தன் குடும்பத்தினரின் மேல் அளவில்லா அன்பும் அக்கறையும் கொண்டு இருக்கும் பட்டம்மாள் பாட்டிக்கு அவர்கள் அனைவரும் தங்கள் பேச்சை மதித்து நடக்க வேண்டும் என்ற உரிமையும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.
அதிலும் சிறு வயதில் இருந்தே தானும் தன் கணவரும் தாலாட்டி சீராட்டி வளர்த்த மூத்த பேத்தியின் மேல் உரிமைக்கும் மீறிய அதிகமான எதிர்பார்ப்பும் நெருக்கமும் கொண்டிருந்தார் அந்த பேரிளம் பெண்மணி.
தன் பாட்டியுடைய குணத்தை அறிந்தே இருந்தாலும் அவள் கூறியதற்கு பதில் எதுவும் கூறாது அலைபேசியை அணைத்து விட்டவரின் செயலில் சட்டென்று கண்ணில் நீரும் துளிர்க்க, ‘பாட்டியின் மனதை வருத்தி விட்டோமோ. அவசரப்பட்டு ஸ்ரீரஞ்சனுக்கு ஒப்புதல் கொடுத்து விட்டோமோ?’ என்ற வருத்தமும் கொண்டவள், அவருக்கு மீண்டும் மீண்டும் அழைப்புகளை மேற்கொண்டாள்.
ஆனால் வெகு நேரம் அழைத்தும் அழைப்பு ஏற்கப்படாமலே இருக்க,
“பட்டு பேபி போனை எடுங்க. நான் செஞ்சது தப்புன்னா என்ன ரெண்டு அடி கூட அடிச்சிடுங்க.” என்று வாட்சப்பில் செய்தி அனுப்பியவள், தன் சித்தப்பா மகள் மனோவின் எண்ணிற்கு அழைத்து பாட்டியிடம் கொடுக்குமாறு சொன்னாள்.
ஆனால் அதையும் வாங்கிப் பேசாத பட்டம்மாள், “மாப்பிள்ளையைக் கூட அவளா தேடிக்கிற அளவு அவ ரொம்ப பெரிய மனுசியாகிட்டாள்ள. அப்றம் எதுக்கு இந்த கிழடிட்ட பேசணும் சொல்றா?” என்று முகத்தை திருப்பிக் கொள்ள…
அதைப்பார்த்து, “பட்டுமா… புள்ள பாவம் டி. வயசுக் கோளாறுல ஏதோ ஆசைப்பட்டுடிச்சி. அதுகிட்ட இப்டி முகத்தை திருப்பாத.” என்று மனைவியிடம் கெஞ்சல் போலவே கடிந்தவர், அலைபேசியில் தேம்பிக் கொண்டிருந்த பேத்தியைப் பார்த்து, “மதுக்குட்டி நீ அழாத பொண்ணு. பாட்டி கோவத்துல அப்டி பேசுறா. கோவம் போன பின்ன உன்கிட்ட பேசுவாடா” என்று பேத்தியிடம் சமாதானத்தில் இறங்கினார் சொக்கலிங்கம்.
அதில் பேத்தியை விடுத்து கணவரை பலமாக முறைத்தவர், “எல்லாம் நீங்க கொடுக்கற இடம் தான். சின்ன புள்ளயிலிருந்து அவ சொல்ற எல்லாத்துக்கும் நீங்க சதங்கை கட்டி ஆடுறதால தான் இப்போ எவனோ ஒரு ஊர் பேர் தெரியாதவன காதலிக்கிறேன்னு சொல்லுறா.” என்று மென்மேலும் பொரிந்தவரிடம்,
“இல்ல பட்டு. ஊர் பேர் தெரியாத பையன் இல்ல. அவ வேலை பாக்குற முதலாளி தான்மா. பம்பாய்லயே பெரிய தொழில் எல்லாம் பண்றாரு.” என்று தாத்தா பேத்திக்கு மேலும் வக்காலத்து வாங்க…
“அப்போ உங்களுக்கு முன்னவே எல்லாம் தெரியுமா?. தெரிஞ்சும் நீங்க அவளை கண்டிக்காம இவ்வளவு தூரம் வளர விட்டிருக்கீகளா? நாளைக்கு உறவுக்காரவுக எல்லாம் கேக்கப்போற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவீக?” என்று கணவரிடம் எகிறியவரைக் கண்டு, ஆடு திருடியவராய் விழித்து வாயை மூடிக் கொண்டார் பெரியவர்.
