“காது ஏன் உங்களைக் கல்யாணம் செஞ்சா எனக்குத் தெரியல, மேடம் சொல்லவும் இல்லை. உங்களோட வர அளவு நீங்க என்ன ஸ்பெஷல் தெரியல எனக்கு, அதை விட எங்களை விட்டுவர அளவுக்கு நாங்க என்ன தப்பு செஞ்சோம்னு இன்னிக்கு வரை எனக்குத் தெரியவே இல்லை. இவ சொல்லவும் இல்லை, இவளுக்குப் பிடிச்சுதான் மேரேஜ் ஏற்பாடு பண்ணினோம். அதை வேண்டாம்னு சொன்னா, அது நீங்க இவளைக் கிட்நாப் செஞ்ச அப்புறம்தான்” என்றவனின் பேச்சில் குற்றச்சாட்டு இருந்தது.
“இவர்..” என்று கார்த்தி குறுக்கே பேச வர அவள் கையைப் பிடித்த காளிதாஸ்,
“ராஜீவ் பேசட்டும்” என்றான் மனைவியிடம்.
“ஆனா கடத்துனவனே கல்யாணம் செஞ்சுக்குற அளவு என் அக்கா முட்டாள் இல்லை நான் நம்புறேன். எங்க வீட்டை எதிர்த்து எல்லார் முன்னாடியும் உங்களைப் பிடிக்கும் சொல்லி கல்யாணம் பண்ணியிருக்கா, ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ப்ரைவசில நான் தலையீடக் கூடாது தெரியும். ஆனா காதுவை இப்படி பார்த்துட்டு என்னால அமைதியா போக முடியல” என்றான்.
“காது எப்பவும் கூட்டத்தோட இருப்பா, அவளுக்குத் தனியா இருக்கவே பிடிக்காது. கோவிலுக்கு வந்தா கூட பேசிட்டு இருக்க ஆளு இவ, இன்னிக்கு அழுதுட்டு சுவர்ல சாய்ஞ்சு அமைதியா உட்கார்ந்திருக்கா. அவ மேல தப்பாவே இருக்கட்டும், உங்களை நம்பி வந்துட்டா. அவளைக் கஷ்டப்படுத்தாம நல்லா பார்த்துக்கோங்க. எதுனாலும் அவளை இப்படி தனியா அழ விடாதீங்க” என்று ராஜீவ் பேச பேச கார்த்தி உடைந்தாள். கணவனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள், அழுகையுடன். காளிதாஸனின் கைகள் ஆதரவாய் அவளை அணைத்துக்கொள்ள ராஜீவைப் பார்த்தவன்
“விட மாட்டேன் ராஜீவ்” என்றான் பொறுமையாகவே.
“கண்ணா! ஏன் அழற? காம் டவுன்” என்று சொல்ல கார்த்தி அவனை விட்டுத்தள்ளி நின்றவள் காருக்குள் போய் உட்கார்ந்துகொண்டாள். காளிதாஸ் அவள் பின்னேயே போக, ராஜீவும் போனான்.
“ஏன் இப்படி அழறா? என்னாச்சு? காது என்ன பிரச்சனை?” என்று ராஜீவ் பதறிக்கொண்டு காளிதாஸனிடம் கேட்க
“என்னை என்ன செய்ய சொல்ற? யார்கிட்டவும் எதுவும் சொல்லாம இவரைக் கல்யாணம் செஞ்சா நாங்க என்ன நினைக்கிறது? அம்மாவை யோசிச்சியா நீ? அவங்க எவ்வளவு அழுதாங்க தெரியுமா? வீட்ல எவ்வளவு பிரச்சனை தெரியுமா?” என்று ராஜீவும் கோபத்துடன் பேச, அவன் தோளை அழுத்திய காளிதாஸ்
“ராஜீவ், கார்த்தி என் வைஃப். என் பொறுப்பு, நான் பார்த்துக்கிறேன். இப்போ கிளம்பு” என்றான். ராஜீவ் அப்படியே நிற்க,
“ஏன் நிக்கிற? போ! நீங்க வேண்டாம் எனக்கு. இத்தனை நாள் இல்லாத அக்கறை என்ன உனக்கு இப்போ? இவர் மட்டும் போதும் எனக்கு, அவன்கிட்ட என்ன பேச்சு உங்களுக்கு? ஏறப்போறீங்களா இல்லையா?” என்று காளிதாஸிடமும் எரிந்துவிழுந்தாள். ராஜீவ்விற்கு அக்கா மிகவும் அழுத்தமாய் இருப்பது போல் இருந்தது. அவளை நெருங்கவே முடியாமல் இருக்க, அவள் அழ வேண்டாம் என்று நினைத்தான்.
