மருத்துவமனை கவனிப்பில் மூன்று நாட்கள் அருண் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.புவனும் சிரஞ்சீவியும் இரவுகளில் துணைக்கு இருந்தார்கள். சிரஞ்சீவிக்கு இப்படி நடந்துவிட்டதே என்கிற ஆற்றாமை, புவனுக்கு நமக்கு எப்படி இப்படி நடந்தது என்கிற ஆச்சர்யம். இருவரும் அருணிடம் புலம்பி தீர்த்தார்கள். நடுஇரவில் செவிலியர் வந்து ‘சார் பேஷண்ட் தூங்கட்டும் சார் ப்ளீஸ்” என்று சொல்லவும்தான் அவர்கள் வாய் ஓய்ந்தது.
அருணுக்கு செய்ய ஆயிரம் வேலைகள் இருக்கிறது, இப்படி ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக்கொண்டிருப்பதில் வேலைகள் தடைப்பட்டாலும் தமயந்தி பற்றிய சிந்தனையே மனம் முழுக்க உலாவுகிறது.டீ அருந்திய சில நிமிடங்களிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது ஒவ்வாத எதையோ சாப்பிட்டிருக்கிறானென. ‘ரெஸ்ட் ரூம்’ ஓடியவன் முதல் முறை வாந்தி எடுக்கும் போதே கைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டது.நண்பர்களை அழைக்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் பதற்றம் அதிகரிக்கவும் விஷம் உடலில் இன்னமும் பறவ,மூச்சு திணறல்,தள்ளாட்டம் தொடங்கிவிட்டது. அவன் நல்ல நேரம் தமயந்தி அவன் முன் வந்து நின்றாள்.மனதில் நினைத்ததை சொல்லமுடியாமல் பதற்றத்தில் என்ன செய்யமுடியுமோ என்ற குழப்பத்தில் அவன் இருக்க,அவனை தோளில் சாய்த்துக்கொண்டு அவள் நடந்ததும் இவன் வியப்பில் ஆழ்ந்தான். அதை பற்றி மட்டுமே அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை நண்பர்கள் இருவரும் இதோ வந்துவிடுகிறோமென போனவர்கள் ஆளே காணவில்லை. சிரஞ்சீவிக்கு எப்போதும் அவசரத்தனம், கோபத்தில் சிந்திக்காமல் செயல்படுவதே அவன் சிறப்பான அம்சம். புவன் அவன் சேரும் ஆள் பொறுத்து அவன் குணாதிசியம் மாறும். அருணுடன் இருந்தால் பொறுமையாக இருப்பவன், சிரஞ்சீவியுடன் சேர்ந்தால் நிச்சயம் சேதாரம் அதிகம். இருவரும் சேர்ந்துக்கொண்டு பழி வாங்குகிறேன் என்று எதையும் சொதப்பாமல் இருந்தால் சரி! கபிலன் நேரம் பார்த்து திட்டமிட்டு செயல்படுவார். அவர் மகனுக்கும் எதிலும் அவசரம் என்ன நடக்குமோ என சிந்தனை மூழ்கி இருந்தான்…
“அருண்” என்று சின்ன குரலில் அறையின் வாசல் பக்கம் அழைப்பு ஆச்சரியப்படுத்தியது. தமயந்தி தயங்கி தயங்கி கையில் பழங்களுடன் அறையுள் நுழைந்தாள்.
“நல்லா இருக்கியா அருண்” அக்கறையாக கேட்டுக்கொண்டே அவன் கையில் ட்ரிப்ஸ் ஏற்ற போட்டிருந்த ஊசி, பக்கத்தில் ஸ்டாண்டில் காலி ஆகி தொங்கிக்கொண்டிருந்த சலைன் பாட்டிலை அவள் கண்கள் மேய்ந்தது.
