுலயே வீட்ல கல்யாணம் பேசிட்டாங்க” என்று சூர்யா முறைக்க
“இப்படி நீங்களாம் சொல்லியேதான் சட்டமன்றத்து சண்டை எங்க கல்யாணத்தைப் பாதிக்குது. கட்சிக்காரங்க மாத்தி மாத்தி பேசிக்கும்போது என்னைக்கு எங்கப்பாவும் கோகி அப்பாவும் அடிச்சுப்பாங்களோன்னு பயமா இருக்கு. ஆட்சி மாறினாலும் சந்தோஷப்பட முடியாது. எந்த கட்சி ஜெயிச்சாலும் பிரச்சனை தோத்தாலும் பிரச்சனை. நீ வேற ஏண்டா வயித்தெரிச்சல கிளப்புற?” என்றான் ஸ்டாலின் பதிலுக்கு.
“யமுனா இப்ப பேசாம போய்டுவான்னு நினைச்சா என்னைக்குமே பேசாம போய்டுற நிலைமை வந்திடும்டா. நம்ம யுஜி முடிக்கப் போறோம், அதை ஞாபகம் வைச்சிக்கோ, போலீஸ் ஆகப்போறோம், தைரியம் வேண்டாமா? இன்னும் மூணு மாசம்தான் உனக்கு டைம், அப்படி யமுனா வேண்டாம்னு சொல்லிட்டா என்ன செய்ய முடியும்? மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்” என்று அறிவுரை சொன்னான்.
தோழிகள் இருவரும் கடலில் கால் நனைத்து சந்தோஷமாக கரையில் இருந்தவர்களிடம் வர, கோகி ஸ்டாலினுடன் இணைந்து நடக்க, யமுனாவும் சூர்யாவும் இடைவெளி விட்டு நடந்தனர்.
“அப்புறம் யமுனா? நெக்ஸ்ட் என்ன ப்ளான்?” என்று சூர்யா கேட்கவும் என்ன என்பதாய் யமுனாவின் பார்வை இருக்க
“படிச்சு முடிச்சு என்ன ப்ளான்?” என்று கேட்க
“இப்போதானே ப்ர்ஸ்ட் இயர் சூர்யா, இரண்டு வருஷம் இருக்கே. அதை நல்லபடியா முடிக்கனும், அது முடிஞ்சதும் எப்படியும் வீட்ல கல்யாணம் பண்ணி வைச்சிருவாங்க” என்றதும்
“என்ன கல்யாணமா? நீ செஞ்சுப்பியா?” என்று சூர்யா அதிர்ச்சியாகக் கேட்டான்.
“நீங்க ஏன் ஷாக் ஆகுறீங்க?”
“இல்ல, அது… நீ டீச்சர் ஆகனும் சொன்னியே?” என்று திக்கித் திணறி சூர்யா கேட்க
“செய்யாம என்ன செய்றது? எப்படியும் யாருக்காவது கட்டி வைப்பாங்க தானே? எங்கப்பா என்னை படிக்க அனுப்பினதே பெருசு. எங்கம்மா இப்பவும் புலம்பிட்டே இருப்பாங்க, அதனால படிச்சு முடிச்சதும் கட்டி வைச்சிருவாங்க, டீச்சர் ஆகனும்னு ஆசைதான், ஒருவேளை என்னை கட்டிக்கப்போறவர் நல்லவரா இருந்தா என்னை வேலைக்கு அனுப்பவார். பார்ப்போம்”என்றாள் பெருமூச்சுடன்.
“இந்த லவ் மேரேஜ்..?” என்று சூர்யா இழுக்க
“அய்யோ! என்ன பேசுறீங்க? அதெல்லாம் எங்க வீட்டுக்கு ஒத்துவராதுங்க” என்றாள் பதட்டமாக.
“கோகி எல்லாம் லவ் பண்றாங்க தானே?”
“அவங்க வீட்ல பேசினது, இவளுக்கும் பிடிச்சிருக்கு. என் ப்ரண்ட்ஸ் சில பேரு லவ் பண்றாங்கதான். ஆனா எங்க வீட்ல எங்கப்பா என்னை வெட்டிப்போட்டுடுவார். எனக்கெல்லாம் அவ்வளவு தைரியமில்ல சூர்யா. வீட்ல பார்க்கறவங்களை கட்டிக்க வேண்டியதுதான். எதுக்கு வம்பு?” என்றாள் அவன் உள்ளம் அறியாமல்.
“ம்ம்” என்றான் சூர்யா.
“ஹே! சுண்டல் விக்குது, யமுனா உனக்குடி” என்று கோகிலா கேட்க
“எனக்கு வேண்டாம் டி, பஞ்சு மிட்டாய் சாப்பிடனும் போல இருக்கு” என்றவள் சுற்றிப் பார்க்க, கொஞ்சம் தொலைவில் ஒருவர் பஞ்சு மிட்டாய் விற்க
“நான் வாங்கிட்டு வரேன்” என்று சூர்யா வாங்கி வந்து கொடுக்கவும் யமுனா
“எவ்வளவு?” என்று பணம் கொடுக்க கேட்டாள்.