“சரி, நீ இவரைக் கத்தாத. நானே போறேன்” என்ற ராஜீவ்
காளிதாஸைப் பார்த்து “ஸாரி, அன்னிக்கு உங்களை மரியாதை இல்லாம பேசிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டான். அக்காவுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்க வேண்டுமே, அவள் கணவனைப் பகைத்து என்னவாகிப்போகிறது என்று உணர்ந்து பேசினான். காளிதாஸ் சின்னதாய்ப் புன்னகை செய்தவன்
“என்னைப் பேசினதுக்காக நான் உன்னை அடிக்கல” என்றான்.
“ம்ம், தெரிஞ்சது அப்பவே. இந்த மகாராணிக்காகத்தான் அடிச்சீங்கன்னு, ஆனா எங்க இடத்துல இருந்து யோசிங்க. இவளை நாங்க அப்படி பார்த்தோம், நாங்க யாரும் வேண்டாம்னு உங்களோட வந்துட்டா, எங்கம்மா தினம் இவளை நினைச்சு அழறாங்க” என்று ராஜீவ் பேச கார்த்திக்கு அழுகையும் கோபமும் வந்தது.
“எதுனாலும் அவங்க பெரிய மகனைக் கேட்க சொல்லு, உண்மையை சொல்ல நினைச்சப்ப எல்லாம் என்னை எங்க பேச விட்டீங்க. சொந்த வீட்ல ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டு இன்னிக்கு அழுதா ஆச்சா?” என்றவளிடம் அவ்வளவு ஆவேசம்.
தம்பியைப் பார்த்த கார்த்தி,
“இங்க பாரு என்னை நினைச்சு நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம், எனக்கு இவர் இருக்கார். நீ அம்மாவைப் பார்த்துக்கோ” என்றவள் மிகவும் சோர்வுடன் இருக்க, காளிதாஸ் காரை எடுத்தவன் ராஜீவிடம்
“கார்த்தியை நான் பார்த்துப்பேன், டோண்ட் worry Man! ஒரு நாள் வீட்டுக்கு வாங்க” என்றான்.
ராஜீவ் கார்த்தி பேசியதைக் கேட்டதில் இருந்து நிறைய கேள்விகளுடன் அங்கேயே வெகு நேரம் நின்றான்.
வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தியை இறுக அணைத்துக்கொண்டான் காளிதாஸ். கார்த்தியால் தள்ள முடியவில்லை, மிகவும் தளர்ந்து போயிருந்தாள்.
“ஏன் கண்ணா சொல்லாம போன? பயந்துட்டேன் நான்” என்று காளிதாஸ் கேட்க, ஒரு கண்டுகொள்ளாத பாவனை அவளிடம். அவனை விட்டு விலகியவள் சோஃபாவில் தலைசாய்த்து உட்கார்ந்து கொண்டாள்.
அவளின் சோர்வு புரிந்தவன் கிச்சனுக்குச் சென்று இருவருக்கும் பால் கலக்கி எடுத்துவந்தான்.
“டயர்டா இருக்க கார்த்தி, பால் குடிச்சிட்டுப் பேசுவோம்” என்று காளிதாஸன் க்ளாஸை நீட்ட கார்த்தி வாங்கவில்லை.
“இன்னிக்கு நீங்க இப்படி கவனிச்சா நாளைக்கும் நான் இதை எதிர்ப்பார்ப்பேன், உங்களால மாற முடியாது. நான் உங்களுக்கு ஏத்தமாதிரி மாறிக்கிறேன்” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.
“இப்படி பேசினா நான் என்ன செய்றது கார்த்தி? இருக்கிற நேரமும் சண்டை போடனுமா?” என்றான் காளிதாஸன் கொஞ்சம் கோபமான குரலில்.
“உங்களுக்கு வேணும்னா நீங்க குடிங்க, எனக்கு வேண்டாம்” என்று அழுத்தி சொன்னவள் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள, பார்த்திருந்த காளிதாஸனுக்கு உள்ளே என்னவோ செய்தது. சொல்லில் அடங்கா, சொல்லால் அடக்க முடியா ஒரு உணர்வு.
