அடுத்த நாள் அவர்கள் ரயிலில் மெட்ராஸ் கிளம்ப சூர்யா யமுனா இருவருக்குமே நண்பர்களைக் காணப்போகும் சந்தோஷம்.
அங்கே திருமண மண்டபத்தில் ஸ்டாலினுக்கும் கோகிலாவுக்கும் இவர்களைக் காணவும் அவ்வளவு மகிழ்ச்சி. முதல் நாள் நிச்சயம் முடியவும் நண்பர்கள் மட்டும் உட்கார்ந்து பேசினர்.
“ஹே! சாத்துக்குடி, எத்தனை வருஷமாகிடுச்சு உன்னைப் பார்த்து, டேய் குட்டிப்பையா அத்தைக் கிட்ட வா. ஆறு மாசத்துல உன்னைப் பார்த்தது” என்று சிரஞ்சீவியை கோகி அழைக்க, அவனோ புது மனிதர்களிடம் உடனே ஒட்டமாட்டான். அம்மாவை விட்டு விலகாமல் அவள் மேலே இருக்க
“பார்த்தியா கோகி, அப்பனை மாதிரி அம்மாவை விட்டு நகரமாட்டேங்கிறான்” என்று சூர்யாவைக் கிண்டல் செய்தான் ஸ்டாலின்.
“பேசுவானா இல்லை உன்னை மாதிரி அமைதியா டி?” கோகிலா தோழியைக் கேட்க
“அதெல்லாம் அவங்க தாத்தா மாதிரி நல்லா பேசுவான் தெலுங்குல..” என்று சிரித்தாள் யமுனா. சிரஞ்சீவி சிறிது நேரத்தில் அப்படியே அம்மாவின் மடியில் உறங்கிப்போனான்.
“ஹரே ஸ்டாலின்! என் ப்ரியத்தம்மா நான் பார்க்கிறேன் உனக்கென்ன?” என்று சூர்யா நண்பனை கலாய்த்தான்.
“ம்ம், பேசுவடா. ஏம்மா யமுனா இவனை இன்னும் உன் பின்னாடி சுத்த உட்டுருக்கனும், எனக்கு அப்புறம் லவ் பண்ணி, எனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி புள்ளையும் பெத்து குடும்பஸ்தனாகிட்டான்ல குண்டூர்காரன் அந்த கொழுப்பு” என்று ஸ்டாலின் சூர்யாவின் முதுகில் தட்டினான்.
“யாரு இவளா? சூர்யா வெயிட் பண்றார்னு சொன்னா மேடம் தாங்கமாட்டா. இப்ப எப்படி? சூர்யா கூப்பிட்டா பறந்து போறியா?” என்று கோகிலா கண்ணடிக்க
“அவர் ஹைதரபாத்ல இருக்கார், நாங்க ஊர்ல இருக்கோம்டி, நீ வேற” என்று சிரித்தாள் யமுனா.
“ஆனாலும் சூர்யா கேடி டா நீ! சொன்னபடியே புள்ளைக்கு சிரஞ்சீவினு பெயர் வைச்சிட்ட இல்ல” என்று ராமு சிரிக்க
“ஸ்டாலின்! நீ ராமு பெயரை வைக்கிறேன்னு சொல்லியிருக்க, மறந்துடாத!” சூர்யா சிரிக்க கோகிலாவோ யமுனாவிடம்
“பார்த்தியா டி, பசங்க என்னவெல்லாம் பேசி இருக்காங்கன்னு” என்றாள். யமுனாவும் கோகிலாவும் உறங்கப்போக, இங்கே நண்பர்கள் மூவரும் கதைப் பேசினர்.
“ஏன்ட்ரா ராமு? ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற, பேங்க்ல நல்ல பொஷிஷன்ல இருக்க.. இன்னும் கோதையை நினைக்கிறியா ரா?” என்று சூர்யா ராமச்சந்திரனிடம் கேட்க
“இல்லைடா, அவளுக்குக் கல்யாணமாகி இரண்டு புள்ளைங்களோட நல்லாதான் இருக்கா. எனக்கு என்னவோ சட்டுனு யாரையும் பிடிக்க மாட்டேங்கிது..” என்றான் ராமு.