பாட்டியின் அந்தப் பேச்சில் மதுரிமாவின் விசும்பல் கேவலாக மாற, “பட்டு பேபி… ப்ளீஸ் கடாமீசை பாவம் அவரைத் திட்டாதீங்க. நீங்க நினைக்கிற போல நான் எந்த தப்பும் பண்ணல. எங்க பாஸாதான் வந்து என்ன ரொம்ப லவ் பண்றதா சொன்னாரு. நான் ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் ஓகே மட்டும் சொன்னேன் பட்டு பேபி.” என்று கண்களில் நீர் துளிக்கக் கூறியவள், “அதுவும் கூட நீங்க எல்லாம் என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுப்பீங்கங்கற நம்பிக்கையில் தான் பட்டு பேபி. நான் செஞ்சது தப்புன்னா என்ன ரெண்டு அடி கூட அடிச்சிடுங்க, இல்லன்னா நான் நான் எங்க பாஸ்கிட்ட அவரை பிடிக்கலைன்னு வேணா சொல்லிடுறேன்” என்று கூறிக்கொண்டே சென்றவளுக்கு அழுகையில் இதழ்கள் துடித்து நாசி எல்லாம் சிவந்து தான் போனது.
பேத்தியின் அந்த அழுகுரலைத் தாளாது, “மதுக்கண்ணு… அழாதடா” என்று அவள் தாத்தா மென்மேலும் உருக…
பேத்தியிடம் நேரடியாகப் பேசாது போனாலும், கண்ணில் நீர் வழிய, குரல் தழுதழுக்க அவள் பேசுவதை எல்லாம் செவிமடுத்திருந்த பட்டம்மாளுக்கும் அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் தான் போனது.
என்ன செய்ய பேத்தியைப் போலவே அவர்களும் அளவுக்கு அதிகமான பாசத்தை அவள் மீது வைத்து விட்டார்களே.
“பட்டு பேபி… என்னோட பேச மாட்டிங்களா? நான் உங்க மதுக்குட்டி இல்லியா?” என்று இன்னும் இன்னும் தொடுதிரையில் தேம்பிக் கொண்டே இருந்தவளின் பேச்சில் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு கைபேசியை வாங்கி பேத்தியின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர், “சரியோ தப்போ ஒரு விஷயத்தை செய்ய முன்ன தான் யோசிக்கணும் மதுகுட்டி. செஞ்சபின்ன பின்வாங்கக் கூடாது. கடைசி வரை போராடி செயிக்கணும். உன் வேலை விஷயத்தில செயிச்ச போல” என்றவர், “அடுத்த ஃபிளைட்லயே உங்க பேத்திக்கும் அந்தப் பையனுக்கும் டிக்கட் போட்டு வர வைங்க. ரெண்டு பேரும் ஊருக்கு வந்த பின்ன மத்தத பேசிக்கலாம்.” என்று கணவனிடமும் கூறிக் கொண்டார்.
அதைக்கேட்டு பேத்தியோடு தாத்தாவின் முகம் மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரின் முகமும் புன்னகையில் மலர…
அதைக் கவனித்து, “எல்லாருமே கூட்டுக் களவாணிகதான் போல.” என்று முறைப்போடு கூறியவர், “இன்னும் என்ன அழுக மதுகுட்டி. ரெண்டு பேரும் சூதானமா ஊர் வந்து சேருங்க” என்று விழிநீரோடு தன்னையே பார்த்திருந்த பேத்தியிடமும் சிரித்துவிட்டே அங்கிருந்து அகன்றார் பட்டம்மாள்.
