அன்று கார்த்தி மிகுந்த பரபரப்பாக இருந்தாள். கூடவே சந்தோஷம் மிகுதியாக இருந்தது. காளிதாஸன் வந்த பின்னும் அவளின் உற்சாகம் குறையவில்லை. முகத்தில் பொலிவு பன்மடங்கானது.
“கண்ணா! இன்னிக்கு செம ஹாப்பியா இருக்க போல? என்ன விஷயம்?” என்று கேட்க
“ம்ம், என் வீட்டுக்காரர் வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்டார்ல, அதான்” என்றாள் கொஞ்சம் கோபத்துடன்.
“விடு கண்ணா! அரசியல் எல்லாம் சகஜமப்பா” என்றான் புன்னகையுடன்.
“அய்யே!” என்று கார்த்தி பார்க்க
“கவிதை சொல்லவா? உன் கோவம் போயிடும்” என்றான் கண்சிமிட்டி.
அவனின் கண்சிமிட்டலில் கரைந்து போனவள் “முதல்ல சாப்பிடுங்க, இங்க என்ன கவிதை?” என்றாள் வெட்கத்துடன். அவளின் வெட்கத்தின் அர்த்தம் வேண்டும் என்பதே! காளிதாஸனோ குறும்பான புன்னகையுடன்
“நா.முத்துக்குமார் கவிதைதான்! ஆனா அவரே என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்! நான் பாக்கியசாலி தானே கண்ணா?” என்று காளிதாஸன் கேட்க
“எல்லாத்துக்கும் கவிதையா?” சலிப்பும் காதலும் சேர்ந்த ஒரு குரலில் கார்த்தி கேட்க, காளிதாஸன் உண்டு முடித்திருந்தான். கை கழுவியவன் கார்த்தியின் பின்னால் வந்து நின்று, அவள் தோளைப் பிடித்துக்கொண்டு, கன்னம் இழைந்து
“எஸ்! எல்லாத்துக்குமே எனக்கு கவிதை வேணும்” என்றவனின் பேச்சைக் கேட்டவளுக்குத் தெரிந்தது, அந்த கவிதை அவளென!
“விட்டா பேசிட்டே இருப்பீங்க, டூ மினிட்ஸ். சாப்பிட்டு மாடிக்குப் போகலாம்” என்றவள் உண்ண, காளிதாஸ் எல்லாவற்றையும் கிச்சனில் எடுத்துக்கொண்டு போய் வைத்தான்.
மாடியேறியதும் அவன் அலெக்ஸாவில் பாட சொல்ல,
“அடியே! அலெக்ஸா! ஷட் அப். என் வீட்டுக்காரர்ட்ட நான் பேசணும்” என்று மிரட்டினாள். அவள் பேச்சைக் கேட்டு சிரித்த காளிதாஸ் பாடலை நிறுத்த சொன்னான்.
மெத்தையில் உட்கார்ந்தவள் தன்னருகே வந்த கணவனை இன்னும் அருகே இழுத்தாள். அவள் மீதே அவன் விழ
“கண்ணா! வலிக்கும் உனக்கு. நீ வேணும்னா இப்படி வா” என்று அழைக்க, அவள் மறுத்தாள். ஒன்றும் பேசாமல் கணவனை அணைத்துக்கொண்டாள். அவளின் புடவை முந்தானை பறக்க, வாகாய்ப் பிடித்தவன் அவள் முகத்தில் மேல் போட்டான்.
“காற்று வந்து கதை பேசும் கொடிக் கயிற்றில் அவள் புடவை அன்றாடம் கூட்டம் போடும்! காத்திருப்பாள் ஒருத்தி என்ற நினைவு வந்து கடிகார முள் மீது ஆட்டம் போடும்!”
மீண்டும் கவிதை!
“அப்படியே கடிகார முள் ஆட்டம் போட்டு சீக்கிரம் வந்த மாதிரி” என்று திட்டினாள்.
“இன்னிக்கு நிறைய கவிதை சொல்றதைப் பார்த்தா, இன்னும் ஒரு மாசம் என் பக்கமே வரமாட்டீங்கனு தோணுது. என்ன கட்சி மீட்டீங்கா?” என்று அவனை அறிந்து கேட்டாள்.
