“உன்னை யாரு அவளைப் பார்க்க சொன்னா? நம்ம குடும்பம் மானமே போச்சு அவளால, குடும்பத்தைக் கெடுத்ததுப் பத்தாதுன்னு கட்சியில அப்பாவுக்கு அவளால தலையிறக்கம்”
செல்வரத்னம் காட்டுக்கத்தல் கத்தினான்.
“அண்ணா! என்ன இருந்தாலும் நம்ம காதுன்னா அவ, அப்படியே விடமுடியாது” என்று ராஜீவ் அண்ணனை எதிர்த்துப் பேச, அவனை முறைத்த செல்வா
“என்ன முடியாது? நம்ம வேண்டாம்னு அவன் வேணும்னு திமிரெடுத்து ஓடிப்போனாதானே? இப்ப என்ன அவ மேல கரிசனம் உனக்கு?” என்று கத்தினான்.
“அக்கா மேல கோவம் இருக்கறதால பாசமில்லன்னு ஆகிடாதுண்ணா” என்று ராஜீவ் கடுப்பாக சொல்ல, விசாலாட்சியோ
“என் பொண்ணு எப்படி இருக்கா?” என்று கேட்க
“எப்படி இருப்பா? அந்த ஆளைக் கல்யாணம் பண்ணிட்டு நல்லாவா இருக்க முடியும்? நாற்பது வயசு வரைக்கும் கல்யாணம் ஆகாம இருந்தவன், என்ன என்ன தப்பு செஞ்சிருப்பானோ? இவ புத்திக்கெட்டுப்போய் அவங்கிட்ட மாட்டிக்கிட்டா” என்று அமிலமாய்ப் பேசினான் செல்வா.
கேட்டிருந்த ராஜீவ் மனம் சுட்டது. நிச்சயம் அவனால் காளிதாஸனை அப்படி நினைக்கவே முடியவில்லை. காளிதாஸ் மீதும் கார்த்தி மீதும் கோபம் உண்டுதான். ஆனால் இப்படியான பேச்சுகள் சகிக்க முடியவில்லை.
“அப்படி இல்லம்மா, அக்கா நல்லா இருக்கா” என்று ராஜீவ் அம்மாவிடம் சொல்ல
“எனக்கு அப்புறம் பொறந்தவன் நீ, எனக்கு அந்த காளியைத் தெரியாது, உனக்குத் தெரியுமா? பாருங்க உங்க பொண்ணு நம்மை மீறி போனதுக்கு அழுதுட்டே வந்து நிப்பா” என்றான் செல்வா எரிச்சலாக.
காளிதாஸ் மீதும் தங்கை மீதும் அவ்வளவு துவேஷம் அவனுக்கு. இதில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்க, காளிதாஸ் ஜெயித்து அமைச்சராகிவிட்டால் நினைக்கவே கலக்கம் இவனுக்கு. எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி தங்கையைக் கடத்தி ஆட்டம் காட்டினான் என்று நினைக்க உள்ளே பயம்.
அந்த பயத்தை வெளியே காட்டமுடியாமல் இப்படி எரிந்துவிழுந்தான் எல்லார் மீதும். ராஜரத்னத்திற்கு செல்வாவின் பேச்சு பிடிக்கவில்லை, அவருக்கே தெரியும் காளிதாஸன் எப்படி என்று. அதனால் மகள் நன்றாய் இருப்பாள் என்ற எண்ணம் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.
“செல்வா! போதும், ராஜீவ் உள்ளே போ” என்று மகன்களை அடக்கினார் ராஜரத்னம். அவருக்கு மகன்களை விடவும் மகள் என்றால் உயிர். அவளின் பிரிவே கலங்க செய்திருக்க, செல்வாவின் நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லை.
அரசியலிலும் அவனுக்கு போதிய அறிவில்லை. எல்லாவற்றிலும் அவசரம், ஆத்திரம் என்று இருந்தான். இந்த முறை அவனுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்திருக்க, பல கோடி செலவானது. அப்படியும் ஜெயிப்பது கடினமே. எல்லாம் ராஜரத்னத்திற்கு ஒரு மன உளைச்சலைக் கொடுத்தது. மகன்களை அதட்டியவருக்கு மனைவியிடம் என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை.