அவர் சென்றதும் தாத்தாவோடு சேர்ந்து குடும்பத்தினர் அனைவரும் அவளை வாழ்த்து மழையில் நனைய வைக்க, அனைவரோடும் இன்னும் ஏதேதோ பேசி முடித்து கைபேசியை அணைத்தவளுக்கு உள்ளம் முழுதும் அப்படி ஒரு உற்சாகம் பொங்கி வழிந்தது.
ஸ்ரீரஞ்சனின் அன்றைய காதல் கோரிக்கைக்கு ஏதோ ஒரு வேகத்தில் ஒப்புதல் அளித்து இருந்தாலும், இத்துணை தினங்கள் தன் பாட்டியை எப்படி சரிக்கட்டப் போகிறோம். என்ற கலக்கத்தில் இருந்தவளுக்கு அவர் ஸ்ரீரஞ்சனையும் அழைத்துக் கொண்டு உடனே ஊர் வருமாறு கூறியதும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்கிற நிலைதான்.
கிராமத்து பழக்க வழக்கங்களில் ஊறி தொட்டதுக்கெல்லாம் ஊர் உறவு என்று பேசிக் கொண்டிருப்பவர் ‘இத்துணை சீக்கிரம் தான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவனை காதலிப்பதை ஏற்றுக் கொண்டாரா?’ என்ற மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனவள், அந்த மகிழ்ச்சியை உடனே ஸ்ரீரஞ்சனிடமும் பகிர வேண்டும் என்ற உந்துதலில் இரவு நேரம் என்றும் பாராது அவனுக்கு அலைபேசி அழைப்பை விடுக்க, பெண்ணவளின் ஒரு அழைப்பைக் கூட ஏற்கவே இல்லை அவளின் காதலன்.
பல மணித்துளிகள் கடந்தும், “நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் உங்களது அழைப்பை ஏற்கவில்லை” என்ற பதிவுக் குரலே மீண்டும் மீண்டும் ஒலிக்க, அத்துணை நேரம் இருந்த மகிழ்ச்சி எல்லாம் சட்டென்று வடிந்து தான் போனது பெண்ணிற்கு.
அவனது காதலை அவள் ஏற்று மூன்று மாத காலத்தில் இதுவரை பெரிதாகத் தெரியாத ஆடவனின் அந்த அலட்சியம், அவனோடு திருமணம் என்று பேசிய இக்கணம் பெண்ணவளுக்கு சிறு நெருடலைக் கொடுத்தது.
ஆனால் அதை வளர விடாது சற்று முன்னர் அவன் யாரோ ஒரு நண்பனைப் பார்க்கச் செல்வதாய்க் கூறியது சிந்தையில் உதிக்க, ‘ச்ச ச்ச நான் ஒரு மடச்சி. அவரு எவ்ளோ பெரிய பிஸ்னஸ்மேன். அவருக்கு எவ்ளவோ வேலைகள் இருக்கும். இதெல்லாம் பெருசா எடுக்கக் கூடாது’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், ‘காலைல ஆஃபிஸ் போய் நேர்லயே ஸ்ரீக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம்’ என்று மகிழ்ச்சியாகவே உறக்கத்தைத் தழுவினாள் மதுரிமா.
ஆனால் அங்கு ஸ்ரீரஞ்சனோ வெகு நாட்களுக்குப் பிறகு பார்த்த நண்பனின் அருகில் தொலைபேசியைக் கூட தொல்லை பேசியாய்க் கருதி, அதை வாகனத்திலே விட்டுச் சென்றவன், நடுச்சாமம் வரையில் ஆட்டம், பாட்டம் என்று நேரத்தைப் போக்கிவிட்டு நள்ளிரவு இரண்டு மணி அளவிலே வீட்டிற்கு வந்து தன் கைபேசியைப் பார்க்க…
அதிலோ ஐந்திற்க்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் மதுரிமாவின் எண்ணிலிருந்து வந்து இருந்தது.