“உள்ளாட்சி தேர்தல்டா” என்றதும் முகம் சுருங்கியது. இப்போது அதைப் பேச வேண்டாமென நினைத்தவன்
“என்ன நைட்ல புடவை கட்டியிருக்க? டிஸ்டர்பன்ஸா இருக்குமே. எங்க உன் மேக்ஸீ?” என்று கேட்க
“புடவை எப்படி இருக்குங்க?” என்று கேட்டாள்.
“புடவையில நீ நல்லா இருக்க” என்று அவன் சொல்ல
“என்ன அறிவு?” என்று வியந்தாலும் அவளின் விழைதல் அதுதானே?
முந்தானையை கணவன் மேல் போட்டு, முகத்தோடு முகம் சேர்த்து நெற்றியில் முத்தம் வைத்து, கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள்
புன்னகை செய்தவன் “என் கவிதையை ரசிக்கிறேன், உள்ள இருக்க குட்டிகவிதையை நினைச்சேன்” என்றவன் அவளின் கையைப் பற்றித் தன் நெஞ்சோடு வைத்து
“தேங்க்ஸ் கார்த்திமா, நீ இல்லைன்னா வாழ்க்கையில இந்த உணர்வெல்லாம் இழந்திருப்பேன். என்னைக் காதலிக்கிறதுக்கு. என்னையும் காதலிக்க வைக்கிறதுக்கு, எதிர்ப்பார்க்காத எல்லாமே எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம நீ எனக்குத் தர, தேங்க்ஸ் ஸோ மச்” என்றான் ஆத்மார்த்தமாக.
“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா? அப்படின்னா நான்தான் நிறைய சொல்லணும்” என்றாள் கார்த்தி.
“அப்படி இல்லைம்மா! நான் காணாத கனவெல்லாம் நிஜமானது உன்னாலதான், என் கார்த்தியால” சொல்லியவனின் குரலில் காதல் கொட்டிக்கிடந்தது. அந்த காதலின் அச்சாரமாய் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான் காளிதாஸன்.
***************************
சில மாதங்களுக்குப் பிறகு..
ஹாலில் அலெக்ஸாவின் வழியே பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
‘அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா
இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே உயிரேஏ.!’
ஜெயச்சந்திரன் குரலில் ஹாலில் காதல் அந்த காலை வேளையில் மிதந்தது. மெல்ல பாடியபடி கையில் இருந்த தன் எட்டு மாத மகள் சக்ரவர்த்தினியைத் தட்டிக்கொடுத்தபடி நடந்தான் காளிதாஸன்.
“ஓஹ், அப்பாவும் பொண்ணும் காலையிலே பாட்டுக் கேட்க ஆரம்பிச்சாச்சா?” என்று கோபத்தில் கேட்டபடி சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள் கார்த்தி. குழந்தையுடன் காளிதாஸன் மனைவியின் அருகே உட்கார, அவளோ கண்கள் கலங்க
“தள்ளிப்போங்க நீங்க, உங்க பொண்ணு வந்ததும் எனை மறந்துட்டீங்க. ஒரு வாரம் கழிச்சு வந்ததும் பொண்ணைத் தூக்கி வைச்சுக் கொஞ்சத்தெரியுது. என்னைப் பார்க்க முடியல” என்றாள்.
“கண்ணா! என்னடா நீ? அழாத” என்று சொல்ல, கார்த்திக்கு மனது என்னவோ போல் இருக்க, அழுகை இன்னும் அதிகமாக, மாடியேறினாள். காளிதாஸ் மகளை கீழ் அறையில் இருந்த சிவகாமி அம்மாவிடம் கொடுத்துவிட்டு மாடிக்குப் போனான். கார்த்தி உண்டான போதே அவளுக்காக மகன் வீட்டோடு தங்கி விட்டார் அவர்.