அருண் “காலேஜ் போகலையா”
தமயந்தி “இல்ல, அது…உன் பிரெண்ட்ஸ் யாருமே வரலயா உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலயா அதான் நானே பார்க்க வந்துட்டேன்”
அவன் புருவம் ஆச்சரியத்தில் உயர
தமயந்தி “கிளாஸ் நடக்கல, போலீஸ் எல்லாம் வந்து விசாரிச்சாங்க.காலேஜ்லயும் ஏதோ என்கொய்ரி போயிட்டு இருக்கு. அதான் வந்தேன்” அவன் சோர்வான முகம் பார்த்தவள் அவன் மெத்தை அருகே இருந்த சேரில் அமர்ந்தவள் ஆழ்ந்த குரலில் “விஷம் கலந்துட்டதா சொல்றாங்க, இப்ப எதுவும் பிரச்சனை இல்லை தானே. மூச்சு விடமுடியாம கஷ்டப்பட்டியே இப்போ ஓகேவா” கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.
அவள் கண்களும், அக்கறையான விசாரிப்பும் எதோ செய்தது. தானாக ஓர் எண்ணம் ‘அந்த விஷம் மொத்தமாக குடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும். இதோ இவள் அக்கறையை தெரிந்துகொள்ளாமலே போயிருப்பான்’ உதித்து வதைத்தது.
அருண் “ நான் நல்லா இருக்கேன் தமயந்தி” என்று சொல்லும்போது அவனுக்குள்ளேயே ஓர் தெம்பு பிறந்தது.
தமயந்தி “நேத்து நீ மூச்சுவிட படற கஷ்டத்த பார்த்து நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா தூக்கமே வரல”
அருண் “அச்சச்சோ நான் சரியாயிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ் வந்துருவேன்” சமாதானம் சொன்னான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரம் சிரஞ்சீவியும் புவனும் வந்தார்கள்.
சிரஞ்சீவி “உன் சந்தேகம் நூறு பர்சன்ட் சரி மச்சான்” என்றான். அருணுக்கு அது ஊர்ஜிதமானதை எண்ணி கவலை பிறந்தது.
புவன் “தம்ஸ் எங்களுக்கு முக்கியமான ஒரு சின்ன வேலை இருக்கு. நீ அருணோட இருக்கியா நாங்க முடிச்சிட்டு வந்துர்றோம்” அவசரமாக கேட்டான்.
தமயந்தி ‘சரி’ என்று தலையாட்டவும் நண்பர்கள் இருவரும் திரும்பவும் காணாமல் போனார்கள்.
அருண் “ இவனுங்க ரெண்டு பேரும் எதுவும் பிரச்சனை செய்யாம இருக்கணும்”என்று சொல்லவும்
தமயந்தி “அதெல்லாம் எதுவும் செய்யமாட்டாங்க. நீ ரெஸ்ட் எடு, இங்க தான் நான் இருப்பேன்” என்று அங்கே போட்டிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
அருண் “ப்ச், நீ வேற எனக்கு தூங்கி தூங்கி போர் அடிச்சிருச்சு”
டிவி பார்ப்பதும், பாட்டு கேட்பதும் கூட ‘போர்’ என்றான். பழம், ஜூஸ் சாப்பிட பிடிக்கவில்லை என்றான்.
கடுப்பான தமயந்தி “சரி அப்போ உன் ஐபேட்ல என்ன கேம் இருக்கு சொல்லு அத கொஞ்ச நேரம் விளையாடலாம்” என்று ஐடியா கொடுத்தாள் .