“அடச்சீ! அதெல்லாமில்லை, மனசுக்குப் பிடிக்கனுமில்லை. ஏனோ எனக்கு ஒருத்தரும் ஒத்துவர மாதிரி தெரியல” என்ற ராமச்சந்திரனின் தோளில் கைப்போட்ட சூர்யா
“ராமு, நீ அன்னிக்குக் கரெக்ட் டைமுக்கு அட்வைஸ் பண்ணினதாலதான் நான் யமுனாவைக் கல்யாணம் பண்ணினேன். இல்லைனா இன்னிக்கு ஒரு அழகான ஃபேமிலியா நாங்க இருக்க மாட்டோம். இதந்தா நீ வல்லனே ரா (உன்னால தான் எல்லாம் ). என்னால யமுனா இல்லாத ஒரு லைஃப் இமேஜின் கூட பண்ண முடியல.. நீ ரொம்ப நல்ல மனுஷன் டா. உனக்குப் பிடிச்ச மாதிரி நல்ல பொண்ணு உனக்குக் கிடைப்பாங்க பாரு” என்றான் உணர்ச்சிப்பூர்வமாக.
“ஐ அம் வெரி லக்கி, உங்களை மாதிரி ப்ரண்ட்ஸ் கிடைச்சதுக்கு” என்று சூர்யா சொல்ல ஸ்டாலின் புன்னகைத்தான்.
“போடா, நம்ம மூணு பேரும் எவ்வளவு வருஷம் கழிச்சு ஒன்னா இருக்கோம். அதெல்லாம் படுத்தாலும் எனக்குத் தூக்கம் வராது. நாங்க போலீஸ்காரங்கடா, எல்லாம் பழகிடுச்சு. என்னடா சூர்யா?” என்று ஸ்டாலின் சூர்யாவைப் பார்க்க
“அவுனுரா” என்ற சூர்யாவின் பார்வை மனைவி சென்ற திக்கில் இருக்க
“சூர்யா ஸார், என்னதான் அங்க லுக் விட்டாலும் கோகி யமுனாவை அனுப்ப மாட்டா, அவ ப்ரண்ட் கூட பேசும்போது நான் உனக்காக போய் கூப்பிட்டா என்னை காலி பண்ணிடுவா ராட்சஷி” என்று கோகியை அறிந்தவனாக சொன்னான் ஸ்டாலின்.
“ஏண்டா? கட்டின் பொண்டாட்டியை சைட் அடிச்சிட்டு இருக்க, ஒரு நாள் சார் பிரிஞ்சு இருக்க மாட்டீங்களோ?” ராமு கேட்கவும்
“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே செய்யப்போற சூர்யா நீ? யமுனா உன் குடும்பத்தை நம்பி வரல, உன்னை நம்பி வந்திருக்கு. நீ ஒரு இடம், அது ஒரு இடம் இருக்கவா கல்யாணம் பண்ணுனீங்க. ஏதோ டிரெயினிங் போற விட்டுப் போன, அப்புறம் போஸ்டிங் புது இடம், பையன் வளரனும் சொன்ன, இப்போதான் ஸ்கூல் போற வயசாகிடுச்சே..” என்று ராமு கண்டிப்பாய்ப் பேசினான்.
சூர்யாவுக்குமே மனைவியின் பார்வையும் பேச்சும் மனதை என்னவோ செய்தது.
“ம்ம், யமுனாகிட்ட சொல்லிருக்கேன்டா. நானா கிட்ட பேசனும், எனக்கு மட்டும் அவளைத் தனியா விட ஆசையா என்ன? அங்க குவார்டர்ஸ்ல யமுனா சிருவை வைச்சிட்டு தனியாதான் இருக்கனும். இங்க எல்லாம் இருக்காங்க, கடைக்குப் போகனும்னா கூட தெலுங்குல இல்லை ஹிந்தில பேசனும். அவ இன்னும் கஷ்டப்படுறா..” என்று சூர்யா அவன் நிலையை சொல்ல
“அதான் உன் பையன் சிரஞ்சீவி நல்லா தெலுங்கு பேசுறானே, உங்க வீட்ல மட்டும் என்ன தமிழா பேசிட்டு இருக்காங்க, பழகினா எல்லாம் சரியாப்போகும்..” என்றான் ஸ்டாலின்.
அடுத்த நாள் காலையில் ஸ்டாலின் கோகிலாவின் திருமணம் நடைபெற்றது. குடும்பமாக உட்கார்ந்து அதனைக் கண்ட சூர்யாவுக்கும் யமுனாவுக்கும் மனம் நிறைந்து போனது. ஆனால் மனதோரம் தங்கள் திருமணம் இப்படி உறவுகளோடு நடக்கவில்லையே என்ற வருத்தம் இருவருக்குமே இருந்தாலும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை.
“ஒரு வகையில ஸ்டாலினுக்கும் ராமுவுக்கும் நான் தேங்க்ஸ் சொல்லனும் யமுனா. நல்ல ப்ரண்ட்ஸ் கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன், அதுவும் ஸ்டாலின் நமக்கு நிறைய பண்ணிருக்கான். எனக்கு என்னோட ஜீவிதமோட சேர அவனும் ஒரு காரணம்..” என்று மனைவியிடம் சொல்ல யமுனாவும் ஆமோதித்தாள்.