“ஏண்ட்டிம்மா? நீ எங்களுக்கு ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கலையா?” என்றதும்
“ஆமால, அந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்தீங்களா?” என்று யமுனா கேட்கவும் கோகிலாவின் பார்வை ஸ்டாலினிடம் சென்றது. பார்வையில் எரித்தாள் அவள். எத்தனையோ முறை அதைத் தர சொல்லி சொல்லியிருக்க, இன்னமும் அதனைத் தரவில்லை.
ஸ்டாலின் மெல்லமாய் கோகிலாவின் காதில்,
“இந்த ராஸ்கல் தான்டி கோகி காரணம், அதுல யமுனா பெயர் எழுதியிருக்குன்னு நான் தெரியாம சொல்லிட்டேன். யமுனா ஞாபகமாக எங்கிட்ட இருக்கட்டும்னு தர மாட்டேங்கிறான்” என்று கிசுகிசுப்பாய் சொல்ல
அவர்கள் சண்டையிடுகிறார்களோ என்று நினைத்த யமுனா, “ஹேய் கோகி விடுடி, இன்னிக்குக் கொண்டு வரலன்னா பரவாயில்லை. அடுத்த வாரம் நான் ஊருக்குப் போகுறதுக்கு முன்னாடி தந்துட்டா போதும்” என்றாள்.
“நெக்ஸ்ட் வீக் லைப்ரரி வா யமுனா, மார்னிங் வரியா? நானும் உன் டிபன் பாக்ஸெல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சூர்யா அவளிடம் தனியே பேசலாம் என்று நினைத்து சொல்ல
“எனக்கு துணி துவைக்கிற வேலையெல்லாம் இருக்கும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நீங்க ஒரு நாலு மணிபோல என் காலேஜ் வாசல்ல வந்து நில்லுங்க. நான் வந்து வாங்கிக்கிறேன்” என்று யமுனா சொல்லவும் சூர்யாவின் முகம் சுணக்கத்தைக் காட்டியது. ஆனாலும் பேருந்து நிறுத்தம் வரை அவன் பேச்சைக் கேட்டு ரசித்தபடி யமுனா வரவும் அது மட்டுமே கொஞ்சம் சூர்யாவைத் திருப்திப்படுத்தியது.
அவள் சொன்னது போல் அடுத்தவாரம் சூர்யா யமுனாவின் கல்லூரி வாசலில் நிற்க, பாத்திரத்தை வாங்கியவள்
“தேங்க்ஸ் சூர்யா மறக்காம எடுத்துட்டு வந்துட்டீங்களே” என்றவளுக்கு வியர்த்து இருக்க
“ஏன் இவ்வளவு வியர்த்து இருக்கு?” என்று அவளிடம் கேட்டான்.
“அது துணி துவைச்சுட்டு இருந்தேனா? நீங்க வரதை மறந்துட்டேன், அதான் அவசர அவசரமா ஓடி வந்தேன்” என்றபடி தன் சேலையால் துடைத்தவள்
“துணியெல்லாம் இன்னும் காயவைக்கல, ஆறு மணிக்கு அண்ணா வந்துடுவாங்க. பை சூர்யா” என்று சொல்லி சிட்டாய்ப் பறந்து போனாள் யமுனா.
அடுத்த வந்த சில நாட்கள் யமுனாவைப் பார்க்க முடியாத தவிப்பில் சூர்யா தகிக்க, காதல் அழுத்தம் தந்தது அகத்தில்.
ராஜாவின் பாடல் ராஜாங்கத்தில் தன்னைத் தொலைக்க நினைத்தால் அதிலுமே யமுனாவின் நினைவே விஸ்வரூபம் எடுக்க, அவனுக்குள் தள்ளாட்டம். அவளை நினைத்து நினைத்து நினைவால் தவித்தான்.
ஒரு நாள் கல்லூரியில் யமுனாவின் தோழி மேகலா அந்த வாரம் ஹாஸ்டல் டீவியில் படம் போடுவார்கள் என்று ஆர்வமாய் போனவள் அப்படியே சோகமாய் திரும்ப
“என்னடி கலா? படம் பார்க்க போகல” என்று யமுனா கேட்க
“போடி, இந்த வாரம் தெலுங்கு படம் போடுறாங்க” என்றாள் சலிப்பாய்.
தெலுங்கு என்றதும் சூர்யா கடற்கரையில் அவளிடம் தமிழும் தெலுங்கிலும் திணறிப் பேசிய காட்சி நினைவில் எழ, தானாய் ஒரு புன்னகை தலைவியிடம் தலைவனை நினைத்து. எண்ணத்தில் அவன் இருக்க, என்னவாய் இருக்கிறான் என்பதே கேள்வியாய் இருந்தது.