அருண் “என்ன கேம் வேணும்னாலும் சொல்லு நான் டவுன்லோட் பண்றேன் விளையாடலாம்” என்று சொல்ல
தமயந்தி “அப்போ பிரீ ஃபயர் கேம் டவுன்லோட் பண்ணு விளையாடலாம்”
அருண் “உனக்கு பிரீ ஃபயர் எல்லாம் விளையாட வருமா” என்று கேட்க
தமயந்தி“ஓ எனக்கு அது நல்லாவே வரும். நானும் பூமியும் டெய்லி நைட் ஒரு மணி நேரம் விளையாடிட்டு தான் தூங்குவோம்”
அருண் “அப்டியா என்கூட எல்லாம் விளையாடினா உன் பிரென்ட் கோச்சுக்க மாட்டாளா”
தமயந்தி “இல்ல புது கேம் தானே ஸ்டார்ட் பண்றேன் கோச்சுக்க எல்லாம் மாட்டா”
அருண்“அன்னைக்கு தியேட்டர்ல உன்கிட்ட சண்டை ஏதும் போட்டாளா”
தமயந்தி“இல்லையே அப்படியெல்லாம் ஏதும் இல்ல”
அருண்“பிரண்டை விட்டுக் கொடுக்க மாட்டியோ” வெகுநாட்களாக கேட்கவேண்டுமென நினைத்த கேள்வியை கேட்டான்.
தமயந்தி “ஐயோ அப்படியெல்லாம் இல்ல அவ சண்டை எல்லாம் போடல”
அருண் “உனக்கே தெரியலையா நீ ரொம்ப பூமிக்கு சப்போர்ட் பண்ற மாதிரி,
அவளுக்கு அடிமையா இருக்கிற மாதிரி…”
தமயந்தி“எப்படி அவ கெஸ் பண்ண மாதிரியே கரெக்ட்டா கேக்குற?அப்படியெல்லாம் எதுவுமே இல்ல. அவங்க அம்மா அவளுக்கு பிடிக்காம எப்போ கச்சேரி புக் பண்ணாங்களோ அப்ப இருந்து பூமி நார்மலா இல்ல. மத்தபடி பூமி ரொம்ப நல்ல டைப் தெரியுமா” பெரிதாக பேசினாள்
அருண் “எனக்கு பூமியை சின்ன வயசுல இருந்து தெரியும்”
தமயந்தி “சொன்னா. பூமி அவங்க அம்மா இரண்டு பேரும் ரொம்ப நல்லவங்க, ரொம்ப கைண்ட். நல்லா சப்போர்ட் பண்ணுவாங்க. எனக்கு இந்த ஊர்ல அவங்க தான் க்ளோஸ், அவங்கள தவிர இங்க யாரையும் தெரியாது. நீ கூடத்தான் சிரஞ்சீவி என்ன வம்பு பண்ணாலும் அவன் கூட இருக்க, அப்போ நீயும் அடிமையா இருக்கியா என்ன” கேட்டாள்
அருணுக்கு மூச்சு விடமால் பேசும் தமயந்தியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது
“சரி சரி பூமி பத்தி எதுவும் தப்பா பேசல போதுமா”
“தப்பா பேச ஒன்னுமில்ல. அவ எந்த தப்பும் செய்யல. என்னமோ அவளுக்கு உங்களை எல்லாம் பிடிக்கல. பிடிக்கலன்னு கூட சொல்லமுடியாது. ஒரு விதமான பயம்ன்னு சொல்லலாம்”
அருண் “என்ன பயமாம்” கேட்டான். உண்மையில் இவர்களுக்கு தான் அவளை எண்ணி பயமும் கவலையும்.
தமயந்தி “நீங்கெல்லாம் ரொம்ப பணக்காரங்க” அவள் கையை உயர்த்திக்காட்டி “நீங்கல்லாம் அங்க மேல யாரும் தொடமுடியாத இடத்துல இருக்கீங்க” கையை தரைக்கு இறக்கி காட்டி “நாங்க இங்க இருக்கோம்” என்றாள்
தமயந்தி கைகளில் கண்களில் மாற்றி மாற்றி பேச அருணுக்கு மனம் இளகியது. சிரித்துக்கொண்டே அவளை மேலே மேலே பேசவிட்டுக்கொண்டே விளையாடினான். தமயந்திக்கு அவளை பற்றி பேசுவதை விட அவளுக்கு பிடித்தவர்கள் பற்றி பேசினால் சரளமாக தயங்காமல் பேசுகிறாள். கண்டுகொண்டான்!