கார்த்தி மெத்தையில் படுத்து அழ அவளருகே நெருங்கி மனைவியை மடியில் போட்டுக்கொண்டான் கணவன். கார்த்தியின் மனம் அலைப்பாய்ந்தது, ஒரு இறுக்கம். காரணமின்றி ஒரு அழுகை. சிறிது நேரம் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு அழுதவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
“கண்ணா! இரு” என்று காளிதாஸன் அவள் கையைப் பிடிக்க
“பாப்பா தேடுவா, கீழே போறேங்க” என்றாள் கார்த்தி.
“பாப்பாவோட அப்பா கூட தேடுறேன், தெரியலையா?” என்றதும் குறைந்த கோபம் எழுந்துவிட்டது.
“வந்ததும் என்னை எழுப்பாம, உங்க பொண்ணைத் தானே தேடினீங்க? நான் யாருக்கும் தேவையில்லை” என்றவளுக்குக் கண்ணீர் கொட்ட, மனைவியை அணைத்துக்கொண்டவன்
“நம்ம பொண்ணைத் தூக்கும்போது அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்க, ஆனா பொண்ணோட அம்மாவை அப்படி என் அம்மா முன்னாடி தூக்க முடியாதே, அதான் கண்ணா” என்றான்.
“என்னைத் தூக்கலன்னு நான் கேட்டேனா?” கார்த்தியின் குரலில் எரிச்சல் இருக்க
“உடம்பு முடியலயா? ஏன் இவ்வளவு கோவம்?” என்று காளிதாசன் பொறுமையாகக் கேட்டான்.
“யாருமில்லாத மாதிரி இருக்கு, மனசுக்கு என்னவோ கஷ்டமா இருக்குங்க” என்று சொல்ல மனைவியைத் தன்னை விட்டு தள்ளி நிறுத்தினான்.
“நான் இருக்கும்போது இந்த பேச்சு சரியா?” என்றான் கண்டிப்புடன்.
கார்த்தியின் அம்மா விசாலாட்சி குழந்தைக்கு மூன்று மாதம் இருக்கும்போதே இறைவனடி சேர்ந்துவிட்டார். கார்த்திக்கு அது மிகப்பெரிய பாதிப்பு, உடல் மனம் எல்லாம் சோர்ந்து போனது. அவருக்கு உடல் நிலை சீரில்லாமல் போக கார்த்தி உடனிருந்து பார்த்தாள். ஆனாலும் அம்மாவின் இழப்பு பெரிதுதானே?
“உன்னையே யோசிக்கிறியே, ராஜீவ் பத்தி நினைச்சுப்பார். அம்மா இல்லன்றது கஷ்டம், ஆனா இருக்கவங்களை நினைச்சுப்பார்க்கனும் கண்ணா” என்றவன் மீண்டும் மனைவியை அருகே இழுத்துக்கொண்டான். கார்த்திக்கு அழுகை வந்தது.
“அழுகையா வருது, சாரி. ரொம்ப நாள் கழிச்சு வந்த உங்ககிட்ட கோவப்பட்டுட்டேன்” கார்த்தி சொல்ல
“அதெல்லாம் இல்லைடா, குழந்தை வந்தது நமக்கு சந்தோஷம்னாலும் மனசாலும் உடலாலும் உனக்குத்தான் நிறைய மாற்றம். ஐ கேன் understand கண்ணா! வர்த்தினி தூங்க லேட் பண்ணீட்டா அம்மா சொன்னாங்க, அதான் உன்னை நான் காலையில எழுப்பல. இல்லைனா என் பொண்ணுக்கு முன்னாடி உன்னைத் தூக்கிட்டு வந்திருப்பேன்” என்றதும் கார்த்திக்கு புன்னகை வந்தது. அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
அதற்குள் கீழிறிந்து சிவகாமி குரல் கேட்டது. கூடவே மகளின் ராகம்.
“வரு எந்திரிச்சிட்டா போலங்க, நான் போறேன்” என்று கார்த்தி விலகினாள். கார்த்தி பால் கொடுத்தும் குழந்தையின் அழுகை ஓயாமல் இருக்க காளிதாஸன் கைகளில் மகளை வாங்கினான்.