சிலதை பேசலாம், சிலதை எழுதலாம். சிலவற்றை பாடலாம், சிலவற்றை நாட்டியத்தில், நயனத்தில் காட்டலாம். ஆனால் சில உணர்வுகளை வெளிக்காட்டவோ வெளிப்படுத்தவோ முடியாது. அப்படி ஒரு அழுத்தம் காளிதாஸனுள்.
“கண்ணா!” என்று காதலாய் அழைத்தவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“அம்மா சொன்ன மாதிரி சட்டையைப் பிடிச்சு சண்டைப் போடாம இப்படி அழலாமா?” என்றவனிடம்
“சண்டைப் போட கூட ஆள் வேணும்” என்றாள் கார்த்தி கணவனிடம் குற்றச்சாட்டாக.
“நான் பேசுறதை நின்னு கூட கேட்காம கோபத்துல ரூமுக்குப் போய்ட்டு இப்ப சட்டையை பிடிச்சு சண்டை போடனுமா நான்?” என்று கார்த்தி கேட்க, காளிதாஸனுக்கு சுருக்கென்றது.
“நீங்க அப்படி நினைக்காம இருந்திருக்கலாம், உங்க செயல் என்னை அப்படித்தான் நினைக்க வைச்சது” என்றாள் பட்டென்று.
“கண்ணா! எனக்குப் பொய்யான சமாதானம் வராது. சில விஷயம் இப்படித்தான்னு ஏத்துக்கிட்டுதான் ஆகனும், எலெக்ஷன் டைம் எப்படி வீட்ல உட்கார முடியும்?” என்று காளிதாஸன் கேட்க
“நான் ஏத்துக்கிட்டுத்தான் கல்யாணமாகி இருபதே நாள்ல உங்களை விட்டு தனியா இருந்தேன். வீட்ல இல்லைன்னா கூட பரவாயில்லை, இருந்தும் உங்க ஆபிஸ் ரூம் விட்டு வரல நீங்க” என்றாள்.
“என்னவோ போங்க, உங்க சமாதானம் உண்மையா இருந்தாலும் கூட என்னால ஏத்துக்க முடியல. எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் கூட இல்லைன்னா என்ன லைஃப் இது? அதுவும் பத்து நாள் என் கூட அவ்வளவு க்ளோஸா என்னையே சுத்தி வந்துட்டு..” என்றவளின் குரல் கலங்கியது.
“எனக்கு இதை ஹாண்டில் பண்ண தெரியல, வொர்க் அண்ட் பெர்சனல் பேலன்ஸ் என்ட்ட இல்லை கார்த்தி. முன்னாடி எனக்கு வொர்க், பெர்சனல்னு ஒன்னு கிடையவே கிடையாது. இரண்டுமே ஒன்னுதான், வீட்டுக்கு எப்போ வேணுமோ வருவேன், போவேன். அப்படியே பழகிட்டேன், எனக்கு உன்னைப் புரியுது. தனியா கஷ்டப்பட்டிருக்கன்னு தெரியுது கண்ணா, நானும் உன்னை நிஜமா மிஸ் பண்ணினேன். எப்படி சொல்லன்னு தெரியல எனக்கு” என்று சொல்லி நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான்.
“ரொம்ப கஷ்டப்பட்டேன், யாருமில்லாம என்னால முடியல” என்று சொல்லி அவன் மீது நன்றாய் சாய்ந்து கொண்டாள் கார்த்தி.
“இனிமே இப்படி நடக்காது, கொஞ்சம் டைம் கொடு. நான் என்னை சரிப்பண்ணிக்கிறேனே” என்றவன்
“அம்மா பேசினதுமே நான் அதை யோசிக்கத்தான் தனியா போனேன், நீ பேசவும் நானும் சண்டைப்போட்டேன். ஸாரிம்மா” என்றான் மனமுவந்து.
“நான் அம்மாகிட்ட ஒன்னுமே சொல்லல, இன்னிக்கு ரொம்ப கஷ்டம இருந்துச்சு, அம்மாவும் கிளம்புறேன் சொல்லவும் என்னை மீறி அழுதுட்டேன். ஸாரி” என்றாள் கார்த்தியும்.
“உன் மேல தப்பில்லை, நீ எனக்காக நிறைய செய்ற. நாந்தான் அதை யோசிச்சு நடக்கல, இது எல்லாமே புதுசு இல்லையா?” என்றதும் கார்த்தி அவனை முறைத்தாள்.
“எனக்கும் இது புதுசுதான்” என்றாள் பல்லைக் கடித்து.