அதைக் கண்டு, “ரீமா எதுக்கு இவ்ளோ டைம்ஸ் கால் பண்ணிருக்கா. நைட் டைம் நானா கால் பண்ணா கூட டூ மினிட்ஸ்கு மேல பேசமாட்டாளே?” என்று நெற்றியைக் கீறியவாறு அவளுக்கு அழைக்கப் போனவன், அப்பொழுது தான் இரவு வெகுநேரம் கடந்து விட்டதை உணர்ந்து, ஒரு ஒலிகற்றையை மட்டும் பேசி வாட்சப் செயலியில் அனுப்பிவிட்டு அவனும் உறங்கிப் போனான்.
இரவு அவனோடு பேச முடியாத ஏமாற்றத்தில் உறங்கி இருந்தாலும், அவள் விழிக்கும் பொழுதே, “வெரி வெரி சாரி ஸ்வீட் ஹார்ட். ரொம்ப நாள் கழிச்சு என்னோட ஃப்ரண்ட மீட் பண்ணதுல மொபைல கார்லயே விட்டுட்டுப் போய்ட்டேன். அதான் உன்னோட கால்ஸ் அட்டண்ட் பண்ண முடியல. சாரி பாஃர் தி ட்ரபுள்டா.” என்று அவன் பேசி அனுப்பி இருந்த ஒலிக்கற்றை அவள் நாளை இனிமையாக விடிய வைத்திருந்தது.
அதில், “ம்ம்ம் நைட் நான் நினைச்சது தான் சரி. ஸ்ரீ எப்பவும் ச்சோ ஸ்வீட்தான்.” என்று இதழ் மலர்ந்து சிரித்துக் கொண்டவள், தன் பாட்டி கூறியதை அவனிடம் கூறப் போகிறோம் என்ற துள்ளலோடே வேகமாக எழுந்து அலுவலகத்திற்கு ஆயத்தம் ஆகிக் கிளம்பி இருந்தாள்.
ஆனால் பெண்ணவளின் ஆவலும் அவசரமும் ஆடவனுக்கு இல்லையே.
இரவு மிகவும் தாமதமாக உறங்கிய ஸ்ரீரஞ்சன் சற்று தாமதாகவே அலுவலகத்தை வந்து அடைய, அவன் தலையைப் பார்த்ததும் என்றுமில்லா ஆர்வத்தோடு, “ஸ்ரீ…” என்று அவன் அறைக்குள் நுழைந்தவளைக் கண்டு, “வாட் எ சர்ப்ரைஸ் ஸ்வீட்ஹார்ட்!. ரீமா பேபி என்ன இன்னிக்கு நான் கூப்பிடாமையே என்ன பாக்க வந்திருக்காங்க? நைட் அவ்ளோ கால்ஸ் வேற பண்ணிருந்தாங்க. எனிதிங்க் இம்பாட்டர்ன்ட்?” என்று அவனும் துள்ளலாகவே வினவினான்.
ஆடவனின் அந்த துள்ளலில், “ஆமா ஸ்ரீ. ரொம்பவே இம்பாட்டர்ன்ட் தான்.” என்று கண்ணில் மகிழ்ச்சி ததும்பக் கூறியவள், “என்னோட வீட்ல கிட்டத்தட்ட நம்ம லவ்கு ஓகே சொல்லிட்டாங்க ஸ்ரீ. உங்களையும் என்னையும் உடனே கிளம்பி வரச் சொல்லிருக்காங்க. நாம உடனே எங்க கிராமத்துக்கு கிளம்பணும் ஸ்ரீ.” என்று விழிகள் மின்னக் கூறியவளின் ஆரம்பப் பேச்சில் மலரத் தொடங்கிய ஸ்ரீயின் முகமோ, உடனே கிராமத்துக்குக் கிளம்பணும் என்ற பெண்ணவளின் இறுதிக் கூற்றில், “கிராமத்துக்கா…? நானா?” என்று இஞ்சி தின்ற மந்தியைப் போல் அப்பட்டமான பிடித்தமின்மையை பிரதிபலித்தது.