நேரம் போவது தெரியாமல் விளையாட்டும் பேச்சுமாக போக, மாலை நேரம் சிற்றுண்டியுடன் வந்த ஹெல்பர் “சார் ஜூஸ், டி, காபி என்ன சார் கொடுக்கட்டும்” என்று கேட்டு அவன்,அவள் இஷ்டப்படி எடுத்துவர சென்றார்.
தமயந்தி “பார்த்தியா நான் சொல்லல, இந்த மாதிரி கவனிப்பு, உங்க ட்ரெஸ், கார், நடை, பாவனை எல்லாம் அப்படி இருக்கு. அப்போ பயம் வராதா”
அருண் “இந்த கவனிப்பு எல்லாம் பூமி வீட்லயும் உண்டு தமயந்தி”
தமயந்தி“இல்லப்பா,பூமி வீட்ல ஒரே ஆள் தான் ஹெல்ப்புக்கு. அவங்களும் ஆண்டிக்கு தான் ஹெல்ப் பண்ணுவாங்க. எங்களுக்கு வேண்டியது நாங்க தான் செஞ்சுக்கணும்”
அருணுக்கு இப்போது கேட்க நிறைய கேள்விகள் எழுந்தது.
அருண்“நீ பூமி வீட்டுக்கெல்லாம் போயிருக்கியா”
“ஓ நான் வீக்கெண்ட் ஆனா ஹாஸ்டெல்ல இருக்கமாட்டேன். அவங்க வீட்லதான் இருப்பேன். ஆண்டி ஆஃபீஸ்ல பார்ட் டைம் ஜாப் பார்த்தேன்”
அருண்“பூமியும் உன்கூட இருப்பாளா”
“ஆமா எனக்கும் பூமிக்கும் ஆண்டிக்கு ஆபிஸ்ல ஹெல்ப் பண்றதும், ஆண்டி குடுக்குற காசுல ஆர்டர் பண்ணி சாப்பிடுறதும் தான் வேலை தெரியுமா”
அருண் அவள் சொன்னதை கேட்டு தலை அசைத்துக்கொண்டே “வெளிலலாம் எங்கேயும் போக மாட்டீங்களா” கேட்டான்
“போவோமே எனக்கு நடந்து போறதுன்னா புடிக்குமா, பூமியும் நானும் அவங்க வீட்ல இருந்து பீச் வர நடந்தே போவோம் தெரியுமா”
அருண் “இல்ல மால், தியேட்டர், பியூட்டி பார்லர் இப்படியெல்லாம்”
“ம்ம் போவோமே ஆனா அதெல்லாம் ரேர். புது படம் எல்லாம் பாக்க எனக்கும் இஷ்டமில்லை, பூமிக்கும் இருக்காது. நைட் முழுக்க முழிச்சிருந்து கொரியன் ட்ராமா பாக்குறதுலாம் சூப்பரா இருக்குமா, அத தான் அதிகமா செய்வோம். டிரஸ் வாங்குறது தைக்ககிறது எல்லாம் நான் மாடலிங் பண்ணி குடுத்த ஒரு டிசைனர் இருக்காங்க,அவங்ககிட்டயே வாங்கிக்கிட்டோம். மால் போய் ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிட எல்லாம் எனக்கு நேரம் இருந்தது இல்ல. பாஸ்கெட் பால் கோச் பண்ண போயிட்டு இருந்தேன், பூமிக்கு பாட்டு க்ளாஸ் இருந்தது. பூமி பார்லர்லாம் போகமாட்டா வீட்டுக்கே வருவாங்க, எனக்கு மாடெலிங் செய்ய சான்ஸ் வந்தப்ப மட்டும் ஸ்பா மசாஜ் எல்லாம் போனோம். ஜாலியா இருந்திச்சு ஆனா ரொம்ப காஸ்டலியா இருந்ததா வீட்லே யோகா பண்ணிக்கிட்டோம்” என்று சிரித்தாள்
அருணுக்கு ஆச்சரியம் மிகுந்தது. பார்பி பொம்மை போல எல்லாமே பொருத்தமாக அணிந்துகொண்டு எப்போதும் பாந்தமாய் அழகுபடுத்திக்கொள்ளும் பூமியை இவர்கள் சிட்டி முழுக்க இருக்கும் மால்,பார்லர், ஹோட்டல் என்று தேடி சலித்துப்போனார்கள். பெரிய பெரிய ஆட்கள் யார் அழைத்தாலும் அவர்கள் வீட்டு விஷேஷத்திற்கெல்லாம் சென்று சிரித்து வந்திருக்கிறார்கள். பூமி எங்குமே செல்லாமல் அவளுக்கென ஓர் உலகம் முற்றிலுமாக இவர்களை தவிர்த்துவிட்டு உருவாக்கியிருக்கிறாள்.