“ம்மா! ஏன் அழற? காது நல்லா இருக்கா” என்று ராஜீவ் சொல்ல
“என்ன நல்லாயிருக்கா? செல்வா சொல்றானே அவனும் அரசியல்ல இருக்கான் தானே? அவனுக்குத் தெரியாதா? இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணினாடா?” என்று மகளை நினைத்து வேதனையுற்றார்.
“அவ கல்யாணம் வேண்டாம் சொன்னப்பவே நீங்க கேட்காம ஏன் அவசரமா கல்யாணம் செய்ய நினைச்சீங்க?” என்று எப்போதும் போல் அம்மாவைத் திட்டினான் ராஜீவ்.
“பின்ன இருபத்தெட்டு ஆகப்போகுது அவளுக்கு? அப்படியே இருக்க முடியுமா? எவ்வளவு ஆசையா அவ விருப்பம் கேட்டு கல்யாண ஏற்பாடு செஞ்சோம், இவளாவே தான் அந்த நவீன் பையனை வேண்டாம்னு சொன்னா” விசாலாட்சிக்கு இப்போதும் அந்த வருத்தம் தீரவில்லை.
“அக்கா அவளை ஹவுஸ் அரெஸ்ட்ல வைச்சீங்க சொல்றா, உண்மையா?” என்று கேட்க
“அவ எல்லா வரனையும் தட்டிக்கழிச்சாடா? அதான் செல்வா அப்படி செஞ்சான். அவ நல்லாயிருக்கனும்தானே பண்ணினோம், இப்படி ஒருத்தனைக் கட்டி சீரழியவா என் பொண்ணை ஆசையா வளர்த்தேன். கடத்திப்போனவன் என் பொண்ணை என்னவோ பண்ணிட்டான், அதான் என் மக சொல்ல முடியாம அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா” விசாலாட்சி அழ
“அம்மா, நிறுத்துமா! சும்மா செல்வாண்ணா சொன்னா எல்லாம் நம்புவியா? அக்கா சொல்றதைக் கேட்காம அவளை நம்ம வீட்லயே அடைச்சு வைப்பியா?” என்று அம்மாவைக் கத்தினான் ராஜீவ்.
“ஒன்னும் தெரியாம அழாத முதல்ல, அங்க உன் பொண்ணு அவரை அப்படி மிரட்டுறா. கடத்திட்டு போனவன் தப்பானவனா இருந்தா அக்கா ஏன் அத்தனை பேர் முன்னாடி, போலீஸ் இருந்தும் அவரோட போனா? ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அவரை மரியாதை இல்லாம பேசினப்போ கூட ஒன்னும் சொல்லல, உன் பொண்ணை பேசினதுக்கு அந்த காளிதாஸ் என்னை அடிச்சார்” என்று ராஜீவ் சொல்ல
“உன்னை அடிச்சானா? ஏன் நீ சொல்லல?” என்று தாயாக அவர் பதற
“அப்போ உனக்கு முடியல, சொல்லல. பிரச்சனை வேண்டாம்னு அமைதியாகிட்டேன், ஆனா அவர்கிட்ட எனக்குத் தப்பு இருக்க மாதிரி தெரியல. ஒன்னு சொல்றேன் நல்லா மனசுல ஏத்தும்மா, அக்கா அவரோட கட்டாயத்துல இருக்க மாதிரி இல்லை. அவரும் ரொம்ப அன்பா நடக்கிறார். தேவையில்லாம யோசிச்சு உடம்பைக் கெடுக்காம தூங்கும்மா” என்று அம்மாவை உறங்க வைத்தவனுக்கு உறக்கமில்லாமல் போனது.
ஏன்? என்ற கேள்வியே எண்ணமெல்லாம் இருந்தது.
**************
கார்த்தி விழிக்கும்போது ஒன்பது மணி. புரண்டு படுத்தவள் கணவனைப் பார்க்கவுமே கண்கள் ஒரு மின்னல். அவனில்லா காலைகள் கசந்திருக்க, இப்போது மலர்ந்து விழித்தாள்.
“குட் மார்னிங் கண்ணா!” என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டு இன்னும் மலரச் செய்தான் காளிதாஸ்.
“ரொம்ப மிஸ் பண்ணினேன்” என்று சொல்லி கார்த்தி கணவனைக் கட்டிக்கொண்டாள்.