ஆனால் உள்ளம் முழுதும் ஒருவித குதூகலத்தில் இருந்தவளுக்கு அவனின் முகம் மாற்றம் எல்லாம் கருத்திலே படியாது போக, “நீங்க எங்க அலங்காநல்லூர பாத்தது இல்லியே ஸ்ரீ. பச்ச பசேல்னு பாக்குற இடமெல்லாம் தண்ணி ஓடிட்டு அவ்ளோ அழகா இருக்கும்.” என்று கூறிக்கொண்டே சென்றவள், தான் கூறிய செய்திக்கு அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாததைக் கண்டு அவன் முகத்தை கூர்ந்து கவனிக்க, அதிலோ துளி மகிழ்ச்சியைக் கூட அவளால் கண்டு கொள்ளவே முடியவில்லை.
மாறாக முகம் முழுதும் சிந்தனைக் கோடுகளை படரவிட்டிருந்தவனைப் பார்த்து அவள் முகமும் கேள்வியாய்ச் சுருங்க, “என்னாச்சு ஸ்ரீ? ஏன் அமைதி ஆகிட்டிங்க?” என்று மெதுவாக அவன் தோளில் தட்டினாள் மதுரிமா.
அதன் பின்னரே, “ஹான் ரீமா… அது வந்து” என்று அவளை ஏறிட்டு நோக்கியவனிடம், “என்ன ஸ்ரீ… நான் எவ்ளோ சந்தோசமான விஷயம் சொல்லிட்டிருக்கேன். ஆனா உங்க முகம் ஏன் இவ்ளோ டல்லா இருக்கு?. நான் நம்ம லவ்வ எங்க வீட்ல சொன்னது உங்களுக்கு பிடிக்கலயா ஸ்ரீ?” என்று அவளே அவன் மௌனத்திற்கான காரணத்தை வினவ…
அக்கேள்வியில், “ச்ச ச்ச அப்டிலாம் இல்லை ஸ்வீர்ட் ஹார்ட். நீ எப்போடா நம்ம லவ் பத்தி உங்க வீட்ல பேசுவ. எப்போ உன்ன என் சொந்தமாக்கிக்கப் போறோம்னு நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டிருக்கேன் பேபி” என்று நிறுத்தியவன், “ஆனா நீ லாஸ்ட்டா சொன்ன போல உன்கூட கிராமத்துக்கு வர்றது பத்தி தான் என்னால யோசிச்சு கூட பாக்க முடியல.” என்று கூறி கவனமாக அவள் விழிகளை தவிர்த்தான் ஸ்ரீரஞ்சன்.
ஆடவனின் அந்தக் கூற்றில் அத்துணை நேரம் இருந்த இதமெல்லாம் சுத்தமாக வடிய, அவனை நோக்கி கூர் பார்வை ஒன்றை வீசியவள், “என்கூட வர்றது பத்தி யோசிக்கக் கூட முடியாதுன்னா என்ன அர்த்தம் ஸ்ரீ?. அன்னிக்கு எனக்காக என்ன வேணா செய்வேன்னு சொல்லி லவ் பண்ண கேட்டது எல்லாம் சும்மா டைம் பாஸா?” என்று சற்று அடர்த்தியான குரலிலே கேட்டாள் பெண்.
பெண்ணின் அந்தக் குரல் மாற்றத்தில், நாம் ஏதும் தவறாகக் கூறி விட்டோமோ என்று தோன்ற, “ஹேய் ஹேய் கூல் டா கூல். ஏன் இவ்ளோ கோபம்?. எதுக்காக இப்டிலாம் பேசற?.” என்று சமாதானமாக அவள் கைகளைப் பற்ற வந்தவனை, “நீங்க பேசுனதுக்கு பதிலா நான் வேற என்ன பேசட்டும் ஸ்ரீ?” என்று அவன் கரத்தினை தட்டி விட்டாள் மதுரிமா.
சில மாதங்கள் முன்னர் திரைப்படங்களில் எல்லாம் வரும் ரோட் சைட் ரோமியோவைப் போல காதல் மொழிகள் பேசி, சுற்றிச் சுற்றி வந்து தன்னையும் காதல் சொல்ல வைத்தவன், இக்கணம் உன்னோடு கிராமத்திற்கு வருவது பற்றி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது என்று சொன்னது அவளது தன் மானத்தை வெகுவாகச் சீண்டி விட்டிருந்தது.