அருண் “பூமி பிரெண்ட்ஸ் எல்லாம்… உனக்கு தெரியுமா ” என்று இவன் இழுக்க
தமயந்தி “ஓ பூமி பாட்டு க்ளாஸ் பிரெண்ட்ஸ் கொஞ்ச பேரை தெரியும். அப்பறம் எங்க காலேஜ்ல கொஞ்ச பேர் அவ கூட படிச்சவங்க இருந்தாங்க. அவங்க கூடெல்லாம் அவளும் பேசமாட்டா என்னையும் பேச விடமாட்டா”
அருணுக்கு பொதுவாகவே அவன் அத்தைகள் அம்மா மற்றும் சில பெண்களை பார்த்து பெண்கள் மீதே பெரிதாக நல்ல எண்ணம் இருந்ததில்லை. பெண்களை தவிர்க்கவே பார்ப்பான். பள்ளி நாட்களில் பள்ளியில் பூமிகா, வீட்டில் ஷிவானி இவர்களிடம் மட்டும்தான் பொறுத்து போவான். அதிலும் பூமிகா “அரூ…ண் அண்ணா…” என்று அழுத்தி அழுத்தி அழைத்து பேசும்போது அவளை தங்கையை போல் நடத்தியிருக்கிறான். அவள் என்ன கேட்டாலும் செய்துகொடுப்பான்.பள்ளிக்கு சைக்கிளில் வரும்போது சைக்கிள் செயின் கழண்டுபோனால் திரும்பவும் மாட்ட தெரியாது என்று சைக்கிளில் வர பயமாக இருக்கிறது என்றாள். ஒரு நாள் எல்லாம் சைக்கிள் செயின் மாட்ட சொல்லிக்கொடுத்தான். அருணுக்கு அவன் சீரியசாக ஒரு விஷயம் செய்யும்போது விளையாட்டுதனமாக இருந்தால்,கிண்டல் செய்து சிரித்தால் கோபம் வரும். அப்படி பூமிகா செய்தால் மட்டும் பொறுத்துப்போவான். சிரஞ்சீவி ‘கொரங்குக்குட்டி’ என்று அவளை கிண்டல் செய்தால் இவன் முறைப்பான். புவனும் இவனும் அவளுக்கு நட்பு என்றால் சிரஞ்சீவி அவளுக்கு எனிமி. ஆனால் அவளுக்கு மட்டுமே பாசமான எனிமியாக இருக்கவேண்டும் என்பாள்.
பாசமாக இருந்தவள் கோபித்துக்கொண்டு போனது வருத்தமாக இருந்தது. பூமிகாவின் கோபமும், என்னோடது எனக்கு மட்டும்தான் என்று நடந்துக்கொள்ளும் விதமும் அறிந்தவன் கொஞ்ச நாள் கண்டுகொள்ளாமல் விட்டால் பேசுவாள் என்றெண்ணினான். அவளோ அவர்கள் மூவரையும் மறந்தே போயிருக்கிறாள்.