“ஸாரி தாஸ், நேத்து ரொம்ப இம்சைப் பண்ணிட்டேன்” என்று சொல்லி அவனை நன்றாக அணைத்துக்கொண்டாள்.
“கோவம் போயிடுச்சா என் கண்ணாவுக்கு?” காளிதாஸன் கன்னம் இழைந்துகொண்டு கேட்க
“இப்போதைக்கு இல்லை” என்று கார்த்தி சொல்ல காளிதாஸ் கிண்டலாய்ப் பார்த்தான்.
“நீங்க சொன்ன மாதிரி கூட்டணில உரசல் எல்லாம் சகஜம்தானே? அதான்” என்றாள் கெத்தாக.
“இன்னும் கூட உரசலாம்” என்று காளிதாஸன் கண்ணடிக்க,
“உரசுவாங்க, இத்தனை நாள் கண்டுக்காம இருந்துட்டு” என்று கார்த்தி சிடுசிடுக்க
“கண்ணா! as you know, நான் நேர்மையா இருப்பேன், கணக்கெல்லாம் காம்பேன்செட் பண்ணிடுவேன்” என்றான் கார்த்தியின் முகத்தில் விரல் கொண்டு வருடி.
“நீ என்னோட சண்டை போடுறதை நினைக்காம எங்க ஹனிமூன் போகலாம்னு ப்ளான் பண்ணிவை” என்று அவள் காதில் சொல்ல
“நான் ப்ளான் பண்ணி வைப்பேன், உங்க கட்சில அப்போதான் பிரச்சனை வரும், போகனும்னு நிப்பீங்க. நோ ப்ளான்ஸ்! என்னால எதிர்ப்பார்த்து ஏமாற முடியாது” என்றபோது கார்த்தியின் குரலில் ஒரு அழுத்தம் வெளிப்பட்டது.
“சரி, நீ ப்ளான் பண்ண வேண்டாம். நான் பெஸ்டா நமக்கு ஹனிமூன் ப்ளான் பண்ணினா, என்ன தருவ நீ?” என்று கேட்டான்.
“என்ன தரனும்?”
“குட் மார்னிங்க் கிஸ் டெய்லி நீதான் தரனும்” என்று சொல்ல, அவன் பேச்சில் விளைந்த வெட்கம் மறைத்து,
“அதுக்கு சார் முதல்ல வீட்ல தங்கனும்” என்று நொடித்தவள் அவனை விட்டு விலகி பாத்ரூம் சென்றாள்.
கார்த்தி கீழே இறங்கி வர சரியாக ஹாலில் அலெக்ஸா பாடினாள். ஸ்பீக்கர் வைத்திருக்க நல்ல சத்தம்.
‘பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்’ என்று ரசனையாக அலெக்ஸாவுடன் இணைந்து பாடினான் காளிதாஸன்.
கார்த்தி அவனை கண்டுகொள்ளாது கிச்சன் செல்ல, அவளை பின்னிருந்து அணைத்தவன்
“தேன்மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ” என்று காதோரம் பாடி, அவள் கார்குழலை ஒதுக்கிவிட கார்த்திக்கு அவன் மீது கோபம் கொள்ள முடியவில்லை.
“இப்படி பாடினா, டெய்லி பாட சொல்லி என் மனசு எதிர்ப்பார்க்கும்” என்று மெல்லிய குரலில் கார்த்தி சொல்ல,
“முடிஞ்சபோதெல்லாம் பாடுறேன் கண்ணா” என்று கொஞ்சினான் காளிதாஸ்.
“பாட்டெல்லாம் இப்படி ரசிக்கிறீங்க, அப்புறம் எப்படி சிங்கிளாவே இருந்தீங்க?” என்று கார்த்தி தன் சந்தேகம் கேட்க
“பாட்டை ரசிக்க கல்யாணம் செய்யனுமா என்ன? அழகான பாட்டு, எவ்வளவு அர்த்தமுள்ள லிரிக்ஸ். முன்னாடி பாட்டு மட்டும் ரசிச்சேன், இப்போ உன்னை ரசிக்கிறேன். உன்னால நிறைய ரசிக்கிறேன்” என்று ரசித்து சொல்லி அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டான்.