அத்தோடு கிராமத்து மனிதர்களுக்கே உரித்தான தாங்கள் பிறந்த மண்ணின் மீதான பிடிப்பும் அவன் மீது கோபமாக வெளிப்படத் துவங்கியிருந்தது.
அவள் இங்கு பணிக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே சார் என்றும் பாஸ் என்றும் சமீப நாட்களாக ஸ்ரீ என்றும் அழைத்து இன்முகமாக பேசுபவளின் இன்றைய கோபத்தை ஏதோ எட்டாவது அதிசயம் போல் பார்த்து தொண்டையை செருமிக் கொண்டவன், “சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த கிராமம், தோட்டம், துறவு, இதெல்லாம் சுத்தமா அலர்ஜி பேபி. என்னால முழுசா ஒன் அவர் கூட சிட்டியோட ஸ்பெஷலிட்டிஸ் இல்லாம இருக்க முடியாது. அதான் நான் அப்டி சொன்னேன். மத்தபடி வேற எந்த வ்ராங் மீனிங்கும் இல்லை.” என்று பொறுமையாகவே அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.
அதைத் தொடர்ந்து, “நீ வேணா உன்னோட ரிலேட்டிவ்ஸ் எல்லாரையும் இங்க மும்பைக்கு வரச் சொல்லிடுறியா ரீமா?. இங்கயே எல்லாம் பேசி, நாம எங்கேஜ்மென்ட்டும் முடிச்சிட்டு அப்றமா அவங்களை அனுப்பிக்கலாம். ஃபிளைட் டிக்கட்ஸ் பத்திலாம் கூட யோசிக்காத பேபி. எவ்ளோ பேர் வருவாங்கனு மட்டும் சொல்லு. எல்லாம் நானே அரேஞ்ச் பண்ணிடுறேன்.” என்று பெரிய சமூக சேவை செய்வது போல் மிதப்பாகக் கூறியவனை முதன் முதலில் சற்றே அற்பமாகப் பார்க்கத் தோன்றியது மதுரிமாவிற்கு.
‘இவன் என்னையும் என் வீட்டாரையும் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான். என் வீட்டினரை பற்றி என்ன தெரியும் இவனுக்கு? மாநிலம் கடந்து நான் இவனிடம் வேலைக்கு வந்து இருப்பதாலும், அவன் காதலை இத்துணை சீக்கிரம் ஏற்றுக் கொண்டதாலும், என்னையும் என் குடும்பத்தினரையும் எதற்கும் வக்கில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டானா? அல்லது எனக்குக் கீழ் பணி செய்யும் பெண் தானே இவள். இவளுக்காக நான் கிராமம் வரை செல்ல வேண்டுமா? என்று இத்தனை யோசிக்கிறானா?’ என்று ஏதேதோ எண்ணியவளுக்கு நேற்று இரவு பாட்டியை சமாதானம் செய்ய அவள் பட்ட பாடும் சிந்தையில் உதித்து, ‘இவனால் நான் என் பாட்டிக்கு எதிராய் நடந்து அவரையே வருத்தி இருக்க, இவன் என்னோடு ஊருக்கு வருவதற்கே இத்துணை யோசிக்கிறானே’ என்று அவன் மேல் சற்று முன்னர் முளைத்த கோபம் விழாக்கால முளைப்பாரியாய் சரசரவென்று படர்ந்து வளர்ந்தது.
இருந்தும் தாங்கள் இருக்கும் இடம் கருதியும், ஆடவனின் பதவியை மதித்தும் பல்லைக் கடித்து பொறுமை காத்தவள், “வெரி வெரி சாரி ஸ்ரீ. நீங்க ரொம்ப பெரிய மனசு பண்ணி கொடுத்த ஆஃபரை எங்களால ஏத்துக்க முடியாது. என்னோட வர்றதுக்கு உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடுங்க. நான் எப்படியாவது மேனேஜ் பண்ணிக்கிறேன்.” என்று வெறுமையான குரலில் கூறி எழுந்து கொண்டவள், “ஹேய் நில்லு ரீமா…” என்று அவன் ஏதோ சொல்ல வந்ததையும் கேளாது அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
பெண்ணவளின் அந்தச் செயலில், “ஹோ காட்… லவ் இஸ் சோ ஹார்ட்(hard)” என்று அவளின் முதுகையே பார்த்து தலையை ஆட்டிக் கொண்டவன், செய்வதறியாது நெற்றியைப் பிடித்தபடி நாற்காலியிலும் சாய்ந்து கொண்டான்.