“ஏன் என் பொண்ணு அழறாங்க, கண்ணம்மாவுக்கு என்னாச்சு?” என்று தட்டிக்கொடுத்தான். அழுகை குறையாமல் இருக்க
“ஆராரோ! ஆரிரோ!” என்று அவன் தாலாட்டுப் பாடி நடக்க
“அதே பாடாம அடுத்த லைன் பாடுடா” என்றார் சிவகாமி.
“தெரிஞ்சா பாட மாட்டாங்களாம்மா? அலெக்ஸா ப்ளே சாங்” என்றதும் அலெக்ஸாவில் பாடல் ஒலிக்க அப்போதுதான் சக்ரவர்த்தினியின் அழுகை நின்றது.
“இவரை மாதிரியே பாட்டுக் கேட்டு வருவையும் பழக்கிவைச்சிட்டார் அத்த” குறை சொன்னபடி கிச்சன் பக்கம் சென்றாள் கார்த்தி.
“லஞ்சுக்குக் கூப்பிட்டேன்னு உன்னை நம்பி வந்தா, லஞ்சே என்னை செய்ய வைக்கிறயே டா”
“இவர் தனியா செய்வேன்னு சொல்லும்போதே நான் யோசிச்சேன்” கார்த்தி இவர்களிடம் கிண்டலாக சொல்ல,
“ஏன் என் ப்ரண்ட் எனக்காக செய்யமாட்டானா?” கவினை தாஸ் சீண்ட
“நித்தியும் உன் ப்ரண்ட் தானே?” மனைவியைக் கோர்த்துவிடப் பார்த்தான் டாக்டர்.
“ப்ரண்ட்தான்! நீதானே பெஸ்ட் ப்ரண்ட், அவ செய்ய மாட்டாடா” என்று நித்தியைக் காப்பாற்றினான்.
இப்படியே பேசிக்கொண்டே இருக்க
நித்திலா “தாஸ்! மது ஸ்கூல்ல ஏதோ கவிதைப் போட்டியாம், நீ எதாவது நல்ல கவிதை சொல்லேன்” என்றதும் கார்த்திக்கு எண்ணங்களில் வெட்கத்தின் வண்ணம்.
கார்த்தியின் முகம் பார்த்த காளிதாஸூம் “கவிதை தானே? கார்த்திகிட்ட சொல்றேன், அவ அனுப்பி வைப்பா நித்தி” என்றான் கள்ளப்புன்னகையுடன். கணவனின் பேச்சில் தவித்தவள் வெளியே வந்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் ராஜீவ் வந்தான்.
“டேய் வரேன்னு சொல்லவே இல்லை, உன்னை நினைச்சிட்டே இருந்தேன்” கார்த்தி கேட்க
“மாமா வர சொன்னாங்க, உங்கிட்ட சொல்லலையா?” என்று கேட்க, கணவனை எண்ணி பெருமிதம் அவளிடம். எல்லாரும் ஒன்றாய்ப் பேசிக்கொண்டு இருக்க மெல்ல நழுவி கிச்சன் சென்ற கார்த்தி
“தேங்க்ஸ்!” என்று காளிதாஸனின் முதுகைக் கட்டிக்கொண்டாள்.
“கண்ணா, யாராவது வருவாங்க. தள்ளிப் போ” காளிதாஸன் மனைவியின் கையை விலக்க,
“இவ்வளவு நேரம் என்னை சீண்டினப்ப தெரியலயா?” கேட்டபடி இன்னும் இறுக்கிக்கொள்ள
“இப்படி பண்ணினா அப்புறம் நீ வேற காளிதாஸ் பார்ப்ப” செல்லமாய் மிரட்டினான்.
“எல்லாம் நான் பார்த்தாச்சு” என்றவள் முகத்தை முதுகில் இருந்து எடுக்கவில்லை.
“தேங்க்ஸ் எதுக்கு?”
“ராஜிவைக் கூப்பிடதுக்கு, எனக்குக் கூட தோணல”
“யாருக்குத் தோணினா என்ன? ராஜீவை எனக்கும் பிடிக்கும், அதுக்கெல்லாம் தேங்க்ஸ் வேண்டாம்” என்ற கணவன் மீதான காதலும் மரியாதையும் கார்த்திக்கு இன்னும் கூடித்தான் போனது.