“சரி சரி, விடுங்க நான் டிஃபன் செய்றேன். சேர்ந்து சாப்பிடுவோம்” என்று கார்த்தி புன்னகை முகமாகவே சொல்ல,
“எலெக்ஷன் ரிசல்ட் வந்து பதவியேற்புக்கு எப்படியும் பத்து நாள் ஆகிடும், அந்த கேப்ல நம்ம ஹனிமூன் போயிடலாம்” என்று காளிதாஸன் சொல்ல,
“அப்படி டென்ஷனோட எதுவும் செய்ய வேண்டாம் தாஸ், நேத்து ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணினதால சண்டை, விடுங்க சண்டையில கிழியாத சட்டை இருக்கா என்ன? அதை யோசிச்சிட்டே இருக்காதீங்க, ரிலாக்ஸா போயிக்கலாம். எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை” என்றாள் கார்த்தி நல்லவிதமாக.
அதில் கூட நாயகனுக்கு நங்கை கொண்ட காதல் விளங்க, காளிதாஸனுக்குக் கார்த்தி என்பவள் இன்னும் இன்னும் பிடித்தவளாகிப்போனாள். அது போலவே நானும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, இவளை அசத்திவிட வேண்டும் என்று முடிவு செய்தான் மனதில்.
“சண்டையில நேத்து சட்டை கிழியவே இல்லை” என்று வசனம் பேச,
“இனிமே கிழிச்சிடுவேன், அதுவும் நமக்கு நிறைய சட்டை கிழிய வாய்ப்பு இருக்கு” என்றாள் கார்த்தி. அடுத்த நாள் இரவு காளிதாஸன் ஏழு மணிக்கே வீடு வந்துவிட்டான். கூடவே வாலியும் வந்தான்.
“அண்ணாவுக்கு ஃபீவர் அண்ணி, கவியண்ணாவைப் பார்த்துட்டு வரோம். இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொன்னார்” என்று சொல்லிப்போக, அவனுக்காக வீட்டிலேயே சாப்பாடு செய்தவள் உறங்கும்போது அவனை அணைத்துப்படுக்க
“கார்த்தி, ஃபீவர்மா. தள்ளிபடு” என்று அவளை விலக்கினான் காளிதாஸ். கார்த்தி கேட்கவில்லை.
“கண்ணா, சொன்னா கேட்கனும். அப்புறம் உனக்கும் கஷ்டம்” என்று காளிதாஸ் அதட்டிப் பேச
“தள்ளி இருந்தாதான் கஷ்டம். இரண்டு நாள் இப்படித்தான் என்னோடவே இருக்க போறீங்க” என்றாள் சிரிப்புடனே. மருந்து எடுத்திருக்க காய்ச்சல் குறைந்து இருந்தது அவனுக்கு.
“இரண்டு நாள் எல்லாம் இருக்க மாட்டேன், நாளைக்கு சரியாகிடும். வேலை இருந்தா கிளம்பிடுவேன்” காளிதாஸன் சொல்ல
“அதெல்லாம் நான் விடமாட்டேன்” என்றவள் அவனை நன்றாக ஒட்டிக்கொண்டு. அவன் விலக்கிவிட
“இப்படி என்னை தள்ளிட்டே இருந்தா, எனக்கு ஃபீவர் வந்தாலும் பரவாயில்லன்னு எதாவது செஞ்சிடுவேன்” என்று மிரட்டினாள். அதில் காளிதாஸன் வாய்விட்டு சிரிக்க,
“பேசாம ரெஸ்ட் எடுங்க” என்றவள்
“அடியே அலெக்ஸா! ப்ளே..” என்று சொல்லி பாடலை சொல்ல,
“இந்த பாட்டு நான் கேட்டதில்லையே, நல்லாயிருக்கு” என்றான் காளிதாஸ்.
“என்னவோ இப்படிதான் ஆகிட்டேன் நான்” என்று சொல்லி கார்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டு,
“எனக்கு இந்த காய்ச்சல் பிடிச்சிருக்கு, காய்ச்சல் வந்த காளிதாஸூம் பிடிச்சிருக்கு” என்று அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“பைத்தியமாகிட்ட கண்ணா நீ!” என்றான் காளிதாஸ்.
“யெஸ், I am madly in love with you!” என்றாள் கார்த்தி காதலாக.
“எப்படி கண்ணா?”
“அதுதான் எப்படி காளிதாஸ்?” என்று இவள் திருப்பிக் கேட்டாள். அலெக்ஸாவின் வழியே சின்மயி உருகிப்பாடினார்.
‘என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது?’