அவனைப் போலவே அவன் அறையில் இருந்து வந்த மதுரிமாவும், “ச்சை இந்தக் காதலை நாம பண்ணிருக்கவே கூடாது. இப்போ நான் பாட்டிக்கு என்ன பதில் சொல்லுவேன்?” என்று தன் காதோரம் தொங்கிய தலைமுடியை இழுத்து வாயில் கடித்தபடி புலம்பிக் கொண்டிருக்க, அவள் மேசையில் இருந்த இன்டர்காமோ மெலிதாக சிணுங்கியது.
அதை எடுத்து செவியில் பொருத்தியவள் அந்தப்புறம் பேசிய சிபிரஞ்சனுடைய பி ஏ வின் கூற்றிற்கு, “ஓகே சார். வந்தர்றேன்.” என்று விட்டு எழுந்தவள் அடுத்த பத்து நிமிடத்தில் சிபியின் அறைக்குள்ளும் நுழைந்திருந்தாள்.
அங்கு ஏற்கனவே ஸ்ரீரஞ்சன் உட்பட அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர்கள் மூவரும் அமர்ந்திருக்க, அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கத்தை சொல்லியவள் சிபிரஞ்சனின் கண்காட்டலுக்குப் பிறகு அங்கிருந்த மற்றுமொரு இருக்கையில் அமர…
லேசாக தொண்டையைச் செருமிவிட்டு பேசத் தொடங்கி இருந்தான் சிபிரஞ்சன்.
“லிசன் காய்ஸ்…” என்று ஆரம்பித்தவன், “இதுவரை நம்ம ப்ரோடேக்ட் பண்ண காஸ்ட்யூம்ஸ் எல்லாம் மாடர்ன் அண்ட் ட்ரெண்டிங்கா தான் இருந்துருக்கு. பட் ஐ திங்க் வி ஷூட் ஆல்சோ ஆட் அவர் டிரேடிஷ்னல்.” என்று அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவன், “சோ இட் இஸ் நெஸ்ஸஸ்ரி டு ஸ்டார்ட் எ பிரான்ச் இன் தமிழ்நாடு.” என்று தன் அழைப்பிற்கான விஷயத்தையும் கூறினான்.
அதைக்கேட்டிருந்த அனைவரும், “சூப்பர் சார். குட் சார்…” என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ள…
சற்று முன்னர் தனக்கும் தன் காதலிக்கும் நடந்த உரையாடலும், உள்ளே நுழைந்ததிலிருந்து தன் பக்கமே திரும்பாது அமர்ந்திருக்கும் மதுரிமாவின் செயலும் கொடுத்த சலிப்பு அது.
சகோதரனின் அந்த சலிப்பில் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து, “வெயிட் ஸ்ரீ.” என்றவன், “அது விஷயமான முதல் கட்ட வேலையா பியூ டேஸ்ல ஐ ஆம் கோயிங் டு தமிழ்நாடு. போற வேலை சக்ஸஸ் ஆச்சுன்னா நான் இங்க இருக்க டைம் ரொம்பவே குறைஞ்சிடும். ஆனா நீங்க எல்லாரும் உங்களோட ஒர்க் சரியா செய்வீங்கன்னு நினைக்கிறேன். தட்ஸ் வாட் ஐ கால்ட் யூ டு சேய்” என்றும் சொல்லி முடிக்க…
அத்தனை நேரம் இருந்த சலிப்பெல்லாம் மறைந்து, “நிஜமாவே தமிழ்நாடு போறியா சிபி?” என்று ஆச்சர்யம் காட்டிக் கேட்ட ஸ்ரீரஞ்சனின் விழிகளோ அருகில் இருந்த மதுரிமாவையும் அர்த்தப் பார்வை பார்த்துக் கொண்டது.