சிரஞ்சீவியும் புவனும் வரவும் தமயந்தி கிளம்பிவிட்டாள். அருண் இருவரையும் பார்க்க அவர்கள் பேசாமலே இருந்தனர்.
அருண் “ம்ம் என்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. நீங்க சொன்னா நானும் சொல்லுவேன்” என்றான்
புவனுக்கு ஆர்வம் கூடியது.
சிரஞ்சீவி புவனை அடக்கியவன் அருணை பார்த்து “நாங்க என்ன பண்ணிருப்போம் கெஸ் பண்ணு” கேட்டான்
அருண் சட்டென யோசித்தவன். தமயந்தி காலை கல்லூரிக்கு போலீஸ் வந்தது என்றது நினைவுக்கு வரவும் “லீகலா போனீங்களாடா” கேட்டான் ஆச்சர்யமாக
புவன் “எஸ்… டீ கொண்டுவந்த பையன புடிச்சு, அப்படியே போய் ஆள புடிச்சு கொடுத்தாச்சு”
அருண் “கபிலன் என்ன சொன்னார்” கேட்டான்
சிரஞ்சீவி “அப்பா ஹாப்பி”
புவன் “கவலையே படாத மச்சான். எங்கேயும் சிக்கல் வராது” அழுத்தி சொன்னான்.
அருணுக்கு இவர்கள் கபிலனுக்கு தெரிந்துதான் செய்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் சிரஞ்சீவி கட்டிவைத்து அடிக்கிறேன் என்று போகாமல் போலீஸ் கேஸ் என்று போயிருக்கிறானே என்று ஆச்சரியம்.
சிரஞ்சீவி “நீ வேற அடுத்து பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ற, இந்த விஷயம் பரவுற மாதிரி பரவுனா பயம் வரவேண்டிய ஆட்களுக்கு பயம் வரும், அதான்…” என்றான்.
அருண் “பரவால்ல கடைசியா உனக்கும் மூளை வேலை பார்க்க தொடங்கிருச்சு” என்றான்
புவன் “அதெல்லாம் விடு என்ன விஷயம் அத சொல்லு”
அருண் “ம்ம்… எங்கயாச்சும் கண்ல படுவா, பேசி சமாதானம் செய்யலாம் நினைச்சு ஊரை சுத்துனோம் இல்ல. மேடம் அங்க எங்கேயும் போகாம பார்ட் டைம் ஜாப் பார்த்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு பிரெண்ட் கூட சீரியல் பார்த்துகிட்டு, பாட்டு வாத்தியார, பியுட்டிசியன்ன எல்லாம் வீட்டுக்கே வரவச்சிக்கிட்டு இருந்திருக்கா”
சிரஞ்சீவி “சோ…”
அருண் “சோ மேடம் நம்மளோட பேச, திரும்பி பேட்ச்-அப் ஆகவெல்லாம் தயாரா இல்லை”
புவன் “அப்படி சொல்லமுடியாது. தமயந்தி கிட்ட நம்மள பத்தி பேசிருக்கா.அதுவும் அந்த குலாப் ஜாமுன் கதையை சொல்லிருக்கால்ல” என்றான்
அருண் அவனை நேர் பார்வை பார்த்தவன் “அப்போ அவ ஸ்டேஜ்ல ஏறி பாடின்ன அப்புறம் யாரும் கிண்டல் செய்யக்கூடாதுன்னு தடுத்த கதையை ஏன் சொல்லல” கேட்டான்.
புவன் “சொல்லிருக்கலாம். நமக்கு தெரியாம இருக்கலாம்” என்றான்.
அருணுக்கு சலிப்பு தட்டியது. சிரஞ்சீவியை பார்த்து “என்ன எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க கேட்டுவா போ” என்று விரட்டினான்.