“அய்யோ கண்ணா! நான் அதை சொல்லல, இன்னிக்கு ராஜீவ் சொன்ன மாதிரி நீ எப்பவும் ஃபேமிலி கூட நிறைய இருக்க. எங்க குடும்பம் சின்னது, இதுல அப்பா அம்மா வெளியே போய்ட்டா நான் மட்டும்தானே? ஒன்னு மகாதேவன் மாமா வீட்ல இருப்பேன், இல்லையா கவின் கூட சுத்துவேன். உனக்குப் புரியுதா? காலேஜ் முடிச்சதுமே அம்மா என்னை கேள்வி கேட்கறதெல்லாம் விட்டுட்டாங்க. ஸோ சுதந்திரமா இருந்து பழகிட்டேன்”
“அப்போ நான் உங்க சுதந்திரம் கெடுக்கிறேனா?” என்று கார்த்தி கேட்க
“இப்படி பேசாத கண்ணா! கல்யாணம் செய்யனும்னா நிறைய பொறுப்புன்னு எனக்குத் தெரியும். உன்னைக் கல்யாணம் செஞ்சப்போ நிறைய பயம் கூட எனக்கு, பட் நீ என்னோட லைஃப் இன்னும் அழகா மாத்திட்ட. அதான் நிஜம்! நாந்தான் உனக்கேத்தவனா நடக்கல, ஸாரி” என்றான்.
கார்த்தி அமைதியாக இருக்க, “டைம் ஆச்சு, தூங்கலாம் வா கண்ணா” என்று காளிதாஸன் அழைக்க
“அது உங்க ரூம் நீங்க போங்க” என்றாள் முகம் திருப்பிக்கொண்டு.
“நம்ம ரூம்” என்றான் அழுத்தமாக.
“உங்க ரூம்ன்றதலதானே சண்டைப் போட்டு போய் கதவை சாத்திட்டீங்க? நான் இனி உங்க ரூம்ல அடி வைக்க மாட்டேன், போங்க” என்றாள் ரோஷத்துடன்.
“சரி அடி வைக்காத” என்றவன் கார்த்தி எதிர்ப்பார்க்காதவண்ணம் அவளை அப்படியே கைகளில் ஏந்திகொண்டான்.
“என்ன பண்றீங்க, விடுங்க”
“விட்டா விழுந்துடுவ கண்ணா” என்றான் கிண்டலாக.
அறைக்குள் சென்று மெத்தையில் விட்டவனிடம்
“என்னை தனியா விடுங்க, அப்புறம் நான் இன்னும் கோவப்படுவேன்” என்று கார்த்தி சொல்ல,
“என்ன லாஜிக் கண்ணா இது? உன்னைத் தனியா விட்டதாலதானே கோவம்னு சொன்ன?” என்று சிரித்தவன் கார்த்தியின் அருகே உட்கார்ந்து தோளோடு அணைத்தான்.
“கூட்டணின்னா சில பல உரசல் வரத்தான் செய்யும், பார்த்துக்கலாம். இப்போ தூங்கு. லேட்டாச்சு” என்றவன் அவளுடன் சரிந்தான்.
“உரசல் இருக்குமா, வேறு யார் கூட கூட்டணி வைச்சீங்க நீங்க?” கார்த்தி கோபத்துடன் கேட்க
“ஹே! கண்ணா! ஹாஹா! நான் பொதுவா கட்சிக்கூட்டணியை சொல்றேன். பெர்சனலா உன்னோட மட்டும்தான் என் கூட்டணி, உன்னோட மட்டும்தான் உரசல்..” என்றவன் அவளை உரசவும் செய்ய, கார்த்தியோ உளைச்சலில் இருந்தவள் “போங்க” என்று அவனைத் தள்ளிவிட்டு அமைதியாக உறங்கிப்போனாள்.
எதுவும் சரியாகவில்லை என்றாலும் சரியாகிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை காளிதாஸுக்கு.
இங்கு சண்டையிட்டாலும் இவர்கள் உறங்கிவிட ராஜீவின் உறக்கம் சுத்தமாய்ப் போனது. வீட்டிற்கு வந்த அக்காவைப் பார்த்ததை சொல்ல, செல்வா கத்தித் தீர்த்துவிட்டான். இதில் காளிதாசனைப் பற்றி வேறு மோசமாக சொல்ல மகளின் வாழ்க்கையை நினைத்து விசாலாட்சிக்கும் உறக்கம் பறிபோனது.