சிரஞ்சீவி அன்று ஜம்ப் சூட் போட்டிருந்தான், அவனுக்கு விவரம் தெரிந்து வரும் முதல் திருமண நிகழ்வு என்பதால் ஆர்வத்துடன் சுற்றியும் பார்த்தான். கேள்வியாய்க் கேட்டான். சூர்யாவும் மகனிடம் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“நானா, எந்துக்கு அந்தரு தமிழ்லோனே மாட்லாடுத்துனாரு இக்கடா?” இங்கு எல்லாரும் தமிழில் பேசுவது குறித்து மகன் கேட்க
“இதி மெட்ராஸு ரா பங்காரம்” என்ற சூர்யா மனைவியின் பார்வையில்
“இது தமிழ்நாடு, அதான் எல்லாரும் தமிழ் பேசுறாங்க சிரு” என்றான் சூர்யா தமிழில்.
“எந்துக்கு நானா நுவ்வு தெலுகுலோ மாட்லாடுத்தன்னாவு கானி அம்மா தமிழ்லோ மாட்லாடுத்துந்தி?” பெற்றோர் இருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்க
“நானாக்கி அம்மா அண்டே இஷ்டம் பங்காரம், அதான் அம்மாவை நானா நம்ம குண்டுருக்கு அழைச்சிட்டுப் போய்ட்டேன்.” என்ற சூர்யாவின் பார்வை யமுனாவைக் காதலுடன் தழுவிட
“இதே கேள்வியை எங்கிட்ட கூட கேட்டான், எனக்குப் பதில் சொல்லத் தெரியல” என்று யமுனா சொல்ல
“தெரியலையா? ஏண்ட்டிமா இதி? எங்கிட்ட சொன்னியே சூர்யா உங்களை எனக்குப் பிடிக்கும்னு அதே சொல்ல வேண்டியதுதானே?” என்று கேட்டான்.
“சின்னப்பையன் கிட்ட என்ன சொல்ல சொல்றீங்க?”
“ஹரே! இதுல என்ன இருக்கு? என் பங்காரம் ரொம்ப பிரிலியண்ட் பாய், சோ அவன் கேட்டா கரெட்டா சொல்லனும். அவனுக்கும் தெரியட்டும் அவன் நானாக்கு அம்மான்னா எவ்வளவு இஷ்டம்னு” என்ற சூர்யா மகனிடம் மீண்டும்
“எனக்கும்தான், ஆனா நான் கனவுல கூட நினைக்காத லைஃப் எனக்குக் கொடுத்திருக்கீங்க சூர்யா நீங்க, சும்மா என்னால சொல்லக்கூடாது. நான் அண்ணானு கூப்பிட்டும் என் பின்னாடியே வந்து என்னை இப்போ உங்க பின்னாடி வர வைச்சீட்டீங்க” என்று காதலாய் சொல்ல, சூர்யாவுக்கு இன்னும் இன்னும் அவள் மீதான உன்மத்தம் கூடிப்போனது.
“யமுனாம்மா! நம்ம சிருவை ஹைதரபாத்ல இருக்க ஸ்கூல்ல சேர்த்திடலாம், நீயும் பிஜி பண்ணு அங்க” என்று சூர்யா தீடீரென சொல்ல
“இனிமே படிச்சு என்ன செய்ய போறேன் சூர்யா?” யமுனா கேட்கவும் அவளை முறைத்தவன்
“ப்ச், நீ என்கூட பேசினப்போ என்ன சொன்ன? டீச்சர் ஆகனும் சொன்ன இல்லையா? இப்போ ஏன் இப்படி பேசுற? கோகிலா பார்த்தியா படிச்சுட்டு பேங்க் ஜாப்ல இருக்கா, ஸ்டாலின் அவளுக்காக வெயிட் பண்ணி மேரேஜ் பண்ணியிருக்கான். நான் என்னோட கனவுகளை நிறைவேத்த நீ ஹெல்ப் பண்ணின ரா, அப்படித்தானே நானும் இருக்கனும். நீ மேல படிக்கிற, ஹால்ஃப் டே காலேஜ்தானே? சிரு ஸ்கூல் போயிடுவான், சரியா இருக்கும்” என்றான் அவனின் அக்மார்க் திடக்குரலில்.
சிரிபுரம் போனதும் சூர்யா ஒரு வார இடைவெளியில் வந்து அவர்களை ஹைதராபாத் அழைத்துக் கொண்டான். நரசிம்மகாரு பேரனின் படிப்பிற்காகவும் மகன் தனியாக இருக்கிறானே என்பதற்காகவும் இவர்கள் ஹைதரபாத் போக ஒத்துக் கொண்டார்.